2770. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
மஹ்ரின்றி பெண் கொடுத்துப் பெண் எடுக்கும் (ஷிஃகார் முறைத்) திருமணத்திற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில், அப்துல்லாஹ் பின் நுமைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "ஒருவர் மற்றொருவரிடம் நான் என் மகளை உனக்குத் திருமணம் செய்து தருகிறேன்; நீ உன் மகளை எனக்குத் திருமணம் செய்து தர வேண்டும்" என்றோ, அல்லது "நான் என் சகோதரியை உனக்குத் திருமணம் செய்து தருகிறேன்; நீ உன் சகோதரியை எனக்குத் திருமணம் செய்து தர வேண்டும்" என்றோ (முன் நிபந்தனையிட்டுக்) கூறுவதே "ஷிஃகார்" ஆகும்" என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் அப்துல்லாஹ் பின் நுமைர் (ரஹ்) அவர்களது கூடுதலான தகவல் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 16
2771. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மஹ்ரின்றி பெண் கொடுத்துப்பெண் எடுக்கும் (ஷிஃகார் முறைத்) திருமணத்திற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
பாடம் : 8 திருமண (ஒப்பந்த)த்தின்(போது பேசப்பட்ட) நிபந்தனைகளை நிறைவேற்றல்.
2772. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிறைவேற்றப்பட வேண்டிய நிபந்தனைகளில் முதன்மையானது யாதெனில், உங்கள் மனைவியரை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களாக ஆக்கிக்கொள்வதற்காக நீங்கள் (அவர்களிடமிருந்து) ஏற்றுக்கொண்ட நிபந்தனையே ஆகும்.
இதை உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
பாடம் : 9 கன்னி கழிந்த பெண்ணின் சம்மதத்தைத் திருமணத்தின்போது வாய் மொழியாகப் பெற வேண்டும்; கன்னிப் பெண்ணின் மௌனம் சம்மதமே.
2773. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கன்னி கழிந்த பெண்ணை, அவளது (வெளிப்படையான) உத்தரவு பெறப்படாமல் மண முடித்துக்கொடுக்க வேண்டாம். கன்னிப் பெண்ணிடம் (ஏதேனும் ஒரு முறையில்) அனுமதி பெறாமல் மணமுடித்துக்கொடுக்க வேண்டாம்" என்று சொன்னார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! கன்னிப் பெண்ணின் அனுமதி(யை) எப்படி(ப் பெறுவது)? (அவள் வெட்கப்படக்கூடுமே?)" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவள் மௌனமாக இருப்பதே (அவளது சம்மதமாகும்)" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஆறு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஹிஷாம் பின் அபீஅப்தில் லாஹ் (ரஹ்), ஷைபான் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்), முஆவியா பின் சல்லாம் (ரஹ்) ஆகியோரின் வாசகங்கள் ஒன்று போல அமைந்துள்ளன.
அத்தியாயம் : 16
2774. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் "ஒரு கன்னிப் பெண்ணை அவளுடைய வீட்டார் மணமுடித்துக்கொடுக்கும் போது அவளிடம் அனுமதி பெற வேண்டுமா, இல்லையா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம்; அவளிடம் அனுமதி பெற வேண்டும்" என்றார்கள். நான், "அவ்வாறாயின், அவள் வெட்கப்படுவாளே?" என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவள் மௌனமாக இருந்தால், அதுவே அவளது சம்மதம்தான்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
2775. யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர் களிடம், "விதவை, தன் காப்பாளரைவிடத் தனது விஷயத்தில் (முடிவு செய்ய) மிகவும் தகுதி வாய்ந்தவள். கன்னிப் பெண்ணிடமோ, அவள் விஷயத்தில் அனுமதி பெறப்பட வேண்டும். அவளது மௌனமே சம்மதமாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து நாஃபிஉ பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்க, அவரிடமிருந்து அப்துல்லாஹ் பின் அல்ஃபள்ல் (ரஹ்) அவர்கள் உங்களுக்கு அறிவித்தார்களா என்று கேட்டேன் அதற்கு அவர்கள் "ஆம்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
2776. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கன்னி கழிந்த பெண், தன் காப்பாளரைவிடத் தனது விஷயத்தில் (முடிவு செய்ய) மிகவும் தகுதி வாய்ந்தவள். கன்னிப் பெண்ணிடம் அனுமதி பெறப்பட வேண்டும். அவளது மௌனம் அவளது அனுமதி ஆகும்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 16
2777. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "கன்னி கழிந்த பெண், தன் காப்பாளரைவிடத் தனது விஷயத்தில் (முடிவு செய்ய) மிகவும் தகுதி வாய்ந்தவள். கன்னிப் பெண்ணிடம் அவளுடைய தந்தை அவள் தொடர்பாக அனுமதி பெற வேண்டும். அவளது மௌனம் அவளது அனுமதி ஆகும்" என்று இடம் பெற்றுள்ளது. அறிவிப்பாளர் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் சில சந்தர்ப்பங்களில் "அவளது மௌனம் அவளது இசைவாகும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 16
பாடம் : 10 இளவயதுக் கன்னிக்கு அவளுடைய தந்தை மணமுடித்துவைத்தல்.
2778. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் ஆறு வயதுடையவளாக இருந்த போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை மணந்துகொண்டார்கள். நான் (பருவமடைந்து) ஒன்பது வயதுடையவளாக இருந்த போது, அவர்கள் என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள்.
அதாவது நாங்கள் (நாடு துறந்து) மதீனாவிற்கு வந்தபோது, எனக்குக் காய்ச்சல் ஏற்பட்டு (என் தலை முடி உதிர்ந்து)விட்டது. பின்னர் என் தலைமுடி பிடரிவரை வளர்ந்தது. நான் என் தோழியர் சிலருடன் ஏற்றப் பலகையில் விளையாடிக்கொண்டிருந்தபோது, (என் தாயார்) உம்மு ரூமான் (ரலி) அவர்கள் என்னிடம் வந்து என்னைச் சப்தமிட்டு அழைத்தார். நான் அவரிடம் சென்றேன். அவர் என்னை எதற்காக அழைத்தார் என்று எனக்குத் தெரிய வில்லை. அவர் எனது கையைப் பிடித்துக் கொண்டுவந்து, கதவுக்கருகில் என்னை நிறுத்தினார். (அவர் வேகமாக இழுத்துவந்ததால் எனக்கு மூச்சு வாங்கியது.) ஆஹ்... ஆஹ்... என்றேன். பின்னர் மூச்சிறைப்பு நின்றதும் என்னை (எனது) அறைக்குள் அனுப்பினார். அங்கு சில அன்சாரிப் பெண்கள் இருந்தனர். அவர்கள், "நன்மையுடனும் வளத்துடனும் வருக! (இறைவனின்) நற்பேறு உண்டாகட்டும்" என்று (வாழ்த்துக்) கூறினர். என் தாயார் என்னை அப்பெண்களிடம் ஒப்படைக்க, அவர்கள் எனது தலையைக் கழுவி என்னை அலங்கரித்துவிட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முற்பகல் நேரத்தில் திடீரென என்னிடம் வந்தார்கள். அவர்களிடம் அப்பெண்கள் என்னை ஒப்படைத்தனர்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
2779. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் ஆறு வயதுடையவளாக இருந்தபோது, நபி (ஸல்) அவர்கள் என்னை மணந்து கொண்டார்கள். நான் (பருவமடைந்து) ஒன்பது வயதுடையவளாக இருந்தபோது, என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
2780. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் ஏழு வயதுடையவளாக இருந்த போது, நபி (ஸல்) அவர்கள் என்னை மணந்து கொண்டார்கள். நான் (பருவமடைந்து) ஒன்பது வயதுடையவளாக இருந்தபோது, அவர்களிடம் அனுப்பிவைக்கப்பட்டேன். அப்போது விளையாட்டுப் பொம்மைகள் என்னுடன் இருந்தன. நான் பதினெட்டு வயதுடையவளாக இருந்தபோது, நபி (ஸல்) அவர்கள் என்னை விட்டு இறந்தார்கள்.
அத்தியாயம் : 16
2781. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் ஏழு வயதுடையவளாக இருந்தபோது, நபி (ஸல்) அவர்கள் என்னை மணந்துகொண்டார்கள். நான் (பருவமடைந்து) ஒன்பது வயதுடையவளாக இருந்தபோது, அவர்கள் என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். நான் பதினெட்டு வயதுடையவளாக இருந்தபோது, நபி (ஸல்) அவர்கள் என்னைவிட்டு இறந்தார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
பாடம் : 11 ஷவ்வால் மாதத்தில் மணமுடிப்பதும் மணமுடித்துவைப்பதும் தாம்பத்திய உறவைத் தொடங்குவதும் விரும்பத்தக்கவையாகும்.
2782. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை ஷவ்வால் மாதத்தில் மணந்து கொண்டார்கள்; ஷவ்வால் மாதத்திலேயே என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியரில் அவர்களுடன் என்னைவிட அதிக நெருக்கத்திற்குரியவர் யார்?
இதன் அறிவிப்பாளரான உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஆயிஷா (ரலி) அவர்கள் தங்கள் (குடும்பப்) பெண்களை ஷவ்வால் மாதம் (மணமுடித்து) அனுப்பிவைப்பதையே விரும்புவார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் ஆயிஷா (ரலி) அவர்களின் செயல் குறித்த (இறுதிக்) குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 16
பாடம் : 12 ஒருவர் தாம் மணமுடிக்க விரும்பும் பெண்ணின் முகத்தையும் இரு முன் கைகளையும் பார்ப்பது விரும்பத்தக்கதாகும்.
2783. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்தேன். அப்போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, தாம் அன்சாரிகளில் ஒரு பெண்ணை மணமுடிக்கப்போவதாகத் தெரிவித்தார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் அந்தப் பெண்ணைப் பார்த்துவிட்டீரா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர் "இல்லை" என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவ்வாறாயின், நீர் சென்று அவளைப் பார்த்துக்கொள்ளும்! ஏனெனில், அன்சாரிகளின் கண்களில் சிறிது (குறை) உண்டு" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 16
2784. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "நான் அன்சாரிகளில் ஒரு பெண்ணை மணமுடிக்கப்போகிறேன்" என்றார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், "நீர் அந்தப் பெண்ணைப் பார்த்துவிட்டீரா? ஏனெனில், அன்சாரிகளின் கண்களில் சிறிது (குறை)உள்ளது"என்றார்கள். அதற்கு அந்த மனிதர், "அந்தப் பெண்ணைப் பார்த்து விட்டேன்" என்றார். "எவ்வளவு மணக்கொடையில் (மஹ்ர்) அவளை மணக்கப்போகிறீர்?" என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், "நான்கு ஊக்கியாக்கள்" என்றார். நபி (ஸல்) அவர்கள் "(ஓ!) நான்கு ஊக்கியாக்களா? வெள்ளியை நீங்கள் இந்த மலைப்பகுதியிலிருந்து குடைந்தெடுக்கிறீர்கள் போலும். உமக்கு (உதவித் தொகையாக)க் கொடுப்பதற்கு எம்மிடம் எதுவுமில்லை. ஆயினும், நாம் உம்மை ஒரு படைப்பிரிவுக்கு அனுப்புவோம். அப்போது, நீர் போர்ச் செல்வத்திலிருந்து அதைப் பெற்றுக்கொள்ளக்கூடும்" என்றார்கள்.
அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் "பனூ அப்ஸ்" குலத்தாரை நோக்கி ஒரு படைப்பிரிவை அனுப்பியபோது அவர்களுடன் அந்த மனிதரையும் அனுப்பிவைத்தார்கள்.
அத்தியாயம் : 16
பாடம் : 13 மணக்கொடையும், அது குர்ஆனைக் கற்பித்தலாகவோ இரும்பு மோதிரமாகவோ அளவில் குறைந்ததாகவோ கூடியதாகவோ இருக்கலாம் என்பதும்; சக்திக்கு மீறாதிருப்பின் ஐநூறு திர்ஹங்கள் கொடுப்பது விரும்பத்தக்கதாகும் என்பதும்.
2785. சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்க (மஹ்ரின்றி என்னைத் தாங்கள் மணந்து கொள்ளுமாறு கோரி) வந்துள்ளேன்" என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரை நோக்கிப் பார்வையை உயர்த்தி நேராகப் பார்த்துவிட்டுப் பார்வையைத் தாழ்த்திக்கொண்டார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தலையைத் தொங்கவிட்டுக்கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது விஷயத்தில் எந்த முடிவுக்கும் வரவில்லை என்பதைக் கண்ட அந்தப் பெண்மணி (அந்த இடத்திலேயே) அமர்ந்துகொண்டார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்கு அவர் தேவையில்லையென்றால், அவரை எனக்கு மணமுடித்துவையுங்கள்" என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(மணக்கொடையாகச் செலுத்த) உம்மிடம் ஏதேனும் பொருள் உண்டா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடம் ஏதுமில்லை, அல்லாஹ்வின் தூதரே!" என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உம் குடும்பத்தாரிடம் சென்று ஏதாவது கிடைக்குமா என்று பார்" என்றார்கள். அவர் போய்ப் பார்த்து விட்டுத் திரும்பிவந்து, "அல்லாஹ்வின் மீதாணையாக! ஏதும் கிடைக்கவில்லை, அல்லாஹ்வின் தூதரே!" என்று சொன்னார். "இரும்பாலான ஒரு மோதிரமாவது கிடைக்குமா என்று பார்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்லியனுப்பினார்கள். அவர் (மீண்டும்) சென்றுவிட்டுத் திரும்பிவந்து, "அல்லாஹ்வின் மீதாணையாக! இரும்பு மோதிரம்கூடக் கிடைக்கவில்லை, அல்லாஹ்வின் தூதரே! ஆனால், இதோ இந்த எனது வேட்டி உள்ளது; அதில் பாதி அவளுக்கு" என்று சொன்னார்.
-அறிவிப்பாளர் சஹ்ல் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அவரிடம் ஒரு மேல் துண்டு கூட இல்லை. (அதனால்தான் தனது வேட்டியில் பாதியை அவளுக்குத் தருவதாகச் சொன்னார்.)-
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உமது (ஒரு) வேட்டியை வைத்துக் கொண்டு நீர் என்ன செய்வீர்? இந்த வேட்டியை நீர் அணிந்துகொண்டால், அவள்மீது ஏதும் இருக்காது. அவள் அணிந்துகொண்டால், உம்மீது ஏதும் இருக்காது" என்றார்கள்,
பிறகு அந்த மனிதர் நீண்ட நேரம் அங்கேயே அமர்ந்துவிட்டு எழுந்தார். அவர் திரும்பிச்செல்வதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்தபோது, அவரை அழைத்து வரும்படி உத்தரவிட்டார்கள். அவர் அழைக்கப்பட்டார். அவர் வந்தபோது, "உம்முடன் குர்ஆனில் என்ன (அத்தியாயம் மனப்பாடமாக) உள்ளது?" என்று கேட்டார்கள். அவர், "இன்ன அத்தியாயம், இன்ன அத்தியாயம் என்னிடம் உள்ளது" என்று எண்ணி எண்ணிச் சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவற்றை நீர் மனப்பாடமாக ஓதுவீரா?" என்று கேட்டார்கள். அவர், "ஆம் (ஓதுவேன்)" என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உம்முடன் உள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இப்பெண் உமக்குரியவளாக ஆக்கப்பட்டுவிட்டாள்; நீர் செல்லலாம்!" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
2786. மேற்கண்ட ஹதீஸ் சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் சில அறிவிப்பாளர்கள் வேறு சிலரைவிடக் கூடுதலாக அறிவித்துள்ளனர். ஆயினும், ஸாயிதா பின் குதாமா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "இப்பெண்ணை உமக்குத் திருமணம் முடித்துக் கொடுத்துவிட்டேன். நீர் சென்று அவளுக்குக் குர்ஆனைக் கற்றுக் கொடுப்பீராக!" என்று கூறினார்கள் என இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 16
2787. அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் ஆயிஷா (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியருக்குக்) கொடுத்த மணக்கொடை (மஹ்ர்) எவ்வளவு?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியருக்கு வழங்கிய மணக்கொடை, பன்னிரண்டு ஊக்கியாவும் ஒரு நஷ்ஷுமாகும்" என்று கூறிவிட்டு, "நஷ்ஷு என்றால் என்னவென்று தெரியுமா?" என்று கேட்டார்கள். நான் "இல்லை" என்றேன். அவர்கள், "அரை ஊக்கியாவாகும்; (ஆகமொத்தம்) அது ஐநூறு திர்ஹங்கள் ஆகும். இதுவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியருக்கு வழங்கிய மணக்கொடையாகும்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
2788. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் (ஆடையின்) மீது மஞ்சள் நிற(முள்ள வாசனைத் திரவிய)த்தின் அடையாளத்தைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், "இது என்ன?" என்று கேட்டார்கள். அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! ஒரு பேரீச்சங் கொட்டையின் எடையளவு தங்கத்தை (மணக்கொடையாக)க் கொடுத்து ஒரு பெண்ணை மணமுடித்துக்கொண்டேன்" என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், "பாரக்கல்லாஹு லக்க" (அல்லாஹ் உங்களுக்கு வளத்தை வழங்குவானாக) என்று (வாழ்த்துக்) கூறிவிட்டு, "ஓர் ஆட்டையாவது (அறுத்து) மணவிருந்து (வலீமா) அளியுங்கள்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
2789. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் ஒரு போரீச்சங்கொட்டையின் எடையளவு தங்கத்தை (மணக்கொடையாக)க் கொடுத்து (ஒரு பெண்ணை) மணமுடித்துக் கொண்டார்கள். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஓர் ஆட்டையாவது (அறுத்து) மணவிருந்து (வலீமா) அளியுங்கள்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 16