1583. ஹுஸைன் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
பிஷ்ர் பின் மர்வான் (வெள்ளிக்கிழமை அன்று) மிம்பர்மீது இருந்தபடி கைகளை உயர்த்தி (உரையாற்றி)யதை உமாரா பின் ருஅய்பா (ரலி) அவர்கள் கண்டார்கள். அப்போது உமாரா பின் ருஅய்பா (ரலி) அவர்கள், "இவ்விரு கைகளையும் அல்லாஹ் இழிவுபடுத்துவானாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நான் பார்த்துள்ளேன். அவர்கள் (ஜுமுஆ நாளில் மிம்பர்மீது உரையாற்றும்போது) தமது சுட்டு விரலால் இவ்வாறு சைகை செய்வதைத் தவிர, கூடுதலாக வேறெதுவும் செய்ததில்லை" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஹுஸைன் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் பிஷ்ர் பின் மர்வான் வெள்ளிக்கிழமை அன்று தம் கைகளை உயர்த்தி (உரையாற்றி)யதை நான் பார்த்தேன். அப்போது உமாரா பின் ருஅய்பா (ரலி) அவர்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறு கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 7
பாடம் : 14 (வெள்ளிக்கிழமை) இமாம் உரை நிகழ்த்திக்கொண்டிருக்கையில் "தஹிய்யத்துல் மஸ்ஜித்" தொழுகை தொழுவது.
1584. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று உரையாற்றிக்கொண்டிருக்கையில் ஒரு மனிதர் வந்(து தொழாமல் அமர்ந்)தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இன்ன மனிதரே, தொழுதுவிட்டீரா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர் ‘இல்லை" என்றார். "எழுந்து, தொழுவீராக!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் (மற்ற பல அறிவிப்புகளில் இடம்பெற்றிருப்பதைப் போன்று) ‘இரண்டு ரக்அத்கள் தொழுவீராக" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகக் குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 7
1585. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று உரையாற்றிக் கொண்டிருக்கையில் ஒரு மனிதர் பள்ளிவாசலுக்குள்ளே வந்(து தொழாமல் அமர்ந்)தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீர் தொழுதுவிட்டீரா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர் "இல்லை" என்றார். "எழுந்து இரண்டு ரக்அத்கள் தொழுவீராக!" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 7
1586. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது (நின்று) உரையாற்றிக் கொண்டிருக்கும்போது ஒரு மனிதர் வந்(து தொழாமல் அமர்ந்)தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அந்த மனிதரிடம் "இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டீரா?"என்று கேட்டார்கள். அவர் ‘இல்லை" என்றார். "அவ்வாறாயின் தொழுவீராக!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 7
1587. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் உரையாற்றினார்கள். அதில் "வெள்ளிக்கிழமை அன்று இமாம் புறப்பட்டு வந்திருக்க, உங்களில் ஒருவர் (பள்ளிவாசலுக்கு) வந்தால், அவர் இரண்டு ரக்அத்கள் தொழுதுகொள்ளட்டும்!" என்று குறிப்பிட்டார்கள்.
அத்தியாயம் : 7
1588. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது உட்கார்ந்துகொண்டிருந்தபோது,சுலைக் அல்ஃகதஃபானீ (ரலி) அவர்கள் வந்து தொழுவதற்கு முன் அமர்ந்துவிட்டார்கள். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டீரா?" என்று கேட்டார்கள். அவர் ‘இல்லை" என்றார். "எழுந்து அந்த இரண்டு ரக்அத்களைத் தொழுவீராக" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 7
1589. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை உரையாற்றிக்கொண்டிருக்கையில் சுலைக் அல்ஃகதஃபானீ (ரலி) அவர்கள் வந்து (தொழாமல்) அமர்ந்தார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "சுலைக்! எழும்! சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழும்" என்றார்கள். பிறகு "உங்களில் ஒருவர் வெள்ளிக்கிழமை அன்று இமாம் உரையாற்றிக்கொண்டிருக்கும்போது (பள்ளிவாசலுக்கு) வந்தால், அவர் இரண்டு ரக்அத்கள் சுருக்கமாகத் தொழுதுகொள்ளட்டும்!" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 7
பாடம் : 15 உரைக்கு இடையே கல்வி போதனை செய்வது.
1590. அபூரிஃபாஆ தமீம் பின் அசத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது நான் அவர்களிடம் போய்ச் சேர்ந்தேன். நான் "அல்லாஹ்வின் தூதரே! ஒரு வெளியூர்காரர் தமது மார்க்கத்தை தெரிந்து கொள்வதற்காக வந்துள்ளார். அவர் தமது மார்க்கத்தைப் பற்றி அறியாமல் இருக்கிறார்" என்று (என்னைப் பற்றிச்) சொன்னேன். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது உரையை நிறுத்திவிட்டு, என்னை நோக்கி வந்துசேர்ந்தார்கள். ஒரு நாற்காலி கொண்டு வரப்பட்டது. -அதன் கால்கள் இரும்பினால் ஆனவை என்று நான் எண்ணுகிறேன்- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த நாற்காலியில் அமர்ந்து, அல்லாஹ் தமக்குக் கற்றுத் தந்தவற்றிலிருந்து சிலவற்றை எனக்குப் போதிக்கலானார்கள். பிறகு திரும்பிச் சென்று தமது உரையை முழுமையாக்கினார்கள்.
அத்தியாயம் : 7
பாடம் : 16 ஜுமுஆ தொழுகையில் ஓத வேண்டியவை
1591. உபைதுல்லாஹ் பின் அபீராஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா (ரலி) அவர்களை மதீனாவின் ஆளுநராக நியமித்துவிட்டு மர்வான் பின் ஹகம் மக்காவிற்குச் சென்றார். (இந்தக் காலகட்டத்தில்) அபூஹுரைரா (ரலி) அவர்கள் எங்களுக்கு ஜுமுஆத் தொழுகை நடத்தினார்கள். அதில் ‘அல்ஜுமுஆ" எனும் (62ஆவது) அத்தியாயத்தை (முதல் ரக்அத்தில்) ஓதினார்கள். பிறகு இரண்டாவது ரக்அத்தில் "இதா ஜாஅக்கல் முனாஃபிக்கூன்" (என்று தொடங்கும் 63ஆவது) அத்தியாயத்தை ஓதினார்கள். தொழுகை முடிந்ததும் அபூ ஹுரைரா (ரலி) அவர்களைச் சந்தித்து, "நீங்கள் இரண்டு அத்தியாயங்களை ஓதினீர்கள். இவ்விரு அத்தியாயங்களும் அலீ பின் அபீ தாலிப் (ரலி) அவர்கள் கூஃபாவில் இருந்த போது ஓதிவந்தவை" என்றேன். அதற்கு அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜுமுஆ நாளில் இவ்விரு அத்தியாயங்களையும் ஓத நான் கேட்டுள்ளேன்" என்று விடையளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் உபைதுல்லாஹ் பின் அபீராஃபிஉ (ரஹ்) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஹா(த்)திம் பின் இஸ்மாயீல் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "முதல் ரக்அத்தில் ‘அல்ஜுமுஆ" அத்தியாயத்தையும் இரண்டாவது ரக்அத்தில் ‘இதா ஜாஅக்கல் முனாஃபிக்கூன்" அத்தியாயத்தையும் ஓதினார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
அப்துல் அஸீஸ் பின் முஹம்மத் பின் உபைத் பின் அபீஉபைத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் முந்தைய ஹதீஸில் உள்ளவாறே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 7
1592. நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகையிலும் ஜுமுஆவிலும் "சப்பி ஹிஸ்ம ரப்பிகல் அஃலா" (87) மற்றும் ‘ஹல் அத்தாக்க ஹதீஸுல் ஃகாஷியா" (88) ஆகிய அத்தியாயங்களை ஓதுவார்கள்.
பெருநாளும் ஜுமுஆவும் ஒரே நாளில் வந்துவிட்டாலும், இரு தொழுகைகளிலும் அவ்விரு அத்தியாயங்களையே ஓதுவார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 7
1593. உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா பின் மஸ்உத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ளஹ்ஹாக் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்களுக்கு "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜுமுஆ நாளில் ‘அல்ஜுமுஆ" அத்தியாயம் தவிர வேறு எந்த அத்தியாயத்தை ஓதுவார்கள்?” என்று கேட்டு கடிதம் எழுதினார்கள். அதற்கு ‘ஹல் அத்தாக்க ஹதீஸுல் ஃகாஷியா" எனும் (88ஆவது) அத்தியாயத்தை ஓதுவார்கள்" என நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் பதில் எழுதினார்கள்.
அத்தியாயம் : 7
பாடம் : 17 வெள்ளிக்கிழமை (ஃபஜ்ர் தொழுகையில்) ஓத வேண்டியவை.
1594. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை ஃபஜ்ர் தொழுகையில் "அலிஃப் லாம் மீம் தன்ஸீல்" (எனத் தொடங்கும்) "அஸ்ஸஜ்தா"எனும் (32ஆவது) அத்தியாயத்தையும் "ஹல் அத்தா அலல் இன்சானி ஹீனும் மினத் தஹ்ர்" எனும் (76ஆவது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆத் தொழுகையில் "அல்ஜுமுஆ" எனும் (62 ஆவது) அத்தியாயத்தையும் "அல்முனாஃபிகூன்" எனும் (63ஆவது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- வெள்ளிக்கிழமை ஃபஜ்ர் மற்றும் ஜுமுஆத் தொழுகை ஆகியவற்றில் ஓத வேண்டிய அத்தியாயங்கள் பற்றிய மேற்கண்ட ஹதீஸ், மேலும் ஓர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 7
1595. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை ஃபஜ்ர் தொழுகையில் "அலிஃப் லாம் மீம் தன்ஸீல்" ("அஸ்ஸஜ்தா" எனும் 32ஆவது) அத்தியாயத்தையும் ‘ஹல் அத்தா அலல் இன்சான்" எனும் (76ஆவது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள்.
அத்தியாயம் : 7
1596. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை சுப்ஹுத் தொழுகையின் முதல் ரக்அத்தில் "அலிஃப் லாம் மீம் தன்ஸீல்" ("அஸ்ஸஜ்தா"எனும் 32ஆவது) அத்தியாயத்தையும் இரண்டாவது ரக்அத்தில் ‘ஹல் அத்தா அலல் இன்சானி ஹீனும் மினத் தஹ்ரி லம் யகுன் ஷைஅம் மத்கூரா" எனும் (76ஆவது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள்.
அத்தியாயம் : 7
பாடம் : 18 ஜுமுஆவுக்குப் பின் தொழ வேண்டியவை.
1597. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் ஜுமுஆ தொழுத பின் நான்கு ரக்அத்கள் (சுன்னத்) தொழட்டும்!
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 7
1598. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஜுமுஆவுக்குப் பின் நீங்கள் (சுன்னத்) தொழுவதானால் நான்கு ரக்அத்கள் தொழுது கொள்ளுங்கள். - இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அம்ர் பின் முஹம்மத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "உமக்கு ஏதேனும் அவசரம் ஏற்பட்டால் பள்ளிவாசலில் இரண்டு ரக்அத்கள் தொழுதுகொள். (வீட்டுக்குத்) திரும்பியதும் இரண்டு ரக்அத்கள் தொழுதுகொள்" என்று சுஹைல் பின் அபீசாலிஹ் தக்வான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 7
1599. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் எவரேனும் ஜுமுஆவுக்குப் பின் (சுன்னத்) தொழுவதாக இருந்தால் நான்கு ரக்அத்கள் தொழட்டும்!- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் ஜரீர் பின் அப்தில் ஹமீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "உங்களில்" எனும் சொல் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 7
1600. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் ஜுமுஆ தொழுதுவிட்டு தமது இல்லத்திற்குச் சென்று, அங்கு இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்துவந்ததாகவும் குறிப்பிட்டார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 7
1601. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது வந்த கூடுதலான தொழுகைகள் குறித்துக் கூறினார்கள். அப்போது "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜுமுஆ தொழுத பின் (வீட்டுக்குத்) திரும்பிச் செல்லாத வரை தொழமாட்டார்கள். (வீட்டுக்குச் சென்றதும்) வீட்டில் இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள்" என்று குறிப்பிட்டார்கள்.
அத்தியாயம் : 7
1602. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆ தொழுத பின் இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள்.
இதை நாஃபிஉ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 7