4925. அபூஉசைத் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அன்சாரிகளின் கிளைக் குடும்பங்களில் சிறந்தது "பனுந் நஜ்ஜார்" குடும்பமாகும். பிறகு "பனூ அப்தில் அஷ்ஹல்" குடும்பமாகும். பிறகு "பனுல் ஹாரிஸ் பின் அல்கஸ்ரஜ்" குடும்பமாகும். பிறகு "பனூ சாஇதா" குடும்பமாகும். அன்சாரி கிளைக் குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் நன்மை உள்ளது" என்று கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளரான அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அபூஉசைத் (ரலி) அவர்கள், "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்மீது இட்டுக்கட்டுவேனா? நான் பொய்யுரைப்பவனாயிருந்தால், என் பனூசாஇதா குடும்பத்தாரையே முதலில் கூறியிருப்பேன்" என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறிய செய்தி சஅத் பின் உபாதா (ரலி) அவர்களுக்கு எட்டியபோது,அவர்கள் மன வேதனைப்பட்டார்கள். மேலும், "(பனூ சாஇதா குலத்தாராகிய) நாங்கள் நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டுவிட்டோம். என் கழுதையில் சேணம் பூட்டுங்கள்; நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் செல்லப்போகிறேன்" என்று கூறினார்கள்.
அப்போது அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் மகன் சஹ்ல் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கருத்துக்கு மறுப்புத் தெரிவிக்க நீங்கள் செல்லப் போகிறீர்களா? அல்லாஹ்வின் தூதர்தான் (இதைப் பற்றி) நன்கு அறிந்தவர்கள். (சிறப்பித்துக் கூறப்பட்ட) நான்கு குடும்பங்களில் நான்காவது குடும்பமாக நீங்கள் இருப்பது போதுமாகவில்லையா?" என்று கேட்டார்கள்.
உடனே சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்" என்று கூறிவிட்டுத் திரும்பிவிட்டார்கள். மேலும், தமது கழுதையை அவிழ்த்துவிடும்படியும் கட்டளையிட்டார்கள். அவ்வாறே அது அவிழ்த்துவிடப்பட்டது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஉசைத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அன்சாரிகளில் சிறந்தவர்கள் அல்லது அன்சாரிகளின் கிளைக் குடும்பங்களில் சிறந்தது..." என்று ஹதீஸ் ஆரம்பமாகி, கிளைக் குடும்பங்கள் தொடர்பான மேற்கண்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதில், சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் பற்றிய நிகழ்வு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 44
4926. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், முஸ்லிம்கள் திரளாகக் குழுமியிருந்த ஓர் அவையில், "அன்சாரிகளின் கிளைக் குடும்பங்களில் சிறந்ததைப் பற்றி உங்களுக்குச் சொல்லட்டுமா?" என்று கேட்டார்கள். மக்கள், "ஆம்; அல்லாஹ்வின் தூதரே!" என்று கூறினர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அவர்கள்) "பனூ அப்தில் அஷ்ஹல்" குடும்பத்தார் ஆவர்" என்றார்கள். மக்கள், "பிறகு யார், அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பிறகு "பனுந் நஜ்ஜார்" குடும்பத்தார்" என்றார்கள். மக்கள், "பிறகு யார், அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்க, "பிறகு "பனுல் ஹாரிஸ் பின் அல்கஸ்ரஜ்" குடும்பத்தார்" என்றார்கள்.
"பிறகு யார், அல்லாஹ்வின் தூதரே?" என்று மக்கள் கேட்டதற்கு, "பிறகு "பனூ சாஇதா" குடும்பத்தார்" என்று விடையளித்தார்கள். "பிறகு யார், அல்லாஹ்வின் தூதரே?" என்று மககள் கேட்க, "பிறகு அன்சாரி கிளைக் குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் நன்மை உள்ளது" என்று பதிலளித்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் குலத்தாரின் பெயரை நான்காவதாகக் கூறியதைக் கேட்டு சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் கோபத்துடன் எழுந்து, "நான்கு குடும்பங்களில் நாங்கள் தான் கடைசியா?" என்று கேட்டபடி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அது பற்றிப்) பேச முனைந்தார்கள்.
அப்போது அவர்களுடைய குலத்தைச் சேர்ந்த சிலர், "அமருங்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்கள் குடும்பத்தை நான்கு குடும்பங்களில் ஒன்றாகக் குறிப்பிட்டதே உங்களுக்குத் திருப்தியளிக்கவில்லையா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெயர் குறிப்பிடாமல் விட்ட குடும்பத்தாரின் எண்ணிக்கையே, பெயர் குறிப்பிட்ட குடும்பங்களின் எண்ணிக்கையைவிட அதிகமாகும்" என்று கூறினர்.
ஆகவே, சஅத் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அது குறித்துப்) பேசாமல் விலகிக்கொண்டார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
பாடம் : 45 அன்சாரிகளுடன் நல்லுறவு பாராட்டல்.
4927. அனஸ் பின் மாலிக் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் ஜரீர் பின் அப்தில்லாஹ் அல்பஜலீ (ரலி) அவர்களுடன் ஒரு பயணத்தில் சென்றேன். அவர்கள் எனக்குப் பணிவிடைகள் செய்துவந்தார்கள். நான் "(எனக்கு) நீங்கள் (பணிவிடைகள்) செய்ய வேண்டாம்" என்று அவர்களிடம் கூறினேன்.
அதற்கு ஜரீர் (ரலி) அவர்கள், "அன்சாரிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் செய்த (உயர்ந்த நன்மை) ஒன்றை நான் பார்த்திருக்கிறேன். (அன்றே) "அன்சாரிகளில் எவருடன் நான் சென்றாலும் அவருக்கு நான் பணிவிடைகள் செய்தே தீருவேன்" என்று சத்தியம் செய்துவிட்டேன்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் இப்னுல் முஸன்னா (ரஹ்), இப்னு பஷ்ஷார் (ரஹ்) ஆகியோரின் அறிவிப்புகளில், "ஜரீர் (ரலி) அவர்கள் அனஸ் (ரலி) அவர்களைவிடப் பெரியவராக இருந்தார்கள்" என்றும், இப்னு பஷ்ஷார் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அனஸ் (ரலி) அவர்களைவிட வயதில் மூத்தவராக இருந்தார்கள்" என்றும் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 44
பாடம் : 46 நபி (ஸல்) அவர்கள் "ஃகிஃபார்" மற்றும் "அஸ்லம்" குலத்தாருக்காகச் செய்த பிரார்த்தனை.
4928. அபூதர் அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஃகிஃபார் குலத்தாருக்கு அல்லாஹ் மன்னிப்பு வழங்குவானாக. அஸ்லம் குலத்தாரை அல்லாஹ் அமைதி காணச்செய்வானாக" என்று பிரார்த்தித்தார்கள்.
அத்தியாயம் : 44
4929. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "நீங்கள் உங்கள் (ஃகிஃபார்) குலத்தாரிடம் சென்று, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அஸ்லம் குலத்தாரை அல்லாஹ் அமைதி காணச்செய்வானாக! ஃகிஃபார் குலத்தாருக்கு அல்லாஹ் மன்னிப்பு வழங்குவானாக!" எனப் பிரார்த்தித்தார்கள் என்று கூறுங்கள்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூதர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4930. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "அஸ்லம் குலத்தாரை அல்லாஹ் அமைதி காணச்செய்வானாக. ஃகிஃபார் குலத்தாருக்கு அல்லாஹ் பாவ மன்னிப்பு அருள்வானாக" என்று பிரார்த்தித்தார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
இதே ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்கள் வாயிலாகவும் ஏழு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4931. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அஸ்லம் குலத்தாருக்கு அல்லாஹ் அமைதியை வழங்கிவிட்டான். ஃகிஃபார் குலத்தாருக்கு அல்லாஹ் பாவமன்னிப்பு அருளிவிட்டான். இவ்வாறு நான் சொல்லவில்லை. வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்தான் சொன்னான்" என்றார்கள்.
அத்தியாயம் : 44
4932. குஃபாஃப் பின் ஈமா அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரு தொழுகையில், "இறைவா! பனூ லிஹ்யான், ரிஅல், தக்வான் ஆகியோரைச் சபிப்பாயாக! உஸைய்யா குலத்தார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறுசெய்துவிட்டனர். ஃகிஃபார் குலத்தாருக்கு அல்லாஹ் பாவமன்னிப்பு வழங்குவானாக! அஸ்லம் குலத்தாரை அல்லாஹ் அமைதி காணச் செய்வானாக!" என்று பிரார்த்தித்தார்கள்.
அத்தியாயம் : 44
4933. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஃகிஃபார் குலத்தாருக்கு அல்லாஹ் பாவமன்னிப்பு வழங்குவானாக! அஸ்லம் குலத்தாரை அல்லாஹ் அமைதி காணச்செய்வானாக! உஸைய்யா குலத்தார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறுசெய்துவிட்டனர்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஸாலிஹ் மற்றும் உசாமா (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி இவ்வாறு கூறினார்கள்" என்று காணப்படுகிறது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
பாடம் : 47 ஃகிஃபார், அஸ்லம், ஜுஹைனா, அஷ்ஜஉ, முஸைனா, தமீம், தவ்ஸ், தய்யி ஆகிய குலத்தாரின் சிறப்புகள்.
4934. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அன்சாரிகளும், முஸைனா குலத்தாரும், ஜுஹைனா குலத்தாரும், ஃகிஃபார் குலத்தாரும், அஷ்ஜஉ குலத்தாரும், பனூ அப்தில்லாஹ் குலத்தில் இருப்போருமே (இஸ்லாத்தை, அதன் ஆரம்பக் கட்டத்திலேயே தழுவிய காரணத்தால்) என் சிறப்பு உதவியாளர்கள் ஆவர்; மற்றவர்கள் அல்லர். அவர்களுக்கு அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே பொறுப்பாளர்கள் ஆவர். - இதை அபூஅய்யூப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 44
4935. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குறைஷியரும், அன்சாரிகளும், முஸைனா குலத்தாரும், ஜுஹைனா குலத்தாரும், அஸ்லம் குலத்தாரும், ஃகிஃபார் குலத்தாரும், அஷ்ஜஉ குலத்தாரும் என் சிறப்பு உதவியாளர்கள் ஆவர். அவர்களுக்கு அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் அன்றி பொறுப்பாளர்கள் வேறெவரும் இலர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் சில குலத்தார் குறித்து அறிவிப்பாளர் சஅத் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்கள் கூறுகையில் "நான் அறிந்தவரையில் இவ்வாறு தான்" என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 44
4936. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அஸ்லம், ஃகிஃபார், முஸைனா, "ஜுஹைனா குலத்தில் இருப்போர்" அல்லது ஜுஹைனா ஆகிய குலங்கள், பனூ தமீம்,பனூ ஆமிர் மற்றும் ஒன்றுக்கு ஒன்று நட்புறவு கொண்டிருந்த அசத் மற்றும் ஃகதஃபான் குலங்கள் ஆகியவற்றைவிடச் சிறந்தவை ஆகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4937. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! ஃகிஃபார், அஸ்லம், "முஸைனா", அல்லது "முஸைனா குலத்தில் இருப்போர்", "ஜுஹைனா குலத்தில் இருப்போர்" அல்லது "ஜுஹைனா" ஆகிய குலங்கள் மறுமை நாளில் அல்லாஹ்விடம் அசத், தய்யி, ஃகதஃபான் ஆகிய குலங்களைவிடச் சிறந்தவையாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4938. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அஸ்லம் குலத்தாரும், ஃகிஃபார் குலத்தாரும், "முஸைனா மற்றும் ஜுஹைனா குலத்தாரில் சில குடும்பங்களும்"அல்லது "ஜுஹைனா மற்றும் முஸைனா குலத்தாரில் சில குடும்பங்களும்" மறுமை நாளில் அல்லாஹ்விடம் அசத், ஃகதஃபான், ஹவாஸின், தமீம் ஆகிய குலங்களைவிடச் சிறந்தவை ஆகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4939. அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த) அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ஹஜ் பயணிகளின் பொருட்களைக் களவாடிய அஸ்லம், ஃகிஃபார், முஸைனா ஆகிய குலங்கள்தான் தங்களிடம் (வந்து இஸ்லாத்தைக் கடைப்பிடிப்பதாக) வாக்குறுதி அளித்துள்ளனர்" என்று கூறினார்கள். (ஜுஹைனா குலத்தையும் குறிப்பிட்டார்கள் என்றே நான் கருதுகிறேன் என அறிவிப்பாளர் முஹம்மத் (ரஹ்) அவர்களே ஐயத்துடன் அறிவிக்கிறார்).
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அஸ்லம், ஃகிஃபார், முஸைனா (ஜுஹைனாவையும் குறிப்பிட்டார்கள் என்றே நான் கருதுகிறேன்) ஆகிய குலத்தார், பனூ தமீம், பனூ ஆமிர், அசத், ஃகதஃபான் ஆகிய குலத்தாரைவிடச் சிறந்தவர்களாக இருந்தாலுமா அவர்கள் நஷ்டமடைந்து இழப்புக்குள்ளாகிவிட்டனர், சொல்லுங்கள்" என்று கேட்டார்கள்.
அதற்கு அக்ரஉ (ரலி) அவர்கள் "ஆம்" (இழப்புக்குள்ளாகிவிட்டார்கள்) என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த ஏகயிறை)வன் மீதாணையாக! அவர்கள் இவர்களைவிட மிகவும் சிறந்தவர்களே" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூபக்ரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "ஜுஹைனா குலத்தாரும்" என்று உறுதிபடவே இடம்பெற்றுள்ளது. "ஜுஹைனா குலத்தாரையும் குறிப்பிட்டார்கள் என்று நான் கருதுகிறேன்" என்று (ஐயத்துடன்) இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 44
4940. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அஸ்லம், ஃகிஃபார், முஸைனா, ஜுஹைனா ஆகிய குலத்தார் பனூ தமீம், பனூ ஆமிர் மற்றும் நட்புறவுக் குலங்களான பனூ அசத், ஃகதஃபான் ஆகியவற்றைவிடச் சிறந்தவர்களாவர்.
இதை அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூபக்ரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4941. அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"ஜுஹைனா, அஸ்லம், ஃகிஃபார் ஆகிய குலங்கள், பனூ தமீம், பனூ அப்தில்லாஹ் பின் ஃகதஃபான், ஆமிர் பின் ஸஅஸஆ ஆகிய குலங்களைவிடச் சிறந்தவையாக இருந்தாலுமா, கூறுங்கள்?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரத்த குரலில் கேட்டார்கள்.
அதற்கு மக்கள், "அப்போது (பனூ தமீம் உள்ளிட்ட) அவர்கள் நஷ்டமடைந்துவிட்டார்கள்; இழப்புக்குள்ளாகிவிட்டார்கள்,அல்லாஹ்வின் தூதரே!" என்று பதிலளித்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) "(ஆம்;) அவர்கள் இவர்களைவிடச் சிறந்தவர்களே" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபூகுரைப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (குலங்கள் வரிசையில் சற்று முன்பின்னாக) "ஜுஹைனா, முஸைனா, அஸ்லம், ஃகிஃபார் ஆகிய குலத்தார்..." என்று ஆரம்பமாகிறது.
அத்தியாயம் : 44
4942. அதீ பின் ஹாத்திம் அத்தாயீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (ஒரு முறை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் சென்றபோது அவர்கள் என்னிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகத்தையும் அவர்களுடைய தோழர்களின் முகங்களையும் (மகிழ்ச்சியால்) வெண்மையாக்கிய முதலாவது தர்மப் பொருட்கள், தய்யீ குலத்தார் அளித்ததாகும். அதை நீங்கள் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்தீர்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 44
4943. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
துஃபைல் பின் அம்ர் அத்தவ்ஸீ (ரலி) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் (நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! (எங்கள்) தவ்ஸ் குலத்தார் (இஸ்லாத்தை ஏற்க) மறுத்து நிராகரித்துவிட்டார்கள். அவர்களுக்கெதிராகப் பிரார்த்தியுங்கள்" என்று கேட்டுக்கொண்டனர்.
அப்போது "தவ்ஸ் குலத்தார் அழிந்தனர்" என்று கூறப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், "இறைவா! தவ்ஸ் குலத்தாரை நல்வழியில் செலுத்துவாயாக! அவர்களை (எம்மிடம்) கொண்டுவந்து சேர்ப்பாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.
அத்தியாயம் : 44
4944. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ தமீம் குலத்தார் பற்றிக் கூறிய மூன்று விஷயங்களைக் கேட்டதிலிருந்து நான் அ(க் குலத்த)வர்களை எப்போதும் நேசிக்கலானேன்.
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர்கள் (பனூ தமீம் குலத்தார்) என் சமுதாயத்தாரிலேயே மிகக் கடுமையாக தஜ்ஜாலை எதிர்ப்பார்கள்" என்று சொன்னார்கள்.
(ஒரு முறை) பனூ தமீம் குலத்தாரின் தர்மப் பொருள்கள் வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவை எங்கள் இனத்தாரின் தர்மப் பொருட்கள்" என்று கூறினார்கள்.
(ஒரு முறை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் பனூ தமீம் குலத்தாரின் பெண் போர்க் கைதி ஒருவர் இருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம், "நீ இப்பெண்ணை விடுதலை செய்துவிடு. ஏனெனில், இவள் இஸ்மாயீல் (அலை) அவர்களின் சந்ததிகளில் ஒருத்தி" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ தமீம் பற்றிக் கூறிய மூன்று விஷயங்களைக் கேட்டதிலிருந்து நான் எப்போதும் அவர்களை நேசிக்கலானேன்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே காணப்படுகின்றன.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ தமீம் குலத்தாரின் மூன்று பண்புகளைக் கூறக் கேட்டதன் பின்னர் அவர்களை எப்போதும் நான் நேசித்துக் கொண்டிருக்கிறேன்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.
மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. ஆயினும், அதில் "மக்களிலேயே போர்க்களங்களில் அறப்போர் புரிவதில் அவர்கள் மிகவும் கடுமையானவர்கள்" என்று (பொதுவாகவே) இடம்பெற்றுள்ளது. தஜ்ஜாலைப் பற்றிய குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 44