4064. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுக்காகக் கல் தொட்டி ஒன்றில் பானங்கள் ஊற்றிவைக்கப்பட்டுவந்தது.
அத்தியாயம் : 36
4065. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காகத் தோல் பாத்திரத்தில் பானங்கள் ஊற்றி வைக்கப்பட்டுவந்தது. தோல் பாத்திரம் எதுவும் கிடைக்காவிட்டால், கல் தொட்டியொன்றில் அவர்களுக்காகப் பானங்கள் ஊற்றிவைக்கப்பட்டன.
இதன் அறிவிப்பாளரான அபுஸ் ஸுபைர் (ரஹ்) அவர்களிடம் மக்களில் சிலர் "கல் தொட்டியிலா (ஊற்றிவைத்தனர்)?"என்று கேட்டார்கள். அதற்கு அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் "கல் தொட்டியில்தான்" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4066. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தோல் பாத்திரம் தவிர வேறெதிலும் பானங்களை ஊற்றிவைக்க வேண்டாமென உங்களுக்கு நான் தடைவிதித்திருந்தேன். இனி, எல்லாப் பாத்திரங்களிலும் (ஊற்றி வைத்து) அருந்திக் கொள்ளுங்கள். போதை தரக்கூடியதை அருந்தாதீர்கள்.
இதை புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4067. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(சில குறிப்பிட்ட) பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்திருந்தேன். (இப்போது கூறுகிறேன்.) பாத்திரங்கள் -அல்லது பாத்திரம்- எந்த ஒன்றையும் அனுமதிக்கப்பட்டதாக ஆக்குவதுமில்லை; எந்த ஒன்றையும் தடை செய்யப்பட்டதாக ஆக்குவதுமில்லை. (பாத்திரத்தில் உள்ள பானமே முக்கியம். எனவே,) போதை தரும் எல்லாமே தடை செய்யப்பட்டதாகும்.
இதை புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 36
4068. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தோல் பாத்திரங்களில் ஊற்றிவைக்கப்பட்ட பானங்களை(த் தவிர வேறெந்த பானத்தையும்) அருந்த வேண்டாமென உங்களுக்கு நான் தடைவிதித்திருந்தேன். இனி எல்லாப் பாத்திரங்களிலும் அருந்திக்கொள்ளுங்கள். எனினும், போதை தரக்கூடியதை அருந்தாதீர்கள்.
இதை புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 36
4069. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தோல் பாத்திரங்(களைத் தவிர மற்றவை)களில் (பானங்களை) ஊற்றிவைப்பதற்குத் தடைவிதித்தபோது, "மக்கள் அனைவருமே தோல் பாத்திரங்களைப் பெற்றிருப்பதில்லையே?" என்று மக்கள் கேட்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தார் பூசப்படாத சுட்ட களிமண் பாத்திரத்தைப் பயன்படுத்திக் கொள்ள மக்களுக்கு அனுமதியளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
பாடம் : 7 போதை தரும் ஒவ்வொரு பானமும் மதுவேயாகும். அனைத்து மதுபானமும் தடைசெய்யப்பட்டதாகும் என்பதன் விளக்கம்.
4070. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தேனிலிருந்து தயாரிக்கப்படும் பானம் (பித்உ) குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் "போதை தரும் ஒவ்வொரு பானமும் தடை செய்யப்பட்டதாகும்" என்று பதிலளித்தார்கள்.
இதை இப்னு ஷிஹாப் அஸ்ஸஹ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்து மாலிக் பின் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 36
4071. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தேனிலிருந்து தயாரிக்கப்படும் பானம் (பித்உ) குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "போதை தரும் ஒவ்வொரு பானமும் தடை செய்யப்பட்டதாகும்" என்று பதிலளித்தார்கள்.
இதை இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்து யூனுஸ் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 36
4072. மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஒன்பது அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் சுஃப்யான் மற்றும் சாலிஹ் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், "தேனிலிருந்து தயாரிக்கப்படும் பானம் (பித்உ) பற்றிக் கேட்கப்பட்டது" எனும் குறிப்பு இடம்பெறவில்லை. மஅமர் (ரஹ்) மற்றும் சாலிஹ் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "போதை தரும் ஒவ்வொரு பானமும் தடை செய்யப்பட்டதாகும்" என்று கூறியதை நான் கேட்டேன்" என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 36
4073. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என்னையும் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பிவைத்தபோது நான், "அல்லாஹ்வின் தூதரே! எங்கள் நாட்டில் தோல் நீக்கப்படாத கோதுமையிலிருந்து ஒருவகை பானம் தயாரிக்கப்படுகிறது. அதற்கு "அல்மிஸ்ர்" என்று பெயர் சொல்லப்படுகிறது. மேலும், தேனிலிருந்து "பித்உ" எனப்படும் ஒரு பானமும் தயாரிக்கப்படுகிறது. (அவற்றை நாங்கள் அருந்தலாமா?)" என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், "போதை தரும் ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதாகும்" என்று (பொது விதி) கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என்னையும் முஆத் (ரலி) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பி வைத்தபோது எங்கள் இருவரிடமும், "நீங்கள் (மக்களுக்கு) நற்செய்திகளை(யே அதிகமாக)ச் சொல்லுங்கள். (அவர்களிடம்) எளிதாக நடந்துகொள்ளுங்கள். கற்றுக்கொடுங்கள். (அவர்களுக்கு) வெறுப்பேற்றிவிடாதீர்கள்" என்று கூறினார்கள்.
"நீங்கள் இருவரும் இணக்கமாக நடந்து கொள்ளுங்கள்" என்றும் (அறிவுரை) கூறினார்கள் என்றே நான் கருதுகிறேன். நான் திரும்பிச் சென்றபோது மீண்டும் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! யமன்வாசிகளிடம் தேன் சுண்டக்காய்ச்சப்பட்டுத் தயாரிக்கப்படும் ஒரு வகை பானம் உண்டு. மேலும், தோல் நீக்கப்படாத கோதுமையிலிருந்து தயாரிக்கப்படும் "மிஸ்ர்" எனும் பானமும் உண்டு (அவற்றை அருந்தலாமா?)" என்று கேட்டேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "தொழுகையிலிருந்து தடுக்கக்கூடிய போதை தரும் ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதாகும்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 36
4074. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னையும் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பிவைத்தபோது, மக்களுக்கு (இஸ்லாமிய) அழைப்பு விடுங்கள். நற்செய்திகளை(யே அதிகமாக)க் கூறுங்கள். (எச்சரிக்கை விடுக்கும்போது) வெறுப்பேற்றி விடாதீர்கள். (அவர்களிடம்) எளிதாக நடந்துகொள்ளுங்கள். (அவர்களைச்) சிரமப்படுத்தி விடாதீர்கள்" என்று (அறிவுரை) கூறினார்கள்.
நான், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் யமன் நாட்டில் தயாரித்துவரும் இரு பானங்களைப் பற்றி எங்களுக்குத் தீர்ப்பு வழங்குங்கள். அவை: கட்டியாகும்வரை ஊறவைக்கப்படும் தேனிலிருந்து தயாரிக்கப்படும் "பித்உ" எனும் பானமும்,அவ்வாறே கட்டியாகும்வரை ஊறவைக்கப்படும் சோளம், தோல் நீக்கப்படாத கோதுமை ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் "மிஸ்ர்" எனும் பானமும் ஆகும்" என்று கூறினேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (ஆரம்பம் முதல்) முடிவுவரை அனைத்தும் செறிவுடன் அமைந்த ஒருங்கிணைந்த சொற்கள் வழங்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் கூறினார்கள்: தொழுகையிலிருந்து தடுக்கக்கூடிய போதை தரும் ஒவ்வொன்றையும் நான் தடை செய்கிறேன். - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4075. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் யமன் நாட்டிலுள்ள "ஜைஷான்" எனுமிடத்திலிருந்து வந்து, தம் நாட்டினர் சோளத்திலிருந்து தயாரித்துப் பருகிவருகின்ற ஒருவகை பானம் குறித்து நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அது போதையளிக்கக்கூடியதா?" என்று கேட்டார்கள். அவர் "ஆம் (போதையளிக்கக்கூடியதே)" என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், "போதையளிக்கக்கூடிய ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதாகும். (இவ்வுலகில்) போதைப் பொருட்களை உட்கொள்பவருக்கு (மறுமையில்) "தீனத்துல் கபாலை" நிச்சயமாக நான் புகட்டுவேன் என அல்லாஹ் உறுதிமொழி எடுத்துள்ளான்" என்று கூறினார்கள்.
மக்கள் "அல்லாஹ்வின் தூதரே! "தீனத்துல் கபால்" என்பது என்ன?" என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நரகவாசிகளின் வியர்வை அல்லது நரகவாசிகளின் சீழ்" என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 36
4076. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
போதை தரும் ஒவ்வொன்றும் மதுவாகும். போதை தரும் ஒவ்வொன்றும் தடை செய்யப் பட்டதாகும். யார் இவ்வுலகில் தொடர்ந்து மது அருந்தி, பாவமன்னிப்புத் தேடாமல் (திருந்தாமல்) குடிகாரராகவே இறந்துவிடுகிறாரோ அவர் மறுமையில் (சொர்க்க) மதுவை அருந்தமாட்டார். - இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4077. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
போதை தரும் ஒவ்வொன்றும் மதுவாகும். போதை தரும் ஒவ்வொன்றும் தடை செய்யப் பட்டதாகும். -இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4078. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
போதை தரும் ஒவ்வொன்றும் மதுவாகும். ஒவ்வொரு மதுவும் தடை செய்யப்பட்டதாகும்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்தே அறிவிக்கிறார்கள் என்றே நான் அறிகிறேன் என அறிவிப்பாளர் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
பாடம் : 8 குடிகாரன் பாவமன்னிப்புக் கோரி திருந்தாவிட்டால் மறுமையில் (சொர்க்கத்தின்) மது மறுக்கப்படுவதன் மூலம் தண்டிக்கப்படுவான்.
4079. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உலகில் மது அருந்தியவருக்கு மறுமையில் (சொர்க்கத்தின்) மது அருந்தும் வாய்ப்பு மறுக்கப்படும்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 36
4080. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"உலகில் மது அருந்திவிட்டு அதற்காகப் பாவமன்னிப்புக் கோராதவருக்கு மறுமையில் (சொர்க்கத்தின்) மது அருந்தும் வாய்ப்பு மறுக்கப்படும். அது அவருக்குப் புகட்டப்பட மாட்டாது" என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் மஸ்லமா பின் கஅனப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த) மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்களிடம் "நாஃபிஉ (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை நபி (ஸல்) அவர்கள் கூறியதாகக் குறிப்பிட்டார்களா?" என்று கேட்கப்பட்டது.
அதற்கு மாலிக் (ரஹ்), அவர்கள், "ஆம்" என்றார்கள்.
அத்தியாயம் : 36
4081. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உலகில் மது அருந்தியவர் மறுமையில் அதை அருந்தமாட்டார்; பாவமன்னிப்புக் கோரி (திருந்தி)னால் தவிர.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
பாடம் : 9 கெட்டித்தன்மையும் போதையும் உள்ளதாக மாறாவிட்டால், பழச்சாறுகள் அனுமதிக்கப்பட்டவையே ஆகும்.
4082. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக இரவின் ஆரம்பநேரத்தில் பழச்சாறு ஊற்றி வைக்கப்படும். காலையில் அதை அவர்கள் அருந்துவார்கள். அன்றைய பகல் முழுவதும், அடுத்த இரவும், அடுத்த நாள் பகலிலும், மற்றோர் இரவிலும், அதற்கடுத்த பகலில் அஸ்ர் நேரம் வரையிலும் அதை அருந்துவார்கள்.
பிறகு (அதில்) ஏதேனும் எஞ்சியிருந்தால் (தம்) பணியாளருக்கு அதை அருந்தக் கொடுப்பார்கள். அல்லது (அதைக் கொட்டிவிடுமாறு) உத்தரவிடுவார்கள். அவ்வாறே அது கொட்டப்படும்.
அத்தியாயம் : 36
4083. யஹ்யா பின் உபைத் அல்பஹ்ரானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மக்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் பழச்சாறுகள் பற்றிக் குறிப்பிட்டனர். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காகத் தோல் பையொன்றில் பழச்சாறு ஊற்றிவைக்கப்பட்டுவந்தது.
திங்கட்கிழமை இரவு அவ்வாறு ஊற்றி வைக்கப்பட்டால், திங்கட்கிழமையும் செவ்வாய் கிழமை அஸ்ர் வரையும் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருந்துவார்கள். பிறகு அதில் ஏதேனும் எஞ்சியிருந்தால் பணியாளருக்கு அருந்தக் கொடுப்பார்கள்; அல்லது கொட்டிவிடுவார்கள்.
அத்தியாயம் : 36