3464. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே நின்று (ஆற்றிய உரையில் பின்வருமாறு) கூறினார்கள்: எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அ(ந்த ஓரிறை)வன் மீதாணையாக! "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. நான் அல்லாஹ்வின் தூதராவேன்" என உறுதிமொழி கூறிய எந்த முஸ்லிமான மனிதரையும் கொலை செய்ய அனுமதி இல்லை. (அவர்களில்) மூன்று பேரைத் தவிர: 1. "ஜமாஅத்" எனும் கூட்டமைப்பைவிட்டு வெளியேறி இஸ்லாத்தைக் கைவிட்டவன். 2. திருமணமாகியும் விபசாரம் செய்தவன். 3. ஒரு மனிதனைக் கொலை செய்ததற்குப் பகரமாக கொல்லப்பட வேண்டியவன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
இந்த ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்கள் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் "எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ" எனும் (பிரமாண) வாசகம் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 28
பாடம் : 7 கொலையை ஆரம்பித்துவைத்தவர் மீதுள்ள குற்றம்.
3465. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(உலகில்) அநியாயமாக ஒரு கொலை நடைபெறும்போது அந்தக் கொலையின் பாவத்தில் (ஆதி மனிதர்) ஆதம் (அலை) அவர்களுடைய முதலாவது மகனுக்கு ஒரு பங்கு இருக்கவே செய்யும். ஏனெனில், அவர்தாம் கொலையை ஆரம்பித்துவைத்த முதல் மனிதர் ஆவார்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், ஜரீர் பின் அப்தில் ஹமீத் மற்றும் ஈசா பின் யூனுஸ் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், "ஏனெனில், அவர்தாம் கொலையை ஆரம்பித்துவைத்தவர்" என்று இடம் பெற்றுள்ளது. "முதல் மனிதர்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 28
பாடம் : 8 மறுமையில் வழங்கப்படும் கொலைக்கான தண்டனையும், மறுமை நாளில் மனிதர்களிடையே முதலாவதாக அளிக்கப்படும் தீர்ப்பு கொலை தொடர்பானதாகவே இருக்கும் என்பதும்.
3466. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளில் (மனித உரிமைகள் தொடர்பான வழக்குகளில்) முதன் முதலாக மனிதர்களிடையே வழங்கப்படும் தீர்ப்பு, கொலைகள் தொடர்பானதாகவே இருக்கும்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், சிலரது அறிவிப்பில் ("தீர்ப்பு வழங்கப்படும்" என்பதைக் குறிக்க) "யுக்ளா" எனும் சொல்லும், வேறுசிலரது அறிவிப்பில் "யுஹ்கமு" எனும் சொல்லும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 28
பாடம் : 9 மனிதர்களின் உயிர், சுயமரியாதை, செல்வம் ஆகியவற்றுக்கு ஊறு விளைவிப்பது வன்மையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
3467. அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பிவிட்டது. ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. அவை: துல்கஅதா, துல் ஹிஜ்ஜா மற்றும் முஹர்ரம் ஆகியவையாகும். (மற்றொன்று) ஜுமாதல் ஆகிராவுக்கும் ஷஅபான் மாதத்திற்கும் இடையேயுள்ள "முளர்" குலத்தாரின் ரஜப் மாதமாகும்" என்று சொன்னார்கள்.
பிறகு "இது எந்த மாதம்?" என்று கேட்டார்கள். நாங்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்" என்றோம். அவர்கள் அந்த மாதத்திற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்துவிட்டு, "இது துல்ஹஜ் இல்லையா?" என்று கேட்டார்கள். நாங்கள் "ஆம்" என்றோம்.
பிறகு "இது எந்த நகரம்?" என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்" என்று கூறினோம். அப்போதும் அவர்கள் அதற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்துவிட்டு, "இது "அல்பல்தா" (மக்காவின் பெயர்களில் ஒன்று) அல்லவா?" என்று கேட்க, நாங்கள் "ஆம்" என்றோம். மேலும் "இது எந்த நாள்?" என்று கேட்டார்கள். நாங்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்" என்றோம். அதற்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்துவிட்டு, "இது நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாவது) நாளல்லவா?" என்று கேட்க, நாங்கள், "ஆம், அல்லாஹ்வின் தூதரே!" என்றோம்.
பிறகு "உங்களது புனிதமிக்க இந்த நகரத்தில், உங்களின் புனிதமிக்க இந்த மாதத்தில் இன்றைய தினம் எந்த அளவுக்குப் புனிதமானதோ அந்த அளவுக்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்களின் மானமும் உங்களுக்குப் புனிதமானவையாகும். (அவற்றுக்கு ஊறு விளைவிப்பதற்கு உங்களுக்கு அனுமதியில்லை.) நீங்கள் மறுமையில் உங்களுடைய இறைவனைச் சந்திப்பீர்கள். அப்போது அவன் உங்களிடம் உங்கள் செயல்கள் குறித்து விசாரணை செய்வான். அறிந்துகொள்ளுங்கள்: எனக்குப் பின் ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக்கொள்ளும் "நிராகரிப்பாளர்களாய்" அல்லது "வழிகெட்டவர்களாய்" நீங்கள் மாறிவிடாதீர்கள்.
இதோ! இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு (என் கட்டளைகளை) அறிவித்துவிடுங்கள். ஏனெனில், இந்தச் செய்தி எவரிடம் தெரிவிக்கப்படுகிறதோ அவர், தாம் யாரிடமிருந்து இதைக் கேட்டாரோ அவரைவிட (அதாவது தமக்குச் சொன்னவரைவிட) நன்கு (புரிந்து) பாதுகாப்பவராயிருக்கலாம்" என்று கூறினார்கள். பிறகு "நான் (இறைச் செய்திகள் அனைத்தையும்) சேர்த்துவிட்டேனா?" என்று கேட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 28
3468. அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நஹ்ருடைய) அந்நாளில் தமது ஒட்டகத்தின் மீது அமர்ந்திருக்க, ஒரு மனிதர் ஒட்டகத்தின் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது "இது எந்த நாள் என்று உங்களுக்குத் தெரியுமா?"என்று கேட்டார்கள். மக்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்" என்று கூறினார்கள். அதற்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு (மௌனமாக இருந்துவிட்டு,) "இது நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாவது) நாளல்லவா?" என்று கேட்க, நாங்கள், "ஆம், அல்லாஹ்வின் தூதரே!" என்றோம்.
மேலும் "இது எந்த மாதம்?" என்று கேட்டார்கள். நாங்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்" என்று சொன்னோம். அவர்கள் "இது துல்ஹிஜ்ஜா மாதம் அல்லவா?" என்று கேட்டார்கள். நாங்கள் "ஆம், அல்லாஹ்வின் தூதரே!" என்றோம்.
மேலும், "இது எந்த நகரம்?" என்று கேட்டார்கள். நாங்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்"என்றோம். அதற்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என நாங்கள் எண்ணுமளவுக்கு (மௌனமாக இருந்துவிட்டு), "இது "அல்பல்தா" (புனித நகரம் மக்கா) அல்லவா?" என்று கேட்க, நாங்கள், "ஆம், அல்லாஹ்வின் தூதரே!" என்று விடையளித்தோம்.
அப்போது அவர்கள், "உங்களது புனிதமிக்க இந்த நகரத்தில், உங்களின் புனிதமிக்க இந்த மாதத்தில் இன்றைய தினம் எந்த அளவுக்குப் புனிதமானதோ அந்த அளவுக்கு உங்கள் உயிர்களும் உடைமைகளும் மானமும் உங்களுக்குப் புனிதமானவையாகும். (இதை) இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு அறிவித்துவிடுங்கள்" என்று கூறினார்கள்.
பிறகு கறுப்பு கலந்த இரு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்கள் பக்கம் திரும்பி, அவற்றை அறுத்தார்கள். மேலும்,ஆட்டிறைச்சியில் சிறிதளவு எடுத்து எங்களிடையே பங்கிட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூபக்ரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "(நஹ்ருடைய) நாள் வந்தபோது நபி (ஸல்) அவர்கள் ஓர் ஒட்டகத்தின் மீது அமர்ந்தார்கள். ஒரு மனிதர் அதன் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டிருந்தார்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 28
3469. மேற்கண்ட ஹதீஸ் அபூபக்ரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஆறு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாவது) நாளில் எங்களுக்கு உரையாற்றினார்கள். அப்போது "இது எந்த நாள்?" என்று கேட்டார்கள்..." என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. ஆயினும், அவற்றில் "உங்கள் மானம்" என்பதும் "பிறகு இரு செம்மறியாட்டு கடாக்களின் பக்கம் திரும்பினார்கள்" என்பதும் அதற்குப் பின்னுள்ள குறிப்புகளும் இடம் பெறவில்லை.
அவற்றில் "உங்களது புனிதமிக்க இந்த நகரத்தில் உங்களின் புனிதமிக்க இந்த மாதத்தில் இந்த நாள் எந்த அளவுக்குப் புனிதமானதோ அதைப் போன்றே (உங்கள் உயிர்களும் உடைமைகளும்) நீங்கள் உங்கள் இறைவனைச் சந்திக்கும் நாள்வரை உங்களுக்குப் புனிதமானவையாகும்" என்று கூறிவிட்டு "நான் (இறைச்செய்திகளை உங்களிடம்) சேர்த்துவிட்டேனா?" என்று கேட்டார்கள். நாங்கள் "ஆம்" என்றோம். அவர்கள் "இறைவா! நீயே இதற்குச் சாட்சியாக இரு" என்று கூறினார்கள் என்றும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 28
பாடம் : 10 கொலையாளி கொலைக்குற்றத்தை ஒப்புக்கொள்வதும், கொலையாளியைப் பழி வாங்குவதற்குக் கொலையுண்டவனின் பொறுப்பாளிக்கு வாய்ப்புத் தருவதும் செல்லும். ஆனால், கொலையாளியை மன்னிக்குமாறு கோருவது விரும்பத்தக்கதாகும்.
3470. வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நான் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தேன். அப்போது ஒரு மனிதர் மற்றொரு மனிதரைத் தோல்வாரினால் (கழுத்தில் போட்டு) இழுத்துக்கொண்டு வந்தார். "அல்லாஹ்வின் தூதரே! இவர் என் சகோதரனைக் கொலை செய்துவிட்டார்" என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்த மனிதரிடம்), "நீ அவரைக் கொலை செய்தாயா?" என்று கேட்டார்கள். (அப்போது அவரை இழுத்துக்கொண்டு வந்தவர், இவர் கொலையை ஒப்புக்கொள்ளாவிட்டால் இவருக்கெதிரான ஆதாரத்தை நான் நிலை நிறுத்துவேன்" என்றும் கூறினார்). அதற்கு அந்த மனிதர், "ஆம், நான் அவரைக் கொலை செய்தேன்" என்று (ஒப்புதல் வாக்குமூலம்) சென்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எப்படி (இக்கொலையை) நீ செய்தாய்?" என்று கேட்டார்கள்.
அதற்கு அந்த மனிதர், "நானும் அவரும் ஒரு மரத்தில் (தடியால் அடித்து) இலை உதிர்த்துக்கொண்டிருந்தோம். அப்போது அவர் என்னை ஏசினார். எனக்குக் கோபம் ஏற்பட்டது. உடனே நான் (என் கையிலிருந்த) கோடரியால் அவரது உச்சந்தலையில் அடித்துவிட்டேன். அவர் இறந்துவிட்டார். (திட்டமிட்டு இந்தக் கொலையை நான் செய்யவில்லை)" என்று சொன்னார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவருக்கு இழப்பீடு வழங்க உம்மிடம் ஏதேனும் (பொருள்) உண்டா?" என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர் "என்னிடம் எனது போர்வையையும் எனது கோடரியையும் தவிர வேறொன்றுமில்லை" என்று கூறினார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உன்னுடைய கூட்டத்தார் உனக்காக (இழப்பீடு) திரட்டித் தருவார்கள் என்று நீ கருதுகிறாயா?" என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர், "நான் என் கூட்டத்தாரிடம் அந்த அளவுக்கு மதிப்புடையவன் அல்லன்" என்று சொன்னார். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரது (கழுத்தில் கிடந்த) தோல் வாரை, அ(வரை இழுத்துவ)ந்த மனிதரிடம் தூக்கிப் போட்டு, "உம்முடைய ஆளைப் பிடித்துக்கொள்க" என்று சொன்னார்கள். உடனே அந்த மனிதர் அவரை (இழுத்து)க்கொண்டு சென்றார். அவர் திரும்பிச் சென்றதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவரை அவர் கொன்றுவிட்டால், அவரும் இவரைப் போன்றவரே ஆவார்" என்று கூறினார்கள்.
அந்த மனிதர் திரும்பிவந்து, "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் "இவரை அவர் கொன்று விட்டால் அவரும் இவரைப் போன்றவரே ஆவார்" என்று கூறியதாக எனக்குச் செய்தி எட்டியதே! உங்களது கட்டளைப்படிதானே நான் இவரை பிடித்துச்சென்றேன்" என்று கேட்டார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவர் உமது பாவத்துடனும் (கொல்லப்பட்ட) உன் உறவினரின் பாவத்துடனும் திரும்புவதை நீர் விரும்புகிறீரா?" என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! ஆம். அது அவ்வாறே ஆகட்டும்" என்று கூறிவிட்டு, அவரது (கழுத்தில் கிடந்த) தோல் வாரைத் தூக்கியெறிந்து, அவரை அவரது வழியிலேயே செல்ல விட்டுவிட்டார்.
அத்தியாயம் : 28
3471. வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் கொண்டுவரப்பட்டார். அவர் மற்றொரு மனிதரைக் கொலை செய்திருந்தார். அப்போது கொலையுண்டவரின் பொறுப்பாளர் கொலையாளியைப் பழிக்குப்பழி வாங்கிக்கொள்ள அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதித்தார்கள். அவரும் அக்கொலையாளியின் கழுத்தில் ஒரு தோல் வாரைப் போட்டு இழுத்துக்கொண்டு சென்றார்.
அவர் திரும்பிச் சென்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கொலையாளியும் கொலையுண்டவரும் நரகவாசிகள் ஆவர்" என்று சொன்னார்கள். (அதைச் செவியுற்ற) ஒரு மனிதர் (கொலையுண்டவரின்) பொறுப்பாளரிடம் சென்று, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதைத் தெரிவித்தார். எனவே, அவர் அக்கொலையாளியை (மன்னித்து) விட்டுவிட்டார்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான இஸ்மாயீல் பின் சாலிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் இந்த ஹதீஸை ஹபீப் பின் அபீஸாபித் (ரஹ்) அவர்களிடம் குறிப்பிட்டேன். அப்போது அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் (தவறுதலாகக் கொலை செய்த) அவரை மன்னித்துவிடுமாறு (கொலையுண்டவரின்) பொறுப்பாளரிடம் கேட்டார்கள். அவர் மறுத்துவிட்டார். (எனவேதான், அவ்வாறு கூறினார்கள்)" என்று சயீத் பின் அம்ர் பின் அஷ்வஉ (ரஹ்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 28
பாடம் : 11 சிசுக்கொலைக்கான இழப்பீடும், தவறுதலாக நடந்த கொலையிலும் திட்டமிட்ட கொலையைப் போன்ற கொலையிலும் வழங்க வேண்டிய இழப்பீடு குற்றவாளியின் தந்தைவழி உறவினர் மீதே கடமையாகும் என்பதும்.
3472. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹுதைல் குலத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களில் ஒருத்தி மற்றொருத்தியின் மீது கல்லை எறிய, அப்பெண்ணின் (வயிற்றில் பட்டு வயிற்றிலிருந்த) சிசு இறந்து பிறந்தது. இந்த வழக்கில் உயிரீட்டுத் தொகையாக ஓர் ஆண் அடிமையை அல்லது ஒரு பெண் அடிமையைத் தர வேண்டுமென நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள்.
அத்தியாயம் : 28
3473. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"பனூ லஹ்யான்" (ஹுதைல்) குலத்தைச் சேர்ந்த (கர்ப்பிணி) பெண் ஒருத்தியின் சிசு (மற்றொரு பெண் அடித்ததால்) இறந்து பிறந்தது. அது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஓர் ஆண் அடிமையை, அல்லது ஓர் அடிமைப் பெண்ணை (இழப்பீடாக) வழங்க வேண்டுமென்று தீர்ப்பளித்தார்கள். பின்னர், இழப்பீடு வழங்கும்படி தீர்ப்பளிக்கப்பட்ட அ(ந்தக் குற்றவாளி)ப் பெண் இறந்துவிட்டாள். ஆகவே, (அவள் சார்பாக) அவளுடைய தந்தைவழி உறவினர்கள் (அஸபா) இழப்பீடு வழங்க வேண்டுமென்றும், அவளது சொத்து அவளுடைய ஆண் மக்களுக்கும் கணவருக்கும் உரியதென்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள்.
அத்தியாயம் : 28
3474. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹுதைல் குலத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் சண்டையிட்டுக்கொண்டனர். அவர்களில் ஒருத்தி மற்றொருத்திமீது கல் எறிந்து, அவளையும் அவளுடைய வயிற்றிலிருந்த சிசுவையும் கொன்றுவிட்டாள். இதையொட்டி மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டுவந்தனர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவளுடைய சிசுவிற்கான இழப்பீடாக ஓர் ஆண் அடிமை, அல்லது ஓர் அடிமைப் பெண்ணை வழங்க வேண்டும் என்றும், (கொல்லப் பட்ட) அந்தப் பெண்ணிற்கான இழப்பீட்டுத் தொகை கொலை செய்த பெண்ணின் தந்தைவழி உறவினர்கள்மீது கடமையாகுமென்றும் தீர்ப்பளித்தார்கள். அவளது சொத்து அவளுடைய குழந்தைகளுக்கும் அவர்களுடன் இருப்பவர்களுக்கும் உரியதென்றும் கூறினார்கள்.
அப்போது (குற்றம் புரிந்த அப்பெண்ணின் கணவர்) ஹமல் பின் அந்நாபிஃகா அல்ஹுதலீ (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரே! உண்ணவோ பருகவோ மொழியவோ அழவோ இயலாத ஒரு சிசுவிற்காக நான் எப்படி அபராதம் செலுத்துவது? இதைப் போன்றது தள்ளுபடி செய்யப்பட வேண்டுமல்லவா?" என்று கேட்டார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவரெல்லாம் குறிகாரர்களின் குடும்பத்தில் ஒருவர்தாம்" என்று சொன்னார்கள். (குற்றவாளிக்குச் சாதகமாகச் சாதுரியமான முறையில்) அவர் எதுகை மோனையோடு பேசியதால்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரைக் குறித்து அவ்வாறு கூறினார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "ஹுதைல் குலத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் சண்டையிட்டுக்கொண்டனர்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
இந்த அறிவிப்பில், "அவளது சொத்து அவளுடைய குழந்தைகளுக்கும் அவர்களுடன் இருப்பவர்களுக்கும் உரியது என்று கூறினார்கள்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை. மேலும், "அப்போது ஒருவர் எப்படி நாங்கள் இழப்பீடு வழங்க முடியும்?" என்று கேட்டார் என்றே (பொதுவாக) இடம்பெற்றுள்ளது. "ஹமல் பின் மாலிக் பின் அந் நாபிஃகா அல் ஹுதலீ என்பவர் கேட்டார்" என அவரது பெயரை அறிவிப்பாளர் குறிப்பிடவில்லை.
அத்தியாயம் : 28
3475. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண் கர்ப்பிணியாயிருந்த தன் சகக்கிழத்தியைக் கூடாரக் குச்சியால் தாக்கிக் கொன்றுவிட்டாள். அவர்களில் ஒருத்தி "பனூ லிஹ்யான்" கோத்திரத்தைச் சேர்ந்தவளாக இருந்தாள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கொல்லப்பட்டவளுக்குரிய இழப்பீட்டைக் கொன்றவரின் தந்தைவழி உறவினர்கள் வழங்கவேண்டும்; அவளது வயிற்றிலிருந்த சிசுவைக் கொன்றதற்காக ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்" என்று (தீர்ப்புக்) கூறினார்கள்.
அப்போது கொலை செய்தவளின் தந்தைவழி உறவினர்களில் ஒருவர், "உண்ணவோ பருகவோ அழவோ இயலாத சிசுவிற்காக நாங்கள் எப்படி அபராதம் செலுத்துவது? இதைப் போன்றது தள்ளுபடி செய்யப்பட வேண்டுமல்லவா?" என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கிராமப்புற அரபியரின் எதுகைமோனையைப் போன்ற எதுகை மோனையா?" என்று (கடிந்து) கூறினார்கள். மேலும், இழப்பீட்டை அவர்கள்தாம் வழங்க வேண்டுமென்றும் தீர்ப்பளித்தார்கள்.
அத்தியாயம் : 28
3476. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண் தன் சகக்கிழத்தியைக் கூடாரக் குச்சியால் தாக்கிக் கொன்றுவிட்டாள். இது தொடர்பான வழக்கிற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்துவரப்பட்டார்கள். கொலை செய்தவளின் தந்தைவழி உறவினர்கள் கொல்லப்பட்டவளுக்கான இழப்பீட்டை வழங்க வேண்டுமென்றும், கொல்லப்பட்டவள் கர்ப்பிணியாக இருந்தபடியால் கொல்லப்பட்ட அவளது சிசுவிற்காக ஓர் அடிமையை வழங்க வேண்டுமென்றும் தீர்ப்பளித்தார்கள்.
அப்போது கொலை செய்தவளின் தந்தைவழி உறவினர்கள் சிலர், "உண்ணவோ பருகவோ வீறிட்டழவோ இயலாத சிசுவிற்காக நாங்கள் இழப்பீடு செலுத்த வேண்டுமா? இதைப் போன்றது தள்ளுபடி செய்யப்பட வேண்டுமல்லவா?"என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கிராமப்புற அரபியரின் எதுகைமோனையைப் போன்ற எதுகைமோனையா?" என்று (கடிந்து) பேசினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அவள் வயிற்றிலிருந்த சிசுவை விழுகட்டியாக்கி (வீழ்த்தி)விட்டாள். இவ்வழக்கு நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுசெல்லப்பட்டபோது, ஓர் அடிமையை இழப்பீடாக வழங்க வேண்டும்; இழப்பீட்டிற்கான பொறுப்பைக் கொலை செய்த பெண்ணின் காப்பாளர்கள் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தார்கள்" என்று இடம்பெற்றுள்ளது. கொல்லப்பட்ட அந்தப் பெண்ணிற்கான இழப்பீடு குறித்த குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 28
3477. மிஸ்வர் பின் அல்மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு (கர்ப்பிணிப்) பெண்ணை (அடித்துக்) குறைப்பிரசவம் (கருச்சிதைவு) ஏற்படவைத்தால், (அதற்குரிய இழப்பீடு) என்ன என்பது தொடர்பாக (கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் மக்களிடம் கருத்துக் கேட்டார்கள். அப்போது முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் ஓர் ஆண் அடிமையை, அல்லது ஓர் அடிமைப் பெண்ணை அந்த சிசுவிற்காக (இழப்பீடாக) வழங்குமாறு தீர்ப்பளித்தபோது நான் அங்கு இருந்தேன்" என்று கூறினார்கள்.
உமர் (ரலி) அவர்கள், "(நீங்கள் கூறிய) இதற்கு உம்முடன் சாட்சியம் அளிக்கும் ஒருவரை என்னிடம் அழைத்து வாருங்கள்" என்றார்கள். அப்போது முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் (முஃகீரா (ரலி) அவர்கள் கூறியது உண்மையென) அதற்குச் சாட்சியம் அளித்தார்கள்.- இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 28

பாடம் : 1 திருட்டுக் குற்றத்திற்கான தண்டனையும், திருட்டின் குறைந்தபட்ச அளவும்.
3478. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கால் தீனார் (பொற்காசு) அல்லது அதற்கு மேல் திருடியதற்காகத் திருடனின் கையைத் துண்டித்துவந்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 29
3479. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கால் தீனார் அல்லது அதற்கு மேற்பட்டதற்காகவே தவிர (அதைவிடக் குறைவானதைத் திருடியதற்காக ஒரு) திருடனின் கை வெட்டப்படமாட்டாது.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 29
3480. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கால் தீனார் அல்லது அதற்கு மேற்பட்டதற்காகவே தவிர (அதைவிடக் குறைவானதைத் திருடிய ஒருவனுடைய) கை வெட்டப்படமாட்டாது.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 29
3481. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கால் தீனார் அல்லது அதற்கு மேற்பட்டதற்காகவே தவிர (அதைவிடக் குறைவானதைத் திருடியதற்காக ஒரு) திருடனின் கை வெட்டப்படமாட்டாது.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 29
3482. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் தோல் கேடயம் அல்லது தோல் கவசத்தின் விலையைவிடக் குறைவான பொருளுக்காகத் திருடனின் கை துண்டிக்கப் பட்டதில்லை. இவை ஒவ்வொன்றும் விலை மதிப்புடையவை ஆகும்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் அப்துர் ரஹீம் பின் சுலைமான் (ரஹ்), அபூஉசாமா (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் "அன்று அப்பொருட்கள் (ஒவ்வொன்றும்) விலை மதிப்புடையவை ஆகும்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 29
3483. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மூன்று திர்ஹங்கள் விலை மதிப்புள்ள ஒரு தோல் கேடயத்தைத் திருடியவரின் கையைத் துண்டித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இருபத்தோரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
இவற்றில், சில அறிவிப்புகளில் "விலை" என்பதைக் குறிக்க "கீமத்” எனும் சொல்லும், வேறுசில அறிவிப்புகளில் "ஸமன்” எனும் சொல்லும் ஆளப்பட்டுள்ளன.
அத்தியாயம் : 29