3504. மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "விபச்சாரம் செய்துவிட்ட ஒரு யூத ஆணுக்கும் யூதப் பெண்ணுக்கும் கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அவ்விருவரையும் யூதர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்திருந்தனர்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் யூதர்கள் தம் சமுதாயத்தாரில் விபச்சாரம் செய்துவிட்டிருந்த ஓர் ஆணையும் ஒரு பெண்ணையும் அழைத்து வந்தார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 29
3505. அ. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(விபச்சாரக் குற்றத்திற்காக யூதர்களால்) முகத்தில் கரி பூசப்பட்டு, சாட்டையடி தண்டனை நிறைவேற்றப்பட்ட யூதனொருவன் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் கொண்டு செல்லப்பட்டான். அப்போது நபி (ஸல்) அவர்கள் யூதர்களை அழைத்து, "விபச்சாரக் குற்றம் புரிந்தவனுக்கு உங்களது வேதத்தில் இதுதான் தண்டனை என்று காண்கிறீர்களா?" என்று கேட்டார்கள்.
அதற்கு அவர்கள் "ஆம்" என்று (பொய்) சொன்னார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் யூத அறிஞர்களில் ஒருவரை அழைத்து, "மூசா (அலை) அவர்களுக்குத் ‘தவ்ராத்"தை அருளிய அல்லாஹ்வை முன்வைத்துக் கேட்கிறேன். விபச்சாரக் குற்றம் புரிந்தவனுக்கு உங்களது வேதத்தில் இதுதான் தண்டனை என்று காண்கிறீர்களா?" என்று கேட்டார்கள்.
அதற்கு அவர், "இல்லை; நீங்கள் இவ்வாறு (அல்லாஹ்வை முன்வைத்துக்) கேட்டிராவிட்டால், நான் உங்களிடம் (உண்மையைச்) சொல்லமாட்டேன். அவனுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்படும் என்றே நாங்கள் அதில் காண்கிறோம். எனினும், எங்கள் மேன்மக்களிடையே விபச்சாரம் அதிகமாகிவிட்டது. (விபச்சாரம் செய்துவிட்ட மேன்மக்களில் ஒருவரை) நாங்கள் பிடித்துவிட்டால், அந்தத் தண்டனையை விட்டுவிடுவோம். (அதே குற்றத்திற்காக) சாமானிய மக்களைப் பிடித்தால், அவர்கள்மீது தண்டனையை நாங்கள் நிலைநாட்டுவோம். ஆகவே, நாங்கள் (கலந்து பேசி) உயர்ந்தவர், தாழ்ந்தவர் அனைவருக்கும் பொதுவான ஒரு தண்டனையை நிறைவேற்றுவோம் என முடிவு செய்தோம். அதனடிப்படையில் கல்லெறி தண்டனைக்குப் பகரமாக முகத்தில் கரி பூசி, கசையடி வழங்கும் தண்டனையை நிறைவேற்றலானோம்" என்று கூறினார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா! இவர்கள் உனது சட்டமொன்றைச் சாகடித்துவிட்டிருந்த நிலையில் அதை (மீண்டும் நடைமுறைப்படுத்தி) உயிர்ப்பித்த முதல் ஆள் நானாவேன்" என்று கூறிவிட்டு, சாகும்வரை கல்லால் அடிக்கும்படி உத்தரவிட்டார்கள்.
அவ்வாறே அந்த யூதர் சாகும்வரை கல்லால் அடிக்கப்பட்டார். அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "தூதரே! (இறை)மறுப்பை நோக்கி விரைந்து செல்வோர் குறித்து நீர் கவலைப்படாதீர்..." என்று தொடங்கும் வசனத்தை "அது (சாதகமானது) உங்களுக்கு வழங்கப் பெற்றால் அதை எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறுகின்றனர்" (5:41) என்பதுவரை அருளினான். அதாவது முஹம்மதிடம் செல்லுங்கள். (விபச்சாரம் புரிந்தவனுக்கு) முகத்தில் கரி பூசி,கசையடி தண்டனை நிறைவேற்றுமாறு அவர் உத்தரவிட்டால், அதை ஏற்றுக் கொள்ளுங்கள். சாகும்வரை கல்லால் அடிக்கும்படி அவர் உத்தரவிட்டால் அதைத் தவிர்த்துவிடுங்கள் என்று யூதர்கள் கூறினர்.
மேலும் பின்வரும் மூன்று வசனங்களையும் அல்லாஹ் அருளினான்:
அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள்தாம் (ஏக இறைவனை) மறுப்பவர்கள் ஆவர். (5:44)
அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள்தாம் அநீதியாளர்கள் ஆவர். (5:45)
அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள்தாம் பாவிகள் ஆவர். (5:47)
இந்த (5:47ஆவது) வசனம் (ஏக இறைவனை) மறுப்பவர்கள் அனைவருக்கும் பொதுவானதாகும். (முந்தைய இரு வசனங்களும் யூதர்கள் தொடர்பாக அருளப்பெற்றவை ஆகும்.)
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "நபி (ஸல்) அவர்கள் அந்த யூதரைச் சாகும்வரை கல்லால் அடிக்கும்படி உத்தர விட்டார்கள்" என்பதுவரையே இடம்பெற்றுள்ளது. அதற்குப் பின்னர் வசனங்கள் அருளப் பெற்றது தொடர்பான குறிப்பு இடம்பெறவில்லை.ஆ. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(விபச்சாரம் புரிந்த) "அஸ்லம்” குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதருக்கும், யூதர் ஒருவருக்கும், அவருடன் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்ணுக்கும் சாகும்வரை கல்லால் அடிக்கும் தண்டனையை நபி (ஸல்) அவர்கள் நிறைவேற்றினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "மற்றொரு பெண்ணுக்கும்” என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 29
3506. அபூஇஸ்ஹாக் சுலைமான் அஷ் ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்களிடம், "(சாகும்வரை) கல்லால் அடிக்கும் தண்டனையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிறைவேற்றினார்களா?" என்று கேட்டேன். அவர்கள், "ஆம் (நிறைவேற்றினார்கள்)” என்று பதிலளித்தார்கள். நான், குர்ஆனில் ‘அந்நூர்" எனும் (24 ஆவது) அத்தியாயம் அருளப்பெறுவதற்கு முன்பா? அல்லது அதற்குப் பின்பா (எப்போது அந்தத் தண்டனையை நிறைவேற்றினார்கள்)?" என்று கேட்டேன். அவர்கள் "எனக்குத் தெரியாது" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 29
3507. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவரின் அடிமைப் பெண் விபச்சாரம் செய்து, அது வெளிப்பட்டுவிட்டால், அவளுக்கு (உரிமையாளர் ஐம்பது) சாட்டையடி வழங்கட்டும். (அதற்கு மேல் அவளிடம்) கடுமை காட்டவேண்டாம். பிறகு (மறுபடியும்) அவள் விபச்சாரம் செய்தால் அவளுக்கு (ஐம்பது) சாட்டையடி கொடுக்கட்டும். (அதற்கு மேல் அவளிடம்) கடுமை காட்டவேண்டாம். மூன்றாவது முறையும் அவள் விபச்சாரம் செய்து அது வெளிப்பட்டுவிட்டால், அவளை ஒரு முடிக்கற்றைக்காவது (அற்ப விலைக்காவது) விற்றுவிடட்டும்!
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 29
3508. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஒன்பது அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் முஹம்மத் பின் இஸ்ஹாக் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "மூன்று முறை அவளுக்குச் சாட்டையடி வழங்க வேண்டும். நான்காவது முறை அவள் விபச்சாரம் செய்துவிட்டால், அவளை விற்று விடட்டும்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 29
3509. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"கணவனில்லாத ஓர் அடிமைப் பெண் விபச்சாரம் செய்துவிட்டால் (அவளுக்கு என்ன தண்டனை வழங்க வேண்டும்)?"என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "அவள் விபச்சாரம் செய்தால் அவளைச் சாட்டையால் அடியுங்கள். பின்னரும் விபச்சாரம் செய்தால் மீண்டும் சாட்டையால் அடியுங்கள். பின்னரும் விபச்சாரம் செய்தால் மறுபடியும் சாட்டையால் அடியுங்கள். அதன் பின்னர் (அவள் விபச்சாரம் செய்தால்) அவளை ஒரு கயிற்றுக்காவது விற்றுவிடுங்கள்" என்று கூறினார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (அவளை விற்றுவிட வேண்டும் என்பது) மூன்றாவது தடவைக்குப் பிறகா அல்லது நான்காவது தடவைக்குப் பிறகா என்பது எனக்குத் தெரியாது" என்று கூறினார்கள்.
அப்துல்லாஹ் பின் மஸ்லமா அல்கஅனபீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள "ளஃபீர்" எனும் சொல்லுக்கு "கயிறு" என்பது பொருள் என இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் பொருள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 29
3510. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) மற்றும் ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) ஆகியோரிடமிருந்து மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "ஓர் அடிமைப் பெண் விபச்சாரம் செய்துவிட்டால் (அவளுக்கு என்ன தண்டனை வழங்க வேண்டும்)? என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது" என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. அவற்றில் "ளஃபீர்" என்பதற்கு ‘கயிறு" என்பது பொருள் என இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறிய சொற்பொருள் இடம்பெறவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) மற்றும் ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) ஆகியோர் வழியாக (தலா இரு அறிவிப்பாளர்தொடர்களில்) நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. இந்த அறிவிப்புகளிலும் "அவளை விற்றுவிட வேண்டும் என்பது, மூன்றாவது தடவைக்குப் பிறகா, அல்லது நான்காவது தடவைக்குப் பிறகா" என்பதில் ஐயப்பாடு எழுப்பப்பட்டுள்ளது.
அத்தியாயம் : 29
பாடம் : 7 மகப்பேறு ஏற்பட்டுள்ள பெண்ணின் தண்டனையைத் தள்ளிவைத்தல்
3511. அபூஅப்திர் ரஹ்மான் அப்துல்லாஹ் பின் ஹபீப் பின் ரபீஆ (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:
(ஒரு நாள்) அலீ (ரலி) அவர்கள் (எங்களிடையே) உரையாற்றினார்கள். அப்போது, "மக்களே! உங்கள் அடிமைகள்மீதும் குற்றவியல் தண்டனையை நிறைவேற்றுங்கள். அவர்கள் திருமணமானவர்களாக இருக்கட்டும்; திருமணமாகாதவர்களாக இருக்கட்டும். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அடிமைப்பெண் ஒருவர் விபச்சாரம் செய்து விட்டார். எனவே, அவருக்குச் சாட்டையடிகள் வழங்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு உத்தரவிட்டார்கள்.
ஆனால், அவருக்கு அப்போதுதான் மகப்பேறு இரத்தப்போக்கு ஏற்பட்டிருந்தது. அவருக்குச் சாட்டையடி தண்டனையை நிறைவேற்றினால் (எங்கே) அவரை நான் கொன்றுவிடுவேனோ என அஞ்சினேன். (எனவே, தண்டனையைத் தள்ளிவைத்தேன்.) இது பற்றி நான் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தபோது, "நீங்கள் செய்தது சரிதான்" என்று அவர்கள் கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அவர் திருமணம் முடித்தவராக இருக்கட்டும்; திருமணம் முடிக்காதவராக இருக்கட்டும்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை. இந்த ஹதீஸில், "அவள் குணமடை(ந்து இயல்பு நிலையை அடை)யும்வரை அவளை விட்டுவிடுங்கள்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 29
பாடம் : 8 மது அருந்திய குற்றத்திற்கான தண்டனை
3512. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மது அருந்திய ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டபோது, அவரை இரு பேரீச்ச மட்டைகளால் ஏறக்குறைய நாற்பது முறை அடிக்குமாறு உத்தரவிட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அபூபக்ர் (ரலி) அவர்களும் (தமது ஆட்சிக் காலத்தில்) அவ்வாறே செய்தார்கள். உமர் (ரலி) அவர்கள் ஆட்சிக்கு வந்தபோது, மக்களிடம் ஆலோசனை கேட்டார்கள். அப்போது அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் "(குர்ஆனில் கூறப்பட்டுள்ள) குற்றவியல் தண்டனைகளிலேயே குறைந்தபட்ச தண்டனையான எண்பது (சாட்டையடிகள் வழங்கலாம்)" என்று கூறினார்கள். அவ்வாறே உமர் (ரலி) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "(மது அருந்திய) ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டபோது..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 29
3513. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மது அருந்திய குற்றத்திற்குத் தண்டனையாக பேரீச்ச மட்டையாலும் காலணியாலும் அடிக்கும்படி நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக்காலத்தில்) நாற்பது சாட்டையடிகள் கொடு(க்குமாறு உத்தரவு பிறப்பி)த்தார்கள். உமர் (ரலி) அவர்கள் ஆட்சிக்கு வந்த வேளையில், (சிரியா, இராக் போன்ற பகுதிகள் வெற்றி கொள்ளப்பட்டு) மக்கள் கிராமப்புறங்களிலும் செழிப்பான பகுதிகளிலும் குடியேறியபோது (வாழ்க்கை வசதிகள் பெருகி,குடிப்பழக்கம் அதிகரித்தது. அப்போது), "மது அருந்திய குற்றத்திற்கான தண்டனை விஷயத்தில் நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?" என்று மக்களிடம் கேட்டார்கள்.
அப்போது அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், "(குர்ஆனில் கூறப்பட்ட) குற்றவியல் தண்டனைகளிலேயே மிகவும் குறைந்தபட்ச தண்டனையை (எண்பது கசை யடி) அதற்குரிய தண்டனையாக நீங்கள் ஆக்க வேண்டுமென நான் கருதுகிறேன்" என்றார்கள். இதன்படி உமர் (ரலி) அவர்கள் எண்பது சாட்டையடிகள் வழங்கினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 29
3514. மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "மது அருந்திய குற்றத்திற்குத் தண்டனையாகக் காலணியாலும் பேரீச்ச மட்டையாலும் நபி (ஸல்) அவர்கள் நாற்பது முறை அடிக்குமாறு உத்தரவிட்டுவந்தார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. அதில் "மக்கள் கிராமப்புறங்களிலும் செழிப்பான பகுதிகளிலும் குடியேறியபோது" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 29
3515. அபூசாசான் ஹுளைன் பின் அல்முன்திர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (கலீஃபா) உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களிடம் இருந்தேன். அப்போது வலீத் பின் உக்பா (ரலி) அவர்கள் (அங்கு) கொண்டுவரப்பட்டார். அவர் சுப்ஹுத் தொழுகை இரண்டு ரக்அத் தொழுவித்துவிட்டு, "உங்களுக்கு நான் இத்தொழுகையைக் கூடுதலாக்கப் போகிறேன்" என்று கூறியிருந்தார்.
அப்போது அவருக்கெதிராக இருவர் சாட்சியமளித்தனர். அவர்களில் ஒருவரான ஹும்ரான் பின் அபான், "அவர் (வலீத்) மது அருந்தியிருந்தார்" என்று சாட்சியம் அளித்தார். மற்றொருவர் வலீத் வாந்தியெடுத்ததைத் தாம் கண்டதாகச் சாட்சியமளித்தார். உஸ்மான் (ரலி) அவர்கள், "அவர் மது அருந்தியதாலேயே வாந்தியெடுத்தார்" என்று கூறிவிட்டு, "அலீயே! நீங்கள் எழுந்து அவருக்கு (மது அருந்திய குற்றத்திற்காக)ச் சாட்டையடி வழங்குங்கள்" என்று கூறினார்கள்.
உடனே அலீ (ரலி) அவர்கள் (தம் புதல்வரிடம்) "ஹசனே! நீர் எழுந்து அவருக்குச் சாட்டையடி வழங்கு" என்று கூறினார்கள். அதற்கு ஹசன் (ரலி) அவர்கள், (உஸ்மான் (ரலி) அவர்கள்மீது கோபம் கொண்டவரைப் போன்று) "ஆட்சியின் குளிர்ச்சிக்குப் பொறுப்பேற்றவர்களையே அதன் வெப்பத்துக்கும் பொறுப்பேற்கச் செய்யுங்கள்" என்று கூறிவிட்டார்கள். உடனே அலீ (ரலி) அவர்கள் (தம் சகோதரரின் புதல்வரிடம்) "அப்துல்லாஹ் பின் ஜஅஃபரே! நீர் எழுந்து அவருக்குச் சாட்டையடி வழங்குவீராக" என்று சொன்னார்கள். அவ்வாறே அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் அவர்கள், வலீதுக்குச் சாட்டையடி வழங்கினார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள் (அப்துல்லாஹ் எத்தனை முறை அடிக்கிறார் என்பதை) எண்ணிக்கொண்டிருந்தார்கள். நாற்பது அடியானதும் "போதும் நிறுத்து" என்றார்கள்.
பிறகு, "(மது அருந்திய குற்றத்திற்குத் தண்டனையாக) நபி (ஸல்) அவர்கள் நாற்பது சாட்டையடிகள் வழங்கினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களும் (தமது ஆட்சிக் காலத்தில்) நாற்பது சாட்டையடிகள் வழங்கினார்கள். உமர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தில்) எண்பது சாட்டையடிகள் வழங்கினார்கள். எல்லாம் (பின்பற்றத் தகுந்த) வழிமுறைகளே. ஆயினும், இ(றைத்தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் வழங்கிய நாற்பது சாட்டையடிகளான)து எனக்கு மிகவும் விருப்பமானதாகும்" என்று அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள்.
மேற்கண்ட ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அலீ பின் ஹுஜ்ர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நான் இந்த ஹதீஸை அப்துல்லாஹ் அத்தானாஜ் (ரஹ்) அவர்களிடமிருந்தே (நேரடியாகக்) கேட்டிருந்தேன். ஆனால், அதை மனனம் செய்ய வில்லை. (பின்னர் இப்னு அபீஅரூபா (ரஹ்) அவர்களிடம் கேட்டே இப்போது அறிவிக்கிறேன்) என இஸ்மாயீல் பின் உலய்யா (ரஹ்) அவர்கள் கூடுதலாகக் கூறினார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 29
3516. அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் தண்டனை நிறைவேற்றியதால் எவரேனும் இறந்துபோனால் (அதற்காக) நான் கவலை அடையப்போவதில்லை. குடிகாரனைத் தவிர! ஏனெனில், (தண்டனை வழங்கப்பட்டதால்) குடிகாரன் இறந்துபோனால் அவனுக்காக நான் உயிரீட்டுத் தொகை வழங்கிவிடுவேன். இதற்குக் காரணம், (மது அருந்திய குற்றத்திற்குத் தண்டனையாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (குறிப்பிட்ட தண்டனை எதையும்) வழிமுறையாக்கவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 29
பாடம் : 9 (குற்றவியல் தண்டனை அல்லாமல்) கண்டிப்புக்காக வழங்கப்படும் சாட்டையடிகளின் (அதிகபட்ச) அளவு.
3517. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் விதியாக்கியுள்ள (குற்றவியல்) தண்டனைகளில் ஒன்றில் தவிர வேறு எதற்காகவும் பத்து சாட்டையடிகளுக்கு மேல் வழங்கப்படமாட்டாது.
இதை அபூபுர்தா அல்அன்சாரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 29
பாடம் : 10 தண்டனைகள் குற்றங்களுக்கான பரிகாரமாகும்.
3518. உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஓர் அவையில் இருந்தோம். அப்போது அவர்கள், "அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிப்பதில்லை; விபச்சாரம் செய்வதில்லை; திருடுவதில்லை; கொல்லக் கூடாதென அல்லாஹ் தடை செய்துள்ள எந்த உயிரையும் முறையின்றிக் கொல்வதில்லை" என்று என்னிடம் உறுதிமொழி அளியுங்கள்" என்று கூறினார்கள்.
மேலும், "இந்த உறுதிமொழியை உங்களில் யார் நிறைவேற்றுகிறாரோ அவருக்குரிய பிரதிபலன் இறைவனிடம் உண்டு. மேற்கூறப்பட்ட (குற்றங்களில்) எதையேனும் ஒருவர் செய்து. அதற்காக அவர் (இவ்வுலகில்) தண்டிக்கப்பட்டுவிட்டால். அது அவருக்குப் பரிகாரமாகிவிடும். மேற்கூறப்பட்டவற்றில் எதையேனும் ஒருவர் செய்து,பின்னர் அல்லாஹ் அதை (யாருக்கும் தெரியாமல்) மறைத்துவிட்டால், அவரது விவகாரம் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படும். அவன் நாடினால் அவரை மன்னிப்பான்; நாடினால் அவரைத் தண்டிப்பான்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 29
3519. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவர்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைப்பதில்லை...”” எனத்தொடங்கும் பெண்கள் தொடர்பான (60:12ஆவது) இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 29
3520. உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்களிடம் உறுதிமொழி வாங்கியதைப் போன்றே, (ஆண்களாகிய) எங்களிடமும் "அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்கமாட்டோம்; திருட மாட்டோம்; விபச்சாரம் செய்யமாட்டோம்;எங்கள் குழந்தைகளைக் கொல்லமாட்டோம்; எங்களில் சிலர் வேறுசிலர் மீது அவதூறு கூறமாட்டோம்" என உறுதிமொழி வாங்கினார்கள்.
மேலும், "இந்த உறுதிமொழியை உங்களில் யார் நிறைவேற்றுகின்றாரோ அவருக்குரிய பிரதிபலன் இறைவனிடம் உண்டு. தண்டனைக்குரிய குற்றத்தை உங்களில் எவரேனும் செய்து, அதற்காக அவர் தண்டிக்கப்பட்டால் அது அவருக்குப் பரிகாரமாகிவிடும். யாருடைய குற்றத்தை அல்லாஹ் மறைத்துவிட்டானோ அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படுகிறார். அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்; நாடினால் அவரை மன்னிப்பான்.
அத்தியாயம் : 29
3521. உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"அல்லாஹ்வுக்கு நாங்கள் எதையும் இணை கற்பிக்கமாட்டோம்; விபச்சாரம் செய்ய மாட்டோம்; திருடமாட்டோம்;கொல்லக்கூடாதென அல்லாஹ் தடைசெய்துள்ள எந்த உயிரையும் முறையின்றி கொலை செய்யமாட்டோம்;கொள்ளையடிக்க மாட்டோம்; (இறைவனுக்கோ இறைத்தூதருக்கோ) மாறுசெய்யமாட்டோம். இவற்றின்படி நாங்கள் செயல்பட்டால் (எங்களுக்கு) சொர்க்கம் உண்டு. இவற்றில் எதையேனும் நாங்கள் செய்து, அதை அல்லாஹ் மூடி மறைத்துவிட்டால், அதைப் பற்றிய தீர்ப்பு அல்லாஹ்விடமே உள்ளது" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்த தலைவர்களில் நானும் ஒருவன் ஆவேன்.
அத்தியாயம் : 29
பாடம் : 11 வாயில்லாப் பிராணிகள், சுரங்கம், கிணறு ஆகியவற்றால் ஏற்படும் விபத்துகளுக்கு இழப்பீடு இல்லை.
3522. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வாயில்லாப் பிராணிகளால் சேதம் ஏற்பட்டால் இழப்பீடு கிடையாது. கிணற்று (விபத்து)க்கும் இழப்பீடு கிடையாது. சுரங்க (விப)த்துக்கும் இழப்பீடு கிடையாது. புதையலில் ஐந்தில் ஒரு பாகம் (ஸகாத்தாக) வசூலிக்கப்படும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 29
3523. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கிணற்றால் ஏற்படும் சேதத்திற்கு இழப்பீடு கிடையாது. சுரங்கத்தால் ஏற்படும் சேதத்திற்கும் இழப்பீடு கிடையாது. வாயில்லாப் பிராணிகளால் ஏற்படும் சேதத்திற்கும் இழப்பீடு கிடையாது. புதையலில் ஐந்தில் ஒரு பாகம் (ஸகாத்தாக) வசூலிக்கப்படும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 29