பாடம் : 10 தண்டனைகள் குற்றங்களுக்கான பரிகாரமாகும்.
3518. உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஓர் அவையில் இருந்தோம். அப்போது அவர்கள், "அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிப்பதில்லை; விபச்சாரம் செய்வதில்லை; திருடுவதில்லை; கொல்லக் கூடாதென அல்லாஹ் தடை செய்துள்ள எந்த உயிரையும் முறையின்றிக் கொல்வதில்லை" என்று என்னிடம் உறுதிமொழி அளியுங்கள்" என்று கூறினார்கள்.
மேலும், "இந்த உறுதிமொழியை உங்களில் யார் நிறைவேற்றுகிறாரோ அவருக்குரிய பிரதிபலன் இறைவனிடம் உண்டு. மேற்கூறப்பட்ட (குற்றங்களில்) எதையேனும் ஒருவர் செய்து. அதற்காக அவர் (இவ்வுலகில்) தண்டிக்கப்பட்டுவிட்டால். அது அவருக்குப் பரிகாரமாகிவிடும். மேற்கூறப்பட்டவற்றில் எதையேனும் ஒருவர் செய்து,பின்னர் அல்லாஹ் அதை (யாருக்கும் தெரியாமல்) மறைத்துவிட்டால், அவரது விவகாரம் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படும். அவன் நாடினால் அவரை மன்னிப்பான்; நாடினால் அவரைத் தண்டிப்பான்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 29
3519. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவர்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைப்பதில்லை...”” எனத்தொடங்கும் பெண்கள் தொடர்பான (60:12ஆவது) இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 29
3520. உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்களிடம் உறுதிமொழி வாங்கியதைப் போன்றே, (ஆண்களாகிய) எங்களிடமும் "அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்கமாட்டோம்; திருட மாட்டோம்; விபச்சாரம் செய்யமாட்டோம்;எங்கள் குழந்தைகளைக் கொல்லமாட்டோம்; எங்களில் சிலர் வேறுசிலர் மீது அவதூறு கூறமாட்டோம்" என உறுதிமொழி வாங்கினார்கள்.
மேலும், "இந்த உறுதிமொழியை உங்களில் யார் நிறைவேற்றுகின்றாரோ அவருக்குரிய பிரதிபலன் இறைவனிடம் உண்டு. தண்டனைக்குரிய குற்றத்தை உங்களில் எவரேனும் செய்து, அதற்காக அவர் தண்டிக்கப்பட்டால் அது அவருக்குப் பரிகாரமாகிவிடும். யாருடைய குற்றத்தை அல்லாஹ் மறைத்துவிட்டானோ அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படுகிறார். அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்; நாடினால் அவரை மன்னிப்பான்.
அத்தியாயம் : 29
3521. உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"அல்லாஹ்வுக்கு நாங்கள் எதையும் இணை கற்பிக்கமாட்டோம்; விபச்சாரம் செய்ய மாட்டோம்; திருடமாட்டோம்;கொல்லக்கூடாதென அல்லாஹ் தடைசெய்துள்ள எந்த உயிரையும் முறையின்றி கொலை செய்யமாட்டோம்;கொள்ளையடிக்க மாட்டோம்; (இறைவனுக்கோ இறைத்தூதருக்கோ) மாறுசெய்யமாட்டோம். இவற்றின்படி நாங்கள் செயல்பட்டால் (எங்களுக்கு) சொர்க்கம் உண்டு. இவற்றில் எதையேனும் நாங்கள் செய்து, அதை அல்லாஹ் மூடி மறைத்துவிட்டால், அதைப் பற்றிய தீர்ப்பு அல்லாஹ்விடமே உள்ளது" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்த தலைவர்களில் நானும் ஒருவன் ஆவேன்.
அத்தியாயம் : 29
பாடம் : 11 வாயில்லாப் பிராணிகள், சுரங்கம், கிணறு ஆகியவற்றால் ஏற்படும் விபத்துகளுக்கு இழப்பீடு இல்லை.
3522. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வாயில்லாப் பிராணிகளால் சேதம் ஏற்பட்டால் இழப்பீடு கிடையாது. கிணற்று (விபத்து)க்கும் இழப்பீடு கிடையாது. சுரங்க (விப)த்துக்கும் இழப்பீடு கிடையாது. புதையலில் ஐந்தில் ஒரு பாகம் (ஸகாத்தாக) வசூலிக்கப்படும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 29
3523. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கிணற்றால் ஏற்படும் சேதத்திற்கு இழப்பீடு கிடையாது. சுரங்கத்தால் ஏற்படும் சேதத்திற்கும் இழப்பீடு கிடையாது. வாயில்லாப் பிராணிகளால் ஏற்படும் சேதத்திற்கும் இழப்பீடு கிடையாது. புதையலில் ஐந்தில் ஒரு பாகம் (ஸகாத்தாக) வசூலிக்கப்படும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 29

பாடம் : 1 சத்தியம் செய்வது பிரதிவாதிமீது கடமையாகும்.
3524. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களின் வாதத்தை மட்டும் வைத்து அவர்களுக்கு (சாதகமாகத் தீர்ப்பு) அளிக்கப்பட்டால், மக்களில் சிலர் வேறுசிலருடைய உயிர்களையும் உடைமைகளையும் (பலி கொள்ள வேண்டுமென) கோருவார்கள். ஆயினும்,பிரதிவாதி (தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டை மறுத்தால்) சத்தியம் செய்வது கடமையாகும்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 30
3525. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(வாதி ஆதாரத்தை நிலைநிறுத்தாதபோது) பிரதிவாதி சத்தியம் செய்ய வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள்.
அத்தியாயம் : 30
பாடம் : 2 சத்தியம் மற்றும் சாட்சியத்தின் அடிப்படையில் தீர்ப்பளித்தல்.
3526. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சத்தியம் மற்றும் சாட்சியத்தின் அடிப்படையில் தீர்ப்பளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 30
பாடம் : 3 வெளிப்படையான நிலையையும் சாதுரியமாக ஆதாரம் காட்டுவதையும் வைத்துத் தீர்ப்பளித்தல்.
3527. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மக்களே!) நீங்கள் என்னிடம் உங்கள் வழக்குகளைக் கொண்டுவருகிறீர்கள். உங்களில் ஒருவர் மற்றொருவரைவிடத் தமது ஆதாரத்தை எடுத்துவைப்பதில் வாக்கு சாதுரியமிக்கவராக இருக்கக்கூடும். இந்நிலையில் நான் அவரிடம் கேட்ட (திறமையான வாதத்)துக்கு ஏற்ப அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்துவிடுகிறேன். (அதனால் அவர் அடையும் ஆதாயம் அவருக்கு அனுமதிக்கப்பட்டதெனக் கருதிவிட வேண்டாம்.)
எனவே, யாருக்கு (அவரது சொல்லை வைத்து) அவருடைய சகோதரனின் உரிமையில் ஒன்றை அவருக்குரியது என்று (உண்மை நிலை அறியாமல்) நான் தீர்ப்பளித்து விடுகிறேனோ, அவர் அதை எடுத்துக்கொள்ள வேண்டாம். ஏனெனில், அவருக்கு நான் (நரக) நெருப்பின் ஒரு துண்டையே ஒதுக்கித் தருகிறேன்.
இதை உம்மு சலமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் உம்மு சலமா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 30
3528. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது அறையின் வாசலில் சிலர் கூச்சலிட்டுத் தகராறு செய்துகொள்வதைச் செவியுற்றார்கள். உடனே வெளியே வந்து அவர்களிடம் சென்று, "நான் மனிதன்தான். வழக்காடுபவர்கள் என்னிடம் வருகிறார்கள். அப்படி வருபவர்களில் சிலர் சிலரைவிட வாக்கு சாதுரியமிக்கவர்களாக இருக்கக்கூடும். அதனடிப்படையில் அவர் உண்மை சொல்வதாக எண்ணி அவருக்குச் சாதகமாக நான் தீர்ப்பளித்துவிடுகிறேன். (அந்தரங்கத்தை அறியாமல் வெளிப்படையான வாதப் பிரதிவாதத்தை வைத்து) ஒரு முஸ்லிமின் உரிமையை வேறொருவருக்கு உரியதென்று நான் தீர்ப்பளித்துவிட்டால், (அது தமக்கு உரிமையான பொருள் என அவர் எண்ணிக்கொள்ள வேண்டாம்.) அது நரக நெருப்பின் ஒரு துண்டேயாகும் (என்பதை நினைவில் கொண்டு, விரும்பினால்) அதை அவர் எடுத்துச் செல்லட்டும். (இல்லையேல்) அதை விட்டுவிடட்டும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 30
3529. மேற்கண்ட ஹதீஸ் உம்மு சலமா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் மஅமர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நபி (ஸல்) அவர்கள் (தம் துணைவி) உம்மு சலமா (ரலி) அவர்களது அறையின் வாசலில் சிலர் கூச்சலிட்டுத் தகராறு செய்து கொள்வதைச் செவியுற்றார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 30
பாடம் : 4 ஹிந்த் பின்த் உத்பா (ரலி) அவர்களின் வழக்கு.
3530. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூசுஃப்யான் (ரலி) அவர்களின் துணைவியார் ஹிந்த் பின்த் உத்பா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) அபூசுஃப்யான் கருமியான ஒரு மனிதர். எனக்கும் என் மகன்களுக்கும் போதுமான (பணத்)தை அவர் என்னிடம் தருவதில்லை. நான் அவருக்குத் தெரியாமல் அவரது செல்வத்திலிருந்து எடுத்துக்கொள்வதைத் தவிர (போதுமான தொகையை அவராகத் தரமாட்டார்). அவ்வாறெனில்,அ(வருக்குத் தெரியாமல் எடுத்துக்கொள்வ)தனால் என்மீது குற்றமேதும் உண்டா?" என்று கேட்டார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவருடைய செல்வத்திலிருந்து உனக்கும் உன் மகன்களுக்கும் போதுமானதை நியாயமான அளவுக்கு எடுத்துக்கொள் (அதனால் உன்மீது குற்றமேதுமில்லை)" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஆறு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 30
3531. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹிந்த் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த பூமியின் மேலுள்ள வீட்டார்களிலிலேயே உங்களுடைய வீட்டாரை இறைவன் இழிவடையச் செய்வதே (அன்று) எனக்கு விருப்பமானதாக இருந்தது. இந்த பூமியின் மேலுள்ள வீட்டார்களில் உங்கள் வீட்டாரை இறைவன் மேன்மையடையச் செய்வதே (இன்று) எனக்கு விருப்பமானதாய் இருக்கிறது" என்று கூறினார்.
நபி (ஸல்) அவர்கள், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த ஏக இறை)வன்மீது சத்தியமாக! உனது இந்த விருப்பம் மேன்மேலும் அதிகரிக்கும்" என்று கூறினார்கள்.
பிறகு ஹிந்த் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) அபூசுஃப்யான் கருமியான மனிதர் ஆவார். அவருக்குரிய செல்வத்திலிருந்து அவரது அனுமதியில்லாமல் (எடுத்து) என் பிள்ளைகளுக்குச் செலவழித்தால், அது என்மீது குற்றமாகுமா?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "நியாயமான அளவுக்கு எடுத்து அவர்களுக்குச் செலவழிப்பதால் உன்மீது குற்றமில்லை" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 30
3532. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
(ஒரு முறை) ஹிந்த் பின்த் உத்பா பின் ரபீஆ (ரலி) அவர்கள் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! (நான் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்) இப்பூமியின் மேலுள்ள வேறெந்த வீட்டார் இழிவடைவதையும்விட உங்கள் வீட்டார் இழிவடைவதே எனக்கு மிகவும் விருப்பமானதாக இருந்துவந்தது. (நான் இஸ்லாத்தை ஏற்ற பிறகு) இன்று இப்பூமியின் மேலுள்ள வேறெந்த வீட்டார் கண்ணியம் அடைவதையும்விட உங்கள் வீட்டார் கண்ணியம் அடைவதே எனக்கு மிகவும் விருப்பமானதாக மாறிவிட்டது" என்று கூறினார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த ஏக இறை)வன் மீதாணையாக! உனது இந்த விருப்பம் மேன்மேலும் அதிகரிக்கும்" என்று கூறினார்கள்.
பிறகு ஹிந்த் பின்த் உத்பா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) அபூ சுஃப்யான் கருமியான மனிதர். அவருக்குரிய (செல்வத்)திலிருந்து (அவருக்குத் தெரியாமல்) எங்கள் பிள்ளைகளுக்கு நான் உணவளித்தால் அது என்மீது குற்றமாகுமா?" என்று கேட்டார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(குற்றம்) இல்லை;நியாயமான அளவுக்கு எடுத்தால்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 30
பாடம் : 5 தேவையின்றி அதிகமாகக் கேள்வி கேட்பது, தர வேண்டிய உரிமையைத் தர மறுப்பது, உரிமையில்லாததைத் தருமாறு கோருவது ஆகியவற்றுக்கு வந்துள்ள தடை.
3533. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் உங்களுக்கு மூன்று விஷயங்களை விரும்புகின்றான்; உங்களுக்கு மூன்று விஷயங்களை வெறுக்கின்றான். 1,2. அல்லாஹ் ஒருவனையே வணங்குவதையும் அவனுக்கு இணை கற்பிக்காமலிருப்பதையும் விரும்புகின்றான். 3. நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிப் பிடிப்பதையும் பிரிந்துவிடாமலிருப்பதையும் விரும்புகின்றான். (இவ்வாறு) சொல்லப்பட்டது, அவர் சொன்னார் என (ஊர்ஜிதமில்லாததை)ப் பேசுவதையும், (தேவையின்றி) அதிகமாகக் கேள்விகள் கேட்பதையும், செல்வத்தை வீணாக்குவதையும் அவன் வெறுக்கின்றான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 30
3534. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், (வெறுக்கின்றான் என்பதைக் குறிக்க "யக்ரஹு" என்பதற்குப் பகரமாக) "யஸ்க(த்)து" என இடம்பெற்றுள்ளது. "பிரிந்துவிடாமலிருப்பதையும்" எனும் சொற்றொடர் இடம் பெறவில்லை.
அத்தியாயம் : 30
3535. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அன்னையரைப் புண்படுத்துவது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது, (அடுத்தவருக்குத் தர வேண்டியதை) மறுப்பது, (அடுத்தவருக்குரியதை) தருமாறு கேட்பது ஆகியவற்றை அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துள்ளான். மேலும், (இவ்வாறு) சொல்லப்பட்டது, அவர் சொன்னார் என (ஊர்ஜிதமற்றதை)ப் பேசுவது, அதிகமாகக் கேள்வி கேட்பது,செல்வத்தை வீணாக்குவது ஆகிய மூன்றையும் உங்களுக்கு அல்லாஹ் வெறுத்துள்ளான்.
இதை முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களுக்குத் தடை செய்துள்ளார்கள்" என்று இடம்பெற்றுள்ளது. "அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துள்ளான்" என்று இல்லை.
அத்தியாயம் : 30
3536. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களின் எழுத்தர் (வர்ராத் (ரஹ்) அவர்கள்) கூறியதாவது:
முஆவியா (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்ற (ஹதீஸ்) ஒன்றை எனக்கு எழுதி அனுப்புங்கள்" என முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள்.
அதற்கு முஃகீரா (ரலி) அவர்கள், "அல்லாஹ் உங்களுக்கு மூன்று விஷயங்களை வெறுத்துள்ளான். (இவ்வாறு) சொல்லப்பட்டது, அவர் சொன்னார் என (ஊர்ஜிதமில்லாததை)ப் பேசுவது, செல்வங்களை வீணாக்குவது, (தேவையின்றி) அதிகமாகக் கேள்விகள் கேட்பது ஆகியவையே அவை" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன் என்று பதில் எழுதினார்கள்.
அத்தியாயம் : 30
3537. வர்ராத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"சலாமுன் அலைக்க (உங்களுக்குச் சாந்தி உண்டாகட்டும்); இறைவாழ்த்துக்குப் பின்! அல்லாஹ் மூன்று விஷயங்களைத் தடை செய்துள்ளான்; மூன்றை (வெறுத்து) விலக்கியுள்ளான். பெற்றோரைப் புண்படுத்துவது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது, (அடுத்தவருக்குரியதை) தருமாறு கேட்பது ஆகியவற்றைத் தடை செய்துள்ளான். (இவ்வாறு) சொல்லப்பட்டது, அவர் சொன்னார் என (ஊர்ஜிதமற்றதை)ப் பேசுவதையும், (தேவையின்றி) அதிகமாகக் கேள்வி கேட்பதையும், செல்வத்தை வீணாக்குவதையும் (வெறுத்து) விலக்கியுள்ளான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன்" என முஃகீரா (ரலி) அவர்கள் முஆவியா (ரலி) அவர்களுக்கு (பதில்) எழுதினார்கள்.
அத்தியாயம் : 30