பாடம் : 15 மய்யித்திற்கு அழகிய முறையில் கஃபன் அணிவித்தல்.
1720. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் (எங்களிடையே) உரையாற்றுகையில், தம் தோழர் ஒருவரை நினைவுகூர்ந்தார்கள். அவர் இறந்தபோது நிறைவான கஃபன் அணிவிக்கப்படாமல் (அரைகுறை கஃபனில்) இரவிலேயே அடக்கம் செய்யப்பட்டார். எனவே, நபி (ஸல்) அவர்கள் (தாம் கலந்துகொண்டு) தொழவைக்கப்படாமல் இரவிலேயே ஒருவர் அடக்கம் செய்யப்படுவதைக் கண்டித்தார்கள். ஒருவருக்கு நிர்ப்பந்தம் ஏற்பட்டால் தவிர (அவ்வாறு செய்யவேண்டாம் எனத் தடைவிதித்தார்கள்). மேலும், "உங்களில் ஒருவர் தம் சகோதரருக்குக் கஃபனிடும்போது அழகிய முறையில் கஃபனிடட்டும்!" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
பாடம் : 16 பிரேதத்தைத் துரிதமாக எடுத்துச் செல்லல்.
1721. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பிரேதத்தைத் துரிதமாகக் கொண்டுசெல்லுங்கள். ஏனெனில், அது (பிரேதம்) நல்லறங்கள் புரிந்ததாயிருந்தால் (அதற்கான) நன்மையின் பக்கம் அதை விரைவுபடுத்துகிறீர்கள். வேறு விதமாக அது இருந்தால், ஒரு தீங்கை உங்கள் தோள்களிலிருந்து (விரைவாக) இறக்கி வைக்கிறீர்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், மஅமர் பின் ராஷித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்தே அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் என்றே நான் கருதுகிறேன்" என இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 11
1722. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பிரேதத்தைத் துரிதமாகக் கொண்டு செல்லுங்கள். ஏனெனில், அது நல்லதாயிருந்தால், நன்மையின் பக்கம் அதைக் கொண்டு சேர்க்கிறீர்கள். அது வேறுவிதமாக இருந்தால், ஒரு தீங்கை உங்கள் தோள்களிலிருந்து (விரைவாக) இறக்கிவைத்தவர்கள் ஆவீர்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
பாடம் : 17 ஜனாஸா (பிரேத)த் தொழுகை மற்றும் ஜனாஸாவைப் பின்தொடர்தல் ஆகியவற்றின் சிறப்பு.
1723. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"யார் ஜனாஸா (பிரேத)த் தொழுகையில் பங்கேற்கின்றாரோ அவருக்கு ஒரு "கீராத்" நன்மையுண்டு; அடக்கம் செய்யப்படும்வரை யார் கலந்துகொள்கிறாரோ அவருக்கு இரண்டு "கீராத்"கள் நன்மை உண்டு" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது "இரண்டு "கீராத்கள்” என்றால் என்ன?" என வினவப்பட்டது. அதற்கு அவர்கள் "இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மை)" என்று விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் ஹர்மலா பின் யஹ்யா மற்றும் ஹாரூன் பின் சயீத் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறியதாக (பின்வருமாறு) இடம்பெற்றுள்ளது:
"இப்னு உமர் (ரலி) அவர்கள் ஜனாஸாத் தொழுகை தொழுவித்(து முடித்)ததும் திரும்பிச் சென்று விடுவார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்களின் இந்த ஹதீஸ் அவர்களுக்கு எட்டிய போது, "நாம் ஏராளமான "கீராத்” (நன்மை)களை வீணாக்கிவிட்டோம்" என்று கூறினார்கள்" என சாலிம் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், அப்துல் அஃலா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் மேற்கண்ட ஹதீஸின் முழு வடிவமும் இடம்பெற்றுள்ளது. மற்ற இரு அறிவிப்பாளர்தொடர்களில் "இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மை)" என்பதுவரையே இடம்பெற்றுள்ளது. அதற்குப் பின்னுள்ள தகவல் இடம்பெறவில்லை.
அப்துல் அஃலா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அடக்கம் முடியும்வரை கலந்து கொள்பவருக்கு” என்ற வாசகமும், அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "குழியில் வைக்கப்படும்வரை கலந்துகொள்பவருக்கு இரண்டு "கீராத்"கள் (நன்மை) உண்டு" என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளன.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அடக்கப்படும்வரை அ(ந்த பிரேதத்)தைப் பின்தொடர்பவருக்கு இரண்டு "கீராத்"கள் (நன்மை) உண்டு" என இடம்பெற்றுள்ளது. இதர விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 11
1724. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"ஜனாஸா (பிரேத)த் தொழுகையில் பங்கேற்ற ஒருவர் (அதை அடக்கம் செய்யும்வரை) பின் தொடர்ந்து செல்லவில்லையானால், அவருக்கு ஒரு ‘கீராத்" (நன்மையே) உண்டு; அதை (அடக்கம் செய்யும்வரை) பின்தொடர்ந்தால் அவருக்கு இரண்டு "கீராத்"கள் (நன்மை) உண்டு" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது "இரண்டு "கீராத்"கள் என்றால் என்ன?" என்று வினவப்பட்டது. அதற்கு அவர்கள் "இரண்டு "கீராத்"களில் மிகச் சிறிய அளவு, உஹுத் மலை அளவாகும்" என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 11
1725. அபூஹாஸிம் சல்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"ஜனாஸா (பிரேத)த் தொழுகையில் பங்கேற்றவருக்கு ஒரு "கீராத்" (நன்மை) உண்டு. மண்ணறையில் (கப்று) வைக்கப்படும்வரை அதைப் பின்தொடர்ந்தவருக்கு இரண்டு "கீராத்"கள் (நன்மை) உண்டு" என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள். நான் "அபூஹுரைரா (ரலி) அவர்களே! "கீராத்" என்றால் என்ன?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "உஹுத் மலை அளவு" என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 11
1726. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"யார் ஜனாஸாவைப் பின்தொடர்கிறாரோ அவருக்கு ஒரு "கீராத்" நன்மை உண்டு" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறிவருகிறார்களே!" என இப்னு உமர் (ரலி) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு "அபூஹுரைரா நம்மிடம் அதிகப்படுத்துகிறார்" என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறிவிட்டு, ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஆளனுப்பி இதைப் பற்றிக் கேட்டார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களின் கூற்றை உறுதிப்படுத்தினார்கள். இதைக் கேட்ட இப்னு உமர் (ரலி) அவர்கள் "(அப்படியாயின்) நாம் ஏராளமான "கீராத்"களைத் தவறவிட்டுவிட்டோம்" என்றார்கள்.
அத்தியாயம் : 11
1727. ஆமிர் பின் சஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுக்கு அருகில் அமர்ந்திருந்தேன். அப்போது பெரிய வீட்டுக்காரர் கப்பாப் அல்மதனீ (ரலி) அவர்கள் அங்கு வந்து, "அப்துல்லாஹ் பின் உமர் அவர்களே! "ஒரு ஜனாஸாவின் வீட்டிலிருந்து அதனுடன் புறப்பட்டுச் சென்று, (ஜனாஸாத்தொழுகை) தொழுதுவிட்டு, அடக்கம் செய்யப்படும்வரை அதைப் பின் தொடர்கின்றவருக்கு இரண்டு "கீராத்"கள் நன்மை உண்டு; ஒவ்வொரு "கீராத்"தும் உஹுத் மலை அளவுடையதாகும்; (ஜனாஸாத்) தொழுதுவிட்டு (அடக்கம் செய்யப்படும்வரை காத்திராமல்) திரும்பிவிடுகின்றவருக்கு உஹுத் மலையளவு (ஒரு "கீராத்") நன்மை உண்டு" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறிவருகின்றார்களே?" என்று கேட்டார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், கப்பாபை ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று அது பற்றிக் கேட்டுவிட்டு அவர்கள் அளிக்கும் பதிலைத் தம்மிடம் வந்து தெரிவிக்குமாறு அனுப்பிவைத்தார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், போனவர் திரும்பிவரும்வரை பள்ளிவாசல் தரையில் கிடந்த சிறு கற்களில் ஒரு கைப்பிடியளவு அள்ளி தமது கையில் வைத்து கிளறிக்கொண்டிருந்தார்கள்.
(கப்பாப் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று கேட்டதற்கு) ஆயிஷா (ரலி) அவர்கள் "அபூஹுரைரா சொன்னது உண்மையே" என்றார்கள். (இதைக் கேள்விப்பட்ட) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தமது கையிலிருந்த சிறு கற்களை கீழே எறிந்துவிட்டு, "நாம் ஏராளமான "கீராத்" (நன்மை)களை தவற விட்டுவிட்டோம்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 11
1728. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஜனாஸாத் தொழுகை தொழுதவருக்கு ஒரு "கீராத்" (நன்மை) உண்டு; (தொழுகையில் கலந்ததோடு) அதன் அடக்கத்திலும் கலந்துகொண்டால், அவருக்கு இரண்டு "கீராத்" (நன்மை)கள் உண்டு; "கீராத்" என்பது உஹுத் மலை அளவாகும்.
இதை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் அடிமையான ஸவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், சயீத் மற்றும் ஹிஷாம் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் "நபி (ஸல்) அவர்களிடம் "கீராத்" பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் "உஹுத் மலையளவு" என்று பதிலளித்தார்கள்" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 11
பாடம் : 18 யாருக்கு நூறு பேர் (இறுதித் தொழுகை) தொழுகின்றார்களோ அவருக்காக அவர்கள் செய்யும் பரிந்துரை ஏற்கப்படும்.
1729. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறந்த ஒருவருக்கு நூறுபேர் கொண்ட முஸ்லிம் குழுவினர் (இறுதித்) தொழுகை தொழுது, அவர்களில் ஒவ்வொருவரும் அவருக்காகப் பரிந்துரை செய்தால் அவர்களின் பரிந்துரை ஏற்கப்படாமல் இருப்பதில்லை.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சல்லாம் பின் அபீமுதீஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
இந்த ஹதீஸை நான் ஷுஐப் பின் அல் ஹப்ஹாப் (ரஹ்) அவர்களிடம் கூறினேன். அதற்கு அவர்கள் "இவ்வாறே எனக்கு அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்" என்றார்கள்.
அத்தியாயம் : 11
பாடம் : 19 யாருக்கு நாற்பது பேர் (இறுதித் தொழுகை) தொழுகின்றார்களோ அவருக்காக அவர்கள் செய்யும் பரிந்துரை ஏற்கப்படும்.
1730. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் அடிமையான குறைப் பின் அபீமுஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடைய புதல்வர் ஒருவர் "குதைத்" அல்லது "உஸ்ஃபான்" எனுமிடத்தில் இறந்துவிட்டார். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "குறைப்! மக்கள் ஒன்றுகூடிவிட்டனரா எனப் பார்" என்று கூறினார்கள். நான் சென்று பார்த்தபோது அங்கு மக்களில் சிலர் குழுமியிருந்தனர். நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் வந்து விஷயத்தைச் சொன்னபோது "அவர்கள் நாற்பது பேர் இருப்பார்களா, சொல்" என்றார்கள். நான் "ஆம்" என்றேன். "அதை (மய்யித்தை) எடுத்துக்கொண்டு புறப்படுங்கள்" என்று கூறிவிட்டு, "ஒரு முஸ்லிம் இறந்தவுடன் அல்லாஹ்விற்கு எதையும் இணைவைக்காத நாற்பது பேர் அவருக்காக (இறுதித் தொழுகை) தொழுதால் அவர்களின் பரிந்துரையை அல்லாஹ் ஏற்காமல் இருப்பதில்லை" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன்" என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
பாடம் : 20 இறந்தவர் குறித்துப் புகழ்ந்து பேசப்படுதல்; அல்லது இகழ்ந்து பேசப்படுதல்.
1731. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபி (ஸல்) அவர்களைக் கடந்து) ஜனாஸா (பிரேதம்) ஒன்று கொண்டுசெல்லப்பட்டது. அது குறித்து நல்ல விதமாகப் (புகழ்ந்து) பேசப்பட்டது. இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் "உறுதியாகிவிட்டது; உறுதியாகிவிட்டது; உறுதியாகிவிட்டது" என்று கூறினார்கள். பின்னர் மற்றொரு பிரேதம் கொண்டுசெல்லப்பட்டது. அது குறித்து இகழ்வாகப் பேசப்பட்டது. அப்போதும் நபி (ஸல்) அவர்கள் "உறுதியாகிவிட்டது; உறுதியாகிவிட்டது; உறுதியாகிவிட்டது" என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் "(அல்லாஹ்வின் தூதரே!) என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! ஒரு பிரேதம் கொண்டு செல்லப்பட்ட போது அது குறித்து நல்லவிதமாகப் பேசப்பட்டது. அதற்கு நீங்கள் "உறுதியாகிவிட்டது; உறுதியாகிவிட்டது; உறுதியாகிவிட்டது;" என்று கூறினீர்கள். பிறகு மற்றொரு பிரேதம் கொண்டுசெல்லப்பட்டது. அது குறித்து இகழ்வாகப் பேசப்பட்டது. அதற்கும் நீங்கள் "உறுதியாகிவிட்டது; உறுதியாகிவிட்டது; உறுதியாகிவிட்டது;" என்று கூறினீர்கள். (இரண்டிற்குமே இவ்வாறு தாங்கள் கூறக் காரணமென்ன?)" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் யாரைப் பற்றி நல்ல விதமாகப் பேசினீர்களோ அவருக்குச் சொர்க்கம் உறுதியாகிவிட்டது; நீங்கள் யாரைப் பற்றி இகழ்வாகப் பேசினீர்களோ அவருக்கு நரகம் உறுதியாகிவிட்டது. நீங்கள் பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகள் ஆவீர்கள்; நீங்கள் பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகள் ஆவீர்கள்;நீங்கள் பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகள் ஆவீர்கள்" என்று (மும்முறை) கூறினார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "நபி (ஸல்) அவர்கள் இருந்த இடத்தின் வழியாக பிரேதம் ஒன்று கொண்டு செல்லப்பட்டது" என்று ஹதீஸ் தொடங்குகிறது. இதர விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. ஆயினும், மேற்கண்ட ஹதீஸே முழுமையானதாகும்.
அத்தியாயம் : 11
பாடம் : 21 ஓய்வு பெற்றவரும் ஓய்வு அளித்தவரும்.
1732. அபூகத்தாதா ஹாரிஸ் ரிப்ஈ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கடந்து ஒரு பிரேதம் (ஜனாஸா) கொண்டு செல்லப்பட்டது. அப்போது அவர்கள் "(இவர்) ஓய்வு பெற்றவராவார்; அல்லது (பிறருக்கு) ஓய்வு அளித்தவராவார்" என்று சொன்னார்கள். மக்கள் "அல்லாஹ்வின் தூதரே,ஓய்வு பெற்றவர்; அல்லது ஓய்வு அளித்தவர் என்றால் என்ன?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இறைநம்பிக்கைகொண்ட அடியார் (இறக்கும்போது) இவ்வுலகத்தின் துன்பத்திலிருந்து ஓய்வு பெறுகிறார். பாவியான அடியான் (இறக்கும்போது) அவனி(ன் எல்லா விதமான தொல்லையி)லிருந்து மற்ற அடியார்கள், (நாடு) நகரங்கள், மரங்கள் மற்றும் கால்நடைகள் ஆகியன ஓய்வு(பெற்று நிம்மதி) பெறுகின்றன" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "இவ்வுலகத்தின் தொல்லையிலிருந்தும் துன்பத்திலிருந்தும் ஓய்வு பெற்று இறையருளை நோக்கிச் செல்கிறார்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 11
பாடம் : 22 ஜனாஸாத் தொழுகையில் சொல்ல வேண்டிய தக்பீர்கள்.
1733. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அபிசீனிய மன்னர்) நஜாஷீ (நீகஸ்) இறந்த அன்றே அவரது மரணச்செய்தியை மக்களுக்கு அறிவித்தார்கள். பிறகு மக்களுடன் "முஸல்லா" எனும் தொழும்திடலுக்குப் புறப்பட்டுச் சென்று ("அல்லாஹு அக்பர்" என்று) நான்கு "தக்பீர்"கள் கூறி (ஜனாஸாத் தொழுகை நடத்தி)னார்கள்.
அத்தியாயம் : 11
1734. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபிசீனிய மன்னர் நஜாஷீ இறந்த அன்றே அவரது மரணச்செய்தியை எங்களிடம் அறிவித்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உங்கள் சகோதரருக்காகப் பாவமன்னிப்புக் கோருங்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்களிடமிருந்து இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அறிவிக்கும் அறிவிப்பில் "பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களை தொழுகைத்திடலில் அணிவகுக்கச் செய்து நான்கு "தக்பீர்"கள் கூறி ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள்" என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
1735. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அஸ்ஹமா" எனும் நஜாஷீ (மன்னரு)க்கு நான்கு "தக்பீர்" கூறி (ஜனாஸாத் தொழுகை நடத்தி)னார்கள்.
அத்தியாயம் : 11
1736. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இன்று அல்லாஹ்வின் நல்லடியார் ஒருவர் (நஜாஷீ மன்னர்) அஸ்ஹமா இறந்து விட்டார்" என்று கூறினார்கள். பின்னர் எழுந்து எங்களுக்கு முன்னால் நின்று அவருக்காக (இறுதித் தொழுகை) தொழுதார்கள்.
அத்தியாயம் : 11
1737. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நஜாஷீ மன்னர் இறந்த அன்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உங்கள் சகோதரர் ஒருவர் இறந்துவிட்டார். எனவே,அவருக்காக எழுந்து தொழுங்கள்!" என்று கூறினார்கள். நாங்கள் எழுந்து இரு வரிசையாக அணி வகுத்தோம்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
1738. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நஜாஷீ மன்னர் இறந்த அன்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உங்கள் சகோதரர் ஒருவர் -அதாவது நஜாஷீ- இறந்துவிட்டார். எனவே, அவருக்காக எழுந்து தொழுங்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
பாடம் : 23 மண்ணறை (கப்று) அருகில் (இறுதித் தொழுகை) தொழுவது.
1739. சுலைமான் பின் அபீசுலைமான் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பிரேதம் அடக்கம் செய்யப்பட்ட பின் அதன் மண்ணறை (கப்று) அருகில் நின்று நான்கு "தக்பீர்"கள் கூறி (ஜனாஸாத் தொழுகை நடத்தி)னார்கள் என ஷஅபீ (ஆமிர் பின் ஷராஹீல்-ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
நான் "இதை உங்களுக்கு அறிவித்தவர் யார்?" என ஷஅபீ அவர்களிடம் கேட்டேன். அதற்கு "நம்பத்தகுந்த வலுவான அறிவிப்பாளரான இப்னு அப்பாஸ் (ரலி)" என்று விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் ஹசன் பின் அர்ரபீஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பிலேயே மேற்கண்ட வாசகம் இடம்பெற்றுள்ளது.
முஹம்மத் பின் அப்தில்லாஹ் பின் நுமைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஈரம் உலர்ந்திராத (புதிய) மண்ணறை (கப்று) நோக்கிச் சென்று நான்கு "தக்பீர்"கள் கூறி தொழுவித்தார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதனர்" என இடம்பெற்றுள்ளது.
ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் ஆமிர் பின் ஷராஹீல் (ரஹ்) அவர்களிடம் "(இதை) உங்களுக்கு அறிவித்தவர் யார்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "நம்பத் தகுந்தவரும் (நிகழ்ச்சியில்) கலந்துகொண்டவருமான இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்தாம்" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஏழு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் எதிலும் நபி (ஸல்) அவர்கள் அத்தொழுகையில் நான்கு "தக்பீர்"கள் கூறினார்கள் எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 11