878. புஸ்ர் பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என்னை ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் அபூஜுஹைம் பின் அல்ஹாரிஸ் அல்அன்சாரி (ரலி) அவர்களிடம் அனுப்பி, தொழுது கொண்டிருப்பவருக்குக் குறுக்கே செல்பவர் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் என்ன செவியேற்றார்கள் என்று கேட்டுவருமாறு சொன்னார்கள். (நான் சென்று கேட்டேன்.) அப்போது அபூஜுஹைம் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுது கொண்டிருப்பவருக்குக் குறுக்கே செல்பவர் அதனால் எத்தகைய பாவம் தம்மீது ஏற்படும் என்பதை அறிந்திருப்பாரானால் அவருக்கு முன்னால் கடந்துசெல்வதைவிட நாற்பது (நாட்கள்/மாதங்கள்/வருடங்கள் அப்படியே காத்து) நிற்பது அவருக்கு நல்லதாக இருந்திருக்கும்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபுந்நள்ர் சாலிம் பின் அபீஉமய்யா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
புஸ்ர் பின் சயீத் (ரஹ்) அவர்கள் நாட்களில் நாற்பது என்று சொன்னார்களா, அல்லது மாதங்களில் நாற்பது என்று சொன்னார்களா, அல்லது வருடங்களில் நாற்பது என்று சொன்னார்களா என்று எனக்குத் தெரியவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், அபூஜுஹைம் அல்அன்சாரி (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (இது தொடர்பாக) என்ன கேட்டார்கள் என்று அறிந்து வருமாறு என்னை ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் அனுப்பினார்கள் என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
பாடம் : 49 தொழுபவர் தடுப்புக்கு அருகில் நெருங்கி நிற்க வேண்டும்.
879. சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழநிற்கும் இடத்திற்கும் (பள்ளிவாசலின் கிப்லாத் திசையில் அமைந்த) சுவருக்கும் இடையே ஓர் ஆடு கடந்து செல்லும் அளவுக்கு இடைவெளி இருந்தது.
அத்தியாயம் : 4
880. யஸீத் பின் அபீஉபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில்) குர்ஆன் வைக்கப்படும் இடத்திற்கு அருகில் (உள்ள தூண் அருகே) கூடுதலான (நஃபில்) தொழுகையைத் தொழுவார்கள். மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து (இந்தத் தூணை முன்னோக்கி நின்று) தொழுவார்கள். சொற்பொழிவு மேடைக்கும் (மிம்பர்) கிப்லாவுக்கும் இடையே ஓர் ஆடு கடந்துசெல்லும் அளவுக்கு இடைவெளி இருந்தது என்றும் குறிப்பிட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
881. யஸீத் பின் அபீஉபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில்) குர்ஆன் வைக்கப்படும் இடத்திற்குப் பக்கத்திலிருந்த தூணருகில் தொழுவதைத் தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள். அவர்களிடம் நான், அபூ முஸ்லிம்! தாங்கள் இந்தத் தூணுக்கு அருகில் தொழுவதையே தேர்ந்தெடுத்துக் கொள்வதை நான் காண்கிறேனே (என்ன காரணம்)? என்று கேட்டேன். அதற்கு சலமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் இந்தத் தூணுக்கு அருகில் தொழுவதைத் தேர்ந்தெடுத்துக்கொள்வதை நான் பார்த்திருக்கிறேன் (ஆகவேதான், நானும் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தேன்) என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 4
பாடம் : 50 தொழுபவருக்கு முன்னால் தடுப்பு எந்த அளவு இருக்க வேண்டும்?
882. அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூதர் அல்கிஃபாரீ (ரலி) அவர்கள், உங்களில் ஒருவர் (திறந்தவெளியில்) தொழ நிற்கும் போது தமக்கு முன்னால் வாகன (ஒட்டக)த்தின் (சேணத்திலுள்ள) சாய்வுக்கட்டை போன்றது இருந்தால் அதுவே அவருக்குத் தடுப்பாக அமைந்துவிடும். சாய்வுக்கட்டை போன்றது இல்லாவிட்டால் கழுதை, பெண் மற்றும் கறுப்புநாய் ஆகியன அவரது (கவனத்தை ஈர்த்து) தொழுகையை முறித்துவிடும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றார்கள். உடனே நான், அபூதர் (ரலி) அவர்களே! சிவப்பு நிற நாய், மஞ்சள் நிற நாய் ஆகியவற்றை விட்டுவிட்டுக் கறுப்பு நிற நாயை மட்டுமே குறிப்பிடக் காரணம் என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், என் சகோதரரின் புதல்வரே! நீங்கள் என்னிடம் கேட்டதைப் போன்றே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் கறுப்பு நாய் ஷைத்தான் ஆகும் என்று கூறினார்கள் என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ், மேலும் ஆறு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
883. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தடுப்பு இல்லாமல் தொழுகின்றவரின்) தொழுகையைப் பெண் (முறித்துவிடுவாள். மேலும்), கழுதை, நாய் ஆகியவை(யும்) முறித்துவிடும். வாகன (ஒட்டக)த்தின் (சேணத்திலுள்ள) சாய்வுக்கட்டை போன்றது அதிலிருந்து பாதுகாத்துவிடும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 4
பாடம் : 51 தொழுபவருக்கு முன்னால் குறுக்கே படுத்திருப்பது.
884. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகை தொழுதுகொண்டிருப்பார்கள். அப்போது நான் அவர்களுக்கும் தொழும் திசை (கிப்லாவு)க்கும் இடையே குறுக்குவாக்கில் ஜனாஸா (சடலம்) போன்று படுத்துக்கொண்டிருப்பேன்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
885. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகையை முழுமையாக தொழுது முடிப்பார்கள். அப்போது நான் அவர்களுக்கும் தொழும் திசைக்கும் (கிப்லா) இடையே குறுக்குவாக்கில் படுத்துக் கொண்டிருப்பேன். அவர்கள் இறுதியில் வித்ர் தொழுகை தொழ எண்ணும்போது என்னை எழுப்பிவிடுவார்கள். நான் (எழுந்து) வித்ர் தொழுகை தொழுவேன்.
அத்தியாயம் : 4
886. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்கள் (எங்களிடம்), தொழுகையை முறிக்கக் கூடியவை எவை? என்று கேட்டார்கள். நாங்கள், பெண்களும் கழுதைகளும் (குறுக்கே செல்வது) என்று பதிலளித்தோம். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், பெண்கள் என்ன தீய பிராணிகளா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுகொண்டிருக்கும் போது அவர்களுக்கு முன்னால் நான் ஜனாஸாவைப் போன்று குறுக்குவாக்கில் படுத்துக் கொண்டிருப்பேன் என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 4
887. மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்கள் அருகில் நாயும் கழுதையும் பெண்ணும் (தொழுபவருக்குக் குறுக்கே செல்வது) தொழுகையை முறித்துவிடும் என்பது பற்றி பேசப்பட்டது. அதைக் கேட்ட ஆயிஷா (ரலி) அவர்கள், (பெண்களாகிய) எங்களைக் கழுதைகளுக்கும் நாய்களுக்கும் ஒப்பாக்கிவிட்டீர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் (அவர்களின்) கிப்லாவுக்குமிடையே கட்டிலில் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருக்க அவர்கள் தொழுதுகொண்டிருப்பார்கள். அப்போது எனக்கு ஏதேனும் தேவையேற்பட்டால் நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் (எழுந்து) உட்கார்ந்து அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்த விரும்பாமல் கட்டிலின் இரு கால்கள் வழியாக நான் நழுவிச் சென்றுவிடுவேன் என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
888. அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்கள் (நாய்கள், கழுதைகள், பெண்கள் ஆகியோர் தொழுபவருக்குக் குறுக்கே சென்றால் தொழுகை முறிந்துவிடும் என்று கூறிய ஒருவரிடம்), எங்களை நாய்களுக்கும் கழுதைகளுக்கும் சமமாக்கி விட்டீர்களே! நான் கட்டிலில் ஒருக்களித்துப் படுத்துக்கொண்டிருப்பேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து கட்டிலின் நடுப்பகுதிக்கு நேராக (நின்று) தொழுவார்கள். (ஏதேனும் தேவை ஏற்பட்டால்,) அவர்களது பார்வையில் படும்விதமாக எழுந்து அமரப் பிடிக்காமல் கட்டிலின் இரு கால்களினூடே மெல்ல நழுவி, எனது போர்வையிலிருந்து நழுவிச் சென்றுவிடுவேன் என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 4
889. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (இரவில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் (படுத்து) உறங்கிக் கொண்டிருப்பேன். அப்போது என் கால்கள் அவர்களது கிப்லாவில் (சஜ்தாச் செய்யுமிடத்தில்) இருந்துகொண்டிருக்கும். அவர்கள் (நிலையிலிருந்து) சஜ்தாவுக்கு வரும்போது என்னைத் தமது விரலால் தொட்டுணர்த்துவார்கள். உடனே நான் என் கால்களை மடக்கிக்கொள்வேன். அவர்கள் (மீண்டும்) நிலைக்குச் சென்றுவிட்டால் நான் (மறுபடியும்) கால்களை நீட்டிக் கொள்வேன். அந்த நாட்களில் (எங்கள்) வீடுகளில் விளக்குகள் இருக்கவில்லை.
அத்தியாயம் : 4
890. நபி (ஸல்) அவர்களுடைய துணைவியார் மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுகொண்டிருக்கும்போது அவர்களுக்கு எதிரில் மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் நான் இருந்துகொண்டிருப்பேன். சில நேரங்களில் அவர்கள் சஜ்தாச் செய்யும்போது அவர்களது ஆடை என்மீது படும்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
891. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகை தொழுதுகொண்டிருப்பார்கள். அப்போது மாதவிடாய் ஏற்பட்ட நிலையில் நான் அவர்களது விலாப் பக்கத்தில் (படுத்துக்கொண்டு) இருப்பேன். நான் போர்த்தியிருந்த போர்வையில் ஒரு பகுதி அவர்கள்மீது அவர்களது விலாப் புறத்தில் கிடக்கும்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
பாடம் : 52 ஒரே ஆடையில் தொழுவதும் அதை அணியும் முறையும்.
892. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரே ஆடையை அணிந்து கொண்டு தொழுவது குறித்துக் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உங்களில் ஒவ்வொருவருக்கும் இரண்டு ஆடைகள் உண்டா? என்று (திருப்பிக்) கேட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
893. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களை அழைத்து, எங்களில் ஒருவர் ஒரே அடையை அணிந்து தொழலாமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உங்களில் ஒவ்வொருவரும் இரு ஆடைகள் வைத்திருக்கிறாரா? என்று (திருப்பிக்) கேட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
894. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தம் தோள்களை மறைக்காமல் ஒரே ஆடையை அணிந்துகொண்டு தொழ வேண்டாம்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
895. உமர் பின் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்முசலமா (ரலி) அவர்களது இல்லத்தில் ஒரே ஆடையை அணிந்துகொண்டு தொழுததை நான் பார்த்தேன். அந்த ஆடையின் இரு ஓரங்களையும் தம் தோள்கள்மீது (வலது தோள் மீதிருக்கும் ஓரத்தை இடது கைக்குக் கீழேயும் இடது தோள் மீதிருக்கும் ஓரத்தை வலது கைக்குக் கீழேயுமாக) மாற்றிப் போட்டுக்கொண்டு தொழுததை நான் பார்த்தேன்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், (அதன் இரு ஓரங்களையும் தோள்கள்மீது மாற்றிப் போட்டுக்கொண்டார்கள் என்பதைக் குறிக்க மூலத்தில்) முஷ்தமிலன் என்று குறிப்பிடாமல் முதவஷ்ஷிஹன் என்று குறிப்பிடபபட்டுள்ளது. (இரண்டு சொற்களுக்கும் பொருள் ஒன்றே.)
அத்தியாயம் : 4
896. உமர் பின் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்முசலமா (ரலி) அவர்களது இல்லத்தில் ஒரே ஆடையை அணிந்துகொண்டு தொழுததை நான் பார்த்தேன். அப்போது அதன் இரு ஓரங்களையும் அவர்கள் மாற்றிப்போட்டுக்கொண்டிருந்தார்கள்.
அத்தியாயம் : 4
897. உமர் பின் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரே ஆடையை போர்த்திக்கொண்டு அதன் இரு ஓரங்களையும் மாற்றிப் போட்டுக்கொண்டு தொழுததை நான் பார்த்தேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், ஈசா பின் ஹம்மாத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் தம் தோள்கள்மீது (மாற்றிப் போட்டுக்கொண்டு தொழுதார்கள்) எனும் வாசகம் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4