பாடம் : 7 எதிரிகளைச் சந்திக்கும்போது இறையுதவி வேண்டிப் பிரார்த்திப்பது விரும்பத் தக்கதாகும்.
3584. அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அகழ்ப் போரின்போது) கூட்டுப் படையினருக் கெதிராகப் பிரார்த்தித்தார்கள். அப்போது, "இறைவா! வேதத்தை அருள்பவனே! விரைவாகக் கணக்கெடுப்பவனே! இக்கூட்டுப் படையினரைத் தோற்கடிப்பாயாக. இறைவா! இவர்களைத் தோல்வியுறச் செய்து, நடுக்கத்திற்குள்ளாக்குவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.
அத்தியாயம் : 32
3585. மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதிலும் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மேற்கண்ட ஹதீஸில் உள்ளபடி) பிரார்த்தித்தார்கள்" என்றே ஹதீஸ் ஆரம்பமாகி, அதிலுள்ள மற்ற விவரங்கள் இடம் பெறுகின்றன.
"(இக்கூட்டுப் படையினரைத் தோற்கடிப்பாயாக எனும் இடத்தில்) கூட்டுப்படையினரைத் தோற்கடிப்பவனே!" என்று இடம் பெற்றுள்ளது. இறுதியில் இடம்பெற்றுள்ள "இறைவா!" எனும் சொல் இடம்பெறவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் இப்னு அபீஉமர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "மேகத்தை நகர்த்துபவனே!" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 32
3586. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உஹுதுப் போர் நாளில் "இறைவா! நீ (இந்த முஸ்லிம் படையை அழிக்க) நாடினால் (இனி) உன்னை மட்டுமே வழிபடுவோர் யாரும் இப்புவியில் இருக்கமாட்டார்கள்" என்று பிரார்த்தித்துக்கொண்டிருந்தார்கள்.
அத்தியாயம் : 32
பாடம் : 8 போரில் பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கொல்வது தடை செய்யப்பட்டுள்ளது.
3587. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட அறப்போர்களில் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதைக் கண்டித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3588. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட அறப்போர்களில் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதற்குத் தடைவிதித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
பாடம் : 9 (போர்ச் சூழலில் எதிரிகளின்) பெண்களையும் குழந்தைகளையும் இரவு நேரங்களில் தற்செயலாகக் கொன்றுவிட்டால் குற்றமாகாது.
3589. ஸஅப் பின் ஜஸ்ஸாமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் "இணைவைப் போ(ரான எதிரிநாட்டின)ரின் பெண்களும் குழந்தைகளும் (போரில் சிக்கிச்) சேதமடையும் (வாய்ப்பு உண்டு என்னும்) பட்சத்தில் அவர்கள்மீது இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தலாமா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் "அவர்களும் (எதிரிகளான) அவர்களைச் சேர்ந்தவர்களே" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3590. ஸஅப் பின் ஜஸ்ஸாமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் (எதிரிகளான) இணைவைப்பாளர்களின் பெண்களையும் குழந்தைகளையும் இரவு நேரத்தில் தாக்க வேண்டிய நிலை (சில சந்தர்ப்பங்களில்) ஏற்பட்டுவிடுகிறதே?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அவர்களும் எதிரிகளைச் சேர்ந்தவர்கள்தாம்" என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 32
3591. ஸஅப் பின் ஜஸ்ஸாமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம், "குதிரைப் படையினர் இரவு நேரத்தில் திடீர்த் தாக்குதல் நடத்தும் போது (எதிரிகளான) இணைவைப்பாளர்களின் குழந்தைகளும் பாதிக்கப்பட்டுவிடுகிறார்களே?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் "அக்குழந்தைகளும் அவர்களின் தந்தையரைச் சேர்ந்தவர்களே" என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 32
பாடம் : 10 (போர் நடவடிக்கையாக எதிரிகளான) இறைமறுப்பாளர்களின் மரங்களை வெட்டுவதும் எரிப்பதும் அனுமதிக்கப்பட்டதாகும்.
3592. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பயங்கரவாதிகளான) பனூ நளீர் குலத்தாரின் பேரீச்ச மரங்களை (போர்க்கால நடவடிக்கையாக) எரித்தார்கள்; இன்னும் (சிலவற்றை) வெட்டிவிட்டார்கள். அது "புவைரா" எனும் இடமாகும்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் இப்னு குதைபா (ரஹ்) மற்றும் இப்னு ரும்ஹ் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் "எனவேதான்,வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் "நீங்கள் (அவர்களுடைய) பேரீச்ச மரங்களை வெட்டியதோ, அல்லது அவற்றின் அடிமரங்கள்மீது அவற்றை நிற்கும்படி விட்டுவிட்டதோ எல்லாமே அல்லாஹ்வின் அனுமதியுடனேயே நடந்தன. தீயோரை அவன் இழிவுபடுத்தவே (இவ்வாறு அனுமதித்தான்)" (59:5) எனும் வசனத்தை அருளினான்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 32
3593. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்ட) பனூ நளீர் குலத்தாரின் பேரீச்ச மரங்களை வெட்டினார்கள்; (சில மரங்களை) எரித்தார்கள். இந்தச் சம்பவம் குறித்தே (கவிஞர்) ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்கள் பின்வருமாறு பாடினார்கள்:
புவைராவில்
கொழுந்துவிட்டெரிந்த நெருப்பு
பனூ லுஅய் குலத்தாரின்
(கையாலாகாத) தலைவர்களுக்கு
எளிதாகிவிட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாகவே "நீங்கள் (அவர்களுடைய) பேரீச்ச மரங்களை வெட்டியதோ, அல்லது அவற்றின் அடிமரங்கள்மீது அவற்றை நிற்கும்படி விட்டுவிட்டதோ எல்லாமே அல்லாஹ்வின் அனுமதியுடனேயே நடந்தன" (59:5) எனும் இறைவசனம் அருளப்பெற்றது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3594. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்ட) பனூ நளீர் குலத்தாரின் பேரீச்ச மரங்களை எரித்தார்கள்.
அத்தியாயம் : 32
பாடம் : 11 போர்ச் செல்வங்கள் இந்தச் சமுதாயத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டவை ஆகும்.
3595. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் நமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைத்தூதர்களில் ஒருவர் (யூஷஉ பின் நூன் (அலை) அவர்கள்) ஓர் அறப்போருக்குச் சென்றார். அப்போது அவர் தம் சமுதாயத்தாரிடம் "ஒரு பெண்ணிடம் இல்லற உரிமையைப் பெற்ற ஒருவர், அவளுடன் தாம்பத்திய உறவைத் தொடங்க விரும்பி, இன்னும் தாம்பத்திய உறவைத் தொடங்காமலிருப்பின் என்னைப் பின்பற்றி (போருக்கு) வர வேண்டாம். (அவ்வாறே,) வீடு கட்டி முடித்து, அதன் மேற்கூரையை (இன்னும்) உயர்த்தாமலிருப்பவரும் என்னைப் பின்பற்றி (போருக்கு) வர வேண்டாம். ஆட்டையோ, சினை ஒட்டகங்களையோ வாங்கிவிட்டு, அவை குட்டிகள் ஈனுவதை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவரும் என்னைப் பின்பற்றி (போருக்கு) வர வேண்டாம்" என்று கூறிவிட்டுப் போருக்குப் புறப்பட்டார்.
ஓர் ஊரை (ஜெரிக்கோ நகரை வெள்ளிக்கிழமை) அஸ்ர் தொழுகையின் நேரத்தில் அல்லது சற்றேறக்குறைய அந்த வேளையில் அவர் நெருங்கினார். (சற்று நேரத்தில் சூரியன் மறையத் தொடங்க, சனிக்கிழமை போரிடுவது அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்த காரணத்தால் தோற்றுப்போக நேரிடுமே என்றஞ்சி) சூரியனை நோக்கி, "நீ,இறைவனின் கட்டளைப்படி இயங்குகின்றாய். நானும் இறைக்கட்டளைப்படி நடக்க வேண்டியவன் ஆவேன்" என்று கூறிவிட்டு, "இறைவா! சூரியனை (உடனே மறையவிடாமல்) தடுத்துவிடு" என்று பிரார்த்தித்தார். எனவே, அவருக்கு அல்லாஹ் வெற்றியை வழங்கும்வரை சூரியன் (மறையாமல்) தடுத்து நிறுத்தப்பட்டது.
(வெற்றிபெற்ற) பின்னர் அம்மக்கள் போரில் கிடைத்த செல்வங்களை ஒன்று சேர்த்தனர். அப்போது அவற்றை (எரித்துச் சாம்பலாக்கி)ப் புசிப்பதற்கு வானிலிருந்து நெருப்பு வந்தது. (ஆனால்) அவற்றைப் புசிக்க அது மறுத்துவிட்டது. அந்த இறைத்தூதர் "உங்களில் கையாடல் நடந்துள்ளது. ஆகவே, ஒவ்வொரு குலத்திலிருந்தும் ஒரு மனிதர் என்னிடம் சத்தியப் பிரமாணம் அளிக்கட்டும்" என்று கூறினார்.
அவ்வாறே அவர்களும் அவரிடம் சத்தியப் பிரமாணம் அளித்தனர். அப்போது, ஒரு மனிதரின் கை, இறைத்தூதரின் கையோடு ஒட்டிக்கொண்டது. அப்போது இறைத்தூதர், "உங்களிடையே தான் கையாடல் செய்யப்பட்ட பொருள் உள்ளது. ஆகவே, உன்னுடைய குலத்தார் என்னிடம் சத்தியப் பிரமாணம் அளிக்கட்டும்" என்று கூறினார்.
அவ்வாறே, அவர்கள் சத்தியப் பிரமாணம் அளிக்க, இரண்டு மனிதர்களின் கை அல்லது மூவருடைய கை இறைத்தூதருடைய கையுடன் ஒட்டிக்கொண்டது. அப்போது அவர், "உங்களிடையேதான் கையாடல் செய்யப்பட்ட அந்தப் பொருள் உள்ளது. நீங்கள்தாம் அதைக் கையாடல் செய்துள்ளீர்கள்" என்று கூறினார்.
ஆகவே, அக்குலத்தார் பசுமாட்டின் தலை அளவுக்குத் தங்கத்தைக் கொண்டு வந்து, மண் தரையில் இருந்த பொருட்களுடன் வைத்தனர். உடனே (வானிலிருந்து) நெருப்பு வந்து அதைப் புசித்தது. (முற்காலங்களில் போர்ச் செல்வங்கள் இப்படித்தான் செய்யப்பட்டன.)
நமக்கு முன்னால் யாருக்கும் போர்ச்செல்வங்கள் (எடுத்துப் பயன்படுத்திக்கொள்ள) அனுமதிக்கப்படவில்லை. (பின்னர் நமக்கு அப்பொருட்களைப் பயன்படுத்த அல்லாஹ் அனுமதியளித்தான்). வளமும் உயர்வும் உள்ள அல்லாஹ் நமது பலவீனத்தையும் இயலாமையையும் கண்டு, அவற்றை நமக்கு அனுமதிக்கப்பட்டவையாக ஆக்கினான்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
பாடம் : 12 எதிரிகளிடமிருந்து கைப்பற்றப்படும் செல்வங்கள்.
3596. முஸ்அப் பின் சஅத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என் தந்தை (சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள்), "குமுஸ்" (ஐந்திலொரு பங்கு) நிதியிலிருந்து ஒரு வாளை எடுத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்று, "இதை எனக்கு அன்பளிப்பாகத் தாருங்கள்" என்று கேட்டார்கள்.
அப்போதுதான் வல்லமையும் மாண்பும்மிக்க அல்லாஹ், "(நபியே!) போர்க்களத்தில் எதிரிகளிடமிருந்து கைப்பற்றப்படும் செல்வங்கள் குறித்து அவர்கள் உம்மிடம் வினவுகின்றனர். அந்தச் செல்வங்கள் (பற்றி முடிவு செய்யும் அதிகாரம்) அல்லாஹ்வுக்கும் இத் தூதருக்கும் உரியது" என்று கூறுவீராக!" (8:1) எனும் வசனத்தை அருளினான்.
அத்தியாயம் : 32
3597. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் விஷயத்தில் நான்கு இறைவசனங்கள் அருளப்பெற்றன. நான் (குமுஸ் நிதியிலிருந்து) வாள் ஒன்றை எடுத்துக்கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்று, "அல்லாஹ்வின் தூதரே! இதை எனக்கு அன்பளிப்பாகத் தாருங்கள்"என்று கேட்டேன்.
நபியவர்கள் "அதை வைத்துவிடு" என்றார்கள். பிறகு நான் (அதை அன்பளிப்பாகத் தருமாறு கேட்டு) எழுந்து நின்றேன். நபியவர்கள் "எடுத்த இடத்திலேயே அதை வைத்துவிடு" என்று சொன்னார்கள்.
பிறகு மீண்டும் எழுந்து நின்று, "அல்லாஹ்வின் தூதரே! அதை எனக்கு அன்பளிப்பாகத் தாருங்கள்" என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், "(இல்லை) அதை வைத்துவிடு" என்றார்கள். பிறகும் நான் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! இதை எனக்கு அன்பளிப்பாகத் தந்துவிடுங்கள். போதுமென்ற மனமில்லாத ஒருவனாக நான் கருதப்படுகிறேனா?" என்று கூறினேன்.
அப்போதும் நபி (ஸல்) அவர்கள், "எடுத்த இடத்திலேயே அதை வைத்துவிடு" என்று கூறினார்கள். அப்போதுதான் "(நபியே!) போர்க் களத்தில் எதிரிகளிடமிருந்து கைப்பற்றப்படும் செல்வங்களைப் பற்றி உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர். போர்க்களத்தில் எதிரிகளிடம் கைப்பற்றப்படும் செல்வங்கள் (பற்றி முடிவு செய்யும் அதிகாரம்) அல்லாஹ்வுக்கும் இத்தூதருக்கும் உரியது எனறு கூறுவீராக!" (8:1) எனும் இந்த வசனம் அருளப்பெற்றது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3598. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு படைப் பிரிவை நஜ்துப் பகுதிக்கு அனுப்பிவைத்தார்கள். அதில் நானும் இடம்பெற்றிருந்தேன். நாங்கள் நிறைய ஒட்டகங்களைப் போர்ச்செல்வமாகப் பெற்றோம்.
எங்கள் பங்குகள், (ஒவ்வொருவருக்கும்) பன்னிரண்டு ஒட்டகங்கள் அல்லது பதினோரு ஒட்டகங்களாக இருந்தன. எங்கள் ஒவ்வொரு வருக்கும் ஒவ்வோர் ஒட்டகம் அதிகப்படியாகவும் (நஃபல்) தரப்பட்டது.
அத்தியாயம் : 32
3599. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு படைப்பிரிவை நஜ்துப் பகுதிக்கு அனுப்பி வைத்தார்கள். அதில் நானும் இடம் பெற்றிருந்தேன். (போருக்குப் பின் எதிரிகளிடம் கைப்பற்றப்பட்டச் செல்வங்களில்) எங்கள் பங்குகள்,ஒவ்வொருவருக்கும் பன்னிரண்டு ஒட்டகங்கள்வரை எட்டின.
இது போக (ஒவ்வொருவருக்கும்) ஓர் ஒட்டகம் அதிகப்படியாகவும் (நஃபல்) தரப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் பங்கீட்டை மாற்றவில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3600. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நஜ்துப் பகுதிக்கு படைப் பிரிவு ஒன்றை அனுப்பி வைத்தார்கள். அந்தப் படையில் நானும் புறப்பட்டுச் சென்றேன். (அப்போருக்குப் பின்) நிறைய ஒட்டகங்களையும் ஆடுகளையும் நாங்கள் (போர்ச் செல்வமாகப்) பெற்றோம்.
எங்கள் பங்குகள், ஒவ்வொருவருக்கும் பன்னிரண்டு ஒட்டகங்களாக இருந்தன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் ஒட்டகத்தை அதிகப்படியாகவும் (நஃபல்) தந்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே வேறு இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் இப்னு அவ்ன் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நான் நாஃபிஉ (ரஹ்) அவர்களிடம் போர்ச் செல்வங்களைப் பற்றிக் கேட்டு கடிதம் எழுதினேன். அப்போது நாஃபிஉ (ரஹ்) அவர்கள் "இப்னு உமர் (ரலி) அவர்கள் ஒரு படைப்பிரிவில் இருந்தார்கள்..." என்று தொடங்கி மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறு பதில் எழுதினார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 32
3601. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் போர்ச் செல்வத்தில் எங்கள் பங்குகளைத் தந்ததோடு "குமுஸ்" நிதியிலிருந்து அதிகப்படியாகவும் (நஃபல்) தந்தார்கள். அந்த வகையில் ஒரு வயது பூர்த்தியான பெரிய ஒட்டகம் ஒன்று எனக்குக் கிடைத்தது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3602. மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு படைப் பிரிவுக்குப் போர்ச் செல்வத்தில் (பங்கிட்டுக் கொடுத்ததுபோக) அதிகமாகவும் (நஃபல்) கொடுத்தார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 32
3603. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அறப்போருக்காகத் தாம் அனுப்பிவைக்கும் படைப் பிரிவினரில் சிலருக்கு மட்டும் பொதுப் படையினருடன் சேர்ந்து பெறுகின்ற பங்குக்கு மேல் தனிப்பட்ட முறையில் (குமுஸ் நிதியிலிருந்து) அதிகப்படியாகவும் (நஃபல்) கொடுத்து வந்தார்கள்.
அத்தியாயம் : 32