4613. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது (அல்கவ்ஸர்) தடாகத்தின் இரு கரைகளுக்கிடையிலான தொலைதூரம், (யமனிலுள்ள) "ஸன்ஆ"வுக்கும் மதீனாவுக்கும் இடையேயுள்ள தொலைதூரம் போன்றதாகும்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4614. மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், (ஸன்ஆவுக்கும் மதீனாவுக்கும் இடையேயுள்ள தொலைதூரம் போன்றதாகும்.) அல்லது மதீனாவுக்கும் அம்மானுக்கும் இடையேயுள்ள தொலைதூரம் போன்றதாகும் என ஐயப்பாடுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. அபூ அவானா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "எனது (அல்கவ்ஸர்) தடாகத்தின் இருகரைகளுக்கும் இடையேயுள்ள தொலைதூரம்..."என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 43
4615. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அத்தடாகத்தில் விண்மீன்களின் எண்ணிக்கை அளவுக்குப் பொன்னாலும் வெள்ளியாலுமான கோப்பைகள் காணப்படும்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அதன் கோப்பைகள் விண்மீன்களின் எண்ணிக்கையைவிட அதிகமானவையாகும்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 43
4616. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் உங்களுக்கு முன்பே ("அல்கவ்ஸர்" எனும்) அத்தடாகத்தினருகில் உங்களுக்காகக் காத்திருப்பேன். அதன் இரு ஓரங்களுக்கு இடையேயுள்ள தூரம், (யமனிலுள்ள) "ஸன்ஆ"வுக்கும் "அய்லா"வுக்கும் இடையே உள்ள தூரத்தைப் போன்றதாகும். அதிலுள்ள கோப்பைகள் (எண்ணிக்கையில்) விண்மீன்களைப் போன்றவையாகும்.
இதை ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 43
4617. ஆமிர் பின் சஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் என் அடிமை நாஃபிஉ மூலம் ஜாபிர் பின சமுரா (ரலி) அவர்களுக்கு "தாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற ஹதீஸ் ஒன்றை எனக்குத் தெரிவியுங்கள்" என்று கடிதம் எழுதினேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் உங்களுக்கு முன்பே சென்று (உங்களுக்கு நீர் புகட்டக்) காத்திருப்பேன்" என்று கூறியதைக் கேட்டுள்ளேன்" என்று பதில் கடிதம் எழுதினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
பாடம் : 10 உஹுதுப் போர் நாளில் நபி (ஸல்) அவர்களுக்காக (வானவர்கள்) ஜிப்ரீல் (அலை), மீக்காயீல் (அலை) ஆகியோர் (எதிரிகளுடன்) போரிட்டது.
4618. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உஹுதுப் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வலப் பக்கமும் இடப் பக்கமும் வெண்ணிற ஆடைகள் அணிந்த இரு மனிதர்களை -அதாவது ஜிப்ரீல் (அலை), மீக்காயீல் (அலை) ஆகியோரை- நான் பார்த்தேன். அதற்கு முன்போ அதற்குப் பின்போ அவ்விருவரையும் நான் பார்த்ததில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4619. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உஹுதுப் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வலப் பக்கமும் இடப் பக்கமும் வெண்ணிற ஆடைகள் அணிந்த இரு மனிதர்களை நான் பார்த்தேன். அவ்விரு மனிதர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காகக் கடுமையாகப் போரிட்டுக் கொண்டிருந்தார்கள். அதற்கு முன்போ அதற்குப் பின்போ அவ்விருவரையும் நான் பார்த்ததில்லை.
அத்தியாயம் : 43
பாடம் : 11 நபி (ஸல்) அவர்களின் வீரமும் அறப்போருக்காக அவர்கள் முன்னே சென்றதும்.
4620. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (குணத்திலும் தோற்றத்திலும்) மக்களிலேயே மிகவும் அழகானவர்களாகவும் மக்களிலேயே அதிகக் கொடைகுணம் கொண்டவர்களாகவும் மக்களிலேயே அதிக வீரமுடையவர்களாகவும் இருந்தார்கள்.
ஒரு (நாள்) இரவு மதீனவாசிகள், (எதிரிகள் படையெடுத்து வருவதாகக் கேள்விப்பட்டு) பீதியுற்றார்கள். சப்தம் வந்த திசையை நோக்கி மக்களில் சிலர் நடந்தனர். (உண்மை நிலை அறிய) அத்திசையை நோக்கி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்பே சென்று விட்டிருந்தார்கள். பிறகு அவர்கள் தமது கழுத்தில் வாளைத் தொங்கவிட்டபடி அபூதல்ஹா (ரலி) அவர்களது (சேணம் பூட்டப்படாத) வெற்றுடலான குதிரையின்மீது அமர்ந்தவண்ணம் திரும்பி வந்து மக்களைச் சந்தித்து, "பீதியடையாதீர்கள்; பீதியடையாதீர்கள்" என்று (மக்களைப் பார்த்துச்) சொன்னார்கள்.
பிறகு "(அலை வீசும்) கடலாகவே (தங்கு தடையின்றி ஓடக்கூடியதாகவே) இக்குதிரையை நாம் கண்டோம்" அல்லது "இக்குதிரை ஒரு கடலாகும்" என்று சொன்னார்கள். (அதற்கு முன்னர்) அக்குதிரை மெதுவாக ஓடக்கூடியதாகவே இருந்தது.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4621. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மதீனாவில் (எதிரிகள் படையெடுத்து வருவதாக வதந்தி பரவி மக்களிடையே) பீதி ஏற்பட்டது. நபி (ஸல்) அவர்கள் அபூதல்ஹா (ரலி) அவர்களுக்குரிய "மன்தூப்" எனப்படும் குதிரை ஒன்றை இரவல் வாங்கி, (உண்மை நிலையைக் கண்டறிய எதிரிகள் வருவதாகச் சொல்லப்பட்ட திசையில்) அக்குதிரையிலேறிச் சென்றார்கள்.
பிறகு திரும்பி வந்து "பீதியூட்டும் எதையும் நாம் காணவில்லை. இக்குதிரையை (தொடர்ந்து அலை வீசும்) கடலாகவே (தங்குதடையின்றி ஓடக்கூடியதாகவே) நாம் கண்டோம்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் இப்னு ஜஅஃபர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அபூதல்ஹா (ரலி) அவர்களுக்குரிய" என்பதற்குப் பதிலாக "எங்களுக்குரிய குதிரை" ஒன்றை இரவல் வாங்கினார்கள் என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 43
பாடம் : 12 மக்களிலேயே நபி (ஸல்) அவர்கள், தொடர்ந்து வீசும் (மழைக்) காற்றை விட அதிகமாகச் செல்வங்களை வாரி வழங்கக்கூடியவர்களாக இருந்தார்கள்.
4622. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே செல்வங்களை அதிகமாக வாரி வழங்கக்கூடியவர்களாக இருந்தார்கள். அவர்கள் ரமளான் மாதத்தில் மேன்மேலும் அதிகமாக வாரி வழங்குவார்கள். (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஒவ்வோர் ஆண்டும் ரமளான் மாதத்தில் (ஒவ்வோர் இரவிலும்) அந்த மாதம் முடியும்வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்திப்பது வழக்கம். அப்போது அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள். அவ்வாறு ஜிப்ரீல் தம்மைச் சந்திக்கும்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொடர்ந்து வீசும் (மழைக்) காற்றைவிட அதிகமாகச் செல்வங்களை வாரி வழங்குவார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
பாடம் : 13 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மக்களிலேயே மிகவும் அழகான பண்புகள் கொண்டவர்களாகத் திகழ்ந்தார்கள்.
4623. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பத்து ஆண்டுகள் பணிவிடை செய்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் என்னை (மனம் வேதனைப்படும்படி) "ச்சீ" என்றோ "இதை ஏன் செய்தாய்?" என்றோ, "நீ இப்படிச் செய்திருக்கக் கூடாதா?" என்றோ எதற்காகவும் அவர்கள் (கடிந்து) சொன்னதில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபுர்ரபீஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "பணிவிடை செய்பவர் செய்ய வேண்டிய ஒரு செயலில் ("ச்சீ"என்றோ, "இதை ஏன் செய்தாய்?" என்றோ அவர்கள் கேட்டதில்லை)" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது. மேலும், "அல்லாஹ்வின் மீதாணையாக!" எனும் குறிப்பு அதில் இல்லை.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4624. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது (என் தாயாரின் இரண்டாம் கணவர்) அபூதல்ஹா (ரலி) அவர்கள், எனது கையைப் பிடித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று, "அல்லாஹ்வின் தூதரே! அனஸ் புத்திசாலிப் பையன்; அவன் தங்களுக்குப் பணிவிடை செய்யட்டும்" என்று சொன்னார்கள்.
அதன்படி நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஊரிலிருக்கும்போதும் பயணத்தில் இருக்கும்போதும் அவர்களுக்குப் பணிவிடை செய்துவந்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் செய்த எதைப் பற்றியும் "இதை நீ ஏன் இப்படிச் செய்தாய்?" என்றோ, நான் செய்யாமல் விட்ட எதைப் பற்றியும் "இதை நீ ஏன் இப்படிச் செய்யவில்லை?" என்றோ அவர்கள் என்னிடம் கேட்டதில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4625. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஒன்பது ஆண்டுகள் பணிவிடை செய்துள்ளேன். அவர்கள் ஒருபோதும் என்னிடம் "இன்னின்னதை நீ ஏன் செய்தாய்?" என்று கேட்டதாக எனக்குத் தெரியவில்லை; அவர்கள் எதற்காகவும் என்னை ஒருபோதும் குறை கூறியதுமில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4626. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே மிக அழகிய நற்குணம் கொண்டவராகத் திகழ்ந்தார்கள். அவர்கள் ஒரு நாள் அலுவல் ஒன்றுக்காக என்னை அனுப்பினார்கள். அப்போது நான் "அல்லாஹ்வின் மீதாணையாக! நான் போகமாட்டேன்" என்று சொன்னேன். ஆனால், என் மனத்தில் நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்ட அந்த அலுவலுக்குச் செல்ல வேண்டும் என்றே இருந்தது.
நான் புறப்பட்டுச் சென்றபோது, கடைத்தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் சிலரைக் கடந்து சென்றேன். (அவர்களுடன் சேர்ந்து நானும் விளையாடலானேன்.) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்குப் பின்பக்கம் (வந்து) எனது பிடரியைப் பிடித்தார்கள். அவர்களை நான் பார்த்தபோது அவர்கள் சிரித்துக்கொண்டிருந்தார்கள். "அருமை அனஸே! நான் உத்தரவிட்ட இடத்திற்கு நீ சென்றாயா?" என்று கேட்டார்கள். நான், "ஆம்; செல்கிறேன், அல்லாஹ்வின் தூதரே!" என்று சொன்னேன்.
மேலும் அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஒன்பது ஆண்டுகள் பணிவிடை செய்துள்ளேன். நான் செய்த எதைப் பற்றியும் "இன்னின்னதை நீ ஏன் செய்தாய்?" என்றோ, நான் செய்யாமல் விட்டுவிட்ட எதைப் பற்றியும் "நீ இன்னின்னதைச் செய்திருக்கக் கூடாதா?" என்றோ அவர்கள் என்னிடம் கேட்டதாக எனக்குத் தெரியவில்லை.
அத்தியாயம் : 43
4627. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே மிக அழகிய பண்புகள் கொண்டவர்களாய்த் திகழ்ந்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
பாடம் : 14 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எது கேட்கப்பட்டாலும் ஒருபோதும் அவர்கள் "இல்லை" என்று சொன்னதில்லை என்பதும், அவர்கள் தாராளமாக நன்கொடைகள் வழங்கியதும்.
4628. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எது கேட்கப்பட்டாலும் ஒருபோதும் அவர்கள் "இல்லை" என்று சொன்னதில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்படியே ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4629. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இஸ்லாத்தை முன்வைத்து எது கேட்கப் பட்டாலும் அவர்கள் அதைக் கொடுக்காமல் இருந்ததில்லை.
இந்நிலையில் அவர்களிடம் ஒரு மனிதர் வந்து (கேட்டபோது), இரு மலைகளுக்கு இடையே இருக்கும் (அளவுக்கு அதிகமான) ஆடுகளை அவருக்கு வழங்கினார்கள். அந்த மனிதர் தம் சமுதாயத்தாரிடம் திரும்பிச் சென்று, "என் மக்களே! நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில், முஹம்மத் வறுமையை அஞ்சாமல் தாராளமாக நன்கொடைகள் வழங்குகிறார்" என்று சொன்னார்.
அத்தியாயம் : 43
4630. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (வந்து) இரு மலைகளுக்கிடையே இருக்கும் (அளவுக்கு அதிகமான) ஆடுகளை (நன்கொடையாகக்) கேட்டார். நபி (ஸல்) அவர்கள் அவற்றைக் கொடுத்தார்கள். அவர் தம் சமுதாயத்தாரிடம் சென்று, "என் மக்களே! நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மத் அவர்கள் வறுமையை அஞ்சாமல் தாராளமாக நன்கொடைகள் வழங்குகிறார்" என்று கூறினார்.
ஒரு மனிதர் உலக ஆதாயத்திற்காக இஸ்லாத்தை ஏற்றிருந்தாலும், இஸ்லாத்தைத் தழுவிய சிறிது காலத்திற்குள் அவருக்கு இஸ்லாம் இந்த உலகத்தையும் அதிலிருப்பவற்றையும்விட மிகவும் உவப்பானதாக ஆகிவிடும்.
அத்தியாயம் : 43
4631. இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றிப் போருக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடனிருந்த முஸ்லிம்களும் புறப்பட்டுச் சென்று ஹுனைன் எனுமிடத்தில் ("ஹவாஸின்" குலத்தாருடன்) போரிட்டனர். அப்போது அல்லாஹ் தனது மார்க்கத்திற்கும் முஸ்லிம்களுக்கும் வெற்றியளித்தான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்றைய தினத்தில் ஸஃப்வான் பின் உமய்யாவுக்கு (முதலில்) நூறு ஒட்டகங்கள் கொடுத்தார்கள். பிறகு இன்னும் நூறு ஒட்டகங்கள் கொடுத்தார்கள். பிறகு மேலும் நூறு ஒட்டகங்கள் கொடுத்தார்கள்.
(முந்நூறு ஒட்டகங்களைப் பெற்றுக்கொண்ட) ஸஃப்வான் பின் உமய்யா, "அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அன்று தாராளமாக) எனக்கு வழங்கினார்கள். அப்போது அவர்கள் எனக்கு மக்களிலேயே மிகவும் வெறுப்பானவர்களாய் இருந்தார்கள். அவர்கள் எனக்கு நன்கொடைகள் வழங்கிக்கொண்டே வந்து மக்களிலேயே எனக்கு மிகவும் உவப்பானவர்களாய் ஆகிவிட்டார்கள்" என்று கூறியதாக சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்.
அத்தியாயம் : 43
4632. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), "பஹ்ரைனின் நிதி நம்மிடம் வந்தால், நான் உனக்கு இவ்வளவு இவ்வளவு இவ்வளவு தருவேன்" என்று கூறி, இரு கைகளையும் அள்ளித் தருவதைப் போன்று (மூன்று முறை) சேர்த்துக்காட்டினார்கள். ஆனால், அந்த நிதி வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள்.
பின்னர் (ஆட்சித் தலைவராக வந்த) அபூபக்ர் (ரலி) அவர்களிடம் அந்த நிதி வந்தது. அப்போது பொது அறிவிப்பாளர் ஒருவரிடம் "எவருக்காவது நபி (ஸல்) அவர்கள் ஏதேனும் வாக்களித்திருந்தால், அல்லது எவருக்காவது அவர்கள் கடன் தர வேண்டியிருந்தால் அவர் நம்மிடம் வரட்டும்" என்று பொது அறிவிப்புச் செய்யும்படி கட்டளையிட்டார்கள். (அவ்வாறே அவர் பொது அறிவிப்புச் செய்தபோது) நான் (அபூபக்ர் (ரலி) அவர்களிடம்) சென்று, "பஹ்ரைனின் நிதி நம்மிடம் வந்தால், நான் இவ்வளவு இவ்வளவு இவ்வளவு தருவேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் கூறியிருந்தார்கள்" என்றேன்.
அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் இரு கை நிறைய ஒரு தடவை அள்ளிக்கொடுத்து "எண்ணிப்பார்" என்று சொன்னார்கள். நான் எண்ணிப்பார்த்தபோது ஐநூறு (நாணயங்கள்) இருந்தன. பிறகு மீண்டும் "இதைப் போன்றே,இன்னும் இரு மடங்குகளும் பெற்றுக்கொள்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43