4024. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உலர்ந்த திராட்சைகளையும் பேரீச்சம் பழங்களையும் கல(ந்து ஊறவை)க்க வேண்டாமென எங்களுக்குத் தடைவிதித்தார்கள். (அவ்வாறே) நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களையும் கனிந்த பேரீச்சம் பழங்களையும் கல(ந்து ஊறவை)க்க வேண்டாமென்றும் தடைவிதித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4025. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் பழச்சாற்றை அருந்துகின்றவர், உலர்ந்த திராட்சையைத் தனியாக (ஊறவைத்து) அருந்தட்டும். அல்லது பேரீச்சம் பழத்தைத் தனியாக (ஊறவைத்து) அருந்தட்டும். அல்லது நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காயைத் தனியாக (ஊறவைத்து) அருந்தட்டும்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 36
4026. மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களை கனிந்த பேரீச்சம் பழங்களுடன், அல்லது உலர்ந்த திராட்சைகளைப் பேரீச்சம் பழங்களுடன், அல்லது உலர்ந்த திராட்சைகளை நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களுடன் கல(ந்து ஊறவை)க்க வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்தார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. பிறகு "உங்களில் பழச்சாற்றை அருந்துகின்றவர்..." எனத் தொடரும் மேற்கண்ட ஹதீஸில் உள்ள இதர தகவல்களும் இடம் பெற்றுள்ளன.
அத்தியாயம் : 36
4027. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களையும் பேரீச்சச் செங்காய்களையும் ஒன்றாகச் சேர்த்து ஊறவைக்காதீர்கள். (அவ்வாறே) உலர்ந்த திராட்சைகளையும் பேரீச்சம் பழங்களையும் ஒன்றாகச் சேர்த்து ஊறவைக்காதீர்கள். (வேண்டுமானால்) அவை ஒவ்வொன்றையும் தனித்தனியாக ஊறவைத்துக்கொள்ளுங்கள்.
இதை அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூகத்தாதா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4028. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களையும் பேரீச்சச் செங்காய்களையும் ஒன்றாகச் சேர்த்து ஊறவைக்காதீர்கள். (அவ்வாறே) பேரீச்சச் செங்காய்களையும் உலர்ந்த திராட்சைகளையும் ஒன்றுசேர்த்து ஊறவைக்காதீர்கள். மாறாக, அவை ஒவ்வொன்றையும் தனித்தனியாக ஊற வைத்துக்கொள்ளுங்கள்.
இதை அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், மேற்கண்ட ஹதீஸை அபூசலமா (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் அப்துல்லாஹ் பின் அபீ கத்தாதா (ரஹ்) அவர்களை (நேரடியாகச்) சந்தித்தேன். அப்போது தம் தந்தை அபூ கத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாக மேற்கண்ட ஹதீஸை என்னிடம் அவர்கள் அறிவித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "பேரீச்சச் செங்காய்களையும் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங் காய்களையும் (ஒன்றுசேர்த்து ஊறவைக்க வேண்டாம்) என்றும், பேரீச்சம் பழங்களையும் உலர்ந்த திராட்சைகளையும் (ஒன்றுசேர்த்து ஊறவைக்க வேண்டாம்)" என்றும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 36
4029. அ. அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "பேரீச்சம் பழங்களையும் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங் காய்களையும் கல(ந்து ஊறவை)க்க வேண்டாம் என்றும், உலர்ந்த திராட்சைகளையும் பேரீச்சம் பழங்களையும் கல(ந்து ஊறவை)க்க வேண்டாம் என்றும், நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங் காய்களையும் பேரீச்சச் செங்காய்களையும் கல(ந்து ஊறவை)க்க வேண்டாம் என்றும் தடைசெய்தார்கள். "(வேண்டுமானால்) அவை ஒவ்வொன்றையும் தனித்தனியாக ஊறவைத்துக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூகத்தாதா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. ஆ அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உலர்ந்த திராட்சைகளையும் பேரீச்சம் பழங்களையும், (அவ்வாறே) நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களையும் பேரீச்சம் பழங்களையும் (ஒன்றாகச் சேர்த்து) ஊறவைக்க வேண்டாமெனத் தடைசெய்தார்கள். "(வேண்டுமானால்) அவை ஒவ்வொன்றும் தனித்தனியாக ஊறவைக்கப்படலாம்"என்று கூறினார்கள். -இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4030. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், பேரீச்சம் பழங்களும் உலர்ந்த திராட்சைகளும் ஒன்று சேர்(த்து ஊறவை)க்கப்படுவதற்கும் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களும் பேரீச்சம் பழங்களும் ஒன்றுசேர்த்து ஊற வைக்கப்படுவதற்கும் தடைவிதித்தார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (யமன் நாட்டிலுள்ள) "ஜுரஷ்"வாசிகளுக்குப் பேரீச்சம் பழங்களையும் உலர்ந்த திராட்சைகளையும் கல(ந்து ஊறவை)க்க வேண்டாம் எனத் தடைசெய்து கடிதம் எழுதினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "பேரீச்சம் பழங்களையும் உலர்ந்த திராட்சைகளையும் கலந்து ஊறவைக்க வேண்டாம்" என்பது மட்டுமே இடம்பெற்றுள்ளது. நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சம் பழங்களையும் பேரீச்சம் பழங்களையும் கலந்து ஊறவைப்பது பற்றிய குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 36
4031. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களும் பேரீச்சச் செங்காய்களும் ஒன்றுசேர்த்து ஊறவைக்கப்படுவதற்கும் பேரீச்சம் பழங்களும் உலர்ந்த திராட்சைகளும் ஒன்றுசேர்த்து ஊற வைக்கப்படுவதற்கும் தடை விதிக்கப்பட்டுவிட்டது.
அத்தியாயம் : 36
4032. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களும் பேரீச்சச் செங்காய்களும் ஒன்றாகச் சேர்த்து ஊறவைக்கப்படுவதற்கும் பேரீச்சம் பழங்களும் உலர்ந்த திராட்சைகளும் ஒன்றுசேர்த்து ஊறவைக்கப்படுவதற்கும் தடை விதிக்கப்பட்டுவிட்டது.
அத்தியாயம் : 36
பாடம் : 6 தார் பூசப்பட்ட பாத்திரம், சுரைக்காய் குடுவை, மண் சாடி, பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரம் ஆகியவற்றில் பானங்களை ஊற்றிவைப்பதற்கு விதிக்கப்பெற்றிருந்த தடையும், பின்னர் அச்சட்டம் காலாவதியாக்கப் பட்டதும், போதையூட்டக்கூடியதாக மாறாத வரை எல்லாப் பாத்திரங்களும் தற்போது அனுமதிக்கப்பட்டவையே என்பது பற்றிய விளக்கமும்.
4033. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுரைக்காய் குடுவை, தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றில் பானங்களை ஊற்றிவைக்க வேண்டாமெனத் தடைவிதித்தார்கள்.
இதை இப்னு ஷிஹாப் அஸ்ஸஹ்ரீ (ரஹ்) அவர்கள் லைஸ் (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 36
4034. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுரைக்காய் குடுவை, தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றில் பானங்களை ஊற்றிவைக்க வேண்டாமெனத் தடைவிதித்தார்கள்.
இதை இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்.
மேற்கண்ட ஹதீஸை அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாகவும் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார்கள். அதில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சுரைக்காய் குடுவையில் பானங்களை ஊற்றிவைக்காதீர்கள். தார் பூசப்பட்ட பாத்திரத்திலும் ஊற்றிவைக்காதீர்கள்.
பிறகு அபூஹுரைரா (ரலி) அவர்கள், "மண்சாடிகளையும் தவிர்த்துவிடுங்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 36
4035. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், தார் பூசப்பட்ட பாத்திரம், "ஹன்த்தம்", பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரம் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமெனத் தடை செய்தார்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் "ஹன்த்தம் என்பது என்ன?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "சுட்ட களிமண்ணாலான பச்சைநிறச் சாடிகள்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 36
4036. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் அப்துல் கைஸ் தூதுக்குழுவினரிடம், "சுரைக்காய் குடுவை, மண் சாடி (ஹன்த்தம்), பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரம், தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றை உங்களுக்குத் தடைவிதிக்கிறேன். வேண்டுமானால், தோல் பைகளில் (அனுமதிக்கப்பட்ட பானங்களை) அருந்திக்கொள்க. அதன் வாய்ப்பகுதியில் சுருக்கிட்டுக்கொள்க" என்று கூறினார்கள்.
"ஹன்த்தம்" என்பது, கழுத்துப் பகுதி துண்டிக்கப்பட்ட தோல் பை ஆகும்.
அத்தியாயம் : 36
4037. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுரைக்காய் குடுவை, தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றில் பானங்களை ஊற்றிவைக்க வேண்டாமெனத் தடைசெய்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் ஜரீர் பின் அப்தில் ஹமீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் மேற்கண்டவாறு இடம்பெற்றுள்ளது. அப்ஸர் பின் அல்காசிம் (ரஹ்) மற்றும் ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் "நபி (ஸல்) அவர்கள் சுரைக்காய் குடுவை, தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமெனத் தடைசெய்தார்கள்" என்று இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 36
4038. இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்களிடம் "எந்தப் பாத்திரத்தில் பானங்களை ஊற்றி வைப்பது வெறுக்கப்பட்டது எனத் தாங்கள் இறைநம்பிக்கையாளர்களின் அன்னை (ஆயிஷா- ரலி) அவர்களிடம் கேட்டீர்கள்?" என்று வினவினேன். அதற்கு அவர்கள் "ஆம்; நான் "இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே! எந்தப் பாத்திரங்களில் பானங்களை ஊற்றிவைக்க வேண்டாமென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்?" என்று கேட்டேன்.
அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் தம் இல்லத்தாராகிய எங்களிடம் சுரைக்காய் குடுவை, தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றில் பானங்களை ஊற்றிவைக்க வேண்டாமெனத் தடைசெய்தார்கள் என்று விடையளித்தார்கள்" என்றார்கள்.
(அறிவிப்பாளர் இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:)
"மண்சாடியையும் சுட்ட களிமண் பாத்திரத்தையும் ஆயிஷா (ரலி) அவர்கள் குறிப்பிட வில்லையா?" என நான் அஸ்வத் (ரஹ்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அஸ்வத் (ரஹ்) அவர்கள், "நான் கேட்டதைத்தான் உங்களுக்கு அறிவிக்கிறேன். நான் கேட்காததை உங்களுக்கு அறிவிக்கவேண்டுமா?" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4039. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் சுரைக்காய் குடுவை, தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமெனத் தடைசெய்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஆறு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4040. ஸுமாமா பின் ஹஸ்ன் அல் குஷைரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களைச் சந்தித்துப் பழச்சாறுகள் பற்றிக் கேட்டேன். அப்போது அவர்கள், "நபி (ஸல்) அவர்களிடம் அப்துல் கைஸ் தூதுக்குழுவினர் வந்து பழச்சாறுகள் பற்றிக் கேட்டனர். நபி (ஸல்) அவர்கள் சுரைக்காய் குடுவை,பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரம், தார் பூசப்பட்ட பாத்திரம், மண் சாடி ஆகியவற்றில் பானங்களை ஊற்றிவைக்க வேண்டாமெனத் தடைவிதித்தார்கள்" என்று பதிலளித்தார்கள்" என்றார்கள்.
அத்தியாயம் : 36
4041. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுரைக்காய் குடுவை, மண் சாடி, பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரம், தார் பூசப்பட்ட பாத்திரம் ("முஸஃப்பத்") ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமெனத் தடைசெய்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் (தார் பூசப்பட்டப்பட்ட பாத்திரம் என்பதைக் குறிக்க) "முஸஃப்பத்" என்பதற்குப் பதிலாக "முகய்யர்" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 36
4042. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் அப்துல் கைஸ் தூதுக்குழுவினர் வந்தபோது, "சுரைக்காய் குடுவை, மண் சாடி, பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரம், தார் பூசப்பட்ட பாத்திரம் (முகய்யர்) ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமென உங்களுக்குத் தடைசெய்கிறேன்" என்று நபியவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ("தார் பூசப்பட்ட பாத்திரம்" என்பதைக் குறிக்க) "முகய்யர்" என்பதற்குப் பதிலாக "முஸஃப்பத்" எனும் சொல் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 36
4043. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுரைக்காய் குடுவை, மண் சாடி, தார் பூசப்பட்ட பாத்திரம், பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயார் செய்யப்பட்ட பாத்திரம் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமெனத் தடை செய்தார்கள்.
அத்தியாயம் : 36