பாடம் : 21 ஓய்வு பெற்றவரும் ஓய்வு அளித்தவரும்.
1732. அபூகத்தாதா ஹாரிஸ் ரிப்ஈ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கடந்து ஒரு பிரேதம் (ஜனாஸா) கொண்டு செல்லப்பட்டது. அப்போது அவர்கள் "(இவர்) ஓய்வு பெற்றவராவார்; அல்லது (பிறருக்கு) ஓய்வு அளித்தவராவார்" என்று சொன்னார்கள். மக்கள் "அல்லாஹ்வின் தூதரே,ஓய்வு பெற்றவர்; அல்லது ஓய்வு அளித்தவர் என்றால் என்ன?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இறைநம்பிக்கைகொண்ட அடியார் (இறக்கும்போது) இவ்வுலகத்தின் துன்பத்திலிருந்து ஓய்வு பெறுகிறார். பாவியான அடியான் (இறக்கும்போது) அவனி(ன் எல்லா விதமான தொல்லையி)லிருந்து மற்ற அடியார்கள், (நாடு) நகரங்கள், மரங்கள் மற்றும் கால்நடைகள் ஆகியன ஓய்வு(பெற்று நிம்மதி) பெறுகின்றன" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "இவ்வுலகத்தின் தொல்லையிலிருந்தும் துன்பத்திலிருந்தும் ஓய்வு பெற்று இறையருளை நோக்கிச் செல்கிறார்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 11
பாடம் : 22 ஜனாஸாத் தொழுகையில் சொல்ல வேண்டிய தக்பீர்கள்.
1733. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அபிசீனிய மன்னர்) நஜாஷீ (நீகஸ்) இறந்த அன்றே அவரது மரணச்செய்தியை மக்களுக்கு அறிவித்தார்கள். பிறகு மக்களுடன் "முஸல்லா" எனும் தொழும்திடலுக்குப் புறப்பட்டுச் சென்று ("அல்லாஹு அக்பர்" என்று) நான்கு "தக்பீர்"கள் கூறி (ஜனாஸாத் தொழுகை நடத்தி)னார்கள்.
அத்தியாயம் : 11
1734. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபிசீனிய மன்னர் நஜாஷீ இறந்த அன்றே அவரது மரணச்செய்தியை எங்களிடம் அறிவித்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உங்கள் சகோதரருக்காகப் பாவமன்னிப்புக் கோருங்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்களிடமிருந்து இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அறிவிக்கும் அறிவிப்பில் "பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களை தொழுகைத்திடலில் அணிவகுக்கச் செய்து நான்கு "தக்பீர்"கள் கூறி ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள்" என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
1735. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அஸ்ஹமா" எனும் நஜாஷீ (மன்னரு)க்கு நான்கு "தக்பீர்" கூறி (ஜனாஸாத் தொழுகை நடத்தி)னார்கள்.
அத்தியாயம் : 11
1736. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இன்று அல்லாஹ்வின் நல்லடியார் ஒருவர் (நஜாஷீ மன்னர்) அஸ்ஹமா இறந்து விட்டார்" என்று கூறினார்கள். பின்னர் எழுந்து எங்களுக்கு முன்னால் நின்று அவருக்காக (இறுதித் தொழுகை) தொழுதார்கள்.
அத்தியாயம் : 11
1737. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நஜாஷீ மன்னர் இறந்த அன்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உங்கள் சகோதரர் ஒருவர் இறந்துவிட்டார். எனவே,அவருக்காக எழுந்து தொழுங்கள்!" என்று கூறினார்கள். நாங்கள் எழுந்து இரு வரிசையாக அணி வகுத்தோம்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
1738. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நஜாஷீ மன்னர் இறந்த அன்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உங்கள் சகோதரர் ஒருவர் -அதாவது நஜாஷீ- இறந்துவிட்டார். எனவே, அவருக்காக எழுந்து தொழுங்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
பாடம் : 23 மண்ணறை (கப்று) அருகில் (இறுதித் தொழுகை) தொழுவது.
1739. சுலைமான் பின் அபீசுலைமான் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பிரேதம் அடக்கம் செய்யப்பட்ட பின் அதன் மண்ணறை (கப்று) அருகில் நின்று நான்கு "தக்பீர்"கள் கூறி (ஜனாஸாத் தொழுகை நடத்தி)னார்கள் என ஷஅபீ (ஆமிர் பின் ஷராஹீல்-ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
நான் "இதை உங்களுக்கு அறிவித்தவர் யார்?" என ஷஅபீ அவர்களிடம் கேட்டேன். அதற்கு "நம்பத்தகுந்த வலுவான அறிவிப்பாளரான இப்னு அப்பாஸ் (ரலி)" என்று விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் ஹசன் பின் அர்ரபீஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பிலேயே மேற்கண்ட வாசகம் இடம்பெற்றுள்ளது.
முஹம்மத் பின் அப்தில்லாஹ் பின் நுமைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஈரம் உலர்ந்திராத (புதிய) மண்ணறை (கப்று) நோக்கிச் சென்று நான்கு "தக்பீர்"கள் கூறி தொழுவித்தார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதனர்" என இடம்பெற்றுள்ளது.
ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் ஆமிர் பின் ஷராஹீல் (ரஹ்) அவர்களிடம் "(இதை) உங்களுக்கு அறிவித்தவர் யார்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "நம்பத் தகுந்தவரும் (நிகழ்ச்சியில்) கலந்துகொண்டவருமான இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்தாம்" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஏழு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் எதிலும் நபி (ஸல்) அவர்கள் அத்தொழுகையில் நான்கு "தக்பீர்"கள் கூறினார்கள் எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 11
1740. மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
இம்மூன்று அறிவிப்புகளிலும் "நான்கு தக்பீர்கள் கூறினார்கள்" என்ற குறிப்பு இடம் பெறவில்லை.
அத்தியாயம் : 11
1741. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு மண்ணறை (கப்று) அருகில் (அதற்கான இறுதித் தொழுகை) தொழுதார்கள்.
அத்தியாயம் : 11
1742. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலைக் கூட்டிப் பெருக்குபவராக இருந்த கறுத்த "பெண்" அல்லது "இளைஞர்" ஒருவரைக் காணாமல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். "அவர் இறந்துவிட்டார்" என மக்கள் தெரிவித்தனர். "நீங்கள் எனக்குத் தெரிவித்திருக்கக் கூடாதா?" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் (இறந்த) விஷயத்தை மக்கள் அற்பமாகக் கருதி விட்டனர் போலும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவரது மண்ணறையை எனக்குக் காட்டுங்கள்" என்று கூறினார்கள். மக்கள் அதைக் காட்டியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு (சென்று) அவருக்காக (இறுதித்) தொழுகை நடத்தினார்கள். பிறகு "இந்த அடக்கத்தலங்கள், அவற்றில் வசிப்போருக்கு இருள் மண்டிக்காணப்படுகின்றன. வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ், எனது தொழுகையின் மூலம் அவற்றில் அவர்களுக்கு வெளிச்சத்தை ஏற்படுத்துவான்" என்று கூறினார்கள். - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
1743. அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள், எங்களில் இறந்தவர்களுக்கு (ஜனாஸாத் தொழுகை) தொழுவிக்கும்போது, (பெரும்பாலும்) நான்கு தக்பீர்கள் கூறுவார்கள். (ஆனால்) ஒரு ஜனாஸாத் தொழுகையின் போது ஐந்து தக்பீர்கள் கூறினார்கள். இதுபற்றி நான் அவர்களிடம் கேட்டதற்கு "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சில வேளைகளில்) ஐந்து தக்பீர்கள் கூறுபவர்களாய் இருந்தார்கள்" என்று விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
பாடம் : 24 ஜனாஸாவைக் கண்டு எழுந்து நிற்றல்.
1744. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பிரேதத்தைக் கண்டால் அது "உங்களைக் கடந்து செல்லும்வரை" அல்லது "(கீழே) வைக்கப் படும்வரை" அதற்காக எழுந்து நில்லுங்கள்.
இதை ஆமிர் பின் ரபீஆ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
1745. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் பிரேதத்தைக் கண்டும் அதனுடன் (நடந்து) செல்லப்போவதில்லை என்றால், அது அவரைக் கடந்துசெல்லும் வரை, அல்லது அது அவரைக் கடந்துசெல்வதற்கு முன்னால் (கீழே) வைக்கப்படும்வரை அவர் எழுந்து நிற்கட்டும்!
இதை ஆமிர் பின் ரபீஆ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
1746. மேற்கண்ட ஹதீஸ் ஆமிர் பின் ரபீஆ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "உங்களில் ஒருவர் பிரேதத்தைக் கண்டால் அதைப் பின்தொடரும் எண்ணம் இல்லாதபோது, அது கடந்து செல்லும்வரை அவர் எழுந்து நிற்கட்டும்" என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 11
1747. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் பிரேதத்தைப் பின்தொடர்ந்து சென்றால், அது (கீழே) வைக்கப்படும்வரை உட்கார வேண்டாம்!
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 11
1748. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் பிரேதத்தைக் கண்டால் எழுந்து நில்லுங்கள். அதைப் பின்தொடர்ந்து செல்பவர், அது (கீழே) வைக்கப்படும்வரை உட்கார வேண்டாம்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
1749. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பிரேதம் (ஜனாஸா) எங்களைக் கடந்து சென்றபோது உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து நின்றார்கள். அவர்களுடன் நாங்களும் எழுந்து நின்றோம். நாங்கள் "அல்லாஹ்வின் தூதரே, இது யூதப் பெண்ணின் பிரேதம்" என்றோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "மரணம் என்பது திடுக்கிடச் செய்யும் ஒரு விஷயமாகும். எனவே, பிரேதத்தைக் கண்டால் எழுந்து நில்லுங்கள்!" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
1750. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு பிரேதம் தம்மைக் கடந்து சென்றபோது எழுந்து, அது (தமது கண்ணை விட்டு) மறையும்வரை நின்றார்கள்.
அத்தியாயம் : 11
1751. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு யூதரின் பிரேதத்திற்காக நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் எழுந்து, அது (கண்ணைவிட்டு) மறையும்வரை நின்றனர்.
அத்தியாயம் : 11