1996. முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் சஹர் உணவு உண்பதிலிருந்து பிலாலின் தொழுகை அறிவிப்பு ஏமாற்றி (தடுத்து)விட வேண்டாம். நீளவாக்கில் (செங்குத்தாகத்) தென்படும் இந்த வெண்மையானது (அடிவானில்) பரவலாகத் தெரியும்வரை அதுவும் உங்களை ஏமாற்றி (தடுத்து)விட வேண்டாம்.
இதை சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
1997. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களை (சஹர் உணவு உண்பதிலிருந்து) பிலாலின் தொழுகைஅறிவிப்பு ஏமாற்றி (தடுத்து) விடவேண்டாம். (செங்குத்தாகத் தெரியும்) இந்த வெளிச்சமும் (இவ்வாறு பரவலாகத் தெரியும்வரை) ஏமாற்றி (தடுத்து) விடவேண்டாம். இவ்வாறு (அகலவாக்கில்) பரவலாகத் தெரியும்வரை.
இதை சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
1998. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களை சஹர் உணவு உண்பதிலிருந்து பிலாலின் தொழுகை அறிவிப்பு ஏமாற்றி (தடுத்து) விடவேண்டாம். அடிவானில் நீளவாக்கில் (செங்குத்தாய்) தெரியும் இந்த வெண்மை -இவ்வாறு (அகலவாக்கில்) பரவும் வரை- ஏமாற்றி (தடுத்து) விடவேண்டாம்.
இதை சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் அ(கலவாக்கில் பரவலாகத் தெரியும்வரை என்ப)தை அறிவிக்கும்போது, இவ்வாறு என்று தம் இரு கரங்களால் சைகை செய்து (விரித்துக்) காட்டினார்கள்.
அத்தியாயம் : 13
1999. நபி (ஸல்) அவர்கள் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களை (சஹர் செய்வதிலிருந்து) பிலாலின் தொழுகைஅறிவிப்பு ஏமாற்றிவிட வேண்டாம். (அடிவானில் நீளவாக்கில் தென்படும்) இந்த வெண்மை -வைகறை "வெளிப்படும் வரை" அல்லது "தோன்றும்வரை"- ஏமாற்றி (தடுத்து) விடவேண்டாம்.
இதை சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் உரையாற்றுகையில் அறிவித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் சமுரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹதீஸ் தொடங்குகிறது.
அத்தியாயம் : 13
பாடம் : 9 சஹர் செய்வதன் சிறப்பு; அது வலியுறுத்தப்பெற்ற விரும்பத்தகுந்த செயலாகும்; சஹரை அதன் இறுதி நேரத்தில் செய்வதும்,நோன்பு துறத்தலை அதன் ஆரம்ப நேரத்தில் செய்வதும் விரும்பத்தக்கவை ஆகும்.
2000. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சஹர் செய்யுங்கள். ஏனெனில், சஹர் செய்வதில் அருள்வளம் (பரக்கத்) உள்ளது.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2001. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நமது நோன்பிற்கும் வேதக்காரர்களின் உபவாசத்திற்கும் இடையில் உள்ள வேறுபாடு சஹர் நேரத்தில் உண்பதுதான்.
இதை அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2002. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"நாங்கள் சஹர் செய்துவிட்டுப் பின்னர் (ஃபஜ்ர்) தொழுகைக்குத் தயாராவோம்" என்று ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறினார்கள். நான், "சஹருக்கும் (ஃபஜ்ர்) தொழுகைக்குமிடையே எவ்வளவு இடைவெளி இருக்கும்?" என்று கேட்டேன். அதற்கு ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், "(குர்ஆனில்) ஐம்பது வசனங்கள் (ஓதும் நேரம்)" என்று பதிலளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இன்னும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2003. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நோன்பு துறப்பதை விரைவுபடுத்தும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் நிலைத்திருப்பார்கள்.
இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடமிருந்தே வேறு இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2004. அபூஅத்திய்யா மாலிக் பின் ஆமிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நானும் மஸ்ரூக் (ரஹ்) அவர்களும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றோம். "இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! இரு நபித்தோழர்களில் ஒருவர் விரைந்து நோன்பு துறக்கிறார்; (மஃக்ரிப் தொழுகையின் ஆரம்ப நேரத்திலேயே) விரைந்து தொழுகிறார். இன்னொருவர், நோன்பு துறப்பதையும் தாமதப்படுத்துகிறார்; தொழுகையையும் தாமதப் படுத்துகிறார் (இவ்விருவரில் யார் செய்வது சரி?)" என்று கேட்டோம். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் "விரைந்து நோன்பு துறந்து, விரைந்து தொழுபவர் யார்?" என்று கேட்டார்கள். நாங்கள் "அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்" என்றோம். அதற்கு, "இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்வார்கள்" என்று ஆயிஷா (ரலி) அவர்கள் விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், அபூகுறைப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "இன்னொரு நபித்தோழர் அபூமூசா (ரலி) ஆவார்" என அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 13
2005. அபூஅத்திய்யா மாலிக் பின் ஆமிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நானும் மஸ்ரூக் (ரஹ்) அவர்களும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது மஸ்ரூக், ஆயிஷா (ரலி) அவர்களிடம் "முஹம்மத் (ஸல்) அவர்களின் தோழர்களில் இருவர் நன்மையில் குறைவைப்பவர்கள் அல்லர். அவ்விருவரில் ஒருவர் மஃக்ரிப் தொழுகையையும் நோன்பு துறப்பதையும் விரைவாகவே செய்கிறார். மற்றொருவர் அவ்விரண்டையுமே தாமதப்படுத்துகிறார்" என்று கூறினார். அப்போது "மஃக்ரிபையும் நோன்பு துறப்பதையும் விரைவுபடுத்துபவர் யார்?" என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்" என்றார் மஸ்ரூக். ஆயிஷா (ரலி) அவர்கள், "இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்வார்கள்" என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 13
பாடம் : 10 நோன்பு முடியும் நேரமும் பகலின் வெளியேற்றமும்.
2006. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரவு வந்து, பகல் போய், சூரியன் மறைந்துவிட்டால் நோன்பாளி நோன்பு துறப்பார்.
இதை உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2007. அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்றவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். சூரியன் மறைந்ததும், "இன்ன மனிதரே, (ஒட்டகத்திலிருந்து) இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக!" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அவர், "அல்லாஹ்வின் தூதரே! பகல் இன்னும் எஞ்சியுள்ளதே?" என்று சொன்னார். "இன்ன மனிதரே, (ஒட்டகத்திலிருந்து) இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக!" என்று (மீண்டும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். எனவே, அவர் இறங்கிவந்து, மாவு கரைத்துக் கொண்டுவந்தார். உடனே நபி (ஸல்) அவர்கள் அதை அருந்திவிட்டு, "சூரியன் இங்கிருந்து மறைந்து, இரவு இங்கிருந்து வந்துவிட்டால் நோன்பாளி நோன்பு துறப்பார்" என்று கையால் சைகை செய்து கூறினார்கள்.
அத்தியாயம் : 13
2008. அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஒரு பயணத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். சூரியன் மறைந்ததும் ஒரு மனிதரிடம், "(ஒட்டகத்திலிருந்து) இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக" என்று சொன்னார்கள். அவர், "அல்லாஹ்வின் தூதரே, மாலைநேரம் ஆகட்டுமே!" என்று சொன்னார். "இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக" என்று (மீண்டும்) சொன்னார்கள். அவர், "இன்னும் பகல் இருக்கிறதே!" என்று சொல்லிவிட்டு, இறங்கி நபி அவர்களுக்காக மாவு கரைத்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை அருந்தினார்கள். பின்னர், கிழக்குத் திசையை நோக்கி சைகை செய்து "இரவு இங்கிருந்து முன்னோக்கி வந்துவிட்டதை நீங்கள் காணும்போது நோன்பாளி நோன்பு துறப்பார்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (ஒரு பயணத்தில்) சென்றோம். அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். சூரியன் மறைந்ததும், "இன்ன மனிதரே, இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக" என்று கூறினார்கள் என அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள் என ஹதீஸ் தொடங்குகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 13
2009. மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், மேற்கண்ட இரு ஹதீஸ்களில் உள்ள தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், இந்த அறிவிப்புகளில் "ரமளான் மாதத்தில்" எனும் குறிப்போ, "இரவு இங்கிருந்து வந்துவிட்டால்" எனும் சொற்றொடரோ காணப்படவில்லை. ஹுஷைம் பின் பஷீர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் மட்டுமே இவ்வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 13
பாடம் : 11 தொடர்நோன்பு நோற்பதற்கு வந்துள்ள தடை.
2010. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
நபி (ஸல்) அவர்கள் தொடர்நோன்பு நோற்கலாகாது எனத் தடைவிதித்தார்கள். "நீங்கள் தொடர்நோன்பு நோற்கிறீர்களே?" என்று மக்கள் வினவினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நான் (இந்த விஷயத்தில்) உங்களைப் போன்றவன் அல்லன்; எனக்கு (இறைவனிடமிருந்து) உணவும் பானமும் வழங்கப்படுகிறது" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 13
2011. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ரமளான் மாதத்தில் தொடர்நோன்பு நோற்றார்கள். மக்களும் அவ்வாறே தொடர்நோன்பு நோற்றனர். ஆனால், மக்களுக்குத் தடை விதித்துவிட்டார்கள். "நீங்கள் தொடர்நோன்பு நோற்கிறீர்களே?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "நான் (இந்த விஷயத்தில்) உங்களைப் போன்றவன் அல்லன். எனக்கு (என் இறைவனிடமிருந்து) உணவும் பானமும் வழங்கப்படுகிறது" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "ரமளான் மாதத்தில்" எனும் குறிப்பு இடம் பெறவில்லை.
அத்தியாயம் : 13
2012. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொடர்நோன்பிற்குத் தடை விதித்தார்கள். அப்போது முஸ்லிம்களில் ஒருவர், "தாங்கள் மட்டும் தொடர்நோன்பு நோற்கிறீர்களே, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களில் என்னைப் போன்றவர் யார் இருக்கிறார்? எனக்கு என் இறைவன் உண்ணவும் பருகவும் வழங்குகின்ற நிலையில் நான் இரவைக் கழிக்கிறேன்" என்று சொன்னார்கள். ஆனால், தொடர்நோன்பு நோற்பதிலிருந்து விலகிக்கொள்ள மக்கள் மறுத்தபோது,தம்முடன் ஒரு நாள் தொடர்நோன்பு நோற்க மக்களையும் நபியவர்கள் அனுமதித்தார்கள். பின்னர் அடுத்த நாளும் அனுமதித்தார்கள். பிறகு (அடுத்த மாதத்தின்) தலைப்பிறையை மக்கள் கண்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் "தலைப்பிறை இன்னும் தள்ளிப்போயிருந்தால் (உங்களால் இயலாத அளவிற்குத் தொடர்நோன்பு நோற்பதை) மேலும் நான் உங்களுக்கு அதிகப் படுத்தியிருப்பேன்" என்று சொன்னார்கள். மக்கள் தொடர்நோன்பு நோற்பதிலிருந்து விலகிக் கொள்ள மறுத்ததைக் கண்டிக்கும் விதத்திலேயே இவ்வாறு கூறினார்கள்.
அத்தியாயம் : 13
2013. அபூஹுரைரா ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தொடர்நோன்பு நோற்பதிலிருந்து உங்களை நான் எச்சரிக்கிறேன்" என்று கூறினார்கள். "தாங்கள் மட்டும் தொடர்நோன்பு நோற்கிறீர்களே, அல்லாஹ்வின் தூதரே?" என்று மக்கள் கேட்டார்கள். "இவ்விஷயத்தில் நீங்கள் என்னைப் போன்றவர்கள் அல்லர். எனக்கு என் இறைவன் உண்ணவும் பருகவும் வழங்குகின்ற நிலையில் நான் இரவைக் கழிக்கிறேன். எனவே, நற்செயல்களில் உங்களால் இயன்ற சுமையை மட்டும் ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. ஆயினும், அதில் "உங்களுக்குச் சக்தியுள்ள சுமையை மட்டுமே ஏற்றுக்கொள்ளுங்கள்" என இடம் பெற்றுள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "நபி (ஸல்) அவர்கள், தொடர் நோன்பிற்குத் தடை விதித்தார்கள்" என ஹதீஸ் தொடங்குகிறது.
அத்தியாயம் : 13
2014. அனஸ் ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் தொழுவார்கள். (ஒரு நாள்) நான் சென்று அவர்களுக்கு விலாப் பக்கத்தில் நின்றுகொண்டேன். இன்னொரு மனிதர் வந்து அவரும் நின்றுகொண்டார். இறுதியில் நாங்கள் ஒரு கூட்டமாகவே ஆகிவிட்டோம். தமக்குப் பின்னால் நாங்கள் நிற்பதை நபி (ஸல்) அவர்கள் உணர்ந்ததும் தொழுகையைச் சுருக்கலானார்கள். பிறகு தமது இல்லத்திற்குள் சென்று, எங்களுடன் தொழாத விதத்தில் (நீளமாகத்) தொழுதார்கள். காலையில் நாங்கள் அவர்களிடம் "இந்த இரவு (உங்களுக்குப் பின்னால் இருந்த) எங்களைத் தாங்கள் அறிந்தீர்களா?" என்று கேட்டோம். அதற்கு அவர்கள் "ஆம். அதுதான் நான் எதைச் செய்தேனோ அதைச் செய்ததற்கு (சுருக்கித் தொழுததற்கு)க் காரணமாக அமைந்தது" என்று சொன்னார்கள். அந்த மாதத்தின் இறுதியில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொடர்நோன்பு நோற்க ஆரம்பித்தார்கள். அவர்களுடைய தோழர்களில் சிலரும் அவ்வாறே தொடர்நோன்பு நோற்கலாயினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், "சிலருக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் தொடர்நோன்பு நோற்கிறார்கள்! நீங்கள் (இவ்விஷயத்தில்) என்னைப் போன்றவர்கள் அல்லர். கவனத்தில் வையுங்கள்! அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த மாதம் இன்னும் தள்ளிப்போயிருந்தால் (உங்களால் தொடர இயலாத அளவிற்கு) இன்னும் பல நாட்கள் நான் தொடர்நோன்பு நோற்றிருப்பேன். அப்போது (வழிபாடுகளில்) அதீத ஆர்வம் காட்டுவோர் தங்கள் போக்கைக் கைவிட்டிருப்பர்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 13
2015. அனஸ் ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தின் ஆரம்பத்தில் தொடர்நோன்பு நோற்றார்கள். (இதைக் கண்டு) முஸ்லிம்கள் சிலரும் தொடர்நோன்பு நோற்றார்கள். இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது அவர்கள், "எமக்கு (மட்டும்) இந்த மாதம் (எத்தனை நாட்கள்) நீட்டிக்கப்பட்டிருந்தாலும் எம்மால் தொடர்நோன்பு நோற்றிருக்க முடியும். அப்போது (வழிபாடுகளில்) அதீத ஆர்வம் காட்டுபவர்கள் தங்களது போக்கைக் வைவிட்டிருப்பர். "நீங்கள் (இவ்விஷயத்தில்) என்னைப் போன்றவர்கள் அல்லர்" அல்லது "நான் உங்களைப் போன்றவன் அல்லன்". எனக்கு என் இறைவன் உண்ணவும் பருகவும் வழங்கும் நிலையில் நான் பகல் நேரத்தைக் கழிக்கிறேன்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 13