5235. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களே! அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருங்கள். ஏனெனில், நான் ஒவ்வொரு நாளும் அவனிடம் நூறுமுறை பாவமன்னிப்புக் கோருகிறேன்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
5236. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சூரியன் மேற்கிலிருந்து உதிப்பதற்கு (யுகமுடிவுக்கு)முன் யார் பாவமன்னிப்புக் கோரித் திருந்திவிடுகிறாரோ அவருடைய பாவமன்னிப்புக் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
பாடம் : 13 மெல்லிய குரலில் இறைவனைத் துதிப்பதே விரும்பத்தக்கதாகும்.
5237. அபூமூசா அப்துல்லாஹ் பின் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (கைபர்) பயணத்தில் இருந்தோம். அப்போது மக்கள் உரத்த குரலில் "அல்லாஹு அக்பர்" (இறைவன் மிகப்பெரியவன்) என்று (தக்பீர்) கூறலாயினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், "மக்களே! உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். மென்மையாக (மெதுவாக)க் கூறுங்கள். (ஏனெனில்), நீங்கள் காது கேட்காதவனையோ இங்கு இல்லாதவனையோ அழைப்பதில்லை. (மாறாகச்) செவியுறுவோனையும் அருகிலிருப்பவனையுமே அழைக்கிறீர்கள். அவன் உங்களுடனேயே இருக்கிறான்" என்று சொன்னார்கள்.
அப்போது நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னாலிருந்துகொண்டு, "லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்" (அல்லாஹ்வின் உதவியில்லாமல் யுக்தியுமில்லை; சக்தியுமில்லை) என்று கூறிக் கொண்டிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அப்துல்லாஹ் பின் கைஸே! உங்களுக்குச் சொர்க்கத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலத்தை நான் அறிவித்துத் தரட்டுமா?" என்று கேட்டார்கள். நான், "ஆம் (அறிவித்துத் தாருங்கள்), அல்லாஹ்வின் தூதரே!" என்று கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ""லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்" என்று சொல்லுங்கள்"என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
5238. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கள் (ஒரு பயணத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு மலைக் கணவாயில் சென்றுகொண்டிருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் ஒவ்வொரு கணவாயில் ஏறும்போதும் "லாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்" (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை; அல்லாஹ் மிகவும் பெரியவன்) என்று (உரத்த குரலில்) அழைக்கலானார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் காது கேட்காதவனையோ இங்கில்லாதவனையோ அழைக்கவில்லை. (எனவே, மெதுவாக அவனை அழையுங்கள்)" என்று சொன்னார்கள்.
பிறகு "அபூமூசா!" அல்லது "அப்துல்லாஹ் பின் கைஸே" (என்றழைத்து), "சொர்க்கத்தின் கருவூலங்களில் உள்ள ஒரு வார்த்தையை நான் உங்களுக்கு அறிவித்துத் தரட்டுமா?" என்று கேட்டார்கள். நான் "அது என்ன, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "(அந்த வார்த்தை) லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் (என்பதாகும்)" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூமூசா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தின்போது..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
- மேற்கண்ட ஹதீஸ் அபூமூசா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே காணப்படுகின்றன.
அத்தியாயம் : 48
5239. மேற்கண்ட ஹதீஸ் அபூமூசா (ரலி) அவர்களிடமிருந்தே வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒர் அறப்போருக்குச் சென்றோம்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. அதில் "நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவன் உங்களுடைய வாகனப் பிராணியின் கழுத்தைவிட உங்களுக்கு மிகவும் அருகிலிருக்கிறான்" என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது. அந்த அறிவிப்பில் "லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்" பற்றிய குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 48
5240. அபூமூசா அல்அஷ்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ""சொர்க்கத்தின் கருவூலங்களில் உள்ள ஒரு வார்த்தையை" அல்லது "சொர்க்கத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலத்தை" உங்களுக்கு அறிவித்துத் தரட்டுமா?" என்று கேட்டார்கள். நான் "ஆம் (அறிவியுங்கள்)" என்று சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அந்த வார்த்தை) லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் (என்பதாகும்)" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 48
5241. அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "தொழுகையில் (அத்தஹிய்யாத் இருப்பில்) நான் பிரார்த்திப்பதற்கு ஒரு பிரார்த்தனையை எனக்குக் கற்றுத்தாருங்கள்" என்று கேட்டேன். அப்போது "அல்லாஹும்ம இன்னீ ழலம்த்து நஃப்சீ ழுல்மன் கபீரன் (அல்லது கஸீரன்) வலா யஃக்ஃபிருத் துனூப இல்லா அன்த்த. ஃபஃக்ஃபிர்லீ மஃக்ஃபிரத்தம் மின் இந்திக்க வர்ஹம்னீ. இன்னக்க அன்த்தல் ஃகஃபூருர் ரஹீம்" என்று கூறுங்கள் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
(பொருள்: இறைவா! எனக்கு நானே பெருமளவில் (அல்லது "அதிகமாக") அநீதி இழைத்துக் கொண்டேன். உன்னைத் தவிர வேறெவரும் பாவங்களை மன்னிக்க முடியாது. எனவே, உன்னிடமிருந்து எனக்கு மன்னிப்பு வழங்குவாயாக! மேலும், எனக்குக் கருணை புரிவாயாக! நிச்சயமாக நீ பெரிதும் மன்னிப்பவனும் அதிகக் கருணையுடையவனும் ஆவாய்.)
இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூபக்ர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! நான் எனது தொழுகையிலும் எனது இல்லத்திலும் பிரார்த்திக்க ஒரு பிரார்த்தனையைக் கற்றுத்தாருங்கள்" என்று கேட்டேன்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. அவற்றில் "அதிகமாக (கஸீரன்) அநீதி இழைத்துக்கொண்டேன்" என்றே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 48
பாடம் : 14 குழப்பங்கள் (சோதனைகள்) முதலியவற்றிலிருந்து இறைவனிடம் பாதுகாப்புக் கோரல்.
5242. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு இறைவனிடம் வேண்டிப்) பிரார்த்தித்து வந்தார்கள்: அல்லாஹும்ம! ஃப இன்னீ அஊது பிக்க மின் ஃபித்னத்திந் நாரி, வ அதாபிந் நாரி, வ ஃபித்னத்தில் கப்ரி, வ அதாபில் கப்ரி, வ மின் ஷர்ரி ஃபித்னத்தில் ஃகினா, வ மின் ஷர்ரி ஃபித்னத்தில் ஃபக்ரி, வ அஊது பிக்க மின் ஷர்ரி ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜால். அல்லாஹும்மஃக்சில் கத்தாயாய பி மாயிஸ் ஸல்ஜி வல்பரத். வ நக்கி கல்பீ மினல் கத்தாயா கமா நக்கைத்தஸ் ஸவ்பல் அப்யள மினத் தனஸ். வ பாஇத் பைனீ வ பைன கத்தாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரிக்கி வல்மஃக்ரிப். அல்லாஹும்ம! ஃப இன்னீ அஊது பிக்க மினல் கசலி வல்ஹரமி வல்மஃஸமி வல் மஃக்ரம்."
(பொருள்: இறைவா! உன்னிடம் நான் நரகத்தின் சோதனையிலிருந்தும் நரகத்தின் வேதனையிலிருந்தும்,மண்ணறையின் சோதனையிலிருந்தும் மண்ணறையின் வேதனையிலிருந்தும், செல்வத்தின் சோதனையின் தீங்கிலிருந்தும் வறுமையின் சோதனையின் தீங்கிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்; (மகா பொய்யன்) மஸீஹுத் தஜ்ஜாலின் சோதனையின் தீங்கிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.
இறைவா! பனிக்கட்டி நீராலும் ஆலங்கட்டி நீராலும் என்னிலிருந்து என் பாவங்களைக் கழுவி விடுவாயாக! நீ வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்துவதைப் போன்று என் உள்ளத்தைத் தவறுகளிலிருந்து தூய்மைப்படுத்துவாயாக! கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே நீ ஏற்படுத்திய இடைவெளியைப் போன்று எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ இடைவெளியை ஏற்படுத்துவாயாக! இறைவா! சோம்பலிலிருந்தும் தள்ளாமையிலிருந்தும் பாவத்திலிருந்தும் கடனிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.)
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
பாடம் : 15 இயலாமை, சோம்பல் உள்ளிட்டவற்றிலிருந்து இறைவனிடம் பாதுகாப்புக் கோரல்.
5243. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக்க மினல் அஜ்ஸி வல்கசலி, வல்ஜுப்னி,வல்ஹரமி, வல்புக்ல். வ அஊது பிக்க மின் அதாபில் கப்ரி வ மின் ஃபித்னத்தில் மஹ்யா வல்மமாத்" என்று பிரார்த்தித்துவந்தார்கள்.
(பொருள்: இறைவா! உன்னிடம் நான் இயலாமையிலிருந்தும் சோம்பலிலிருந்தும் கோழைத்தனத்திலிருந்தும் தள்ளாமையிலிருந்தும் கருமித்தனத்திலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். மண்ணறையின் வேதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். வாழ்வின் சோதனையிலிருந்தும் மரணத்தின் சோதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.)
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "வாழ்வின் சோதனையிலிருந்தும் மரணத்தின் சோதனையிலிருந்தும் (வ மின் ஃபித்னத்தில் மஹ்யா வல்மமாத்)" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 48
5244. அனஸ் பின் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், (மேற்கண்ட) பல்வேறு அம்சங்களிலிருந்தும் கருமித்தனத்திலிருந்தும் காக்குமாறு இறைவனிடம் வேண்டினார்கள்.
அத்தியாயம் : 48
5245. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் "அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக்க மினல் புக்லி, வல்கசலி, வ அர்த லில் உமுரி, வ அதாபில் கப்ரி, வ ஃபித்னத்தில் மஹ்யா வல்மமாத்" எனப் பிரார்த்தித்து வந்தார்கள்.
(பொருள்: இறைவா! கருமித்தனத்திலிருந்தும், சோம்பலிலிருந்தும், தள்ளாத வயதிலிருந்தும், மண்ணறையின் வேதனையிலிருந்தும், வாழ்வின் சோதனையிலிருந்தும், இறப்பின் சோதனையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்.)
அத்தியாயம் : 48
பாடம் : 16 விதியின் கேடு, அழிவில் வீழ்வது உள்ளிட்டவற்றிலிருந்து இறைவனிடம் பாதுகாப்புக் கோரல்.
5246. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் விதியின் கேடு, அழிவில் வீழ்வது, எதிரிகள் (கைகொட்டிச்) சிரிக்கும் நிலைக்கு ஆளாவது, தாங்க முடியாத சோதனை ஆகியவற்றிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோரிவந்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அம்ர் அந்நாஜித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் காணப்படுகிறது: "இந்த நான்கில் ஒன்றை நான்தான் கூடுதலாக அறிவித்துவிட்டேனோ என்று சந்தேகப்படுகிறேன்" என சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 48
5247. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யாரேனும் (பயணத்தில்) ஓரிடத்தில் இறங்கித் தங்கிவிட்டுப் பின்னர் "அஊது பி கலிமாத்தில் லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா கலக்" என்று கூறிப் பிரார்த்தித்தால், அந்த இடத்திலிருந்து அவர் புறப்பட்டுச் செல்லும்வரை எதுவும் அவருக்குத் தீங்கிழைக்காது.
(பொருள்: அல்லாஹ்வின் முழுமையான சொற்களின் மூலம் அவனுடைய படைப்பினங்களின் தீங்கிலிருந்து நான் பாதுகாப்புக் கோருகிறேன்.)
இதை கவ்லா பின்த் ஹகீம் அஸ்ஸுலமிய்யா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
5248. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் (பயணத்தில்) ஓரிடத்தில் இறங்கித் தங்கும்போது. "அஊது பி கலிமாத்தில் லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா கலக" என்று கூறினால். அவர் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும்வரை அவருக்கு எதுவும் தீங்கிழைக்காது.
இதை கவ்லா பின்த் ஹகீம் அஸ்ஸுல மிய்யா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நேற்றிரவு என்னைத் தேள் ஒன்று கொட்டிவிட்டது. அதனால் நான் (நிம்மதியான தூக்கத்தை) இழந்துவிட்டேன்" என்று கூறினார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீ மாலைப் பொழுதை அடையும்போது, "அஊது பிகலி மாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா கலக்" என்று கூறியிருந்தால் அது உனக்குத் தீங்கிழைத்திருக்காது" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், ஒரு மனிதர் "அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தேள் கொட்டிவிட்டது" என்று கூறியதாக ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 48
பாடம் : 17 உறங்கச் செல்லும்போது படுக்கையில் கூற வேண்டியவை.
5249. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீ உன் படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்காக அங்கத் தூய்மை (உளூ) செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்துகொள். பிறகு உன் வலப் பக்கத்தில் சாய்ந்து படு. பிறகு "அல்லாஹும்ம! இன்னீ அஸ் லம்த்து வஜ்ஹீ இலைக்க, வ ஃபவ்வள்த்து அம்ரீ இலைக்க, வ அல்ஜஃத்து ழஹ்ரீ இலைக்க; ரஃக்பத்தன் வ ரஹ்பத்தன் இலைக்க. லா மல்ஜஅ வலா மன்ஜா மின்க்க இல்லா இலைக்க. ஆமன்த்து பி கித்தாபிக் கல்லதீ அன்ஸல்த்த. வபி நபிய்யிக்கல்லதீ அர்சல்த்த" என்று ஓதிக்கொள்.
(பொருள்: இறைவா! எனது முகத்தை உனக்குக் கீழ்ப்படியச் செய்துவிட்டேன். என் காரியம் அனைத்தையும் உன்னிடம் ஒப்படைத்துவிட்டேன். என் முதுகை உன்னளவில் சாய்த்து விட்டேன். உன்மீதுள்ள ஆவலிலும் அச்சத்திலும்தான் (இவற்றை நான் செய்தேன்). உன்னிடமிருந்து தப்பிக்கவும் ஒதுங்கிடவும் உன்னைத் தவிர வேறு போக்கிடமில்லை. நீ அருளிய உனது வேதத்தையும் நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நான் நம்பினேன்.)
இந்தப் பிரார்த்தனையை (இரவின்) இறுதிப் பேச்சாக ஆக்கிக்கொண்டு, அன்றைய இரவில் நீ இறந்துவிட்டால், (இஸ்லாம் எனும்) இயற்கை மரபில் நீ இறந்தவன் ஆவாய்.
இதன் அறிவிப்பாளரான பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் இவற்றை நினைவிலிருத்துவதற்காகத் திரும்ப ஓதிக்காட்டினேன். அப்போது ("நீ அனுப்பிய உன் நபியையும் நான் நம்பினேன்" என்பதற்குப் பதிலாக) "நீ அனுப்பிய உன் ரசூலையும் நான் நம்பினேன்" என்று நான் சொல்லிவிட்டேன். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ அனுப்பிய உன் நபியையும் நான் நம்பினேன் என்று சொல்வீராக" என (திருத்தி)க் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
ஆயினும் மன்சூர் (ரஹ்) அவர்களது (மேற்கண்ட) அறிவிப்பே முழுமையானதாகும். ஹுஸைன் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அவர் (இறக்காமல்) காலைப் பொழுதை அடைந்தாலும் நன்மையையே அடைந்துகொண்டார்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 48
5250. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், நீ இரவில் படுக்கைக்கு (உறங்க)ச் செல்லும்போது, "அல்லாஹும்ம! அஸ்லம்த்து நஃப்சீ இலைக்க, வ வஜ்ஜஹ்த்து வஜ்ஹீ இலைக்க, வ அல்ஜஃத்து ழஹ்ரீ இலைக்க, வ ஃபவ்வள்த்து அம்ரீ இலைக்க; ரக்ஃபத்தன் வ ரஹ்பத்தன் இலைக்க. லா மல்ஜஅ வலா மன்ஜா மின்க்க இல்லா இலைக்க, ஆமன்த்து பி கித்தாபிக்கல்லதீ அன்ஸல்த்த வபி ரசூலிக்கல்லதீ அர்சல்த்த" என்று சொல்லும்படி உத்தரவிட்டார்கள்.
"அவர் (இவ்வாறு பிரார்த்தித்துவிட்டு உறங்கும்போது) இறந்துவிட்டால் (இஸ்லாம் எனும்) இயற்கை மரபில் இறந்தவராவார்" என்றும் கூறினார்கள்.
(பொருள்: இறைவா! என்னை நான் உன்னிடம் ஒப்படைத்தேன். என் முகத்தை உன்னளவில் திருப்பிவிட்டேன். எனது முதுகை உன்னளவில் சாய்த்துவிட்டேன். என் காரியங்கள் அனைத்தையும் உன்னிடம் ஒப்படைத்துவிட்டேன். உன்மீதுள்ள அன்பிலும் அச்சத்திலும்தான் (இவற்றை நான் செய்தேன்). உன்னிடமிருந்து தப்பிக்கவும் ஒதுங்கிடவும் உன்னைத் தவிர வேறு போக்கிடம் இல்லை. நீ அருளிய உன்னுடைய வேதத்தையும் நீ அனுப்பிய உன் ரசூலையும் நான் நம்பினேன்.)
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் இப்னு பஷ்ஷார் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "இரவில்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 48
5251. மேற்கண்ட ஹதீஸ் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இன்ன மனிதரே! நீர் உமது படுக்கைக்குச் செல்லும்போது (இவ்வாறு சொல்வீராக...)" என்று கூறியதாக ஹதீஸ் ஆரம்பமாகிறது. ஆயினும் அதில், ("நீ அனுப்பிய உன்னுடைய ரசூலையும் நம்பினேன்" என்பதற்குப் பகரமாக) "நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நான் நம்பினேன்" என்று கூறியதாகவும், (இவ்வாறு பிராத்தித்துவிட்டு) அன்றிரவிலேயே நீ இறந்துவிட்டால் (இஸ்லாம் எனும்) இயற்கை மரபிலேயே இறந்தவன் ஆவாய். காலையில் (உயிருடன் விழித்து) எழுந்தால், (இந்தப் பிரார்த்தனைகளின்) நன்மைகளைப் பெற்றுக்கொள்வாய்" என்று கூறியதாகவும் இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இவ்வாறு பிரார்த்திக்குமாறு) ஒரு மனிதருக்கு உத்தரவிட்டார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. "நீ காலையில் (உயிருடன் விழித்து) எழுந்தால் (இந்தப் பிரார்த்தனைக்கான) நன்மையைப் பெற்றுக்கொள்வாய்" எனும் குறிப்பு காணப்படவில்லை.
அத்தியாயம் : 48
5252. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் உறங்கச் செல்லும்போது, "அல்லாஹும்ம! பிஸ்மிக்க அஹ்யா, வ பிஸ்மிக்க அமூத்து (இறைவா! உனது பெயராலேயே உயிர் பெறுகிறேன்; உனது பெயர் கூறியே இறக்கிறேன்.) என்று கூறுவார்கள். உறக்கத்திலிருந்து விழித்தெழும்போது, "அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹிந் நுஷூர் (அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனே நம்மை இறக்கச்செய்த பின்னர் நமக்கு உயிரூட்டினான். மேலும், அவனிடமே செல்ல வேண்டியுள்ளது.)" என்று கூறுவார்கள்.
அத்தியாயம் : 48
5253. அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "ஒருவர் உறங்கச் செல்லும்போது "அல்லஹும்ம! கலக்த்த நஃப்சீ, வ அன்த்த தவஃப்பாஹா, லக்க மமாத்துஹா வ மஹ்யாஹா, இன் அஹ்யய்த்தஹா ஃபஹ்ஃபழ்ஹா, வ இன் அமத்தஹா ஃபக்ஃபிர் லஹா, அல்லஹும்ம! இன்னீ அஸ்அலுக்கல் ஆஃபியா" (இறைவா! நீயே என் உயிரைப் படைத்தாய். நீயே அதனைக் கைப்பற்றிக்கொள்கிறாய். அதன் இறப்பும் வாழ்வும் உனக்கே உரியன. அதை நீ உயிரோடு விட்டுவைத்தால் அதை நீ காப்பாற்றுவாயாக! அதை நீ இறக்கச் செய்து விட்டால் அதற்கு மன்னிப்பு வழங்குவாயாக! இறைவா! உன்னிடம் நான் ஆரோக்கியத்தை வேண்டுகிறேன்) என்று கூறும்படி உத்தரவிட்டார்கள்.
அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர், "இதைத் தாங்கள் தங்கள் தந்தை உமர் (ரலி) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "உமர் (ரலி) அவர்களைவிடச் சிறந்தவரான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
5254. சுஹைல் பின் அபீஸாலிஹ் தக்வான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(எங்கள் தந்தை) அபூஸாலிஹ் தக்வான் (ரஹ்) அவர்கள், எங்களில் ஒருவர் உறங்கச் செல்லும் போது வலப் பக்கத்தில் சாய்ந்து படுத்துக்கொண்டு, "அல்லாஹும்ம! ரப்பஸ் ஸமாவாத்தி வ ரப்பல் அர்ளி வ ரப்பல் அர்ஷில் அழீம். ரப்பனா வ ரப்ப குல்லி ஷையின். ஃபாலிக்கல் ஹப்பி வந்நவா வ முன்ஸிலத் தவ்ராத்தி வல்இன்ஜீலி வல்ஃபுர்கான், அஊது பிக்க மின் ஷர்ரி குல்லி ஷையின். அன்த்த ஆகிதும் பி நாஸியத்திஹ், அல்லாஹும்ம! அன்த்தல் அவ்வலு; ஃப லைஸ கப்லக்க ஷைஉன், வ அன்த்தல் ஆகிரு; ஃப லைஸ பஅதக்க ஷைஉன். வ அன்த்தழ் ழாஹிரு; ஃப லைஸ ஃபவ்கக்க ஷைஉன், வ அன்த்தல் பாத்தினு; ஃப லைஸ தூனக்க ஷைஉன், இக்ளி அன்னா அத்தைன வ அஃக்னினா மினல் ஃபக்ர்"என்று கூறும்படி உத்தரவிடுவார்கள். மேலும் இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்ததாகவும் கூறுவார்கள்.
(பொருள்: இறைவா! வானங்களின் அதிபதியே! பூமியின் அதிபதியே! மகத்தான அரியணையின் அதிபதியே! எங்கள் இறைவா! அனைத்துப் பொருட்களின் அதிபதியே! தானிய வித்துகளையும் விதைகளையும் பிரி(த்து தாவர வர்க்கத்தை முளைப்பி)ப்பவனே! தவ்ராத், இன்ஜீல், ஃபுர்கான் (குர்ஆன்) ஆகிய வேதங்களை அருளியவனே!
அனைத்துப் பொருட்களின் தீங்கிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். அவற்றின் முன்நெற்றி ரோமங்களை நீயே பிடித்துள்ளாய். இறைவா! நீயே ஆரம்பமானவன்; உனக்கு முன்னர் வேறெதுவும் இல்லை. நீயே இறுதியானவன்; உனக்குப் பின்னர் வேறெதுவும் இல்லை. நீயே மேலானவன்; உனக்கு மேலே வேறொன்றுமில்லை. நீயே அடித்தளமானவன்; உனக்குக் கீழே வேறொன்றுமில்லை. எங்கள் கடன்களை நிறைவேற்றி வைப்பாயாக! வறுமையிலிருந்து காத்து எங்களைத் தன்னிறைவு கொள்ளச்செய்வாயாக!)
அத்தியாயம் : 48