5319. மேற்கண்ட ஹதீஸ் மஅமர் (ரஹ்) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அவருக்கு அல்லாஹ் மன்னிப்பு வழங்கினான்" என்பதுவரையே இடம்பெற்றுள்ளது. பூனையைக் கட்டிப்போட்ட அந்தப் பெண்ணைப் பற்றிய செய்தி இடம்பெறவில்லை.
ஸுபைதீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், அவரது உடலிலிருந்து எடுத்துக்கொண்ட ஒவ்வொரு பொருளிடமும் "அவரது உடலிலிருந்து நீ எடுத்ததைக் கொடுத்துவிடு" என்று கட்டளையிட்டான்" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 49
5320. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்குமுன் வாழ்ந்த ஒரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தையும் பிள்ளைகளையும் வழங்கியிருந்தான். (அவருக்கு இறப்பு நெருங்கியபோது) அவர் தம் பிள்ளைகளிடம், "நான் சொல்வதைப் போன்று நீங்கள் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், என் சொத்துக்களைப் பிறருக்கு வழங்கிவிடுவேன். நான் இறந்துவிட்டால் என்னை எரித்து, தூளாக்கி விடுங்கள். பிறகு அந்தச் சாம்பலைக் காற்றில் தூற்றுங்கள். ஏனெனில், நான் (எனது மறுமைக்காக) அல்லாஹ்விடம் எந்த நன்மையையும் சேமிக்கவில்லை. அல்லாஹ் என்னைத் தண்டிப்பதற்குச் சக்தி பெற்றே உள்ளான்" என்று கூறி உறுதிமொழி வாங்கிக்கொண்டார்.
என் இறைவன் மீதாணையாக! (அவர் இறந்தவுடன்) அவ்வாறே அவர்கள் செய்தார்கள். பிறகு அல்லாஹ் (பழையபடி முழு மனிதராக அவரை எழுப்பி), "இவ்வாறு நீ செய்யக் காரணம் என்ன?" என்று கேட்டான். அம்மனிதர் "உன்மீதான அச்சத்தின் காரணத்தால்தான்" என்று கூறினார். அவரை (அந்த நேரத்தில் இறையச்சம் தான் காப்பாற்றியது) அதைத் தவிர வேறெதுவும் காப்பாற்றவில்லை.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 49
5321. மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஷைபான் மற்றும் அபூஅவானா (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், "மக்களில் ஒருவருக்கு அல்லாஹ் செல்வத்தையும் பிள்ளைகளையும் வழங்கியிருந்தான்" என்று இடம்பெற்றுள்ளது.
முஅதமிர் பின் சுலைமான் அத்தைமீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "ஃப இன்னஹு லம் யப்தயிர் இந்தல்லாஹி கைரன்" என்பதற்கு "அவர் அல்லாஹ்விடம் எந்த நன்மையையும் சேமித்திருக்கவில்லை" என்று கத்தாதா (ரஹ்) அவர்கள் பொருள் செய்ததாக இடம் பெற்றுள்ளது.
(இதைக் குறிக்க) ஷைபான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "ஃப இன்னஹு மப்தஅர இந்தல்லாஹி கைரன்" (அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் அல்லாஹ்விடம் எந்த நன்மையையும் சேமித்திருக்கவில்லை) என்றும்,அபூஅவானா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "மம்தஅர" (அவர் சேமித்திருக்கவில்லை) என்றும் காணப்படுகிறது.
அத்தியாயம் : 49
பாடம் : 5 பாவங்களைத் திரும்பத் திரும்பச் செய்து திரும்பத் திரும்ப பாவமன்னிப்புக் கோரினாலும் பாவமன்னிப்புக் கோரிக்கை ஏற்கப்படல்.
5322. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் வல்லமையும் மாண்பும் மிக்க தம் இறைவன் குறித்து அறிவித்தார்கள்:
ஓர் அடியார் ஒரு பாவம் செய்துவிட்டார். பிறகு "இறைவா! (நான் ஒரு பாவம் செய்து விட்டேன்.) என் பாவத்தை மன்னிப்பாயாக!" என்று கூறினார். உடனே வளமும் உயர்வும் உள்ள இறைவன், "என் அடியான் ஒரு பாவம் செய்துவிட்டுப் பிறகு தனக்கோர் இறைவன் இருக்கின்றான் என்றும், அவன் பாவங்களை மன்னிக்கவும் செய்வான்;பாவங்களுக்காகத் தண்டிக்கவும் செய்வான் என்றும் அறிந்துகொண்டான்" என்று சொல்கிறான். பிறகு அந்த அடியார் மீண்டும் ஒரு பாவத்தைச் செய்துவிட்டு, "என் இறைவா! என் பாவத்தை மன்னிப்பாயாக!" என்று பிரார்த்தித்தார்.
அப்போதும் வளமும் உயர்வும் உள்ள இறைவன், "(இம்முறையும்) என் அடியான் ஒரு பாவத்தைச் செய்துவிட்டுப் பிறகு, தனக்கோர் இறைவன் இருக்கின்றான் என்றும், அவன் பாவங்களை மன்னிக்கவும் செய்வான்; பாவங்களுக்காகத் தண்டிக்கவும் செய்வான் என்று அறிந்துகொண்டான்" என்று சொல்கிறான்.
பிறகு அந்த அடியார் மீண்டும் ஒரு பாவத்தைச் செய்துவிட்டு, "என் இறைவா! எனது பாவத்தை மன்னிப்பாயாக!" என்று பிரார்த்தித்தார். அப்போதும் வளமும் உயர்வும் உள்ள இறைவன், "என் அடியான் (இம்முறையும்) ஒரு பாவத்தைச் செய்துவிட்டுப் பிறகு தனக்கோர் இறைவன் இருக்கின்றான் என்றும், அவன் பாவங்களை மன்னிக்கவும் செய்வான்; பாவங்களுக்காகத் தண்டிக்கவும் செய்வான் என்றும் அறிந்துகொண்டான். நீ நாடியதைச் செய்; நான் உனது பாவத்தை மன்னித்துவிட்டேன்" என்று சொல்கிறான்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல் அஃலா பின் ஹம்மாத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: "நீ நாடியதைச் செய்துகொள்" என மூன்றாவது தடவையில் இறைவன் சொல்கிறானா, அல்லது நான்காவது தடவையில் சொல்கிறானா என்பது எனக்குத் தெரியவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 49
5323. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "ஓர் அடியார் ஒரு பாவத்தைச் செய்துவிட்டார்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அதில், "அந்த அடியார் பாவம் செய்தார்" என மூன்று முறை ஹம்மாத் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாகவும்,மூன்றாவது தடவையில் "நான் என் அடியானை மன்னித்து விட்டேன். அவன் நாடியதைச் செய்துகொள்ளட்டும்"என்று இறைவன் கூறியதாகவும் இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 49
5324. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், பகலில் பாவம் புரிந்தவர்கள் பாவமன்னிப்புக் கோருவதற்காக இரவில் தனது கையை நீட்டுகிறான்; இரவில் பாவம் புரிந்தவர்கள் பாவமன்னிப்புக் கோருவதற்காக பகலில் கையை நீட்டுகிறான். சூரியன் மேற்கிலிருந்து உதிக்கும் (யுக முடிவு நாள்)வரை (ஒவ்வொரு நாளும் இவ்வாறு செய்துகொண்டிருக்கிறான்).
இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூமூசா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 49
பாடம் : 6 அல்லாஹ்வின் தன்மானமும் மானக்கேடான செயல்களை அவன் தடை செய்திருப்பதும்.
5325. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வைவிட மிகவும் புகழை விரும்புகின்றவர் வேறெவருமிலர். அதனால்தான், அவன் தன்னைத்தானே புகழ்ந்துகொண்டுள்ளான். அல்லாஹ்வைவிட அதிகத் தன்மானமுள்ளவர் வேறெவருமிலர். ஆகவேதான், மானக்கேடான (ஆபாசமான) விஷயங்களுக்கு அவன் தடை விதித்துள்ளான்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 49
5326. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வைவிட அதிகத் தன்மானமுள்ளவர் வேறெவருமிலர். அதனால்தான், மானக்கேடான செயல்களில் வெளிப்படையானவற்றுக்கும் மறைமுகமானவற்றுக்கும் அவன் தடைவிதித்துள்ளான். அல்லாஹ்வைவிட மிகவும் புகழை விரும்புகின்றவர் வேறெவருமிலர்.- இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 49
5327. அம்ர் பின் முர்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூவாயில் (ரஹ்) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடமிருந்து அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாகப் பின்வருமாறு அறிவித்தார்கள்:
அல்லாஹ்வைவிட அதிகத் தன்மானமுள்ளவர் வேறெவருமிலர். அதனால்தான், மானக்கேடான செயல்களில் வெளிப்படையானவற்றுக்கும் மறைமுகமானவற்றுக்கும் அவன் தடைவிதித்துள்ளான். அல்லாஹ்வைவிட மிகவும் புகழை விரும்புகின்றவர் வேறெவருமிலர். ஆகவேதான், அவன் தன்னைத் தானே புகழ்ந்துகொண்டுள்ளான்.
நான் அபூவாயில் (ரஹ்) அவர்களிடம், "இதை நீங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து (நேரடியாகச்) செவியுற்றீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அபூவாயில் (ரஹ்) அவர்கள், "ஆம், அவர்கள் நபி (ஸல்) அவர் களிடமிருந்து அதை அறிவித்தார்கள்" என்று விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது
அத்தியாயம் : 49
5328. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வைவிட மிகவும் புகழை விரும்புகின்றவர் வேறெவருமிலர். அதனால்தான்,அவன் தன்னைத் தானே புகழ்ந்துகொண்டுள்ளான். அல்லாஹ்வைவிட அதிகத் தன்மானமுள்ளவர் வேறெவருமிலர். ஆகவேதான், மானக்கேடான செயல்களுக்கு அவன் தடை விதித்துள்ளான். அல்லாஹ்வைவிட அதிகமாகத் திருந்துவதற்கு வாய்ப்பு அளிப்பதை விரும்பக்கூடியவர் வேறெவருமிலர். அதனால்தான், அவன் வேதங்களை அருளினான்; தூதர்களை அனுப்பினான்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 49
5329. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வும் ரோஷம் கொள்கிறான். இறைநம்பிக்கையாளரும் ரோஷம் கொள்கிறார். ஓர் இறைநம்பிக்கையாளர்,அல்லாஹ் தடை செய்தவற்றைச் செய்யும்போதே அல்லாஹ் ரோஷம் கொள்கிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வைவிட அதிகத் தன்மானமுள்ளவர் வேறு யாருமில்லை.
இதை அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட அபூஹுரைரா (ரலி) அவர்களது ஹதீஸ் வேறு இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 49
5330. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வைவிட அதிகத் தன்மானமுள்ளவர் வேறெவருமில்லை.
இதை அஸ்மா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 49
5331. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளரும் ரோஷம் கொள்கிறார். அவரைவிடக் கடுமையாக அல்லாஹ் ரோஷம் கொள்கிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 49
பாடம் : 7 "நன்மைகள் தீமைகளை அழித்து விடும்" (11:114) எனும் இறை வசனம்.
5332. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் (அந்நியப்) பெண் ஒருத்தியை முத்தமிட்டுவிட்டார். பிறகு நபி (ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் வந்து (பரிகாரம் கேட்டு) நடந்ததைச் சொன்னார். அப்போது "பகலின் இரு ஓரங்களிலும், இரவின் சில பகுதிகளிலும் தொழுகையை நிலை நாட்டுவீராக! நன்மைகள் தீமைகளை அழித்துவிடும். இது படிப்பினை பெறுவோருக்கு ஒரு பாடமாகும்" (11:114) எனும் இறைவசனம் அருளப்பெற்றது.
அந்த மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! இது எனக்கு மட்டுமா? (அல்லது அனைவருக்குமா?)" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "என் சமுதாயத்தாரில் இப்படிச் செய்துவிட்ட அனைவருக்கும்தான்" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 49
5333. மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, தாம் (அந்நியப்) பெண் ஒருத்தியை முத்தமிட்டுவிட்டதாக,அல்லது தொட்டுவிட்டதாக, அல்லது வேறேதோ செய்துவிட்டதாகச் சொன்னார். அவர் அதற்குப் பரிகாரம் கேட்பதைப் போன்றிருந்தது. அப்போது அல்லாஹ் அந்த வசனத்தை (11:114) அருளினான்" என்றும் அதற்கு பின்னுள்ளவையும் இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 49
5334. மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "ஒரு மனிதர் (அந்நியப்) பெண் ஒருத்தியிடம் உடலுறவு நீங்கலாக (மற்றச் செயல்) ஒன்றைச் செய்துவிட்டார். பிறகு உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் வந்(து அதைப் பற்றித் தெரிவித்)தார். அதைப் பெருங்குற்றமாக உமர் (ரலி) அவர்கள் கருதினார்கள். பிறகு அந்த மனிதர் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்(து தெரிவித்)தபோது, அவர்களும் அதைப் பெருங்குற்றமாகக் கருதினார்கள். பிறகு அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்" என்றும் மேற்கண்ட ஹதீஸில் உள்ள தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 49
5335. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் மதீனாவின் புறநகர்ப் பகுதியில் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டேன். அவளுடன் உடலுறவு கொள்வதைத் தவிர வேறு செயல்களைச் செய்துவிட்டேன். இதோ நான் (இங்கு தயாராக நிற்கிறேன்). என் விஷயத்தில் நீங்கள் நாடியதை நிறைவேற்றுங்கள்" என்று கூறினார்.
அவரிடம் உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வே உனது குற்றத்தை மறைத்துவிட்டிருக்க, நீ உன் குற்றத்தை மறைத்திருக்கக் கூடாதா?" என்று கேட்டார்கள். ஆனால், அந்த மனிதருக்கு நபி (ஸல்) அவர்கள் பதிலேதும் கூறவில்லை.
பிறகு அந்த மனிதர் எழுந்து சென்றுவிட்டார். பின்னர் நபி (ஸல்) அவர்கள் அவரை அழைத்துவர அவருக்குப் பின்னால் ஆளனுப்பினார்கள். அவரிடம், "பகலின் இரு ஓரங்களிலும் இரவின் சில பகுதிகளிலும் தொழுகையை நிலைநாட்டுவீராக! நன்மைகள் தீமைகளை அழித்துவிடும். இது படிப்பினை பெறுவோருக்கு ஒரு பாடமாகும்" (11:114)எனும் இந்த இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள்.
அப்போது அங்கிருந்த மக்களில் ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! இது இவருக்கு மட்டும் உரியதா? (அல்லது அனைவருக்குமா?)" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "இல்லை; மக்கள் அனைவருக்கும் உரியதுதான்" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 49
5336. மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "முஆத் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! இ(ந்தப் பரிகாரமான)து இவருக்கு மட்டும் உரியதா? அல்லது எங்கள் அனைவருக்கும் உரியதா?" என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், "இல்லை; உங்கள் அனைவருக்கும் உரியதுதான்" என்று பதிலளித்ததாகக் காணப்படுகிறது.
அத்தியாயம் : 49
5337. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்துவிட்டேன். ஆகவே, என்மீது தண்டனையை நிறைவேற்றுங்கள்" என்றார். அப்போது தொழுகை நேரம் வந்துவிடவே, அவர் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதார்.
தொழுகையை முடித்தபோது, "அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்துவிட்டேன். ஆகவே, அல்லாஹ்வின் வேதத்தி(லுள்ளபடி தண்ட னையி)னை என்மீது நிறைவேற்றுங்கள்" என்று கூறினார்.
நபி (ஸல்) அவர்கள், "எம்முடன் சேர்ந்து நீர் தொழுதீர் அல்லவா?" என்று கேட்டார்கள். அவர் "ஆம் (தொழுதேன்)"என்றார். நபி (ஸல்) அவர்கள், "உமது பாவம் மன்னிக்கப்பட்டுவிட்டது" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 49
5338. அபூஉமாமா அல்பாஹிலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் அமர்ந்திருந்தார்கள். அவர்களுடன் நாங்களும் அமர்ந்திருந்தோம். அப்போது ஒரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்துவிட்டேன். ஆகவே, எனக்குத் தண்டனையை நிறைவேற்றுங்கள்" என்று கூறினார். அவருக்குப் பதிலளிக்காமல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமைதியாக இருந்தார்கள்.
பிறகு (மீண்டும்) அவர், "அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்து விட்டேன். ஆகவே,எனக்குத் தண்டனையை நிறைவேற்றுங்கள்" என்று கூறினார். அப்போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்குப் பதிலளிக்காமல் அமைதியாக இருந்தார்கள்.
பிறகு தொழுகைக்காக "இகாமத்" சொல்லப்பட்டது. தொழுகை முடிந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரும்பிச் சென்றபோது, அந்த மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பின்தொடர்ந்து சென்றார். அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்ன பதிலளிக்கிறார்கள் என்பதைக் காண்பதற்காக அவர்களை நான் பின்தொடர்ந்தேன். அந்த மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்துவிட்டேன். ஆகவே, எனக்குரிய தண்டனையை நிறைவேற்றுங்கள்" என்று கூறினார்.
அப்போது அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் உமது வீட்டிலிருந்து புறப்படும்போது அழகிய முறையில் அங்கத்தூய்மை (உளூ) செய்யவில்லையா?" என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர் "ஆம் (செய்தேன்);அல்லாஹ்வின் தூதரே!" என்றார். "பிறகு நம்முடன் சேர்ந்து நீர் தொழவில்லையா?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.
அந்த மனிதர் "ஆம் (தொழுதேன்); அல்லாஹ்வின் தூதரே!" என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ் "உமக்குரிய தண்டனையை" அல்லது "உமது பாவத்தை" மன்னித்துவிட்டான்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 49