3444. சஹ்ல் பின் அபீஹஸ்மா (ரலி) அவர்கள் தம் குலத்தாரில் பெரியவர்கள் சிலரிடமிருந்து (கேட்டுக்) கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்களும் முஹய்யிஸா (ரலி) அவர்களும் தங்களுக்கு ஏற்பட்ட கடுமையான வறுமையின் காரணத்தால் (பேரீச்சம் பழங்கள் பறிப்பதற்காக) கைபரை நோக்கிப் புறப்பட்டார்கள். பின்னர் முஹய்யிஸா (ரலி) அவர்கள் வந்து தெரிவித்தார்கள்: அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டு ஒரு "நீர் நிலையில்" அல்லது "குழியில்" கிடந்தார். பிறகு யூதர்களிடம் சென்று, "அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள்தாம் அவரைக் கொலை செய்தீர்கள்" என்று நான் கூறினேன். யூதர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் கொல்லவில்லை" என்று கூறினர்.
பிறகு முஹய்யிஸா (ரலி) அவர்கள் தம் குலத்தாரை நோக்கி வந்து அவர்களிடமும் அதைப் பற்றித் தெரிவித்தார்கள். பின்னர் அவரும் அவரைவிட வயதில் மூத்தவரான அவருடைய சகோதரர் ஹுவய்யிஸா (ரலி) அவர்களும் மற்றும் அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் (ரலி) அவர்களும் (நபியவர்களிடம்) வந்தார்கள். அப்போது கைபரில் அப்துல்லாஹ்வுடன் இருந்த முஹய்யிஸா (ரலி) அவர்கள் (அவர்கள் இருவரையும் முந்திக் கொண்டு) பேச ஆரம்பித்தார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஹய்யிஸா (ரலி) அவர்களிடம், "வயதில் மூத்தவரை (முதலில்) பேசவிடு; வயதில் மூத்தவரை (முதலில்) பேசவிடு" என்று கூறினார்கள். எனவே, (முதலில்) ஹுவய்யிஸா (ரலி) அவர்கள் பேசினார்கள். பிறகு முஹய்யிஸா பேசினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(நீங்கள் ஐம்பது பேர் சத்தியம் செய்வதன் மூலம் யூதர்களே கொலை செய்தார்கள் என்பது நிரூபணமானால்,) ஒன்று அவர்கள் (கொல்லப்பட்ட) உங்கள் நண்பருக்கான உயிரீட்டுத் தொகையை வழங்கட்டும்! அல்லது (நம்முடன் நடந்த சமாதான உடன்படிக்கையை முறித்துக்கொண்டு) அவர்கள் போர்ப் பிரகடனம் செய்யட்டும்!" என்று கூறினார்கள்.
பிறகு இது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யூதர்களுக்குக் கடிதம் எழுதினார்கள். அதற்கு யூதர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் அவரைக் கொலை செய்யவில்லை" எனப் பதில் எழுதினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுவய்யிஸா (ரலி), முஹய்யிஸா (ரலி), அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் (ரலி) அகியோரிடம், "(அப்துல்லாஹ் பின் சஹ்ல் அவர்களை யூதர்கள்தாம் கொலை செய்தார்கள் என்று) சத்தியம் செய்து,நீங்கள் உங்கள் கொலையாளிக்கு (தண்டனையளித்து பழிவாங்கிக்கொள்ளும்) உரிமையை பெற்றுக்கொள்கிறீர்களா?"என்று கேட்டார்கள்.
அதற்கு அம்மூவரும் "இல்லை" என்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அப்படியானால் உங்கள் குற்றச்சாட்டுக்கு (மறுப்புத் தெரிவித்து) யூதர்கள் சத்தியம் செய்வர்" என்றார்கள். அதற்கு அவர்கள் மூவரும், "அவர்கள் முஸ்லிம்கள் இல்லையே (யூதர்கள் பொய் சத்தியம் செய்வதற்குக்கூட தயங்கமாட்டார்கள்)" என்று கூறினர்.
ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தாமே அப்துல்லாஹ் பின் சஹ்ல் அவர்களின் கொலைக்கான உயிரீட்டுத் தொகையை கொடுத்துவிட்டார்கள். அவருடைய குடும்பத்தாருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்களை அனுப்பினார்கள். அவை அவர்களது வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டன.
சஹ்ல் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
அந்த ஒட்டகங்களில் சிவப்பு ஒட்டகம் ஒன்று தனது காலால் என்னை உதைத்து விட்டது.
அத்தியாயம் : 28
3445. அன்சாரீ நபித்தோழர்களில் ஒருவர் கூறினார்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறியாமைக் காலத்தில் இருந்துவந்த "அல்கஸாமா" சத்திய முறையை நீடிக்கச் செய்தார்கள்.
இதை நபி (ஸல்) அவர்களின் துணைவியார் மைமூனா (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான சுலைமான் பின் யசார் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 28
3446. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அன்சாரிகளில் சிலர் "யூதர்கள் தங்களில் ஒருவரைக் கொலை செய்துவிட்டதாக" குற்றம் சாட்டியபோது இவ்வாறே (சத்தியம் செய்யுமாறு) தீர்ப்பளித்தார்கள்" எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 28
பாடம் : 2 வன்முறையாளர்களுக்கும் மதம் மாறியோருக்கும் உரிய (தண்டனைச்) சட்டம்.
3447. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"உரைனா" குலத்தைச் சேர்ந்த சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மதீனாவுக்கு வந்(து தங்கியிருந்)தபோது, அவர்களுக்கு மதீனாவின் தட்பவெப்ப நிலை ஒத்துக் கொள்ளவில்லை. எனவே, அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் விரும்பினால் தர்ம ஒட்டகங்களிடம் சென்று, அவற்றின் பாலையும் சிறுநீரையும் அருந்தி (நிவாரணமடைந்து) கொள்ளுங்கள்" என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் செய்து குணமடைந்தனர். பிறகு (நபியவர்களின்) ஒட்டக மேய்ப்பாளர்களைத் தாக்கிக் கொலை செய்தனர்; இஸ்லாத்திலிருந்து வெளியேறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அந்த ஒட்டக மந்தையை ஓட்டிச் சென்றுவிட்டனர்.
இச்செய்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, உடனே அவர்களைப் பின்தொடர்ந்து (அவர்களைப் பிடித்துவர) ஆட்களை அனுப்பினார்கள். அவர்கள் பிடித்துக் கொண்டுவரப்பட்டதும் (பல கொடுஞ்செயல்கள் புரிந்த) அவர்களது (இடக்) கையையும் (வலக்) காலையும் துண்டித்தார்கள்; அவர்களது கண்களில் சூடிட்டார்கள்; பிறகு சாகும்வரை அவர்களை "ஹர்ரா"ப் பகுதியில் போட்டுவிட்டார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 28
3448. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"உக்ல்" குலத்தைச் சேர்ந்த எட்டுப்பேர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாக உறுதிமொழி அளித்(து மதீனாவில் தங்கியிருந்)தனர். அவர்களுக்கு மதீனாவின் தட்ப வெப்பநிலை ஒத்துக்கொள்ளாமல் அவர்களது உடல் நோய் கண்டது. எனவே, அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அதைப்பற்றி முறையிட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நம் ஒட்டக மேய்ப்பருடன் ஒட்டகங்களிருக்கும் இடத்திற்குச் சென்று, அவற்றின் பாலையும் சிறுநீரையும் பயன்படுத்தி (நிவாரணம் பெற்று)க் கொள்கிறீர்களா?" என்று கேட்டார்கள்.
அதற்கு அவர்கள் "சரி" என்று கூறி, புறப்பட்டுச் சென்று ஒட்டகங்களின் பாலையும் சிறுநீரையும் அருந்தி நிவாரணம் பெற்றனர். பிறகு அந்த ஒட்டக மேய்ப்பரைக் கொலை செய்துவிட்டு, ஒட்டகங்களை ஓட்டிச் சென்று விட்டனர்.
இவ்விஷயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, உடனே அவர்களைப் பின்தொடர்ந்து ஆட்களை அனுப்பினார்கள். அவர்கள் பிடிக்கப்பட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டனர். அப்போது அவர்களின் கை கால்களைத் துண்டித்து, அவர்களின் கண்களில் சூடிடுமாறு நபியவர்கள் உத்தரவிட்டார்கள். பிறகு அவர்கள் சாகும்வரை ("ஹர்ரா"ப் பகுதியில்) வெயிலில் போடப்பட்டனர்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் முஹம்மத் பின் அஸ்ஸப்பாஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "கால்நடைகளை அவர்கள் ஓட்டிச் சென்று விட்டனர்; அவர்களின் கண்களுக்குச் சூடிடப்பட்டது"என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 28
3449. மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "உக்ல் மற்றும் உரைனா குலத்தைச் சேர்ந்த சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தனர். அவர்களுக்கு மதீனாவின் தட்பவெப்ப நிலை ஒத்துக் கொள்ளவில்லை. (அவர்கள் உடல் நலிவுற்றனர்.) எனவே,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பால் ஒட்டகங்களிடம் சென்று, அவற்றின் பாலையும் சிறுநீரையும் அருந்துமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
இந்த அறிவிப்பில் "அவர்களின் கண்களுக்குச் சூடு போடப்பட்டு, அவர்கள் "ஹர்ரா"ப் பகுதியில் போடப்பட்டனர். அவர்கள் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டும் வழங்கப்படவில்லை" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 28
3450. அபூகிலாபா அப்துல்லாஹ் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) நான் (கலீஃபா) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களுக்குப் பின்னால் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள் மக்களிடம், "அல்கஸாமா சத்தியம் குறித்து என்ன கூறுகிறீர்கள்?" என்று கேட்டார்கள். அப்போது அன்பஸா பின் சயீத் (ரஹ்) அவர்கள், "அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் நம்மிடம் இன்னின்னவாறு கூறினார்கள்" என்றார்கள். நான், என்னிடமும் அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் என்று கூறிவிட்டு "உரைனா" குலத்தார் பற்றிய ஹதீஸை (மேற்கண்ட ஹதீஸ்களில் உள்ளதைப் போன்று) அறிவித்தேன்.
நான் அந்த ஹதீஸை அறிவித்து முடித்ததும் அன்பஸா (ரஹ்) அவர்கள், "அல்லாஹ் தூயவன்!" என (வியப்புடன்) கூறினார்கள். நான், "அன்பஸா அவர்களே! என்மீது சந்தேகப் படுகிறீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "இல்லை; இவ்வாறுதான் எம்மிடமும் அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்" என்று கூறிவிட்டு, "சிரியாவாசிகளே! "இவர்" (அபூ கிலாபா) அல்லது "இவரைப் போன்றவர்" உங்களிடையே இருக்கும்வரை நீங்கள் நன்மையில் நீடிப்பீர்கள்"என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "உக்ல் குலத்தாரில் எட்டுப்பேர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள்" என்று இடம்பெற்றுள்ளது. இந்த அறிவிப்பில் "அவர்க(ளது காயத்திலிருந்து வழிந்த இரத்தத்தை நிறுத்துவதற்காகக் கை, கால் நரம்புக)ளுக்குச் சூடிடவில்லை" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 28
3451. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"உரைனா" குலத்தைச் சேர்ந்த சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தை ஏற்று உறுதிமொழியும் அளித்தனர். அப்போது மதீனாவில் நுரையீரல் சவ்வு அழற்சி நோய் ஏற்பட்டிருந்தது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸ்களில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
இந்த அறிவிப்பில், "அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் சுமார் இருபது அன்சாரீ இளைஞர்கள் இருந்தனர். அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உரைனா" கூட்டத்தாரைப் பிடித்து வர அனுப்பினார்கள். அவர்களுடன் காலடித் தடங்களை அறியும் தடய நிபுணர் ஒருவரையும் அனுப்பினார்கள்" என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஹம்மாம் பின் யஹ்யா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "உரைனா குலத்தாரில் ஒரு குழுவினர்" என்று இடம்பெற்றுள்ளது. சயீத் பின் அபீஅரூபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "உக்ல் மற்றும் உரைனா குலத்தாரில் சிலர்"என்று காணப்படுகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸ்களில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 28
3452. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அந்த ஒட்டக மேய்ப்பர்களின் கண்களில் அவர்கள் சூடிட்டதால்தான் அவர்களுடைய கண்களில் நபி (ஸல்) அவர்கள் சூடிடச் செய்தார்கள்.
அத்தியாயம் : 28
பாடம் : 3 கல் போன்ற கனரகப் பொருட்களாலும் கூராயுதங்களாலும் கொலை செய்தால், பழிக்குப்பழி உண்டு என்பதற்கான ஆதாரமும் பெண்ணைக் கொன்றதற்காக ஆண் கொல்லப்படுவதும்.
3453. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
யூதனொருவன் ஒரு சிறுமியை, அவளது வெள்ளி நகைக்காகக் கல் எறிந்து கொன்று விட்டான். உயிர் ஊசலாடிக்கொண்டிருந்த அந்தச் சிறுமி நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டாள். அவளிடம் நபி (ஸல்) அவர்கள், "இன்ன மனிதரா உன்னைத் தாக்கினார்?" என்று கேட்டார்கள். அவள் "இல்லை" என்று தலையால் சைகை செய்தாள். மீண்டும் அவர்கள், "இன்ன மனிதரா உன்னைத் தாக்கினார்?" என்று கேட்டார்கள். அவள் அப்போதும் "இல்லை" என்று தலையாட்டினாள்.
தொடர்ந்து மூன்றாவது முறையாக அவளிடம், "இன்ன மனிதரா உன்னைத் தாக்கினார்?" என்று (ஒரு மனிதரது பெயரைக் குறிப்பிட்டுக்) கேட்டபோது அவள் "ஆம்" என்று தலையால் சைகை செய்தாள். ஆகவே, அந்த யூதனை (அழைத்து வந்து விசாரித்து, அவன் ஒப்புக்கொண்டதும்) இரு கற்களுக்கிடையே வைத்து அவ(னது தலையி)னை (நசுக்கி)க் கொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் அப்துல்லாஹ் பின் இத்ரீஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "இரு கற்களுக்கிடையே அவனது தலையை வைத்து நசுக்கிக் கொல்லுமாறு உத்தரவிட்டார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 28
3454. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
யூதர்களில் ஒருவன் அன்சாரிகளில் ஒரு சிறுமியை, அவள் அணிந்திருந்த நகைக்காகக் கொலை செய்து, அவளை ஒரு பாழடைந்த கிணற்றில் போட்டு, அவளது தலையைக் கல்லால் நசுக்கினான். அவன் பிடிக்கப்பட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டான். சாகும்வரை அவனைக் கல்லால் அடிக்குமாறு (மரண தண்டனை விதித்து) அவர்கள் உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவன் கல்லால் எறிந்து கொல்லப்பட்டான்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 28
3455. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு சிறுமி இரு கற்களுக்கிடையே தலை நசுக்கப்பட்ட நிலையில் கிடந்தாள். மக்கள் அவளிடம், "உன்னை இப்படிச் செய்தவர் யார்? இன்ன மனிதனா? இன்ன மனிதனா?" என்று கேட்டார்கள். யூதன் ஒருவனின் பெயரை அவர்கள் கூறியதும், அச்சிறுமி ("ஆம் அவன்தான்" என்று) தலையால் சைகை செய்தாள். அந்த யூதன் பிடிக்கப்பட்டு (விசாரிக்கப்பட்டதில்), குற்றத்தை ஒப்புக்கொண்டான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவனது தலையில் கல்லைப் போட்டு நசுக்குமாறு உத்தரவிட்டார்கள்.
அத்தியாயம் : 28
பாடம் : 4 ஒரு மனிதன், தனது உயிரையோ உறுப்பையோ தாக்க வந்தவனிடமிருந்து தற்காத்துக்கொள்வதற்காக அவனைப் பிடித்துத் தள்ளியதில் அவனது உயிருக்கோ உறுப்புக்கோ சேதம் ஏற்பட்டால், (பிடித்துத் தள்ளிய) அந்த மனிதன் அதற்குப் பொறுப்பாளி அல்லன்.
3456. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
யஅலா பின் முன்யா (அல்லது யஅலா பின் உமய்யா - ரலி) அவர்களுக்கும் மற்றொரு மனிதருக்குமிடையே சண்டை ஏற்பட்டது. அப்போது அவர்களில் ஒருவர் இன்னொருவரைக் கடித்தார். அப்போது (கடிபட்டவர்) தமது கையை அவரது வாயிலிருந்து இழுத்தார். இதனால் கடித்தவரின் முன்பல் ஒன்று விழுந்துவிட்டது. இதையொட்டி அவர்கள் இருவரும் நபி (ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டுவந்தனர்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் "உங்களில் ஒருவர் தம் சகோதரனின் கையைக் கடா ஒட்டகம் கடிப்பதைப் போன்று கடிப்பாரா? (அவர் கடித்துக் கொண்டிருக்கும்வரை கடிபட்டவன் தனது கையை அப்படியே வைத்துக்கொண்டிருப்பானா? "பல்லிழந்த) இவருக்கு இழப்பீட்டுத் தொகை கிடையாது" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் முஹம்மத் பின் அல்முஸன்னா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "கடித்தவரின் முன்பற்கள் இரண்டு விழுந்துவிட்டன" என்று இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள் வாயிலாக இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 28
3457. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் இன்னொரு மனிதரின் முன்கையைக் கடித்தார். அந்த மனிதர் தமது கையை இழுக்க, (கடித்த) அவரது முன்பல் ஒன்று விழுந்துவிட்டது. இவ்வழக்கு நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்ட போது, அந்த வழக்கை தள்ளுபடி செய்து விட்டார்கள். "நீ அவரது இறைச்சியை உண்ணப் பார்த்தாய் (அதனால் அவர் கையை இழுத்தார். எனவே, உனது பல்லுக்கு இழப்பீடு இல்லை)" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 28
3458. ஸஃப்வான் பின் யஅலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
யஅலா பின் உமய்யா (ரலி) அவர்களு டைய ஊழியர் ஒருவரின் முன்கையை ஒரு மனிதர் கடித்துவிட்டார். ஊழியர் தனது கையை இழுக்க, (கடித்த) அந்த மனிதரது முன்பல் ஒன்று (கழன்று) விழுந்துவிட்டது. இவ்வழக்கு நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டபோது, அவ்வழக்கை நபியவர்கள் தள்ளுபடி செய்தார்கள். மேலும், "கடா ஒட்டகம் கடிப்பதைப் போன்று அவரது கரத்தை நீ கடிக்கப் பார்த்தாய். (எனவே, உனக்கு இழப்பீடு இல்லை)" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 28
3459. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் மற்றொரு மனிதரின் கையைக் கடித்தார். அவர் தமது கையை இழுக்க, (கடித்த) அவருடைய "முன்பல் ஒன்று" அல்லது "முன்பற்கள்" விழுந்துவிட்டன. அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உதவியை நாடினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என்னை என்ன செய்யச் சொல்கிறாய்? கடா ஒட்டகம் கடிப்பதைப் போன்று நீ கடித்துக் கொண்டிருக்கும்வரை அவர் தமது கையை உனது வாய்க்குள் வைத்திருக்க வேண்டும் என உத்தரவிடச் சொல்கிறாயா? நீ உனது கையை அவர் கடித்து முடிக்கும்வரை அவரது வாய்க்குள் விட்டுவை. பிறகு இழுத்துப் பார் (தெரியும்)" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 28
3460. யஅலா பின் முன்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அவர் மற்றொரு மனிதரின் கையைக் கடித்தபோது, (கடிபட்ட) அவர் தமது கையை இழுக்க, அவரது (அதாவது கடித்தவரது) முன்பற்கள் இரண்டு விழுந்து விட்டன. அப்போது நபி (ஸல்) அவர்கள் (இதற்கு இழப்பீடு தரத் தேவையில்லை என) அவரது வழக்கைத் தள்ளுபடி செய்தார்கள். மேலும் "நீ அவரை, கடா ஒட்டகம் கடிப்பதைப் போன்று கடிக்கப் பார்த்தாய்" என்றும் கூறினார்கள்.
அத்தியாயம் : 28
3461. யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களுடன் தபூக் போரில் கலந்துகொண்டேன். - என்னைப் பொறுத்தவரை என் செயல்களிலேயே அந்த அறப்போர்தான் என்னிடம் மிகவும் வலுவானதாகும் -என்னிடம் கூலித் தொழிலாளி ஒருவர் இருந்தார். அவர் ஒரு மனிதருடன் சண்டையிட்டார். அவ்விருவரில் ஒருவர் மற்றொருவரின் கையைக் கடித்துவிட்டார்.
(யஅலா (ரலி) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை அறிவிக்கும் அவர்களுடைய புதல்வர் ஸஃப்வான் (ரஹ்) அவர்கள் "கடித்தவர் யார் என்று என்னிடம் அறிவித்தார்கள் (நான்தான் மறந்துவிட்டேன்)" என்று அறிவிப்பாளர் அதாஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.)
கடிபட்டவர் கடித்தவரின் வாயிலிருந்து தமது கையை இழுத்தார். அப்போது அவருடைய முன்பற்களில் இரண்டில் ஒன்று கழன்று (விழுந்து)விட்டது. பிறகு இருவரும் நபி (ஸல்) அவர்களிடம் (வழக்கைக் கொண்டு) வந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரது முன்பல்லுக்கு இழப்பீடு தரத் தேவையில்லை என்று கூறிவிட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 28
பாடம் : 5 பற்கள் போன்றவற்றில் பழிக்குப்பழி உண்டு என்பதற்கான ஆதாரம்.
3462. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ருபய்யிஉ (ரலி) அவர்களின் சகோதரி உம்மு ஹாரிஸா (ரலி) அவர்கள் ஒரு மனிதரை(த் தாக்கி)க் காயப்படுத்திவிட்டார்கள். இதையொட்டி அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டுவந்தனர். (வழக்கை விசாரித்த) நபி (ஸல்) அவர்கள், "பழிக்குப்பழி (வாங்கிக் கொள்க) பழிக்குப்பழி (வாங்கிக்கொள்க)" என்று கூறினார்கள்.
அப்போது உம்முர் ரபீஉ (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரே! இன்ன பெண் பழி வாங்கப்படுவாரா, அல்லாஹ்வின் மீதாணையாக! அவள் பழிவாங்கப்படக் கூடாது" என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அல்லாஹ் தூயவன். உம்முர் ரபீஉவே! (காயங்களில்) பழிவாங்குதல் அல்லாஹ்வின் வேத(ச் சட்ட)மாகும்" என்று சொன்னார்கள். அதற்கு உம்முர் ரபீஉ (ரலி) அவர்கள், "அப்படி நடக்காது. அல்லாஹ்வின் மீதாணையாக! ஒருபோதும் அவள் பழிவாங்கப்படலாகாது" என்று கூறினார்கள். அப்படியே பேச்சு தொடர்ந்து, இறுதியில் (பாதிக்கப்பட்டவர்கள் மன்னித்து) இழப்பீட்டுத் தொகையை ஏற்றுக்கொண்டனர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு (எதையேனும் கூறி) விடுவார்களாயின், அதை அல்லாஹ் உண்மையாக்கிவிடுகின்றான்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 28
பாடம் : 6 ஒரு முஸ்லிமுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதற்கான காரணங்கள்.
3463. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. நான் அல்லாஹ்வின் தூதராவேன்" என உறுதிமொழி கூறிய முஸ்லிமான எந்த மனிதரையும் மூன்று காரணங்களில் ஒன்றை முன்னிட்டே தவிர வேறெதற்காகவும் கொலை செய்ய (மரண தண்டனையளிக்க) அனுமதி இல்லை.
அவை: 1. திருமணமானவன் விபசாரம் செய்வது. 2. ஒரு மனிதரைக் கொலை செய்ததற்குப் பதிலாகக் கொலை செய்வது. 3. "ஜமாஅத்" எனும் சமூகக் கூட்டமைப்பை விட்டு வெளியேறி, தமது மார்க்கத்தைக் கைவிட்ட (தேசதுரோகமும் மார்க்க விரோதமும் செய்த)வன்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 28