2573. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஹஜ்ஜை முடித்த பின்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரலி) அவர்களிடம், ஓர் ஆண் தன் மனைவியிடம் நாடுகின்ற (தாம்பத்தியத்)தை நாடினார்கள். அப்போது, "அவருக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளது, அல்லாஹ்வின் தூதரே!" என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர் நம்மை (புறப்பட விடாமல்) தடுத்து விட்டாரா?" என்று கேட்டார்கள். அப்போது மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! அவர் "நஹ்ரு"டைய (துல்ஹஜ் பத்தாவது) நாளில் "தவாஃபுஸ் ஸியாரத்" (தவாஃபுல் இஃபாளா) செய்துவிட்டார்" என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவ்வாறாயின், அவர் உங்களுடன் புறப்படட்டும்!" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 15
2574. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (தமது ஹஜ்ஜை முடித்துக்கொண்டு மக்காவிலிருந்து) புறப்பட விரும்பிய போது, ஸஃபிய்யா (ரலி) அவர்கள் (மாதவிடாய் ஏற்பட்டதால்) தமது கூடார வாசலில் கவலை அடைந்தவராகத் துக்கத்துடன் இருந்தார். அப்போது அவரிடம் நபி (ஸல்) அவர்கள் (செல்லமாக), "உன் கழுத்து அறுபட; தொண்டை வலி வர! நீ "நஹ்ரு" டைய (துல்ஹஜ் பத்தாவது) நாளில் "தவாஃபுல் இஃபாளா" செய்தாயா?" என்று கேட்டார்கள். ஸஃபிய்யா (ரலி) அவர்கள் "ஆம்" என்று கூற, நபி (ஸல்) அவர்கள், "அப்படியானால் நீ புறப்படு" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "கவலை அடைந்தவராகத் துக்கத்துடன் இருந்தார்" எனும் குறிப்பு இடம்பெற வில்லை. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன.
அத்தியாயம் : 15
பாடம் : 68 ஹாஜிகளும் மற்றவர்களும் கஅபாவிற்குள் நுழைவதும், அதனுள் தொழுவதும், அதன் அனைத்துப் பகுதிகளிலும் பிரார்த்திப்பதும் விரும்பத்தக்கவையாகும்.
2575. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மக்கா வெற்றி நாளில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் உசாமா பின் ஸைத் (ரலி), பிலால் (ரலி), உஸ்மான் பின் தல்ஹா அல்ஹஜபீ (ரலி) ஆகியோரும் இறையில்லம் கஅபாவிற்குள் சென்றனர். உஸ்மான் தாழிட்டார். அவர்கள் (நீண்ட நேரம்) உள்ளே இருந்தார்கள். பின்னர் பிலால் (ரலி) அவர்கள் வெளியே வந்தபோது அவர்களிடம் நான், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உள்ளே) என்ன செய்தார்கள்?" என்று கேட்டேன். அதற்கு பிலால் (ரலி) அவர்கள், "இரண்டு தூண்களைத் தமக்கு இடப்பக்கமும் ஒரு தூணைத் தமக்கு வலப் பக்கமும் மூன்று தூண்களைத் தமக்குப் பின்புறமும் இருக்குமாறு (நின்று) தொழுதார்கள்" என்று விடையளித்தார்கள். அன்று இறையில்லம் கஅபாவில் ஆறு தூண்கள் இருந்தன.
அத்தியாயம் : 15
2576. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி நாளில் (ஒட்டகத்தின் மீதமர்ந்தபடி) வந்து, இறையில்லம் கஅபாவின் முற்றத்தில் இறங்கினார்கள். பிறகு (கஅபாவின் காவலராயிருந்த) உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்களிடம் (அவர்களை அழைத்துவரும் படி) ஆளனுப்பினார்கள். உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்கள் சாவியுடன் வந்து கஅபாவின் கதவைத் திறந்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்களும் பிலால் (ரலி), உசாமா பின் ஸைத் (ரலி), உஸ்மான் பின் தல்ஹா (ரலி) ஆகியோரும் கஅபாவிற்குள் நுழைந்தார்கள். உள்ளே நுழைந்ததும் கதவைத் தாழிடும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட,அவ்வாறே தாழிடப்பட்டது. பின்னர் அவர்கள் நீண்ட நேரம் அதனுள் தங்கியிருந்து விட்டுப் பிறகு கதவைத் திறந்தார்கள்.
(இச்செய்தி அறிந்து) நான் மக்களை முந்திக்கொண்டு (கஅபாவிற்குச்) சென்றேன். கஅபாவிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நான் எதிர்கொண்டேன். அவர்களுக்குப் பின்னால் பிலால் (ரலி) அவர்கள் வந்தார்கள். உடனே நான் பிலால் (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவினுள் தொழுதார்களா?" என்று கேட்டேன். அவர்கள் "ஆம்" என்றார்கள். நான் "எந்த இடத்தில்?" என்று கேட்க, அதற்கு பிலால் (ரலி) அவர்கள், "இரு தூண்களுக்கிடையே நேராக" என்று கூறினார்கள். நான் பிலால் (ரலி) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எத்தனை ரக்அத்கள் தொழுதார்கள்" என்று கேட்க மறந்துவிட்டேன்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2577. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மக்கா வெற்றி ஆண்டில் உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களது ஒட்டகத்தின் மீது (பயணம் செய்து) வந்து, கஅபாவின் முற்றத்தில் தமது ஒட்டகத்தை மண்டியிட்டு அமரச் செய்தார்கள். பிறகு உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்களை அழைத்(துவரச் செய்)து, "என்னிடம் கஅபாவின் சாவியைக் கொண்டுவாருங்கள்" என்று கூறினார்கள். (சாவியைப் பெறுவதற்காக) உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்கள் தம் அன்னையிடம் சென்றபோது, அவர் அதைத் தர மறுத்தார். அப்போது உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! அதன் சாவியை என்னிடம் தந்துவிடுங்கள்! இல்லாவிட்டால், என் முதுகந்தண்டிலிருந்து இந்த வாள் வெளியேறும்" என்று கூறினார்கள். பின்னர் அவர் அந்தச் சாவியை உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்களிடம் கொடுக்க, அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்து அதைக் கொடுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் கஅபாவின் கதவைத் திறந்தார்கள்...
மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 15
2578. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவெற்றி நாளில்) இறையில்லம் கஅபாவினுள் நுழைந்தார்கள். அப்போது அவர்களுடன் உசாமா (ரலி), பிலால் (ரலி), உஸ்மான் பின் தல்ஹா (ரலி) ஆகியோர் இருந்தனர். அவர்கள் உள்ளே சென்று,தாழிட்டுக்கொண்டு நீண்ட நேரம் தங்கியிருந்தார்கள். பின்னர் கதவு திறக்கப்பெற்றபோது, நானே முதல் ஆளாக உள்ளே நுழைந்தேன். அப்போது வெளியே வந்துகொண்டிருந்த பிலால் (ரலி) அவர்களைச் சந்தித்து, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவினுள் எந்த இடத்தில் தொழுதார்கள்?" என்று கேட்டேன். அதற்கு பிலால் (ரலி) அவர்கள், "அவ்விரு முன் தூண்களுக்கிடையே" என்று பதிலுரைத்தார்கள். நான் பிலால் (ரலி) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எத்தனை (ரக்அத்கள்) தொழுதார்கள்?" என்று கேட்க மறந்துவிட்டேன்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2579. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் கஅபாவிற்குப் போய்ச்சேர்ந்தேன். அங்கு நபி (ஸல்) அவர்களும் பிலால் (ரலி), உசாமா (ரலி) ஆகியோரும் கஅபாவிற்குள் நுழைந்திருந்தார்கள். உள்ளே சென்றதும் உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்கள் கஅபாவின் தலைவாயிலை மூடிவிட்டார்கள். பிறகு நீண்ட நேரம் அதனுள் இருந்தார்கள். பின்னர் கதவு திறக்கப்பெற்றபோது நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்தார்கள். நான் படியில் ஏறி கஅபாவிற்குள் நுழைந்தேன். (வெளியே வந்து கொண்டிருந்தவர்களிடம்), "நபி (ஸல்) அவர்கள் எந்த இடத்தில் தொழுதார்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "இங்கு தான்" என (ஓர் இடத்தைக் காட்டி)க் கூறினார்கள். நான் அவர்களிடம் "நபி (ஸல்) அவர்கள் எத்தனை ரக்அத்கள் தொழுதார்கள்?" என்று கேட்க மறந்துவிட்டேன்.
அத்தியாயம் : 15
2580. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் உசாமா பின் ஸைத் (ரலி), பிலால் (ரலி), உஸ்மான் பின் தல்ஹா (ரலி) ஆகியோரும் இறையில்லம் கஅபாவினுள் நுழைந்து தாழிட்டுக்கொண்டனர். அவர்கள் கதவைத் திறந்ததும் முதல் ஆளாக நானே உள்ளே புகுந்தேன். அப்போது (வெளியே வந்த) பிலால் (ரலி) அவர்களைச் சந்தித்து, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவினுள் தொழுதார்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம், வலப்பக்கமிருக்கும் இரு தூண்களுக்கிடையே தொழுதார்கள்" என்று பதிலளித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2581. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் உசாமா பின் ஸைத் (ரலி), பிலால் (ரலி), உஸ்மான் பின் தல்ஹா (ரலி) ஆகியோரும் கஅபாவிற்குள் நுழைவதை நான் கண்டேன். அப்போது அந்த நால்வருடன் வேறெவரும் கஅபாவிற்குள் நுழையவில்லை. பின்னர் தாழிடப்பட்டுவிட்டது.
என்னிடம் "பிலால் (ரலி) அவர்கள்" அல்லது "உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்கள்", "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவின் நடுவில் வலப்பக்கமிருக்கும் இரு தூண்களுக்கிடையே தொழுதார்கள்" எனக் குறிப்பிட்டார்கள்.
அத்தியாயம் : 15
2582. இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்களிடம், "இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "நீங்கள் இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வரும்படியே உத்தரவிடப்பட்டுள்ளீர்கள்; கஅபாவினுள் நுழையுமாறு உங்களுக்கு உத்தரவிடப்படவில்லை" என்று கூறியதைத் தாங்கள் செவியுற்றீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அதாஉ (ரஹ்) அவர்கள், கஅபாவிற்குள் நுழைய வேண்டாம் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தடை விதிக்கவில்லை. ஆயினும், அவர்கள் உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறினார்கள் எனப் பின்வருமாறு கூறியதைச் செவியுற்றேன்:
நபி (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவிற்குள் நுழைந்ததும் அதன் அனைத்துப் பகுதிகளிலும் பிரார்த்தித்துவிட்டு, உள்ளே தொழாமலேயே வெளியேறிவிட்டார்கள். வெளியே வந்ததும் கஅபாவின் (வாசல்) முன் நின்று இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும் "இதுவே உங்கள் தொழும் திசை (கிப்லா) ஆகும்" என்றும் கூறினார்கள்.
அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், "அதன் பகுதிகள் என்பது என்ன? அதன் ஒவ்வொரு மூலையையுமா குறிப்பிடுகிறீர்கள்?"என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "இல்லை; இறையில்லத்தின் ஒவ்வொரு திசையிலும் (பிரார்த்தித்தார்கள்)" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2583. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவிற்குள் நுழைந்தார்கள். அதனுள் ஆறு தூண்கள் இருந்தன. ஒவ்வொரு தூணுக்கு அருகிலும் நின்று அவர்கள் பிரார்த்தித்தார்கள். ஆனால், தொழவில்லை.
அத்தியாயம் : 15
2584. இஸ்மாயீல் பின் அபீகாலித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்களிடம், "நபி (ஸல்) அவர்கள் தமது உம்ர(த்துல் களா)வின்போது இறையில்லம் கஅபாவிற்குள் நுழைந்தார்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "இல்லை" என்றார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 69 இறையில்லம் கஅபாவை இடித்துக் கட்டுதல்.
2585. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(ஆயிஷா!) உன்னுடைய (குறைஷி) சமுதாயத்தார் இறைமறுப்பிற்கு நெருங்கிய காலத்தவர்கள் (புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள்) என்பது மட்டும் இல்லையாயின், கஅபாவை இடித்துவிட்டு இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளத்தின் மீதே நான் அதைக் கட்டியிருப்பேன். ஏனெனில், குறைஷியர் இந்த ஆலயத்தை (புதுப்பித்து)க் கட்டியபோது, அ(தன் அடித்தளத்)தைவிடச் சுருக்கி (சற்று உள்ளடக்கி)க் கட்டிவிட்டனர். மேலும்,அதற்கு ஒரு பின்புற வாசலையும் நான் அமைத்திருப்பேன்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2586. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உன்னுடைய சமுதாயத்தார் கஅபாவை(ப் புதுப்பித்து)க் கட்டியபோது, இப்ராஹீம் (அலை) அவர்கள் இட்ட அடித்தளத்தை (விடச் சற்று)க் குறைத்துவிட்டார்கள் என்பதை நீ அறிவாயா?" என்று கேட்டார்கள். அதற்கு நான், "அல்லாஹ்வின் தூதரே! இப்ராஹீம் (அலை) அவர்கள் இட்ட அடித்தளத்திற்கு அதை நீங்கள் மாற்றிவிடலாமல்லவா?" என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உன்னுடைய சமுதாயத்தார் இறைமறுப்பிற்கு நெருக்கமான காலத்தவர்கள் (புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள்) என்பது மட்டும் இல்லையாயின், அவ்வாறே நான் செய்திருப்பேன்" என்றார்கள்.
(இதன் அறிவிப்பாளரான அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் அபீபக்ர் அஸ்ஸித்தீக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:)
(நான் இந்த ஹதீஸை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) (அவர்களிடம் தெரிவித்தபோது) அவர்கள், "ஆயிஷா (ரலி) அவர்கள் இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டிருந்தால் அது சரியே! (இறையில்லம் கஅபாவின்) "ஹிஜ்ர்" பகுதியை அடுத்துள்ள இரு (ஷாமிய) மூலைகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முத்தமிடாததற்குக் காரணம், இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளத்தின் மீது இறையில்லம் முழுமையாக்கப்படாமல் இருந்ததே ஆகும் என்று நான் கருதுகிறேன்"என்றார்கள்.
அத்தியாயம் : 15
2587. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என்னிடம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உன் சமுதாயத்தார் "அறியாமைக் காலத்திற்கு" அல்லது "இறைமறுப்பிற்கு"நெருக்கமானவர்கள் (புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள்) என்பது மட்டும் இல்லையாயின், கஅபாவின் கருவூலங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிட்டிருப்பேன். மேலும், "ஹிஜ்ர்" எனும் அரைவட்டப் பகுதியை கஅபாவுடன் இணைத்து,கஅபாவின் தலை வாயிலை (கீழிறக்கி)ப் பூமியோடு சேர்ந்தாற்போல் ஆக்கியிருப்பேன்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2588. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஆயிஷா! உன் சமுதாயத்தார் இணைவைப்புக்கு நெருக்கமான காலத்தவர்கள் என்பது மட்டும் இல்லையாயின், கஅபாவை நான் இடித்துவிட்டு, (உயர்ந்திருக்கும் அதன் தளத்தைத்) தரையோடு சேர்ந்தாற்போல் ஆக்கியிருப்பேன். மேலும், கிழக்கே ஒன்றும் மேற்கே ஒன்றுமாக அதற்கு இரு வாயில்களை அமைத்திருப்பேன். "ஹிஜ்ர்"பகுதியில் ஆறு முழங்களைக் கூடுதலாக்கியிருப்பேன். ஏனெனில், குறைஷியர் கஅபாவை(ப் புதுப்பித்து)க் கட்டியபோது அதைக் குறைத்து (சற்று உள்ளடக்கிக் கட்டி)விட்டனர்" என்றார்கள்.
அத்தியாயம் : 15
2589. அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
யஸீத் பின் முஆவியா ஆட்சிக்காலத்தில் ஷாம்வாசிகள் (அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களுக்கு எதிராக மக்காவை முற்றுகையிட்டு) போர் தொடுத்தபோது, இறையில்லம் கஅபா தீக்கிரையானது. அப்போது நடந்தவை நடந்து முடிந்தன. அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள், மக்கள் ஹஜ் பருவத்தில் ஒன்றுகூடும் வரை இறையில்லத்தை அதே நிலையிலேயே விட்டு வைத்தார்கள்.(பனூ உமய்யாக்களான) ஷாம்வாசிகளுக்கு எதிராக "மக்களுக்கு எழுச்சியூட்டுவதற்காகவே"அல்லது "அவர்களை ரோஷம்கொள்ளச் செய்வதற்காகவே" அவ்வாறு விட்டுவைத்தார்கள். (ஹஜ்ஜை முடித்து) மக்கள் புறப்பட்டபோது அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள், "மக்களே! கஅபா விஷயத்தில் எனக்கு ஆலோசனை கூறுங்கள். அதை இடித்துவிட்டுப் புதிதாகக் கட்டுவதா, அல்லது அதில் பழுதடைந்த பகுதியை மட்டும் செப்பனிடுவதா?" என்று கேட்டார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "எனக்கு இது தொடர்பாக ஒரு யோசனை தோன்றுகிறது. அதில் பழுதடைந்த பகுதியை மட்டும் நீங்கள் செப்பனிடுங்கள். மக்கள் இஸ்லாத்தை ஏற்றபோதிருந்த அதே நிலையில் கஅபாவை விட்டுவிடுங்கள்; மக்கள் இஸ்லாத்தை ஏற்றபோதும், நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பெற்றபோதும் இருந்த நிலையில் அதன் கற்களையும் (விட்டுவிடுங்கள்)" என்றார்கள்.
அதற்கு அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள், "உங்களில் ஒருவரது இல்லம் தீக்கிரையானால் அதைப் புதுப்பிக்காத வரை அவரது மனம் திருப்தியடைவதில்லை. இந்நிலையில் இறையில்லத்தின் விஷயத்தில் மட்டும் எப்படி (நீங்கள் இவ்வாறு கூறுவீர் கள்)? நான் (கஅபாவை இடித்துப் புதுப்பிப்பதா, அல்லது பழுதடைந்ததைச் செப்பனிடுவதா எனும் விஷயத்தில்) என் இறைவனிடம் நன்முடிவு வேண்டி மூன்று முறை பிரார்த்திப்பேன். பிறகு ஒரு முடிவுக்கு வருவேன்" என்றார்கள். நன்முடிவு வேண்டி மூன்று முறை பிரார்த்தித்தபோது, இடித்துவிட்டுப் புதுப்பிக்கும் முடிவுக்கு வந்தார்கள். அப்போது மக்கள் முதலில் கஅபாவின் மீது ஏறும் மனிதர்மீது வானத்திலிருந்து ஏதேனும் வேதனை இறங்கி விடும் என அச்சம் தெரிவித்தனர். இறுதியாக ஒரு மனிதர் கஅபாவின் மீதேறி அதிலிருந்து ஒரு கல்லை கீழே தள்ளினார். அவருக்கு எதுவும் நேராததைக் கண்ட மக்கள், ஒவ்வொருவராக (இடிக்கும் பணியில்) ஈடுபட்டு அதைத் தரைமட்டமாக்கினர். பின்னர் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கட்டடப் பணி நிறைவடையும்வரை (இறையில்லத்திற்குத் தாற்காலிகத்) தூண்கள் அமைத்து அவற்றின்மீது திரையும் தொங்கவிட்டார்கள்.
மேலும், அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஆயிஷா (ரலி) அவர்கள் "என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "(உன்னுடைய சமுதாய) மக்கள் இறை மறுப்பிற்கு நெருக்கமான காலத்தவர்கள் (புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள்) என்றில்லையாயின் - என்னிடம் கஅபாவின் கட்டடத்தை வலுப்படுத்தக்கூடிய அளவு பொருளாதாரம் இல்லை என்பது (ஒருபுறம்) இருக்க - நான் "ஹிஜ்ர்" பகுதியில் ஐந்து முழங்களை கஅபாவுடன் சேர்த்துவிட்டிருப்பேன். பின்னர் மக்கள் நுழைவதற்கு ஒரு வாயிலும் வெளியேறுவதற்கு ஒரு வாயிலுமாக (இரு வாயில்களை) அதற்கு அமைத்திருப்பேன்" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன். இன்று என்னிடம் பொருளாதாரமிருப்பதைக் காண்கிறேன். மக்களை அஞ்சும் நிலையிலும் நான் இல்லை" என்று கூறி(விட்டு, கஅபாவைப் புதுப்பிக்கலா)னார்கள்.
பின்னர் கஅபாவில் "ஹிஜ்ர்" பகுதியில் ஐந்து முழங்களைக் கூடுதலாக்கினார்கள்; மக்கள் பார்த்துக்கொண்டிருக்கவே (ஹிஜ்ர் பகுதியை அகழ்ந்து) ஓர் அடித்தளத்தை வெளியாக்கினார்கள். அதன் மீதே கஅபாவை எழுப்பினார்கள். (முடிவில்) கஅபாவின் உயரம் பதினெட்டு முழங்களாக இருந்தது. அதன் உயரத்தை அதிகமாக்கிய பின்பும் அது குறைவாகவே பட்டது. எனவே, மேலும் பத்து முழங்களை அதிகமாக்கினார்கள்; அத்துடன் உள்ளே நுழைவதற்கு ஒரு வாயில்; வெளியேறுவதற்கு ஒரு வாயில் என இறையில்லத்திற்கு இரு வாயில்களை அமைத்தார்கள்.
அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டபோது, ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் இந்த விவரங்களைத் தெரிவித்து (கலீஃபா) அப்துல் மலிக் பின் மர்வானுக்கு ஒரு கடிதம் வரைந்தார். அதில் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் (ஹிஜ்ர் பகுதியை அகழ்ந்து அங்கிருந்த) ஓர் அடித்தளத்தின் மீது கஅபாவை எழுப்பியுள்ளார்; அதை மக்காவின் நியாயவான்கள் பலரும் பார்த்துள்ளனர்" என்றும் குறிப்பிட்டிருந்தார். அதற்கு அப்துல் மலிக் பின் மர்வான், "நாம் இப்னுஸ் ஸுபைரை எந்த விஷயத்திலும் களங்கப்படுத்த விரும்பவில்லை, எனவே, அவர் உயர்த்திக்கட்டியதை அப்படியே விட்டுவிடுவீராக! "ஹிஜ்ர்"பகுதியிலிருந்து அவர் அதிகப்படுத்தியதை (மட்டும்) பழையபடியே மாற்றி அமைப்பீராக! அவர் புதிதாகத் திறந்துவிட்ட வாயிலை மூடிவிடுவீராக!" என்று பதில் எழுதினார். எனவே, ஹஜ்ஜாஜ் ("ஹிஜ்ர்" பகுதிச் சுவரை) இடித்து முன்பிருந்த அமைப்பிற்கே மாற்றி அமைத்தார்.
அத்தியாயம் : 15
2590. அப்துல்லாஹ் பின் உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல் மலிக் பின் மர்வான் ஆட்சிக் காலத்தில், அவரிடம் ஹாரிஸ் பின் அப்தில்லாஹ் பின் அபீரபீஆ (ரஹ்) அவர்கள் ஒரு தூதுக் குழுவில் சென்றார்கள். அப்போது அப்துல் மலிக் பின் மர்வான், "அபூகுபைப் (இப்னுஸ் ஸுபைர்) ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து தாம் கேட்டதாகக் கூறும் செய்தியை, அவர் அவர்களிடமிருந்து கேட்டிருக்கமாட்டார் என்றே நான் எண்ணுகிறேன்" என்றார். அதற்கு ஹாரிஸ் (ரஹ்) அவர்கள், "ஆம் (அபூகுபைப் உண்மையே சொல்கிறார்). இதை நானும் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து செவியுற்றுள்ளேன்" என்றார்கள்.
அதற்கு அப்துல் மலிக் பின் மர்வான், "ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்றதைக் கூறுங்கள்" என்றார். அதற்கு ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ஆயிஷா (ரலி) அவர்கள் சொன்னார்கள்: என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உன்னுடைய சமுதாயத்தார் இறையில்லம் கஅபாவின் கட்டடத்தைச் சுருக்கிவிட்டனர். அவர்கள் இணைவைப்பிற்கு நெருக்கமான காலத்தவர்கள் (புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள்) என்றில்லையாயின், அவர்கள் விட்டுவிட்டதை நான் மறுபடியும் இணைத்துக் கட்டியிருப்பேன். எனக்குப் பின் உன் சமுதாயத்தாருக்கு அதை (விரிவாக்கிக்) கட்ட வேண்டுமென்ற எண்ணம் தோன்றினால் (அவ்வாறு செய்யட்டும்!) என் அருகில் வா! அவர்கள் விட்டுவிட்ட (இடத்)தை உனக்கு நான் காட்டித்தருகிறேன்"என்று கூறிவிட்டு, (கஅபா அருகில்) ஏழு முழங்கள் அளவிற்கு இடத்தை எனக்குக் காட்டினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அப்துல்லாஹ் பின் உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்களின் அறிவிப்பிலேயே மேற்கண்டவாறு இடம்பெற்றுள்ளது.
வலீத் பின் அதாஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் பின்வருமாறு கூடுதலாக இடம் பெற்றுள்ளது:
நபி (ஸல்) அவர்கள் "நான் பூமியோடு ஒட்டினாற்போல் ஒரு கிழக்கு வாசலையும் ஒரு மேற்கு வாசலையும் அதற்கு அமைத்திருப்பேன்" என்று கூறிவிட்டு, "ஏன் உன் சமுதாயத்தார் கஅபாவின் வாசலை (பூமியோடு ஒட்டினாற்போல் அமைக்காமல்) உயர்த்தினார்கள் என்று உனக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் "இல்லை (தெரியாது)" என்றார்கள். நபி (ஸல்) அவர்கள், "சுய கௌரவத்திற்காகத்தான்; தாம் விரும்பியவரைத் தவிர வேறெவரும் நுழையக் கூடாது என்பதற்காகவே (அவ்வாறு உயர்த்தினர்). எவரேனும் ஒருவர் அதனுள் நுழைய முற்பட்டால், அதில் ஏறும்வரை அவர்கள் அவரை விட்டுவிடுவார்கள். அவர் (மேலே ஏறி) உள்ளே நுழையப்போகும் போது அவரைப் பிடித்துக் கீழே தள்ளிவிடுவார்கள்" என்றார்கள்.
பிறகு ஹாரிஸ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்களிடம் அப்துல் மலிக் பின் மர்வான், "ஆயிஷா (ரலி) அவர்கள் இவ்வாறு கூறியதை நீங்கள் செவியுற்றீர்களா?" என்று கேட்டார். அதற்கு ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் "ஆம்" என்றார்கள். பிறகு அப்துல் மலிக் பின் மர்வான் தம்மிடமிருந்த குச்சியால் தரையைச் சிறிது நேரம் குத்திக் கீறி(யபடி ஆழ்ந்து யோசித்து)விட்டு, "இறையில்லத்தையும் இப்னுஸ் ஸுபைர் மேற்கொண்டதையும் (அதே நிலையில்) விட்டிருக்க வேண்டுமென (இப்போது) விரும்புகிறேன்" என்றார்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2591. அபூகஸஆ சுவைத் பின் ஹுஜைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல் மலிக் பின் மர்வான் இறையில்லம் கஅபாவைச் சுற்றி(தவாஃப்)வந்து கொண்டிருந்த போது, "அல்லாஹ் இப்னுஸ் ஸுபைரை அழிக்கட்டும்! அவர் இறை நம்பிக்கையாளர்களின் அன்னை (ஆயிஷா (ரலி) அவர்கள்மீது) பொய்யுரைக்கிறார். ஆயிஷா (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), ஆயிஷா! உன் சமுதாயத்தார் இறைமறுப்பிற்கு நெருக்கமான காலத்தவர்கள் (புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள்) என்றில்லையாயின், நான் இறையில்லம் கஅபாவை இடித்துவிட்டு "ஹிஜ்ர்" பகுதியை அதனுடன் அதிகமாக்கியிருப்பேன். ஏனெனில், உன் சமுதாயத்தார் அதன் கட்டடத்தைச் சுருக்கிவிட்டனர் என்று கூறினார்கள்" என ஆயிஷா (ரலி) அவர்கள் தம்மிடம் கூறியதாக அவர் கூறுகிறார்" என்றார்.
அப்போது ஹாரிஸ் பின் அப்தில்லாஹ் பின் அபீரபீஆ (ரஹ்) அவர்கள், "இவ்வாறு கூறாதீர்கள், இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! ஏனெனில், இறைநம்பிக்கையாளர்களின் அன்னை இப்படிக் கூறியதை நானும் கேட்டுள்ளேன்" என்றார்கள். அப்துல் மலிக் பின் மர்வான், "கஅபாவை இடி(த்துப் புதுப்பி)ப்பதற்கு முன்பே இதை நான் கேட்டிருந்தால், நிச்சயமாக இப்னுஸ் ஸுபைர் கட்டிய அமைப்பிலேயே கஅபாவை நான் விட்டிருப்பேன்" என்றார்.
அத்தியாயம் : 15
பாடம் : 70 கஅபாவின் வளைந்த சுவரும் அதன் தலைவாயிலும்.
2592. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (புனித கஅபாவை ஒட்டியுள்ள ஹிஜ்ர் எனும்) வளைந்த சுவரைப் பற்றி, "இதுவும் கஅபாவில் சேர்ந்ததா?" என்று கேட்டேன். அவர்கள், "ஆம்" என்று விடையளித்தார்கள். நான், "அப்படியானால்,கஅபாவுடன் இதை அவர்கள் ஏன் இணைக்கவில்லை?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "உன் (குறைஷி) சமூகத்தாருக்கு நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டிருந்தது" என்று பதிலளித்தார்கள். நான், "கஅபாவின் வாயிலை உயரமாக வைத்திருப்பதன் காரணம் என்ன?" என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தாம் நாடியவர்களை உள்ளே அனுமதிப்பதற்காகவும், தாம் நாடியவர்களை உள்ளே செல்லவிடாமல் தடுப்பதற்காகவுமே உன் சமுதாயத்தார் இவ்வாறு செய்தனர். உன் சமூகத்தார் அறியாமைக் காலத்துக்கு நெருக்கமானவர்கள் (புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள்) என்பதால், அவர்களின் மனத்தில் வெறுப்பு தோன்றும் என்ற அச்சம் (மட்டும்) எனக்கு இல்லாதிருந்தால், நான் இந்த வளைந்த சுவரை கஅபாவுடன் இணைத்து அதன் வாயிலை(க் கீழிறக்கி) பூமியுடன் சேர்ந்தாற்போல் ஆக்க முடிவு செய்திருப்பேன்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 15