2590. அப்துல்லாஹ் பின் உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல் மலிக் பின் மர்வான் ஆட்சிக் காலத்தில், அவரிடம் ஹாரிஸ் பின் அப்தில்லாஹ் பின் அபீரபீஆ (ரஹ்) அவர்கள் ஒரு தூதுக் குழுவில் சென்றார்கள். அப்போது அப்துல் மலிக் பின் மர்வான், "அபூகுபைப் (இப்னுஸ் ஸுபைர்) ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து தாம் கேட்டதாகக் கூறும் செய்தியை, அவர் அவர்களிடமிருந்து கேட்டிருக்கமாட்டார் என்றே நான் எண்ணுகிறேன்" என்றார். அதற்கு ஹாரிஸ் (ரஹ்) அவர்கள், "ஆம் (அபூகுபைப் உண்மையே சொல்கிறார்). இதை நானும் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து செவியுற்றுள்ளேன்" என்றார்கள்.
அதற்கு அப்துல் மலிக் பின் மர்வான், "ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்றதைக் கூறுங்கள்" என்றார். அதற்கு ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ஆயிஷா (ரலி) அவர்கள் சொன்னார்கள்: என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உன்னுடைய சமுதாயத்தார் இறையில்லம் கஅபாவின் கட்டடத்தைச் சுருக்கிவிட்டனர். அவர்கள் இணைவைப்பிற்கு நெருக்கமான காலத்தவர்கள் (புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள்) என்றில்லையாயின், அவர்கள் விட்டுவிட்டதை நான் மறுபடியும் இணைத்துக் கட்டியிருப்பேன். எனக்குப் பின் உன் சமுதாயத்தாருக்கு அதை (விரிவாக்கிக்) கட்ட வேண்டுமென்ற எண்ணம் தோன்றினால் (அவ்வாறு செய்யட்டும்!) என் அருகில் வா! அவர்கள் விட்டுவிட்ட (இடத்)தை உனக்கு நான் காட்டித்தருகிறேன்"என்று கூறிவிட்டு, (கஅபா அருகில்) ஏழு முழங்கள் அளவிற்கு இடத்தை எனக்குக் காட்டினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அப்துல்லாஹ் பின் உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்களின் அறிவிப்பிலேயே மேற்கண்டவாறு இடம்பெற்றுள்ளது.
வலீத் பின் அதாஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் பின்வருமாறு கூடுதலாக இடம் பெற்றுள்ளது:
நபி (ஸல்) அவர்கள் "நான் பூமியோடு ஒட்டினாற்போல் ஒரு கிழக்கு வாசலையும் ஒரு மேற்கு வாசலையும் அதற்கு அமைத்திருப்பேன்" என்று கூறிவிட்டு, "ஏன் உன் சமுதாயத்தார் கஅபாவின் வாசலை (பூமியோடு ஒட்டினாற்போல் அமைக்காமல்) உயர்த்தினார்கள் என்று உனக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் "இல்லை (தெரியாது)" என்றார்கள். நபி (ஸல்) அவர்கள், "சுய கௌரவத்திற்காகத்தான்; தாம் விரும்பியவரைத் தவிர வேறெவரும் நுழையக் கூடாது என்பதற்காகவே (அவ்வாறு உயர்த்தினர்). எவரேனும் ஒருவர் அதனுள் நுழைய முற்பட்டால், அதில் ஏறும்வரை அவர்கள் அவரை விட்டுவிடுவார்கள். அவர் (மேலே ஏறி) உள்ளே நுழையப்போகும் போது அவரைப் பிடித்துக் கீழே தள்ளிவிடுவார்கள்" என்றார்கள்.
பிறகு ஹாரிஸ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்களிடம் அப்துல் மலிக் பின் மர்வான், "ஆயிஷா (ரலி) அவர்கள் இவ்வாறு கூறியதை நீங்கள் செவியுற்றீர்களா?" என்று கேட்டார். அதற்கு ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் "ஆம்" என்றார்கள். பிறகு அப்துல் மலிக் பின் மர்வான் தம்மிடமிருந்த குச்சியால் தரையைச் சிறிது நேரம் குத்திக் கீறி(யபடி ஆழ்ந்து யோசித்து)விட்டு, "இறையில்லத்தையும் இப்னுஸ் ஸுபைர் மேற்கொண்டதையும் (அதே நிலையில்) விட்டிருக்க வேண்டுமென (இப்போது) விரும்புகிறேன்" என்றார்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2591. அபூகஸஆ சுவைத் பின் ஹுஜைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல் மலிக் பின் மர்வான் இறையில்லம் கஅபாவைச் சுற்றி(தவாஃப்)வந்து கொண்டிருந்த போது, "அல்லாஹ் இப்னுஸ் ஸுபைரை அழிக்கட்டும்! அவர் இறை நம்பிக்கையாளர்களின் அன்னை (ஆயிஷா (ரலி) அவர்கள்மீது) பொய்யுரைக்கிறார். ஆயிஷா (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), ஆயிஷா! உன் சமுதாயத்தார் இறைமறுப்பிற்கு நெருக்கமான காலத்தவர்கள் (புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள்) என்றில்லையாயின், நான் இறையில்லம் கஅபாவை இடித்துவிட்டு "ஹிஜ்ர்" பகுதியை அதனுடன் அதிகமாக்கியிருப்பேன். ஏனெனில், உன் சமுதாயத்தார் அதன் கட்டடத்தைச் சுருக்கிவிட்டனர் என்று கூறினார்கள்" என ஆயிஷா (ரலி) அவர்கள் தம்மிடம் கூறியதாக அவர் கூறுகிறார்" என்றார்.
அப்போது ஹாரிஸ் பின் அப்தில்லாஹ் பின் அபீரபீஆ (ரஹ்) அவர்கள், "இவ்வாறு கூறாதீர்கள், இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! ஏனெனில், இறைநம்பிக்கையாளர்களின் அன்னை இப்படிக் கூறியதை நானும் கேட்டுள்ளேன்" என்றார்கள். அப்துல் மலிக் பின் மர்வான், "கஅபாவை இடி(த்துப் புதுப்பி)ப்பதற்கு முன்பே இதை நான் கேட்டிருந்தால், நிச்சயமாக இப்னுஸ் ஸுபைர் கட்டிய அமைப்பிலேயே கஅபாவை நான் விட்டிருப்பேன்" என்றார்.
அத்தியாயம் : 15
பாடம் : 70 கஅபாவின் வளைந்த சுவரும் அதன் தலைவாயிலும்.
2592. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (புனித கஅபாவை ஒட்டியுள்ள ஹிஜ்ர் எனும்) வளைந்த சுவரைப் பற்றி, "இதுவும் கஅபாவில் சேர்ந்ததா?" என்று கேட்டேன். அவர்கள், "ஆம்" என்று விடையளித்தார்கள். நான், "அப்படியானால்,கஅபாவுடன் இதை அவர்கள் ஏன் இணைக்கவில்லை?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "உன் (குறைஷி) சமூகத்தாருக்கு நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டிருந்தது" என்று பதிலளித்தார்கள். நான், "கஅபாவின் வாயிலை உயரமாக வைத்திருப்பதன் காரணம் என்ன?" என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தாம் நாடியவர்களை உள்ளே அனுமதிப்பதற்காகவும், தாம் நாடியவர்களை உள்ளே செல்லவிடாமல் தடுப்பதற்காகவுமே உன் சமுதாயத்தார் இவ்வாறு செய்தனர். உன் சமூகத்தார் அறியாமைக் காலத்துக்கு நெருக்கமானவர்கள் (புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள்) என்பதால், அவர்களின் மனத்தில் வெறுப்பு தோன்றும் என்ற அச்சம் (மட்டும்) எனக்கு இல்லாதிருந்தால், நான் இந்த வளைந்த சுவரை கஅபாவுடன் இணைத்து அதன் வாயிலை(க் கீழிறக்கி) பூமியுடன் சேர்ந்தாற்போல் ஆக்க முடிவு செய்திருப்பேன்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 15
2593. மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஹிஜ்ர் (எனும் வளைந்த சுவரைப்) பற்றிக் கேட்டேன்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. மேலும் அதில், "ஏணி வைக்காமல் ஏற முடியாத அளவிற்குக் கஅபாவின் தலைவாயில் உயரமாக இருக்கக் காரணம் என்ன என்று கேட்டேன்" என்றும் இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 71 உடல் ஊனம், முதுமை உள்ளிட்ட காரணங்களால் இயலாதவருக்காகவோ, இறந்து போனவருக்காகவோ பிறர் ஹஜ் செய்தல்.
2594. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் சகோதரர்) ஃபள்ல் பின் அப்பாஸ், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் வாகனத்தில் இருந்தபோது, "கஸ்அம்" குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மார்க்க விளக்கம் கேட்க வந்தார். ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து நோக்கலானார்; அப்பெண்ணும் ஃபள்லைப் பார்த்தார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபள்லின் முகத்தை வேறு பக்கம் திருப்பி விடலானார்கள். அப்பெண், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் தன் அடியார்களுக்கு விதியாக்கிய ஹஜ் கடமை, முதியவரான என் தந்தைக்கு ஏற்பட்டுள்ளது. அவரால் வாகனத்தில் அமர்ந்து செல்ல இயலாது. அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஆம்" என்றார்கள். இது "விடைபெறும்" ஹஜ்ஜின் போது நடைபெற்றது.
அத்தியாயம் : 15
2595. ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"கஸ்அம்" குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை முதியவராக உள்ளார். இந்நிலையில், அவருக்கு அல்லாஹ் விதியாக்கிய ஹஜ் கடமை ஏற்பட்டுள்ளது. அவரால் தமது ஒட்டகத்தின் முதுகில் அமர இயலாது" என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அவர் சார்பாக நீ ஹஜ் செய்யலாம்" என்றார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 72 சிறுவனின் ஹஜ் செல்லும் என்பதும் அவனை ஹஜ்ஜுக்கு அழைத்துச் சென்றவருக்கும் நற்பலன் உண்டு என்பதும்.
2596. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் "அர்ரவ்ஹா" எனும் இடத்தில் ஒரு பயணக் குழுவினரைச் சந்தித்தார்கள். அப்போது "இக்கூட்டத்தினர் யார்?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் "முஸ்லிம்கள்" என்றார்கள். அப்போது அக்குழுவினர், "நீங்கள் யார்?" என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நான் அல்லாஹ்வின் தூதர்" என்றார்கள். அப்போது (அக்குழுவிலிருந்த) ஒரு பெண், தன் குழந்தையைத் தூக்கி, "இவனுக்கும் ஹஜ் உண்டா?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "ஆம்; (அதற்காக) உனக்கும் நற்பலன் உண்டு" என விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2597. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண்மணி தம் குழந்தையை உயர்த்திக்காட்டி, "அல்லாஹ்வின் தூதரே! இவனுக்கும் ஹஜ் உண்டா?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "ஆம்; (அதற்காக) உனக்கும் நற்பலன் உண்டு" என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 15
2598. (இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமை) குறைப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண்மணி (தம்) குழந்தையை உயர்த்திக்காட்டி, "அல்லாஹ்வின் தூதரே! இவனுக்கும் ஹஜ் உண்டா?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "ஆம்; (அதற்காக) உனக்கும் நற்பலன் உண்டு" என விடையளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 73 ஆயுளில் ஒரு முறையே ஹஜ் கடமையாகும்.
2599. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) எங்களிடையே உரையாற்றினார்கள். அப்போது, "மக்களே! அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜை விதியாக்கிவிட்டான். எனவே, ஹஜ் செய்யுங்கள்" என்றார்கள். அப்போது ஒரு மனிதர், "ஒவ்வோர் ஆண்டிலுமா (ஹஜ் செய்ய வேண்டும்), அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பதிலளிக்காமல்) அமைதியாக இருந்தார்கள். அவர் மூன்று முறை அவ்வாறே கேட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் "ஆம்" என்று சொல்லிவிட்டால் அது (ஒவ்வோர் ஆண்டிலும்) கடமையாகிவிடும். பின்னர் உங்களால் அதை நிறைவேற்ற முடியாமலாகிவிடும்" என்று கூறிவிட்டு, "நான் எதை (செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்கு விட்டுவிட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டு விடுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் அழிந்ததெல்லாம், அவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் அதிகமாகக் கேள்வி கேட்டதாலும் அவர்களுடன் கருத்து மாறுபாடு கொண்டதாலும்தான். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால், அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதை(ச் செய்யாமல்) விட்டுவிடுங்கள்!" என்றார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 74 ஒரு பெண் (மணமுடிக்கத்தகாத) தன் நெருங்கிய உறவினருடன் ஹஜ் முதலான பயணம் மேற்கொள்ளல்.
2600. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எந்தப் பெண்ணும் (மணமுடிக்கத்தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் தவிர மூன்று நாட்களுக்கான பயணம் மேற்கொள்ள வேண்டாம்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "மூன்று நாட்களுக்கு மேல் (பயணம் மேற்கொள்ளக் கூடாது)" என்று இடம்பெற்றுள்ளது. அப்துல்லாஹ் பின் நுமைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "மூன்று நாட்களுக்கான பயணம் மேற்கொள்ள வேண்டாம்" என்றே இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2601. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்ட ஒரு பெண், (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் தவிர மூன்று இரவுகள் தொலைவிற்குப் பயணம் மேற்கொள்ள அனுமதி இல்லை.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2602. கஸஆ பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்து ஒரு ஹதீஸைச் செவியுற்றேன். அது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. நான், "இதைத் தாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் கேட்காததையா அவர்கள் கூறியதாகச் சொல்வேன்? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசல், மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிவாசல்களைத் தவிர மற்ற இடங்களுக்கு (நன்மையை நாடிப் புனிதப்) பயணம் மேற்கொள்ள வேண்டாம்" என்று கூறியதையும், "எந்தப் பெண்ணும் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன், அல்லது கணவருடன் தவிர இரண்டு நாள் (தொலைவிற்குப்) பயணம் மேற்கொள்ள வேண்டாம்" என்று கூறியதையும் நான் கேட்டேன்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2603. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான்கு செய்திகளைச் செவியுற்றேன். அவை என்னை வியப்படையச் செய்தன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "எந்தப் பெண்ணும் கணவன், அல்லது (மண முடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் தவிர இரண்டு நாள் பயணத் தொலைவிற்குப் பயணம் மேற்கொள்ள வேண்டாம் எனத் தடை விதித்தார்கள். தொடர்ந்து எஞ்சிய ஹதீஸையும் கூறினார்கள்.
அத்தியாயம் : 15
2604. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எந்தப் பெண்ணும் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் தவிர மூன்று நாட்கள் பயணம் மேற்கொள்ள வேண்டாம்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2605. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எந்தப் பெண்ணும் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் தவிர மூன்று இரவுகளுக்கு மேல் பயணம் மேற்கொள்ள வேண்டாம்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "(மணமுடிக்கத்தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் தவிர மூன்று நாட்களுக்கு அதிகமாக (பயணம் மேற்கொள்ள வேண்டாம்)" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2606. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஸ்லிமான எந்தப் பெண்ணும் (மண முடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினர் தன்னுடன் இருந்தே தவிர, ஓரிரவு பயணத் தொலைவிற்குப் பயணம் மேற்கொள்ள அனுமதி இல்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2607. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கைகொண்ட எந்தப் பெண்ணும் (மண முடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் தவிர ஒரு நாள் பயணத் தொலைவிற்குப் பயணம் மேற்கொள்ள அனுமதி இல்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2608. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட ஒரு பெண், (மணமுடிக்கத் தகாத) தன் நெருங்கிய ஆண் உறவினருடன் தவிர ஒரு பகல் ஓர் இரவு பயணத் தொலைவிற்குப் பயணம் மேற்கொள்ள அனுமதி இல்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2609. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எந்தப் பெண்ணும் (மணமுடிக்கத் தகாத) தன் நெருங்கிய ஆண் உறவினருடன் தவிர மூன்று நாட்கள் பயணம் மேற்கொள்ள அனுமதி இல்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15