பாடம் : 20 யூதர்களை ஹிஜாஸ் பகுதியிலிருந்து நாடு கடத்தியது.
3624. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் பள்ளிவாசலில் இருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் புறப்பட்டுவந்து, "யூதர்களை நோக்கிச் செல்லுங்கள்" என்று கூறினார்கள். உடனே நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டு யூதர்களிடம் சென்றோம்.
அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்றுகொண்டு, "யூதச் சமுதாயத்தாரே! இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்; பாதுகாப்புப் பெறுவீர்கள்" என்று அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்கள்.
அதற்கு யூதர்கள், "அபுல்காசிமே! நீங்கள் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டீர்கள்" என்று பதிலளித்தார்கள்.
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இ(வ்வாறு, "நான் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டேன்" என நீங்கள் ஒப்புக்கொள்வ)தைத்தான் நான் எதிர்பார்க்கிறேன். நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்; பாதுகாப்புப் பெறுவீர்கள்" என்று சொன்னார்கள்.
அப்போதும் யூதர்கள் "அபுல்காசிமே! நீங்கள் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டீர்கள்" என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இதைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்" என்று கூறிவிட்டுப் பிறகு மூன்றாவது முறையாக (முன்பு போலவே) சொன்னார்கள்.
பின்னர் "இந்தப் பூமி அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உரியது. நான் உங்களை இந்தப் பூமியிலிருந்து நாடு கடத்த விரும்புகிறேன். உங்களில் யார் தமது (அசையாச்) சொத்துக்குப் பதிலாக ஏதேனும் (விலையைப்) பெறுகிறாரோ அவர் அந்தச் சொத்தை விற்று விடட்டும். இல்லையென்றால், இந்தப் பூமி அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உரியது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 32
3625. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மதீனா யூதர்களான) பனூ நளீர் மற்றும் பனூ குறைழா குலத்தார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்மீது போர் தொடுத்தனர். எனவே, பனூ நளீர் குலத்தாரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாடு கடத்தினார்கள். பனூ குறைழா குலத்தாரை, (அவர்கள் வருத்தம் தெரிவித்ததால்) பெருந்தன்மையுடன் மன்னித்து, அவர்களை (மதீனாவிலேயே) வசிக்க விட்டுவிட்டார்கள்.
அதன் பின்னர் பனூ குறைழா குலத்தாரும் போர் தொடுத்தபோது, அவர்களில் ஆண்களைக் கொன்றார்கள். அவர்களுடைய பெண்களையும் குழந்தைகளையும் அவர்களுடைய உடைமைகளையும் முஸ்லிம்களுக்கு மத்தியில் (போர்ச்செல்வமாகப்) பங்கிட்டுக் கொடுத்தார்கள்.
இருப்பினும், அவர்களில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து சேர்ந்துகொண்டனர். அந்த (பனூ குறைழா குலத்தாரில்) சிலருக்குப் பாதுகாப்பு வழங்கினார்கள். அவர்கள் முஸ்லிம்களாக மாறிவிட்டனர். (அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்களின் குலத்தாரான) "பனூ கைனுகா" கூட்டத்தாரையும் பனூ ஹாரிஸா குலத்து யூதர்களையும், மதீனா நகரத்தைச் சேர்ந்த யூதர்கள் அனைவரையும் (ஆக) மதீனாவிலிருந்த எல்லா யூதர்களையும் நாடு கடத்திவிட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. ஆயினும், மேற்கண்ட ஹதீஸே அதிகமான (தகவலைக் கொண்ட)தும் முழுமையானதும் ஆகும்.
அத்தியாயம் : 32
பாடம் : 21 அரபு தீபகற்பத்திலிருந்து யூதர்களும் கிறித்தவர்களும் வெளியேற்றப்படல்.
3626. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் அரபு தீபகற்பத்திலிருந்து யூதர்களையும் கிறித்தவர்களையும் நிச்சயம் வெளியேற்றியே தீருவேன். முஸ்லிம்களைத் தவிர வேறெவரையும் (அங்கு) நான் விட்டு வைக்கமாட்டேன்.
இதை உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
பாடம் : 22 ஒப்பந்தத்தை முறித்துவிட்ட (பகைவர்)களுடன் போர் செய்யலாம்; கோட்டை வாசி(களான பகைவர்)களைத் தகுதியுடைய நேர்மையான ஒரு நீதிபதியின் தீர்ப்புக்கு இணங்கச் செய்வது செல்லும்.
3627. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(யூதர்களான) பனூ குறைழா குலத்தார் (தமது கோட்டையிலிருந்து இறங்கிவந்து தம் நட்புக் குலத் தலைவரான) சஅத் பின் முஆத் (ரலி) அவர்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள சம்மதித்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சஅத் (ரலி) அவர்களை அழைத்து வரும்படி ஆளனுப்பினார்கள்.
(அப்போது சஅத் (ரலி) அவர்கள் அகழ்ப்போரில் ஏற்பட்ட காயத்தால் மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில் தங்கவைக்கப்பட்டிருந்தார்கள்.) சஅத் (ரலி) அவர்கள் ஒரு கழுதையின் மீதமர்ந்து வந்தார்கள்.
(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அக்கோட்டையை ஒட்டித் தாற்காலிகமாக அமைத்திருந்த) பள்ளிவாசலுக்கு அருகில் சஅத் (ரலி) அவர்கள் வந்தபோது, அன்சாரிகளை நோக்கி "உங்கள் தலைவரை" அல்லது "உங்களில் சிறந்தவரை" (வரவேற்பதற்காக அவரை) நோக்கி எழுந்து செல்லுங்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பிறகு "(சஅதே!) இவர்கள் உங்களது தீர்ப்பை ஏற்றுக்கொள்ள(ச் சம்மதித்து) இறங்கி வந்திருக்கிறார்கள்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
சஅத் (ரலி) அவர்கள், "இவர்களிலுள்ள போர் வீரர்களைக் கொன்றுவிடுங்கள். இவர்களின் பெண்களையும் குழந்தைகளையும் போர்க் கைதிகளாக ஆக்கிக்கொள்ளுங்கள்" என்று (தீர்ப்புக்) கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள், ""நீங்கள் அல்லாஹ்வின் தீர்ப்பை" அல்லது "அரசனின் தீர்ப்பை"யே (இவர்களின் விஷயத்தில்) வழங்கினீர்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் முஹம்மத் பின் அல்முஸன்னா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அரசனின் தீர்ப்பை" எனும் குறிப்பு இடம்பெற வில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "(சஅதே!) நீங்கள் இவர்களின் விஷயத்தில் அல்லாஹ்வின் தீர்ப்பையே அளித்திருக்கிறீர்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்" என்று இடம்பெற்றுள்ளது. மற்றோர் தடவை "நீங்கள் அரசனின் தீர்ப்பை அளிந்திருக்கிறீர்கள்" என்று கூறியதாக இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 32
3628. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
அகழ்ப் போரின்போது சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் தாக்கப்பட்டார்கள். அவர்களது கை நரம்பில் குறைஷியரில் ஒருவனான இப்னுல் அரிகா எனப்படுபவன் அம்பெய்துவிட்டான். அருகில் இருந்து, அவரது உடல் நலத்தை விசாரித்து அறிவதற்கு வசதியாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலிலேயே (அவருக்காகக்) கூடாரமொன்றை அமைத்தார்கள்.
அகழ்ப் போரை முடித்துவிட்டு வந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டுக் குளித்தார்கள்.
அப்போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தமது தலையிலிருந்த புழுதியைத் தட்டிய வண்ணம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (மனித உருவில்) வந்து, "நீங்கள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! (வானவர்களாகிய) நாங்கள் ஆயுதத்தைக் கீழே வைக்கவில்லை. அவர்களை நோக்கிப் புறப்படுங்கள்"என்று கூறினார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "(இப்போது) எங்கே?" என்று கேட்டார்கள். உடனே ஜிப்ரீல் (அலை) அவர்கள் பனூ குறைழா குலத்தார் (உடைய வசிப்பிடம்) நோக்கி சைகை செய்தார்கள்.
ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பனூ குறைழா குலத்தாரை நோக்கிச் சென்று) அவர்களுடன் போரிட்டார்கள். (பல நாட்கள் முற்றுகைக்குப் பின்) பனூ குறைழா குலத்தார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தீர்ப்பை ஏற்க இறங்கிவந்தனர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ குறைழா தொடர்பான முடிவை (பனூ குறைழா குலத்தாரின் நட்புக் குலத் தலைவரான) சஅத் (ரலி) அவர்களிடம் ஒப்படைத்தார்கள்.
சஅத் (ரலி) அவர்கள், "பனூ குறைழாக்களில் போர் வீரர்கள் கொல்லப்பட வேண்டும்; குழந்தைகளும் பெண்களும் போர்க் கைதிகளாக ஆக்கப்பட வேண்டும்; அவர்களின் சொத்துக்கள் பங்கிடப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்கிறேன்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3629. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் இவர்கள் விஷயத்தில் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் தீர்ப்பையே அளித்திருக்கிறீர்கள்" என்று (சஅத் (ரலி) அவர்களிடம்) கூறினார்கள் என என்னிடம் தெரிவிக்கப்பட்டது.
அத்தியாயம் : 32
3630. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
சஅத் பின் முஆத் (ரலி) அவர்களின் (கை நரம்பில் பட்ட அம்புக்) காயம், ஆறும் நிலையை அடைந்தபோது அவர்கள், "இறைவா! உன் தூதரை நம்ப மறுத்து, அவர்களை (ஊரைவிட்டு) வெளியேற்றிய சமுதாயத்தாரை எதிர்த்து உன் பாதையில் போர்புரிவதே மற்ற எதையும்விட எனக்கு மிகவும் விருப்பமானது என்பதை நீ அறிவாய். இறைவா! குறைஷியருடனான போர் ஏதேனும் எஞ்சியிருந்தால் நான் உன் வழியில் போர் செய்ய என்னை உயிருடன் இருக்கச் செய். இறைவா! எங்களுக்கும் (குறைஷியரான) அவர்களுக்கும் இடையிலான போரை (இத்துடன்) நீ முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டாய் என்றே நான் எண்ணுகிறேன். அவ்வாறு எங்களுக்கும் அவர்களுக்கும் இடையிலான போரை நீ முடிவுக்குக் கொண்டுவந்திருந்தால், (ஆறும் நிலையிலிருக்கும் எனது) காயத்திலிருந்து மீண்டும் குருதி கொப்புளிக்கச் செய்து, அதிலேயே எனக்கு (வீர)மரணத்தை அளிப்பாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.
அவ்வாறே அவரது நெஞ்செலும்பிலிருந்து குருதி கொப்புளித்தது. அவரது கூடாரத்தை ஒட்டி பனூ ஃகிஃபார் குலத்தாரின் கூடாரம் ஒன்றும் பள்ளிவாசலில் அமைக்கப்பெற்றிருந்தது.
பனூ ஃகிஃபார் குலத்தாருக்கு, சஅத் (ரலி) அவர்களது கூடாரத்திலிருந்து தங்களை நோக்கி வழிந்தோடி வந்த இரத்தம் அச்சத்தை ஏற்படுத்தியது. அப்போது அக்குலத்தார் "கூடாரவாசிகளே! உங்கள் பகுதியிலிருந்து எங்களை நோக்கிப் பாய்ந்து வருகிறதே, இது என்ன?" என்று கேட்டுக்கொண்டு, அங்கு பார்த்தபோது காயத்திலிருந்து இரத்தம் வழியும் நிலையில் சஅத் (ரலி) அவர்கள் இருந்தார்கள். அந்தக் காயத்தாலேயே அவர்கள் இறந்தார்கள்.
அத்தியாயம் : 32
3631. மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அன்றிரவே அவரது காயத்திலிருந்து குருதி கொப்புளித்தது. குருதி வழிந்தோடிக் கொண்டே இருந்து, முடிவில் அவர் இறந்துவிட்டார்" என்று இடம்பெற்றுள்ளது.
மேலும், அந்த அறிவிப்பில் பின்வரும் தகவலும் இடம்பெற்றுள்ளது: இது குறித்தே ஒரு கவிஞர் பாடினார்.
சஅதே!
பனூ முஆதின் வழித்தோன்றலே!
குறைழாவும் நளீரும்
என்ன ஆனார்கள்?
உன் வாழ்நாள் மீதாணை!
குறைழாவும் நளீரும்
நாட்டைவிட்டு
வெளியேறியபோது,
சஅத் பின் முஆத்
(அளவுக்கதிகமாக) பொறுமை காத்தார்
(அவ்ஸே!) நீங்கள் உங்கள்
பாத்திரங்களைக் காலி
செய்துவிட்டீர்கள்.
(உதவ முன்வரவில்லை.)
ஆனால், அந்த (கஸ்ரஜ்) குலத்தாரின்
பாத்திரமோ (பனூ கைனுகா),
சுடச் சுடக் கொதிக்கிறது
(காப்பாற்றப்பட்டுவிட்டனர்).
மாண்பமை அபூஹுபாப்
(அப்துல்லாஹ் பின் உபை),
"இங்கேயே தங்குவீர்,
கைனுகாவினரே!
எங்கும் சென்றுவிடாதீர்" என்றார்.
அவர்கள் இன்று
சொந்த ஊரிலேயே
திடமாக அமர்ந்துவிட்டனர்.
"மைத்தான்" (ஹிஜாஸ்) மலைமீது
கற்பாறைகள் அமர்ந்தது போல்.
அத்தியாயம் : 32
பாடம் : 23 போருக்கு விரைந்து செல்வதும், (நம்மை) எதிர்நோக்கியுள்ள இரு விஷயங்களில் மிகவும் முக்கியமானதற்கு முன்னுரிமை அளிப்பதும்.
3632. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அகழ்ப் போரை முடித்துத் திரும்பிய நாளன்று, "பனூ குறைழா குலத்தார் வசிக்குமிடத்தை நீங்கள் அடையாத வரை உங்களில் எவரும் லுஹர் தொழுகையைத் தொழ வேண்டாம்" என்று எங்களிடம் (கூறி, பனூ குறைழா குலத்தாரை நோக்கி விரைவாகப் புறப்படுமாறு) அறிவித்தார்கள்.
அவ்வாறு சென்றவர்கள் (வழியிலேயே அஸ்ர் தொழுகையின் நேரத்தை அடைந்தனர்.) சிலர் (அஸ்ர் தொழுகையின்) நேரம் தவறிவிடுமோ என அஞ்சினர். எனவே, பனூ குறைழா குலத்தார் வசிக்குமிடத்திற்கு முன்பே தொழுதுவிட்டனர். வேறுசிலர் தொழுகையின் நேரம் நமக்குத் தவறினாலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்ட இடத்திலேயே தொழுவோம் என்று கூறி (தொழுகையைத் தாமதப்படுத்தி)னர்.
பின்னர் (இரு பிரிவினர் குறித்தும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டபோது) அவ்விரு பிரிவினரில் எவரையும் அவர்கள் குறை கூறவில்லை.
அத்தியாயம் : 32
பாடம் : 24 முஹாஜிர்களுக்கு அன்சாரிகள் இரவலாகக் கொடுத்திருந்த மரங்கள் மற்றும் கனிகளை, வெற்றிக(ளில் கிடைத்த செல்வங்க)ளால் தன்னிறைவு பெற்ற போது முஹாஜிர்கள் திருப்பிக் கொடுத்தது.
3633. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஹாஜிர்கள் (மக்கா முஸ்லிம்கள்) மதீனாவுக்கு வந்தபோது, தங்களுடைய கரங்களில் (செல்வம்) எதுவும் இல்லாத நிலையிலேயே வந்தனர். (மதீனாவாசிகளான) அன்சாரிகளோ நிலங்களும் (பேரீச்சந்தோப்புகள் போன்ற) அசையாச் சொத்துகளும் உடையவர்களாக இருந்தார்கள்.
எனவே, ஒவ்வோர் ஆண்டும் தம் நிலங்களின் விளைச்சல்களில் (குறிப்பிட்ட) பாகங்களை முஹாஜிர்கள் தமக்குக் கொடுத்துவிட வேண்டும் என்றும், தம் பங்கிற்கு அவர்கள் பாடுபட்டு உழைக்க வேண்டும் என்றும் பேசி முஹாஜிர்களுக்கு அன்சாரிகள் தம் நிலங்களைப் பிரித்துக் கொடுத்தார்கள்.
என் தாயார் உம்மு சுலைம் (ரலி) அவர்கள், என் தாய்வழிச் சகோதரர் அப்துல்லாஹ் பின் அபீதல்ஹாவின் தாயாராகவும் இருந்தார். என் தாயார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சில பேரீச்ச மரங்களை (அவற்றின் கனிகளை மட்டும் பயன்படுத்திக் கொள்ளும்படி அன்பளிப்பாகக்) கொடுத்திருந்தார்கள்.
அவற்றை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் அடிமைப் பெண்ணாயிருந்த உசாமா பின் ஸைதுடைய தாயார் உம்மு அய்மனுக்கு (அன்பளிப்பாக)க் கொடுத்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர்வாசிகள்மீது போர் தொடுத்து முடித்து மதீனாவுக்கு (வெற்றியோடு) திரும்பியபோது முஹாஜிர்கள், தங்களுக்கு அன்சாரிகள் இரவலாக வழங்கியிருந்த கனிக(ள் தரும் மரங்க)ளை அவர்களிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் என் தாயாரிடம் அவருடைய பேரீச்ச மரங்களைத் திரும்பத் தந்துவிட்டு, அவற்றுக்குப் பதிலாக உம்மு அய்மன் (ரலி) அவர்களுக்குத் தமது தோட்டத்திலிருந்து (சில மரங்களை அன்பளிப்பாகக்) கொடுத்தார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
உம்மு அய்மன் (ரலி) அவர்கள் உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களின் தாயார் ஆவார். அவர் (நபியவர்களின் தந்தை) அப்துல்லாஹ் பின் அப்துல் முத்தலிபின் அடிமையாக இருந்தார்; அபிசீனிய இனத்தைச் சேர்ந்தவராகவும் இருந்தார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தந்தை இறந்த பிறகே ஆமினா அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பெற்றெடுத்தார்கள். இந்நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை உம்மு அய்மன் அவர்களே வளர்த்துவந்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வளர்ந்து பெரியவரானதும் உம்மு அய்மனை விடுதலை செய்துவிட்டார்கள். பின்னர் (தமது பொறுப்பில் வளர்ந்த) ஸைத் பின் ஹாரிஸாவுக்கு அவரைத் திருமணம் செய்துவைத்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்து ஐந்து மாதங்களுக்குப் பின்னர் உம்மு அய்மன் (ரலி) அவர்கள் இறந்தார்கள். இதுவே உம்மு அய்மன் (ரலி) அவர்களின் (வாழ்க்கையின்) சில குறிப்புகளாகும்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3634. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பனூ குறைழா மற்றும் பனூ நளீர் குலத்தார் வெற்றி கொள்ளப்படும்வரை (இரவலாகப் பயன்படுத்திக்கொள்ளும்படி) தமது நிலத்திலிருந்து பேரீச்ச மரங்களில் சிலவற்றை ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் கொடுத்து வைத்திருந்தார். (பனூ குறைழா, பனூ நளீர் குலத்தாரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெற்றி கொண்ட) பின்னர் அவரிடமே அம்மரங்களை அவர்கள் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள்.
இந்நிலையில், என் குடும்பத்தார் என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, அல்லாஹ்வின் தூதருக்குத் தாங்கள் கொடுத்திருந்த மரங்கள் அனைத்தையும் அல்லது அவற்றில் சிலவற்றை (திரும்பத் தரும்படி) கேட்குமாறு என்னைப் பணித்தனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த மரங்களை(ப் பராமரித்து பயன்பெற்றுக்கொள்ளுமாறு தம் வளர்ப்புத்தாய்) உம்மு அய்மன் (ரலி) அவர்களிடம் (இரவலாகக்) கொடுத்திருந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று கேட்டபோது, அவர்கள் அம்மரங்களை என்னிடம் திரும்பத் தந்துவிட்டதாகக் கூறினார்கள்.
அப்போது அங்கு உம்மு அய்மன் (ரலி) அவர்கள் வந்து, எனது கழுத்தில் துணியைப் போட்டுப் பிடித்து "அல்லாஹ்வின் மீதாணையாக! (முடியாது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்குத் தந்துவிட்டவற்றை உன்னிடம் நான் கொடுக்கமாட்டேன்" என்று கூறலானார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உம்மு அய்மன்! அவரை விட்டு விடுங்கள். இன்னின்ன பொருட்களை உங்களுக்கு நான் தருகிறேன்" என்று கூறினார்கள். அவர் "இல்லை (முடியாது). எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அ(ந்த ஏக இறை)வன் மீதாணையாக! (அவற்றைத் தர முடியாது)" என்று கூறினார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இன்னின்னதைத் தருகிறேன் என்று கூறிக்கொண்டே வந்து, இறுதியில் அதைப் போன்று பத்து மடங்கு அல்லது ஏறக்குறைய அதைப் போன்ற அளவு கொடுத்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
பாடம் : 25 போர்ச் செல்வமாகக் கிடைத்த உணவுப் பொருட்களை (நாடு திரும்புவதற்கு முன்) பகை நாட்டில் இருக்கும் போதே உண்ணலாம்.
3635. அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கைபர் போர் தினத்தன்று கொழுப்பு இருந்த தோல் பை ஒன்றை நான் பெற்றேன். அதை நான் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு "இன்று இதிலிருந்து ஒரு சிறிதளவைக்கூட யாருக்கும் நான் கொடுக்கமாட்டேன்" என்று கூறினேன். பிறகு திரும்பிப் பார்த்தேன். அங்கே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்த வண்ணம் இருந்தார்கள்.
அத்தியாயம் : 32
3636. அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கைபர் போர் தினத்தன்று எங்களை நோக்கி ஒரு தோல் பை வீசப்பட்டது. அதில் உணவுப் பொருளும் கொழுப்பும் இருந்தன. அதை எடுப்பதற்காக நான் குதித்தோடினேன். பிறகு திரும்பிப் பார்த்தேன். அங்கே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அவர்களைக் கண்டு நான் வெட்கமடைந்தேன்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "கொழுப்பு அடங்கிய தோல் பை ஒன்று" என இடம்பெற்றுள்ளது. "உணவுப் பொருள்" பற்றிய குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 32
பாடம் : 26 இஸ்லாத்திற்கு அழைப்பு விடுத்து ஹெராக்ளியஸ் மன்னருக்கு நபி (ஸல்) அவர்கள் எழுதிய கடிதம்.
3637. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் என்னிடம் நேரடியாகக் கூறினார்கள்: (குறைஷியரின் தலைவனாயிருந்த) எனக்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் இடையே (ஹுதைபியா) ஒப்பந்தம் ஏற்பட்டிருந்த காலகட்டத்தில் (குறைஷியரின் வணிகக் குழுவில்) சென்று ஷாம் (சிரியா) நாட்டில் நான் இருந்தேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ரோமப் பைஸாந்திய மன்னர் ஹெராக்ளியஸுக்குக் கடிதம் வந்தது. அக்கடிதத்தை (நபித்தோழர்) திஹ்யா அல்கல்பீ (ரலி) அவர்கள் கொண்டுவந்து, புஸ்ரா (ஹூரான்) சிற்றரசரிடம் கொடுக்க, அவர் அதை ஹெராக்ளியஸிடம் ஒப்படைத்திருந்தார்.
அப்போது ஹெராக்ளியஸ் "தம்மை இறைத்தூதர் எனக் கூறும் அந்த மனிதரின் குலத்தாரில் யாரேனும் இங்கு (நம் நாட்டில்) உள்ளனரா?" என்று கேட்டார். அ(வையிலிருந்த)வர்கள் "ஆம்" என விடையளித்தனர்.
குறைஷி (வணிக)க் குழுவினருடன் இருந்த என்னை அழைத்து வரும்படி ஆளனுப்பப்பட்டது. நாங்கள் அனைவரும் ஹெராக்ளியஸிடம் சென்றோம். எங்கள் அனைவரையும் தமக்கு முன்னால் உட்காரச் சொன்னார் ஹெராக்ளியஸ். பிறகு, "தம்மை இறைத்தூதர் எனச் சொல்லிக்கொண்டிருக்கும் இந்த (முஹம்மத் எனும்) மனிதருக்கு உங்களில் நெருங்கிய உறவினர் யார்?" என்று கேட்டார்.
நான் "நானே (அவருக்கு நெருங்கிய உறவினர் ஆவேன்)" என்று பதிலளித்தேன். எனவே, என்னை அவருக்கு எதிரில் (நெருக்கமாக) உட்காரவைத்தனர். என் நண்பர்களை எனக்குப் பின்னால் உட்காரவைத்தனர்.
பிறகு ஹெராக்ளியஸ் தம் மொழி பெயர்ப்பாளரை அழைத்து, "தம்மை இறைத்தூதர் எனச் சொல்லிக்கொண்டிருக்கும் அந்த (முஹம்மத் எனும்) மனிதரைப் பற்றி நான் இவரிடம் கேட்பேன். இவர் பொய் (ஏதும்) சொன்னால் உடனே "அவர் பொய் சொல்கிறார்" என்று கூறிவிட வேண்டும்" என அவருடைய நண்பர்களிடம் (மொழிபெயர்த்துச்) சொல் என்றார்.
"நான் பொய் பேசினேன்" என என்னைப் பற்றி என் நண்பர்கள் (ஊரில் வந்து) பேசுவார்களே என்ற அச்சம் மட்டும் எனக்கு இல்லாதிருந்தால், அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (நபியவர்களைப் பற்றி) பொய்யான தகவல்களைச் சொல்லியிருப்பேன்.
பிறகு ஹெராக்ளியஸ் தம் மொழிபெயர்ப்பாளரிடம், "இவரிடம் "அந்த (முஹம்மத் எனும்) மனிதரின் குலம் எப்படிப்பட்டது?" எனக் கேள்" என்றார். நான் "அவர் எங்களில் சிறந்த குலத்தைச் சேர்ந்தவர்" என்றேன். "அடுத்து அந்த மனிதருடைய முன்னோரில் அரசர் எவரேனும் இருந்திருக்கின்றனரா?" என்று கேட்டார். நான் "இல்லை" என்றேன்.
அவர், "அந்த மனிதர் இவ்வாறு (தம்மை இறைத்தூதர் என) வாதிப்பதற்கு முன் அவர் மக்களிடம் பொய்(யேதும்) சொன்னார் என நீங்கள் அவரைக் குற்றம் சாட்டியதுண்டா?" என்று கேட்டார். நான் "இல்லை" என்றேன். "அந்த மனிதரை யார் பின்பற்றுகின்றனர்? மேட்டுக்குடி மக்களா, அல்லது நலிந்த பிரிவினரா?" என்று கேட்டார். நான் "அல்ல. நலிந்த பிரிவினரே (அவரைப் பின்பற்றுகின்றனர்)" என்றேன்.
"அவரைப் பின்பற்றுவோர் கூடிக்கொண்டே செல்கின்றனரா, அல்லது குறைந்துவருகின்ற னரா?" என்று கேட்டார். நான் "குறைவதில்லை. (நாளுக்கு நாள்) அதிகரித்துக்கொண்டே செல்கின்றனர்" என்றேன்.
"அவரது மார்க்கத்தில் இணைந்த பிறகு அதன் மீது அதிருப்தியடைந்து எவரேனும் அதிலிருந்து வெளியேறிச் செல்வதுண்டா?" என்று கேட்டார். நான் "இல்லை (யாரும் பழைய மதத்திற்குத் திரும்புவதில்லை)" என்றேன்.
"அந்த மனிதருடன் நீங்கள் போர் புரிந்ததுண்டா?" என்று கேட்டார். நான் "ஆம்" என்றேன். "அவருடன் நீங்கள் நடத்திய போர்(களின் முடிவு)கள் எவ்வாறு அமைந்தன?" என்று கேட்டார். நான் "எங்களுக்கிடையேயான போர், (வெற்றியும் தோல்வியும் சுழல் முறையில் வரும்) கிணற்று வாளியாக உள்ளது. ஒரு முறை அவர் எங்களை வெல்கிறார்;மறுமுறை நாங்கள் அவரை வெல்கிறோம்" என்றேன்.
"அந்த மனிதர் ஒப்பந்த மீறல் செய்கின்றாரா?" என்று கேட்டார். நான் "இல்லை (தற்போது நடைமுறையிலுள்ள இந்த ஹுதைபியா சமாதான உடன்படிக்கையின்) இந்தக் கால கட்டத்தில் நாங்களும் அவரும் இருந்துவருகிறோம். இதில் அவர் எப்படி நடந்துகொள்வார் என்று எங்களுக்குத் தெரியாது" என்று சொன்னேன்.
அல்லாஹ்வின் மீதாணையாக! இதைத் தவிர (நபியவர்களைக் குறை சொல்வதற்கு) வேறு எந்த வார்த்தையையும் திணிக்க எனக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.
தொடர்ந்து அவர், "(உங்களில்) எவரேனும் இவருக்கு முன் இப்படி(த் தம்மை இறைத்தூதர் என) எப்போதாவது வாதித்ததுண்டா?" என்று கேட்டார். நான் "இல்லை" என்று கூறினேன்.
பிறகு ஹெராக்ளியஸ் தம் மொழிபெயர்ப்பாளரிடம் பின்வருமாறு கூறினார்:
அவரிடம் (அபூசுஃப்யானிடம்) கூறிவிடு: நான் உம்மிடம் அந்த மனிதருடைய குலத்தைப் பற்றிக் கேட்டேன். அதற்கு நீர் "அவர் எங்களில் சிறந்த குலத்தை உடையவர்" என்று கூறினீர். இவ்வாறே இறைத்தூதர்கள் ஒரு சமுதாயத்தின் நற்குடியில்தான் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
நான் உம்மிடம் "அவருடைய முன்னோர்களில் அரசர் எவரேனும் இருந்திருக்கின்றனரா?" என்று கேட்டேன். அதற்கு நீர் "இல்லை" என்று விடையளித்தீர். அவருடைய முன்னோர்களில் அரசர் எவரேனும் இருந்(ததாக நீர் கூறியிருந்)தால், "தம் முன்னோரின் ஆட்சியதிகாரத்தை(த் தாமும்) அடைய விரும்பும் ஒரு (சராசரி) மனிதர்தாம் இவர்" என்று நான் கூறியிருப்பேன்.
நான் உம்மிடம் அவரைப் பின்பற்றுவோர் பற்றி, "மக்களில் மேட்டுக்குடியினர் அவரைப் பின்பற்றுகின்றனரா, அல்லது நலிந்த பிரிவினரா?" என்று கேட்டேன். அதற்கு நீர் "நலிந்த பிரிவினரே அவரைப் பின்பற்றுகின்றனர்" என்று பதிலளித்தீர். (பெரும்பாலும்) நலிந்த பிரிவினர்தாம் இறைத்தூதர்களைப் பின்பற்றுவோர் ஆவர்.
நான் உம்மிடம் "அவர் இவ்வாறு (தம்மை இறைத்தூதர் என) வாதிப்பதற்கு முன்பு, (அவர் மக்களிடம்) பொய் பேசினார் என நீங்கள் குற்றம் சாட்டியதுண்டா" என்று கேட்டேன். அதற்கு நீர் "இல்லை" என்று பதிலளித்தீர். இதிலிருந்து மக்களிடம் பொய் பேச(த் துணிய)ôத அவர் அல்லாஹ்வின் மீது பொய் சொல்லமாட்டார் என்று நான் புரிந்துகொண்டேன்.
நான் உம்மிடம் "அவரது மார்க்கத்தில் இணைந்த பின் எவரேனும் அதன் மீது அதிருப்தி கொண்டு அதிலிருந்து வெளியேறிச் செல்வதுண்டா?" என்று கேட்டேன். அதற்கு நீர் "இல்லை" என்று விடையளித்தீர். இறைநம்பிக்கை (ஈமான்) இத்தகையதே; அதன் மலர்ச்சி மனங்களில் கலந்துவிடும்போது (அதைக் குறித்து எவருமே அதிருப்தியடையமாட்டார்).
நான் உம்மிடம் "அவ(ரைப் பின்பற்றுபவ)ர்கள் (நாளுக்கு நாள்) அதிகரித்துவருகின்றனரா, அல்லது குறைந்துவருகின்றனரா" என்று கேட்டேன். அதற்கு நீர் "அவர்கள் அதிகரித்தே வருகின்றனர்" என்று பதிலளித்தீர். இறைநம்பிக்கை என்பது, அது முழுமையடையும்வரை அவ்வாறுதான் (வளர்ச்சியை நோக்கியே செல்லும்).
நான் உம்மிடம் "அவருடன் நீங்கள் போர் புரிந்ததுண்டா?" என்று கேட்டேன். அதற்கு நீர் "அவருடன் நீங்கள் போர் செய்துள்ளதாகவும் உங்களுக்கும் அவருக்கும் இடையே நடைபெறும் போரில் (வெற்றியும் தோல்வியும்) கிணற்று வாளிகள் போன்று சுழல் (முறையில் அமை)கின்றன. ஒரு முறை உங்களை அவர் வெல்வார். மறுமுறை அவரை நீங்கள் வெல்கிறீர்கள்" என்று கூறினீர். இறைத்தூதர்கள் இத்தகையோரே. முதலில் அவர்கள் சோதிக்கப்படுவார்கள். பிறகு இறுதி முடிவு அவர்களுக்கே (சாதகமாக) அமையும்.
நான் உம்மிடம் "அவர் ஒப்பந்த மீறல் செய்கிறாரா?" என்று கேட்டேன். அதற்கு நீர் "அவர் ஒப்பந்த மீறல் செய்வதில்லை" என்று பதிலளித்தீர். இறைத்தூதர்கள் இத்தகையோரே. அவர்கள் வாக்கு மீறமாட்டார்கள்.
நான் உம்மிடம் "இவருக்கு முன்னர் (உங்களில்) எவரேனும் இவ்வாதத்தை முன்வைத்த துண்டா?" என்று கேட்டேன். அதற்கு நீர் "இல்லை" என்று பதிலளித்தீர். இவருக்கு முன்னர் எவரேனும் இவ்வாதத்தை முன்வைத்திருந்(ததாக நீர் கூறியிருந்)தால், "தமக்கு முன்னர் (சிலரால்) முன்வைக்கப்பட்ட ஒரு வாதத்தைப் பின் பற்றிச் செல்கின்ற ஒரு (சராசரி) மனிதரே இவர்" என்று நான் சொல்லியிருப்பேன்.
பிறகு ஹெராக்ளியஸ், "அந்த மனிதர் உங்களுக்கு என்ன கட்டளையிடுகிறார்?" என்று கேட்டார். "தொழுகையை நிறைவேற்றுமாறும் ஸகாத் கொடுக்குமாறும் உறவுகளைப் பேணுமாறும் சுயக்கட்டுப்பாட்டுடன் வாழுமாறும் எங்களுக்குக் கட்டளையிடுகிறார்" என்று நான் கூறினேன்.
அதற்கு ஹெராக்ளியஸ், "நீர் சொல்வது உண்மையாயிருப்பின், நிச்சயமாக அவர் ஓர் இறைத்தூதர்தாம். (இறைத்தூதரான) அவர் வரவிருப்பதாக நான் அறிந்திருந்தேன். ஆனால், அவர் (குறைஷியரான) உங்களிலிருந்து வருவார் என்று நான் நினைத்திருக்க வில்லை. நான் அவரைச் சென்றடைவேன் என அறிந்தால், அவரைச் சந்திப்பதில் எனக்கு விருப்பம் உண்டு. நான் அவருக்கு அருகில் இருந்திருந்தால் அவருடைய பாதங்களைக் கழுவியிருப்பேன். அவரது ஆட்சி(யின் எல்லை) என் பாதங்களுக்குக் கீழ்வரை வந்து சேரும்" என்று கூறினார்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுதிய கடிதத்தைக் கொண்டுவந்து வாசிக்கச் சொன்னார் ஹெராக்ளியஸ். அக்கடிதத்தில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:
அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...
இது அல்லாஹ்வின் தூதர் முஹம்மதிடமிருந்து ரோமாபுரியின் அதிபர் ஹெராக்ளியஸுக்கு (எழுதப்படும் கடிதம்): நேர்வழியைப் பின்பற்றியவர்மீது சாந்தி (சலாம்) நிலவட்டும். இறை வாழ்த்துக்குப் பின்!
இஸ்லாத்தின் (ஏகத்துவ) அழைப்பை ஏற்குமாறு உங்களை நான் அழைக்கிறேன். இஸ்லாத்தை ஏற்றுக்கொள்க. (ஏற்றுக்கொண்டால் ஈருலகிலும்) பாதுகாப்புப் பெறுவீர். நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் அல்லாஹ் உங்களுக்குச் சேர வேண்டிய நற்பலனை இரு மடங்காகத் தருவான்.
நீங்கள் புறக்கணித்தால் குடி(யானவர்)களின் பாவமும் (அவர்கள் இஸ்லாத்தை ஏற்காமல் போனதற்கான குற்றமும்) உங்களையே சேரும். "வேதக்காரர்களே! எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பொதுவானதொரு கொள்கையின்பால் நீங்கள் வாருங்கள். (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் வழிபடக் கூடாது; அவனுக்கு எதையும் இணை கற்பிக்கக் கூடாது; அல்லாஹ்வை விடுத்து நம்மில் சிலர் வேறு சிலரைக் கடவுள்களாக ஆக்கிக்கொள்ளக் கூடாது என்று (நபியே!) நீர் கூறுவீராக. (இதற்குப் பிறகும்) அவர்கள் புறக்கணித்தால், நாங்கள் (அல்லாஹ்வுக்கு அடிபணிந்த) முஸ்லிம்கள்தாம் என்பதற்கு நீங்கள் சாட்சிகளாக இருங்கள் என்று சொல்லிவிடுங்கள். (3:64)
ஹெராக்ளியஸ் அந்தக் கடிதத்தைப் படித்து முடித்தபோது, அவர் அருகிலிருந்த (மதகுருமார்கள் மற்றும் ரோம பைஸாந்திய ஆட்சியாளர்களின்) குரல்கள் உயர்ந்தன. கூச்சல் அதிகரித்தது. ஹெராக்ளியஸின் உத்தரவின்பேரில் நாங்கள் (அவையிலிருந்து) வெளியேற்றப்பட்டோம்.
நாங்கள் வெளியே வந்தபோது நான் என் நண்பர்களிடம் "இப்னு அபீகப்ஷா (முஹம்மது)வின் விவகாரம் (மார்க்கம்) வலிமை பெற்றுவிட்டது. மஞ்சள் நிற இனத்தாரான (ரோமானிய) மன்னரே அவருக்கு (முஹம்மதுக்கு) அஞ்சுகிறாரே!"என்று சொன்னேன்.
அன்று தொட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் விவகாரம் (மார்க்கம்) விரைவில் வெற்றிபெறும் என உறுதிபூண்டவனாக நான் இருக்கலானேன். முடிவில் அல்லாஹ் என் உள்ளத்தில் இஸ்லாத்தைப் புகுத்தினான்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "பாரசீகப் படையை (ரோமாபுரி மன்னர்) கைஸர் (சீசர்) மூலம் அல்லாஹ் விரட்டியடித்தபோது, தமக்கு அல்லாஹ் வழங்கிய அருட்கொடைக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக "ஹிம்ஸி"லிருந்து பைத்துல் மக்திஸுக்கு (ஈலியா) கைஸர் (ஹெராக்ளியஸ்) வந்தார்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
இந்த அறிவிப்புகளில் "அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமான (முஹம்மத் எழுதிய கடிதம்)" என்று காணப்படுகிறது. "குடி(யானவர்)கள்" என்பதைக் குறிக்க ("அரீசிய்யீன்" என்பதற்குப் பதிலாக) "யரீசிய்யீன" என்ற சொல்லும் "இஸ்லாத்தின் அழைப்பு" என்பதைக் குறிக்க ("திஆயத்துல் இஸ்லாம்" என்பதற்குப் பகரமாக) "தாஇயத்துல் இஸ்லாம்" எனும் சொற்றொடரும் ஆளப்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 32
பாடம் : 27 (ஏக இறை) அல்லாஹ்வை ஏற்குமாறு இறைமறுப்பாளர்களான அரசர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் எழுதிய கடிதங்கள்.
3638. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (பாரசீக மன்னர்) கிஸ்ரா (குஸ்ரூ), (ரோம பைஸாந்திய மன்னர்) கைசர் (சீசர்), (அபிசீனிய அரசர்) நஜாஷீ (நீகஸ்) மற்றும் ஒவ்வொரு சர்வாதிகார ஆட்சியாளருக்கும் (ஏக இறை) அல்லாஹ்வை ஏற்குமாறு அழைப்பு விடுத்துக் கடிதம் எழுதினார்கள். நபி (ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுகை தொழுவித்த நஜாஷீ இவரல்லர்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நபி (ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுகை தொழுவித்த நஜாஷீ இவரல்லர்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே வேறோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதிலும் "நபி (ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுகை தொழுவித்த நஜாஷீ இவரல்லர்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 32
பாடம் : 28 ஹுனைன் போர்.
3639. அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹுனைன் போரில் கலந்துகொண்டேன். (போர் உக்கிரமாக நடந்தபோது) நானும் அபூசுஃப்யான் பின் அல்ஹாரிஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்களும் மட்டுமே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைவிட்டுப் பிரியாமல் அவர்களுடனேயே இருந்தோம்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்குரிய வெள்ளைக் கோவேறு கழுதையின் மீதிருந்தார்கள். அந்தக் கழுதையை ஃபர்வா பின் நுஃபாஸா அல்ஜுதாமீ என்பார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கியிருந்தார்.
இறைமறுப்பாளர்களும் முஸ்லிம்களும் மோதிக்கொண்டபோது முஸ்லிம்கள் புறமுதுகிட்டு ஓடினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோ (நிலைகுலையாமல்) தமது கோவேறு கழுதையை இறைமறுப்பாளர்களை நோக்கி விரட்டினார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கழுதையின் கடிவாளத்தைப் பிடித்து, அது விரைவாகச் சென்று விடக் கூடாது என்பதற்காக அதைக் கட்டுப்படுத்திக்கொண்டிருந்தேன்.
அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வாகனத்தின் சேணத்தைப் பிடித்துக்கொண்டிருந்தார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அப்பாஸ்! கருவேல மரத்தின் (கீழ் "ரிள்வான்" உடன்படிக்கை செய்த) தோழர்களை அழையுங்கள்" என்று கூறினார்கள். நான் உரத்த குரலில் "கருவேல மரத்தின் (கீழ் "ரிள்வான்" ஒப்பந்தம் செய்த) நண்பர்கள் எங்கே?" என்று அழைத்தேன். (அப்பாஸ் (ரலி) அவர்கள் உரத்த குரலுடையவராக இருந்தார்கள்.)
அல்லாஹ்வின் மீதாணையாக! (பிரிந்தோடிய) முஸ்லிம்கள், எனது குரலைக் கேட்டவுடன் பசு தன் கன்றுகளை நோக்கித் தாவிவருவதைப் போன்று "இதோ வந்துவிட்டோம்; இதோ வந்துவிட்டோம்" என்று கூறியவாறு தாவிவந்து இறைமறுப்பாளர்களுடன் போரிட்டனர்.
அன்சாரிகளிடையே "அன்சாரிகளே! அன்சாரிகளே!" என்று அழைப்பு விடுக்கப்பட்டது. பிறகு பனுல் ஹாரிஸ் பின் அல்கஸ்ரஜ் குலத்தாருக்கு மட்டுமே அழைப்பு விடுக்க வேண்டியிருந்தது. அப்போது அவர்கள், "பனுல் ஹாரிஸ் பின் அல்கஸ்ரஜ் குலத்தாரே! பனுல் ஹாரிஸ் பின் அல்கஸ்ரஜ் குலத்தாரே!" என்று அழைத்தனர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கோவேறுகழுதையில் அமர்ந்தவாறு தலையை உயர்த்தி சண்டையைக் கவனித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கல் அடுப்பு கனன்றுகொண்டிருக்கும் நேரமிது" என்று கூறினார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு கைப்பிடி சிறு கற்களை அள்ளி இறைமறுப்பாளர்களின் முகத்தில் எறிந்தார்கள். பிறகு "முஹம்மதின் இறைவன் மீதாணையாக! அவர்கள் தோற்றனர்" என்று கூறினார்கள்.
நான் பார்த்துக்கொண்டே போனேன். அப்போது போர் தனது போக்கில் (உக்கிரமாக) நடந்துகொண்டிருந்தது. அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறு கற்களை எறிந்ததுதான் தாமதம்; இறைமறுப்பாளர்களின் பலம் குன்றிக்கொண்டே செல்வதையும் அவர்களின் கதை முடிவுக்கு வருவதையுமே நான் காணலானேன்.
அத்தியாயம் : 32
3640. மேற்கண்ட ஹதீஸ் அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "(அக்கழுதையை அன்பளிப்பாக அளித்தவரின் பெயர்) ஃபர்வா பின் நுஆமா அல்ஜுதாமீ" என்று இடம்பெற்றுள்ளது. (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறு கற்களை அள்ளி எறிந்துவிட்டு) "அவர்கள் தோற்றனர்;கஅபாவின் அதிபதி மீதாணையாக! அவர்கள் தோற்றனர்; கஅபாவின் அதிபதி மீதாணையாக என்று கூறினார்கள்"என்றும் காணப்படுகிறது.
மேலும் "முடிவில் அல்லாஹ் இறைமறுப்பாளர்களைத் தோற்கடித்தான்" என்று கூடுதலாகவும் இடம்பெற்றுள்ளது.
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்குப் பின்னால் தமது கோவேறு கழுதையிலிருந்தவாறு விரட்டிக்கொண்டிருந்ததை நான் இப்போதும் பார்ப்பதைப் போன்றுள்ளது" என்றும் இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்து.
அதில் "நான் ஹுனைன் போரில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. ஆயினும், மேற்கண்ட ஹதீஸே இந்த அறிவிப்பைவிட அதிகத் தகவல் உள்ளதும் முழுமையானதும் ஆகும்.
அத்தியாயம் : 32
3641. அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர், "அபூஉமாரா! நீங்கள் ஹுனைன் போர் நாளில் வெருண்டு ஓடினீர்களா?" என்று கேட்டார். அதற்கு பராஉ (ரலி) அவர்கள் கூறினார்கள்: இல்லை, அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறமுதுகிட்டுச் செல்லவில்லை. ஆயினும், அவர்களுடைய தோழர்களில் சில இளைஞர்கள் ஆயுதமின்றி, அல்லது அதிகமான ஆயுதமின்றி அவசரப்பட்டு நிராயுதபாணிகளாக (போருக்கு)ப் புறப்பட்டு வந்துவிட்டார்கள்.
அவர்கள் ஹவாஸின் மற்றும் பனூ நஸ்ர் குலத்தாரில் அம்பெய்யும் வீரர்களைச் சந்தித்தனர். அந்தக் குலத்தாரின் ஒரு அம்பு கூட குறி தவறாது. அவர்கள் கூட்டாகச் சேர்ந்து குறி தவறாமல் ஒரே நேரத்தில் அம்பெய்தார்கள். எனவே, அங்கு நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கிவந்தனர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு வெள்ளைக் கோவேறுகழுதையில் அமர்ந்துகொண்டிருக்க, அதை அபூசுஃப்யான் பின் அல்ஹாரிஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள் ஓட்டிக்கொண்டு வந்தார்கள். (நபித்தோழர்களின் நிலையைக் கண்டதும் தமது கழுதையிலிருந்து) இறங்கி (அல்லாஹ்விடம்) உதவி கோரிப் பிரார்த்தித்தார்கள்.
மேலும், "நான் இறைத்தூதர்தாம்; (இதில்) பொய் இல்லை. நான் அப்துல் முத்தலிபின் (மகனின்) மகன் ஆவேன்" என்று கூறினார்கள். பிறகு தம் தோழர்களை அணிவகுக்கச் செய்தார்கள்.
அத்தியாயம் : 32
3642. அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடம் வந்து, "நீங்கள் (அனைவரும்) ஹுனைன் போர் நாளில் பின்வாங்கி ஓடிக்கொண்டிருந்தீர்களா, அபூஉமாரா?" என்று கேட்டார்.
அதற்கு பராஉ (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் அறுதியிட்டுச் சொல்கிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறமுதுகிட்டுச் செல்லவில்லை. ஆயினும். மக்களில் அவசரப்பட்டு வந்த சில நிராயுதபாணிகள் (எதிரிகளான) இந்த ஹவாஸின் குலத்தாரை நோக்கிச் சென்றனர். அவர்களோ வில்வீரர்களாய் இருந்தனர். அவர்கள் கூட்டமாகச் சேர்ந்து ஒரே நேரத்தில் அம்புக் கூட்டிலிருந்து அம்புகளை எடுத்து எய்தனர்.
அந்த அம்புகள் வெட்டுக்கிளி கூட்டங்களைப் போன்று (பறந்துவந்தன). இதனால், (முஸ்லிம்கள்) சிதறி ஓடினர். பிறகு மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி வந்தனர். அப்போது அபூசுஃப்யான் பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கோவேறுகழுதையை ஓட்டிக்கொண்டு (நடந்து) வந்தார்கள்.
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது கழுதையிலிருந்து) இறங்கி அல்லாஹ்விடம் உதவி கோரிப் பிரார்த்தித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் இறைத்தூதர்தாம்; (இதில்) பொய் இல்லை;நான் அப்துல் முத்தலிபின் (மகனின்) மகன் ஆவேன்" என்றும், "இறைவா! உன் உதவியை இறக்குவாயாக!" என்றும் கூறிக்கொண்டிருந்தார்கள்.
அல்லாஹ்வின் மீதாணையாக! போர் (உச்சகட்டமடைந்து) சிவந்து (கனன்று) கொண்டிருந்த போது நபியவர்களையே கேடயமாக்கி நாங்கள் தப்பித்துக்கொண்டிருந்தோம். எங்களில் வீரர்கள்கூட நபியவர்களுக்கு நேராக (அவர்களுக்குப் பின்னாலேயே) நின்று கொண்டிருந்தனர்.
அத்தியாயம் : 32
3643. அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
கைஸ் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடம், "ஹுனைன் போர் நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட்டுவிட்டு நீங்கள் வெருண்டு ஓடினீர்களா?" என்று கேட்டார். அதற்கு பராஉ (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெருண்டோடவில்லை. ஹவாஸின் குலத்தார் அன்றைய தினம் வில்வீரர்களாய் இருந்தனர்.
(முதலில்) நாங்கள் அவர்கள்மீது தாக்குதல் நடத்தியபோது அவர்கள் சிதறியோடினர். எனவே, நாங்கள் குனிந்து போர்ச் செல்வங்களைச் சேகரிப்பதில் மும்முரமாய் ஈடுபட்டோம். அப்போது (சிதறியோடிய) எதிரிகள் எங்களை முன்னோக்கி அம்புகளை (கூட்டமாக நின்று) எய்தனர். (எனவே, நிலைகுலைய வேண்டிய நிலை எங்களுக்கு ஏற்பட்டது.)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வெருண்டோடாமல்) தமது வெள்ளைக் கோவேறுகழுதையில் அமர்ந்திருந்ததை நான் பார்த்தேன். அபூசுஃப்யான் பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் அதன் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் இறைத்தூதர்தாம். (இதில்) பொய் இல்லை. நான் அப்துல் முத்தலிபின் (மகனின்) மகன் ஆவேன்" என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "பராஉ (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர் அபூஉமாரா!" என்று அழைத்து மேற்கண்ட ஹதீஸில் உள்ளபடி கேட்டதாக ஹதீஸ் ஆரம்பமாகிறது. மேற்கண்ட ஹதீஸில் குறைந்த தகவல்களே இடம்பெற்றுள்ளன. இவர்களின் அறிவிப்பில் முழுமையான தகவல்கள் காணப்படுகின்றன.
அத்தியாயம் : 32