பாடம் : 1 வெள்ளிக்கிழமை குளிப்பது பருவமடைந்த ஒவ்வோர் ஆண்மீதும் கடமையாகும் என்பதும், அது தொடர்பாக வந்துள்ள கட்டளையின் விவரமும்.
1535. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் கள் கூறினார்கள்:
வெள்ளிக்கிழமை குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 7
1536. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கள் வெள்ளிக்கிழமை அன்று (மதீனாவைச் சுற்றியுள்ள) மேட்டுப்புறக் கிராமங்களிலிருந்த தங்கள் குடியிருப்புகளிலிருந்து முறைவைத்து (தொழுகைக்கு) வந்துகொண்டிருந்தனர். அப்போது அவர்கள் நீளங்கி அணிந்து வருவர். அவர்கள்மீது புழுதி படிந்து அவர்களின் உடலிலிருந்து (வியர்வையின்) துர்வாடை வரும். (இந்த நிலையில்) அவர்களில் ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் இருந்தபோது வந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இன்றைய நாளுக்காக நீங்கள் தூய்மையுடன் இருக்கக் கூடாதா?" என்று கேட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபி (ஸல்) அவர்களது காலத்தில்) மக்கள் உழைப்பாளிகளாக இருந்தனர். அவர்களிடம் (அவர்களின் பணிகளைக் கவனிக்க) வேலை யாட்கள் இருக்கவில்லை. எனவே, அவர்கள் மீது (வியர்வையின்) துர்வாடை வீசும். இதனால்தான், "நீங்கள் வெள்ளிக்கிழமை குளித்தால் என்ன?" என்று அவர்களிடம் கூறப்பட்டது.
அத்தியாயம் : 7
பாடம் : 2 ஜுமுஆ நாளில் நறுமணம் பூசுதலும் பல் துலக்கலும்.
1537. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வெள்ளிக்கிழமை அன்று குளிப்பது பருவ மடைந்த ஒவ்வொருவர்மீதும் கடமையாகும்; இன்னும் பல்துலக்குவதும்தான். மேலும்,கிடைக்கின்ற நறுமணத்தைப் பூசிக்கொள்ள வேண்டும்.- இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் புகைர் பின் அல்அஷஜ்ஜு (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "பெண்களின் நறுமணப் பொருளாக இருந்தாலும் சரியே"என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 7
1538. தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வெள்ளிக்கிழமைக் குளியல் பற்றிய நபிமொழியை அறிவித்த போது, அவர்களிடம் நான் "ஒருவர் (தம்மிடம் இல்லாவிட்டால்) தம் வீட்டாரிடம் இருக்கும் நறுமணத்தையோ எண்ணெயையோ பூசிக் கொள்ள வேண்டுமா?" என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "இது பற்றி எனக்குத் தெரியாது" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 7
1539. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஏழு நாட்களுக்கு ஒரு முறை (வெள்ளிக்கிழமை அன்று) தம் தலையையும் மேனியையும் கழுவிக் குளிப்பது, ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ்விற்காகச் செய்ய வேண்டிய கடமையாகும்.- இதை அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 7
1540. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பெருந்துடக்கிற்காகக் குளிப்பதைப் போன்று வெள்ளியன்று குளித்துவிட்டு (நேரத்தோடு பள்ளிவாசலுக்கு)ச் செல்பவர், ஓர் ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். (அதற்கடுத்த) இரண்டாம் நேரத்தில் செல்பவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். மூன்றாம் நேரத்தில் செல்பவர் கொம்புள்ள ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். நான்காம் நேரத்தில் செல்பவர் ஒரு கோழியைக் குர்பானி செய்தவர் போன்றவர் ஆவார். ஐந்தாம் நேரத்தில் செல்பவர் முட்டையைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். இமாம் (தமது அறையிலிருந்து) வெளியேறி (பள்ளிவாசலுக்குள் வந்து)விட்டால், (பெயர்களைப் பதிவு செய்யும்) வானவர்களும் இமாமின் சொற்பொழிவைச் செவியுற (உள்ளே) வந்துவிடுகின்றனர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 7
பாடம் : 3 வெள்ளிக்கிழமை சொற்பொழிவின் போது மௌனமாக இரு(ந்து காது தாழ்)த்தல்.
1541. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வெள்ளிக்கிழமை அன்று இமாம் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது, உன் அருகில் இருப்பவரிடம் நீ "மௌனமாக இரு" என்று கூறினாலும் நீ வீண்பேச்சு பேசியவனாவாய்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் வேறு இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 7
1542. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வெள்ளியன்று இமாம் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது, உன் அருகிலிருப்பவரிடம் நீ "மௌனமாக இரு" என்று கூறினாலும் நீ வீண்பேச்சு பேசியவனாவாய்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபுஸ்ஸினாத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
("நீ வீண்பேச்சு பேசியவனாவாய்" என்பதைக் குறிக்க மூலத்தில்) "ஃபகத் லஃகீத்த" எனும் வாக்கியம் ஆளப்பட்டுள்ளது. இது அபூஹுரைரா (ரலி) அவர்களின் மொழிவழக்கு ஆகும். அது "ஃபகத் லஃகவ்த்த" என்றே இருக்க வேண்டும்.
அத்தியாயம் : 7
பாடம் : 4 வெள்ளியன்று (வேண்டுதல் ஏற்கப்படுவதற்கு) உள்ள நேரம்.
1543. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை பற்றிக் குறிப்பிடுகையில் "அதில் ஒரு நேரம் இருக்கிறது. சரியாக அந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் அடியார் தொழுகையில் ஈடுபட்டு, அல்லாஹ்விடம் எதைக் கோரினாலும் அதை அவருக்கு அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் குதைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அது மிகக் குறைந்த நேரம் என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கையால் சைகை செய்து உணர்த்தினார்கள்" என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 7
1544. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபுல்காசிம் (நபி-ஸல்) அவர்கள், "வெள்ளியன்று ஒரு நேரம் உண்டு. சரியாக அந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் தொழுகையில் நின்று ஏதேனும் நன்மையைக் கேட்டால், அதை அவருக்கு அல்லாஹ் கொடுக்காமல் இருப்பதில்லை" என்று கூறினார்கள். அந்த நேரம் மிகவும் குறைவான நேரம் என்பதைத் தமது கையால் சைகை செய்து காட்டினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 7
1545. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வெள்ளியன்று ஒரு நேரம் உண்டு. சரியாக அந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் அல்லாஹ்விடம் ஏதேனும் நன்மையைக் கோரினால், அதை அவருக்கு அல்லாஹ் கொடுக்காமல் இருப்பதில்லை. அது (மிகவும்) குறைவான நேரமாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அது (மிகவும்) குறைவான நேரமாகும்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 7
1546. அபூபுர்தா பின் அபீமூசா அல் அஷ்அரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "வெள்ளிக்கிழமையில் உள்ள அந்த (அரிய) நேரம் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உம் தந்தையார் அறிவித்த ஹதீஸை நீர் செவியுற்றீரா?" என்று கேட்டார்கள். நான் கூறினேன்: ஆம்; என் தந்தை பின்வருமாறு அறிவித்ததை நான் செவியுற்றேன்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அது, இமாம் (சொற்பொழிவு மேடையில்) அமர்வதற்கும் தொழுகை முடிவதற்கும் இடையே உள்ள ஒரு நேரமாகும்.- இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 7
பாடம் : 5 வெள்ளிக்கிழமையின் சிறப்பு.
1547. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சூரியன் உதிக்கும் நாட்களில் வெள்ளிக்கிழமையே மிகவும் சிறந்த நாளாகும். அன்று தான் (முதல் மனிதர்) ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள். அன்றுதான் சொர்க்கத்திற்குள் அவர்கள் அனுப்பப்பட்டார்கள். அன்றுதான் அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 7
1548. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சூரியன் உதிக்கும் நாட்களில் வெள்ளிக்கிழமையே மிகவும் சிறந்த நாளாகும். அன்று தான் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள்; அன்றுதான் சொர்க்கத்திற்குள் அனுப்பப் பட்டார்கள்; அன்றுதான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அன்றுதான் யுக முடிவு நிகழும்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 7
பாடம் : 6 வெள்ளிக்கிழமைதான் (வார வழிபாட்டு நாள்) என இந்தச் சமுதாயத்திற்கு அறிவிக்கப் பெற்றது.
1549. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நாம்தாம் (காலத்தால்) பிந்தியவர்களாகவும் மறுமை நாளில் (தகுதியால்) முந்தியவர்களாகவும் இருப்போம். எனினும், (நமக்கு முன்வந்த) ஒவ்வொரு சமுதாயத்தாரும் (யூத மற்றும் கிறித்தவர்) நமக்கு முன்பே வேதம் வழங்கப்பெற்றனர். அவர்களுக்குப் பின்புதான் நாம் வேதம் வழங்கப்பெற்றோம். அல்லாஹ் நம்மீது விதியாக்கியுள்ள இந்த (வெள்ளிக்கிழமை) நாளை அல்லாஹ் நமக்காக(த் தேர்ந்தெடுத்து) அறிவித்தான். (வார வழிபாட்டு நாள் தொடர்பாக) மக்கள் நம்மைப் பின்தொடர்பவர்களாகவே உள்ளனர். (வெள்ளிக்கிழமை நமது வழிபாட்டு நாள் எனில்) அடுத்த நாள் (சனிக்கிழமை) யூதர்களின் (வழிபாட்டு) நாளாகும். அதற்கடுத்த நாள் (ஞாயிற்றுக் கிழமை) கிறித்தவர்களின் (வழிபாட்டு) நாளாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றிலும் "நாம் (காலத்தால்) பிந்தியவர்களாவோம்; மறுமை நாளில் (தகுதியால்) முந்தியவர்களாவோம்" என்றே ஹதீஸ் தொடங்குகிறது.
அத்தியாயம் : 7
1550. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நாமே (காலத்தால்) பிந்தியவர்களாகவும் மறுமை நாளில் (தகுதியால்) முந்தியவர்களாகவும் இருப்போம். நாமே சொர்க்கத்தில் முதலில் நுழைவோம். எனினும், (யூதர் மற்றும் கிறித்தவரான) அவர்கள் நமக்கு முன்பே வேதம் வழங்கப்பெற்றனர். அவர்களுக்குப் பின்புதான் நாம் வேதம் வழங்கப்பெற்றோம். அவர்கள் கருத்து வேறுபாடு கொண்ட விஷயத்தில் அல்லாஹ் நமக்குச் சத்தியத்திற்கு வழிகாட்டினான். இந்த (ஜுமுஆ) நாள் விஷயத்திலும் (அதை வார வழிபாட்டு நாளாக ஏற்பது தொடர்பாக) அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டனர். அல்லாஹ் நமக்கு அந்த நாளை அறிவித்துத் தந்தான். (இதில் மக்கள் அனைவரும் நம்மைப் பின்தொடரக்கூடியவர்களே ஆவர்.) இன்று (வெள்ளிக்கிழமை) நமக்குரிய (வழிபாட்டு) நாளாகும். நாளை (சனிக்கிழமை) யூதர்களுக்குரிய நாளாகும். மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கிறித்தவர்களுக்குரிய நாளாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 7
1551. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எங்களுக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் இந்த ஹதீஸும் ஒன்றாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நாமே (காலத்தால்) பிந்தியவர்களாகவும் மறுமை நாளில் (தகுதியால்) முந்தியவர்களாகவும் இருப்போம். எனினும், (யூதர் மற்றும் கிறித்தவரான) அவர்கள் நமக்கு முன்பே வேதம் வழங்கப்பெற்றனர். அவர்களுக்குப் பின்பே நமக்கு வேதம் வழங்கப்பெற்றது. இந்த (வெள்ளி)க்கிழமைதான் அவர்களுக்கும் (வார வழிபாட்டு) நாளாக கடமையாக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர்கள் இ(ந்த நாளைத் தமது வார வழிபாட்டு நாளாக ஏற்றுக்கொள்வ)தில் கருத்து வேறுபாடு கொண்டனர். ஆகவே, அல்லாஹ் நமக்கு அந்த நாளை அறிவித்தான். இதில் அவர்கள் (அனைவரும்) நம்மைப் பின் தொடர்பவர்களே ஆவர். (எவ்வாறெனில், வெள்ளிக்கிழமை நமது வார வழிபாட்டு நாள் என்றால்) யூதர்களுக்கு நாளை (சனிக்கிழமை)யும் கிறித்தவர்களுக்கு மறுநாளும் (ஞாயிற்றுக்கிழமையும் வார வழிபாட்டு நாட்களாகும்).- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 7
1552. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், நமக்கு முந்தைய (யூதர் மற்றும் கிறித்தவ) சமுதாயத்தாரை (வார வழிபாட்டு நாளான) வெள்ளிக்கிழமையிலிருந்து வழிபிறழ விட்டுவிட்டான். எனவே, யூதர்களுக்குச் சனிக்கிழமையும் கிறித்தவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமையும் (வார வழிபாட்டு நாட்களாக) அமைந்தன. பிறகு அல்லாஹ் நம்மைப் படைத்து நமக்கு வெள்ளிக்கிழமையை அறிவித்தான். (வரிசை முறையில்) வெள்ளி, சனி, ஞாயிறு என அமைந்திருப்பதைப் போன்றே மறுமை நாளிலும் அவர்கள் நம்மைப் பின்தொடர்பவர்களாகவே இருப்பார்கள். உலக மக்களில் நாமே (காலத்தால்) பிந்தியவர்களாக இருக்கிறோம்; மறுமை நாளில் (தகுதியால்) முந்தியவர்களாகவும் படைப்பினங்களில் அனைவருக்கும் முன் தீர்ப்பளிக்கப் படுபவர்களாகவும் இருப்போம்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்களும் ஹுதைஃபா (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 7
1553. மேற்கண்ட ஹதீஸ் ஹுதைஃபா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நமக்கு வெள்ளிக்கிழமை (வார வழிபாட்டு நாளாக) அறிவிக்கப்பெற்றது. நமக்கு முன்னிருந்தவர்களை அதிலிருந்து அல்லாஹ் வழி பிறழ விட்டுவிட்டான்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ஹதீஸ் தொடங்குகிறது.
மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறே வேறு வார்த்தைகளில் இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 7
பாடம் : 7 வெள்ளிக்கிழமை (தொழுகைக்கு) நேரத்தோடு செல்வதன் சிறப்பு.
1554. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் வானவர்கள் (ஜுமுஆ தொழுகை நடைபெறும்) பள்ளி வாசலின் ஒவ்வொரு நுழைவாயிலிலும் நின்று கொண்டு, முதன்முதலாக உள்ளே நுழைபவரையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவரையும் (அவர்கள் யார், யார் என) எழுதிப் பதிவு செய்துகொண்டிருப்பார்கள். இமாம் (மிம்பர்மீது) அமர்ந்துவிட்டால், வானவர்கள் அந்த (பெயர் பதிவு) ஏடுகளைச் சுருட்டிவைத்துவிட்டு வந்து (இமாமின்) உரையைச் செவியுறுகின்றனர். (ஜுமுஆவுக்காக) நேரத்தோடு வருபவரது நிலையானது,ஓர் ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தவரது நிலைக்கு ஒப்பானதாகும். அதற்கடுத்து வருபவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். அதற்கடுத்து வருபவர் ஓர் ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். அதற்கடுத்து வருபவர் ஒரு கோழியையும், அதற்கடுத்து வருபவர் ஒரு முட்டையையும் தர்மம் செய்தவர் போன்றவர்கள் ஆவர்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 7