பாடம் : 25 நபி (ஸல்) அவர்களின் உருவத் தோற்றமும் அவர்கள் அழகிய முகஅமைப்புக் கொண்டவர்களாய் இருந்தார்கள் என்பதும்.
4663. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நடுத்தர உயரமுள்ள மனிதராகவும் (பரந்த முதுகும், விரிந்த மார்பும் அமைந்து) இரு தோள்களுக்கிடையே அதிக இடைவெளி உள்ளவர்களாகவும் இருந்தார்கள். இரு காதுகளின் சோனையை எட்டும் அளவுக்குத் தலைமுடி கொண்டவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் சிவப்பு நிற அங்கி அணிந்திருந்தார்கள். (அந்த ஆடையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைவிட அழகான எவரையும் எப்போதும் நான் கண்டதேயில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4664. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைவிட நீண்ட முடிவைத்து, சிவப்பு நிற அங்கி அணிந்திருந்த அழகான ஒருவரை நான் கண்டதேயில்லை. அவர்களது தலைமுடி தோள்களைத் தொட்டுக்கொண்டிருந்தது. (விரிந்த முதுகும் பரந்த மார்பும் கொண்டு) அவர்கள் இருதோள்களுக்கிடையே அதிக இடைவெளி உள்ளவர்களாக இருந்தார்கள். அவர்கள் அதிக உயரமுடையவராகவும் இருக்கவில்லை; குட்டையானவராகவும் இருக்கவில்லை. (நடுத்தர உயரமுடையவராகவே இருந்தார்கள்).
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபூகுரைப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (அதிகமான) தலைமுடி இருந்தது" என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 43
4665. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே மிக அழகான முகம் உடையவர்களாகவும் அழகான உருவ அமைப்புக் கொண்டவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் ஒரேயடியாக உயரமானவராகவும் இருக்கவில்லை;குட்டையானவராகவும் இருக்கவில்லை.
அத்தியாயம் : 43
பாடம் : 26 நபி (ஸல்) அவர்களது தலைமுடியின் நிலை.
4666. கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தலைமுடி எப்படி இருந்தது?"என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அவர்களது தலைமுடி, அலையலையானதாக இருந்தது. சுருள் முடியாகவும் இல்லை; படிந்த முடியாகவும் இல்லை. அது அவர்களது காது மடல்களுக்கும் தோளுக்கும் இடையே தொங்கிக்கொண்டிருந்தது" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 43
4667. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தலைமுடி (சில வேளைகளில்) அவர்களின் தோள்களைத் தொட்டுக்கொண்டிருந்தது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4668. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தலைமுடி (சில வேளைகளில்) இரு காது மடல்களின் பாதிவரை இருந்தது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
பாடம் : 27 நபி (ஸல்) அவர்களின் வாய், கண்கள், குதிகால்கள் ஆகியவற்றின் நிலை.
4669. ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விசாலமான வாயும் விரிந்த கண்ணும் மெலிந்த குதிகால்களும் உடையவர்களாக இருந்தார்கள்" என்று ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதைத் தாம் கேட்டதாக சிமாக் பின் ஹர்ப் (ரஹ்) அவர்கள் தெரிவித்தார்கள்.
நான் சிமாக் (ரஹ்) அவர்களிடம், "விசாலமான வாய் ("ளலீஉல் ஃபம்") என்றால் என்ன?" என்று கேட்டேன். அவர்கள் "பெரிய வாய்" என்றார்கள். "விரிந்த கண் ("அஷ்கலுல் ஐன்") என்றால் என்ன?" என்று கேட்டதற்கு "நீளமான கண் பிளவு" என்றார்கள்.
"மெலிந்த குதிகால்கள் ("மன்ஹூசுல் அகிப்") என்றால் என்ன?" என்று கேட்டதற்கு, "குதிகாலில் சிறிதளவு சதைப்பற்று காணப்படுவது" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
பாடம் : 28 நபி (ஸல்) அவர்கள் வெண்ணிறம் கொண்டவராகவும் கலையான முகமுடையவராகவும் இருந்தார்கள்.
4670. சயீத் பின் இயாஸ் அல்ஜுரைரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபுத்துஃபைல் (ரலி) அவர்களிடம், "நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்திருக்கிறீர்களா?"என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம்; அவர்கள் வெண்ணிறம் கொண்டவர்களாகவும் களையான முகமுடையவராகவும் இருந்தார்கள்" என்று பதிலளித்தார்கள்.
முஸ்லிம் பின் அல்ஹஜ்ஜாஜ் (ஆகிய நான்) கூறுகிறேன்:
அபுத்துஃபைல் (ரலி) அவர்கள் (ஹிஜ்ரீ) நூறாம் ஆண்டில் இறந்தார்கள்; அவர்களே நபித்தோழர்களில் இறுதியாக இறந்தவர் ஆவார்.
அத்தியாயம் : 43
4671. சயீத் பின் இயாஸ் அல்ஜுரைரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(நபித்தோழர்களில் இறுதியாக உயிர் வாழ்ந்த) அபுத்துஃபைல் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நான் பார்த்திருக்கிறேன்; இந்தப் பூமியின்மீது அவர்களைப் பார்த்தவர் என்னைத் தவிர வேறெந்த மனிதரும் (இப்போது உயிருடன்) இல்லை" என்று கூறினார்கள்.
அவர்களிடம் நான், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை எவ்வாறு கண்டீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெண்ணிறம் கொண்டவர்களாகவும் கலையான தோற்றமுடையவராகவும் நடுத்தரமான உடல்வாகு கொண்டவராகவும் இருந்தார்கள்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 43
பாடம் : 29 நபி (ஸல்) அவர்களின் தலையிலிருந்த நரைமுடி.
4672. முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது நரை முடிக்குச்) சாயம் பூசியதுண்டா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தலையில் நரை எதையும் பார்க்கவில்லை; இவ்வளவு தவிர" என்று கூறினார்கள். (அவை மிகவும் குறைவானவை என்பதைப் போன்று அறிவிப்பாளர் சைகை செய்தார் என இப்னு இத்ரீஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.)
மேலும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோர் தம் நரைமுடிக்கு மருதாணி இலையாலும் "கத்தம்" (யமன் நாட்டு மூலிகைச்) செடியின் இலையாலும் சாயமிட்டுவந்தனர்" என்றும் அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4673. முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தலைமுடிக்குச்) சாயம் பூசியிருந்தார்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "சாயம் பூசுகின்ற அளவுக்கு (நரை முடிகள்) அவர்களுக்கு இல்லை. அவர்களது தாடியில் மட்டுமே சில வெள்ளை முடிகள் இருந்தன" என்று கூறினார்கள்.
அவர்களிடம், "அபூபக்ர் (ரலி) அவர்கள் சாயம் பூசியிருந்தார்களா?" என்று கேட்டேன். அதற்கு, "ஆம்; மருதாணி இலையாலும் "கத்தம்" (யமன் நாட்டு மூலிகைச்) செடியின் இலையாலும் (சாயம் பூசியிருந்தார்கள்)" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 43
4674. முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சாயம் பூசியிருந்தார்களா?"என்று கேட்டேன். அதற்கு, "ஒரு சில நரைமுடிகளையே கண்டார்கள். (எனவே, சாயம் பூசவில்லை)" என்று அனஸ் பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 43
4675. ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், "நபி (ஸல்) அவர்கள் (தமது நரைமுடிக்குச்) சாயம் பூசியதுண்டா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "நபி (ஸல்) அவர்களது தலையிலிருந்த வெள்ளை முடிகளை நான் நினைத்திருந்தால் எண்ணிக் கணக்கெடுத்திருக்க முடியும். நபி (ஸல்) அவர்கள் சாயம் பூசியதில்லை. (ஆனால்,) அபூபக்ர் (ரலி) அவர்கள் மருதாணி இலையாலும் "கத்தம்" (யமன் நாட்டு மூலிகைச்) செடியின் இலையாலும் சாயம் பூசியிருந்தார்கள். உமர் (ரலி) அவர்களும் மருதாணி இலையால் நன்கு சாயம் பூசியிருந்தார்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 43
4676. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருவர் தம் தலையிலும் தாடியிலும் உள்ள நரைமுடிகளைப் பிடுங்குவது வெறுக்கப்பட்டதாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நரைமுடிக்குச்) சாயம் பூசியதில்லை. அவர்களது (கீழுதட்டின் அடியிலுள்ள) குறுந்தாடியிலும் நெற்றிப் பொட்டுகளிலுள்ள முடியிலும்தான் வெண்மை இருந்தது. தலையில் ஆங்காங்கே ஒரு சில முடிகளே நரைத்திருந்தன.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4677. அபூஇயாஸ் முஆவியா பின் குர்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அனஸ் (ரலி) அவர்களிடம், "நபி (ஸல்) அவர்களது (தலையில்) நரைமுடி இருந்ததா?" என்பது பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "அவர்களை அல்லாஹ் நரைமுடியால் அலங்கோலப்படுத்தவில்லை" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4678. அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது (முகத்தில்) இந்த இடத்தில் வெள்ளை முடி இருந்ததை நான் கண்டேன்" என்று கூறினார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸுஹைர் பின் முஆவியா (ரஹ்) அவர்கள் தமது விரல் ஒன்றைத் தமது கீழுதட்டிலுள்ள குறுந்தாடியின் மீது வைத்து சைகை செய்து காட்டினார்கள்.
அப்போது அவர்களிடம், "அன்றைய தினம் நீங்கள் யாரைப் போன்று இருந்தீர்கள்? (அன்று உங்களுக்கு என்ன வயதிருக்கும்)?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள், "அப்போது நான் அம்புக்கு இறகு பொருத்துவேன். (இது போன்றவற்றைச் செய்யும் அளவுக்கு விவரமுடைய வயதுள்ளவனாக இருந்தேன்)" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4679. அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் வெண்ணிறமுடையவர்களாகவும் முதுமை அடைந்தவர்களாகவும் இருந்தார்கள். (நபியவர்களின் பேரர்) ஹசன் பின் அலீ (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுக்கு (தோற்றத் தில்) ஒத்திருப்பார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஜுஹைஃபா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "வெண்ணிறமுடையவர்களாகவும் முதுமை அடைந்தவர்களாகவும் இருந்தார்கள்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 43
4680. சிமாக் பின் ஹர்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களின் நரைமுடி பற்றிக் கேட்கப் பட்டது. அதற்கு அவர்கள், "நபியவர்கள் தமது தலையில் எண்ணெய் தேய்த்திருந்தால் அவர்களது தலையிலிருந்து ஒருசில நரைமுடிகூடத் தென்படாது; அவர்கள் எண்ணெய் தேய்த்திருக்காவிட்டால் சில நரைமுடி தென்படும்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 43
4681. சிமாக் பின் ஹர்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தலை மற்றும் தாடியின் முன்பகுதி பழுப்பேறி (வெண்மையாகி) இருந்தது. அவர்கள் தலைக்கு எண்ணெய் தேய்த்திருந்தால் அந்த வெண்மை தென்படாது. அவர்கள் (எண்ணெய் தேய்க்காமல்) பரட்டை தலையுடன் இருந்தால் அந்த வெண்மை தென்படும். அவர்களது தாடியில் அதிகமான முடிகள் இருந்தன" என்று கூறினார்கள்.
அப்போது (அங்கிருந்த) ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் வாளைப் போன்று (மின்னிக்கொண்டு நீண்டதாக) இருந்ததா?" என்று கேட்டார். ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் (அதை மறுத்து), "இல்லை; அவர்களது முகம் சூரியனைப் போன்றும் சந்திரனைப் போன்றும் இருந்தது; வட்டமானதாக இருந்தது. அவர்களது முதுகில் தோள்பட்டை அருகில் நபித்துவ முத்திரையை நான் கண்டேன். அது புறா முட்டை போன்று அவர்களது உடலின் நிறத்திலேயே இருந்தது" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 43
பாடம் : 30 நபி (ஸல்) அவர்களது உடலில் நபித்துவ முத்திரை இருந்தது என்பதற்கான சான்றும், அதன் தன்மையும், அவர்களது உடலில் அது அமைந்திருந்த இடமும்.
4682. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முதுகில் (நபித்துவ) முத்திரை இருந்ததை நான் பார்த்தேன். அது புறா முட்டை போன்று இருந்தது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 43