3498. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், அன்று மாலை நபி (ஸல்) அவர்கள் (எங்களிடையே) நின்று அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, "இறைவாழ்த்துக்குப் பின்! சிலருக்கு என்ன நேர்ந்தது? நாம் அறப் போருக்குப் புறப்பட்டுச் சென்றால் மக்களில் சிலர் நம்முடன் வந்து சேராமல் (இங்கேயே) தங்கி விடுகின்றனர். அவர்கள் மலை ஆடு (புணரும்போது) சப்தமிடுவதைப் போன்று சப்தமிடுகிறார்கள் என்று கூறினார்கள்" எனக் காணப்படுகிறது. அதில் "நம்முடைய குடும்பத்தாரிடையே"எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், தாவூத் பின் அபீஹிந்த் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் மேற்கண்ட ஹதீஸின் ஒரு பகுதியே இடம்பெற்றுள்ளது. சுஃப்யான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "மாஇஸ் (ரலி) அவர்கள் தாம் விபச்சாரம் செய்ததை மூன்று முறை ஒப்புக்கொண்டார்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 29
3499. புரைதா பின் அல்ஹசீப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மாஇஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! (விபச்சாரக் குற்றத்திற்குரிய தண்டனையை நிறைவேற்றி) என்னைத் தூய்மைப் படுத்துங்கள்" என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், "உமக்குக் கேடுதான்! நீர் திரும்பிச் சென்று அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவனிடம் மீளுவாயாக" என்று கூறினார்கள்.
அவ்வாறே மாஇஸ் (ரலி) அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டு, அதிக நாள் தாமதிக்காமல் திரும்பிவந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தூய்மைப்படுத்துங்கள்" என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உமக்குக் கேடுதான். நீர் திரும்பிச் சென்று அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி மீளுவீராக" என்று கூறினார்கள். மாஇஸ் (ரலி) அவர்கள் மறுபடியும் திரும்பிச் சென்றுவிட்டு அதிக நாள் தாமதிக்காமல் திரும்பிவந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தூய்மைப்படுத்துங்கள்" என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் முன்பு போன்றே பதிலுரைத்தார்கள். நான்காவது முறை அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எதிலிருந்து உம்மைத் தூய்மைப்படுத்த வேண்டும்?" என்று கேட்டார்கள். அவர், "விபச்சாரக் குற்றத்திலிருந்து” என்று விடையளித்தார். அப்போது அவர்கள், "இவருக்குப் பைத்தியம் பிடித்துள்ளதா?" என்று கேட்டார்கள். அவர் பைத்தியக்காரர் அல்லர் எனத் தெரிவிக்கப்பட்டது.
நபி (ஸல்) அவர்கள், "இவர் மது அருந்தியுள்ளாரா?" என்று கேட்டார்கள். உடனே ஒரு மனிதர் எழுந்து, அவரது வாயை (ஊதச் சொல்லி) முகர்ந்து பார்த்தார். மதுவின் வாடை வரவில்லை.
அப்போது நபி (ஸல்) அவர்கள், "நீர் விபச்சாரம் செய்தீரா?" என்று கேட்டார்கள். அவர் "ஆம்” என்று (வாக்குமூலம்) கூறினார். அவரைக் கொண்டுசென்று கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அவர் தொடர்பாக மக்க(ளிடையே கருத்து வேறுபாடு தோன்றி அவர்க)ள் இரு பிரிவினராக ஆயினர். சிலர், "அவர் அழிந்தார். அவரை அவருடைய குற்றம் சுற்றிவளைத்துக் கொண்டுவிட்டது" என்று கூறினர். வேறு சிலர், "மாஇஸின் பாவமன்னிப்பை விஞ்சிய பாவ மன்னிப்பு இல்லை. அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தமது கையை நபியின் கையில் வைத்து, "என்னைக் கல்லால் அடித்துக்கொல்லுங்கள்" என்று கூறினார்" என்றனர். இவ்வாறே இரண்டு அல்லது மூன்று நாட்கள் நகர்ந்தன.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்தபோது மக்கள் வந்து, சலாம் சொல்லிவிட்டு அமர்ந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (மக்களிடம்) "மாஇஸ் பின் மாலிக்குக்காக நீங்கள் பாவமன்னிப்புக் கோருங்கள்" என்று கூறினார்கள். மக்கள், "அல்லாஹ், மாஇஸ் பின் மாலிக்கின் பிழையைப் பொறுப்பானாக!" என்று வேண்டினர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர் அழகிய முறையில் பாவமன்னிப்புக் கோரினார். அது ஒரு சமுதாயத்துக்கே பங்கிடப்பட்டாலும் அவர்கள் அனைவருக்கும் அது போதுமானதாகும்" என்று கூறினார்கள்.
பிறகு "அஸ்த்” குலத்தின் ஒரு கிளையான "ஃகாமித்” கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தூய்மைப்படுத்துங்கள்" என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "உனக்குக் கேடுதான்! நீ திரும்பிச் சென்று அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி மீளுவாயாக" என்று கூறினார்கள்.
அதற்கு அப்பெண், "மாஇஸ் பின் மாலிக்கைத் திருப்பி அனுப்பியதைப் போன்று என்னையும் திருப்பி அனுப்பப் பார்க்கிறீர்கள் என்றே நான் கருதுகிறேன்" என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் "என்ன அது?" என்று கேட்டார்கள். அப்பெண், "நான் விபச்சாரத்தால் கர்ப்பமுற்றவள்" என்றார்.
நபி (ஸல்) அவர்கள், "நீயா (அது)?" என்று கேட்டார்கள். அப்பெண் "ஆம்" என்றார். நபி (ஸல்) அவர்கள், "உமது வயிற்றிலுள்ள மகவைப் பெற்றெடுக்கும்வரை (பொறுமையாக இரு; பிறகு வா!)" என்றார்கள். பிரசவிக்கும்வரை அவளைப் பராமரிக்கும் பொறுப்பை அன்சாரிகளில் ஒருவர் ஏற்றுக்கொண்டார். பிறகு அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "ஃகாமிதிய்யா குலத்தாளுக்குக் குழந்தை பிறந்துவிட்டது" என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "நாம் இப்போது அவளுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்போவதில்லை. பாலூட்டும் அன்னையின்றி நிற்கும் சிறு வயதுக் குழந்தையாக அவளது பிள்ளையை விட்டுவிடவும் நாம் விரும்பவில்லை" என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர் எழுந்து, "அவனுக்குப் பாலூட்டும் பொறுப்பு என்னைச் சேர்ந்தது, அல்லாஹ்வின் தூதரே!" என்றார். பின்னர் அந்தப் பெண்ணுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.
அத்தியாயம் : 29
3500. புரைதா பின் அல்ஹசீப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மாஇஸ் பின் மாலிக் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு நானே அநீதி இழைத்துக்கொண்டேன். நான் விபச்சாரம் செய்துவிட்டேன். என்னைத் தாங்கள் தூய்மைப்படுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று கூறினார். (அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திருப்பி அனுப்பிவிட்டார்கள்.) மறு நாளும் அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் விபச்சாரம் செய்துவிட்டேன்" என்று கூறினார். அப்போதும் அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திருப்பியனுப்பிவிட்டார்கள்.
பிறகு அவருடைய குலத்தாரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆளனுப்பி, "அவருடைய அறிவில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டுள்ளதாக நீங்கள் அறிகிறீர்களா? அவரிடம் ஏதேனும் ஆட்சேபகரமான நடவடிக்கையைக் காணுகிறீர்களா?" என்று விசாரித்தார்கள். அதற்கு அம்மக்கள், "முழுமையான அறிவோடுதான் அவர் உள்ளார் என்றே நாங்கள் அறிகிறோம். எங்களைப் பொறுத்தவரை அவர் எங்களில் நல்ல மனிதர்களில் ஒருவராக உள்ளார்" என்று கூறினர்.
பிறகு மூன்றாவது முறையாக அவர் வந்தபோதும் அவருடைய குலத்தாரிடம் மீண்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆளனுப்பி அவரைப் பற்றி விசாரித்தார்கள். அப்போதும் அவர்கள், "அவருக்கு எந்தக் கோளாறுமில்லை. அவரது அறிவிலும் எந்தக் குறையுமில்லை" என்று தெரிவித்தனர். நான்காவது முறை அவர் வந்து முன்பு போன்றே கூறியபோது, அவருக்காகக் குழியொன்றைத் தோண்டும்படி பணித்தார்கள். பிறகு அவரைக் கொண்டுசென்று கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அடுத்து "ஃகாமிதிய்யா” குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்) வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் விபச்சாரம் செய்துவிட்டேன். (உரிய தண்டனையை நிறைவேற்றி) என்னைத் தூய்மைப்படுத்துங்கள்" என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்ணை திருப்பியனுப்பிவிட்டார்கள். அப்பெண் மறு நாள் (வந்து), "அல்லாஹ்வின் தூதரே! ஏன் என்னைத் திருப்பியனுப்புகிறீர்கள்? மாஇஸ் அவர்களைத் திருப்பி அனுப்பியதைப் போன்று என்னையும் தாங்கள் திருப்பியனுப்புகிறீர்கள் போலும். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (தகாத உறவில் ஈடுபட்டு) கர்ப்பமுற்றுள்ளேன்" என்று கூறினார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இல்லை, நீ சென்று குழந்தை பெற்றெடு (பிறகு திரும்பி வா)" என்று சொன்னார்கள். குழந்தை பெற்றெடுத்த பின் அந்தப் பெண் ஒரு துணியில் குழந்தையை எடுத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "இது நான் பெற்றெடுத்த குழந்தை" என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ சென்று குழந்தைக்குப் பாலூட்டு! பால்குடி மறந்த பின் திரும்பி வா" என்றார்கள்.
பால்குடி மறக்கடித்த பின் அப்பெண் அச்சிறுவனுடன் வந்தார். அவனது கையில் ரொட்டித் துண்டு ஒன்று இருந்தது. அப்பெண், "அல்லாஹ்வின் தூதரே! இவனுக்குப் பால்குடி மறக்கடித்து விட்டேன். இப்போது உணவு உட்கொள்கிறான்"என்று கூறினார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அச்சிறுவனை முஸ்லிம்களில் ஒருவரிடம் ஒப்படைத்தார்கள். பிறகு அந்தப் பெண்ணுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டார்கள். ஆகவே, அவருக்காக நெஞ்சளவு குழி தோண்டப்பட்டது. (பின்னர் அக்குழிக்குள் அப்பெண்ணை நிறுத்திய பின்) மக்களுக்குக் கட்டளையிட, அவருக்குக் கல்லெறி தண்டனையை மக்கள் நிறைவேற்றினார்கள். காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் கல் ஒன்றை எடுத்துக் கொண்டுவந்து, அப்பெண்ணின் தலைமீது எறிந்தார்கள். இரத்தம் காலித் (ரலி) அவர்களின் முகத்தில் தெரித்தது.
அப்போது அவரை காலித் ஏசினார்கள். காலித் (ரலி) அவர்கள் ஏசியதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செவியுற்றபோது, "காலிதே! நிறுத்துங்கள். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! அவர் அழகிய முறையில் பாவமன்னிப்புத் தேடிக்கொண்டார். பொது நிதியை மோசடி செய்த ஒருவன் இப்படி பாவமன்னிப்புக் கோரினால் அவனுக்கும்கூட பாவமன்னிப்பு வழங்கப்பட்டிருக்கும்" என்று கூறினார்கள். பிறகு அப்பெண்ணுக்கு இறுதித்தொழுகை நடத்த ஏற்பாடு செய்யுமாறு பணித்து, அவருக்காகத் தொழுகை நடத்தினார்கள். பின்னர் அவர் அடக்கமும் செய்யப்பட்டார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 29
3501. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
விபச்சாரத்தால் கர்ப்பமுற்றிருந்த ஜுஹைனா குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! தண்டனைக்குரிய ஒரு குற்றத்தை நான் செய்துவிட்டேன். என்மீது தண்டனையை நிலைநாட்டுங்கள்" என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்ணின் காப்பாளரை அழைத்துவரச் செய்து, "இவளை நல்ல முறையில் கவனித்துவாருங்கள். குழந்தை பிறந்ததும் இவளை என்னிடம் அழைத்து வாருங்கள்" என்று கூறினார்கள். காப்பாளர் அவ்வாறே செய்தார்.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட அவள்மீது அவளுடைய துணிகள் சுற்றப்பட்டன. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட அவளுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவளுக்காக இறுதித் தொழுகை நடத்தினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இவளுக்காகத் தாங்கள் தொழவைக்கிறீர்களா? இவள் விபச்சாரம் புரிந்தவள் ஆயிற்றே?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவள் அழகிய முறையில் மன்னிப்புத் தேடிவிட்டாள். மதீனாவாசிகளில் எழுபது பேரிடையே அது பங்கிடப்பட்டாலும் அவர்கள் அனைவருக்கும் போதுமானதாக அமையும். உயர்ந்தோன் அல்லாஹ்வுக்காகத் தன் உயிரையே அர்ப்பணித்த இப்பெண்ணின் பாவமன்னிப்பைவிடச் சிறந்ததை நீர் கண்டுள்ளீரா?" என்று கேட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 29
3502. அபூஹுரைரா (ரலி) மற்றும் ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) ஆகியோர் கூறியதாவது:
கிராமவாசிகளில் ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வை முன்வைத்துக் கேட்கிறேன். அல்லாஹ்வின் சட்டப்படியே எனக்குத் தீர்ப்பளிக்க வேண்டும்" என்று சொன்னார். அப்போது அவரைவிட விளக்கமுடையவராக இருந்த அவருடைய எதிரி, "ஆம் எங்களிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளியுங்கள்" என்று கூறினார். பின்னர் அந்தக் கிராமவாசி "என்னைப் பேச அனுமதியுங்கள்" என்று கூற, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "பேசு” என்றார்கள்.
அவர், "என் மகன் இவரிடம் பணியாளனாக இருந்தான். அப்போது இவருடைய மனைவியுடன் விபச்சாரம் செய்துவிட்டான். என் மகனைக் கல்லால் அடித்துக் கொன்றுவிட வேண்டும் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது. ஆகவே, நான் (இந்தத் தண்டனையிலிருந்து என் மகனைக் காப்பாற்றுவதற்காக) அதற்குப் பதில் நூறு ஆடுகளையும் ஓர் அடிமைப் பெண்ணையும் ஈட்டுத் தொகையாக வழங்கினேன். பிறகு நான் கல்வியாளர்களிடம் விசாரித்தபோது, என் மகனுக்கு நூறு சாட்டையடிகளும் ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தலும்தான் தண்டனையாகத் தரப்பட வேண்டும் என்றும், இந்த மனிதரின் மனைவிக்குக் கல்லெறி தண்டனை (ரஜ்ம்) வழங்கப்பட வேண்டும் என்றும் என்னிடம் அவர்கள் தெரிவித்தார்கள்" என்று கூறினார்.
இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! உங்கள் இருவருக்கிடையே நான் அல்லாஹ்வின் சட்டப்படியே தீர்ப்பளிக்கிறேன். அடிமைப் பெண்ணும் நூறு ஆடுகளும் (உம்மிடமே) திருப்பித் தரப்பட வேண்டும். உம்முடைய மகனுக்கு நூறு சாட்டையடிகளும் ஓராண்டுக் காலம் நாடு கடத்தும் தண்டனையும் வழங்கப்பட வேண்டும்" என்று கூறிவிட்டு, (அருகிலிருந்த உனைஸ் (ரலி) அவர்களை நோக்கி), "உனைஸே! நீங்கள் இந்த மனிதரின் மனைவியிடம் சென்று அவள் (விபச்சாரக் குற்றத்தை) ஒப்புக் கொண்டால் அவளுக்குக் கல்லெறி தண்டனை வழங்குங்கள்" என்று சொன்னார்கள்.
அவ்வாறே உனைஸ் (ரலி) அவர்கள் அவளிடம் செல்ல, அவளும் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டாள். ஆகவே,அவளுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட அவ்வாறே தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 29
பாடம் : 6 இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் யூதர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டாலும் கல்லெறி தண்டனை உண்டு.
3503. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
விபச்சாரம் புரிந்துவிட்ட ஒரு யூத ஆணும் யூதப் பெண்ணும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டனர். யூதர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து "விபச்சாரம் செய்துவிட்டவனுக்கு (அளிக்கப்படும் தண்டனை குறித்து) நீங்கள் (உங்களுடைய) "தவ்ராத்” (வேதத்)தில் என்ன காண்கிறீர்கள்?" என்று கேட்டார்கள்.
அதற்கு யூதர்கள், "அவர்கள் இருவர் முகத்திலும் கரி பூசி, அவர்களிருவரையும் ஒட்டகத்தில் ஏற்றி, முகம் திருப்பி அமரவைப்போம். பின்னர் அவ்விருவரும் (ஊரைச்) சுற்றிக் கொண்டு வரப்படுவர்" என்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் உண்மையாளர்களாயின் ‘தவ்ராத்"தைக் கொண்டுவாருங்கள்" என்று சொன்னார்கள். அவ்வாறே அவர்கள் ‘தவ்ராத்"தைக் கொண்டுவந்து வாசித்துக்காட்டினர். கல்லெறி தண்டனை குறித்த வசனம் வந்தபோது, அதை வாசித்துக் கொண்டிருந்த (யூத) இளைஞர் அந்த வசனத்தின் மீது தமது கையை வைத்து (மறைத்து)க் கொண்டு, அதற்கு முன்பும் பின்பும் உள்ள வசனங்களை வாசித்தார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (யூதமத அறிஞராயிருந்து இஸ்லாத்தை ஏற்றிருந்த) அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்களும் இருந்தார்கள். அவர்கள், (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்), "அவரைக் கையை எடுக்கச் சொல்லுங்கள்" என்று கூறினார்கள். உடனே அந்த இளைஞர் தமது கையை எடுத்தார். அங்கே (விபச்சாரக் குற்றத்திற்கு) கல்லெறி தண்டனை நிறைவேற்றும்படி கூறும் வசனம் இருந்தது. ஆகவே,அவ்விருவரையும் சாகும்வரை கல்லால் அடிக்கும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தர விட்டார்கள். அவ்வாறே அவ்விருவருக்கும் கல்லெறி தண்டனை வழங்கப்பட்டது.
அவர்கள்மீது கல்லெறிந்தவர்களில் நானும் ஒருவனாயிருந்தேன். அந்தப் பெண்ணைக் கல்லடியிலிருந்து காப்பதற்காக அந்த யூதர் தமது உடலால் அவளை மறைத்துக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன்.
அத்தியாயம் : 29
3504. மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "விபச்சாரம் செய்துவிட்ட ஒரு யூத ஆணுக்கும் யூதப் பெண்ணுக்கும் கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அவ்விருவரையும் யூதர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்திருந்தனர்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் யூதர்கள் தம் சமுதாயத்தாரில் விபச்சாரம் செய்துவிட்டிருந்த ஓர் ஆணையும் ஒரு பெண்ணையும் அழைத்து வந்தார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 29
3505. அ. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(விபச்சாரக் குற்றத்திற்காக யூதர்களால்) முகத்தில் கரி பூசப்பட்டு, சாட்டையடி தண்டனை நிறைவேற்றப்பட்ட யூதனொருவன் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் கொண்டு செல்லப்பட்டான். அப்போது நபி (ஸல்) அவர்கள் யூதர்களை அழைத்து, "விபச்சாரக் குற்றம் புரிந்தவனுக்கு உங்களது வேதத்தில் இதுதான் தண்டனை என்று காண்கிறீர்களா?" என்று கேட்டார்கள்.
அதற்கு அவர்கள் "ஆம்" என்று (பொய்) சொன்னார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் யூத அறிஞர்களில் ஒருவரை அழைத்து, "மூசா (அலை) அவர்களுக்குத் ‘தவ்ராத்"தை அருளிய அல்லாஹ்வை முன்வைத்துக் கேட்கிறேன். விபச்சாரக் குற்றம் புரிந்தவனுக்கு உங்களது வேதத்தில் இதுதான் தண்டனை என்று காண்கிறீர்களா?" என்று கேட்டார்கள்.
அதற்கு அவர், "இல்லை; நீங்கள் இவ்வாறு (அல்லாஹ்வை முன்வைத்துக்) கேட்டிராவிட்டால், நான் உங்களிடம் (உண்மையைச்) சொல்லமாட்டேன். அவனுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்படும் என்றே நாங்கள் அதில் காண்கிறோம். எனினும், எங்கள் மேன்மக்களிடையே விபச்சாரம் அதிகமாகிவிட்டது. (விபச்சாரம் செய்துவிட்ட மேன்மக்களில் ஒருவரை) நாங்கள் பிடித்துவிட்டால், அந்தத் தண்டனையை விட்டுவிடுவோம். (அதே குற்றத்திற்காக) சாமானிய மக்களைப் பிடித்தால், அவர்கள்மீது தண்டனையை நாங்கள் நிலைநாட்டுவோம். ஆகவே, நாங்கள் (கலந்து பேசி) உயர்ந்தவர், தாழ்ந்தவர் அனைவருக்கும் பொதுவான ஒரு தண்டனையை நிறைவேற்றுவோம் என முடிவு செய்தோம். அதனடிப்படையில் கல்லெறி தண்டனைக்குப் பகரமாக முகத்தில் கரி பூசி, கசையடி வழங்கும் தண்டனையை நிறைவேற்றலானோம்" என்று கூறினார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா! இவர்கள் உனது சட்டமொன்றைச் சாகடித்துவிட்டிருந்த நிலையில் அதை (மீண்டும் நடைமுறைப்படுத்தி) உயிர்ப்பித்த முதல் ஆள் நானாவேன்" என்று கூறிவிட்டு, சாகும்வரை கல்லால் அடிக்கும்படி உத்தரவிட்டார்கள்.
அவ்வாறே அந்த யூதர் சாகும்வரை கல்லால் அடிக்கப்பட்டார். அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "தூதரே! (இறை)மறுப்பை நோக்கி விரைந்து செல்வோர் குறித்து நீர் கவலைப்படாதீர்..." என்று தொடங்கும் வசனத்தை "அது (சாதகமானது) உங்களுக்கு வழங்கப் பெற்றால் அதை எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறுகின்றனர்" (5:41) என்பதுவரை அருளினான். அதாவது முஹம்மதிடம் செல்லுங்கள். (விபச்சாரம் புரிந்தவனுக்கு) முகத்தில் கரி பூசி,கசையடி தண்டனை நிறைவேற்றுமாறு அவர் உத்தரவிட்டால், அதை ஏற்றுக் கொள்ளுங்கள். சாகும்வரை கல்லால் அடிக்கும்படி அவர் உத்தரவிட்டால் அதைத் தவிர்த்துவிடுங்கள் என்று யூதர்கள் கூறினர்.
மேலும் பின்வரும் மூன்று வசனங்களையும் அல்லாஹ் அருளினான்:
அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள்தாம் (ஏக இறைவனை) மறுப்பவர்கள் ஆவர். (5:44)
அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள்தாம் அநீதியாளர்கள் ஆவர். (5:45)
அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள்தாம் பாவிகள் ஆவர். (5:47)
இந்த (5:47ஆவது) வசனம் (ஏக இறைவனை) மறுப்பவர்கள் அனைவருக்கும் பொதுவானதாகும். (முந்தைய இரு வசனங்களும் யூதர்கள் தொடர்பாக அருளப்பெற்றவை ஆகும்.)
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "நபி (ஸல்) அவர்கள் அந்த யூதரைச் சாகும்வரை கல்லால் அடிக்கும்படி உத்தர விட்டார்கள்" என்பதுவரையே இடம்பெற்றுள்ளது. அதற்குப் பின்னர் வசனங்கள் அருளப் பெற்றது தொடர்பான குறிப்பு இடம்பெறவில்லை.ஆ. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(விபச்சாரம் புரிந்த) "அஸ்லம்” குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதருக்கும், யூதர் ஒருவருக்கும், அவருடன் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்ணுக்கும் சாகும்வரை கல்லால் அடிக்கும் தண்டனையை நபி (ஸல்) அவர்கள் நிறைவேற்றினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "மற்றொரு பெண்ணுக்கும்” என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 29
3506. அபூஇஸ்ஹாக் சுலைமான் அஷ் ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்களிடம், "(சாகும்வரை) கல்லால் அடிக்கும் தண்டனையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிறைவேற்றினார்களா?" என்று கேட்டேன். அவர்கள், "ஆம் (நிறைவேற்றினார்கள்)” என்று பதிலளித்தார்கள். நான், குர்ஆனில் ‘அந்நூர்" எனும் (24 ஆவது) அத்தியாயம் அருளப்பெறுவதற்கு முன்பா? அல்லது அதற்குப் பின்பா (எப்போது அந்தத் தண்டனையை நிறைவேற்றினார்கள்)?" என்று கேட்டேன். அவர்கள் "எனக்குத் தெரியாது" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 29
3507. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவரின் அடிமைப் பெண் விபச்சாரம் செய்து, அது வெளிப்பட்டுவிட்டால், அவளுக்கு (உரிமையாளர் ஐம்பது) சாட்டையடி வழங்கட்டும். (அதற்கு மேல் அவளிடம்) கடுமை காட்டவேண்டாம். பிறகு (மறுபடியும்) அவள் விபச்சாரம் செய்தால் அவளுக்கு (ஐம்பது) சாட்டையடி கொடுக்கட்டும். (அதற்கு மேல் அவளிடம்) கடுமை காட்டவேண்டாம். மூன்றாவது முறையும் அவள் விபச்சாரம் செய்து அது வெளிப்பட்டுவிட்டால், அவளை ஒரு முடிக்கற்றைக்காவது (அற்ப விலைக்காவது) விற்றுவிடட்டும்!
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 29
3508. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஒன்பது அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் முஹம்மத் பின் இஸ்ஹாக் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "மூன்று முறை அவளுக்குச் சாட்டையடி வழங்க வேண்டும். நான்காவது முறை அவள் விபச்சாரம் செய்துவிட்டால், அவளை விற்று விடட்டும்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 29
3509. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"கணவனில்லாத ஓர் அடிமைப் பெண் விபச்சாரம் செய்துவிட்டால் (அவளுக்கு என்ன தண்டனை வழங்க வேண்டும்)?"என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "அவள் விபச்சாரம் செய்தால் அவளைச் சாட்டையால் அடியுங்கள். பின்னரும் விபச்சாரம் செய்தால் மீண்டும் சாட்டையால் அடியுங்கள். பின்னரும் விபச்சாரம் செய்தால் மறுபடியும் சாட்டையால் அடியுங்கள். அதன் பின்னர் (அவள் விபச்சாரம் செய்தால்) அவளை ஒரு கயிற்றுக்காவது விற்றுவிடுங்கள்" என்று கூறினார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (அவளை விற்றுவிட வேண்டும் என்பது) மூன்றாவது தடவைக்குப் பிறகா அல்லது நான்காவது தடவைக்குப் பிறகா என்பது எனக்குத் தெரியாது" என்று கூறினார்கள்.
அப்துல்லாஹ் பின் மஸ்லமா அல்கஅனபீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள "ளஃபீர்" எனும் சொல்லுக்கு "கயிறு" என்பது பொருள் என இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் பொருள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 29
3510. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) மற்றும் ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) ஆகியோரிடமிருந்து மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "ஓர் அடிமைப் பெண் விபச்சாரம் செய்துவிட்டால் (அவளுக்கு என்ன தண்டனை வழங்க வேண்டும்)? என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது" என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. அவற்றில் "ளஃபீர்" என்பதற்கு ‘கயிறு" என்பது பொருள் என இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறிய சொற்பொருள் இடம்பெறவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) மற்றும் ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) ஆகியோர் வழியாக (தலா இரு அறிவிப்பாளர்தொடர்களில்) நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. இந்த அறிவிப்புகளிலும் "அவளை விற்றுவிட வேண்டும் என்பது, மூன்றாவது தடவைக்குப் பிறகா, அல்லது நான்காவது தடவைக்குப் பிறகா" என்பதில் ஐயப்பாடு எழுப்பப்பட்டுள்ளது.
அத்தியாயம் : 29
பாடம் : 7 மகப்பேறு ஏற்பட்டுள்ள பெண்ணின் தண்டனையைத் தள்ளிவைத்தல்
3511. அபூஅப்திர் ரஹ்மான் அப்துல்லாஹ் பின் ஹபீப் பின் ரபீஆ (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:
(ஒரு நாள்) அலீ (ரலி) அவர்கள் (எங்களிடையே) உரையாற்றினார்கள். அப்போது, "மக்களே! உங்கள் அடிமைகள்மீதும் குற்றவியல் தண்டனையை நிறைவேற்றுங்கள். அவர்கள் திருமணமானவர்களாக இருக்கட்டும்; திருமணமாகாதவர்களாக இருக்கட்டும். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அடிமைப்பெண் ஒருவர் விபச்சாரம் செய்து விட்டார். எனவே, அவருக்குச் சாட்டையடிகள் வழங்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு உத்தரவிட்டார்கள்.
ஆனால், அவருக்கு அப்போதுதான் மகப்பேறு இரத்தப்போக்கு ஏற்பட்டிருந்தது. அவருக்குச் சாட்டையடி தண்டனையை நிறைவேற்றினால் (எங்கே) அவரை நான் கொன்றுவிடுவேனோ என அஞ்சினேன். (எனவே, தண்டனையைத் தள்ளிவைத்தேன்.) இது பற்றி நான் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தபோது, "நீங்கள் செய்தது சரிதான்" என்று அவர்கள் கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அவர் திருமணம் முடித்தவராக இருக்கட்டும்; திருமணம் முடிக்காதவராக இருக்கட்டும்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை. இந்த ஹதீஸில், "அவள் குணமடை(ந்து இயல்பு நிலையை அடை)யும்வரை அவளை விட்டுவிடுங்கள்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 29
பாடம் : 8 மது அருந்திய குற்றத்திற்கான தண்டனை
3512. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மது அருந்திய ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டபோது, அவரை இரு பேரீச்ச மட்டைகளால் ஏறக்குறைய நாற்பது முறை அடிக்குமாறு உத்தரவிட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அபூபக்ர் (ரலி) அவர்களும் (தமது ஆட்சிக் காலத்தில்) அவ்வாறே செய்தார்கள். உமர் (ரலி) அவர்கள் ஆட்சிக்கு வந்தபோது, மக்களிடம் ஆலோசனை கேட்டார்கள். அப்போது அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் "(குர்ஆனில் கூறப்பட்டுள்ள) குற்றவியல் தண்டனைகளிலேயே குறைந்தபட்ச தண்டனையான எண்பது (சாட்டையடிகள் வழங்கலாம்)" என்று கூறினார்கள். அவ்வாறே உமர் (ரலி) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "(மது அருந்திய) ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டபோது..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 29
3513. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மது அருந்திய குற்றத்திற்குத் தண்டனையாக பேரீச்ச மட்டையாலும் காலணியாலும் அடிக்கும்படி நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக்காலத்தில்) நாற்பது சாட்டையடிகள் கொடு(க்குமாறு உத்தரவு பிறப்பி)த்தார்கள். உமர் (ரலி) அவர்கள் ஆட்சிக்கு வந்த வேளையில், (சிரியா, இராக் போன்ற பகுதிகள் வெற்றி கொள்ளப்பட்டு) மக்கள் கிராமப்புறங்களிலும் செழிப்பான பகுதிகளிலும் குடியேறியபோது (வாழ்க்கை வசதிகள் பெருகி,குடிப்பழக்கம் அதிகரித்தது. அப்போது), "மது அருந்திய குற்றத்திற்கான தண்டனை விஷயத்தில் நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?" என்று மக்களிடம் கேட்டார்கள்.
அப்போது அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், "(குர்ஆனில் கூறப்பட்ட) குற்றவியல் தண்டனைகளிலேயே மிகவும் குறைந்தபட்ச தண்டனையை (எண்பது கசை யடி) அதற்குரிய தண்டனையாக நீங்கள் ஆக்க வேண்டுமென நான் கருதுகிறேன்" என்றார்கள். இதன்படி உமர் (ரலி) அவர்கள் எண்பது சாட்டையடிகள் வழங்கினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 29
3514. மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "மது அருந்திய குற்றத்திற்குத் தண்டனையாகக் காலணியாலும் பேரீச்ச மட்டையாலும் நபி (ஸல்) அவர்கள் நாற்பது முறை அடிக்குமாறு உத்தரவிட்டுவந்தார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. அதில் "மக்கள் கிராமப்புறங்களிலும் செழிப்பான பகுதிகளிலும் குடியேறியபோது" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 29
3515. அபூசாசான் ஹுளைன் பின் அல்முன்திர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (கலீஃபா) உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களிடம் இருந்தேன். அப்போது வலீத் பின் உக்பா (ரலி) அவர்கள் (அங்கு) கொண்டுவரப்பட்டார். அவர் சுப்ஹுத் தொழுகை இரண்டு ரக்அத் தொழுவித்துவிட்டு, "உங்களுக்கு நான் இத்தொழுகையைக் கூடுதலாக்கப் போகிறேன்" என்று கூறியிருந்தார்.
அப்போது அவருக்கெதிராக இருவர் சாட்சியமளித்தனர். அவர்களில் ஒருவரான ஹும்ரான் பின் அபான், "அவர் (வலீத்) மது அருந்தியிருந்தார்" என்று சாட்சியம் அளித்தார். மற்றொருவர் வலீத் வாந்தியெடுத்ததைத் தாம் கண்டதாகச் சாட்சியமளித்தார். உஸ்மான் (ரலி) அவர்கள், "அவர் மது அருந்தியதாலேயே வாந்தியெடுத்தார்" என்று கூறிவிட்டு, "அலீயே! நீங்கள் எழுந்து அவருக்கு (மது அருந்திய குற்றத்திற்காக)ச் சாட்டையடி வழங்குங்கள்" என்று கூறினார்கள்.
உடனே அலீ (ரலி) அவர்கள் (தம் புதல்வரிடம்) "ஹசனே! நீர் எழுந்து அவருக்குச் சாட்டையடி வழங்கு" என்று கூறினார்கள். அதற்கு ஹசன் (ரலி) அவர்கள், (உஸ்மான் (ரலி) அவர்கள்மீது கோபம் கொண்டவரைப் போன்று) "ஆட்சியின் குளிர்ச்சிக்குப் பொறுப்பேற்றவர்களையே அதன் வெப்பத்துக்கும் பொறுப்பேற்கச் செய்யுங்கள்" என்று கூறிவிட்டார்கள். உடனே அலீ (ரலி) அவர்கள் (தம் சகோதரரின் புதல்வரிடம்) "அப்துல்லாஹ் பின் ஜஅஃபரே! நீர் எழுந்து அவருக்குச் சாட்டையடி வழங்குவீராக" என்று சொன்னார்கள். அவ்வாறே அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் அவர்கள், வலீதுக்குச் சாட்டையடி வழங்கினார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள் (அப்துல்லாஹ் எத்தனை முறை அடிக்கிறார் என்பதை) எண்ணிக்கொண்டிருந்தார்கள். நாற்பது அடியானதும் "போதும் நிறுத்து" என்றார்கள்.
பிறகு, "(மது அருந்திய குற்றத்திற்குத் தண்டனையாக) நபி (ஸல்) அவர்கள் நாற்பது சாட்டையடிகள் வழங்கினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களும் (தமது ஆட்சிக் காலத்தில்) நாற்பது சாட்டையடிகள் வழங்கினார்கள். உமர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தில்) எண்பது சாட்டையடிகள் வழங்கினார்கள். எல்லாம் (பின்பற்றத் தகுந்த) வழிமுறைகளே. ஆயினும், இ(றைத்தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் வழங்கிய நாற்பது சாட்டையடிகளான)து எனக்கு மிகவும் விருப்பமானதாகும்" என்று அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள்.
மேற்கண்ட ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அலீ பின் ஹுஜ்ர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நான் இந்த ஹதீஸை அப்துல்லாஹ் அத்தானாஜ் (ரஹ்) அவர்களிடமிருந்தே (நேரடியாகக்) கேட்டிருந்தேன். ஆனால், அதை மனனம் செய்ய வில்லை. (பின்னர் இப்னு அபீஅரூபா (ரஹ்) அவர்களிடம் கேட்டே இப்போது அறிவிக்கிறேன்) என இஸ்மாயீல் பின் உலய்யா (ரஹ்) அவர்கள் கூடுதலாகக் கூறினார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 29
3516. அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் தண்டனை நிறைவேற்றியதால் எவரேனும் இறந்துபோனால் (அதற்காக) நான் கவலை அடையப்போவதில்லை. குடிகாரனைத் தவிர! ஏனெனில், (தண்டனை வழங்கப்பட்டதால்) குடிகாரன் இறந்துபோனால் அவனுக்காக நான் உயிரீட்டுத் தொகை வழங்கிவிடுவேன். இதற்குக் காரணம், (மது அருந்திய குற்றத்திற்குத் தண்டனையாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (குறிப்பிட்ட தண்டனை எதையும்) வழிமுறையாக்கவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 29
பாடம் : 9 (குற்றவியல் தண்டனை அல்லாமல்) கண்டிப்புக்காக வழங்கப்படும் சாட்டையடிகளின் (அதிகபட்ச) அளவு.
3517. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் விதியாக்கியுள்ள (குற்றவியல்) தண்டனைகளில் ஒன்றில் தவிர வேறு எதற்காகவும் பத்து சாட்டையடிகளுக்கு மேல் வழங்கப்படமாட்டாது.
இதை அபூபுர்தா அல்அன்சாரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 29