1780. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தானியங்களில்) ஐந்து "வஸ்க்"குகளை விடக் குறைவானவற்றில் ஸகாத் இல்லை; (கால்நடைகளில்) ஐந்து ஒட்டகங்களுக்குக் குறைவானவற்றில் ஸகாத் இல்லை. (வெள்ளியில்) ஐந்து "ஊக்கியா"க்களுக்குக் குறைவானவற்றில் ஸகாத் இல்லை.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 12
1781. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மேற்கண்டவாறு) கூறியதை நான் கேட்டேன். அப்போது அவர்கள் தம்முடைய ஐந்து விரல்களால் சைகை செய்தார்கள்" என்று ஹதீஸ் தொடங்குகிறது. பிறகு மேற்கண்ட ஹதீஸில் உள்ள விவரங்களைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 12
1782. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தானியங்களில்) ஐந்து "வஸ்க்"குகளை விடக் குறைவானவற்றில் ஸகாத் இல்லை; (கால்நடைகளில்) ஐந்து ஒட்டகங்களுக்குக் குறைவானவற்றில் ஸகாத் இல்லை. (வெள்ளி யில்) ஐந்து "ஊக்கியா"க்களுக்குக் குறைவானவற்றில் ஸகாத் இல்லை.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 12
1783. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பேரீச்சம் பழத்திலும் தானியத்திலும் ஐந்து "வஸ்க்"குகளைவிடக் குறைவானவற்றில் ஸகாத் இல்லை.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1784. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தானியத்திலும் பேரீச்சம் பழத்திலும் ஐந்து "வஸ்க்"குகளை எட்டாதவரை ஸகாத் இல்லை; ஐந்து ஒட்டகங்களுக்குக் குறைவானவற்றில் ஸகாத் இல்லை. (வெள்ளியில்) ஐந்து "ஊக்கியா"க்களைவிடக் குறைவானவற்றில் ஸகாத் இல்லை.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
ஆயினும், அவற்றில் "பேரீச்சம் பழம்" (தம்ர்) என்பதற்கு பதிலாக "பழம்" (ஸமர்) என்று (பொதுவாக) இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 12
1785. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வெள்ளியில் ஐந்து "ஊக்கியா"க்களைவிடக் குறைவானவற்றில் ஸகாத் இல்லை. ஐந்து ஒட்டகங்களுக்குக் குறைவானவற்றில் ஸகாத் இல்லை. பேரீச்சம் பழத்தில் ஐந்து "வஸ்க்" குகளை விடக் குறைவானவற்றில் ஸகாத் இல்லை.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது
அத்தியாயம் : 12
பாடம் : 1 பத்திலொரு பாகம், அல்லது அதில் பாதி கடமையாகும் ஸகாத்.
1786. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நதிகளாலும் மழையாலும் முளைத்தவற்றில் பத்து சதவீதம் (ஸகாத் கடமை) ஆகும். ஒட்டகத்தின் மூலம் நீர் பாய்ச்சி முளைத்தவற்றில் ஐந்து சதவீதம் (ஸகாத் கடமை) ஆகும்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
பாடம் : 2 ஒரு முஸ்லிம் தம் அடிமைக்காகவும் குதிரைக்காகவும் ஸகாத் கொடுக்க வேண்டியதில்லை.
1787. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிமின் அடிமைக்காகவோ குதிரைக்காகவோ அவர்மீது (ஸகாத் கடமை) இல்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 12
1788. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிமின் அடிமைக்காகவோ குதிரைக்காகவோ அவர்மீது (ஸகாத் கடமை) இல்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1789. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அடிமைக்காக (உரிமையாளன்மீது) ஸகாத் (கடமை) இல்லை; நோன்புப் பெருநாள் தர்மத்தைத் தவிர.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
பாடம் : 3 (ஓராண்டு முழுமை அடைவதற்கு முன்பே) ஸகாத் வழங்குவதும் ஸகாத் வழங்க மறுப்பதும்.
1790. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸகாத் வசூலிப்பதற்காக உமர் (ரலி) அவர்களை அனுப்பினார்கள். அப்போது "இப்னு ஜமீல்,காலித் பின் அல்வலீத் மற்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய பெரிய தந்தை அப்பாஸ் (ரலி) ஆகியோர் (ஸகாத் வழங்க) மறுத்துவிட்டனர்" என்று கூறப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இப்னு ஜமீல் ஏழையாக இருந்து, அல்லாஹ் அவரைச் செல்வ(ந்த)ராக ஆக்கிய பிறகே அவர் (ஸகாத் வழங்க) மறுத்துள்ளார். காலிதைப் பொறுத்தவரை, நீங்கள் காலிதுக்கு அநீதி இழைக்கின்றீர்கள். அவரோ தம் கவசஉடைகளையும் போர்த்தளவாடங்களையும் அல்லாஹ்வின் பாதையில் (அறக்கொடையாக) வழங்க முடிவு செய்திருந்தார். அப்பாஸ் அவர்களைப் பொறுத்தவரையில் அவரது ஸகாத்தையும் அதைப்போன்ற இன்னொரு மடங்கையும் வழங்குவது என்மீது பொறுப்பாகும். உமரே! ஒருவருடைய தந்தையின் சகோதரர் அவருடைய தந்தையைப் போன்றவர் ஆவார் என்பது உமக்குத் தெரியாதா?" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 12
பாடம் : 4 நோன்புப் பெருநாள் தர்மமாகப் பேரீச்சம் பழம், தோல் நீக்கப்படாத கோதுமை ஆகியவற்றை வழங்குவது முஸ்லிம்கள் மீது கடமையாகும்.
1791. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஸ்லிம்களில் சுதந்திரமானவர்கள், அடிமைகள், ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய அனைவர் மீதும் பேரீச்சம் பழத்தில் ஒரு "ஸாஉ" அல்லது தோல் நீக்கப்படாத (வாற்) கோதுமையில் ஒரு "ஸாஉ" (ஏழைகளுக்கு வழங்குவது கடமையாகும்) என ரமளான் நோன்புப் பெருநாள் தர்மத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்கு நிர்ணயித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1792. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அடிமைகள், சுதந்திரமானவர்கள் ஆகியோரில் சிறியவர், பெரியவர் அனைவர்மீதும் பேரீச்சம் பழத்தில் ஒரு "ஸாஉ" அல்லது தோல் நீக்கப்படாத (வாற்)கோதுமையில் ஒரு "ஸாஉ" (ஏழைகளுக்கு வழங்குவது கடமையாகும்) என நோன்புப் பெருநாள் தர்மத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1793. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
சுதந்திரமானவர்கள், அடிமைகள், ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவர்மீதும் பேரீச்சம் பழத்தில் ஒரு "ஸாஉ" அல்லது தோல் நீக்கப்படாத (வாற்)கோதுமையில் ஒரு "ஸாஉ" (ஏழைகளுக்கு வழங்குவது கடமையாகும்) என ரமளான் தர்மத்தை நபி (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். பிறகு மக்கள் (தோல் நீக்கப்பட்ட) மணிக்கோதுமையில் அரை "ஸாஉ"வை அதற்குச் சமமாக ஆக்கினர்.
அத்தியாயம் : 12
1794. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு "ஸாஉ" பேரீச்சம்பழத்தையோ அல்லது ஒரு "ஸாஉ" தோல் நீக்கப்படாத (வாற்)கோதுமையையோ நோன்புப் பெருநாள் தர்மமாக வழங்கும்படி கட்டளையிட்டார்கள்.
மக்கள் ஒரு "ஸாஉ" தோல் நீக்கப்படாத கோதுமைக்குச் சமமாக இரண்டு "முத்"து (அரை "ஸாஉ") தோல் நீக்கப்பட்ட (மணிக்) கோதுமையை ஆக்கிக்கொண்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1795. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஸ்லிம்களில் சுதந்திரமானவர்கள், அடிமைகள், ஆண்கள், பெண்கள், சிறியவர்கள், பெரியவர்கள் ஆகிய அனைவர் மீதும் பேரீச்சம் பழத்தில் ஒரு "ஸாஉ" அல்லது தோல் நீக்கப்படாத (வாற்)கோதுமையில் ஒரு "ஸாஉ" (ஏழைகளுக்கு வழங்குவது கடமையாகும்) என ரமளான் தர்மத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள்.
அத்தியாயம் : 12
1796. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நோன்புப் பெருநாள் தர்மமாக ஏதேனும் உணவிலிருந்து ஒரு "ஸாஉ", அல்லது தோல் நீக்கப்படாத (வாற்)கோதுமையிலிருந்து ஒரு "ஸாஉ", அல்லது பாலாடைக் கட்டியிலிருந்து ஒரு "ஸாஉ", அல்லது உலர்ந்த திராட்சையிலிருந்து ஒரு "ஸாஉ" வழங்கிவந்தோம்.
அத்தியாயம் : 12
1797. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
எங்களிடையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்த காலத்தில் சிறியவர், பெரியவர், சுதந்திரமானவர், அடிமை என அனைவருக்காகவும் நாங்கள் ஏதேனும் உணவிலிருந்து ஒரு ஸாஉ, அல்லது பாலாடைக் கட்டியிலிருந்து ஒரு "ஸாஉ", அல்லது தோல் நீக்கப்படாத (வாற்)கோதுமையிலிருந்து ஒரு "ஸாஉ", அல்லது பேரீச்சம் பழத்திலிருந்து ஒரு "ஸாஉ", அல்லது உலர்ந்த திராட்சையிலிருந்து ஒரு "ஸாஉ" நோன்புப் பெருநாள் தர்மமாக வழங்கிவந்தோம். முஆவியா பின் அபீ சுஃப்யான் (ரலி) அவர்கள் ஹஜ் அல்லது உம்ராவிற்காக எங்களிடம் வரும்வரையில் இவ்வாறே நாங்கள் வழங்கிவந்தோம். முஆவியா (ரலி) அவர்கள் (எங்களிடம் வந்ததும்) சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது நின்று மக்களுக்கு உரையாற்றினார்கள். அவர்கள் மக்களுக்கு ஆற்றிய உரையில் "ஷாம் (சிரியா) பகுதியின் தோல் நீக்கப்பட்ட (மணிக்) கோதுமையில் இரு "முத்"துகள், பேரீச்சம் பழத்தின் ஒரு "ஸாஉ"க்கு நிகரானதாகும் என நான் கருதுகிறேன்" என்று குறிப்பிட்டார்கள். மக்கள் அதைப் பிடித்துக்கொண்டனர்.
நானோ (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில்) வழங்கியதைப் போன்றே நான் உயிர் வாழும்வரை வழங்கிக்கொண்டிருப்பேன்.
அத்தியாயம் : 12
1798. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
எங்களிடையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்த காலத்தில் சிறியவர், பெரியவர், சுதந்திரமானவர், அடிமை என அனைவருக்காகவும் பேரீச்சம் பழத்திலிருந்து ஒரு "ஸாஉ", பாலாடைக் கட்டியிலிருந்து ஒரு "ஸாஉ", தோல் நீக்கப்படாத (வாற்) கோதுமையிலிருந்து ஒரு "ஸாஉ" ஆகிய மூன்று இனங்களிலிருந்து நோன்புப் பெருநாள் தர்மம் வழங்கிவந்தோம். முஆவியா (ரலி) அவர்கள் வரும்வரையில் இவ்வாறே வழங்கிவந்தோம். பிறகு முஆவியா (ரலி) அவர்கள் தோல் நீக்கப்பட்ட (மணிக்) கோதுமையிலிருந்து இரு "முத்"து, ஒரு "ஸாஉ" பேரீச்சம் பழத்திற்கு ஈடானதாகும் என்று கருதினார்கள்.
நானோ (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில்) வழங்கியதைப் போன்றே வழங்கிக் கொண்டிருப்பேன்.
அத்தியாயம் : 12
1799. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் பாலாடைக்கட்டி, பேரீச்சம் பழம், தோல் நீக்கப்படாத (வாற்)கோதுமை ஆகிய மூன்று இனங்களிலிருந்தே நோன்புப் பெருநாள் தர்மத்தை வழங்கிவந்தோம்.
அத்தியாயம் : 12