843. ரபீஆ பின் கஅப் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தங்கியிருந்தேன். அவர்கள் (இரவுத் தொழுகைக்காக எழுந்தபோது) இயற்கைக்கடனை நிறைவேற்றி(ய பின் துப்புரவு செய்து) கொள்வதற்கும் அங்கத் தூய்மை (உளூ) செய்துகொள்வதற்கும் தண்ணீர் கொண்டு சென்றேன். அப்போது அவர்கள் என்னிடம் (ஏதேனும்) கோருவீராக! என்று என்னிடம் கூறினார்கள். உடனே நான், சொர்க்கத்தில் நான் உங்களுடன் இருக்க வேண்டும் என்று கோருகிறேன் என்றேன். அதற்கு வேறு ஏதேனும் (கோருவீராக!) என்றார்கள். நான் (இல்லை) அதுதான் என்றேன். அதற்கு அவர்கள், அப்படியானால் உமது கோரிக்கை நிறைவேற அதிகமாகச் சஜ்தா செய்து எனக்கு உதவுவீராக! என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 4
பாடம் : 44 சிரவணக்கத்தின்(போது பூமியில் பட வேண்டிய) உறுப்புகளும், தொழும்போது தலைமுடி, ஆடை ஆகியவற்றை(க் கீழே படாமல்) பிடித்துக்கொள்ளல், (ஆண்கள்) தலைமுடியைச் சுருட்டி கொண்டை போட்டுக்கொள்ளல் ஆகியவற்றுக்கு வந்துள்ள தடையும்.
844. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு சிர வணக்கம் (சஜ்தா) செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடப்பட்டார்கள்; (சிர வணக்கத்தின்போது தரையில் படாதவாறு) தமது தலைமுடி, ஆடை ஆகியவற்றைப் பிடித்துக்கொள்ள வேண்டாம் என்று தடை விதிக்கப் பட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், அபுர்ரபீஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், இரு உள்ளங்கைகள், இரு முழங்கால்கள், இரு பாதங்(களின் நுனி)கள், மற்றும் நெற்றி ஆகிய ஏழு உறுப்புகள் படுமாறு (சஜ்தாச் செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடப்பட்டார்கள்); தமது தலைமுடி, ஆடை ஆகியவற்றைப் பிடித்துக் கொள்ள வேண்டாமென்று தடை விதிக்கப்பட்டார்கள் என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
845. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு சஜ்தாச் செய்யும்படியும், (எனது) ஆடையையோ முடியையோ (தரையில் படாதவாறு) நான் பிடித்துக்கொள்ளக் கூடாது எனவும் கட்டளையிடப்பட்டுள்ளேன்.- இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 4
846. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு சஜ்தாச் செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடப்பட்டார்கள்; முடியையோ ஆடையையோ (தரையில் படாதவாறு) பிடித்துக் கொள்ள வேண்டாம் என்று தடை விதிக்கவும்பட்டார்கள்.
அத்தியாயம் : 4
847. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் நெற்றி, இரு (உள்ளங்)கைகள், இரு (முழங்)கால்கள், இரு பாதங்களின் நுனிகள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு சஜ்தாச் செய்யும்படி கட்டளையிடப்பட்டுள்ளேன். (நெற்றியைப் பற்றிக் குறிப்பிடும்போது) தமது கையால் தமது மூக்கை நோக்கி (மூக்கு உட்பட என்பதைப் போன்று) சைகை செய்தார்கள். நாம் ஆடையையோ முடியையோ (தரையில் படாதவாறு) பிடிக்கக் கூடாதெனவும் கட்டளையிடப்பட்டுள்ளோம்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 4
848. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் நெற்றி-மூக்கு, இரு (உள்ளங்)கைகள், இரு முழங்கால்கள், இரு பாதங்(களின் நுனி)கள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு சஜ்தாச் செய்யும்படி கட்டளையிடப்பட்டுள்ளேன். நான் முடியையோ ஆடையையோ (தரையில் படாதவாறு) பிடித்துக்கொள்ள வேண்டாம் எனவும் கட்டளையிடப்பட்டுள்ளேன்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் அடியார் சிரவணக்கம் (சஜ்தா) செய்தால் அவருடன் ஏழு உறுப்புகள் சிரவணக்கம் செய்கின்றன: அவருடைய முகம்,இரு உள்ளங்கைகள், இரு முழங்கால்கள் மற்றும் இரு பாதங்(களின் நுனி)கள் ஆகியவையே அவை.
இதை அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 4
849. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களால் விடுதலை செய்யபபட்ட அடிமை குறைப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் தமது தலைமுடியைப் பின்பக்கமாகக் கொண்டையிட்டுத் தொழுதுகொண்டிருப்பதை அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் பார்த்தார்கள். உடனே அவர்கள் எழுந்து சென்று அவருடைய கொண்டையை அவிழ்த்து விடலானார்கள். அவர் தொழுது முடித்ததும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களை நோக்கித் திரும்பி உங்களுக்கு என்ன நேர்ந்தது? ஏன் எனது தலைமுடியை அவிழ்த்துவிட்டீர்கள்? என்று கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு தொழுகின்றவரின் நிலை பின்புறமாகக் கைகள் கட்டப்பட்டவாறு தொழுபவரின் நிலைக்கு ஒத்திருக்கிறது என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.
அத்தியாயம் : 4
பாடம் : 45 சஜ்தாவில் உள்ளங்கைகளைத் தரையில் வைத்து, விலாப் புறங்களைவிட்டு முழங்கைகளையும் தொடைகளிலிருந்து வயிற்றையும் அகற்றிவைத்து (முறையாக) நடுநிலையோடு சஜ்தாச் செய்வது.
850. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சஜ்தாவில் நடுநிலையைக் கையாளுங்கள். உங்களில் எவரும் தம் கைகளை நாய் பரப்பி வைப்பதைப் போன்று பரப்பி வைக்க வேண்டாம்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், முஹம்மத் பின் ஜஅஃபர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் (ஹதீஸின் மூலத்தில் இடம்பெற்றுள்ள வலா யப்சுத் எனும் சொற்றொடர்) வலா யத்தபஸ்ஸத் என்று இடம் பெற்றுள்ளது. (இரண்டுக்கும் பொருள்: பரப்பி வைக்க வேண்டாம்.)
அத்தியாயம் : 4
851. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் சஜ்தாச் செய்யும்போது உள்ளங்கைகளை (தரையில்) வையுங்கள்; முழங்கைகளை (தரையிலிருந்து) அகற்றி வையுங்கள்.
இதை பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 4
பாடம் : 46 தொழுகை முறை; தொழுகையை எப்படி ஆரம்பிப்பது, எப்படி முடிப்பது?; ருகூஉ, சஜ்தாச் செய்யும் முறை; அவற்றில் நடுநிலையைக் கையாளுவது; நான்கு ரக்அத் தொழுகைகளில் ஒவ்வோர் இரண்டு ரக்அத் முடிந்ததும் அத்தஹிய்யாத் ஓதுவது; இரு சஜ்தாக்களுக்கு மத்தியிலும் முதல் அத்தஹிய்யாத்திலும் அமர்கின்ற முறை ஆகியவை குறித்த மொத்த விவரங்கள்.
852. அப்துல்லாஹ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழும்போது தம்மிரு அக்குள்களின் வெண்மை தென்படும் அளவுக்கு இரு கைகளையும் விரித்துவைப்பார்கள்.
அத்தியாயம் : 4
853. அப்துல்லாஹ் பின் மாலிக் பின் புஹைனா (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், அம்ர் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சஜ்தாச் செய்யும்போது தம்மிரு அக்குள்களின் வெண்மை தென்படும் அளவுக்குத் தம் கைகளை (விலாவிலிருந்து) அகற்றிவைப்பார்கள் என்று இடம்பெற்றுள்ளது.
லைஸ் பின் சஅத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சஜ்தாச் செய்யும்போது தம்மிரு அக்குள்களைவிட்டுக் கைகளை விரித்து வைப்பார்கள். எந்த அளவிற்கென்றால் நான் அவர்களுடைய அக்குள்களின் வெண்மையைப் பார்ப்பேன் என்று (அப்துல்லாஹ் பின் மாலிக் பின் புஹைனா (ரலி) அவர்கள் கூறியதாக) இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
854. (நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) மைமூனா பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் சஜ்தாச் செய்யும்போது, ஓர் ஆட்டுக் குட்டி நினைத்தால் அவர்களின் இரு கைகளுக்கிடையே கடந்து சென்றுவிட முடியும் (அந்த அளவுக்கு அவர்கள் கைகளைத் தரையிலிருந்து அகற்றி வைப்பார்கள்).
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
855. நபி (ஸல்) அவர்களுடைய துணைவியார் மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சஜ்தாச் செய்யும்போது பின்னாலிருந்து (பார்த்தால்) அவர்களுடைய இரு அக்குள்களின் வெண்மை தென்படும் அளவுக்குத் தம் கைகளை விரித்து (இடைவெளி விட்டு) வைப்பார்கள். அவர்கள் (சஜ்தாவிலிருந்து எழுந்ததும்) தமது இடது தொடையின் (காலின்) மீது லாவகமாக அமர்ந்துகொள்வார்கள்.
அத்தியாயம் : 4
856. (நபி (ஸல்) அவர்களுடைய துணைவியார்) மைமூனா பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சஜ்தாச் செய்யும்போது தம் அக்குள்களின் வெண்மையைப் பின்னாலிருப்பவர் பார்க்கும் அளவுக்குக் கைகளை அகற்றி வைப்பார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அறிவிப்பாளர்களில் ஒருவரான வகீஉ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: (இந்த ஹதீஸின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) வள்ஹ் எனும் சொல்லுக்கு வெண்மை என்று பொருள்.
அத்தியாயம் : 4
857. (நபி (ஸல்) அவர்களுடைய துணைவியார்) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அல்லாஹு அக்பர் என்று) தக்பீர் கூறித் தொழுகையைத் துவக்குவார்கள்;அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்... என்று (குர்ஆன்) ஓத ஆரம்பிப்பார்கள். ருகூஉச் செய்யும்போது தலையை உயர்த்தவுமாட்டார்கள்; ஒரேடியாகத் தாழ்த்தவுமாட்டார்கள். மாறாக, நடுநிலையாக வைத்திருப்பார்கள்.ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தினால் நிமிர்ந்து நிற்காமல் சஜ்தாவுக்குச் செல்லமாட்டார்கள். சஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தினால் நேராக நிமிர்ந்து உட்காராமல் (இரண்டாவது) சஜ்தாச் செய்ய மாட்டார்கள்.ஒவ்வோர் இரண்டு ரக்அத்திலும் அத்தஹிய்யாத் ஓதுவார்கள். (அந்த அமர்வில்) இடது காலை விரித்துவைத்து, வலது காலை நட்டுவைப்பார்கள். மேலும், ஷைத்தான் உட்காருவதைப் போன்று (கால்களை நட்டுவைத்து, புட்டத்தைத் தரையில் படியவைத்து) உட்கார வேண்டாம் என்றும், மிருகங்கள் உட்காருவதைப் போன்று முழங்கைகளைத் தரையில் பரப்பி வைத்து உட்கார வேண்டாம் என்றும் தடை விதித்துவந்தார்கள். அவர்கள் சலாம் கூறியே தொழுகையை முடிப்பார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், அபூகாலித் (ரஹ்) அவர்களிடமிருந்து இப்னு நுமைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் (ஷைத்தான் அமர்வதைப் போன்று என்பதைக் குறிக்க மூலத்தில் வந்துள்ள உக்பா என்பதற்கு பதிலாக) அகிப் என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 4
பாடம் : 47 தொழுபவர் (தமக்கு முன்னால்) தடுப்பு ஒன்றை வைத்துக்கொள்வது.
858. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் (தொழும்போது) தமக்கு முன்னால் வாகன (ஒட்டக)த்தின் (சேணத்திலுள்ள) சாய்வுக்கட்டை போன்றதை (தடுப்பாக) வைத்துக்கொண்டு தொழட்டும். அந்தக் கட்டைக்கு அப்பால் கடந்துசெல்பவரை அவர் பொருட்படுத்த வேண்டாம்.
இதைத் தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
859. தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (திறந்தவெளிகளில்) தொழுது கொண்டிருப்போம். அப்போது எங்களுக்கு முன்னால் கால்நடைகள் கடந்துசெல்லும். எனவே, இது பற்றி நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறினோம். அப்போது அவர்கள், உங்களில் ஒருவர் வாகன (ஒட்டக)த்தின் (சேணத்திலுள்ள) சாய்வுக்கட்டை போன்றதை (தடுப்பாக) வைத்துக்கொள்ளட்டும். பிறகு அவரை எது கடந்துசென்றாலும் அவருக்குப் பிரச்சினை இல்லை என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், அப்துல்லாஹ் பின் நுமைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், பிறகு அவரை யார் கடந்துசென்றாலும் அவருக்குப் பிரச்சினை இல்லை என்று இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
860. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், தொழுபவர் (தமக்கு முன்னால்) தடுப்பு வைத்துக்கொள்வது பற்றிக் கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் வாகன (ஒட்டக)த்தின் (சேணத்திலுள்ள) சாய்வுக்கட்டை போன்றதை வைத்துக்கொள்ளுமாறு கூறினார்கள்
அத்தியாயம் : 4
861. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
தபூக் போரின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், தொழுபவர் (தமக்கு முன்னால்) தடுப்பு வைத்துக்கொள்வது பற்றிக் கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் வாகன (ஒட்டக)த்தின் (சேணத்திலுள்ள) சாய்வுக்கட்டை போன்ற ஒன்றை (தடுப்பாக) வைத்துக் கொள்ளுமாறு கூறினார்கள்.
அத்தியாயம் : 4
862. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருநாள் தினத்தன்று (தொழுவிப்பதற்காகத் தொழுகைத் திடலுக்குப்) புறப்படும்போது (முனை அகலமான) ஈட்டியை எடுத்துவருமாறு உத்தரவிடுவார்கள். (தொழுகைத் திடலில்) அவர்களுக்கு முன்னால் அந்த ஈட்டி (தடுப்பாக நட்டு) வைக்கப்படும். பிறகு அதை நோக்கித் தொழுவிப்பார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் இருப்பார்கள். பொதுவாகப் பயணத்திலும் இவ்வாறே செய்வார்கள். இதனால் தான் (நம்) தலைவர்களும் இவ்வழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4