883. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தடுப்பு இல்லாமல் தொழுகின்றவரின்) தொழுகையைப் பெண் (முறித்துவிடுவாள். மேலும்), கழுதை, நாய் ஆகியவை(யும்) முறித்துவிடும். வாகன (ஒட்டக)த்தின் (சேணத்திலுள்ள) சாய்வுக்கட்டை போன்றது அதிலிருந்து பாதுகாத்துவிடும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 4
பாடம் : 51 தொழுபவருக்கு முன்னால் குறுக்கே படுத்திருப்பது.
884. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகை தொழுதுகொண்டிருப்பார்கள். அப்போது நான் அவர்களுக்கும் தொழும் திசை (கிப்லாவு)க்கும் இடையே குறுக்குவாக்கில் ஜனாஸா (சடலம்) போன்று படுத்துக்கொண்டிருப்பேன்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
885. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகையை முழுமையாக தொழுது முடிப்பார்கள். அப்போது நான் அவர்களுக்கும் தொழும் திசைக்கும் (கிப்லா) இடையே குறுக்குவாக்கில் படுத்துக் கொண்டிருப்பேன். அவர்கள் இறுதியில் வித்ர் தொழுகை தொழ எண்ணும்போது என்னை எழுப்பிவிடுவார்கள். நான் (எழுந்து) வித்ர் தொழுகை தொழுவேன்.
அத்தியாயம் : 4
886. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்கள் (எங்களிடம்), தொழுகையை முறிக்கக் கூடியவை எவை? என்று கேட்டார்கள். நாங்கள், பெண்களும் கழுதைகளும் (குறுக்கே செல்வது) என்று பதிலளித்தோம். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், பெண்கள் என்ன தீய பிராணிகளா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுகொண்டிருக்கும் போது அவர்களுக்கு முன்னால் நான் ஜனாஸாவைப் போன்று குறுக்குவாக்கில் படுத்துக் கொண்டிருப்பேன் என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 4
887. மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்கள் அருகில் நாயும் கழுதையும் பெண்ணும் (தொழுபவருக்குக் குறுக்கே செல்வது) தொழுகையை முறித்துவிடும் என்பது பற்றி பேசப்பட்டது. அதைக் கேட்ட ஆயிஷா (ரலி) அவர்கள், (பெண்களாகிய) எங்களைக் கழுதைகளுக்கும் நாய்களுக்கும் ஒப்பாக்கிவிட்டீர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் (அவர்களின்) கிப்லாவுக்குமிடையே கட்டிலில் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருக்க அவர்கள் தொழுதுகொண்டிருப்பார்கள். அப்போது எனக்கு ஏதேனும் தேவையேற்பட்டால் நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் (எழுந்து) உட்கார்ந்து அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்த விரும்பாமல் கட்டிலின் இரு கால்கள் வழியாக நான் நழுவிச் சென்றுவிடுவேன் என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
888. அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்கள் (நாய்கள், கழுதைகள், பெண்கள் ஆகியோர் தொழுபவருக்குக் குறுக்கே சென்றால் தொழுகை முறிந்துவிடும் என்று கூறிய ஒருவரிடம்), எங்களை நாய்களுக்கும் கழுதைகளுக்கும் சமமாக்கி விட்டீர்களே! நான் கட்டிலில் ஒருக்களித்துப் படுத்துக்கொண்டிருப்பேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து கட்டிலின் நடுப்பகுதிக்கு நேராக (நின்று) தொழுவார்கள். (ஏதேனும் தேவை ஏற்பட்டால்,) அவர்களது பார்வையில் படும்விதமாக எழுந்து அமரப் பிடிக்காமல் கட்டிலின் இரு கால்களினூடே மெல்ல நழுவி, எனது போர்வையிலிருந்து நழுவிச் சென்றுவிடுவேன் என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 4
889. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (இரவில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் (படுத்து) உறங்கிக் கொண்டிருப்பேன். அப்போது என் கால்கள் அவர்களது கிப்லாவில் (சஜ்தாச் செய்யுமிடத்தில்) இருந்துகொண்டிருக்கும். அவர்கள் (நிலையிலிருந்து) சஜ்தாவுக்கு வரும்போது என்னைத் தமது விரலால் தொட்டுணர்த்துவார்கள். உடனே நான் என் கால்களை மடக்கிக்கொள்வேன். அவர்கள் (மீண்டும்) நிலைக்குச் சென்றுவிட்டால் நான் (மறுபடியும்) கால்களை நீட்டிக் கொள்வேன். அந்த நாட்களில் (எங்கள்) வீடுகளில் விளக்குகள் இருக்கவில்லை.
அத்தியாயம் : 4
890. நபி (ஸல்) அவர்களுடைய துணைவியார் மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுகொண்டிருக்கும்போது அவர்களுக்கு எதிரில் மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் நான் இருந்துகொண்டிருப்பேன். சில நேரங்களில் அவர்கள் சஜ்தாச் செய்யும்போது அவர்களது ஆடை என்மீது படும்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
891. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகை தொழுதுகொண்டிருப்பார்கள். அப்போது மாதவிடாய் ஏற்பட்ட நிலையில் நான் அவர்களது விலாப் பக்கத்தில் (படுத்துக்கொண்டு) இருப்பேன். நான் போர்த்தியிருந்த போர்வையில் ஒரு பகுதி அவர்கள்மீது அவர்களது விலாப் புறத்தில் கிடக்கும்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
பாடம் : 52 ஒரே ஆடையில் தொழுவதும் அதை அணியும் முறையும்.
892. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரே ஆடையை அணிந்து கொண்டு தொழுவது குறித்துக் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உங்களில் ஒவ்வொருவருக்கும் இரண்டு ஆடைகள் உண்டா? என்று (திருப்பிக்) கேட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
893. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களை அழைத்து, எங்களில் ஒருவர் ஒரே அடையை அணிந்து தொழலாமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உங்களில் ஒவ்வொருவரும் இரு ஆடைகள் வைத்திருக்கிறாரா? என்று (திருப்பிக்) கேட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
894. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தம் தோள்களை மறைக்காமல் ஒரே ஆடையை அணிந்துகொண்டு தொழ வேண்டாம்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
895. உமர் பின் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்முசலமா (ரலி) அவர்களது இல்லத்தில் ஒரே ஆடையை அணிந்துகொண்டு தொழுததை நான் பார்த்தேன். அந்த ஆடையின் இரு ஓரங்களையும் தம் தோள்கள்மீது (வலது தோள் மீதிருக்கும் ஓரத்தை இடது கைக்குக் கீழேயும் இடது தோள் மீதிருக்கும் ஓரத்தை வலது கைக்குக் கீழேயுமாக) மாற்றிப் போட்டுக்கொண்டு தொழுததை நான் பார்த்தேன்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், (அதன் இரு ஓரங்களையும் தோள்கள்மீது மாற்றிப் போட்டுக்கொண்டார்கள் என்பதைக் குறிக்க மூலத்தில்) முஷ்தமிலன் என்று குறிப்பிடாமல் முதவஷ்ஷிஹன் என்று குறிப்பிடபபட்டுள்ளது. (இரண்டு சொற்களுக்கும் பொருள் ஒன்றே.)
அத்தியாயம் : 4
896. உமர் பின் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்முசலமா (ரலி) அவர்களது இல்லத்தில் ஒரே ஆடையை அணிந்துகொண்டு தொழுததை நான் பார்த்தேன். அப்போது அதன் இரு ஓரங்களையும் அவர்கள் மாற்றிப்போட்டுக்கொண்டிருந்தார்கள்.
அத்தியாயம் : 4
897. உமர் பின் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரே ஆடையை போர்த்திக்கொண்டு அதன் இரு ஓரங்களையும் மாற்றிப் போட்டுக்கொண்டு தொழுததை நான் பார்த்தேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், ஈசா பின் ஹம்மாத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் தம் தோள்கள்மீது (மாற்றிப் போட்டுக்கொண்டு தொழுதார்கள்) எனும் வாசகம் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
898. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரே ஆடையை மாற்றிப் போட்டுக்கொண்டு தொழுததை நான் பார்த்தேன்.
அத்தியாயம் : 4
899. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், அப்துல்லாஹ் பின் நுமைர் (ரஹ்) அவர்கள் இடம்பெற்றுள்ள அறிவிப்பில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன் என்று ஹதீஸ் தொடங்குகிறது.
அத்தியாயம் : 4
900. அபுஸ்ஸுபைர் அல்மக்கீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் பல ஆடைகளிருக்கவே ஒரே ஆடையை அணிந்து, (அதன் இரு ஓரங்களையும்) மாற்றிப் போட்டுக்கொண்டு தொழுததை நான் பார்த்தேன். இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்ததை நான் பார்த்திருக்கிறேன் என்றும் ஜாபிர் (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
அத்தியாயம் : 4
901. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் ஒரு பாயில் சஜ்தாச் செய்துகொண்டிருந்ததை நான் கண்டேன். மேலும், அவர்கள் ஒரே ஆடையை அணிந்து (அதன் இரு ஓரங்களையும்) மாற்றிப் போட்டுக் கொண்டு தொழுததையும் நான் பார்த்தேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
902. மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், அபூகுறைப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், அதன் இரு ஓரங்களையும் தம் தோள்கள் மீது போட்டுக்கொண்டு (தொழுததை நான் பார்த்தேன்) எனும் வாசகம் இடம்பெற்றுள்ளது.
அபூபக்ர் பின் அபீஷைபா, சுவைத் பின் சயீத் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், (அதன் இரு ஓரங்களையும்) மாற்றிப் போட்டுக்கொண்டு எனும் குறிப்பும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4