பாடம் : 1 பகடைக்காய் விளையாட்டு ("நர்த ஷீர்") தடை செய்யப்பட்டதாகும்.
4549. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பகடைக்காய் ஆட்டம் (நர்தஷீர்) விளையாடியவர், தமது கையைப் பன்றி இறைச்சியிலும் இரத்தத்திலும் தோய்த்தவரைப் போன்றவர் ஆவார்.
இதை புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 41

4550. அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (உறக்கத்தில்) பல கனவுகளைக் கண்டுவந்தேன். அதனால் எனக்குக் குளிர் காய்ச்சல் ஏற்பட்டது. இருந்தாலும்,அதற்காக நான் போர்வையைப் போர்த்திக்கொண்டிருக்கவில்லை.
இறுதியில் (ஒரு நாள்) நான் அபூகத்தாதா (ரலி) அவர்களைச் சந்தித்து அவர்களிடம் அதைப் பற்றித் தெரிவித்தேன். அப்போது அபூகத்தாதா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். கெட்ட கனவு ஷைத்தானி டமிருந்து வருவதாகும். உங்களில் ஒருவர் தாம் விரும்பாத (தீய கனவு) ஒன்றைக் கண்டால் அவர் தமது இடப் பக்கத்தில் மூன்று முறை துப்பட்டும்; அதிலிருந்து காக்குமாறு அல்லாஹ்விடம் அவர் பாதுகாப்புக் கோரட்டும். (இப்படிச் செய்தால்) அவருக்கு அது எந்தத் தீங்கும் இழைத்திட இயலாது" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- அபூகத்தாதா (ரலி) அவர்களிடமிருந்து அபூ சலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "நான் பல கனவுகளைக் கண்டுவந்தேன். அதனால் எனக்குக் குளிர் காய்ச்சல் ஏற்பட்டது. இருந்தாலும்,அதற்காக நான் போர்வையைப் போர்த்திக்கொண்டிருக்கவில்லை" என்று அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் கூறிய குறிப்பு (ஆரம்பத்தில்) இடம்பெறவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் யூனுஸ் (ரஹ்), மஅமர் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், "அதனால் எனக்குக் குளிர் காய்ச்சல் ஏற்பட்டது"எனும் குறிப்பு இல்லை. யூனுஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அவர் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்ததும் தமது இடப் பக்கத்தில் மூன்று முறை துப்பட்டும்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 42
4551. அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். கெட்ட கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும். ஆகவே,உங்களில் ஒருவர் தாம் விரும்பாத ஒரு விஷயத்தை (கனவில்) கண்டால் (கண் விழிக்கும்போது) தமது இடப் பக்கத்தில் மூன்று முறை துப்பிவிட்டு, அதன் தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரட்டும். (இப்படிச் செய்தால்) அதனால் அவருக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ கத்தாதா (ரலி) அவர்கள் சொன்னதை நான் செவியுற்றேன்.
இந்த ஹதீஸை நான் கேட்(டு அறிந்து விட்)ட காரணத்தால், மலையைவிடக் கனமான ஒரு கனவை நான் கண்டாலும்கூட அதை நான் பொருட்படுத்துவதில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசலமா (ரஹ்) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் லைஸ், அப்துல்லாஹ் பின் நுமைர் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், அபூ சலமா (ரஹ்) அவர்களின் (இறுதிக்) கூற்று இடம்பெறவில்லை. முஹம்மத் பின் ரும்ஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "மேலும், அவர் முன்பு படுத்திருந்த பக்கத்திலிருந்து திரும்பிப் படுத்துக்கொள்ளட்டும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 42
4552. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். கெட்ட கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும். ஒருவர் கனவு ஒன்றைக் கண்டு அதில் எதையேனும் அவர் வெறுத்தால், அவர் தமது இடப் பக்கத்தில் மூன்று முறை துப்பிவிட்டு,ஷைத்தானிடமிருந்து (காக்குமாறு) அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரட்டும். அப்படிச் செய்தால் அவருக்கு அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. மேலும், அதைப் பற்றி யாரிடமும் அவர் தெரிவிக்க வேண்டாம். அழகிய கனவு ஒன்றை அவர் கண்டால், அவர் ஆனந்தமடையட்டும். அதைப் பற்றி தமது நேசத்திற்குரியவரைத் தவிர வேறு யாரிடமும் தெரிவிக்க வேண்டாம்.
இதை அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 42
4553. அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃவ்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் பல கனவுகளைக் கண்டு, அதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டுவந்தேன். இந்நிலையில் நான் அபூகத்தாதா (ரலி) அவர்களைச் சத்தித்(து அது குறித்து தெரிவித்)தேன்.
அப்போது அவர்கள் கூறினார்கள்: நானும் பல கனவுகளைக் கண்டு உடல்நலம் பாதிக்கப் பட்டுவந்தேன். இறுதியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். ஆகவே, உங்களில் ஒருவர் தாம் விரும்புகின்ற கனவொன்றைக் கண்டால் தமது நேசத்துக்குரியவரைத் தவிர வேறு யாரிடமும் அதைப் பற்றித் தெரிவிக்க வேண்டாம். அவர், தாம் விரும்பாததைக் கண்டால் தமது இடப் பக்கத்தில் மூன்று முறை துப்பிவிட்டு,ஷைத்தானின் தீங்கிலிருந்தும் அந்தக் கனவின் தீங்கிலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரட்டும். அந்தக் கனவைப் பற்றி யாரிடமும் தெரிவிக்க வேண்டாம். அவ்வாறு செய்தால் அது அவருக்கு எந்தப் பாதிப்பையும் ஒருபோதும் ஏற்படுத்த முடியாது" என்று கூறியதைக் கேட்டேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 42
4554. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தாம் விரும்பாத கனவொன்றைக் கண்டால் தமது இடப் பக்கத்தில் மூன்று முறை துப்பிவிட்டு,ஷைத்தானிடமிருந்து (காக்குமாறு) அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரிவிட்டு, வேறு பக்கத்தில் திரும்பிப் படுத்துக்கொள்ளட்டும்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 42
4555. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
காலம் சுருங்கும்போது ஒரு முஸ்லிம் காணும் கனவு பொய்யாகப் போவதில்லை. உங்களில் (நல்ல) உண்மையான கனவு காண்பவரே உண்மை பேசுகின்றவர் ஆவார். ஒரு முஸ்லிம் காணும் (நல்ல) கனவு நபித்துவத்தின் நாற்பத்தைந்து பாகங்களில் ஒன்றாகும்.
கனவுகள் மூன்று வகையாகும். நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வரும் நற்செய்தியாகும். கவலையளிக்கக்கூடிய கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும். இன்னொரு வகை ஒரு மனிதரின் உள்ளத்தில் தோன்றுகின்ற பிரமையாகும். ஆகவே, உங்களில் ஒருவர் தாம் விரும்பாத கனவொன்றைக் கண்டால், உடனே அவர் எழுந்து (இறைவனைத்) தொழட்டும். அதைப் பற்றி மக்களிடம் தெரிவிக்க வேண்டாம். நான் காலில் விலங்கிடப்படுவதைப் போன்று கனவு காண்பதை விரும்புகிறேன். கழுத்தில் விலங்கிடப்படுவதைப் போன்று காண்பதை வெறுக்கிறேன். கால் விலங்கு, மார்க்கத்தில் நிலைத்திருப்பதைக் குறிக்கும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல் வஹ்ஹாப் அஸ்ஸகஃபீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (கால் விலங்கு மற்றும் கழுத்து விலங்கு பற்றிய) இறுதிக் குறிப்பு ஹதீஸிலேயே உள்ளதா, அல்லது அறிவிப்பாளர் இப்ன சீரீன் (ரஹ்) அவர்களின் கூற்றா என்பது எனக்குத் தெரியவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் அறிவிப்பாளர் மஅமர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: காலில் விலங்கிடப்படுவதைப் போன்று காண்பதை என் மனம் விரும்புகிறது. கழுத்தில் விலங்கிடப்படுவதைப் போன்று காண்பதை நான் வெறுக்கிறேன். கால் விலங்கு மார்க்கத்தில் உறுதியுடன் இருப்பதைக் குறிக்கும். நபி (ஸல்) அவர்கள், "இறை நம்பிக்கையாளர் காணும் நல்ல கனவு நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்" என்று கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "காலம் சுருங்கிவிட்டால்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. அதில் நபி (ஸல்) அவர்கள் கூறியதாகக் குறிப்பு இல்லை.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "கழுத்தில் விலங்கிடப்படுவதைப் போன்று காண்பதை நான் வெறுக்கிறேன்" என்பது, இறுதிவரையுள்ள தகவலை விளக்க இடைச்சேர்ப்பாக ("இத்ராஜ்") அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாகக் காணப்படுகிறது. அதில் "நல்ல கனவு நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்" எனும் நபி (ஸல்) அவர்களின் கூற்று இடம் பெறவில்லை.
அத்தியாயம் : 42
4556. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளர் காணும் (நல்ல) கனவு நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்.- இதை உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் வாயிலாக நேரடியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 42
4557. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளர் காணும் (நல்ல) கனவு நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு "முஸ்லிம் காணும்" அல்லது "அவருக்குக் காட்டப்படும்" நல்ல கனவு நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு நல்ல மனிதரின் கனவு நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 42
4558. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நல்ல கனவு நபித்துவத்தின் எழுபது பாகங்களில் ஒன்றாகும்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் லைஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நபித்துவத்தின் எழுபது பாகங்களில் ஒன்றாகும்" என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாக நான் கருதுகிறேன் என நாஃபிஉ (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டதாகக் காணப்படுகிறது.
தொடர்ச்சி:-
அத்தியாயம் : 42
பாடம் : 1 "கனவில் யார் என்னைக் கண்டாரோ நிச்சயமாக அவர் என்னையே கண்டார்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது.
4559. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கனவில் யார் என்னைக் கண்டாரோ நிச்சயமாக அவர் என்னையே கண்டார். ஏனெனில், ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்கமாட்டான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 42
4560. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கனவில் என்னை யார் காண்கிறாரோ அவர் "விழிப்பிலும் என்னைக் காண்பார்". அல்லது "விழிப்பில் என்னைக் கண்டவரைப் போன்றவர் ஆவார்". (ஏனெனில்,) ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்கமாட்டான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(கனவில்) யார் என்னைக் கண்டாரோ அவர் நிஜத்தையே நிச்சயமாக கண்டார்.
இதை அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட இரு ஹதீஸ்களும் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளன.
அத்தியாயம் : 42
4561. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உறக்கத்தில் யார் என்னைக் கண்டாரோ நிச்சயமாக அவர் என்னையே கண்டார். என்ன விஷயம் என்றால், என் உருவில் காட்சியளிக்க ஷைத்தானுக்குத் தகுதியில்லை" என்றும், "உங்களில் ஒருவர் தீய கனவொன்றைக் கண்டால் உறக்கத்தில் தம்முடன் ஷைத்தான் விளையாடியது குறித்து எவரிடமும் தெரிவிக்க வேண்டாம்" என்றும் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 42
4562. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உறக்கத்தில் யார் என்னைக் கண்டாரோ நிச்சயமாக அவர் என்னையே கண்டார். ஏனெனில், என்னைப் போன்று காட்சியளிக்க ஷைத்தானுக்குத் தகுதியில்லை.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 42
பாடம் : 2 கனவில் ஷைத்தான் தம்மிடம் விளையாடியது குறித்து யாரிடமும் அறிவிக்கலாகாது.
4563. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கிராமவாசி ஒருவர் வந்து, "எனது தலை துண்டிக்கப்படுவதைப் போன்றும் நான் அதைப் பின்தொடர்ந்து செல்வதைப் போன்றும் கனவு கண்டேன்" என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரைக் கண்டித்துவிட்டு, "கனவில் உம்மிடம் ஷைத்தான் விளையாடியது குறித்து (யாரிடமும்) தெரிவிக்காதே" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 42
4564. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கிராமவாசி ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! எனது தலை வெட்டப்பட்டு அது உருண்டோடிச் செல்வதைப் போன்றும் அதைப் பின்தொடர்ந்து நான் வேகமாகச் செல்வதைப் போன்றும் கனவு கண்டேன்" என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உமது கனவில் ஷைத்தான் உம்மிடம் விளையாடியது குறித்து நீர் மக்களிடம் தெரிவிக்காதே" என்று கூறினார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்கள் (மக்களிடையே) உரை நிகழ்த்தியபோது, "உங்களில் ஒருவரது கனவில் ஷைத்தான் அவரிடம் விளையாடியதைப் பற்றி (யாரிடமும்) தெரிவிக்க வேண்டாம்" என்று கூறியதையும் நான் கேட்டேன்.
அத்தியாயம் : 42
4565. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! கனவில் எனது தலை துண்டிக்கப்படுவதைப் போன்று நான் கண்டேன்" என்று கூறினார். அதைக் கேட்டு நபி (ஸல்) அவர்கள் சிரித்துவிட்டு, "உங்களில் ஒருவருடைய கனவில் ஷைத்தான் அவரிடம் விளையாடினால், அதைப் பற்றி அவர் மக்களிடம் தெரிவிக்க வேண்டாம்" என்று கூறினார்கள்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "உங்களில் ஒருவரிடம் கனவில் விளையாடப்பட்டால்" என்று இடம்பெறுகிறது. "ஷைத்தான் விளையாடினால்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 42
பாடம் : 3 கனவுக்கு விளக்கமளித்தல்.
4566. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் நேற்றிரவு கனவில் மேகம் ஒன்றைக் கண்டேன். அந்த மேகத்திலிருந்து நெய்யும் தேனும் சொட்டிக்கொண்டிருந்தன. உடனே மக்கள் தம் கைகளைக் காட்டி அவற்றைப் பிடித்துக்கொண்டிருக்கக் கண்டேன். (அவர்களில்) அதிகம் பிடித்தவர்களும் உண்டு; குறைவாகப் பிடித்தவர்களும் உண்டு.
அப்போது ஒரு கயிறு வானத்திலிருந்து பூமிவரை வந்து சேர்ந்ததையும் நான் கண்டேன். உடனே (அல்லாஹ்வின் தூதரே!) நீங்கள் அந்தக் கயிற்றைப் பற்றிக்கொண்டு மேலே சென்றுவிடக் கண்டேன். பிறகு உங்களுக்குப்பின் மற்றொரு மனிதர் அதைப் பற்றிக்கொண்டு அவரும் மேலே சென்று விட்டார்.
பிறகு (மூன்றாவதாக) இன்னொரு மனிதரும் அதைப் பற்றிக்கொண்டு அவரும் மேலே சென்றுவிட்டார். பிறகு (நான்காவதாக) இன்னொரு மனிதர் அதைப் பற்றிக்கொள்ள கயிறு அறுந்துவிட்டது. பிறகு மறுபடியும் அக்கயிறு அவருக்காக இணைக்கப்பட்டபோது, அந்த மனிதர் (அதைப் பற்றிக்கொண்டு) மேலே சென்றுவிட்டார்" என்று சொன்னார்.
அப்போது (அங்கிருந்த) அபூபக்ர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! அல்லாஹ்வின் மீதாணையாக! என்னை விடுங்கள்; இந்தக் கனவுக்கு நான் விளக்கமளிக்கிறேன்" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(சரி) இதற்கு விளக்கம் சொல்லுங்கள்" என்று சொன்னார்கள்.
அபூபக்ர் (ரலி) அவர்கள், "அந்த மேகம் "இஸ்லாம்" எனும் மேகமாகும். அதிலிருந்து சொட்டிக் கொண்டிருந்த நெய்யும் தேனும் குர்ஆனின் இனிமையும் மென்மையும் ஆகும். மக்கள் (தங்கள் கைகளைக் காட்டி) அதிலிருந்து பிடித்ததானது, குர்ஆனிலிருந்து அதிகம் கற்றவர்களையும் குறைவாகக் கற்றவர்களையும் குறிக்கிறது. வானிலிருந்து பூமிவரை வந்துசேர்ந்த அந்தக் கயிறானது, நீங்கள் இருந்துவருகின்ற சத்திய (மார்க்க)மாகும். அதை நீங்கள் (பின்)பற்றுகிறீர்கள். அல்லாஹ் உங்களை (வானளவுக்கு) உயர்த்திவிடுகிறான். பிறகு உங்களுக்குப் பின்னால் இன்னொரு மனிதர் அதைப் பற்றுகிறார். அதன்மூலம் அவரும் உயர்ந்துவிடுகிறார். அதன் பின்னர் இன்னொரு மனிதர் அதைப் பற்றிக்கொண்டு அவரும் உயர்ந்துவிடுகிறார். அதை (நான்காவதாக) மற்றொருவர் பற்றுகிறார். (முதலில்) அக்கயிறு அறுந்துவிடுகிறது. பிறகு அவருக்காக மீண்டும் அக்கயிறு இணைக்கப்பட்டவுடன் அதைப் பற்றிக்கொண்டு அவரும் உயர்ந்துவிடுகிறார்"என்று கூறிவிட்டு, "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! சொல்லுங்கள்! (நான் சொன்ன விளக்கம்) சரியா? அல்லது தவறா?" என்று கேட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "சிலவற்றைச் சரியாகச் சொன்னீர்கள்; சிலவற்றைத் தவறாகச் சொல்லிவிட்டீர்கள்" என்றார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் தவறாகக் கூறியதைத் தாங்கள் எனக்குத் தெரிவிக்க வேண்டும்" என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(இதை) சத்தியம் செய்து கேட்காதீர்கள் (நான் இதைப் பற்றிச் சொல்லப் போவதில்லை)" என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. (மேற்கண்ட அறிவிப்பு அல்லாத) மற்ற அறிவிப்புகளில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், அல்லது அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாகத் துவங்குகிறது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், நபி (ஸல்) அவர்கள் உஹுதுப் போரை முடித்துக்கொண்டு திரும்பியபோது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் நேற்றிரவு கனவில் மேகம் ஒன்றைக் கண்டேன். அதிலிருந்து நெய்யும் தேனும் சொட்டிக்கொண்டிருந்தது..." என்று கூறியதாக ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி), அல்லது அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் அறிவிப்பாளர் அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்) அவர்கள் பின்வரும் குறிப்பையும் தெரிவித்துள்ளார்கள்:
மஅமர் (ரஹ்) அவர்கள் சில வேளைகளில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தும் வேறுசில வேளைகளில் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தும் அறிவிக்கிறார்கள். அதில் "ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, நான் நேற்றிரவு (கனவில்) மேகம் ஒன்றைக் கண்டேன்..." என்று கூறியதாக ஹதீஸ் ஆரம்பமாகிறது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம் "உங்களில் எவரேனும் கனவு கண்டிருந்தால் அதை என்னிடம் கூறுங்கள்; அதற்கு நான் விளக்கம் சொல்கிறேன்" என்று கேட்பது வழக்கம். அப்போது ஒரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் மேகமொன்றைக் கண்டேன்..." என்று கூறியதாக ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸ்களில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 42
பாடம் : 4 நபி (ஸல்) அவர்கள் கண்ட கனவு.
4567. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் ஒரு நாள் இரவில் கனவு ஒன்றைக் கண்டேன். நாம் (தோழர்) உக்பா பின் ராஃபிஉ அல் அன்சாரீ அவர்களது இல்லத்தில் இருந்தோம். அப்போது நம்மிடம் "ருதப் பின் தாப்" (எனும் உயர்) வகை பேரீச்சம் பழங்கள் கொண்டுவரப்பட்டதைப் போன்றிருந்தது. அதற்கு நான், இம்மையில் நமக்கு கிடைக்கும் உயர்வையும் மறுமையில் கிடைக்கும் நல்ல முடிவையும் நமது மார்க்கம் (பலமான அடித்தளத்தைக் கொண்டு) முழுமையாகிவிட்டது என்பதையும் விளக்கமாகக் கண்டேன்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 42
4568. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் கனவில் ஒரு குச்சியால் பல் துலக்குவதைப் போன்று கண்டேன். அப்போது (என் அருகிலிருந்த) இரு மனிதர்கள் (அந்தக் குச்சிக்காகப் போட்டியிட்டுக்கொண்டு) என்னை இழுத்தனர். அவர்களில் ஒருவர் மற்றவரைவிட வயதில் பெரியவராக இருந்தார். அவர்களில் வயதில் சிறியவரிடம் பல் துலக்கும் அந்தக் குச்சியை நான் கொடுத்தேன். அப்போது என்னிடம் "வயதில் மூத்தவருக்கு முன்னுரிமை தருவீராக" என்று சொல்லப் பட்டது. ஆகவே, நான் பெரியவரிடம் அந்தக் குச்சியைக் கொடுத்தேன்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 42