பாடம் : 1 நபி (ஸல்) அவர்களின் வமிசாவளியின் சிறப்பும் அவர்கள் நபியாக நியமிக்கப்படுவதற்கு முன் அவர்களுக்கு "கல்" சலாம் சொன்னதும்.
4573. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், இஸ்மாயீல் (அலை) அவர்களின் வழித்தோன்றல்களில் "கினானா"வைத் தேர்ந்தெடுத்தான்; "கினானா"வின் வழித்தோன்றல்களில் குறைஷியரைத் தேர்ந்தெடுத்தான்; குறைஷியரிலிருந்து பனூ ஹாஷிம் குலத்தாரைத் தேர்ந்தெடுத்தான். பனூ ஹாஷிம் குலத்தாரிலிருந்து என்னைத் தேர்ந்தெடுத்தான்.
இதை வாஸிலா பின் அல்அஸ்கஉ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4574. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் மக்காவிலுள்ள கல் ஒன்றை அறிவேன். நான் நபியாக நியமிக்கப்படுவதற்கு முன் அது எனக்கு முகமன் (சலாம்) சொல்லி வந்தது. நிச்சயமாக இப்போதும் அதை நான் அறிவேன்.
இதை ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 43
பாடம் : 2 எல்லாப் படைப்புகளையும்விட நம் நபி (ஸல்) அவர்களுக்குள்ள சிறப்பு.
4575. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளில் ஆதமின் மக்கள் (மனிதர்கள்) அனைவருக்கும் தலைவன் நானே. முதன் முதலில் மண்ணறை பிளந்து (உயிர்த்து) எழுபவனும் நானே. முதன்முதலில் பரிந்துரை செய்பவனும் நானே. முதன்முதலில் பரிந்துரை ஏற்கப்படுபவனும் நானே.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 43
பாடம் : 3 நபி (ஸல்) அவர்களின் அற்புதங்கள்.
4576. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் (பாத்திரத்தைக்) கொண்டுவரச் சொன்னபோது, (உட்பகுதி குறுகலான) வாயகன்ற (சிறிய) பாத்திரம் ஒன்று கொண்டுவரப்பட்டது. (நபி (ஸல்) அவர்கள் பாத்திரத்திற்குள் தம் விரல்களை நுழைத்தார்கள்.) மக்கள் அதிலிருந்து அங்கத் தூய்மை (உளூ) செய்யலாயினர். நான் எண்ணிக் கணக்கிட்டுப் பார்த்தேன். அவர்கள் அறுபதிலிருந்து எண்பது பேர் இருந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்களுடைய விரல் களுக்கிடையிலிருந்து தண்ணீர் சுரப்பதை நான் பார்க்கலானேன்.
அத்தியாயம் : 43
4577. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) அஸ்ர் தொழுகையின் நேரம் நெருங்கிவிட்டபோது, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்தேன். அங்கத் தூய்மை (உளூ) செய்ய மக்கள் தண்ணீரைத் தேடினர். அவர்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அங்கத் தூய்மை (உளூ) செய்ய சிறிது தண்ணீர் கொண்டுவரப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் பாத்திரத்தினுள் தமது கையை வைத்தார்கள். பிறகு அதிலிருந்து அங்கத் தூய்மை செய்யும்படி மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய விரல்களுக்கிடையிலிருந்து தண்ணீர் சுரந்து வருவதை நான் கண்டேன். மக்கள் அதிலிருந்து அங்கத் தூய்மை செய்தனர். எந்த அளவுக்கென்றால், அவர்களில் கடைசி ஆள்வரை அனைவரும் (அதிலேயே) அங்கத் தூய்மை செய்து முடித்தனர்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4578. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் "அஸ்ஸவ்ரா" எனுமிடத்தில் இருந்தார்கள். (அஸ்ஸவ்ரா என்பது மதீனாவின் கடைத்தெருவுக்கும் மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலுக்கும் அருகில் இருந்த ஓர் இடமாகும்.) அப்போது நபி (ஸல்) அவர்கள் (அங்கத் தூய்மை செய்வதற்காகப்) பாத்திரத்தைக் கொண்டுவரச் சொன்னார்கள். அதில் சிறிது தண்ணீர் இருந்தது. பிறகு அப்பாத்திரத்தினுள் தமது கையை வைத்தார்கள். அப்போது அவர்களுடைய விரல்களுக்கிடையிலிருந்து தண்ணீர் சுரக்கலாயிற்று. (அங்கிருந்த) நபித்தோழர்கள் அனைவரும் அதிலிருந்து அங்கத் தூய்மை (உளூ) செய்தனர்.
இந்த ஹதீஸின் அறிவிப்பாளரான கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் அனஸ் (ரலி) அவர்களிடம் "அபூஹம்ஸா அவர்களே! அவர்கள் (மொத்தம்) எத்தனை பேர் இருந்தனர்?" என்று கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள் "சுமார் முந்நூறு பேர் இருந்தனர்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 43
4579. மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நபி (ஸல்) அவர்கள் (மதீனாவிலுள்ள) "அஸ்ஸவ்ரா" எனுமிடத்தில் இருந்தார்கள். அப்போது அவர்களிடம் அவர்களின் விரல்களை (முக்கினால் அவற்றை)க்கூட மறைக்காத அளவுக்கு, அல்லது விரல்களை மட்டுமே மறைக்கும் அளவுக்கு (சிறிது) தண்ணீர் இருந்த (சிறிய) பாத்திரம் ஒன்று கொண்டுவரப்பட்டது" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 43
4580. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உம்மு மாலிக் அல்அன்சாரிய்யா (ரலி) அவர்கள், தமது நெய் பை ஒன்றில் நபி (ஸல்) அவர்களுக்கு நெய்யை அன்பளிப்பா(கக் கொடுத்தனுப்புவா)ர். பிறகு அவரிடம் அவருடைய மக்கள் வந்து (ரொட்டிக்காகக்) குழம்பு கேட்பார்கள். அப்போது அவர்களிடம் எதுவும் இருக்காது. உடனே உம்மு மாலிக் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுக்கு நெய் கொடுத்தனுப்பும் (அந்தப் பையில் ஏதேனும் மீதி இருக்கும் என்று எண்ணி) அந்தப் பையை நோக்கிச் செல்வார்கள். அதில் நெய் இருக்கும். இவ்வாறே அவர் அந்தப் பையைப் பிழியும்வரை வீட்டுக்குத் தேவையான குழம்பு அதில் இருந்து கொண்டே இருந்தது.
(இறுதியில் அந்தப் பையைப் பிழிந்தபோது நெய் இல்லாமற் போய்விட்டதால்) அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்(து நடந்ததைத் தெரிவித்)தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அந்தப் பையை நீ பிழிந்தாயா?" என்று கேட்டார்கள். அவர் "ஆம்" என்று பதிலளித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அதை அப்படியே நீ விட்டிருந்தால் அதில் எப்போதும் நெய் இருந்துகொண்டே இருந்திருக்கும்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 43
4581. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து உணவுப் பொருட்கள் வழங்குமாறு கோரினார். அவரது உணவுக்காக நபி (ஸல்) அவர்கள் அரை "வஸ்க்" தொலி நீக்கப்படாத கோதுமை வழங்கினார்கள். அதிலிருந்து அவரும் அவருடைய துணைவியும் அவர்களுடைய விருந்தினரும் உண்டுகொண்டே வந்தனர். இறுதியில் ஒரு நாள் அவர் அந்தக் கோதுமையை நிறுத்துப்பார்த்தார்.
(பிறகு அதிலிருந்த கோதுமை தீர்ந்துவிட்டது.) ஆகவே, அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்(து நடந்ததைத் தெரிவித்)தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அதை நீ நிறுத்துப் பார்த்திருக்காவிட்டால் அதிலிருந்து நீங்கள் சாப்பிட்டுக்கொண்டே இருந்திருப்பீர்கள். உங்களுக்காக அதில் எப்போதும் கோதுமை இருந்திருக்கும்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 43
4582. முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் "தபூக்" போரின்போது புறப்பட்டுச் சென்றோம். அப்போது அவர்கள் (இரு நேரத்) தொழுகைகளை (ஒரே நேரத்தில்) சேர்த்துத் தொழுதுவந்தார்கள்; லுஹ்ரையும் அஸ்ரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள். மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள்.
பின்பொரு நாள் தொழுகையைத் தாமதப்படுத்திவிட்டு, பிறகு வந்து லுஹ்ரையும் அஸ்ரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள். பிறகு உள்ளே சென்றுவிட்டுப் பிறகு வந்து மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள்.
பிறகு, "அல்லாஹ் நாடினால், நாளை நீங்கள் தபூக் ஊற்றுக்குச் செல்வீர்கள். முற்பகலுக்கு முன் நீங்கள் அங்கு சென்றுவிடாதீர்கள். நான் வருவதற்குமுன் உங்களில் எவரும் அங்கு சென்றுவிட்டால், அங்குள்ள தண்ணீரில் கை வைத்துவிட வேண்டாம்" என்று கூறினார்கள்.
அவ்வாறே நாங்கள் அங்கு சென்றோம். அப்போது இரு மனிதர்கள் எங்களை முந்திக்கொண்டு அந்த ஊற்றை நோக்கிச் சென்றனர். செருப்பு வார் அளவுக்கு அந்த ஊற்றில் தண்ணீர் சிறிதளவே சுரந்துகொண்டிருந்தது. பிறகு (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்துசேர்ந்தார்கள்.) அவர்கள் இருவரிடமும் "அதன் தண்ணீரில் கை வைத்தீர்களா?" என்று கேட்டார்கள். அவர்கள் இருவரும் "ஆம்" என்று பதிலளித்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் கண்டித்தார்கள். அவர்கள் சொல்ல வேண்டுமென அல்லாஹ் நாடியதையெல்லாம் அவ்விருவரிடமும் சொன்னார்கள்.
பிறகு மக்கள் தம் கைகளால் அந்த ஊற்றிலிருந்து சிறிது சிறிதாகத் தண்ணீர் அள்ளி ஓரிடத்தில் சேர்த்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தத் தண்ணீரில் தமது கையையும் முகத்தையும் கழுவி அந்த ஊற்றிலேயே அந்தத் தண்ணீரை விட்டார்கள். அப்போது ஊற்றிலிருந்து ஏராளமான தண்ணீர் "பீறிட்டு" அல்லது "நிறைந்து" ஓடியது. (அறிவிப்பாளர் அபூஅலீ (ரஹ்) அவர்களே இவ்வாறு ஐயத்துடன் அறிவிக்கிறார்கள்.) மக்கள் அனைவரும் தண்ணீர் அருந்தினர்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "முஆதே! (எனக்குப் பிறகு) நீங்கள் நீண்ட நாட்கள் வாழ்ந்தால்,இவ்விடத்தில் தோட்டங்கள், குடியிருப்புகள் ஆகியவை நிறைந்திருப்பதைக் காண்பீர்கள்" என்று (முன்னறிவிப்பாகக்) கூறினார்கள்.
அத்தியாயம் : 43
4583. அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தபூக் போருக்குப் புறப்பட்டுச் சென்றோம். அப்பயணத்தில் நாங்கள் "வாதில் குரா" எனுமிடத்திலிருந்த ஒரு பெண்மணிக்குச் சொந்தமான ஒரு (பேரீச்சந்)தோட்டத்தை அடைந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மரத்திலுள்ள கனிகளை மதிப்பிடுங்கள்" என்று கூறினார்கள். அவ்வாறே நாங்கள் மதிப்பிட்டோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதில் பத்து "வஸ்க்" கனிகள் இருப்பதாக மதிப்பிட்டார்கள். மேலும் அப்பெண்ணிடம், "இன்ஷாஅல்லாஹ், நாங்கள் திரும்பி வருவதற்குள் இக்கனிகளை நீ எண்ணிவை" என்று சொன்னார்கள்.
பிறகு நாங்கள் நடந்து தபூக்கிற்குச் சென்றோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்றிரவு உங்கள்மீது கடுமையான காற்று வீசும். அப்போது உங்களில் எவரும் எழுந்திருக்க வேண்டாம். உங்களில் ஒட்டகம் வைத்திருப்பவர் அதைக் கயிற்றால் கட்டிவைக்கட்டும்" என்று கூறினார்கள்.
அவ்வாறே அன்றிரவு கடுங்காற்று வீசியது. அப்போது எங்களில் ஒருவர் எழுந்தார். அக்காற்று அவரைத் தூக்கிச் சென்று, "தய்யி" குலத்தாரின் ("அஜா" மற்றும் "சல்மா" ஆகிய) இரு மலைகளுக்கிடையே போட்டுவிட்டது.
பின்னர் "அய்லா" நாட்டின் அரசர் இப்னுல் அல்மாவின் தூதுவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு கடிதத்துடன் வந்தார். மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (அய்லா அரசர் சார்பாக) வெள்ளைக் கோவேறு கழுதையொன்றையும் அன்பளிப்பாக வழங்கினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அய்லா அரசருக்கு) பதில் கடிதம் எழுதினார்கள்; மேலும், போர்வையொன்றை அவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்த(னுப் பினா)ர்கள்.
பிறகு நாங்கள் திரும்பி "வாதில் குரா" சென்றடைந்தோம். அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணிடம் அவளது தோட்டத்திலிருந்த பேரீச்சங்கனிகளைப் பற்றிக் கேட்டார்கள். "அதில் எவ்வளவு கனிகள் உள்ளன?" என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண் "பத்து வஸ்க்குகள்" என்று பதிலளித்தாள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நான் விரைவாக (மதீனாவுக்குச்) செல்லப் போகிறேன். உங்களில் விரும்பியவர் என்னுடன் விரைவாக வரலாம்; விரும்பியவர் இங்கு தங்கியிருக்கலாம்" என்று சொன்னார்கள். பிறகு நாங்கள் புறப்பட்டு மதீனா அருகில் வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இது தாபா (தூய நகரம்);இதோ உஹுத் மலை; அது நம்மை நேசிக்கிறது; நாமும் அதை நேசிக்கிறோம்" என்று கூறினார்கள்.
பிறகு "அன்சாரிகளின் கிளைக் குடும்பங்களில் சிறந்தது "பனுந் நஜ்ஜார்" குடும்பமாகும். பிறகு "பனூ அப்தில் அஷ்ஹல்" குடும்பமாகும். பிறகு "பனூ அப்தில் ஹாரிஸ் பின் அல்கஸ்ரஜ்" குடும்பமாகும். பிறகு "பனூ சாஇதா"குடும்பமாகும். அன்சாரி கிளைக்குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் நன்மை உண்டு" என்று சொன்னார்கள்.
பிறகு (பனூ சாஇதா குடும்பத்தைச் சேர்ந்த) சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது அபூஉசைத் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரி கிளைக் குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் நன்மை இருப்பதாகச் சொல்லிவிட்டு, (பனூ சாஇதா குடும்பத்தாரான) நம்மை இறுதியாகவே குறிப்பிட்டுள்ளதை நீங்கள் பார்க்க வில்லையா?" என்று கேட்டார்கள்.
உடனே சஅத் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! அன்சாரி கிளைக்குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் நன்மை இருப்பதாகத் தாங்கள் குறிப்பிட்டுவிட்டு, இறுதியில் எங்களைக் குறிப்பிட்டுள்ளீர்களே?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் மிகச் சிறந்(த குடும் பத்)தவர்களில் இடம்பெற்றிருப்பதே உங்களுக்குப் போதுமானதல்லவா?" என்று கேட்டார்கள்.
அத்தியாயம் : 43
4584. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுமைத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "அன்சாரிகளின் கிளைக்குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் நன்மை உள்ளது" என்பதுவரையே இடம்பெற்றுள்ளது. அதற்குப் பின்னுள்ள சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் தொடர்பான சம்பவம் இடம்பெறவில்லை.
உஹைப் பின் காலித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அய்லா அரசருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதில் கடிதம் எழுதினார்கள்" என்று இடம்பெறவில்லை. மாறாக, "அவர்களின் ஊருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடிதம் எழுதினார்கள்" என்றே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 43
பாடம் : 4 நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருந்ததும் எதிரிகளிடமிருந்து அவர்களை அல்லாஹ் காப்பாற்றியதும்.
4585. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ("தாத்துர் ரிகாஉ" எனும்) போருக்காக "நஜ்த்" நோக்கிப் புறப்பட்டுச் சென்றோம். (போரை முடித்துக்கொண்டு திரும்பும் வழியில்) கருவேல முள்மரங்கள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கில் இருந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்துசேர்ந்தார்கள். (மதிய ஓய்வு கொள்ளும் நண்பகல் நேரத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மரத்திற்குக் கீழே இறங்கி ஓய்வெடுத்தார்கள். அப்போது அவர்கள் தமது வாளை அந்த மரத்தின் கிளையொன்றில் தொங்கவிட்டார்கள். (ஆங்காங்கே இருந்த) மரங்களின் கீழே மக்கள் பிரிந்து சென்று, நிழல் பெற்று (ஓய்வெடுத்து)க்கொண்டிருந்தனர்.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களை அழைத்துக்) கூறினார்கள்: நான் உறங்கிக்கொண்டிருந்தபோது, ஒரு மனிதர் என்னிடம் வந்து (எனது) வாளை (தமது கையில்) எடுத்துக்கொண்டார். உடனே நான் விழித்துக்கொண்டேன். அப்போது அவர் என் தலைமாட்டில் நின்றிருந்தார். (உறையிலிருந்து) உருவப்பட்ட வாள் அவரது கையில் இருப்பதை உடனே உணர்ந்தேன். அப்போது அவர், "என்னிடமிருந்து உன்னைக் காப்பவர் யார்?" என்று என்னிடம் கேட்டார்.
நான், "அல்லாஹ்" என்று பதிலளித்தேன். பிறகு மீண்டும் அவர், "என்னிடமிருந்து உன்னைக் காப்பவர் யார்?" என்று கேட்டார். நான் "அல்லாஹ்" என்றேன். உடனே அவர் வாளை உறையிலிட்டுவிட்டார். இதோ அவர் இங்கே அமர்ந்திருக்கிறார்.
பிறகு அவர் விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலையிடவில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4586. மேற்கண்ட ஹதீஸ் நபித்தோழர் ஜாபிர் பின் அப்தில்லாஹ் அல்அன்சாரீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "நான் நபி (ஸல்) அவர்களுடன் போருக்காக "நஜ்த்" நோக்கிப் புறப்பட்டுச் சென்றேன். (போரை முடித்து) நபி (ஸல்) அவர்கள் திரும்பியபோது அவர்களுடன் நானும் திரும்பினேன். ஒரு நாள் மதிய ஓய்வு கொள்ளும் நேரம் வந்தது" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (நஜ்தை நோக்கிப்) புறப்பட்டுச் சென்றோம். "தாத்துர் ரிகாஉ" எனுமிடத்தில் நாங்கள் இருந்தபோது..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.
மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. அதில், "பிறகு அவர் விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலையிடவில்லை" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 43
பாடம் : 5 நபி (ஸல்) அவர்கள் எந்த நல்வழியுடனும் ஞானத்துடனும் அனுப்பப்பெற்றார்களோ அதற்கான உவமை பற்றிய விளக்கம்.
4587. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் என்னை நல்வழியுடனும் ஞானத்துடனும் அனுப்பியுள்ளதற்கு உதாரணம், நிலத்தில் விழுந்த பெருமழையின் நிலையைப் போன்றதாகும். அவற்றில் சில நிலங்கள், நீரை ஏற்றுக்கொண்டு ஏராளமான புற்பூண்டுகளையும் செடிகொடிகளையும் முளைக்கச் செய்யும் நல்ல நிலங்களாகும்.
வேறுசில தண்ணீரைத் தேக்கி வைத்துக்கொள்ளும் தரிசு நிலங்களாகும். அதை இறைவன் மக்களுக்குப் பயன்படச்செய்தான். அதிலிருந்து மக்களும் அருந்தினர்; (தம் கால்நடைகளுக்கும்) புகட்டினர்; (பயிரிட்டுக் கால்நடைகளை) மேய்க்கவும் செய்தனர்.
அந்தப் பெருமழை இன்னொரு வகை நிலத்திலும் விழுந்தது. அது (ஒன்றுக்கும் உதவாத) வெறும் கட்டாந்தரை. அது தண்ணீரைத் தேக்கிவைத்துக்கொள்ளவும் இல்லை; புற்பூண்டுகளை முளைக்கச் செய்யவுமில்லை.
இதுதான், இறைமார்க்கத்தில் விளக்கம் பெற்று, நான் கொண்டுவந்த தூதால் பயனடைந்து, கற்றுத் தெரிந்து பிறருக்கும் கற்றுக் கொடுத்தவருக்கும், நான் கொண்டுவந்த தூதை ஏறிட்டுப் பாராமலும் நான் கொண்டுவந்த அல்லாஹ்வின் நல்வழியை ஏற்றுக்கொள்ளாமலும் வாழ்கின்றவனுக்கும் உதாரணமாகும்.
இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
பாடம் : 6 நபி (ஸல்) அவர்கள் தம் சமுதாயத்தார்மீது கொண்டிருந்த பரிவும் பாசமும் சமுதாயத்தாருக்குத் தீங்கிழைப்பவை குறித்து அவர்கள் அதிகமாக எச்சரித்ததும்.
4588. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனக்கும் என்னை அல்லாஹ் எ(ந்த மார்க்கத்)தைக் கொண்டு அனுப்பியுள்ளானோ அதற்கும் எடுத்துக்காட்டாகிறது,ஒரு மனிதரின் நிலையைப் போன்றதாகும். அவர் தம் சமூகத்தாரிடம் சென்று, "என் சமுதாயமே! நான் (இன்ன பெரும்) படையை என் கண்களால் பார்த்தேன். (அப்படை எந்நேரமும் உங்களைத் தாக்கலாம். அதை எதிர்கொள்ளும் ஆற்றல் உங்களிடம் இல்லை.) நான் நிர்வாணமாக (ஓடி)வந்து எச்சரிக்கை செய்ப(வனைப் போன்ற)வன். ஆகவே,தப்பித்துக்கொள்ளுங்கள்" என்று கூறினார்.
அப்போது அவருடைய சமூகத்தாரில் ஒரு பிரிவினர் அவருக்குக் கீழ்ப்படிந்து இரவோடு இரவாக மெல்ல நடந்து தப்பிவிட்டனர். ஆனால், அவர்களில் மற்றொரு பிரிவினர் அவரை நம்ப மறுத்து காலையிலும் அங்கேயே தங்கியிருந்தனர். ஆகவே, அதிகாலையில் அப்படையினர் வந்து அவர்களைத் தாக்கிப் பூண்டோடு அழித்தனர்.
இதுதான் எனக்குக் கீழ்ப்படிந்து, நான் கொண்டுவந்த (மார்க்கத்)தைப் பின்பற்றி நடந்தவருக்கும், எனக்கு மாறுசெய்து,நான் கொண்டுவந்த சத்தியத்தை ஏற்க மறுத்தவருக்கும் உதாரணமாகும்.
இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4589. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது நிலையும் என் சமுதாயத்தாரின் நிலையும் ஒரு மனிதரின் நிலையை ஒத்திருக்கிறது. அவர் தீ மூட்டினார். விட்டில் பூச்சிகளும் இதர பூச்சிகளும் அந்தத் தீயில் விழலாயின. (நரக நெருப்பில் விழுவதிலிருந்து உங்களைத் தடுக்க) உங்கள் இடுப்புகளை நான் பிடித்துக் கொண்டிருக்கிறேன். (ஆனால்), நீங்களோ (என்னையும் மீறி) நரகத்தில் நுழைந்து கொண்டிருக்கிறீர்கள். - இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4590. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது நிலை ஒரு மனிதரின் நிலையை ஒத்திருக்கிறது. அவர் தீ மூட்டினார். அவரைச் சுற்றிலும் அது ஒளி வீசியபோது நெருப்பைச் சுற்றும் விட்டில் பூச்சிகளும் இதர பூச்சிகளும் அந்தத் தீயில் விழலாயின. அந்த மனிதரோ அவற்றை(த் தீயில் விழவிடாமல்) தடுத்துக் கொண்டிருந்தார். ஆனால், அவரையும் மீறி அவை தீயில் விழுகின்றன.
இதுதான் எனது நிலையும் உங்களது நிலையும் ஆகும். (நரக) நெருப்பி(ல் விழுவதி)லிருந்து உங்களைத் தடுக்க உங்கள் இடுப்புகளை நான் பிடித்துக்கொண்டிருக்கிறேன். "நெருப்பிலிருந்து விலகி வாருங்கள். நெருப்பிலிருந்து விலகி வாருங்கள்" என்று சொல்கிறேன். ஆனால், நீங்களோ என்னையும் மீறி நரகத்தில் நுழைந்துகொண்டிருக்கிறீர்கள்.
அத்தியாயம் : 43
4591. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது நிலையும் உங்களின் நிலையும் ஒரு மனிதரின் நிலையை ஒத்திருக்கிறது. அவர் தீ மூட்டினார். அதில் வெட்டுக்கிளிகளும் விட்டில் பூச்சிகளும் விழலாயின. அவர் அதி(ல் விழுவதி)லிருந்து அவற்றைத் தடுத்துக்கொண்டிருந்தார். (இவ்வாறுதான்) நரக நெருப்பி(ல் விழுவதி)லிருந்து (உங்களைத் தடுக்க) உங்கள் இடுப்புகளை நான் பிடித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், எனது கையிலிருந்து நீங்கள் நழுவிக்(கொண்டு நெருப்பை நோக்கி ஓடிக்)கொண்டிருக்கிறீர்கள்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 43
பாடம் : 7 நபி (ஸல்) அவர்கள் இறுதி இறைத்தூதர் என்பது பற்றிய குறிப்பு.
4592. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது நிலையும் (எனக்கு முன்பிருந்த) இதர இறைத்தூதர்களின் நிலையும் ஒரு மனிதரின் நிலையை ஒத்திருக்கிறது. அவர் ஒரு கட்டடத்தை நேர்த்தியாகவும் அழகாகவும் கட்டினார். மக்கள் அதைச் சுற்றிப் பார்த்து விட்டு "இதைவிட அழகான கட்டடத்தை நாங்கள் கண்டதேயில்லை. இதோ இந்த (மூலையில் வைக்கப்படாமலிருக்கும்) செங்கலைத் தவிர" என்று கூறினர். நான்தான் அந்தச் செங்கலாக இருக்கிறேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 43