743. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகையில் வரிசைகளை ஒழுங்கு படுத்திக்கொள்ளுங்கள். ஏனெனில், வரிசையை ஒழுங்குபடுத்துவது தொழுகையை அழகுறச் செய்வதில் அடங்கும்.
அத்தியாயம் : 4
744. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களது (தொழுகை) வரிசைகளை ஒழுங்குபடுத்திக்கொள்ளுங்கள். இல்லையெனில், அல்லாஹ் உங்கள் முகங்களுக்கிடையே மாற்றத்தை (பிளவை) ஏற்படுத்திவிடுவான்.
இதை நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
745. நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (வளைந்த) அம்புக் குச்சிகளைச் சீராக்குவதைப் போன்று எங்கள் (தொழுகை) அணிகளைச் சீராக்குவார்கள். இதை நாங்கள் (நன்கு) புரிந்து கொண்டோம் என்று அவர்கள் கருதியவரை (இவ்வாறு செய்துவந்தார்கள்). பின்னர் ஒரு நாள் அவர்கள் வந்து (தொழுவிப்பதற்காக) நின்று தக்பீர்(தஹ்ரீம்) கூறப்போகும் நேரத்தில் ஒரு மனிதரின் நெஞ்சு வரிசையிலிருந்து (விலகி) வெளியேறியவாறு நிற்பதைக் கண்டார்கள். அப்போது அல்லாஹ்வின் அடியார்களே! உங்களது (தொழுகை) வரிசைகளை ஒழுங்குபடுத்திக்கொள்ளுங்கள். இல்லையெனில்,அல்லாஹ் உங்கள் முகங்களுக்கிடையே மாற்றத்தை (பிளவை) ஏற்படுத்தி விடுவான் என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
746. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகை அறிவிப்புச் செய்வதிலும் (கூட்டுத் தொழுகையில்) முதல் அணியி(ல் நிற்பதி)லும் உள்ள(நன்மை)தனை மக்கள் அறிவார்களாயின் அ(தை அடைந்துகொள்வ) தற்குச் சீட்டுக் குலுக்கிப் போடுவதைத் தவிர வேறு வழியில்லாமல்போகுமானால் நிச்சயம் சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். தொழுகைக்கு அதன் ஆரம்ப நேரத்தில் விரைந்து செல்வதில் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதற்கு முந்திக்கொள்வார்கள். இஷாத் தொழுகையிலும் சுப்ஹுத் தொழுகையிலும் உள்ள நன்மையை அவர்கள் அறிவார்களாயின் அதற்குத் (தரையில்) தவழ்ந்தாவது அவர்கள் வந்து விடுவார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 4
747. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலர் (தொழுகையில் முன் வரிசையில் சேராமல்) பின்னால் விலகி நிற்பதைக் கண்டார்கள். அப்போது முன் வரிசைக்கு வந்து என்னைப் பின்பற்றித் தொழுங்கள். உங்களுக்குப் பின்னால் இருப்பவர்கள் உங்களைப் பின்பற்றித் தொழட்டும். மக்களில் சிலர் எப்போதும் (தொழுகை வரிசையில்) பின்தங்கிக்கொண்டே இருப்பார்கள். முடிவில் அவர்களை அல்லாஹ் (தனது அருளிலிருந்து) பின்தங்கச் செய்துவிடுவான் என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களில் சிலர் பள்ளிவாசலின் பிற்பகுதியில் (நிற்பதைக்) கண்டார்கள்...என்று ஹதீஸ் தொடங்குகிறது.
அத்தியாயம் : 4
748. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(கூட்டுத் தொழுகையில்) முன்வரிசையில் இருக்கும் நன்மையை நீங்கள் அறிவீர்களாயின் அல்லது மக்கள் அறிவார்களாயின் (அதை அடைந்துகொள்ள போட்டியேற்பட்டு) சீட்டுக் குலுக்கிப்போடும் நிலையேற்படும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், இப்னு ஹர்ப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில்,முதல் வரிசையில் இருக்கும் நன்மையை அடைந்து கொள்வதற்குச் சீட்டுக் குலுக்கிப் போடுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போகும் நிலையே ஏற்படும் என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
749. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(கூட்டுத் தொழுகையில்) ஆண்களுடைய வரிசைகளில் சிறந்ததது முதல் வரிசையாகும். அவற்றில் தீயது கடைசி வரிசையாகும். பெண்களுடைய வரிசைகளில் சிறந்தது கடைசி வரிசையாகும். அவற்றில் தீயது முதல் வரிசையாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
பாடம் : 29 ஆண்களுக்குப் பின்னால் நின்று தொழும் பெண்கள், ஆண்கள் (சஜ்தாவிலிருந்து) தலையை உயர்த்திய பின்னரே தம் தலைகளை சஜ்தாவிலிருந்து உயர்த்த வேண்டும் என்ற கட்டளை.
750. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபி (ஸல்) அவர்களது காலத்தில் மேலாடையில்லாமல்) ஆண்கள் அணிந்த கீழாடை சிறியதாக இருந்த காரணத்தால்,சிறுவர்களைப் போன்று அவர்கள் தம் கீழாடைகளை பிடரிகள்மீது கட்டிக்கொண்டு நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (தொழுதுகொண்டு) இருந்ததை நான் பார்த்திருக்கிறேன். ஆதலால், பெண்களே! ஆண்கள் (சஜ்தாவிலிருந்து) நிமிரும்வரை நீங்கள் உங்களுடைய தலைகளை (சஜ்தாவிலிருந்து) உயர்த்த வேண்டாம் என்று (நபியவர்கள் பிறப்பித்த உத்தரவை) ஒருவர் கூறுவார்.
அத்தியாயம் : 4
பாடம் : 30 குழப்பம் ஏற்படாதிருப்பின், பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்லலாம்; நறுமணம் பூசிக்கொண்டு அவர்கள் வரலாகாது.
751. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவரிடம் அவருடைய மனைவி பள்ளிவாசலுக்குச் செல்ல அனுமதி கோரினால் அவளை அவர் தடுக்க வேண்டாம்.
இதை சாலிம் (ரஹ்) அவர்கள் தம் தந்தை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
752. சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்கள் மனைவியர் உங்களிடம் பள்ளிவாசல்களுக்குச் செல்ல அனுமதி கோரினால் அவர்களை நீங்கள் தடுக்காதீர்கள் என்று கூறுவதை நான் கேட்டுள்ளேன் என்று (என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது (என் சகோதரர்) பிலால் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் அவர்களைத் தடுப்போம் என்று கூறினார்கள். உடனே அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (தம் புதல்வர்) பிலால் பின் அப்தில்லாஹ்வை நோக்கி மிகக் கடுமையாக ஏசினார்கள். அதைப் போன்று அவர்கள் ஏசியதை நான் கேட்டதே இல்லை. பிறகு அவர்கள், நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை உனக்கு அறிவிக்கிறேன். ஆனால், நீயோ அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களை நாங்கள் தடுப்போம் என்று கூறுகிறாயே? என்றார்கள்.
அத்தியாயம் : 4
753. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் அடியார்க(ளான பெண்க)ள் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களுக்குச் செல்வதைத் தடுக்காதீர்கள்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
754. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்கள் துணைவியர் பள்ளிவாசல்களுக்குச் செல்ல உங்களிடம் அனுமதி கோரினால் அவர்களுக்கு அனுமதி அளியுங்கள் என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்.
அத்தியாயம் : 4
755. முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்கள் இரவில் பள்ளிவாசல்களுக்குச் செல்வதை நீங்கள் தடுக்காதீர்கள் என்று கூறினார்கள் என அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடைய புதல்வர்களில் ஒருவர்,பெண்களை வெளியே செல்ல நாங்கள் விடமாட்டோம். (அவர்கள் வெளியே செல்ல) இதையே ஒரு சாக்காக ஆக்கிவிடுவார்கள் என்று கூறினார். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று கூறுகிறேன். ஆனால், நீ அவர்களை நாங்கள் விடமாட்டோம் என்று கூறுகிறாயா?என்று கூறி, தம் புதல்வரைக் கண்டித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் முஜாஹித் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
756. முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பெண்கள் இரவு நேரத்தில் பள்ளிவாசல்களுக்குச் செல்ல நீங்கள் அனுமதியளியுங்கள் என்று கூறினார்கள் என அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள்.
அப்போது அவர்களுடைய புதல்வர் வாகித் (ரஹ்) அவர்கள் அவ்வாறு அனுமதி கொடுத்தால் அவர்கள் அதையே ஒரு சாக்காக ஆக்கிவிடுவார்கள் என்று கூறினார்கள். உடனே அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தம் புதல்வருடைய நெஞ்சில் அடித்து நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதை உனக்கு அறிவிக்கிறேன்; ஆனால் நீ முடியாது என்று கூறுகிறாயே என்று (கடிந்து) கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
757. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பெண்கள் பள்ளிவாசல்களுக்குச் செல்வதற்காக உங்களிடம் அனுமதி கேட்டால் பள்ளிவாசலில் அவர்களுக்குரிய உரிமையைத் தடுக்காதீர்கள்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவித்தபோது அவர்களுடைய புதல்வர் பிலால் (ரஹ்) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களை நாங்கள் தடுப்போம் என்று கூறினார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று நான் கூறுகிறேன்; ஆனால், நீயோ அவர்களைத் தடுப்போம் என்று கூறுகிறாயே! என்று (கண்டித்துக்) கூறினார்கள்.
அத்தியாயம் : 4
758. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(பெண்களே!) நீங்கள் இஷாத் தொழுகையில் கலந்துகொள்ள (பள்ளிவாசலுக்கு)ச் செல்லும் போது அந்த இரவில் நறுமணம் பூசிச் செல்லாதீர்கள்.
இதை ஸைனப் பின்த் முஆவியா அஸ் ஸகஃபிய்யா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 4
759. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடைய துணைவியார் ஸைனப் பின்த் முஆவியா (ரலி) அவர்கள் கூறியதாவது;
நீங்கள் (ஜமாஅத் தொழுகையில் கலந்துகொள்வதற்காகப்) பள்ளிவாசலுக்குச் செல்லும் போது நறுமணம் பூசாதீர்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்.
அத்தியாயம் : 4
760. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நறுமணப் புகையைப் பயன்படுத்திய எந்தப் பெண்ணும் கடைசித் தொழுகையான இஷாத் தொழுகையில் நம்முடன் கலந்துகொள்ள வேண்டாம்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
761. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(இன்று) பெண்கள் உருவாக்கியுள்ள (அலங்கார உத்திகள் போன்ற)வற்றை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்திருப்பார்களேயானால் பனூஇஸ்ராயீல் சமுதாயப் பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்லக் கூடாதெனத் தடுக்கப்பட்டதைப் போன்று இவர்களையும் தடுத்திருப்பார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களிடம், பனூஇஸ்ராயீல் சமுதாயப் பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்லக் கூடாதெனத் தடுக்கப்பட்டார்களா? என்று கேட்டேன். அதற்கு அம்ரா (ரஹ்) அவர்கள் ஆம் என்று பதிலளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
பாடம் : 31 சப்தமிட்டு (குர்ஆன்) ஓதப்படும் தொழுகைகளில், சப்தமிட்டு ஓதுவதால் இடையூறு ஏற்படும் என்ற அச்சமிருந்தால், (ஒரேயடியாகக்) குரலை உயர்த்தாமலும் (ஒரேயடியாகக்) குரலைத் தாழ்த்தாமலும் நடுநிலையாக ஓத வேண்டும்.
762. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், (நபியே!) உங்கள் தொழுகையில் குரலை மிகவும் உயர்த்தவும் வேண்டாம். மிகவும் தாழ்த்தவும் வேண்டாம் எனும் (17:110ஆவது) இறைவசனம் தொடர்பாகப் பின்வருமாறு விளக்கமளித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இஸ்லாத்தின் ஆரம்பக் காலத்தில் எதிரிகளின் தொல்லைகளைக் கருதி) மக்காவில் தலைமறைவாக இருந்துவந்தார்கள். அப்போது தம் தோழர்களுடன் தொழும் வேளையில் சப்தமிட்டுக் குர்ஆனை ஓதிவந்தார்கள். அதை இணைவைப்பாளர்கள் கேட்டுவிட்டால், குர்ஆனையும் அதை அருளிய(இறை)வனையும் அதை (மக்கள் முன்) கொண்டுவந்த (நபிய)வர்களையும் அவர்கள் ஏசுவார்கள். ஆகவே, உயர்ந்தோனாகிய அல்லாஹ் தன் நபியிடம் நீங்கள் உங்கள் தொழுகையில் குரலை உயர்த்தாதீர்கள். அவ்வாறு செய்தால், நீங்கள் ஓதுவதை இணைவைப்பாளர்கள் கேட்டுவிடுவார்கள். (அதற்காக உடன் தொழுகின்ற) உங்கள் தோழர்களைவிட்டு ஒரேடியாக மறைத்துவிடாதீர்கள்; அவர்களது செவிக்கு எட்டுமாறு ஓதுங்கள். அதிகமாகச் சப்தமிட்டு ஓதாதீர்கள். இவ்விரண்டுக்குமிடையே மிதமான போக்கைக் கைகொள்ளுங்கள் என்று கூறினான்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4