பாடம் : 5 இஹ்ராம் கட்டியிருப்பவர் திருமணம் செய்வதற்கு வந்துள்ள தடையும், அவர் பெண் கேட்பது வெறுக்கத்தக்கதாகும் என்பதும்.
2750. நுபைஹ் பின் வஹ்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உமர் பின் உபைதில்லாஹ் பின் மஅமர் (ரஹ்) அவர்கள் (தம்முடைய புதல்வர்) தல்ஹா பின் உமருக்கு ஷைபா பின் ஜுபைர் (ரஹ்) அவர்களின் மகளைத் திருமணம் செய்ய விரும்பினார். எனவே, (அவ்வாண்டு) ஹாஜிகளின் தலைவராயிருந்த அபான் பின் உஸ்மான் பின் அஃப்பான் (ரஹ்) அவர்களி டம் ஆளனுப்பி (அத்திருமணத்திற்கு) வருமாறு கூறினார்.
அப்போது அபான் (ரஹ்) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இஹ்ராம் கட்டியவர் (தாமும்) திருமணம் செய்யக்கூடாது. (பிறரால்) திருமணம் செய்து வைக்கப்படவும் கூடாது. பெண் கேட்கவும் கூடாது" என்று கூறினார்கள் என (என் தந்தை) உஸ்மான் (ரலி) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்று கூறி (மறுத்து)விட்டார்கள்.
அத்தியாயம் : 16
2751. நுபைஹ் பின் வஹ்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உமர் பின் உபைதில்லாஹ் பின் மஅமர் (ரஹ்) அவர்கள், தம் மகனுக்கு ஷைபான் பின் (ஜுபைர் பின்) உஸ்மான் (ரஹ்) அவர்களின் மகளைப் பெண் கேட்டுக்கொண்டிருந்தார். எனவே, அப்போது ஹஜ் காலத்தில் இருந்த அபான் பின் உஸ்மான் (ரஹ்) அவர்களிடம் என்னை அனுப்பி (அத்திருமணத்திற்குச் சாட்சியாக இருந்து நடத்திவைக்க வருமாறு கோரி)னார்கள்.
அதற்கு அபான் (ரஹ்) அவர்கள், "அவரை நான் ஒரு (விவரமற்ற) கிராமவாசியாகவே கருதுகிறேன். நிச்சயமாக இஹ்ராம் கட்டியவர் (தாமும்) திருமணம் செய்யக் கூடாது. (பிறரால்) திருமணம் செய்து வைக்கப்படவும் கூடாது" என்று சொன்னார்கள். இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என (என் தந்தை) உஸ்மான் (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்தார்கள் என்றும் கூறி (மறுத்து)விட்டார்கள்.
அத்தியாயம் : 16
2752. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இஹ்ராம் கட்டியவர் (தாமும்) திருமணம் செய்யக் கூடாது. (பிறரால்) திருமணம் செய்து வைக்கப்படவும் கூடாது. பெண் கேட்கவும் கூடாது.
இதை உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
2753. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இஹ்ராம் கட்டியவர் மணமுடிக்கவும் கூடாது. பெண் கேட்கவும் கூடாது.
இதை உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
2754. நுபைஹ் பின் வஹ்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உமர் பின் உபைதில்லாஹ் பின் மஅமர் (ரஹ்) அவர்கள், ஒரு ஹஜ்ஜின்போது தம்முடைய புதல்வர் தல்ஹாவுக்கு ஷைபா பின் ஜுபைர் (ரஹ்) அவர்களின் புதல்வியைத் திருமணம் செய்ய விரும்பினார். அப்போது ஹாஜிகளின் தலைவராக அபான் பின் உஸ்மான் (ரஹ்) அவர்கள் இருந்தார்கள். எனவே, உமர் பின் உபைதில்லாஹ், "நான் (என் மகன்) தல்ஹா பின் உமருக்குத் திருமணம் செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறேன்" என்று கூறி அபான் (ரஹ்) அவர்களிடம் ஆளனுப்பினார்கள். அப்போது அபான் (ரஹ்) அவர்கள், "உம்மை நான் ஒரு முரட்டு இராக்கியராகவே கருதுகிறேன். "இஹ்ராம் கட்டியவர் மணமுடிக்கக் கூடாது" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என (என் தந்தை) உஸ்மான் (ரலி) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்று கூறி (மறுத்து)விட்டார்கள்.
அத்தியாயம் : 16
2755. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டிய நிலையில் மைமூனா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள். - இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில், முஹம்மத் பின் அப்தில்லாஹ் பின் நுமைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் பின்வருமாறு கூடுதலாக இடம்பெற்றுள்ளது:
இந்த ஹதீஸை நான் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம் அறிவித்தேன். அப்போது அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் மைமூனா (ரலி) அவர்களை இஹ்ராம் இல்லாத (ஹலால்) நிலையிலேயே திருமணம் செய்தார்கள்" என யஸீத் பின் அல் அஸம்மு (ரஹ்) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள் என்றார்கள்.
அத்தியாயம் : 16
2756. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மைமூனா (ரலி) அவர்களை இஹ்ராம் கட்டிய நிலையில் திருமணம் செய்தார்கள்.
அத்தியாயம் : 16
2757. மைமூனா பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஹ்ராம் இல்லாத (ஹலால்) நிலையிலேயே என்னைத் திருமணம் செய்தார்கள்.
இதன் அறிவிப்பாளரான யஸீத் பின் அல்அஸம்மு (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
மைமூனா (ரலி) அவர்கள் என் தாயின் சகோதரியும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் தாயின் சகோதரியும் ஆவார்கள்.
அத்தியாயம் : 16
பாடம் : 6 தம் சகோதர (இஸ்லாமிய)ன் கேட்டுக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணை மற்றவர் பெண் கேட்கலாகாது. ஒன்று முதலில் பெண் கேட்டவர் இவருக்கு அனுமதியளிக்கும் வரை, அல்லது அதைக் கைவிடும்வரை இவர் பொறுத்திருக்க வேண்டும்.
2758. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் வியாபாரம் செய்யும்போது, மற்றவர் (தலையிட்டு) வியாபாரம் செய்ய வேண்டாம். உங்களில் ஒருவர் பெண் பேசும்போது, மற்றவர் (குறுக்கிட்டுத் தமக்காகப்) பெண் பேச வேண்டாம்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
2759. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர், தம் சகோதர (இஸ்லாமிய)ன் வியாபாரம் செய்துகொண்டிருக்கும் போது (தலையிட்டுத் தமக்காக) வியாபாரம் செய்ய வேண்டாம். தம் சகோதர (இஸ்லாமிய)ன் பெண் பேசிக்கொண்டிருக்கும்போது (குறுக்கிட்டுத்) தமக்காகப் பெண் பேசவேண்டாம். முதலில் பேசியவர் இவருக்கு அனுமதியளித்தால் தவிர!
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
2760. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
கிராமத்திலிருந்து (விற்பனைச்சரக்கு கொண்டு)வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம் என்றும், அல்லது வாங்கும் நோக்கமின்றி விலையை ஏற்றி விடுவதற்காக அதிக விலைக்குக் கேட்க வேண்டாம் என்றும், அல்லது தம் சகோதர (இஸ்லாமிய)ன் பெண் பேசிக்கொண்டிருக்கும் போது (இடைமறித்துத்) தமக்காகப் பெண் கேட்க வேண்டாம் என்றும், அல்லது தம் சகோதர (இஸ்லாமிய)ன் வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது (தலையிட்டு) விற்பனை செய்ய வேண்டாம் என்றும், தன் சகோதரி (சக்களத்தி)யின் (வாழ்க்கைப்) பாத்திரத்திலுள்ளதைக் கொட்டி (அதைத் தனதாக்கி) விடுவதற்காக ஒரு பெண் (தன் மணாளரிடம்) தம் சகோதரியை மணவிலக்குச் செய்யுமாறு கேட்கவேண்டாம் என்றும் (இவையனைத்திற்கும்) நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில், அம்ருந் நாகித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "தம் சகோதர (இஸ்லாமிய)ன் விலை பேசிக்கொண்டிருக்கும்போது அதைவிட (அதிக விலை தருவதாகக் கூறி) விலை பேச வேண்டாம் என்றும் நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்" என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 16
2761. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வாங்கும் எண்ணமின்றி விலை ஏற்றிவிடுவதற்காக அதிக விலைக்குக் கேட்க வேண்டாம். தம் சகோதர (இஸ்லாமிய)ன் வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது, (குறுக்கிட்டு) மற்றவர் வியாபாரம் செய்ய வேண்டாம். கிராமத்திலிருந்து (விற்பனைச் சரக்கு கொண்டு) வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக்கொடுக்க வேண்டாம். தம் சகோதர (இஸ்லாமிய)ன் பெண் பேசிக்கொண்டிருக்கும்போது (இடையில் குறிக்கிட்டுத் தமக்காகப்) பெண் பேச வேண்டாம். ஒரு பெண் தன் சக்களத்தியின் பாத்திரத்திலுள்ளதைக் கொட்டிக் கவிழ்ப்பதற்காக அவளை மணவிலக்குச் செய்யுமாறு (தம் மணாளரிடம்) கேட்க வேண்டாம்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 16
2762. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் மஅமர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "தம் சகோதர (இஸ்லாமிய)ன் வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது,எவரும் (குறுக்கிட்டு விலையை) அதிகமாக்கி விடவேண்டாம்" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 16
2763. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் தம் சகோதர முஸ்லிம் விலை பேசிக்கொண்டிருக்கும்போது (குறுக்கிட்டு அதை விட அதிக விலை தருவதாக) விலை பேச வேண்டாம். (இதைப் போன்றே) அவர் பெண் பேசிக் கொண்டிருக்கும்போது (இடைமறித்துப்) பெண் பேசவேண்டாம்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
2764. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "தம் சகோதர (இஸ்லாமிய)னின் விலைமீது விலை பேச வேண்டாம்; அவன் பெண் பேசிக்கொண்டிருக்கும்போது பெண் பேசவேண்டாம்" என (சிறிய வேறுபாட்டுடன்) இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 16
2765. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் இறைநம்பிக்கையாளர் மற்றோர் இறை நம்பிக்கையாளரின் சகோதரர் ஆவார். எனவே, தம் சகோதரர் வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது தாம் (குறுக்கிட்டு) வியாபாரம் செய்ய ஓர் இறைநம்பிக்கையாளருக்கு அனுமதி இல்லை. தம் சகோதரர் பெண் பேசிக் கொண்டிருக்கும்போது (இடைமறித்துத் தமக்காக) அவர் பெண் பேசமாட்டார். சகோதரர் அதைக் கைவிடும்வரை (பொறுத்திருப்பார்).
இதை உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது (நின்று) அறிவித்தார்கள்.
அத்தியாயம் : 16
பாடம் : 7 மணக்கொடையின்றி பெண் கொடுத்துப் பெண் எடுக்கும் திருமணத்திற்கு ("ஷிஃகார்") வந்துள்ள தடையும் அத்திருமணம் செல்லாது என்பதும்.
2766. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"ஷிஃகார்" முறைத்திருமணத்திற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள்.
ஒருவர் மற்றொருவரிடம் "நான் என் மகளை உனக்குத் திருமணம் செய்து தருகிறேன்; நீ உன் மகளை எனக்குத் திருமணம் செய்து தர வேண்டும்" என்று (முன் நிபந்தனை) விதித்து மணமுடித்து வைப்பதற்கே "ஷிஃகார்" எனப்படும். இதில் இரு பெண்களுக்கும் "மஹ்ர்" (மணக்கொடை) இராது.
அத்தியாயம் : 16
2767. மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், உபைதுல்லாஹ் பின் சயீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நான் நாஃபிஉ (ரஹ்) அவர்களிடம் "ஷிஃகார்" என்றால் என்ன? என்று கேட்டேன்" (அதற்குத்தான் மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறு விளக்கம் கூறினார்கள்) என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 16
2768. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மஹ்ரின்றி பெண் கொடுத்துப்பெண் எடுக்கும் (ஷிஃகார் முறைத்) திருமணத்திற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.
அத்தியாயம் : 16
2769. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மஹ்ரின்றி பெண் கொடுத்துப் பெண் எடுத்தல் ("ஷிஃகார்") இஸ்லாத்தில் இல்லை.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 16