பாடம் : 2 இஸ்லாத்தின் தூண்களில் ஒன்றான தொழுகை பற்றிய விளக்கம்.
8. தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நஜ்த்வாசிகளில் ஒருவர் தலைவிரி கோலத்துடன் (பயணம் முடிந்த கையோடு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். (அவர் சற்றுத் தொலைவில் இருந்ததால்) அவரது குரலை எங்களால் கேட்க முடிந்ததே தவிர, அவர் என்ன சொல்கிறார் என்பதை எங்களால் அறிய முடியவில்லை. பின்னர் அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நெருங்கினார். அப்போதுதான் அவர் இஸ்லாத்தைப் பற்றி வினவுகிறார் என்று எங்களுக்குப் புரிந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(நாளொன்றுக்கு) பகலிலும் இரவிலும் ஐந்து தொழுகைகள் (நிறைவேற்றுவது இஸ்லாத்தின் விதியாகும்)" என்று பதிலளித்தார்கள். உடனே அவர், "இவற்றைத் தவிர வேறு (தொழுகைகள்) ஏதேனும் என்மீது (விதியாக்கப்பட்டு) உள்ளதா?" என்று கேட்க, "இல்லை;நீயாக விரும்பித்தொழும் (கூடுதலான) தொழுகையைத் தவிர" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அடுத்து ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது (இஸ்லாத்தின் விதியாகும்) என நபி (ஸல்) அவர்கள் (அவரிடம்) கூறினார்கள். அவர், "இதைத் தவிர வேறு (நோன்புகள்) ஏதேனும் என்மீது (விதியாக்கப்பட்டு) உள்ளதா?" என்று கேட்க, "இல்லை; நீயாக விரும்பி நோற்கும் (கூடுதலான) நோன்பைத் தவிர" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மேலும், ஸகாத் (வழங்குவது இஸ்லாத்தின் விதி என்பது) பற்றியும் அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எடுத்துக் கூறினார்கள். அவர், "இதைத் தவிர வேறு ஏதேனும் (தர்மம்) என்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?" எனக் கேட்க, "இல்லை;நீயாக விரும்பிச் செய்யும் (கூடுதலான) தர்மத்தைத் தவிர" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அந்த மனிதர், "அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கு மேல் நான் அதிகமாகச் செய்யவுமாட்டேன்; இதைக் குறைக்கவுமாட்டேன்"என்று கூறியபடி திரும்பிச் சென்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர் (தாம் கூறியதில்) உண்மையாளராக இருந்தால் வெற்றியடைந்துவிட்டார்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 1
9. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
ஆயினும், (அவற்றின் இறுதியில்) "அவருடைய தந்தை மீதாணையாக! அவர் (தாம் கூறியதில்) உண்மையாளராக இருந்தால் வெற்றியடைந்துவிட்டார்" அல்லது "அவருடைய தந்தை மீதாணையாக! அவர் (தாம் கூறியதில்) உண்மையாளராக இருந்தால் சொர்க்கத்தில் நுழைந்துவிட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 3 இஸ்லாத்தின் தூண்(களான முக்கியக் கடமை)கள் குறித்துக் கேட்டறிதல்.
10. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அவசியமற்ற) சில விஷயங்கள் குறித்துக் கேள்வி கேட்கக்கூடாதென தடை விதிக்கப்பட்டிருந்தோம். எனவே, (இந்தத் தடையை அறிந்திராத) கிராமவாசிகளில் (புத்திசாலியான) ஒருவர் வந்து நபியவர்களிடம் கேள்வி கேட்க வேண்டும்; நாங்களும் அதைச் செவியுற வேண்டும் என்பது எங்கள் ஆசையாக இருந்தது. அவ்வாறே (ஒரு நாள்) கிராமவாசிகளில் ஒருவர் வந்து, முஹம்மதே! உங்கள் தூதர் ஒருவர் எங்களிடம் வந்து, அல்லாஹ் உங்களை (மனித இனம் முழுமைக்கும்) தூதராக அனுப்பியுள்ளான் என்று நீங்கள் கூறுவதாக எங்களிடம் சொன்னாரே (அது உண்மையா)?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் உண்மைதான்" என்று கூறினார்கள்.
அந்தக் கிராமவாசி, வானத்தைப் படைத்தவன் யார்?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்" என்று பதிலளித்தார்கள். பூமியைப் படைத்தவன் யார்?" என்று அவர் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்" என்றார்கள். இந்த மலைகளை நட்டுவைத்து அதிலுள்ளவற்றை உருவாக்கியவன் யார்?" என்று கிராமவாசி கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்" என்றார்கள். அவர், அப்படியானால், வானத்தைப் படைத்து, பூமியையும் படைத்து. இந்த மலைகளை நட்டும்வைத்தவன் மீதாணையாக! அல்லாஹ்தான் உங்களைத் தூதராக அனுப்பினானா?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள்,ஆம்" என்று சொன்னார்கள்.
அவர் இரவிலும் பகலிலும் (நாளொன்றுக்கு) ஐவேளைத் தொழுகைகள் எங்கள்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளன என்று உங்கள் தூதர் கூறினாரே (அது உண்மையா)?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், உண்மைதான்" என்றார்கள். உங்களைத் தூதராக அனுப்பி வைத்தவன் மீதாணையாக! அல்லாஹ்தான் உங்களுக்கு இவ்வாறு கட்டளையிட்டானா?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ஆம்" என்றார்கள்.
தொடர்ந்து அவர், நாங்கள் எங்கள் செல்வங்களில் இருந்து ஸகாத் வழங்குவது எங்கள்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளது என்று உங்கள் தூதர் கூறினாரே!" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,உண்மைதான்" என்றார்கள். உங்களைத் தூதராக அனுப்பி வைத்தவன் மீதாணையாக! அல்லாஹ்தான் இவ்வாறு உங்களுக்குக் கட்டளையிட்டானா?" என்று அந்தக் கிராமவாசி கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ஆம்" என்றார்கள். அவர், ஒவ்வோர் ஆண்டும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது எங்கள்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளது என்று உங்கள் தூதர் கூறினாரே?" என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், உண்மைதான்" என்றார்கள். உங்களைத் தூதராக அனுப்பிவைத்தவன் மீதாணையாக! அல்லாஹ்தான் இவ்வாறு உங்களுக்குக் கட்டளையிட்டானா?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள்,ஆம்" என்றார்கள். மேலும் உங்கள் தூதர் எங்களில் வசதிபடைத்தோர் இறையில்லம் கஅபாவில் ஹஜ் செய்வது (கடமையாக்கப்பட்டு) உள்ளது என்று கூறினாரே?" என்று கேட்டார். அதற்கும் நபி (ஸல்) அவர்கள், உண்மைதான்"என்றார்கள்.
பிறகு அந்தக் கிராமவாசி, உங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! இவற்றைவிட நான் அதிகமாக்கவுமாட்டேன்; இவற்றிலிருந்து (எதையும்) குறைக்கவும் மாட்டேன்" என்று கூறிவிட்டுத் திரும்பிச் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவர் (தாம் கூறியதில்) உண்மையாளராக இருந்தால் நிச்சயமாக சொர்க்கம் செல்வார்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 1
11. ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அனஸ் (ரலி) அவர்கள்,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அவசியமற்ற) சில விஷயங்கள் தொடர்பாகக் கேள்வி கேட்கக்கூடாதென நாங்கள் குர்ஆன் மூலம் தடை விதிக்கப்பெற்றிருந்தோம்" என்று கூறிவிட்டு, மேற்கண்ட ஹதீஸைப் போன்றே தொடர்ந்து அறிவித்தார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 4 சொர்க்கம் செல்வதற்குக் காரணமாய் அமையும் இறைநம்பிக்கை (ஈமான்) பற்றிய விளக்கமும், தமக்குக் கட்டளையிடப்பட்டவற்றைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர் சொர்க்கம் செல்வார் என்பது பற்றிய விளக்கமும்.
12. அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பயணத்தில் இருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கிராமவாசி ஒருவர் இடைமறித்து அவர்களது ஒட்டகத்தின் கடிவாளத்தை" அல்லது மூக்கணாங்கயிற்றைப்" பிடித்துக்கொண்டார். பிறகு அல்லாஹ்வின் தூதரே" அல்லது முஹம்மதே "என்னைச் சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து விலக்கியும் வைக்குமே அத்தகைய ஒரு (நற்)செயலை எனக்குத் தெரிவியுங்கள்!" என்று கேட்டார்.
நபி (ஸல்) அவர்கள் (ஏதும் பேசாமல்) அமைதியாக இருந்தார்கள். பிறகு தம் தோழர்களைக் கூர்ந்து பார்த்தார்கள். பின்னர் நிச்சயமாக இவர் நல்லருள் பெற்றுவிட்டார்" அல்லது நேர்வழியில் செலுத்தப்பட்டுவிட்டார்"" என்று கூறினார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்கள் நீர் என்ன சொன்னீர்?" என்று (அந்தக் கிராமவாசியிடம்) கேட்டார்கள். அவர் முன்பு கூறியதைப் போன்றே மீண்டும் கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை (மட்டுமே) நீர் வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது;(கடமையான) தொழுகையைக் கடைப்பிடிக்க வேண்டும்; (கடமையான) ஸகாத்தை வழங்க வேண்டும்; உறவைப் பேணி வாழ வேண்டும்" என்று கூறிவிட்டு, ஒட்டகத்தை விட்டுவிடுவீராக (நாங்கள் பயணத்தைத் தொடர வேண்டும்)" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 1
13. மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாயம் : 1
14. அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, எனக்கு ஒரு (நற்)செயலை அறிவியுங்கள். நான் அதைச் செயல்படுத்தினால் அது என்னைச் சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து விலக்கியும் வைக்கவேண்டும்" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வையே நீங்கள் வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் நீங்கள் இணையாக்கக் கூடாது; (கடமையான) தொழுகையை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும்; (கடமையான) ஸகாத்தை நீங்கள் வழங்க வேண்டும்; உங்கள் உறவினரைப் பேணி வாழ வேண்டும்" என்று கூறினார்கள்.
அந்த மனிதர் திரும்பிச் சென்றதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இவர் தமக்குக் கட்டளையிடப்பட்டவற்றைக் கடைப்பிடித்தால் கட்டாயம் இவர் சொர்க்கம் சென்றுவிடுவார்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாக வந்துள்ளது.
அவற்றில், அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் இதை இவர் கடைப்பிடித்தால்..." என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
15. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
கிராமவாசி ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஒரு (நற்)செயலை அறிவியுங்கள்! நான் அதைச் செயல்படுத்தினால் சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும்" என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வையே நீங்கள் வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் நீங்கள் இணையாக்கக் கூடாது; கடமையாக்கப்பட்ட தொழுகையை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும்; கடமையாக்கப் பட்ட ஸகாத்தை நிறைவேற்ற வேண்டும்; ரமளான் மாதத்தில் நோன்பு நோற்க வேண்டும்" என்று கூறினார்கள்.
அதற்கு அந்த மனிதர், என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! ஒரு போதும் இதைவிட அதிகமாக எதையும் நான் செய்யமாட்டேன்; இதிலிருந்து எதையும் நான் குறைக்கவும் மாட்டேன்" என்று கூறினார்.
அவர் திரும்பிச் சென்றதும் நபி (ஸல்) அவர்கள், சொர்க்கவாசிகளில் ஒருவரைப் பார்ப்பது யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் (இதோ!) இவரைப் பார்த்துக்கொள்ளட்டும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 1
16. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நுஅமான் பின் கவ்கல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் கடமையான தொழுகையை நிறைவேற்றி, (மார்க்கத்தில்) விலக்கப் பட்டவற்றை விலக்கப்பட்டவை என்றும் அனுமதிக்கப்பட்டவற்றை அனுமதிக்கப்பட்டவை என்றும் ஏற்று வாழ்ந்தால் நான் சொர்க்கத்தில் நுழைந்துவிடுவேனா? கூறுங்கள்" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,ஆம்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
17. மேற்கண்ட ஹதீஸ் வேறு இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் நுஅமான் பின் கவ்கல் (ரலி) அவர்கள் இதைவிட அதிகமாக வேறெதையும் நான் செய்யமாட்டேன்" என்று கூறியதாகக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
18. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், கடமையான தொழுகைகளை நான் தொழுது, ரமளான் மாதத்தில் நோன்பு நோற்று, (மார்க்கத்தில்) அனுமதிக்கப்பட்டவற்றை அனுமதிக்கப்பட்டவை என்றும் விலக்கப்பட்ட வற்றை விலக்கப்பட்டவை என்றும் ஏற்று வாழ்ந்து, இவற்றைவிட வேறெதையும் அதிகமாகச் செய்யாவிட்டாலும் நான் சொர்க்கத்தில் நுழைந்துவிடுவேனா?" என்று கேட்டார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம்" என்றார்கள். அந்த மனிதர் அல்லாஹ்வின் மீதாணையாக! இவற்றைவிட வேறெதையும் நான் அதிகமாகச் செய்யமாட்டேன்" என்று கூறினார்.
அத்தியாயம் : 1
பாடம் : 5 இஸ்லாத்தின் (ஐம்)பெரும் தூண்களான முக்கியக் கடமைகள் பற்றிய விளக்கம்.
19. சஅத் பின் உபைதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் "இஸ்லாம் (எனும் மாளிகை) ஐந்து (தூண்கள்)மீது எழுப்பப்பட்டுள்ளது. அவை: 1.இறைவன் ஒருவன் என ஏற்பது. 2. தொழுகையைக் கடைப் பிடிப்பது. 3. ஸகாத் வழங்குவது. 4. ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது. 5. ஹஜ் செய்வது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்" என்றார்கள்.
அப்போது ஒருவர், "(நான்காவதாக) ஹஜ் செய்வதையும் (ஐந்தாவதாக) ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதையும்தானே (நபி அவர்கள் குறிப்பிட்டார்கள்)?" என்று கேட்டார். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "இல்லை. (நான்காவது) ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது, (ஐந்தாவது) ஹஜ் செய்வது" என்று கூறிவிட்டு, "இவ்வாறுதான் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றேன்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 1
20. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இஸ்லாம் ஐந்து (தூண்கள்)மீது நிறுவப்பட்டுள்ளது. அல்லாஹ்வையே வழிபட்டு, அவன் அல்லாதவற்றை நிராகரிப்பது;தொழுகையைக் கடைப்பிடிப்பது; ஸகாத் வழங்குவது; இறையில்லம் கஅபாவில் ஹஜ் செய்வவது; ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது. (ஆகியனவே அந்த ஐந்தும்.)
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
21. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இஸ்லாம் ஐந்து (தூண்கள்)மீது நிறுவப்பட்டுள்ளது. (அவை:) அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும்,முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழி அளிப்பது;தொழுகையைக் கடைப்பிடிப்பது; ஸகாத் வழங்குவது; இறையில்லம் கஅபாவில் ஹஜ் செய்வது; ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
22. தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(காரிஜிய்யா கூட்டத்தைச் சேர்ந்த) ஒருவர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், "நீங்கள் அறப்போரில் கலந்துகொள்வதில்லையே (ஏன்)?" என்று கேட்டார். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறக்கேட்டுள்ளேன்: நிச்சயமாக இஸ்லாம் ஐந்து (தூண்கள்)மீது நிறுவப்பட்டுள்ளது. (அவை:) அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று உறுதிமொழி அளிப்பது; தொழுகையைக் கடைப்பிடிப்பது; ஸகாத் வழங்குவது; ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது; இறையில்லம் கஅபாவில் ஹஜ் செய்வது. (போரில் கலந்துகொள்வது இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றல்ல. அதிலும் இப்போது நடைபெறும் போர்கள் வெறும் அரசியல் காரணங்களுக்காகவே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன)" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 6 அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், மார்க்க நெறிமுறைகளையும் நம்பிக்கை கொள்ளுமாறும், அதன்பால் (மக்களை) அழைத்தல், அதைக் குறித்துக் கேட்டுத் தெரிந்துகொள்ளல், அ(வ்வாறு தெரிந்துகொண்ட)தை மனனம் செய்து காத்தல், அதைப் பற்றிய தகவல் எட்டாத மக்களுக்கு அதை எட்டச்செய்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ளுமாறும் வந்துள்ள கட்டளை.
23. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் "ரபீஆ" கோத்திரத்தின் இன்ன (அப்துல் கைஸ்) குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவோம். (உங்களைச் சந்திக்கவிடாமல்) உங்களுக்கும் எங்களுக்குமிடையே "முளர்" குலத்து இறைமறுப்பாளர்கள் தடையாக உள்ளனர். அதனால், (போர் புரியக்கூடாதெனத் தடை விதிக்கப்பட்ட) புனித மாதத்தில்தான் நாங்கள் உங்களிடம் வர முடியும்.ஆகவே, எங்களுக்குச் சில கட்டளைகளை அளியுங்கள். அவற்றை நாங்களும் கடைப்பிடித்து, எங்களுக்குப் பின்னால் (எங்கள் ஊரில்) இருப்பவர்களையும் அவற்றைக் கடைப்பிடித்து நடக்கும்படி அழைப்போம்" என்று சொன்னார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான்கு விஷயங்களை (செயல்படுத்தும்படி) உங்களுக்கு நான் கட்டளையிடுகின்றேன். நான்கு பொருட்களை உங்களுக்குத் தடை செய்கின்றேன்.
(கட்டளையிடும் நான்கு விஷயங்கள்:)
1. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வது. (பிறகு அதை மக்களுக்கு விவரித்துக் கூறும் முகமாக பின்வருமாறு கூறினார்கள்:) அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள் என்றும் உறுதிகூறுவது. 2. தொழுகையைக் கடைப்பிடிப்பது. 3. ஸகாத் வழங்குவது. 4. நீங்கள் அடைந்த போர்ச் செல்வங்களில் ஐந்திலொரு பங்கை (அரசு பொதுநிதிக்கு)ச் செலுத்துவது (ஆகியவைதாம் அவை).
(மது ஊற்றிவைக்கப் பயன்படும்) சுரைக்காய்க் குடுவை, மண் சாடி, (பேரீச்ச மரத்தின் அடிப் பாகத்தைக் குடைந்து தயாரித்த) மரப்பீப்பாய், தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றை உபயோகிக்க வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதிக்கிறேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாக வந்துள்ளது.
அவற்றில், கலஃப் பின் ஹிஷாம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை"என்று கூறி, (அந்த நான்கில்) "ஒன்று" என (தமது விரலை) மடித்துக் காட்டினார்கள் என்று அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
24. அபூஜம்ரா நஸ்ர் பின் இம்ரான் அள்ளுபஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் (அரபுமொழி தெரியாத) மக்களுக்கும் இடையே மொழிபெயர்ப்பாளனாக இருந்தேன். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து பழச்சாறு (மது) ஊற்றிவைக்கப் பயன்படுத்தப்படும் மண்பானை குறித்து (அதை வேறு உபயோகத்திற்குப் பயன்படுத்தலாமா? என)க் கேட்டார். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இத்தூதுக் குழுவினர் யார்?" அல்லது "இக்கூட்டத்தார் யார்?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "ரபீஆ" (குடும்பத்தினர்)" என்று பதிலளித்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இழிவுக்குள்ளாகாமலும் மன வருத்தத்திற்குள்ளாகாமலும் வருகைபுரிந்த சமூகத்தாரே! வருக! உங்கள் வரவு நல்வரவாகுக!" என்று (வாழ்த்துச்) சொன்னார்கள். அத்தூதுக் குழுவினர், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் வெகுதொலைவிலிருந்து உங்களிடம் வந்திருக்கிறோம். எங்களுக்கும் உங்களுக்குமிடையே "முளர்" குலத்து இறைமறுப்பாளர்களில் இன்ன குடும்பத்தார் (நாம் சந்திக்க முடியாதபடி) தடையாக உள்ளனர். (இதனால், போர் நிறுத்தம் நிகழும்) புனித மாதங்களில் தவிர வேறு மாதங்களில் நாங்கள் உங்களிடம் வர முடியாது. ஆகவே, எங்களுக்குத் தெளிவான சில கட்டளைகளை அளியுங்கள். அவற்றை நாங்கள் எங்களுக்குப் பின்னால் (ஊரில்) இருப்பவர்களுக்குத் தெரிவிப்போம்; அ(வற்றைச் செயல்படுத்துவ)தன் மூலம் நாங்களும் சொர்க்கம் செல்வோம்" என்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர்களுக்கு நான்கு விஷயங்களைக் கட்டளையிட்டார்கள். நான்கு பொருட்களை(ப் பயன்படுத்த வேண்டாமென)த்தடை செய்தார்கள்: அல்லாஹ் ஒருவனையே நம்பிக்கை கொள்ளுமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டுவிட்டு, "அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வது என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்" என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஆகிய நான்) அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதி கூறுவது (என விளக்கமளித்துவிட்டு); தொழுகையைக் கடைப்பிடிப்பது; ஸகாத் வழங்குவது; ரமளான் மாதம் நோன்பு நோற்பது. அத்துடன், போரில் கிடைக்கும் பொருள்களிலிருந்து ஐந்திலொரு பங்கை (அரசுப் பொதுநிதிக்கு) நீங்கள் செலுத்திட வேண்டும்" என்று(ம்) கூறினார்கள்.
மது ஊற்றி வைக்கப்படும் பாத்திரங்களான சுரைக்காய்க் குடுவை, மண் சாடி மற்றும் தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றை (பயன்படுத்தக் கூடாதெனத்) தடை விதித்தார்கள். "இவற்றை நினைவில் வைத்து, உங்களுக்குப் பின்னால் இருப்பவர்களுக்கு அறிவித்து விடுங்கள்" என்றும் கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அறிவிப்பாளர் அபூஜம்ரா (ரஹ்) அவர்கள் சில நேரங்களில் "(பேரீச்சமரத்தின் அடிப் பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்படும்) மரப் பீப்பாய்" ("அந்நகீர்")என்றும், வேறு சில நேரங்களில் "தார் பூசப்பட்ட பாத்திரம்" (அல்முகய்யர்) என்றும் அறிவித்தார்கள்.
அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "உங்களுக்குப் பின்னால் இருப்பவர்களுக்கு (அறிவித்துவிடுங்கள்)" என்பதுவரை மட்டுமே இடம்பெற்றுள்ளது. "தார் பூசப்பட்ட பாத்திரம்" ("அல்முகய்யர்") பற்றி அதில் காணப்படவில்லை.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
25. மேற்கண்ட ஹதீஸ் வேறு இரு அறிவிப்பாளர்தொடர்களிலும் வந்துள்ளது.
அவற்றில், "(மது ஊற்றிவைக்கப்படும் பாத்திரங்களான) சுரைக்காய்க் குடுவை, (பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்படும்) மரப் பீப்பாய், மண்சாடி மற்றும் தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றில் ஊறவைக்கப்படும் பானங்களுக்குத் தடை விதிக்கிறேன்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
முஆத் அல்அம்பரீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், அப்துல் கைஸ் குலத்தின் (தலைவர்) அஷஜ் (எனும் முன்திர் பின் ஆயித்-ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறியதாக இடம்பெற்றுள்ளது:
(அஷஜ்ஜே!) அல்லாஹ் நேசிக்கக்கூடிய இரு குணங்கள் உங்களிடம் உள்ளன 1. அறிவாற்றல்
2. நிதானம்.
அத்தியாயம் : 1
26. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அப்துல் கைஸ் குலத்தைச் சேர்ந்த சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "இறைவனின் தூதரே! நாங்கள் "ரபீஆ" குலத்தாரின் (இன்ன) குடும்பத்தார் ஆவோம். எங்களுக்கும் உங்களுக்குமிடையே "முளர்" குலத்து இறைமறுப்பாளர்கள் (நாம் சந்திக்க முடியாதபடி தடையாக) உள்ளனர். இதனால் (போர் நிறுத்தம் நிகழும்) புனித மாதங்களில் தவிர வேறு மாதங்களில் நாங்கள் உங்களிடம் வர முடியாது. ஆகவே, எங்களுக்கு ஒரு கட்டளையிடுங்கள். அதை(ச் செயல்படுத்துமாறு) எங்களுக்கு அப்பால் இருப்பவர்களுக்கு நாங்கள் கட்டளையிடுவோம். அதைக் கடைப்பிடித்து நடந்தால் நாங்களும் சொர்க்கம் செல்வோம்" என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான்கு விஷயங்களை உங்களுக்கு நான் கட்டளையிடுகின்றேன். நான்கு பொருட்களை உங்களுக்குத் தடை செய்கின்றேன்: அல்லாஹ் ஒருவனையே வழிபடுங்கள். அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள். தொழுகையைக் கடைப்பிடியுங்கள். ஸகாத் வழங்குங்கள். ரமளான் மாதத்தில் நோன்பு நோற்றுக்கொள்ளுங்கள். அத்துடன் போரில் கிடைக்கும் பொருட்களிலிருந்து ஐந்திலொரு பங்கை (அரசு பொதுநிதிக்கு)ச் செலுத்துங்கள்.
நான்கு பொருட்களை உங்களுக்கு நான் தடை செய்கிறேன். சுரைக்காய்க் குடுவை, மண்சாடி, தார் பூசப்பட்ட பாத்திரம் மற்றும் மரப் பீப்பாய் ("அந்நகீர்") ஆகியவைதாம் அவை" என்று கூறினார்கள்.
அப்போது மக்கள், "இறைவனின் தூதரே! "அந்நகீர் என்பது என்னவென்று தாங்கள் அறிவீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம் (அறிவேன்).பேரீச்சமரத்தின் அடி மரத்தைத் துளையிட்டு அதில் "சிறு பேரீச்சம் பழங்களை" அல்லது "பேரீச்சம் பழங்களை" நீங்கள் போட்டு வைப்பீர்கள். பிறகு அதில் தண்ணீரை ஊற்றுவீர்கள். அதன் கொதி நிலை அடங்கியதும் அதை நீங்கள் அருந்துவீர்கள். (அதை அருந்தியதும் போதையேற்றப்பட்டுவிடுகிறது.) எந்த அளவிற்கென்றால் "உங்களில் ஒருவர்" அல்லது"மக்களில் ஒருவர்" தம்முடைய தந்தையின் சகோதரர் மகனையே கூட வாளால் வெட்டிவிடுகின்றார்" என்று கூறினார்கள்.
அந்தத் தூதுக் குழுவினரிடையே இவ்வாறு காயமேற்பட்ட ஒரு மனிதர் இருந்தார். அவர் "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வெட்கப்பட்டுக்கொண்டு அ(ந்தக் காயத்)தை மறைத்துக் கொண்டிருந்தேன்" என்று கூறுகிறார். அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் (வேறு) எந்தப் பாத்திரத்தில்தான் அருந்துவோம்?" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "வாய்ப்பகுதி சுருக்கிட்டுக் கட்டப்படும் தோல் பைகளில்" என்று கூறினார்கள். அதற்கு மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! எங்கள் நாட்டில் ஏராளமாகப் பெருச்சாளிகள் உள்ளன. அங்கு தோல் பைகள் சரிப்பட்டுவரா" என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அவற்றைப் பெருச்சாளிகள் சாப்பிட்டாலும் சரியே! அவற்றைப் பெருச்சாளிகள் சாப்பிட்டாலும் சரியே! அவற்றைப் பெருச்சாளிகள் சாப்பிட்டாலும் சரியே!" என்று கூறினார்கள்.
மேலும், நபி (ஸல்) அவர்கள் அப்துல் கைஸ் குலத்தாரின் (தலைவர்) அஷஜ் (ரலி) அவர்களிடம் கூறினார்கள்:
உங்களிடம் அல்லாஹ் நேசிக்கின்ற இரு குணங்கள் உள்ளன. 1. அறிவாற்றல் 2. நிதானம்.
அறிவிப்பாளர் கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்த அப்துல் கைஸ் தூதுக் குழுவினரைச் சந்தித்த ஒருவர் (இந்த ஹதீஸை) நமக்கு அறிவித்தார்.
அத்தியாயம் : 1
27. அபூநள்ரா முன்திர் பின் மாலிக் அல்அவகீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தது பற்றி மேற்கண்ட ஹதீஸிலுள்ளவாறே அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். ஆனால் அதில், (மரப் பீப்பாய் (அந்நகீர்) பற்றி விளக்கமளிக்கையில் நபி (ஸல்) அவர்கள்) "பேரீச்சமரத்தின் அடிமரத்தைக் குடைந்து அதனுள் "சிறு பேரீச்சம் பழங்களை" அல்லது "பேரீச்சம் பழத்தையும் தண்ணீரையும்" கலந்துவிடுவீர்கள்" என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.
"சிறு பேரீச்ச மரங்களை" அல்லது "பேரீச்சம் பழங்களை" என்று ஐயப்பாட்டுடன் அறிவிப்பாளர் சயீத் (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ள வாசகம் அதில் இடம்பெறவில்லை.
அந்தத் தூதுக் குழுவினரைச் சந்தித்த பலர் எனக்கு இதை அறிவித்தனர் என்று கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறினார்கள். (அவர்களில் ஒருவரான) அபூநள்ரா மேற்கண்டவாறு அறிவித்தார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1