பாடம் : 1 சத்தியம் செய்வது பிரதிவாதிமீது கடமையாகும்.
3524. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களின் வாதத்தை மட்டும் வைத்து அவர்களுக்கு (சாதகமாகத் தீர்ப்பு) அளிக்கப்பட்டால், மக்களில் சிலர் வேறுசிலருடைய உயிர்களையும் உடைமைகளையும் (பலி கொள்ள வேண்டுமென) கோருவார்கள். ஆயினும்,பிரதிவாதி (தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டை மறுத்தால்) சத்தியம் செய்வது கடமையாகும்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 30
3525. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(வாதி ஆதாரத்தை நிலைநிறுத்தாதபோது) பிரதிவாதி சத்தியம் செய்ய வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள்.
அத்தியாயம் : 30
பாடம் : 2 சத்தியம் மற்றும் சாட்சியத்தின் அடிப்படையில் தீர்ப்பளித்தல்.
3526. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சத்தியம் மற்றும் சாட்சியத்தின் அடிப்படையில் தீர்ப்பளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 30
பாடம் : 3 வெளிப்படையான நிலையையும் சாதுரியமாக ஆதாரம் காட்டுவதையும் வைத்துத் தீர்ப்பளித்தல்.
3527. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மக்களே!) நீங்கள் என்னிடம் உங்கள் வழக்குகளைக் கொண்டுவருகிறீர்கள். உங்களில் ஒருவர் மற்றொருவரைவிடத் தமது ஆதாரத்தை எடுத்துவைப்பதில் வாக்கு சாதுரியமிக்கவராக இருக்கக்கூடும். இந்நிலையில் நான் அவரிடம் கேட்ட (திறமையான வாதத்)துக்கு ஏற்ப அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்துவிடுகிறேன். (அதனால் அவர் அடையும் ஆதாயம் அவருக்கு அனுமதிக்கப்பட்டதெனக் கருதிவிட வேண்டாம்.)
எனவே, யாருக்கு (அவரது சொல்லை வைத்து) அவருடைய சகோதரனின் உரிமையில் ஒன்றை அவருக்குரியது என்று (உண்மை நிலை அறியாமல்) நான் தீர்ப்பளித்து விடுகிறேனோ, அவர் அதை எடுத்துக்கொள்ள வேண்டாம். ஏனெனில், அவருக்கு நான் (நரக) நெருப்பின் ஒரு துண்டையே ஒதுக்கித் தருகிறேன்.
இதை உம்மு சலமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் உம்மு சலமா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 30
3528. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது அறையின் வாசலில் சிலர் கூச்சலிட்டுத் தகராறு செய்துகொள்வதைச் செவியுற்றார்கள். உடனே வெளியே வந்து அவர்களிடம் சென்று, "நான் மனிதன்தான். வழக்காடுபவர்கள் என்னிடம் வருகிறார்கள். அப்படி வருபவர்களில் சிலர் சிலரைவிட வாக்கு சாதுரியமிக்கவர்களாக இருக்கக்கூடும். அதனடிப்படையில் அவர் உண்மை சொல்வதாக எண்ணி அவருக்குச் சாதகமாக நான் தீர்ப்பளித்துவிடுகிறேன். (அந்தரங்கத்தை அறியாமல் வெளிப்படையான வாதப் பிரதிவாதத்தை வைத்து) ஒரு முஸ்லிமின் உரிமையை வேறொருவருக்கு உரியதென்று நான் தீர்ப்பளித்துவிட்டால், (அது தமக்கு உரிமையான பொருள் என அவர் எண்ணிக்கொள்ள வேண்டாம்.) அது நரக நெருப்பின் ஒரு துண்டேயாகும் (என்பதை நினைவில் கொண்டு, விரும்பினால்) அதை அவர் எடுத்துச் செல்லட்டும். (இல்லையேல்) அதை விட்டுவிடட்டும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 30
3529. மேற்கண்ட ஹதீஸ் உம்மு சலமா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் மஅமர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நபி (ஸல்) அவர்கள் (தம் துணைவி) உம்மு சலமா (ரலி) அவர்களது அறையின் வாசலில் சிலர் கூச்சலிட்டுத் தகராறு செய்து கொள்வதைச் செவியுற்றார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 30
பாடம் : 4 ஹிந்த் பின்த் உத்பா (ரலி) அவர்களின் வழக்கு.
3530. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூசுஃப்யான் (ரலி) அவர்களின் துணைவியார் ஹிந்த் பின்த் உத்பா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) அபூசுஃப்யான் கருமியான ஒரு மனிதர். எனக்கும் என் மகன்களுக்கும் போதுமான (பணத்)தை அவர் என்னிடம் தருவதில்லை. நான் அவருக்குத் தெரியாமல் அவரது செல்வத்திலிருந்து எடுத்துக்கொள்வதைத் தவிர (போதுமான தொகையை அவராகத் தரமாட்டார்). அவ்வாறெனில்,அ(வருக்குத் தெரியாமல் எடுத்துக்கொள்வ)தனால் என்மீது குற்றமேதும் உண்டா?" என்று கேட்டார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவருடைய செல்வத்திலிருந்து உனக்கும் உன் மகன்களுக்கும் போதுமானதை நியாயமான அளவுக்கு எடுத்துக்கொள் (அதனால் உன்மீது குற்றமேதுமில்லை)" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஆறு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 30
3531. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹிந்த் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த பூமியின் மேலுள்ள வீட்டார்களிலிலேயே உங்களுடைய வீட்டாரை இறைவன் இழிவடையச் செய்வதே (அன்று) எனக்கு விருப்பமானதாக இருந்தது. இந்த பூமியின் மேலுள்ள வீட்டார்களில் உங்கள் வீட்டாரை இறைவன் மேன்மையடையச் செய்வதே (இன்று) எனக்கு விருப்பமானதாய் இருக்கிறது" என்று கூறினார்.
நபி (ஸல்) அவர்கள், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த ஏக இறை)வன்மீது சத்தியமாக! உனது இந்த விருப்பம் மேன்மேலும் அதிகரிக்கும்" என்று கூறினார்கள்.
பிறகு ஹிந்த் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) அபூசுஃப்யான் கருமியான மனிதர் ஆவார். அவருக்குரிய செல்வத்திலிருந்து அவரது அனுமதியில்லாமல் (எடுத்து) என் பிள்ளைகளுக்குச் செலவழித்தால், அது என்மீது குற்றமாகுமா?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "நியாயமான அளவுக்கு எடுத்து அவர்களுக்குச் செலவழிப்பதால் உன்மீது குற்றமில்லை" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 30
3532. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
(ஒரு முறை) ஹிந்த் பின்த் உத்பா பின் ரபீஆ (ரலி) அவர்கள் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! (நான் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்) இப்பூமியின் மேலுள்ள வேறெந்த வீட்டார் இழிவடைவதையும்விட உங்கள் வீட்டார் இழிவடைவதே எனக்கு மிகவும் விருப்பமானதாக இருந்துவந்தது. (நான் இஸ்லாத்தை ஏற்ற பிறகு) இன்று இப்பூமியின் மேலுள்ள வேறெந்த வீட்டார் கண்ணியம் அடைவதையும்விட உங்கள் வீட்டார் கண்ணியம் அடைவதே எனக்கு மிகவும் விருப்பமானதாக மாறிவிட்டது" என்று கூறினார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த ஏக இறை)வன் மீதாணையாக! உனது இந்த விருப்பம் மேன்மேலும் அதிகரிக்கும்" என்று கூறினார்கள்.
பிறகு ஹிந்த் பின்த் உத்பா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) அபூ சுஃப்யான் கருமியான மனிதர். அவருக்குரிய (செல்வத்)திலிருந்து (அவருக்குத் தெரியாமல்) எங்கள் பிள்ளைகளுக்கு நான் உணவளித்தால் அது என்மீது குற்றமாகுமா?" என்று கேட்டார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(குற்றம்) இல்லை;நியாயமான அளவுக்கு எடுத்தால்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 30
பாடம் : 5 தேவையின்றி அதிகமாகக் கேள்வி கேட்பது, தர வேண்டிய உரிமையைத் தர மறுப்பது, உரிமையில்லாததைத் தருமாறு கோருவது ஆகியவற்றுக்கு வந்துள்ள தடை.
3533. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் உங்களுக்கு மூன்று விஷயங்களை விரும்புகின்றான்; உங்களுக்கு மூன்று விஷயங்களை வெறுக்கின்றான். 1,2. அல்லாஹ் ஒருவனையே வணங்குவதையும் அவனுக்கு இணை கற்பிக்காமலிருப்பதையும் விரும்புகின்றான். 3. நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிப் பிடிப்பதையும் பிரிந்துவிடாமலிருப்பதையும் விரும்புகின்றான். (இவ்வாறு) சொல்லப்பட்டது, அவர் சொன்னார் என (ஊர்ஜிதமில்லாததை)ப் பேசுவதையும், (தேவையின்றி) அதிகமாகக் கேள்விகள் கேட்பதையும், செல்வத்தை வீணாக்குவதையும் அவன் வெறுக்கின்றான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 30
3534. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், (வெறுக்கின்றான் என்பதைக் குறிக்க "யக்ரஹு" என்பதற்குப் பகரமாக) "யஸ்க(த்)து" என இடம்பெற்றுள்ளது. "பிரிந்துவிடாமலிருப்பதையும்" எனும் சொற்றொடர் இடம் பெறவில்லை.
அத்தியாயம் : 30
3535. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அன்னையரைப் புண்படுத்துவது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது, (அடுத்தவருக்குத் தர வேண்டியதை) மறுப்பது, (அடுத்தவருக்குரியதை) தருமாறு கேட்பது ஆகியவற்றை அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துள்ளான். மேலும், (இவ்வாறு) சொல்லப்பட்டது, அவர் சொன்னார் என (ஊர்ஜிதமற்றதை)ப் பேசுவது, அதிகமாகக் கேள்வி கேட்பது,செல்வத்தை வீணாக்குவது ஆகிய மூன்றையும் உங்களுக்கு அல்லாஹ் வெறுத்துள்ளான்.
இதை முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களுக்குத் தடை செய்துள்ளார்கள்" என்று இடம்பெற்றுள்ளது. "அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துள்ளான்" என்று இல்லை.
அத்தியாயம் : 30
3536. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களின் எழுத்தர் (வர்ராத் (ரஹ்) அவர்கள்) கூறியதாவது:
முஆவியா (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்ற (ஹதீஸ்) ஒன்றை எனக்கு எழுதி அனுப்புங்கள்" என முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள்.
அதற்கு முஃகீரா (ரலி) அவர்கள், "அல்லாஹ் உங்களுக்கு மூன்று விஷயங்களை வெறுத்துள்ளான். (இவ்வாறு) சொல்லப்பட்டது, அவர் சொன்னார் என (ஊர்ஜிதமில்லாததை)ப் பேசுவது, செல்வங்களை வீணாக்குவது, (தேவையின்றி) அதிகமாகக் கேள்விகள் கேட்பது ஆகியவையே அவை" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன் என்று பதில் எழுதினார்கள்.
அத்தியாயம் : 30
3537. வர்ராத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"சலாமுன் அலைக்க (உங்களுக்குச் சாந்தி உண்டாகட்டும்); இறைவாழ்த்துக்குப் பின்! அல்லாஹ் மூன்று விஷயங்களைத் தடை செய்துள்ளான்; மூன்றை (வெறுத்து) விலக்கியுள்ளான். பெற்றோரைப் புண்படுத்துவது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது, (அடுத்தவருக்குரியதை) தருமாறு கேட்பது ஆகியவற்றைத் தடை செய்துள்ளான். (இவ்வாறு) சொல்லப்பட்டது, அவர் சொன்னார் என (ஊர்ஜிதமற்றதை)ப் பேசுவதையும், (தேவையின்றி) அதிகமாகக் கேள்வி கேட்பதையும், செல்வத்தை வீணாக்குவதையும் (வெறுத்து) விலக்கியுள்ளான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன்" என முஃகீரா (ரலி) அவர்கள் முஆவியா (ரலி) அவர்களுக்கு (பதில்) எழுதினார்கள்.
அத்தியாயம் : 30
பாடம் : 6 நீதிபதி (தீர்ப்பின்போது) செய்த ஆய்வு சரியாக இருந்தாலும் தவறாக இருந்தாலும் அவருக்கு நன்மை உண்டு.
3538. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீதிபதி தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து சரியான தீர்ப்பு வழங்குவாராயின், அவருக்கு இரண்டு நன்மைகள் உண்டு. அவர் தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து தவறான தீர்ப்பு வழங்குவாராயின், அவருக்கு ஒரு நன்மை உண்டு.
இதை அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "இந்த ஹதீஸை நான் அபூபக்ர் பின் முஹம்மத் பின் அம்ர் பின் ஹஸ்ம் (ரஹ்) அவர்களிடம் கூறினேன். அப்போது அவர்கள் "இவ்வாறே அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து அபூசலமா (ரஹ்) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள்" என்று யஸீத் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்" என ஹதீஸின் இறுதியில் இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 30
பாடம் : 7 நீதிபதி கோபமாக இருக்கும்போது தீர்ப்பளிப்பது விரும்பத்தக்கதன்று.
3539. அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) அபூபக்ரா (ரலி) அவர்கள் (தம் புதல்வரும் என் சகோதரருமான) உபைதுல்லாஹ் பின் அபீபக்ரா (ரஹ்) அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள். (அதை நானே எழுதிக் கொடுத்தேன்) -அப்போது அவர் (ஈரான் -ஆப்கானிஸ்தான் எல்லையிலிருந்த) "சிஜிஸ்தான்" பகுதியில் நீதிபதியாக இருந்தார்.- அந்தக் கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்கள்:
(மகனே!) நீ கோபமாக இருக்கும்போது இருவரிடையே தீர்ப்பளிக்காதே. ஏனெனில், "கோபமாக இருக்கும்போது, இருவரிடையே யாரும் தீர்ப்பளிக்கவேண்டாம்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஆறு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 30
பாடம் : 8 தவறான தீர்ப்புகளைத் தள்ளுபடி செய்வதும் (மார்க்கத்தில் இல்லாத) புதுமைகளை நிராகரிப்பதும்.
3540. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நம்முடைய இந்த (மார்க்க) விஷயத்தில், அதில் இல்லாத ஒன்றை யார் புதிதாகப் புகுத்துகின்றாரோ அது நிராகரிக்கப்பட வேண்டியதாகும்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 30
3541. சஅத் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்களிடம் "ஒருவருக்கு மூன்று வீடுகள் இருந்தன. அவர் அவற்றில் ஒவ்வொன்றிலும் மூன்றில் ஒரு பாகத்தைத் தர்மம் செய்வதாக இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவித்து விட்டார்"என்று கூறி (விளக்கம் கோரி)னேன்.
அதற்குக் காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள், "அதை அனைத்தையும் சேர்த்து ஒரே வீட்டில் கணக்கிட்டு இறுதி விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்" என்று கூறிவிட்டு, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நம்முடைய மார்க்கத்தில் இல்லாத ஒரு செயலை யார் புதிதாகச் செய்கிறாரோ அது (இறைவனிடம்) நிராகரிக்கப்பட்டதாகும்"என்று கூறினார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 30
பாடம் : 9 சாட்சிகளில் சிறந்தவர்.
3542. ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "சாட்சிகளில் சிறந்தவர் யாரென உங்களுக்கு நான் சொல்லட்டுமா? சாட்சியளிக்கும்படி கோராமலேயே தாமாக முன்வந்து சாட்சியமளிப்பவரே அவர்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 30
பாடம் : 10 சட்ட ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படுதல்.
3543. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இறைத்தூதர் தாவூத் (அலை) அவர்களது காலத்தில்) இரண்டு பெண்கள் வாழ்ந்தனர். அவர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புதல்வர்கள் இருந்தனர். (ஒரு நாள்) ஓநாய் ஒன்று வந்து அவ்விருவரின் புதல்வர்களில் ஒருவரைக் கொண்டுசென்று விட்டது. அவர்களில் ஒருத்தி தன் தோழியிடம் "உன் மகனைத்தான் ஓநாய் கொண்டுசென்று விட்டது" என்று கூற, அதற்கு மற்றவள் "உன் மகனைத்தான் ஓநாய் கொண்டு சென்றுவிட்டது" என்று சொன்னாள்.
ஆகவே, இருவரும் தாவூத் (அலை) அவர்களிடம் தீர்ப்புக் கேட்டுச் சென்றார்கள். தாவூத் (அலை) அவர்கள் அவ்விரு பெண்களில் மூத்தவளுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தார்கள். (இந்தத் தீர்ப்பின்மீது கருத்து வேறுபாடு கொண்ட) அப்பெண்கள் இருவரும் தாவூத் (அலை) அவர்களின் புதல்வர் சுலைமான் (அலை) அவர்களிடம் (தீர்ப்புக் கேட்க) புறப்பட்டுச் சென்றனர். அவர்களிடம் அவ்விருவரும் விஷயத்தைத் தெரிவித்தனர்.
அப்போது சுலைமான் (அலை) அவர்கள், "என்னிடம் ஒரு கத்தியைக் கொண்டுவாருங்கள். நான் உங்களிருவருக்குமிடையே (மீதியுள்ள ஒரு மகனை ஆளுக்குப் பாதியாக) பிளந்து (பங்கிட்டு)விடுகிறேன்" என்று கூறினார்கள். உடனே இளையவள், (பதறிப்போய்) "அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும். அவ்வாறு செய்துவிடாதீர்கள். இவன் அவளுடைய மகன் தான்" என்று கூறினாள். (இவ்வாறு தீர்ப்பளித்தபோதும் மூத்தவள் எந்தச் சலனமும் இல்லாமல் இருந்தாள்.) ஆகவே, சுலைமான் (அலை) அவர்கள் (தாயுள்ளத்தை அறிந்துகொண்டு) குழந்தை இளையவளுக்குரியது எனத் தீர்ப்பளித்தார்கள்.
இதை அறிவித்த அபூஹுரைரா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! அன்றுதான் நான் (கத்திக்கு) "சிக்கீன்"எனும் சொல்லை (நபியவர்கள் வாயிலாக)ச் செவியுற்றேன். (கத்தியைக் குறிக்க) "முத்யா" எனும் சொல்லையே நாங்கள் பயன்படுத்திவந்தோம்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 30