5393. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மறுமை நாளின் அடையாளங்களில்) ஐந்து அடையாளங்கள் (வந்து) சென்றுவிட்டன. ஒன்று, புகை. இரண்டாவது,இறைவனின் தண்டனை. மூன்றாவது, ரோமர்கள் (தோல்வியடைந்து, மீண்டும் அவர்கள் வெற்றிபெற்றது). நான்காவது,இறைவனின் கடுமையான பிடி. ஐந்தாவது, சந்திரன் பிளப்பது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 50
5394. உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"(மறுமையின் பெரிய வேதனை அல்லாமல் (இம்மையிலும்) சிறிய வேதனையை அவர்களுக்குச் சுவைக்கச் செய்கிறோம்" (32:21) எனும் இறைவசனத்திலுள்ள சிறிய வேதனை என்பது, இவ்வுலகில் நிகழ்ந்த சோதனைகள்,ரோமர்கள் (தோற்கடிக்கப்பட்டு மீண்டும் அவர்கள் வெற்றி பெற்றது), இறைவனின் கடுமையான பிடி, அல்லது புகை ஆகியவையாகும்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
இறைவனின் கடுமையான பிடி, அல்லது புகை என அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்களே ஐயப்பாட்டுடன் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 50
பாடம் : 8 சந்திரன் (இரண்டாகப்) பிளந்த சம்பவம்.
5395. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(நான் இறைவனின் தூதர் என்பதற்கு) நீங்கள் சாட்சிகளாக இருங்கள்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 50
5396. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நாங்கள் (மக்காவிலுள்ள) "மினா" எனுமிடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது. (பிளவுண்ட சந்திரனின்) ஒரு துண்டு (ஹிரா) மலைக்கு அப்பா(ல் மேற்பகுதியி)லும் மற்றொரு துண்டு மலைக்குக் கீழேயும் சென்றது.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், "(நான் இறைவனின் தூதர் என்பதற்கு) நீங்கள் சாட்சிகளாக இருங்கள்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 50
5397. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது. அந்த (ஹிரா) மலை,சந்திரனின் ஒரு துண்டை மறைத்தது. மற்றொரு துண்டு, மலைக்கு மேலே இருந்தது.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா! நீயே சாட்சியாக இரு" என்று சொன்னார்கள்.
- இப்னு உமர் (ரலி) அவர்கள் வாயிலாகவும் மேற்கண்ட ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர் களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
ஆயினும் இப்னு அதீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நீங்கள் சாட்சிகளாக இருங்கள்; நீங்கள் சாட்சிகளாக இருங்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இரண்டு முறை) கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 50
5398. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்காவாசிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஓர் அற்புதச் சான்றைக் காட்டும்படி கேட்டார்கள். ஆகவே,சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளப்பதை (தாம் இறைவனின் தூதர் என்பதற்குச் சான்றாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 50
5399. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அபூதாவூத் அத்தயாலிசீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சந்திரன் பிளந்தது" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 50
5400. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சந்திரன் பிளந்தது.
அத்தியாயம் : 50
பாடம் : 9 புண்படுத்தப்பட்டும்கூட (தண்டிக்காமல்) பொறுமைகாப்பவர் அல்லாஹ்வைவிட வேறு யாருமில்லை.
5401. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனவேதனைக்குள்ளாக்கும் செய்தியைக் கேட்டும் (உடனே தண்டித்துவிடாமல்) மிகவும் பொறுமை காப்பவர் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வைவிட வேறு யாருமில்லை. (மனிதர்களால்) அவனுக்கு இணை கற்பிக்கப்படுகிறது; அவனுக்குக் குழந்தை இருப்பதாகப் பேசப்படுகிறது. அதன் பிறகும் அவர்களுக்கு உடல் நலத்தையும் உணவு வளத்தையும் அவன் வழங்கிக்கொண்டிருக்கின்றான்.
இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அவனுக்குக் குழந்தை இருப்பதாகப் பேசப்படுகிறது" எனும் குறிப்பு இடம்பெற வில்லை.
அத்தியாயம் : 50
5402. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனவேதனைக்குள்ளாக்கும் செய்தியைக் கேட்டும் (உடனே தண்டித்துவிடாமல்) மிகவும் பொறுமைகாப்பவர் உயர்ந்தோன் அல்லாஹ்வைவிட வேறு யாருமில்லை. மனிதர்கள் (சிலர்) அவனுக்கு இணையை ஏற்படுத்துகின்றனர்;அவனுக்குக் குழந்தை இருப்பதாகக் கூறுகின்றனர். அவ்வாறிருந்தும், அவர்களுக்கு உணவு வளத்தையும் உடல்நலத்தையும் (வேறு பல கொடைகளையும்) அவன் வழங்கிக் கொண்டிருக்கின்றான்.
இதை அபூமூசா அப்துல்லாஹ் பின் கைஸ் அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 50
பாடம் : 10 பூமி நிறையப் பொன்னை ஈடாகக் கொடுத்தேனும் தண்டனையிலிருந்து விடுதலை பெற விரும்புகிறாயா என இறைமறுப்பாளர்களிடம் கேட்கப்படும்.
5403. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மறுமை நாளில்) நரகவாசிகளிலேயே மிகக் குறைவான வேதனை அளிக்கப்படுபவரிடம், "பூமியும் அதிலிருப்பவையும் உனக்கே சொந்தம் என்றிருந்தால், நீ அவற்றை ஈடாகத் தர(வும் அதன் மூலம் இந்த வேதனையிலிருந்து விடுதலை பெறவும்) முன்வருவாய் அல்லவா?" என்று வளமும் உயர்வும் உள்ள அல்லாஹ் கேட்பான். அதற்கு அவர், "ஆம்" என்று பதிலளிப்பார்.
அப்போது அல்லாஹ், "நீ (ஆதி மனிதர்) ஆதமின் முதுகுத்தண்டில் (அணுவாக) இருந்த போது, இதைவிட எளிதான ஒன்றையே (அதாவது) எனக்கு எதையும் இணை கற்பிக்காதே! உன்னை நான் நரகத்தில் புகுத்தமாட்டேன் என்பதையே) உன்னிடமிருந்து நான் எதிர்பார்த்தேன். ஆனால், (பூமிக்கு உன்னை அனுப்பியபோது) எனக்கு இணை கற்பிப்பதைத் தவிர வேறெதற்கும் நீ ஒப்புக்கொள்ளவில்லையே!" என்று கூறுவான்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "உன்னை நான் நரகத்தில் புகுத்த மாட்டேன்" எனும் குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 50
5404. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளில் இறைமறுப்பாளனிடம், "உனக்குப் பூமி நிறையத் தங்கம் சொந்தமாக இருந்தால், நீ அதை ஈடாகத் தர(வும் அதன் மூலம் இந்த வேதனையிலிருந்து விடுதலை பெற)வும் முன்வருவாயல்லவா?" என்று கேட்கப்படும். அதற்கு அவன், "ஆம்" என்று பதிலளிப்பான். அப்போது இதைவிடச் சுலபமான ஒன்றே (அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காமலிருப்பதே) உன்னிடம் கோரப்பட்டிருந்தது. (ஆனால், அதை நீ ஏற்கவில்லை)" என்று கூறப்படும்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 50
5405. மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், அப்போது அந்த இறைமறுப்பாளனிடம், "நீ பொய் சொல்கிறாய். இதைவிடச் சுலபமான ஒன்றே உன்னிடம் கோரப்பட்டிருந்தது என்று கூறப்படும்" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 50
பாடம் : 11 (மறுமை நாளில்) இறைமறுப்பாளன் தனது முகத்தால் (நடத்தி) இழுத்துச் செல்லப்படுவான்.
5406. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! (25:34ஆவது இறைவசனத்தின்படி) மறுமை நாளில் இறைமறுப்பாளர் தமது முகத்தால் (நடத்தி) இழுத்துச் செல்லப்படுவது எப்படி?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இம்மையில் அவனை இரு கால்களால் நடக்கச் செய்த (இறை)வனுக்கு, மறுமை நாளில் அவனை அவனது முகத்தால் நடக்கச் செய்ய முடியாதா?" என்று (திருப்பிக்) கேட்டார்கள்.
(இதை அறிவித்த) கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்கள், "ஆம் (முடியும்), எங்கள் இறைவனின் வல்லமை மீதாணையாக!" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 50
பாடம் : 12 இவ்வுலகில் சுகபோகமாக வாழ்ந்தவர் நரகத்தில் சிறிது நேரம் அமிழ்த்தப் படுவதும், இவ்வுலகில் கடுமையான சோதனைகளை அனுபவித்தவர் சொர்க்கத்தைச் சிறிது நேரம் அனுபவிப்பதும்.
5407. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இவ்வுலகில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்த நரகவாசிகளில் ஒருவர் மறுமை நாளில் கொண்டுவரப்பட்டு, நரகத்தில் ஒருமுறை அழுத்தி எடுக்கப்படுவார். பிறகு அவரிடம், "ஆதமின் மகனே (மனிதா)! (உலக வாழ்வில்) எப்போதேனும் நல்லதைப் பார்த்தாயா? எப்போதேனும் அருட்கொடை ஏதும் உனக்குக் கிடைத்ததா?" என்று கேட்கப்படும். அதற்கு அவர், "அல்லாஹ்வின் மீதாணையாக, இல்லை என் இறைவா!" என்று பதிலளிப்பார்.
அவ்வாறே, இவ்வுலகில் கடுமையான துன்பத்தில் வாழ்ந்த சொர்க்கவாசிகளில் ஒருவர் மறுமைநாளில் கொண்டுவரப்பட்டு, சிறிது நேரம் சொர்க்கத்திற்குள் செல்ல அனுமதிக்கப் படுவார். பிறகு அவரிடம், "ஆதமின் மகனே! (உலகில்) எப்போதேனும் சிரமத்தைக் கண்டாயா? எப்போதேனும் துன்பம் ஏதும் உமக்கு ஏற்பட்டதா?" என்று கேட்கப்படும். அதற்கு அவர் "அல்லாஹ்வின் மீதாணையாக! இல்லை, என் இறைவா! ஒருபோதும் எனக்கு எந்தத் துன்பமும் ஏற்பட்டதில்லை. ஒரு போதும் நான் சிரமத்தைக் கண்டதுமில்லை" என்று கூறுவார்.- இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 50
பாடம் : 13 இறைநம்பிக்கையாளர் செய்த நற்செயல்களுக்கான நன்மைகள் இம்மையிலும் மறுமையிலும் வழங்கப்படும். இறை மறுப்பாளர் செய்த நற்செயல்களுக்கான நன்மைகள் முன்கூட்டியே இம்மையில் வழங்கப்பட்டுவிடும்.
5408. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் எந்த இறைநம்பிக்கையாளருக்கும் (அவர் செய்த நற்செயலுக்கான) நன்மையில் அநீதி இழைப்பதில்லை. அதற்குரிய நன்மை இம்மையிலும் அவருக்கு வழங்கப்படும். அதற்குரிய நன்மை மறுமையிலும் அவருக்கு வழங்கப்படும். (ஏக) இறைமறுப்பாளர் இறைவனுக்காகச் செய்த நற்செயல்களின் பலனால் இம்மையில் (மட்டும்) அவருக்கு உணவளிக்கப்படும். அவர் மறுமையை அடையும்போது, அவருக்கு வழங்கப்படுவதற்கு நன்மையேதும் இராது.- இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 50
5409. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் இறைமறுப்பாளர் நற்செயல் ஒன்றைச் செய்தால், அதற்குரிய பலன் இவ்வுலகிலேயே அவருக்கு வழங்கப்பட்டுவிடும். இறைநம்பிக்கையாளரின் நிலை என்னவெனில், அவர் செய்த நற்செயல்களுக்குரிய நன்மைகளை இறைவன் மறுமை நாளில் வழங்குவதற்காகப் பத்திரப் படுத்துகிறான். மேலும், அவர் கீழ்ப்படிந்து நடப்பதற்கேற்ப இவ்வுலகிலும் அவருக்கு வாழ்வாதாரத்தை வழங்குகிறான்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 50
பாடம் : 14 ஓர் இறைநம்பிக்கையாளரின் நிலை (இளம்) பயிர் போன்றதாகும்; இறை மறுப்பாளனின் நிலை தேவதாரு மரத்தைப் போன்றதாகும்.
5410. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் இறைநம்பிக்கையாளரின் நிலையானது, (இளம்) பயிர் போன்றதாகும். காற்று அதைச் சாய்த்துக்கொண்டேயிருக்கும். (அவ்வாறே) இறைநம்பிக்கையாளருக்குச் சோதனைகள் ஏற்பட்டுக்கொண்டேயிருக்கும்.
நயவஞ்சகனின் நிலை, (விறைப்பாக நிற்கும்) தேவதாரு மரத்தைப் போன்றதாகும். (பலமாக வீசும்) காற்று அதை வேரோடு சாய்த்துவிடுகிறது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ("சாய்த்துக்கொண்டேயிருக்கும்" என்பதைக் குறிக்க "துமீலுஹு" என்பதற்குப் பகரமாக) "துஃபீஉஹு" எனும் சொல் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 50
5411. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளரின் நிலை, காற்றில் அசையும் இளம் தளிர்ப் பயிருக்கு ஒப்பானதாகும். அது முற்றிய பயிராகும்வரை அதைக் காற்று ஒரு முறை சாய்த்து, மறுமுறை நிமிர்ந்து நிற்கச் செய்யும்.
இறைமறுப்பாளனின் நிலை, தனது அடித்தண்டின் மீது விறைப்பாக நிமிர்ந்து நிற்கும் தேவதாரு மரத்திற்கு ஒப்பானதாகும். அது ஒரேடியாக வேரோடு சாய்ந்து விழும்வரை அதை எதுவும் சாய்ப்பதில்லை.
இதை கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 50
5412. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளரின் நிலை, காற்றில் அசையும் இளம் தளிர்ப் பயிருக்கு ஒப்பானதாகும். அதன் தவணை முடியும்வரை அதைக் காற்று ஒரு முறை சாய்த்து, மறுமுறை நிமிர்ந்து நிற்கச் செய்யும். நயவஞ்சகனின் நிலை விறைப்பாக நிற்கும் தேவதாரு மரத்திற்கு ஒப்பானதாகும். அது ஒரேயடியாக வேரோடு சாயும்வரை அதை(க் காற்று) எதுவும் செய்து விடுவதில்லை.- இதை கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 50