1603. உமர் பின் அதாஉ பின் அபில்குவார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாஃபிஉ பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள், என்னை சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்களிடம் அனுப்பி "(ஒரு முறை) நீங்கள் முஆவியா (ரலி) அவர்களுடன் ஜுமுஆ தொழுதுவிட்டு, அதே இடத்தில் நின்று (கடமையான தொழுகைக்கும் கூடுதலான தொழுகைக்குமிடையே பிரிக்கக்கூடிய செயல்கள் ஏதும் செய்யாமல்) தொடர்ந்து தொழுதீர்கள். அதைக் கண்ட முஆவியா (ரலி) அவர்கள் என்ன கூறினார்கள்?" என்பது பற்றிக் கேட்கச் சொன்னார்கள்.
(நான் அவ்வாறே கேட்டபோது) சாயிப் (ரலி) அவர்கள், "ஆம், நான் முஆவியா (ரலி) அவர்களுடன் பள்ளிவாசலில் இருந்த ஒரு (தனி) அறையில் ஜுமுஆ தொழுதேன். இமாம் சலாம் கொடுத்ததும் நான் உடனே அதே இடத்தில் எழுந்து (கூடுதலான தொழுகை) தொழுதேன். முஆவியா (ரலி) அவர்கள் (ஜுமுஆ தொழுததும் எழுந்து) தமது அறைக்குள் நுழைந்து, என்னை அழைத்துவருமாறு ஆளனுப்பினார்கள். (நான் சென்றபோது என்னிடம்) அவர்கள், "இனிமேல் இவ்வாறு செய்யாதீர்! ஜுமுஆ தொழுததும் (ஏதேனும் வெளிப்பேச்சு) பேசாதவரை, அல்லது பள்ளிவாசலிலிருந்து புறப்பட்டுச் செல்லாத வரை தொழாதீர்! இவ்வாறுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு உத்தரவிட்டார்கள். அதாவது, (கடமையான) ஒரு தொழுகைக்கும் (கூடுதலான) மற்றொரு தொழுகைக்குமிடையே ஏதேனும் பேச்சுகள் பேசாத வரை, அல்லது (பள்ளிவாசலில் இருந்து) புறப்பட்டுச் செல்லாத வரை அவ்விரு தொழுகைகளையும் (சேர்ந்தாற்போல்) அடுத்தடுத்து தொழக்கூடாது" என்று கூறினார்கள் என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அவர் சலாம் கொடுத்தபோது நான் எழுந்து அதே இடத்தில் நின்று...” என இடம் பெற்றுள்ளது. "இமாம் சலாம் கொடுத்தபோது" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 7
1604. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களுடனும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோருடனும் நோன்புப் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்) தொழுகையில் பங்கேற்றுள்ளேன். அவர்கள் அனைவரும் உரை நிகழ்த்துவதற்கு முன்பே (பெருநாள்) தொழுகை நடத்துபவர்களாக இருந்தனர்; அதன் பிறகே உரை நிகழ்த்துவார்கள். (உரை முடிந்த பின்) நபி (ஸல்) அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு ஆண்களைத் தமது கையால் அமரச் செய்ததை இன்றும் நான் காண்பதைப் போன்று உள்ளது. பிறகு அ(ங்கிருந்த ஆட)வர்களின் வரிசைகளை விலக்கிக்கொண்டு பெண்கள் பகுதிக்குச் சென்றார்கள். அப்போது அவர்களுடன் பிலால் (ரலி) அவர்களும் இருந்தார்கள். அப்போது "நபியே! இறை நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் விசுவாசப் பிரமாணம் செய்வதற்காக வந்தார்களாயின்" என்று தொடங்கும் (60:12ஆவது) இறைவசனத்தை முழுமையாக ஓதி முடித்துவிட்டு (பெண்களிடம்), "இந்த உறுதிமொழியில் நீங்கள் (நிலையாக) இருக்கிறீர்களா?" என்று கேட்டார்கள். ஒரேயொரு பெண்மணி மட்டும் "ஆம்; இறைத்தூதரே! (இருக்கிறோம்)" என்றார். அவரைத் தவிர வேறெவரும் நபி (ஸல்) அவர்களுக்குப் பதிலளிக்கவில்லை. (பதிலளித்த) அந்தப் பெண்மணி யாரென்று அப்போது தெரியவில்லை. (உண்மையில் அறிவிப்பாளர் ஹசன் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்களுக்குத்தான் அது தெரியவில்லை.) அப்பெண்களை நோக்கி நபி (ஸல்) அவர்கள் "(பெண்களே) தர்மம் செய்யுங்கள்" என்று சொன்னார்கள். பிலால் (ரலி) அவர்கள் தமது ஆடையை ஏந்தியபடி "என் தந்தையும் என் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும், வாருங்கள்" என்று கூறினார்கள். அப்பெண்கள் மெட்டிகளையும் மோதிரங்களையும் (கழற்றி) பிலால் (ரலி) அவர்களின் ஆடையில் போடலாயினர்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 8
1605. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் உறுதி கூறுகிறேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பெருநாள் அன்று) உரை நிகழ்த்துவதற்கு முன் தொழுதார்கள். (தொழுகைக்குப்) பிறகு உரையாற்றினார்கள். அப்போது பெண்கள் செவியேற்கும் விதத்தில் தாம் பேசவில்லை என்று எண்ணியவர்களாகப் பெண்கள் பகுதிக்குச் சென்று, அவர்களுக்கு (இஸ்லாமிய சட்டவிதிகளையும் மறுமை நாளையும்) நினைவூட்டி அறிவுரை கூறினார்கள்; தர்மம் செய்யும்படி அவர்களிடம் வலியுறுத்தினார்கள். (அவற்றைப் பெறுவதற்காக) பிலால் (ரலி) அவர்கள் தமது ஆடையை விரித்துப் பிடித்துக்கொண்டிருந்தார்கள். பெண்கள் தங்களுடைய மோதிரங்களையும் காதணிகளையும் பிறவற்றையும் (கழற்றிப்) போடலானார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 8
1606. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் அன்று எழுந்து உரையாற்றுவதற்கு முன் தொழுதார்கள். அதற்குப் பிறகே மக்களுக்கு உரையாற்றினார்கள். நபி (ஸல்) அவர்கள் உரையாற்றி முடிந்ததும் அங்கிருந்து புறப்பட்டு, பெண்கள் பகுதிக்குச் சென்று பிலால் (ரலி) அவர்களது கையைத் தாங்கிக்கொண்டு பெண்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள். அப்போது பிலால் (ரலி) அவர்கள் தமது ஆடையொன்றை விரித்துப் பிடிக்க, அதில் பெண்கள் தர்மத்தை இட்டுக்கொண்டிருந்தார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
நான் அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்களிடம் "(பெண்கள்) நோன்புப் பெருநாள் (ஸதக்கத்துல் ஃபித்ர்) தர்மத்தையா (இட்டார்கள்)?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "இல்லை, அப்போதைக்குத் தாமாகவே முன்வந்து தர்மப் பொருட்களை அவர்கள் ஈந்தனர். பெண்கள் தம் மெட்டிகளையும் இன்னும் பிறவற்றையும் இடலாயினர்" என்று கூறினார்கள்.
மேலும், நான் அதாஉ (ரஹ்) அவர்களிடம், "உரை நிகழ்த்திய பின் பெண்கள் பகுதிக்குச் சென்று உபதேசம் செய்வது இன்றைக்கும் தலைவர்மீது கடமை என நீங்கள் கருதுகிறீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "நிச்சயம். சத்தியமாக! அது அவர்களுக்குக் கடமைதான். அதை அவர்கள் எவ்வாறு செய்யாமலிருக்க முடியும்?" என்று கேட்டார்கள்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 8
1607. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டுள்ளேன். அப்போது அவர்கள் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழுகை நடத்தினார்கள்; பாங்கோ இகாமத்தோ இல்லை. பிறகு பிலால் (ரலி)அவர்கள் மீது சாய்ந்து கொண்டு, இறையச்சத்தைக் கடைப்பிடிக்குமாறும் இறைவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்குமாறும் வலியுறுத்தி மக்களுக்கு அறிவுரையும் நினைவூட்டலும் வழங்கினார்கள். பிறகு அங்கிருந்து புறப்பட்டு, பெண்கள் பகுதிக்குச் சென்று அவர்களுக்கு (மார்க்க நெறிமுறைகளையும் மறுமை நாளையும்) நினைவூட்டி அறிவுரை பகர்ந்தார்கள். மேலும், பெண்களை நோக்கி, "தர்மம் செய்யுங்கள். உங்களில் அதிகம் பேர் நரகத்தின் விறகு ஆவீர்கள்" என்று கூறினார்கள்.
அப்போது பெண்கள் நடுவிலிருந்து கன்னங்கள் கருத்த ஒரு பெண்மணி எழுந்து "அது ஏன், அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீங்கள் அதிகமாகக் குறை கூறுகின்றீர்கள்; (நன்றி மறந்து) கணவனை நிராகரிக்கிறீர்கள்" என்று கூறினார்கள். அப்போது அப்பெண்கள் தம் காதணிகள், மோதிரங்கள் உள்ளிட்ட அணிகலன்களை (கழற்றி) பிலால் (ரலி) அவர்களின் ஆடையில் போட்டனர்.
அத்தியாயம் : 8
1608. அப்துல் மலிக் பின் அப்தில் அஸீஸ் பின் ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(நபி (ஸல்) அவர்களது காலத்தில்) நோன்புப் பெருநாள் அன்றோ, ஹஜ்ஜுப் பெருநாள் அன்றோ தொழுகைக்காக பாங்கு சொல்லப்படவில்லை என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களும் கூறியதாக அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு அதாஉ (ரஹ்) அவர்களிடம் அது குறித்து நான் கேட்டேன். அதற்கு அதாஉ (ரஹ்) அவர்கள், "ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் "நோன்புப் பெருநாள் தொழுகைக்கு இமாம் புறப்பட்டு வரும் போதோ, புறப்பட்டு வந்த பின்போ பாங்கு கிடையாது. அதைப் போன்றே, இகாமத்தோ தொழுகைக்கான அழைப்போ வேறு விதமான அறிவிப்புகளோ கிடையாது. (ஆக) அன்றைய நாளில் பாங்கோ இகாமத்தோ கிடையாது” என்று சொன்னார்கள் என விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 8
1609. அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(மக்காவின் ஆட்சிப் பொறுப்பேற்ற) அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களுக்கு வாக்களிப்புப் பிரமாணம் (பைஅத்) நடைபெற்ற முதல் நாளில் அவர்களுக்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "(நபி (ஸல்) அவர்களது காலத்தில்) நோன்புப் பெருநாள் தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டதில்லை. எனவே, நீங்களும் அத்தொழுகைக்கு பாங்கு சொல்லாதீர்கள்" என்ற செய்தியைச் சொல்லியனுப்பினார்கள். அவ்வாறே அன்றைய தினம் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களும் பாங்கு சொல்லவில்லை. மேலும், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "பெருநாள் தொழுகைக்குப் பிறகுதான் உரை நிகழ்த்த வேண்டும். இவ்வாறுதான் (முன்பு) செய்யப்பட்டுவந்தது” எனும் செய்தியையும் அவர்களுக்குத் தெரிவித்தார்கள். அவ்வாறே அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களும் உரை நிகழ்த்துவதற்கு முன்பே (பெருநாள்) தொழுகை நடத்தினார்கள்.
அத்தியாயம் : 8
1610. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இரு பெருநாள் தொழுகைகளை ஒரு முறை, இரு முறை அல்ல (பல முறை) தொழுதிருக்கிறேன்; (அவற்றில்) பாங்கும் இகாமத்தும் இருந்ததில்லை.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 8
1611. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் உரை (குத்பா) நிகழ்த்துவதற்கு முன்பே இரு பெருநாள் தொழுகைகளைத் தொழுபவர்களாய் இருந்தனர்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 8
1612. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் அன்றும் நோன்புப் பெருநாள் அன்றும் (திடலுக்குப்) புறப்பட்டுச் சென்று, முதலில் தொழுகையை நிறைவேற்றுவார்கள். தொழுகையை முடித்து சலாம் கொடுத்ததும் மக்களை முன்னோக்கி (உரை நிகழ்த்தியபடி) நிற்பார்கள். மக்கள் தொழுத இடத்தில் அப்படியே அமர்ந்திருப்பார்கள். ஏதேனும் படைப் பிரிவை அனுப்ப வேண்டிய தேவையிருந்தால் அதை மக்களிடம் அறிவிப்பார்கள். அல்லது வேறு தேவை ஏதேனும் இருந்தால், அதற்கான உத்தரவைப் பிறப்பிப்பார்கள். (அன்றைய தினம்) அவர்கள் "தர்மம் செய்யுங்கள்; தர்மம் செய்யுங்கள்; தர்மம் செய்யுங்கள்" என்று (திரும்பத் திரும்பக்) கூறுவார்கள். மக்களில் அதிகமாகத் தர்மம் செய்வோர் பெண்களாக இருந்தார்கள். பிறகு திரும்பிச் செல்வார்கள்.
(மதீனாவின் ஆளுநராக) மர்வான் பின் அல்ஹகம் வரும்வரை (முதலில் தொழுகை, பிறகு உரை எனும்) இந்நிலையே நீடித்தது. (மர்வான் ஆட்சிப் பொறுப்பேற்று) அவரும் நானும் ஒருவர் மற்றவரின் இடுப்பில் கைவைத்து அணைத்தவர்களாக (அல்லது கை கோத்தவர் களாக) தொழும் திடலுக்கு வந்தபோது, கஸீர் பின் அஸ்ஸல்த் என்பவர் களிமண்ணாலும் செங்கல்லாலும் கட்டியிருந்த ஒரு சொற்பொழிவு மேடை அங்கு (புதிதாக) காணப்பட்டது. அப்போது மர்வான் என்னை சொற்பொழிவு மேடை நோக்கி இழுக்க, நான் அவரைத் தொழுகைக்காக இழுக்க அவர் என்னிடமிருந்து தனது கையை விடுவித்துக் கொண்டார். (தொழுகைக்கு முன்பே உரை நிகழ்த்திட நின்றார்.) அவரிடம் இந்த நிலையைக் கண்ட நான் "எங்கே, முதலில் தொழுகைதானே நடைபெற வேண்டும்?"என்று கேட்டேன். அதற்கு மர்வான் "இல்லை அபூ சயீதே! நீங்கள் அறிந்திருக்கும் அந்த நடைமுறை கைவிடப்பட்டது" என்று கூறினார். அதற்கு நான் "இல்லை, என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நான் அறிந்திருக்கும் (நபிகளாரின்) இந்த நடைமுறையைவிடச் சிறந்த ஒன்றை உங்களால் கொண்டுவர முடியாது" என்று கூறினேன். (இவ்வாறு மூன்று முறை கூறிவிட்டு, அபூசயீத் (ரலி) அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டார்கள்.)
இதை இயாள் பின் அப்தில்லாஹ் பின் சஅத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 8

பாடம் : 1 பெருநாட்களில் பெண்கள், தொழும் திடலுக்கு வெளியேறிச் செல்வதும், ஆண்களுடன் கலக்காத விதத்தில் உரையில் பங்கேற்பதும் அனுமதிக்கப்பட்டவையாகும்.
1613. உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
இரு பெருநாட்களில் இளம் பெண்களையும், திரைக்கப்பால் உள்ள பெண்களையும் புறப்படச் செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் - எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் முஸ்லிம்களின் தொழும் இடத்தைவிட்டு ஒதுங்கியிருக்குமாறு அவர்கள் கட்டளையிட்டார்கள்.
அத்தியாயம் : 8
1614. உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
பெருநாளன்று (பெண்களாகிய) நாங்கள் (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் செல்ல வேண்டுமெனவும், திரைமறைவில் உள்ள பெண்களையும் கன்னிப் பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் (தொழும் திடலுக்குச் சென்று) மக்களுக்குப் பின்னால் இருந்துகொண்டு மக்களுடன் சேர்ந்து "தக்பீர்"கூறுவார்கள்.
அத்தியாயம் : 8
1615. உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இளம் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் திரைமறைவில் உள்ள பெண்களையும் நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய (இரு) பெருநாட்களிலும் (தொழும் திடலுக்குப்) புறப்படச் செய்யுமாறு எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். ஆயினும், மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் தொழுகையிலிருந்து ஒதுங்கியிருப்பார்கள்; நல்ல உரைகளிலும் முஸ்லிம்களின் பிரார்த்தனையிலும் பங்கெடுக்க வேண்டும் (என்றும் கட்டளையிட்டார்கள்). அப்போது நான் "அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருத்தியிடம் துப்பட்டா இல்லாவிட்டால் (என்ன செய்வது)?" என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவளுடைய சகோதரி தமது துப்பட்டாவில் ஒன்றை அவளுக்கு இரவலாக அணிவிக்கட்டும்!" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 8
பாடம் : 2 பெருநாள் தொழுகைக்கு முன்போ பின்போ தொழும் திடலில் எதுவும் தொழக் கூடாது.
1616. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் அன்றோ அல்லது நோன்புப் பெருநாள் அன்றோ புறப்பட்டுச் சென்று இரண்டு ரக்அத்கள் (மட்டுமே) தொழுதார்கள். அதற்கு முன்பும் எதையும் (கூடுதலாகத்) தொழவில்லை; அதற்கு பின்பும் எதையும் (கூடுதலாகத்) தொழவில்லை. பிறகு தம்முடன் பிலால் (ரலி) அவர்கள் இருக்க, பெண்கள் பகுதிக்கு வந்து (அறிவுரை வழங்கினார்கள். அப்போது) தர்மம் செய்யுமாறு அவர்களைப் பணித்தார்கள். உடனே பெண்கள் தம் காதணிகளையும் (கழுத்தில் அணிந்திருந்த) நறுமண மாலைகளையும் (கழற்றி பிலால் (ரலி) அவர்களின் கையிலிருந்த துணியில்) போட்டனர்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 8
பாடம் : 3 இரு பெருநாள் தொழுகைகளில் ஓத வேண்டியவை.
1617. உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா பின் மஸ்ஊத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அபூவாக்கித் அவ்ஃப் பின் அல்ஹாரிஸ் அல் லைஸீ (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் மற்றும் நோன்புப் பெருநாள் (தொழுகை)களில் எ(ந்த அத்தியாயத்)தை ஓதுவார்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு அபூவாக்கித் (ரலி) அவர்கள் "காஃப் வல்குர்ஆனில் மஜீத்" எனும் (50ஆவது) அத்தியாத்தையும் "இக்தரபத்திஸ் ஸாஅத்து வன்ஷக்கல் கமர்" எனும் (54ஆவது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள் என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 8
1618. அபூவாக்கித் அவ்ஃப் பின் அல்ஹாரிஸ் அல்லைஸீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருநாளி(ன் தொழுகையி)ல் எ(ந்த அத்தியாயத்)தை ஓதுவார்கள்?" என்று என்னிடம் உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நான் "இக்தரபத்திஸ் ஸாஅத்து" எனும் (54ஆவது) அத்தியாயத்தையும் "காஃப் வல்குர்ஆனில் மஜீத்" எனும் (50ஆவது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள்" என்று விடையளித்தேன்.
அத்தியாயம் : 8
பாடம் : 4 பெருநாட்களில் பாவமில்லா (வீர) விளையாட்டுகளில் ஈடுபட அனுமதி உண்டு.
1619. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அறியாமைக் காலத்தில் நடந்த) "புஆஸ்" எனும் போரின்போது அன்சாரிகள் ஒருவரை நோக்கி ஒருவர் பாடிய பாடல்களை இரு அன்சாரிச் சிறுமியர் என்னருகில் பாடிக் கொண்டிருந்தனர். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்தார்கள்.
-(உண்மையில்) அவ்விரு சிறுமியரும் பாடகியர் அல்லர்- (இதைக் கண்ட) உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள், "இறைத்தூதர் இல்லத்திலேயே ஷைத்தானின் இசைக் கருவிகளா?" என்று (கடிந்து) பேசினார்கள். இது நடந்தது ஒரு பெருநாள் அன்றாகும். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "(அவ்விருவரையும் விட்டுவிடுங்கள்), அபூபக்ரே! (மகிழ்ச்சியை வெளிப்படுத்த) ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் பண்டிகை நாள் ஒன்று உண்டு. இது நமது பண்டிகை நாள்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "இரு சிறுமியர் (சலங்கையில்லா) கஞ்சிராக்களை அடித்து விளையாடிக் கொண்டிருந்தனர்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 8
1620. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஈதுல் அள்ஹா நாட்களான) "மினா"வின் நாட்களில் என் அருகில் இரு (அன்சாரிச்) சிறுமியர் (சலங்கையில்லா கஞ்சிராக்களை) அடித்து பாட்டு பாடிக்கொண்டிருந்தனர். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஆடையால் போர்த்திக்கொண்டிருந்தார்கள். (இதைக் கண்ட) அபூபக்ர் (ரலி) அவர்கள் அச்சிறுமியர் இருவரையும் அதட்டினார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம்மீதிருந்த) துணியை விலக்கி "அவர்களை விட்டு விடுங்கள், அபூபக்ரே! இவை பண்டிகை நாட்கள்" என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைத் தமது மேல் துண்டால் மறைத்துக்கொண்டிருக்க, (பள்ளிவாசல் வளாகத்தில் ஈட்டியெறிந்து) விளையாடிக்கொண்டிருந்த அபிசீனியர்களை நான் (என் வீட்டிலிருந்தபடி) பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது நான் இளம்வயதுப் பெண்ணாக இருந்தேன். விளையாட்டுமீது பேராவல் கொண்ட இளம்வயதுப் பெண் எவ்வளவு நேரம் வேடிக்கை பார்ப்பாள் என்பதை நீங்களே மதிப்பிட்டுக்கொள்ளுங்கள்.
அத்தியாயம் : 8
1621. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் மீதாணையாக! (ஒரு பெருநாள் தினத்தன்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது பள்ளிவாசலி(ன் வளாகத்தி)ல் அபிசீனியர்கள் ஈட்டியெறிந்து (வீர விளையாட்டு) விளையாடிக்கொண்டிருந்தனர். அவர்களது விளையாட்டை நான் பார்ப்பதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது அறைவாசலில் நின்றபடி தமது மேல்துண்டால் என்னை மறைத்துக்கொண்டிருந்தார்கள். நானாக (விளையாட்டை ரசித்துச் சலிப்புற்று)த் திரும்பும்வரை எனக்காகவே அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். கேளிக்கைகள்மீது பேராவல் கொண்ட இளம்வயதுப் பெண் எவ்வளவு நேரம் வேடிக்கை பார்ப்பாள் என்பதை நீங்களே மதிப்பிட்டுக்கொள்ளுங்கள்.
அத்தியாயம் : 8
1622. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் அருகில் இரு சிறுமியர் "புஆஸ்” போர் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள்; படுக்கையில் படுத்து, தமது முகத்தை (வேறு பக்கம்) திருப்பிக்கொண்டார்கள். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்து என்னை அதட்டி "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகிலேயே ஷைத்தானின் இசைக் கருவிகளா?" என்று கடிந்துகொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ரை முன்னோக்கி "அச்சிறுமியரை விட்டுவிடுங்கள்" என்று கூறினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களின் கவனம் வேறுபக்கம் திரும்பியபோது அவ்விரு சிறுமியரையும் குறிப்பால் உணர்த்தி (வெளியேறச் சொன்)னேன். உடனே அவர்கள் இரு வரும் வெளியேறிவிட்டனர். அன்று பெருநாள் தினமாக இருந்தது. சூடானியர்கள் தோல் கேடயத்தாலும் ஈட்டிகளாலும் (பள்ளிவாசல் வளாகத்தில் வீர விளையாட்டுகள்) விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது நான் (அந்த விளையாட்டைப் பார்க்க) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அனுமதி) கேட்டிருக்க வேண்டும்; அல்லது அவர்களே என்னிடம் நீ (இவர்களின் வீரவிளையாட்டுகளைப்) பார்க்க விரும்புகிறாயா?" என்று கேட்க, நான் "ஆம்" என்று கூறியிருக்க வேண்டும் (சரியாக எனக்கு நினைவில்லை). உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என் கன்னம் அவர்களுடைய கன்னத்தின் மீது ஒட்டியபடி இருக்க, என்னைத் தமக்குப் பின்னால் நிற்கவைத்துக்கொண்டார்கள். "அர்ஃபிதாவின் மக்களே! (சூடானியர்களே!) விளையாட்டைத் தொடருங்கள்" என்று கூறினார்கள். நான் (விளையாட்டை நன்கு ரசித்து) சலிப்புற்றுவிட்டபோது, "போதுமா?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்க,நான் "ஆம் (போதும்)" என்று சொன்னேன். "அப்படியானால் நீ போகலாம்!" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 8