5350. மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஃபுலைஹ் பின் சுலைமான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "சஅத் பின் உபாதா அவர்களைக் குலமாச்சரியம் விவரமில்லாமல் பேசவைத்துவிட்டது" என்று இடம் பெற்றுள்ளது.
சாலிஹ் பின் கைசான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "குலமாச்சரியம் அவரை உசுப்பி விட்டது" என்றும், உர்வா பின் அஸ்ஸுபைர் பின்வருமாறு கூறியதாகக் கூடுதலாகவும் இடம்பெற்றுள்ளது:
ஆயிஷா (ரலி) அவர்கள் தமக்கு முன்னால் (அவதூறு கூறியவர்களில் ஒருவரான) ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்கள் ஏசப்படுவதை விரும்பாதவர்களாக இருந்தார்கள். மேலும், "அந்த ஹஸ்ஸான் (ரலி) அவர்கள்தான், "(பகைவர்களே!) என் தந்தையும், என் தந்தையின் தந்தையும், எனது மானமும் உங்களிடமிருந்து முஹம்மத் (ஸல்) அவர்களின் மானத்தைக் காக்கும் கேடயமாகும்" எனும் கவிதையைச் சொன்னவர்" என்றும் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
மேலும், ஆயிஷா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! எவரைக் குறித்து (அந்தப் பழிச்சொல்) சொல்லப்பட்டதோ அந்த மனிதர் (ஸஃப்வான், தம் அன்னையான என்னுடன் தம்மை இணைத்து அவதூறு பேசுவதைக் கேட்டு), "சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்); எனது உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நான் ஒருபோதும் எந்த (அந்நியப்) பெண்ணின் ஆடையையும் அகற்றியதில்லை" என்று கூறினார். அதன் பிறகு அவர் அல்லாஹ்வின் பாதையில் (உயிர்த் தியாகியாகக்) கொல்லப்பட்டார்" என்று கூறியதாகக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
யஅகூப் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "படையினர் கடுமையான வெயிலுள்ள நண்பகல் நேரத்தில் (மதிய ஓய்வுக்காக) இறங்கித் தங்கியிருந்தனர் ("மூஇரீன ஃபீ நஹ்ரிழ் ழஹீரா")" என்று இடம் பெற்றுள்ளது. அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "மூஃகிரீன" என்று இடம்பெற்றுள்ளது.
அப்து பின் ஹுமைத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்) அவர்களிடம் "மூஃகிரீன் என்பதற்குப் பொருள் என்ன?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "(அதன் வேர்ச்சொல்லான) "வஃக்ரத்" என்பது "கடுமையான வெயிலைக் குறிக்கும்" என்றார்கள்.
அத்தியாயம் : 49
5351. மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது:
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: என்னைப் பற்றி அவதூறு பேசப்பட்டபோது, எனக்கு இன்னும் அதைப் பற்றி தெரிந்திராத நிலையில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னைப் பற்றி உரையாற்ற மக்களிடையே) எழுந்து நின்றார்கள்.
ஏகத்துவ உறுதிமொழி கூறி, அல்லாஹ்வை அவன் தகுதிக்கேற்ப போற்றிப் புகழ்ந்துவிட்டு, "என் வீட்டார்மீது அபாண்டமாகப் பழி சுமத்தியவர்கள் விஷயத்தில் (அவர்களை என்ன செய்வதென்று) எனக்கு ஆலோசனை கூறுங்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! என் வீட்டாரிடம் எந்தக் கெட்டப்பழக்கத்தையும் நான் காணவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! எவரிடம் எந்தத் தீய நடத்தையையும் நான் காணவில்லையோ அத்தகைய ஒருவருடன் என் வீட்டாரை இணைத்து அவர்கள் பழி சுமத்தியுள்ளார்கள். நான் இருக்கும்போதே தவிர வேறெப்போதும் அவர் என் வீட்டினுள் நுழைந்ததில்லை. நான் பயணத்தில் வெளியே செல்லும்போதெல்லாம், அவரும் என்னுடனேயே இருப்பார்" என்று சொன்னார்கள் என ஹதீஸ் ஆரம்பமாகி மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
மேலும், இந்த அறிவிப்புகளில், "அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் வீட்டிற்கு வந்திருந்து என் பணிப்பெண்ணிடம் என்னைப் பற்றிக் கேட்டிருந்தார்கள். அவள், "அல்லாஹ்வின் மீதாணையாக! ஆடு நுழைந்து அவர் "குழைத்துவைத்த மாவை" அல்லது "அவர் பிசைந்துவைத்த மாவை"த் தின்றுவிட்டுச் செல்லும் அளவுக்கு (மெய்மறந்து) உறங்கி விடுவார் என்பதைத் தவிர வேறு எந்தக் குறையையும் நான் (ஆயிஷாவிடம்) அறிய வில்லை" என்று சொல்லியிருந்தாள்.
அப்போது நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவர் அவளை அதட்டி, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உண்மையைச் சொல்" என்று அவளிடம் வெளிப்படையாக விஷயத்தை விளக்கினார்.
அப்போது அவள், "அல்லாஹ் தூயவன். அல்லாஹ்வின் மீதாணையாக! பொற்கொல்லன், (தூய்மையான) சிவப்புத் தங்கக்கட்டியை எப்படி மாசு மருவற்றதாகக் கருதுவானோ அவ்வாறே நான் அவரைக் கருதுகிறேன்" என்று சொன்னாள்.
எந்த மனிதருடன் (என்னை இணைத்து) அவதூறு பேசப்பட்டதோ அந்த மனிதருக்கும் இந்த விஷயம் எட்டியது. அவர் "சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்). நான் ஒருபோதும் எந்த (அந்நியப்) பெண்ணின் ஆடையையும் அகற்றியதில்லையே!" என்று சொன்னார். பிறகு அவர் அல்லாஹ்வின் பாதையில் (ஓர் அறப்போரில்) வீரமரணம் அடைந்தார்.
மேலும், ஆயிஷா (ரலி) அவர்கள் இவ்வாறு கூறியதாகக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது: (முஸ்லிம்களில்) அதைப் பற்றிப் பேசியவர்கள் மிஸ்தஹும் ஹம்னாவும் ஹஸ்ஸானும் ஆவர். நயவஞ்சகன் "அப்துல்லாஹ் பின் உபை"தான் (நடக்காத ஒன்றை நடந்ததாக) ஜோடித்து, அதைப் பரப்பிவந்தவன் ஆவான். அவதூறு பரப்பியவர்களில் பெரும்பங்கு வகித்தவனும் அவன்தான்; ஹம்னாவும்கூட.
அத்தியாயம் : 49
பாடம் : 11 நபி (ஸல்) அவர்களின் அடிமைப் பெண்மீது சுமத்தப்பட்ட அவதூறுக் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானதாகும்.
5352. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அடிமைப் பெண்ணுடன் இணைத்து ஒரு மனிதர் அவதூறு சொல்லப்பட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம், "நீங்கள் சென்று அவருடைய கழுத்தை வெட்டிவிடுங்கள்" என்று சொன்னார்கள்.
அவ்வாறே அலீ (ரலி) அவர்கள் சென்ற போது, அவர் (சுற்றுச்சுவர் இல்லாத) ஒரு கிணற்றில் குளித்துக்கொண்டிருந்தார். அவரிடம் அலீ (ரலி) அவர்கள், "மேலே வா" என்று தமது கையைக் கொடுத்து அவரை வெளியேற்றினார்கள்.
அப்போது அவர் இன உறுப்பு துண்டிக்கப்பட்டவராக, இன உறுப்பே அற்றவராக இருந்தார். ஆகவே, அலீ (ரலி) அவர்கள் அவரை(க் கொல்லாமல்) விட்டுவிட்டார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! அவர் இன உறுப்பு துண்டிக்கப்பட்டவர்; இன உறுப்பே அற்றவர் ஆவார்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 49

5353. ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்திற்காகப் புறப்பட்டோம். அப்பயணத்தில் (உணவுப் பற்றாக்குறையால்) மக்களுக்குச் சிரமம் ஏற்பட்டது. அப்போது (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் தம் நண்பர்களிடம், "அல்லாஹ்வின் தூதருடன் இருக்கும் இவர்களுக்கு நீங்கள் செலவு செய்யாதீர்கள். அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து விலகிச் சென்றுவிடுவார்கள்" என்றும், "நாம் மதீனாவுக்குத் திரும்பிச் சென்றால், (எம்முடைய இனத்தாரான) கண்ணியவான்கள் இழிந்தோ(ராகிய முஹாஜி)ர்களை அங்கிருந்து வெளியேற்றிவிடுவர்" என்றும் சொன்னான்.
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, அ(வர் சொன்ன)தை அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அப்துல்லாஹ் பின் உபையிடம் ஆளனுப்பினார்கள். (அவர் வந்தவுடன்) அவரிடம் (அது குறித்துக்) கேட்டார்கள். தாம் அப்படிச் செய்யவேயில்லை என்று அவன் சத்தியம் செய்து சாதித்தார்.
அவர், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஸைத் பொய் சொல்லிவிட்டார்" என்று (என்னைப் பற்றிக்) கூறினார். (அவருடன் சேர்ந்து) மக்களில் சிலரும் அப்படிச் சொன்னதால் என் உள்ளத்தில் கடுமை(யான வேதனை) ஏற்பட்டது. அப்போது என் வாய்மையைக் குறிக்கும் வகையில் "(நபியே!) இந்த நயவஞ்சகர்கள் உங்களிடம் வருகின்றபோது..." (63:1) என்று தொடங்கும் வசனத்தை அல்லாஹ் அருளினான்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த நயவஞ்சகர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோர அவர்களை அழைத்தார்கள். (அவர்கள் அதற்கு இணங்காமல்) தமது தலையைத் திருப்பிக் கொண்டார்கள்.
(மேற்கண்ட வசனத்தின் மூலத்திலுள்ள) "குஷுபும் முசன்னதா" (சாய்த்துவைக்கப்பட்ட மரக்கட்டை) என்பது, அவர்கள் மிகவும் அழகானவர்களாக (வாட்ட சாட்டமானவர்களாக) இருந்ததைக் குறிக்கிறது.
அத்தியாயம் : 50
5354. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபையின் (பிரேதம் சவக்குழிக்குள் வைக்கப்பட்ட பிறகு அந்த) சவக்குழிக்கு வந்து, அந்தப் பிரேதத்தை வெளியே எடுத்துத் தமது மடியில் வைத்து, அதன் மீது தமது உமிழ்நீரை உமிழ்ந்து, தமது அங்கியையும் அதற்கு அணிவித்தார்கள். (இதற்குக் காரணம் என்னவோ) அல்லாஹ்வே அறிந்தவன்!
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நபி (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் பின் உபையின் பிரேதம் சவக்குழிக்குள் வைக்கப்பட்ட பிறகு அங்கு வந்தார்கள்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 50
5355. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் இறந்தபோது, அவருடைய புதல்வர் அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, தம் தந்தைக்குப் பிரேத ஆடை (கஃபன்) அணிவிப்பதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அங்கியைத் தருமாறு கோரினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவரிடம் தமது அங்கியைக் கொடுத்தார்கள். பிறகு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் தம் தந்தைக்கு இறுதித் தொழுகையை முன்னின்று நடத்தும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அவருக்கு இறுதித் தொழுகை நடத்துவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்தார்கள்.
அப்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் எழுந்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையைப் பிடித்துக்கொண்டு, "அல்லாஹ்வின் தூதரே! இவருக்கு(ப் பாவமன்னிப்புக் கோரி) பிரார்த்தனை செய்ய வேண்டாமென அல்லாஹ் உங்களுக்குத் தடை விதித்திருக்க, இவருக்கா தொழுவிக்கப்போகிறீர்கள்?" என்று கேட்டார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(பாவமன்னிப்புக் கோரவும் கோராமலிருக்கவும்) எனக்கு அல்லாஹ் உரிமையளித்துள்ளான். "(நபியே!) நீர் அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருவீராக; அல்லது கோராமலிருப்பீராக. (இரண்டும் சமம்தான்.) அவர்களுக்காக நீர் எழுபது முறை பாவமன்னிப்புக் கோரினாலும் அவர்களை ஒருபோதும் அல்லாஹ் மன்னிக்கமாட்டான்" (9:80) என்றே அல்லாஹ் கூறுகின்றான். நான் எழுபது முறையைவிட அதிகமாக இவருக்காகப் பாவமன்னிப்புக் கோருவேன்" என்று சொன்னார்கள்.
உமர் (ரலி) அவர்கள், "இவன் நயவஞ்சகனாயிற்றே!" என்று சொன்னார்கள். இருந்தும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு (ஜனாஸாத்) தொழுகையை முன்னின்று நடத்தினார்கள். அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "அவர்களில் இறந்துவிட்ட எவருக்காகவும் (நபியே!) நீர் தொழுவிக்க வேண்டாம். அவருடைய மண்ணறை அருகேயும் நிற்க வேண்டாம்" எனும் (9:84ஆவது) வசனத்தை அருளினான்.
அத்தியாயம் : 50
5356. மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "(9:84ஆவது வசனம் அருளப்பெற்ற) பிறகு அவர்களுக்குத் தொழுவிப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விட்டுவிட்டார்கள்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 50
5357. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இறையில்லம் கஅபா அருகே மூன்றுபேர் ஒன்றுகூடினர். அவர்களில் "குறைஷியர் இருவரும் ஸகஃபீ குலத்தார் ஒருவரும்" அல்லது "ஸகஃபீ குலத்தார் இருவரும் குறைஷி ஒருவரும்" இருந்தனர். அவர்களது உள்ளத்தில் புரிந்துகொள்ளும் ஆற்றல் குறைவாகவே இருந்தது. (ஆனால்,) வயிற்றுச் சதை (தொந்தி) அதிகமாகத்தான் இருந்தது. அவர்களில் ஒருவர், "அல்லாஹ், நாம் சொல்வதைக் கேட்கின்றான் என்று நீங்கள் கருதுகிறீர்களா?" என்று கேட்க, மற்றொருவர், "நாம் உரக்கப் பேசினால் அவன் கேட்பான்; மெதுவாகப் பேசினால் கேட்கமாட்டான்" என்று சொன்னார். இன்னொருவர், "நாம் உரக்கப் பேசும்போது அவன் கேட்கிறான் என்றால், நாம் மெதுவாகப் பேசும் போதும் அவன் நிச்சயம் கேட்கவே செய்வான்" என்று சொன்னார்.
அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "(உலகில் நீங்கள் குற்றங்களைச் செய்தபோது) உங்களின் காதுகளும் கண்களும் தோல்களும் உங்களுக்கெதிராகச் சாட்சியம் அளிக்கும் என்பதை அஞ்சிக்கூட (குற்றங்களிலிருந்து) தவிர்ந்துகொள்பவர்களாக நீங்கள் இருக்கவில்லை" (41:22) எனும் வசனத்தை அருளினான்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 50
5358. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் உஹுது(ப் போரு)க்காகப் புறப்பட்டுச் சென்றபோது, அவர்களுடனிருந்தவர்களில் சிலர் (நயவஞ்சகர்கள்) திரும்பி வந்துவிட்டனர். (இவர்கள்மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது தொடர்பாக) நபித்தோழர்கள் இரு பிரிவினராகப் பிரிந்துவிட்டார்கள்.
அவர்களில் சிலர், "அ(வ்வாறு திரும்பிச் சென்ற)வர்களைக் கொன்றுவிடுவோம்" என்று கூறினர். வேறுசிலர், "இல்லை (அவர்களைக் கொல்லவேண்டாம்)" என்று கூறினர். அப்போதுதான் "உங்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? நயவஞ்சகர்கள் விஷயத்தில் நீங்கள் இரு பிரிவினர்களாக உள்ளீர்கள்" (4:88) எனும் வசனத்தை அல்லாஹ் அருளினான்.
- மேற்கண்ட ஹதீஸ் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 50
5359. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் நயவஞ்சகர்களில் சிலர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறப்போருக்குப் புறப்பட்டுச் செல்லும்போது, அவர்களுடன் செல்லாமல் ஊரிலேயே தங்கிவிடுவார்கள். (அவ்வாறு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் செல்லாமல் தங்கிவிட்டதைப் பற்றி அவர்கள் பூரிப்பும் அடைந்து கொள்வார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (போரிலிருந்து திரும்பி)வந்தால், அவர்களிடம் (போய்,தாம் கலந்துகொள்ளாமல் போனதற்குச்) சாக்குப்போக்குகளைக் கூறி (பொய்ச்) சத்தியம் செய்வார்கள். தாம் செய்யாத (நற்) செயல்களுக்காகத் தாம் புகழப்பட வேண்டுமென்றும் விரும்புவார்கள்.
அப்போதுதான், "தாம் செய்த (தீய)வை குறித்துப் பூரித்துக்கொண்டும், தாம் செய்யாதவற்றுக்காகப் பாராட்டப்பட வேண்டும் என விரும்பிக்கொண்டும் இருப்போர் வேதனையிலிருந்து தப்பித்தவர்கள் என்று ஒருபோதும் (நபியே!) நீர் எண்ண வேண்டாம்; வதைக்கும் வேதனை தான் அவர்களுக்கு உண்டு" (3:188) எனும் இறைவசனம் அருளப்பெற்றது. - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 50
5360. ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(மதீனா ஆளுநர்) மர்வான் பின் அல்ஹகம் தம் காவலரிடம், "ராஃபிஉ! நீ இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று, "தாம் செய்தவை குறித்து மகிழ்ச்சியடைகின்ற, தாம் செய்யாத (நற்)செயல்களுக்காக (சாதனைகளுக்காக)ப் புகழப்பட வேண்டுமென்று விரும்புகின்ற ஒவ்வொரு மனிதரும் வேதனை செய்யப்படுவார் என்றிருப்பின், நாம் அனைவருமே நிச்சயமாக வேதனை செய்யப்பட வேண்டிவருமே!" என்று (நான் வினவியதாகக்) கேள்" என்று சொன்னார்.
(அவ்வாறே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று ராஃபிஉ கேட்டபோது) "உங்களுக்கு இந்த வசனம் தொடர்பாக என்ன (குழப்பம்) நேர்ந்தது? இந்த வசனம் வேதக்காரர்கள் தொடர்பாகவே அருளப்பெற்றது" என்று கூறிவிட்டு, "வேதம் வழங்கப்பெற்றோரிடம் நீங்கள் மக்களுக்கு அ(ந்த வேதத்)தை நிச்சயமாகத் தெளிவுபடுத்தி விடவேண்டும்; அதை நீங்கள் மறைக்கக் கூடாது என அல்லாஹ் உறுதிமொழி பெற்றதை (நபியே!) எண்ணிப்பார்ப்பீராக" (3:187) எனும் வசனத்தை ஓதினார்கள்.
பிறகு "தாம் செய்த (தீய)வை குறித்துப் பூரித்துக்கொண்டும் தாம் செய்யாதவற்றுக்காகப் பாராட்டப்பட வேண்டும் என விரும்பிக் கொண்டும் இருப்போர் வேதனையிலிருந்து தப்பித்தவர்கள் என்று (நபியே!) ஒருபோதும் நீர் எண்ண வேண்டாம்" (3:188) எனும் வசனத்தையும் ஓதிக்காட்டினார்கள்.
மேலும், "நபி (ஸல்) அவர்கள் (யூதர்களை அழைத்து) அவர்களிடம் ஒரு விஷயம் (தவ்ராத்தில் உள்ளதா என்பது) குறித்துக் கேட்டார்கள். அப்போது யூதர்கள் அதை மறைத்துவிட்டு, (உண்மைக்குப் புறம்பான) வேறொன்றை நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் கேட்டதற்குச் சரியான தகவலைத் தந்துவிட்டதைப் போன்று காட்டிக்கொண்டும், அதற்காக நபி (ஸல்) அவர்களிடம் பாராட்டை எதிர்பார்ப்பதைப் போன்றும், நபி (ஸல்) அவர்கள் கேட்டதைப் பற்றிச் சொல்லாமல் தாம் மறைத்துவிட்டதைக் குறித்து மகிழ்ச்சியடைந்துகொண்டும் புறப்பட்டுச் சென்றனர்.
(அப்போதுதான் மேற்கண்ட (3:188ஆவது) வசனம் அருளப்பெற்றது)" என்றும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 50
5361. கைஸ் பின் உபாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்களிடம், "நீங்கள் அலீ (ரலி) அவர்கள் விஷயத்தில் செய்துவிட்ட இந்தச் செயலை நீங்களாக உங்கள் யோசனைப்படி செய்தீர்களா? அல்லது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களிடம் கூறிய ஏதேனும் அறிவுரைப்படி செய்தீர்களா?" என்று கேட்டேன்.
அதற்கு அம்மார் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மக்கள் அனைவரிடமும் கூறாத ஓர் அறிவுரையை எங்களிடம் மட்டும் கூறவில்லை. மாறாக, நபி (ஸல்) அவர்கள் "என் தோழர்களிடையே பன்னிரண்டு நயவஞ்சகர்கள் இருக்கிறார்கள். அவர்களில் எட்டுப்பேர், ஊசித் துவாரத்திற்குள் ஒட்டகம் நுழையாத வரை சொர்க்கத்திற்குள் நுழையமாட்டார்கள். நரக நெருப்பின் ஒரு தீப்பந்தமே அவர்கள் எட்டுப் பேருக்கும் போதுமானதாகும்" என்று கூறினார்கள் என ஹுதைஃபா (ரலி) அவர்கள் சொன்னார்கள்" என்றார்கள்.
மற்ற நால்வர் குறித்து அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறியது என் நினைவில் இல்லை என அறிவிப்பாளர் அஸ்வத் பின் ஆமிர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
அத்தியாயம் : 50
5362. கைஸ் பின் உபாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்களிடம், "நீங்கள் (அலீ (ரலி) அவர்களுடன் சேர்ந்து) போரிட்டுவருவதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்? அதை நீங்கள் சுயமான முடிவுப்படி மேற்கொள்கிறீர்களா? ஏனெனில், உங்களின் சுயமுடிவு தவறானதாகவும் இருக்கலாம்; சரியானதாகவும் இருக்கலாம்.அல்லது உங்களிடம் (அவ்வாறு போரிடுமாறு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறிவுரை கூறினார்களா?" என்று கேட்டோம்.
அதற்கு அம்மார் (ரலி) அவர்கள், "மக்கள் அனைவரிடமும் கூறாத அறிவுரை எதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் கூறவில்லை. (ஆனால்,) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் சமுதாயத்தாரிடையே பன்னிரண்டு நயவஞ்சகர்கள் இருக்கிறார்கள்..." என்று மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்று கூறினார்கள்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அம்மார் (ரலி) அவர்கள் இதை ஹுதைஃபா (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்தார்கள் என்றே நான் கருதுகிறேன்" என்று கூறியதாக இடம் பெற்றுள்ளது.
ஃகுன்தர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "என் சமுதாயத்தாரிடையே பன்னிரெண்டு நயவஞ்சகர்கள் இருக்கிறார்கள். ஊசித் துவாரத்திற்குள் ஒட்டகம் நுழையாத வரை அவர்கள் சொர்க்கத்திற்குள் நுழையவுமாட்டார்கள்; அதன் வாடையைக்கூட நுகரவுமாட்டார்கள். நரக நெருப்பின் விளக்கே ("துபைலா") அந்த எட்டுப் பேருக்கும் போதுமானதாகும். அது அவர்களது தோள்களிடையே வெளிப்பட்டு அவர்களது நெஞ்சுகளுக்கு மேலே வந்துவிடும்" என்று கூறியதாக நான் கருதுகிறேன் என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 50
5363. அபுத்துஃபைல் (ஆமிர் பின் வாஸிலா-ரலி) அவர்கள் கூறியதாவது:
கணவாய்வாசிகளில் ஒருவருக்கும் ஹுதைஃபா (ரலி) அவர்களுக்கும் இடையே மக்கள் மத்தியில் ஏற்படும் பிரச்சினை ஒன்று ஏற்பட்டது. அப்போது, (அந்த மனிதரிடம்) ஹுதைஃபா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வை முன்வைத்து உம்மிடம் கேட்கிறேன். அந்தக் கணவாய்வாசிகள் எத்தனை பேர் இருந்தனர்?" என்று கேட்டார்கள். (அந்த மனிதர் மௌனமாக இருக்கவே,) அவரிடம் அங்கிருந்த மக்கள், "அவர் கேட்டதற்குப் பதில் சொல்" என்று கூறினர். அந்த மனிதர், "அவர்கள் பதினான்கு பேர் இருந்தார்கள் என எங்களிடம் தெரிவிக்கப்பட்டது" என்றார்.
(ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள்:) அவர்களில் நீரும் ஒருவராக இருந்தால், (கணவாயிலிருந்த) மக்களின் எண்ணிக்கை பதினைந்தாக உயரும். நான் அல்லாஹ்வை சாட்சியாக்கிக் கூறுகிறேன்: அவர்களில் பன்னிரெண்டு பேர் இவ்வுலகிலும் சாட்சிகள் நிற்கும் (மறுமை) நாளிலும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எதிரிகளாவர். மற்ற மூன்று பேரை நபியவர்கள் மன்னித்துவிட்டார்கள்.
(காரணம்) அவர்கள் மூவரும், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பொது அறிவிப்பாளரின் அறிவிப்பை நாங்கள் செவியுறவுமில்லை; அந்த மக்கள் தீட்டியிருந்த திட்டத்தை நாங்கள் அறிந்திருக்கவுமில்லை" என்று கூறி (மன்னிப்புக் கோரி)னர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கருங்கற்கள் நிறைந்த ("ஹர்ரா"ப்) பகுதியில் இருந்தார்கள். பிறகு (தபூக் நோக்கி) நடந்தார்கள். அப்போது "(நீங்கள் தங்கப்போகுமிடத்திலுள்ள) நீர்நிலையில் தண்ணீர் மிகக் குறைவாகவே இருக்கும். என்னை முந்திக்கொண்டு யாரும் அங்கு செல்ல வேண்டாம்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆனால், அவர்களை முந்திக்கொண்டு சிலர் அங்கு சென்றுவிட்டிருப்பதைக் கண்டார்கள். அன்றைய தினத்தில் அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
அத்தியாயம் : 50
5364. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் (குறைஷியரின் குதிரைப்படையை நோட்டமிடுவதற்காக ஹுதைபிய்யா அருகிலுள்ள) "ஸனிய்யத்துல் முரார்" கணவாயில் (முதலில்) ஏறுகிறாரோ அவருக்கு பனூ இஸ்ராயீல் சமுதாயத்துக்கு மன்னிப்பு வழங்கப்பட்டதைப் போன்று மன்னிப்பு வழங்கப்படும்" என்று கூறினார்கள்.
"கஸ்ரஜ்" குலத்தைச் சேர்ந்த எங்களது குதிரைப் படையினரே அதன் மீது முதலில் ஏறினர். பிறகு மற்றவர்கள் ஏறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "சிவப்பு ஒட்டகத்தில் வரும் மனிதரைத் தவிர மற்ற அனைவரும் பாவமன்னிப்பு அளிக்கப் பட்டுவிட்டனர்" என்று கூறினார்கள்.
உடனே நாங்கள் அந்த மனிதரிடம் சென்று, "நீ வந்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உமக்காகப் பாவமன்னிப்புக் கோரச் சொல்" என்று கூறினோம்.
அதற்கு அந்த மனிதர், "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்கள் தோழர் எனக்குப் பாவமன்னிப்புக் கோருவதைவிட காணாமற்போன எனது ஒட்டகம் எனக்கு (திரும்பக்) கிடைப்பதே எனக்கு மிகவும் விருப்பமானதாகும்" என்று சொன்னார். அப்போது அந்த மனிதர் காணாமற்போன தனது ஒட்டகத்தைத் தேடிக்கொண்டிருந்தார்.
அத்தியாயம் : 50
5365. மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "யார் "ஸனிய்யத்துல் முரார்" அல்லது "ஸனிய்யத்துல் மரார்" கணவாயில் முதலில் ஏறுகிறாரோ..." என்று ஹதீஸ் ஆரம்பமாகி மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளது.
இந்த அறிவிப்பில், "அப்போது கிராமவாசியொருவர் தமது காணாமற்போன ஒட்டகத்தைத் தேடிக்கொண்டு வந்தார்"என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 50
5366. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
எங்களில் பனுந் நஜ்ஜார் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் இருந்தார். அவர் (இஸ்லாத்தைத் தழுவி) "அல்பகரா", "ஆலு இம்ரான்" ஆகிய (குர்ஆன்) அத்தியாயங்களை ஓதி முடித்தார். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக (வேதஅறிவிப்பை) எழுதுபவராக இருந்தார். பிறகு அவர் (தமது பழைய கிறித்தவ மதத்துக்கே) ஓடிப்போய்,வேதக்காரர்களுடன் சேர்ந்துகொண்டார். வேதக்காரர்கள் அவரைத் தூக்கிவைத்துக் கொண்டாடினர். "இவர் முஹம்மதுக்காக (வேத அறிவிப்பை) எழுதிவந்தார்" என்று கூறி, அவரால் பெருமைப்பட்டுக் கொண்டனர்.
இதே நிலையில், (ஒரு நாள்) அவர்களுக்கு மத்தியில் வைத்து அவரது கழுத்தை அல்லாஹ் முறித்துவிட்டான். (அவர் இறந்து விட்டார்.) ஆகவே, அவருக்காகச் சவக்குழி தோண்டி அவரைப் புதைத்துவிட்டனர். காலை நேரமானபோது அவரைப் பூமி (குழிக்கு வெளியில்) தூக்கியெறிந்துவிட்டிருந்தது. பிறகு மீண்டும் அவருக்காகக் குழி தோண்டி அவரைப் புதைத்தனர்.
மறுநாள் காலையிலும் பூமி (குழிக்கு வெளியில்) அவரைத் தூக்கியெறிந்துவிட்டிருந்தது. பிறகு மறுபடியும் அவர்கள் அவருக்காகக் குழி தோண்டி அவரைப் புதைத்தனர். மறுநாள் காலையிலும் பூமி அவரை (குழிக்கு வெளியில்) தூக்கியெறிந்துவிட்டிருந்தது. ஆகவே, அவர்கள் அவரை (புதைக்காமல்) அப்படியே போட்டுவிட்டார்கள்.
அத்தியாயம் : 50
5367. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தை முடித்துவிட்டு வந்து கொண்டிருந்தார்கள். மதீனாவுக்கு அருகில் அவர்கள் வந்தபோது, கடுமையான (சூறாவளிக்) காற்று வீசியது.அது பயணிகளை மண்ணுக்குள் புதைத்துவிடப் பார்த்தது.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்தக் காற்று ஒரு நயவஞ்சகனைக் கொல்வதற்காக அனுப்பப்பட்டுள்ளது" என்று கூறினார்கள். மதீனாவுக்குள் வந்தபோது, நயவஞ்சகர்களின் பெருந்தலைவன் ஒருவன் இறந்துவிட்டிருந்தான்.
அத்தியாயம் : 50
5368. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் காய்ச்சல் கண்டிருந்த ஒரு மனிதரை உடல்நலம் விசாரிப்பதற்காகச் சென்றோம். அப்போது நான் எனது கையை அவர் மீது வைத்தேன். (அவரது உடல் அனலாகத் தகித்தது.) அப்போது நான், "அல்லாஹ்வின் மீதாணையாக! இன்று போல் கடுமையான வெப்பமுள்ள ஒரு மனிதரை நான் கண்டதேயில்லை" என்று சொன்னேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மறுமைநாளில் இவரைவிடக் கடுமையான வெப்பத்திற்கு ஆளாகுவோரை நான் அறிவிக்கட்டுமா? இதோ வாகனத்தில் திரும்பிக்கொண்டிருக்கும் இவ்விரு மனிதர்கள்தான்" என்று தம் தோழர்களிடையேயிருந்த இரு மனிதர்களைப் பற்றிச் சொன்னார்கள்.
அத்தியாயம் : 50
5369. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நயவஞ்சகனின் நிலை இரு கிடாக்களிடையே சுற்றிவரும் பெட்டை ஆட்டின் நிலையைப் போன்றதாகும். ஒருமுறை இதனிடம் செல்கிறது; மறுமுறை அதனிடம் செல்கிறது.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
ஆயினும் அதில், "ஒரு முறை இதற்கு இணங்குகிறது; மறுமுறை அதற்கு இணங்குகிறது" என்று இடம்பெற்றுள்ளது.மறுமை, சொர்க்கம், நரகம் ஆகியவற்றின் நிலை.
அத்தியாயம் : 50