பாடம் : 34 குர்ஆனை இனிய குரலில் ஓதுவது விரும்பத்தக்கதாகும்.
1450. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ், தன் தூதர் (முழு ஈடுபாட்டுடன்) இனிய குரலில் குர்ஆன் ஓதும் போது செவிகொடுத்துக் கேட்டதைப் போன்று வேறெதையும் அவன் செவிகொடுத்துக் கேட்டதில்லை" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இன்னும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் "ஒரு நபி (முழு ஈடுபாட்டுடன்) இனிய குரலில் குர்ஆன் ஓதும்போது அல்லாஹ் செவிகொடுத்துக் கேட்பதைப் போன்று..." என்று (சிறிய வித்தியாசத்துடன்) அறிவித்துள்ளார்கள்.
அத்தியாயம் : 6
1451. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"அல்லாஹ், தன் தூதர் ஒருவர் குரலெடுத்து (முழு ஈடுபாட்டுடன்) இனிமையாகக் குர்ஆனை ஓதும்போது செவிகொடுத்துக் கேட்டதைப் போன்று வேறெதையும் அவன் செவிகொடுத்துக் கேட்டதில்லை" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்" என்றே இடம் பெற்றுள்ளது. "அவர்கள் கூறியதைக் கேட்டேன்" என்று இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 6
1452. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், தன் தூதர் ஒருவர் குரலெடுத்து இனிமையாகக் குர்ஆன் ஓதும்போது செவி கொடுத்துக் கேட்டதைப் போன்று வேறெதையும் அவன் செவிகொடுத்துக் கேட்டதில்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "செவிகொடுத்துக் கேட்பது" என்பதைக் குறிக்க ("க அதனிஹி" என்பதற்கு பதிலாக) "க இத்னிஹீ" எனும் சொல் ஆளப்பட்டுள்ளது.
அத்தியாயம் : 6
1453. புரைதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அபூமூசா (ரலி) அவர்களைப் பாராட்டி) "அப்துல்லாஹ் பின் கைஸ்" அல்லது "அஷ்அரீ"தாவூத் (அலை) அவர்களின் சங்கீதம் (போன்ற இனிய குரல்) ஒன்று வழங்கப்பட்டுள்ளார்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1454. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், (நான் இனிய குரலில் குர்ஆன் ஓதுவதைப் பாராட்டி), "நீங்கள் நேற்றிரவில் குர்ஆன் ஓதிக்கொண்டிருந்ததைச் செவியுற்றேன். அப்போது நீங்கள் என்னைப் பார்த்திருந்தால் (உங்களுக்கு மகிழ்ச்சியாய் இருந்திருக்கும்). (இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த சங்கீதம் (போன்ற இனிய குரல்) ஒன்று உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 6
பாடம்: 35 மக்கா வெற்றி தினத்தில் நபி (ஸல்) அவர்கள் "அல்ஃபத்ஹ்" (எனும் 48ஆவது) அத்தியாயத்தை ஓதியது பற்றிய குறிப்பு.
1455. முஆவியா பின் குர்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றிப் பயணத்தில் தமது ஒட்டகத்தின் மீதமர்ந்தபடி "அல்ஃபத்ஹ்" எனும் (48ஆவது) அத்தியாயத்தை "தர்ஜீஉ" செய்து (ஓசை நயத்துடன்) ஓதினார்கள்" என அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் அல் முஸனீ (ரலி) அவர்கள் கூற நான் கேட்டேன்.மக்கள் என்னைச் சுற்றிலும் திரண்டு விடுவார்கள் எனும் அச்சம் எனக்கில்லையாயின் அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் ("தர்ஜீஉ" செய்து) ஓதிக் காட்டியதைப் போன்று உங்களிடம் நான் ஓதிக் காட்டியிருப்பேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1456. முஆவியா பின் குர்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி தினத்தில் தமது ஒட்டகத்தின் மீதமர்ந்தபடி "அல்ஃபத்ஹ்" (எனும் 48ஆவது) அத்தியாயத்தை "தர்ஜீஉ" செய்து (ஓசை நயத்துடன்) ஓதிக் கொண்டிருந்ததை நான் கண்டேன்" என்று அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் கூறிவிட்டு, "தர்ஜீஉ" செய்து (ஓசை நயத்துடன்) ஓதிக் காட்டினார்கள்.
மக்கள் (என்னைச் சுற்றிலும் திரண்டுவிடுவர் என்பது) குறித்து நான் அஞ்சவில்லையாயின் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் குறிப்பிட்டுக் காட்டியதைப் போன்றே உங்களுக்கும் நான் எடுத்(துரைத்)திருப்பேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது
அத்தியாயம் : 6
1457. மேற்கண்ட ஹதீஸ் இன்னும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் காலித் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "வாகனத்தின் மீது பயணம் செய்தபடி அல்ஃபத்ஹ் அத்தியாயத்தை ஒதிக்கொண்டிருந்தார்கள்" என்று இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 6
பாடம் : 36 குர்ஆன் ஓதுவதால் அமைதி இறங்குகிறது.
1458. பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் "அல்கஹ்ஃப்" எனும் (18ஆவது) அத்தியாயத்தை (தமது இல்லத்தில் அமர்ந்து) ஓதிக்கொண்டிருந்தார். அவருக்கு அருகில் நீண்ட இரு கயிறுகளால் குதிரையொன்று கட்டப்பட்டிருந்தது. அதை ஒரு மேகம் சூழ்ந்துகொண்டு வட்டமிட்டபடி நெருங்கத் தொடங்கியது. அதனால் குதிரை மிரள ஆரம்பித்தது. விடிந்தவுடன் அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைத் தெரிவித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் "குர்ஆன் ஓதியக் காரணத்தால் இறங்கிய அமைதிதான் அது" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 6
1459. பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் தமது வீட்டில் வாகனப் பிராணி ஒன்று இருக்க, "அல்கஹ்ஃப்" எனும் (18ஆவது) அத்தியாயத்தை ஓதினார். உடனே அந்தப் பிராணி மிரள ஆரம்பித்தது. அந்த மனிதர் (திரும்பிப்) பார்த்தார். அப்போது மேகத்திரள் ஒன்று வந்து அவரை மூடிக்கொண்டது. இதை அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் சொன்னபோது நபி (ஸல்) அவர்கள், "இன்னாரே, நீர் தொடர்ந்து ஓதிக்கொண்டேயிரு(ந்திருக்க வேண்டு)ம். அந்த மேகம் குர்ஆனின் வசனங்களை ஓதியதற்காக (இறைவனிடமிருந்து உம்மீது) இறங்கிய அமைதி(ச் சின்னம்) ஆகும்" என்று சொன்னார்கள்.-இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ("மிரள ஆரம்பித்தது" என்பதற்கு பதிலாக) "குதிக்கலாயிற்று" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 6
1460. உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் ஓர் இரவில் எனது பேரீச்சங்(கனிகளை உலரவைக்கும்) களத்தில் குர்ஆன் ஓதிக் கொண்டிருந்தேன். அப்போது எனது குதிரை கடுமையாக மிரண்டது. நான் தொடர்ந்து ஓதிக்கொண்டே இருந்தேன். மீண்டும் குதிரை மிரண்டது. தொடர்ந்து நான் ஓதிக் கொண்டேயிருந்தேன். மீண்டும் அது மிரண்டது. (அங்கு படுத்திருந்த என் மகன்) யஹ்யாவை அந்தக் குதிரை மிதித்துவிடுமோ என்று நான் அஞ்சிய போது அதை நோக்கி எழுந்து சென்றேன். அங்கு மேகம் போன்றதொரு பொருளை என் தலைக்கு மேலே கண்டேன். அதில் விளக்குகள் போன்ற (பிரகாசிக்கும்) பொருள்கள் இருந்தன. நான் பார்த்தவுடன் அது வானில் உயர்ந்து (என் கண்ணைவிட்டு மறைந்து)விட்டது; பிறகு நான் அதைக் காணமுடியவில்லை.
காலையில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று "அல்லாஹ்வின் தூதரே! நான் நேற்றிரவு பாதி இரவில் எனது பேரீச்சங்களத்தில் குர்ஆன் ஓதிக்கொண்டி ருக்கையில் என் குதிரை கடுமையாக மிரண்டது" என்று (நடந்ததைச்) சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இப்னு ஹுளைரே, தொடர்ந்து ஓதியிருக்கலாமே?" என்று கேட்டார்கள். "நான் தொடர்ந்து ஓதினேன். மீண்டும் எனது குதிரை மிரண்டது" என்று நான் சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இப்னு ஹுளைரே, தொடர்ந்து ஓதியிருக்கலாமே?" என்று கேட்டார்கள். "நான் தொடர்ந்து ஓதினேன். மீண்டும் எனது குதிரை மிரண்டது" என்று சொன்னேன். "இப்னு ஹுளைரே, தொடர்ந்து ஓதியிருக்கலாமே!" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மீண்டும்) கூறியபோது, "(என் மகன்) யஹ்யாவைக் குதிரை மிதித்துவிடுமோ என்று அஞ்சினேன். அவன் அதன் அருகில் இருந்தான். எனவே, நான் திரும்பிச் சென்றேன். நான் (எனது தலையை உயர்த்தி வானைப் பார்த்தபோது) அங்கு மேகம் போன்றதொரு பொருளைக் கண்டேன். அதில் விளக்குகள் போன்ற (பிரகாசிக்கும்) பொருள்கள் இருந்தன. நான் பார்த்தவுடன் அது வானில் உயர்ந்து (என் கண்ணைவிட்டு மறைந்து)விட்டது; பிறகு நான் அதைக் காணவில்லை" என்று கூறினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உன் குரலைக் கேட்டு நெருங்கி வந்த வானவர்கள்தாம் அவர்கள். நீர் தொடர்ந்து ஓதியிருந்தால் காலையில் மக்களும் அதைப் பார்த்திருப்பார்கள். மக்களைவிட்டும் அது மறைந்திருக்காது" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது
அத்தியாயம் : 6
பாடம் : 37 குர்ஆனை மனனமிட்டவரின் சிறப்பு.
1461. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குர்ஆனை(ப் பார்த்தும், மனனமிட்டும்) ஓதுகின்ற இறைநம்பிக்கையாளரின் நிலையானது நாரத்தைப் பழத்தின் நிலையைப் போன்றதாகும். அதன் வாசனையும் நன்று; சுவையும் நன்று. (மற்ற நற்செயல்கள் புரிந்து கொண்டு) குர்ஆன் ஓதாமலிருக்கும் இறை நம்பிக்கையாளரின் நிலையானது, பேரீச்சம் பழத்தின் நிலையைப் போன்றதாகும். அதற்கு வாசனை கிடையாது. (ஆனால்) அதன் சுவை நன்று. நயவஞ்சகனாகவும் இருந்துகொண்டு குர்ஆனையும் ஓதிவருகின்றவரின் நிலையானது, துளசிச் செடியின் நிலையை ஒத்திருக்கின்றது. அதன் வாசனை நன்று; சுவையோ கசப்பு. நயவஞ்சகனாகவும் இருந்துகொண்டு குர்ஆனையும் ஓதாமலிருப்பவரின் நிலையானது, குமட்டிக் காயின் நிலையை ஒத்திருக்கிறது. அதற்கு வாசனையும் கிடையாது; சுவையோ கசப்பு.
இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஹம்மாம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "நயவஞ்சகன்" என்பதற்கு பதிலாக "தீயவன்" எனும் சொல் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 6
பாடம் : 38 குர்ஆனை நன்கு மனனமிட்டுத் தங்குதடையின்றி ஓதுகின்றவரின் சிறப்பும் திக்கித் திணறி ஓதுகின்றவரின் சிறப்பும்.
1462. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குர்ஆனை நன்கு மனனமிட்டுத் தங்குதடையின்றி ஓதுகின்றவர் கடமை தவறாத கண்ணியமிக்கத் தூதர்(களான வானவர்)களுடன் இருப்பார். குர்ஆனை (மனனம் செய்திராவிட்டாலும் அதைச்) சிரமத்துடன் திக்கித் திணறி ஓதிவருகின்றவருக்கு இரு மடங்கு நன்மைகள் உண்டு. இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் வகீஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "குர்ஆனை மிகுந்த சிரமத்துடன் ஓதிவருகின்றவருக்கு இரு மடங்கு நன்மைகள் உண்டு" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 6
பாடம் : 39 குர்ஆனை நன்கு அறிந்தவர்கள் மற்றும் மேன்மக்கள் முன்னிலையில் குர்ஆன் ஓதுவது விரும்பத்தக்கதாகும்; யாரிடம் ஓதப்படுகிறதோ அவரைவிட ஓதுகின்றவர் சிறப்பில் மேலானவராயிருப்பினும் சரியே!
1463. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம், "உங்களுக்கு (குர்ஆன் அத்தியாயத்தை) ஓதிக்காட்டுமாறு அல்லாஹ் என்னைப் பணித்துள்ளான்" என்று சொன்னார்கள். உபை (ரலி) அவர்கள், "என் பெயரை அல்லாஹ் தங்களிடம் குறிப்பிட்டானா?" என (பெருமிதத்துடன்) கேட்டார்கள். "(ஆம்) அல்லாஹ், உங்கள் பெயரை என்னிடம் குறிப்பிட்டான்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். இதைக் கேட்டு உபை பின் கஅப் (ரலி) அவர்கள் (ஆனந்த மேலீட்டால்) அழலானார்கள்.
அத்தியாயம் : 6
1464. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம் "உங்களுக்கு "லம் யகுனில்லதீன கஃபரூ..." (என்று தொடங்கும் 98ஆவது) அத்தியாயத்தை ஓதிக் காட்டுமாறு அல்லாஹ் என்னைப் பணித்துள்ளான்" என்று கூறினார்கள். "அல்லாஹ் என் பெயரைத் தங்களிடம் குறிப்பிட்டானா?" என்று உபை (ரலி) அவர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஆம்" என்று பதிலளிக்க, (ஆனந்த மிகுதியால்) அப்போது உபை (ரலி) அவர்கள் அழுதார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
பாடம் : 40 குர்ஆனை (பிறர் ஓதும்போது) செவி தாழ்த்திக் கேட்பதன் சிறப்பும், குர்ஆனை மனனம் செய்திருப்பவரிடம் ஓதிக் காட்டச் சொல்லி செவியேற்பதும், ஓதும்போது அழுவதும் ஆழ்ந்து சிந்திப்பதும்.
1465. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
)ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "எனக்குக் குர்ஆனை ஓதிக் காட்டுங்கள்" என்று சொன்னார்கள். நான், "தங்கள்மீதே குர்ஆன் அருளப்பட்டுக்கொண்டிருக்க, தங்களுக்கே நான் ஓதிக் காட்டுவதா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "நான் பிறரிடமிருந்து அதைக் கேட்க விரும்புகிறேன்" என்று சொன்னார்கள். ஆகவே, நான் அவர்களுக்கு "அந்நிசா" எனும் (நான்காவது) அத்தியாயத்தை ஓதிக் காட்டினேன். "ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் (அவர்களுடைய நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டு வரும்போதும், (நபியே!) உங்களை இவர்களுக்கெதிரான சாட்சியாகக் கொண்டு வரும்போதும் (இவர்களின் நிலை) எப்படியிருக்கும்?" எனும் (4:41ஆவது) வசனத்தை நான் அடைந்தபோது "தலையை உயர்த்தினேன்" அல்லது "எனக்குப் பக்கத்திலிருந்த ஒருவர் என்னைத் தொட்டுணர்த்தியபோது நான் தலையை உயர்த்தினேன்". அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்ததைக் கண்டேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஹன்னாத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி என்னிடம் "எனக்கு (குர்ஆனை) ஓதிக் காட்டுங்கள்" என்று கூறினார்கள்" என (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாக) அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 6
1466. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என்னிடம், "எனக்கு (குர்ஆனை) ஓதிக் காட்டுங்கள்!" என்று சொன்னார்கள். நான், "தங்கள்மீதே குர்ஆன் அருளப்பட்டுக்கொண்டிருக்க, தங்களுக்கே நான் ஓதிக் காட்டுவதா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "நான் பிறரிடமிருந்து அதைக் கேட்க விரும்புகிறேன்" என்று சொன்னார்கள். ஆகவே, நான் அவர்களுக்கு "அந்நிசா" எனும் (நான்காவது) அத்தியாயத்தை ஆரம்பம் முதல் "ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் (அவர்களுடைய நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டுவரும்போதும், (நபியே!) உங்களை இவர்களுக்கெதிரான சாட்சியாகக் கொண்டுவரும்போதும் (இவர்களின் நிலை) எப்படியிருக்கும்?" (4:41) என்பதுவரை ஓதிக் காட்டினேன். அதைக் கேட்டு அவர்கள் அழுதார்கள். இதை இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மிஸ்அர் (ரஹ்) அவர்கள் வழியாக மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறியதாக இடம்பெற்றுள்ளது:
நபி (ஸல்) அவர்கள் "நான் அவர்களிடையே (உயிருடன்) இருந்தவரையில் அவர்களை நான் கண்காணித்துக்கொண்டிருந்தேன்"என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 6
1467. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (சிரியா நாட்டின் பிரபல நகரமான) ஹிம்ஸில் இருந்தேன். அப்போது மக்களில் ஒருவர், "எங்களுக்கு (குர்ஆனை) ஓதிக் காட்டுங்கள்!" என்று சொன்னார். நான் "யூசுஃப்" எனும் (12ஆவது) அத்தியாயத்தை ஓதிக்காட்டினேன். அப்போது ஒரு மனிதர் (அதை ஆட்சேபிக்கும் விதமாக) "அல்லாஹ்வின் மீதாணையாக! இவ்வாறு இந்த அத்தியாயம் அருளப்படவில்லை" என்று கூறினார். நான், "உமக்கு நாசம் உண்டாகட்டும்! அல்லாஹ்வின் மீதாணையாக! (இவ்வாறுதான்) நான் இந்த அத்தியாயத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னிலையில் ஓதினேன். அவர்களும், "மிகச் சரியாக ஓதினாய்" என்று கூறினார்கள்"என்று பதிலளித்தேன். (ஆட்சேபிக்க வந்த) அந்த மனிதருடன் நான் பேசிக் கொண்டிருந்தபோது அவரது வாயிலிருந்து மதுவின் வாடை வருவதைக் கண்டேன். "மதுவையும் அருந்திக்கொண்டு அல்லாஹ்வின் வேதத்தை மறுக்கவும் முனைகிறாயா? (மது அருந்திய குற்றத்திற்காக) நீ சாட்டையடி பெறாமல் இந்த இடத்திலிருந்து நகர முடியாது" என்று கூறிவிட்டு, அவருக்குச் சாட்டையடி தண்டனையை நிறைவேற்றினேன்.
இதை அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இன்னும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், அபூமுஆவியா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் "மிகச் சரியாக ஓதினாய்" என்று கூறினார்கள்" எனும் தகவல் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 6
பாடம் : 41 தொழுகையில் குர்ஆன் ஓதுவதன் சிறப்பும், குர்ஆனைக் கற்பதன் சிறப்பும்.
1468. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களில் ஒருவர் தம் வீட்டாரிடம் செல்கையில் வீட்டில் மூன்று பெரிய கொழுத்த சினை ஒட்டகங்கள் காணப்படுவதை விரும்புகிறாரா?" என்று கேட்டார்கள். நாங்கள் "ஆம்" என்று பதிலளித்தோம். அப்போது அவர்கள், "உங்களில் ஒருவர் தமது தொழுகையில் மூன்று வசனங்களை ஓதுவது மூன்று பெரிய கொழுத்த சினை ஒட்டகங்களைவிடச் சிறந்ததாகும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1469. உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலின்) திண்ணையில் இருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்தார்கள். அப்போது "உங்களில் எவர் ஒவ்வொரு நாள் காலையிலும் "புத்ஹான்" அல்லது "அகீக்" (சந்தைக்குச்) சென்று பாவம் புரியாமலும் உறவைத் துண்டிக்காமலும் பருத்த திமில்கள் கொண்ட இரு ஒட்டகங்களுடன் திரும்பி வருவதை விரும்புவார்?" என்று கேட்டார்கள். "நாங்கள் (அனைவருமே) அதை விரும்புவோம்" என்று நாங்கள் பதிலளித்தோம். அதற்கு அவர்கள், "உங்களில் ஒருவர் காலையில் பள்ளிவாசலுக்குப் புறப்பட்டுச் சென்று அல்லாஹ்வின் வேதத்திலிருந்து இரு வசனங்களைக் "கற்றுக்கொள்வது" அல்லது "ஓதுவது" இரு ஒட்டகங்களைவிடச் சிறந்ததாகும். மூன்று வசனங்கள் மூன்று ஒட்டகங்களைவிடவும்,நான்கு வசனங்கள் நான்கு ஒட்டகங்களைவிடவும் சிறந்ததாகும். இவ்வாறு எத்தனை வசனங்கள் ஓதுகின்றாரோ அந்த அளவு ஒட்டகங்களைவிடச் சிறந்ததாக அமையும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 6