1495. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ரக்அத்தில் இரண்டு அத்தியாயங்கள் வீதம் பத்து ரக்அத்களில் இருபது அத்தியாயங்களாக ஓதிவந்த சரிநிகர் அத்தியாயங்களை நான் அறிவேன்" என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 6
1496. அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஒரு நாள்) காலையில் வைகறை (சுப்ஹு)த் தொழுகைக்குப் பிறகு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் (அவர்களது இல்லத்திற்குச்) சென்றோம். வாசலில் (நின்று) சலாம் சொன்னோம். அவர்கள் எங்களுக்கு உள்ளே வர அனுமதியளித்தார்கள். ஆனால், நாங்கள் சிறிது நேரம் வாசலிலேயே (தயங்கியவாறு) நின்றுகொண்டிருந்தோம். அப்போது பணிப் பெண் வெளியே வந்து, "நீங்கள் உள்ளே வரக் கூடாதா?" என்று கேட்டாள். நாங்கள் உள்ளே சென்றோம். அப்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் இறைவனைத் துதித்துக்கொண்டிருந்தார்கள்;
)எங்களைக் கண்டதும்) "உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்ட பின்பும் ஏன் நீங்கள் உள்ளே வரவில்லை?" என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள் "(அப்படியொன்றும்) இல்லை; (தங்கள்) வீட்டாரில் எவரேனும் உறங்கிக்கொண்டிருப்பார்கள் என்று நாங்கள் எண்ணினோம்" என்று சொன்னோம். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் "இப்னு உம்மி அப்தின் குடும்பத்தார் (தொழுகையில்) அலட்சியமாக இருப்பார்கள் என எண்ணிக்கொண்டீர்களா?" என்று கூறி விட்டு (மீண்டும்) இறைவனைத் துதிப்பதில் ஈடுபடலானார்கள். பின்னர் சூரியன் உதயமாகியிருக்கலாம் என எண்ணிய அவர்கள் (தம் பணிப்பெண்ணிடம்) "பெண்ணே! சூரியன் உதயமாகிவிட்டதா, பார்?" என்றார்கள். அந்தப் பெண் பார்த்தபோது சூரியன் உதயமாகியிருக்கவில்லை. எனவே, அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் மீண்டும் இறைவனைத் துதிப்பதில் ஈடுபடலானார்கள். பின்னர் சூரியன் உதயமாகி விட்டதாக எண்ணியபோது (மறுபடியும்) "பெண்ணே, சூரியன் உதயமாகிவிட்டதா, பார்!" என்றார்கள். அவள் பார்த்தபோது சூரியன் உதயமாகிவிட்டிருந்தது. அப்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் "இன்றைய நாளை நமக்கு மீட்டுத்தந்த இறைவனுக்கே புகழ் யாவும்; அவன் நம்மை நம் பாவங்களால் அழித்துவிடவில்லை" என்று கூறினார்கள்.
அப்போது அங்கிருந்த மக்களில் ஒருவர், "நேற்றிரவு நான் "முஃபஸ்ஸல்" அத்தியாயங்கள் முழுவதையும் ஓதி முடித்தேன்" என்று கூறினார். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் "பாட்டுப் பாடுவதைப் போன்று அவசர அவசரமாக (குர்ஆனை) ஓதினீரோ? நாங்கள் ஒரே அளவிலமைந்த அத்தியாயங்களை (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓதும்போது) செவியுற்றோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வழக்கமாக) ஓதிவந்த ஒரே அளவிலமைந்த "முஃபஸ்ஸல்" அத்தியாயங்கள் பதினெட்டையும் "ஹாமீம்" (எனத் தொடங்கும் அத்தியாயங்களின்) குடும்பத்தில் இரண்டு அத்தியாயங்களையும் நான் மனனமிட்டுள்ளேன்" என்றார்கள்.
அத்தியாயம் : 6
1497. அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
பனூ பஜீலா குடும்பத்தைச் சேர்ந்த நஹீக் பின் சினான் என்று கூறப்படும் ஒரு மனிதர் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் வந்து "நான் ஒரே ரக்அத்தில் முஃபஸ்ஸல் அத்தியாயங்கள் அனைத்தையும் ஓதுகிறேன்" என்றார். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் "பாட்டுப் பாடுவதைப் போன்று அவசர அவசரமாக ஓதினீரோ! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ரக்அத்தில் இரண்டு அத்தியாயங்கள் வீதம் ஓதிவந்த சரிநிகர் அத்தியாயங்களை நான் அறிந்து வைத்துள்ளேன்" என்று கூறினார்கள்.
- அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் வந்து "நான் இன்றிரவு ஒரே ரக்அத்தில் முஃபஸ்ஸல் அத்தியாயங்கள் முழுவதையும் ஓதி முடித்தேன்" என்றார். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் "பாட்டுப் பாடுவதைப் போன்று அவசர அவசரமாக ஓதினீரோ! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது தொழுகையில்) ஒவ்வொரு ரக்அத்திலும் இரண்டிரண்டு அத்தியாயங்களாகச் சேர்த்து ஓதிவந்த சரிநிகர் அத்தியாயங்களை நான் அறிந்துள்ளேன்" எனக் கூறிவிட்டு, முஃபஸ்ஸல் அத்தியாயங்களில் இருபது அத்தியாயங்களைக் குறிப்பிட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
பாடம் : 50 சில ஓதும் முறைகள் பற்றிய குறிப்பு.
1498. அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் பள்ளிவாசலில் குர்ஆன் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம் ஒரு மனிதர் "நீங்கள் இந்த (54:32ஆவது) வசனத்தை எப்படி ஓதுகிறீர்கள்? ஃபஹல் மின்(ம்) முத்தகிர் என "தால்" எனும் எழுத்துடன் ஓத வேண்டுமா? அல்லது (ஃபஹல் மின்(ம்) முஸ்ஸகிர் என) "ஃதால்" எனும் எழுத்துடன் ஓத வேண்டுமா?" என்று கேட்டார். அதற்கு "தால்" (எனும் எழுத்து) கொண்டே (ஓத வேண்டும்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "முத்தகிர்" என "தால்" (எனும் எழுத்து) கொண்டே ஓதியதை நான் கேட்டேன் என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள் என்று அஸ்வத் (ரஹ்) அவர்கள் விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 6
1499. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (54:32ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள இத்தொடரை) "ஃபஹல் மின்(ம்) முத்தகிர்" என்றே ஓதினார்கள்.
இதை அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1500. அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் மாணவர்களான) நாங்கள் ஷாம் (சிரியா) நாட்டுக்குச் சென்றிருந்தோம். (நாங்கள் வந்துள்ள செய்தியறிந்து) எங்களிடம் அபுத்தர்தா (ரலி) அவர்கள் வந்து, "அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் ஓதல் முறைப்படி ஓதத் தெரிந்தவர் எவரேனும் உங்களிடையே உண்டா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்; நான் (இருக்கிறேன்)" என்று பதிலளித்தேன். அபுத் தர்தா (ரலி) அவர்கள், "வல்லைலி இஃதா யஃக்ஷா" எனும் இந்த (92:3ஆவது) வசனத்தை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் எவ்வாறு ஓதக் கேட்டீர்கள்?" என்று வினவினார்கள். நான் "வல்லைலி இஃதா யஃக்ஷா வத்தகரி வல் உன்ஸா" என்றே ஓதினார்கள் என்று பதிலளித்தேன். அபுத்தர்தா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இவ்வாறு ஓதவே நான் கேட்டுள்ளேன். இந்த மக்கள் (ஷாம்வாசிகள்) "வமா கலக்கஃத் தகர வல்உன்ஸா" என்றே நான் ஓத வேண்டுமென விரும்புகிறார்கள். ஆனால், இவர்களை நான் பின்பற்றமாட்டேன்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1501. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் அல்கமா (ரஹ்) அவர்கள் கூறியிருப்பதாவது: நான் ஷாம் (சிரியா) நாட்டிற்குச் சென்றேன். அங்கு பள்ளிவாசலுக்குச் சென்று தொழுதேன். பின்னர் எழுந்து ஒரு சபைக்குச் சென்று அதில் அமர்ந்தேன். அப்போது ஒருவர் (அபுத்தர்தா-ரலி) வந்து என் அருகே அமர்ந்தார். அவரிடம் (அக்கால) மக்களின் எளிமையையும் தோற்றத்தையும் கண்டேன். அவர் (என்னிடம்), "அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஓதுகின்ற முறையை நீங்கள் மனனமிட்டுள்ளீர்களா?" என்று வினவினார்.
அத்தியாயம் : 6
1502. அல்கமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபுத்தர்தா (ரலி) அவர்களைச் சந்தித்தேன். அவர்கள் என்னிடம் "நீங்கள் எந்த நாட்டவர்?" என்று கேட்க, "இராக்கியர்" என்று நான் பதிலளித்தேன். "இராக்கியரில் நீங்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்?" என்று அன்னார் வினவ, "கூஃபாவாசி" என நான் விடையளித்தேன். "அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஓதிய முறையில் நீங்கள் ஓதுவீர்களா?" என அவர்கள் கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். "அப்படியானால், "வல்லைலி இதா யஃக்ஷா" எனும் (92ஆவது) அத்தியாயத்தை ஓதிக் காட்டுங்கள்" என்றார்கள். நான் "வல்லைலி இதா யஃக்ஷா" என ஓதத் தொடங்கி "வத்தகரி வல்உன்ஸா" என ஓதினேன். உடனே அபுத்தர்தா (ரலி) அவர்கள் சிரித்துவிட்டு "இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓத நான் செவியேற்றேன்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், அல்கமா (ரஹ்) அவர்கள் "நான் ஷாம் (சிரியா) நாட்டிற்குச் சென்றேன். அங்கு அபுத்தர்தா (ரலி) அவர்களைச் சந்தித்தேன்" என்று கூறியதாக ஹதீஸ் தொடங்குகிறது.
அத்தியாயம் : 6
பாடம் : 51 தொழுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நேரங்கள்.
1503. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ருக்குப் பின்னாலிருந்து சூரியன் மறையும் வரைத் தொழ வேண்டாம் எனவும்,சுப்ஹுக்குப் பின்னாலிருந்து சூரியன் உதயமாகும் வரைத் தொழ வேண்டாம் எனவும் தடை செய்தார்கள்.
அத்தியாயம் : 6
1504. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ருக்குப் பின்னாலிருந்து சூரியன் உதயமாகும் வரையும் அஸ்ருக்குப் பின்னாலிருந்து சூரியன் மறையும் வரையும் தொழ வேண்டாமெனத் தடை செய்தார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் பலர் கூறக்கேட்டுள்ளேன். அவர்களில் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களும் ஒருவர். அன்னார் எனக்கு மிகவும் விருப்பமானவர்களாவார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1505. மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் சயீத் மற்றும் ஹிஷாம் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் ("சூரியன் உதயமாகும் வரை" என்பதைச் சுட்ட "ஹத்தா தத்லுஅஷ் ஷம்சு" எனும் சொற்றொடருக்கு பதிலாக) "ஹத்தா தஷ்ருகஷ் ஷம்சு" எனும் சொற்றொடர் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 6
1506. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அஸ்ர் தொழுகைக்குப் பின்னாலிருந்து சூரியன் மறையும்வரை எந்தத் தொழுகையும் இல்லை. ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்னாலிருந்து சூரியன் உதிக்கும்வரை எந்தத் தொழுகையும் இல்லை.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 6
1507. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் (சரியாகச்) சூரியன் உதிக்கும் நேரத்தையும் சூரியன் மறையும் நேரத்தையும் தேர்ந்தெடுத்துத் தொழ வேண்டாம்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 6
1508. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
)சரியாகச்) சூரியன் உதிக்கும் நேரத்தையோ சூரியன் மறையும் நேரத்தையோ நீங்கள் தொழுவதற்காகத் தேர்வு செய்யாதீர்கள். ஏனெனில் அது, ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையே உதிக்கின்றது.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1509. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சூரியனின் ஒரு பகுதி (கிழக்கில்) தோன்றும் போது (தொழாதீர்கள்.) அது முழுமையாக வெளிப்படும்வரைத் தொழுவதைத் தாமதப்படுத்துங்கள்; சூரியனின் ஒரு பகுதி (மேற்கில்) மறையும்போது (தொழாதீர்கள்); அது முழுமையாக மறையும்வரைத் தொழுகையைத் தாமதப்பபடுத்துங்கள்.-இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1510. அபூபஸ்ரா அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
)ஒரு பயணத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அல்முகம்மஸ்" எனுமிடத்தில் எங்களுக்கு அஸ்ர் தொழுகை தொழுவித்தார்கள். பிறகு "இந்தத் தொழுகையை நிறைவேற்றுமாறு உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களிடம் கூறப்பட்டது. ஆனால்,அவர்கள் அதைப் பாழாக்கிவிட்டார்கள். எனவே, யார் இத் தொழுகையைப் பேணித் தொழுது வருகிறாரோ அவருக்கு இரு மடங்கு நற்பலன் உண்டு. அஸ்ருக்குப் பின்னாலிருந்து (சூரியன் மறைந்து) நட்சத்திரம் தோன்றும்வரை எந்தத் தொழுகையும் இல்லை.
இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள "ஷாஹித்" எனும் சொல்லுக்கு "நட்சத்திரம்" என்று பொருள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூபஸ்ரா அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1511. உக்பா பின் ஆமிர் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
மூன்று நேரங்களில் தொழ வேண்டாம்; அல்லது இறந்தவர்களைப் புதைக்க வேண்டாம் என எங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்துவந்தார்கள்.
1.சூரியன் உதயமாகத் துவங்கியதிலிருந்து நன்கு உயரும்வரை,
2.ஒருவர்உச்சிப் பொழுதில் நிற்கும்போது நிழல் விழாது போகும்) நண்பகல் துவங்கியதிலிருந்து சூரியன் (மேற்கு) சாயும்வரை.
3.சூரியன் அஸ்தமிக்கத் தலைப்பட்டதிலிருந்து நன்கு மறையும்வரை.
அத்தியாயம் : 6
பாடம் : 52 அம்ர் பின் அபசா (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய நிகழ்ச்சி.
1512. அம்ர் பின் அபசா அஸ்ஸுலமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அறியாமைக் காலத்தில் வாழ்ந்தபோது மக்கள் அனைவரும் வழிகேட்டில் இருக்கிறார்கள்; அவர்களுக்கென (வாழ்க்கை நெறி) எதுவும் கிடையாது; அவர்கள் சிலைகளை வணங்கிக்கொண்டிருக்கிறார்கள் என எண்ணி (வருந்தி)னேன். இந்நிலையில் மக்காவில் ஒரு மனிதர் (புதிய) செய்திகளைச் சொல்லிவருவதாகக் கேள்விப்பட்டேன். எனவே, நான் எனது வாகனத்தில் அமர்ந்து அவரை நோக்கிச் சென்றேன். அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலைமறைவாக இருந்துகொண்டிருந்தார்கள். அவர்களுடைய சமுதாயத்தார் அவர்களுக்கெதிரான துணிகரச் செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். எனவே, நான் அரவமின்றி மெதுவாக மக்காவுக்குள் நுழைந்து அவர்களிடம் சென்றேன். அவர்களிடம் நான், "நீங்கள் யார்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "நான் ஒரு நபி" என்றார்கள். நான் "நபி என்றால் என்ன?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "அல்லாஹ் என்னை (தனது செய்தியுடன்) அனுப்பி உள்ளான்" என்று கூறினார்கள். நான் "என்னென்ன செய்திகளுடன் அனுப்பியுள்ளான்?" என்று கேட்டேன். அதற்கு "இரத்த உறவுகளைப் பேணி வாழ வேண்டும்; சிலை (வழிபாடு)களை ஒழிக்க வேண்டும்; இறைவன் ஒருவனே;அவனுக்கு இணையாக எதுவுமில்லை எனும் செய்திகளுடன் என்னை அனுப்பினான்" என்று பதிலளித்தார்கள். நான் "இந்தக் கொள்கையை ஏற்றுக்கொண்டவர் யார் உங்களுடன் இருக்கின்றார்கள்?" என அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் "ஒரு சுதந்திரவானும் ஓர் அடிமையும் உள்ளனர்" என்றார்கள். (அன்றைய நாளில் அபூபக்ர் (ரலி) அவர்களும் பிலால் (ரலி) அவர்களும் நபியவர்களை ஏற்று அவர்களுடன் இருந்தனர்).
"நானும் தங்களைப் பின்பற்ற விழைகிறேன்" என்று நான் கூறினேன். அதற்கவர்கள் "இந்த நாளில் அவ்வாறு உம்மால் என்னைப் பின்பற்ற இயலாது. எனது நிலையையும் மக்களின் நிலையையும் நீர் பார்க்கவில்லையா? (தற்போது) நீர் உம்முடைய குடும்பத்தாரிடம் திரும்பிச் செல்லும்! நான் எழுச்சி கண்டேன் என என்னைப் பற்றி நீர் கேள்விப்பட்டால் என்னிடம் வாரும்!"என்றார்கள். அதற்கேற்ப நான் என் குடும்பத்தாரிடம் சென்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நாடு துறந்து) மதீனாவுக்குச் சென்றுவிட்டார்கள். நான் என் குடும்பத்தாரிடம் இருந்துகொண்டே செய்திகளைக் கேட்டு அறிந்து கொண்டிருந்தேன். அவர்கள் மதீனாவுக்குச் சென்றவுடன் மக்களிடம் அவர்களைப் பற்றி விசாரித்தேன். ஒரு சமயம் யஸ்ரிப் (மதீனா)வாசிகளில் சிலர் என்னிடம் வந்தனர். அவர்களிடம் "மதீனாவிற்கு வந்துள்ள இந்த மனிதர் என்ன செய்துகொண்டிருக்கிறார்" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "மக்கள் அவரை நோக்கி விரைந்துகொண்டிருக்கின்றனர். (மக்காவில்) அவருடைய சமுதாயத்தார் அவரைக் கொன்றுவிடத் திட்டமிட்டனர். ஆனால், அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை" என்று கூறினர்.
பின்னர் நான் மதீனாவுக்குச் சென்று நபியவர்களைச் சந்தித்தேன். அப்போது, "அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்கு என்னை அடையாளம் தெரிகிறதா?" என்று கேட்டேன். அவர்கள் "ஆம், மக்காவில் என்னை வந்து சந்தித்தவர்தாமே!" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். பிறகு "அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத்தந்துள்ள, எனக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள். தொழுகையைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்!" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "சுப்ஹுத் தொழுகையைத் தொழுங்கள். பிறகு சூரியன் உதயமாகி உயரும்வரை தொழுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். ஏனெனில், அது உதயமாகும் போது ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையே உதயமாகிறது. அப்போதுதான் அதற்கு இறைமறுப்பாளர்கள் சிரவணக்கம் செய்கின்றனர். பிறகு தொழுங்கள்! அந்த நேரத்தில் தொழும் தொழுகை (வானவர்களால்) சாட்சியமளிக்கப்படக்கூடியதும் (வானவர்கள்) வருகை தரக்கூடியதுமாகும். ஈட்டியின் நிழல் கிழக்கிலோ மேற்கிலோ சாயாமல் அதன்மீதே விழும் (நண்பகல் நேரம்)வரைத் தொழுங்கள்! பிறகு தொழுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். ஏனெனில், அப்போது நரகம் எரிக்கப்படுகிறது. பிறகு நிழல் (கிழக்கே) சாய்ந்துவிட்டால் தொழுது கொள்ளுங்கள். அந்நேரத்தொழுகைக்கு (வானவர்களால்) சாட்சியமளிக்கப்படுகிறது. அவர்கள் அதில் பங்கேற்கின்றனர். பிறகு அஸ்ர்வரைத் தொழுதுகொள்க. பிறகு சூரியன் மறையும்வரைத் தொழுவதை நிறுத்திவிடுக! ஏனெனில், அது ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையேதான் மறைகிறது. இந்த நேரத்தில் அதற்கு இறைமறுப்பாளர்கள் சிரவணக்கம் செய்கின்றனர்" என்று கூறினார்கள்.
நான், "அல்லாஹ்வின் தூதரே! அங்கத் தூய்மை (உளூ) செய்வது பற்றி எனக்குச் சொல்லுங்கள்!" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "உங்களில் ஒருவர் அங்கத் தூய்மை செய்வதற்குத் தண்ணீரை நெருங்கி வாய் கொப்புளித்து (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்குச் சிந்தினால் அவரது முகம், வாய், மூக்கு ஆகியவற்றால் ஏற்பட்ட பாவங்கள் அனைத்தும் (தண்ணீரோடு சேர்ந்து கீழே) விழுந்துவிடுகின்றன. பிறகு அவர் அல்லாஹ் உத்தரவிட்டதைப் போன்று தமது முகத்தைக் கழுவினால் அவரது முகத்தால் ஏற்பட்ட பாவங்கள் அனைத்தும் அவரது தாடி ஓரங்களிலிருந்து தண்ணீரோடு சேர்ந்து விழுந்துவிடுகின்றன. பிறகு அவர் மூட்டுவரை இரு கைகளைக் கழுவும்போது அவருடைய கைகளின் பாவங்கள் அனைத்தும் அவரது விரல் நுனிகளிலிருந்து தண்ணீரோடு சேர்ந்து விழுந்துவிடுகின்றன. பிறகு அவர் ஈரக் கையால் தலையைத் தடவி (மஸ்ஹுச் செய்தி)டும் போது அவரது தலையின் பாவங்கள் அனைத்தும் தலைமுடியின் ஓரங்களிலிருந்து தண்ணீரோடு சேர்ந்து விழுந்துவிடுகின்றன. பிறகு அவர் தம் பாதங்களைக் கணைக்கால்கள்வரைக் கழுவும்போது அவரது கால்களால் ஏற்பட்ட பாவங்கள் அனைத்தும் அவரது விரல் நுனிகளிலிருந்து தண்ணீரோடு சேர்ந்து விழுந்துவிடுகின்றன. (அதற்குப் பிறகு) அவர் எழுந்து தொழும்போது அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்றதைக் கூறிப் புகழ்ந்து பெருமைப்படுத்தித் தமது உள்ளத்தில் இறைவனுக்கு மட்டுமே இடமளித்தால் அவர் திரும்பிச் செல்கையில் அன்று பிறந்த பாலகனைப் போன்று பாவங்கள் நீங்கி (பரிசுத்தமாகத்) திரும்புகிறார்" என்று கூறினார்கள்.
)இதன் அறிவிப்பாளரான) நபித்தோழர் அபூஉமாமா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
இந்த ஹதீஸை அம்ர் பின் அபசா (ரலி) அவர்கள் என்னிடம் கூறியபோது நான், "அம்ர் பின் அபசா! என்ன சொல்கிறீர்கள் என்பதை நன்கு யோசித்துச் சொல்லுங்கள்! ஒரே இடத்தில் (இத்தனையும்) அந்த மனிதர் வழங்கப்பெறுகிறாரா?" என்று கேட்டேன். அதற்கு அம்ர் பின் அபசா (ரலி) அவர்கள், "அபூஉமாமா, என் வயது முதிர்ந்துவிட்டது; எனது எலும்பு நலிந்து விட்டது; எனது தவணை நெருங்கி விட்டது. இந்நிலையில் அல்லாஹ்வின் மீதோ அவன் தூதர்மீதோ பொய்யுரைப்பதற்கு எனக்கு எந்தத் தேவையுமில்லை. நான் இந்த ஹதீஸை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ஒரு தடவை, இரண்டு தடவை, மூன்று தடவை (இவ்வாறு ஏழுவரை எண்ணிச் சொல்கிறார்) மட்டுமே செவியுற்றிருந்தால் இதை ஒருபோதும் நான் அறிவித்திருக்கமாட்டேன். ஆனால்,அதைவிட அதிகத் தடவைகள் நான் செவியுற்றேன் (அதனால்தான் அறிவித்தேன்)" என்றார்கள்.
அத்தியாயம் : 6
பாடம் : 53 சரியாகச் சூரியன் உதிக்கும் நேரத்தையும் மறையும் நேரத்தையும் தேர்ந்தெடுத்துத் தொழாதீர்!
1513. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
)அஸ்ருக்குப் பிறகு அறவே தொழக் கூடாது எனும் நபிமொழி அறிவிப்பில்) உமர் (ரலி) அவர்கள் தவறாகச் சொல்லிவிட்டார்கள்;அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் உதிக்கும் நேரத்தையும் மறையும் நேரத்தையும் குறிப்பாகத் தேர்ந்தெடுத்துத் தொழப்படுவதையே தடை செய்தார்கள்.
அத்தியாயம் : 6
1514. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ருக்குப் பிறகு இரண்டு ரக்அத்கள் (கூடுதலாகத்) தொழுவதை விட்டதேயில்லை. "சரியாகச் சூரியன் உதிக்கும் நேரத்தையும் மறையும் நேரத்தையும் தேர்ந்தெடுத்துத் தொழும் வழக்கத்தை கைக்கொள்ளாதீர்கள்"என்றுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 6