பாடம் : 35 சோதிடம் பார்ப்பதும் சோதிடர்களிடம் செல்வதும் தடை செய்யப்பட்டவை ஆகும்.
4484. முஆவியா பின் அல்ஹகம் அஸ்ஸுலமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அறியாமைக் காலத்தில் பல (பாவ) காரியங்களைச் செய்துவந்தோம்; சோதிடர்களிடம் சென்று (குறி கேட்டுக்) கொண்டிருந்தோம்" என்று கூறினேன். அதற்கு அவர்கள், "சோதிடர்களிடம் நீங்கள் செல்லாதீர்கள்" என்றார்கள். மேலும், "நாங்கள் பறவையை வைத்துக் குறி பார்த்துக் கொண்டிருந்தோம்" என்று நான் கூறினேன். அதற்கு நபியவர்கள், "இது உங்களில் சிலர் தம் உள்ளங்களில் காணும் (ஐதிகம் சார்ந்த) விஷயமாகும். இது உங்களை (செயலாற்றுவதிலிருந்து) தடுத்துவிட வேண்டாம்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் முஆவியா பின் அல் ஹகம் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் மாலிக் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் பறவை சகுனம் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது; சோதிடர்கள் பற்றிய குறிப்பு இல்லை.
- மேற்கண்ட ஹதீஸ் முஆவியா பின் அல்ஹகம் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நான், "எங்களில் சிலர் (நற்குறி அறிய மணலில்) கோடு வரை(யும் பழங்கால கணிப்பு முறையை மேற்கொள்)கின்றனர்" என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நபிமார்களில் ஒருவர் (இவ்வாறு) கோடு வரைந்துவந்தார். யார் அவரைப் போன்று கோடு வரைகிறாரோ அது (சாத்தியம்)தான்" என்று பதிலளித்தார்கள்" என முஆவியா பின் அல்ஹகம் (ரலி) அவர்கள் கூறியதாகக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 39
4485. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! சோதிடர்கள் (சில வேளைகளில்) எங்களுக்கு ஒன்றை அறிவிக்க, அது உண்மையாகிவிடுவதைக் காண்கிறோமே (அது எப்படி)?" என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், "அது ஜின்னிடமிருந்து சோதிடன் எடுத்துக் கொண்ட உண்மையான சொல்லாகும். அ(ந்த உண்மையான கருத்)தை ஜின் தனது சோதிட நண்பனின் காதில் போட, அதனுடன் அவன் நூறு பொய்களைக் கூட்டி(ச் சொல்லி) விடுகிறான்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 39
4486. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மக்களில் சிலர் சோதிடர்களைப் பற்றிக் கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர்கள் (பொருட்படுத்தத்தக்க) ஒரு பொருள் அல்லர்" என்று சொன்னார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! இந்தச் சோதிடர்கள் (சில வேளைகளில்) ஒன்றை அறிவிக்கிறார்கள்; அது உண்மையாகிவிடுகிறதே?" என்று கேட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அந்த உண்மையான சொல் (வானவர்களிடமிருந்து) ஜின் (கள்ளத்தனமாக) எடுத்துக்கொண்டதாகும். அது தன் சோதிட நண்பனின் காதில் கோழி கொக்கரிப்பதைப் போன்று கொக்கரிக்க, அவன் அதனுடன் நூற்றுக்கும் அதிகமான பொய்களைக் கலந்துவிடுகிறான்" என்று பதிலளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4487. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அன்சாரி நபித்தோழர்களில் ஒருவர் என்னிடம் (பின்வருமாறு) கூறினார்:
ஒரு நாள் இரவில் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது (வானிலிருந்து) ஒரு நட்சத்திரம் எறியப்பட்டு ஒளிர்ந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடம் "இதைப் போன்று (வானிலிருந்து) நட்சத்திரம் எறியப்பட்டால், நீங்கள் அறியாமைக் காலத்தில் என்ன சொல்லிக் கொண்டிருந்தீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள். (அறியாமைக் காலத்தில் இவ்வாறு நட்சத்திரம் எறியப்பட்டால்) இன்றிரவு ஒரு மாமனிதர் பிறந்திருக்கிறார்; ஒரு மாமனிதர் இறந்திருக்கிறார் என்று சொல்லிக் கொண்டிருந்தோம்" என்று பதிலளித்தனர்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாருடைய பிறப்புக்காகவோ யாருடைய இறப்புக்காகவோ அது எறியப்படுவதில்லை. மாறாக, வளமும் புகழும் கொண்ட நம் இறைவன் ஒரு விஷயத்தைத் தீர்மானித்துவிட்டால், அரியணையை (அர்ஷ்) சுமக்கும் வானவர்கள் இறைவனை(ப் போற்றி)த் துதிக்கின்றனர். பிறகு (அதைக் கேட்டு) அதற்கடுத்த வானிலுள்ள (வான)வர்களும் (இறைவனைப் போற்றித்) துதிக்கின்றனர். (இவ்வாறே ஒவ்வொரு வானிலுள்ள வானவர்கள் துதிக்கின்றனர்.) இறுதியில் அத்துதி பூமிக்கு அருகிலுள்ள வானவர்களை வந்தடைகிறது.
பின்னர் அரியணையைச் சுமக்கும் வானவர்களுக்கு அருகிலிருப்பவர்கள், அரியணையைச் சுமக்கும் வானவர்களிடம், "உங்கள் இறைவன் என்ன சொன்னான்?" என்று வினவுகின்றனர். அதற்கு அரியணையைச் சுமக்கும் வானவர்கள் இறைவன் என்ன சொன்னான் என்பதை அவர்களிடம் தெரிவிக்கின்றனர். உடனே வானிலிருப்போரில் சிலர் வேறுசிலரிடம் அது குறித்து விசாரித்துக் கொள்கின்றனர்.
முடிவில் அச்செய்தி பூமிக்கு அருகிலுள்ள வானத்தை வந்தடைகிறது. உடனே அதை ஜின்கள் ஒட்டுக்கேட்டு, அதைத் தம் (சோதிட) நண்பர்களிடம் போடுகின்றனர். (அப்போது) அவர்கள்மீது நட்சத்திரங்கள் எறியப்படுகின்றன. உள்ளது உள்ளபடி சோதிடர்கள் தெரிவிப்பது உண்மையாகும். ஆயினும், அவர்கள் அதில் பொய்யைக் கலந்து கூடுதலாக (மக்களிடம்) கூறுகின்றனர்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஆயினும், அவற்றில் யூனுஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், அன்சாரி நபித்தோழர்கள் சிலர் கூறினர் என அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக ஹதீஸ் ஆரம்பமாகிறது.
அவ்ஸாஈ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "ஆயினும், சோதிடர்கள் அதில் பொய்யைக் கலந்து கூடுதலாக (மக்களிடம்) அறிவிக்கின்றனர்" என்று இடம்பெற்றுள்ளது.
யூனுஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "ஆயினும், சோதிடர்கள் அதில் சேர்த்துக் கூடுதலாக அறிவிக்கின்றனர்" என்று காணப்படுகிறது. மேலும், அவர்களது அறிவிப்பில், "அ(வ்வான)வர்களது அச்சம் விலகியதும் அவர்கள் "உங்கள் இறைவன் என்ன சொன்னான்?" என்று கேட்கின்றனர். அதற்கு அவர்கள் "உண்மையே சொன்னான்" என்று பதிலளிக்கின்றனர் (34:23)" என்று இடம்பெற்றுள்ளது.
மஅகில் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் அவ்ஸாஈயின் அறிவிப்பில் உள்ளதைப் போன்றே "ஆயினும், சோதிடர்கள் அதில் பொய்யைக் கலந்து கூடுதலாக அறிவிக்கின்றனர்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 39
4488. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் சோதிடனிடம் சென்று, எதைப் பற்றியாவது கேட்டால், அ(வ்வாறு கேட்ட)வருடைய நாற்பது நாட்களின் தொழுகை அங்கீகரிக்கப்படுவதில்லை.
இதை நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் சிலரிடமிருந்து ஸஃபிய்யா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 39
பாடம் : 36 தொழுநோயாளிகள் போன்றோரிடமிருந்து விலகியிருப்பது.
4489. ஷரீத் பின் சுவைத் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஸகீஃப் தூதுக்குழுவில் தொழுநோயாளி ஒருவர் இருந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், "நாம் உம்மிடம் உறுதிமொழி பெற்றுவிட்டோம். நீர் திரும்பிச் செல்லலாம்" என்று கூறியனுப்பினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
பாடம் : 37 பாம்பு உள்ளிட்டவற்றைக் கொல்வது.
4490. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "முதுகில் இரண்டு வெள்ளைக் கோடுகள் உள்ள ("துத் துஃப்யத்தைன்" எனும்) பாம்பைக் கொல்லுங்கள். ஏனெனில், அது (கண்) பார்வையைப் பறித்துவிடும்; கர்ப்பத்தைக் கலைத்துவிடும்" என்று உத்தரவிட்டார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "குட்டை வால் (அல்லது வால் இல்லாத) பாம்பையும், முதுகில் இரண்டு வெள்ளைக் கோடுகள் உள்ள பாம்பையும் கொல்லும் படி உத்தரவிட்டார்கள்" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 39
4491. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "பாம்புகளை(க் கொல்லுங்கள். குறிப்பாக) முதுகில் இரண்டு வெள்ளைக் கோடுகள் உள்ள பாம்பையும் குட்டைவால் (அல்லது வால் இல்லாத) பாம்பையும் கொல்லுங்கள். ஏனெனில், அவை இரண்டும் கர்ப்பத்தைக் கலைத்துவிடும்; பார்வையைப் பறித்துவிடும்" என்று கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளரான சாலிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(என் தந்தை) இப்னு உமர் (ரலி) அவர்கள் கண்ணில்படும் ஒவ்வொரு பாம்பையும் கொன்றுவந்தார்கள். (ஒரு நாள்) அவர்கள் பாம்பொன்றைக் விரட்டிக்கொண்டிருப்பதைக் கண்ட அபூலுபாபா பின் அப்தில் முன்திர் (ரலி), அல்லது ஸைத் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், "வீடுகளில் வசிக்கும் பாம்புகளைக் கொல்வது தடை செய்யப்பட்டுள்ளது" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 39
4492. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நாய்களைக் கொல்லும்படி உத்தரவிடுவதை நான் கேட்டுள்ளேன். அவர்கள், "பாம்புகளையும் நாய்களையும் கொல்லுங்கள்; (குறிப்பாக) முதுகில் இரண்டு வெள்ளைக் கோடுகள் உள்ள பாம்பையும் குட்டைவால் (அல்லது வால் இல்லாத) பாம்பையும் கொல்லுங்கள். ஏனெனில், அவை இரண்டும் (கண்) பார்வையைப் பறித்துவிடும்; கர்ப்பத்தைக் கலைத்துவிடும்" என்று கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவை இரண்டின் விஷத்தன்மை காரணமாகவே அவற்றைக் கொல்லும்படி உத்தரவிட்டுள்ளார்கள் என்றே நாம் கருதுகிறோம். அல்லாஹ் மிகவும் அறிந்தவன்.
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நான் என் கண்ணில் படும் எந்தப் பாம்பையும் கொன்றுவந்தேன். இந்நிலையில் ஒரு நாள் வீட்டில் வசிக்கும் பாம்பொன்றை நான் விரட்டிக்கொண்டிருந்தேன். அப்போது என்னை ஸைத் பின் அல்கத்தாப் (ரலி), அல்லது அபூ லுபாபா (ரலி) அவர்கள் கடந்து சென்றார்கள். நான் அந்தப் பாம்பைத் தேடிக்கொண்டிருந்தேன்.
அப்போது அவர்கள், "அப்துல்லாஹ்வே, நிறுத்துங்கள் (அதைக் கொல்லாதீர்கள்)" என்று கூறினார்கள். நான் "அவற்றைக் கொல்லும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தர விட்டுள்ளார்கள்" என்று சொன்னேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீடுகளில் வசிக்கும் பாம்புகளைக் கொல்ல வேண்டாம் எனத் தடை செய்துள்ளார்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 39
4493. மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் சாலிஹ் பின் கைசான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "இந்நிலையில் என்னைக் கண்ட அபூலுபாபா பின் அப்தில் முன்திர் (ரலி), ஸைத் பின் அல்கத்தாப் (ரலி) ஆகிய இருவரும், "வீடுகளில் வசிக்கும் பாம்புகளைக் கொல்ல வேண்டாமெனத் தடை செய்துள்ளார்கள் என்று கூறினர்" என இடம்பெற்றுள்ளது.
யூனுஸ் பின் யஸீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "பாம்புகளைக் கொல்லுங்கள்" என்பது மட்டுமே இடம்பெற்றுள்ளது. "முதுகில் இரண்டு வெள்ளைக் கோடுகள் உள்ள பாம்பையும் குட்டைவால் (அல்லது வால் இல்லாத) பாம்பையும் கொல்லுங்கள்" என்பது இடம் பெறவில்லை.
அத்தியாயம் : 39
4494. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூலுபாபா (ரலி) அவர்கள், இப்னு உமர் (ரலி) அவர்களது வீட்டில் பள்ளிவாசலுக்குச் சமீபமாகச் செல்லும் வகையில் ஒரு வாசல் அமைப்பது குறித்து இப்னு உமர் (ரலி) அவர்களிடம் பேசினார்கள். (வாசலமைக்கும் பணி நடைபெற்றபோது) பணியாளர்கள் பாம்பின் சட்டையொன்றைக் கண்டனர். அப்போது இப்னு உமர் (ரலி) அவர்கள், "பாம்பைத் தேடிப் பிடித்துக் கொல்லுங்கள்" என்று கூறினார்கள். அதற்கு அபூலுபாபா (ரலி) அவர்கள், "அதைக் கொல்லாதீர்கள்; ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீட்டிலுள்ள (மெல்லிய வெண்ணிறப்) பாம்புகளைக் கொல்ல வேண்டாமெனத் தடை செய்துள்ளார்கள்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4495. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள் எல்லாப் பாம்புகளையும் கொன்றுவந்தார்கள். அபூ லுபாபா பின் அப்தில் முன்திர் அல்பத்ரீ (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீடுகளிலுள்ள பாம்புகளைக் கொல்ல வேண்டாமெனத் தடை செய்துள்ளார்கள்" என்று கூறியதும் (அவற்றைக் கொல்வதை) நிறுத்திவிட்டார்கள்.
அத்தியாயம் : 39
4496. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூலுபாபா (ரலி) அவர்கள் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீடுகளில் வசிக்கும் (மெல்லிய வெண்ணிறப்) பாம்புகளைக் கொல்ல வேண்டாமெனத் தடை செய்துள்ளார்கள்" என்று கூறியதை நான் கேட்டேன்.
அத்தியாயம் : 39
4497. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூலுபாபா (ரலி) அவர்கள் என்னிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீடுகளில் வசிக்கும் (மெல்லிய வெண்ணிறப்) பாம்புகளைக் கொல்ல வேண்டாமெனத் தடை செய்துள்ளார்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4498. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூலுபாபா பின் அப்தில் முன்திர் அல்அன்சாரீ (ரலி) அவர்களது இல்லம் "குபா"வில் இருந்தது. பின்னர் அவர்கள் மதீனாவுக்குக் குடிபெயர்ந்தார்கள். (ஒரு நாள்) அவர்களுடன் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அமர்ந்திருந்த போது, இப்னு உமர் (ரலி) அவர்கள் (தமது வீட்டில்) வாசல் ஒன்றை அமைத்துக்கொண்டிருந்தார்கள். அப்போது வீட்டில் வசிக்கும் பாம்பு ஒன்று வெளிப்பட்டது.
அங்கிருந்தவர்கள் அதைக் கொல்ல முற்பட்டனர். அப்போது அபூலுபாபா (ரலி) அவர்கள் அவற்றை (அதாவது வீடுகளில் வசிக்கும் பாம்புகளை)க் கொல்வது தடை செய்யப்பட்டுள்ளது. குட்டைவால் (அல்லது வால் இல்லாத) பாம்பையும் முதுகில் இரண்டு வெள்ளைக் கோடுகள் உள்ள பாம்பையும் கொல்லும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. அவையிரண்டும் பார்வையைப் பறித்துவிடும்; பெண்களின் (வயிற்றிலுள்ள) சிசுக்களைக் கலைத்துவிடும் என்று சொல்லப்பட்டுள்ளது"என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 39
4499. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், ஒரு நாள் தமது கட்டட இடிபாடுகளுக்கு அருகிலிருந்த போது (மெல்லிய வெண்ணிறப்) பாம்பு ஒன்று மின்னுவதைக் கண்டார்கள். உடனே "இந்தப் பாம்பை விரட்டிப் பிடித்துக் கொல்லுங்கள்"என்று கூறினார்கள். (அங்கிருந்த) அபூலுபாபா அல்அன்சாரீ (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீட்டிலிருக்கும் (மெல்லிய வெண்ணிறப்) பாம்புகளைக் கொல்ல வேண்டாமெனத் தடை செய்துள்ளார்கள்; குட்டைவால் (அல்லது வால் இல்லாத) பாம்பையும் முதுகில் இரண்டு வெள்ளைக் கோடுகள் உள்ள பாம்பையும் தவிர. ஏனெனில், அவையிரண்டும் (கண்) பார்வையைப் பறித்துவிடும்; பெண்களின் வயிற்றிலுள்ளதைக் கலைத்துவிடும் என்று கூறினார்கள்" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் நாஃபிஉ (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "இப்னு உமர் (ரலி) அவர்கள் (தம் தந்தை) உமர் (ரலி) அவர்களது வீட்டிற்கு அருகிலுள்ள கோட்டையொன்றின் அருகில் பாம்பொன்றைத் தேடிக்கொண்டிருந்தபோது, அவர்களைக் கடந்து அபூலுபாபா (ரலி) அவர்கள் சென்றார்கள்..."என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.
அத்தியாயம் : 39
4500. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள் மினாவிலுள்ள) ஒரு குகையில் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அவர்களுக்கு "வல்முர்சலாத்தி உர்ஃபன்" (ஒன்றன்பின் ஒன்றாக அனுப்பப்படுகின்றவை மீது சத்தியமாக!) என்று தொடங்கும் (77ஆவது) அத்தியாயம் அருளப்பெற்றது. அதை நாங்கள் நபி (ஸல்) அவர்களின் வாயிலிருந்து புத்தம் புதிதாகச் செவியுற்றுக்கொண்டிருந்தோம்.
அப்போது பாம்பு ஒன்று (புற்றிலிருந்து) வெளியேறி எங்களிடையே வந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள், "அதைக் கொல்லுங்கள்" என்றார்கள். உடனே அதைக் கொல்ல போட்டியிட்டுக் கொண்டு நாங்கள் விரைந்தோம். அது எங்களை முந்திக்கொண்டு (தனது புற்றுக்குள் நுழைந்து)விட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், "உங்களை அதன் தீங்கிலிருந்து அல்லாஹ் காப்பாற்றியதைப் போன்று, அதையும் உங்கள் தீங்கிலிருந்து அல்லாஹ் காப்பாற்றிவிட்டான்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4501. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டியிருந்த ஒருவருக்கு "மினா"வில் பாம்பு ஒன்றைக் கொல்ல உத்தரவிட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் (ஒரு நாள் மினாவிலுள்ள) ஒரு குகையில் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தபோது..."என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன.
அத்தியாயம் : 39
4502. ஹிஷாம் பின் ஸுஹ்ரா (ரஹ்) அவர்களின் முன்னாள் அடிமை அபுஸ்ஸாயிப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களது இல்லத்திற்குச் சென்றேன். அப்போது அவர்கள் தொழுதுகொண்டிருப்பதைக் கண்டேன். ஆகவே, அவர்கள் தொழுகையை முடிக்கும்வரை அவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். அப்போது வீட்டின் மூலையிலிருந்த பேரீச்சமர காய்ந்த குச்சிகளுக்கு இடையிலிருந்து ஏதோ அசையும் சப்தத்தை நான் கேட்டேன். உடனே நான் திரும்பிப் பார்த்தேன். அங்கே ஒரு பாம்பு இருந்தது. அதைக் கொல்வதற்காக நான் துள்ளிக் குதித்து எழுந்தேன்.
உடனே அபூசயீத் (ரலி) அவர்கள் அமருமாறு எனக்குச் சைகை செய்தார்கள். ஆகவே, நான் அமர்ந்துகொண்டேன். அவர்கள் தொழுகையை முடித்துத் திரும்பியபின் அவ்வீட்டிலிருந்த ஓர் அறையை எனக்குச் சுட்டிக்காட்டி, "இந்த அறையை நீர் காண்கிறீரா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். அப்போது அபூசயீத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
இந்த அறையில் புதிதாகத் திருமணமான எங்கள் இளைஞர் ஒருவர் இருந்தார். நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அகழ்ப்போருக்குப் புறப்பட்டுச் சென்றபோது, அந்த இளைஞர் நண்பகல் நேரங்களில் தம் வீட்டாரிடம் திரும்பிச் செல்ல அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டுக்கொண்டிருந்தார்.
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதியளித்தார்கள். (அவர் திரும்பிச் செல்லப்போனபோது) அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உமது ஆயுதத்தை உம்முடனேயே வைத்துக்கொள். ஏனெனில், பனூ குறைழா யூதர்களை உம்முடைய விஷயத்தில் நான் அஞ்சுகிறேன்" என்று சொன்னார்கள். அவ்வாறே அந்த மனிதர் (தம்முடன்) ஆயுதத்தை எடுத்துக்கொண்டார்.
பிறகு அவர் திரும்பி வந்தபோது அவரது (புது) மனைவி வீட்டு வாசலில் இரு நிலைக் கால்களுக்கிடையே நின்றுகொண்டிருந்தாள். உடனே அவர் அவள்மீது எறிவதற்காக ஈட்டியை நோக்கித் தமது கையைக் கொண்டு சென்றார். உடனே அவருடைய மனைவிக்கு ரோஷம் ஏற்பட்டு, "ஈட்டி எறிவதை நிறுத்துங்கள். (முதலில்) வீட்டுக்குள் நுழைந்து,நான் வெளியே வந்து நின்றதற்கு என்ன காரணம் என்பதைப் பாருங்கள்" என்று கூறினாள். அவ்வாறே அவர் வீட்டுக்குள் நுழைந்து பார்த்த போது, அங்கு மிகப் பெரிய பாம்பு ஒன்று படுக்கை விரிப்பின் மீது சுருண்டு கிடந்தது.
உடனே அவர் அதன் அருகில் ஈட்டியைக் கொண்டுசென்று (அதன் மீது ஈட்டியைச் செலுத்தி) அதன் உடலுக்குள் ஈட்டியைச் செருகினார். பிறகு அறையிலிருந்து வெளியே வந்து வீட்டி(ன் வளாகத்தி)ல் அந்த ஈட்டியை நட்டு வைத்தார். அந்த ஈட்டியில் கிடந்து பாம்பு துடித்தது. பிறகு அவ்விருவரில் யார் முதலில் இறந்தார்கள். அந்த பாம்பா? அல்லது அந்த இளைஞரா என்பது தெரியவில்லை. (பாம்பும் இளைஞரும் இருவருமே இறந்துவிட்டனர்.)
உடனே நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து தகவல் தெரிவித்தோம்; "அவரை (மீண்டும்) உயிர்ப்பிக்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்று கூறினோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உங்கள் நண்பருக்காக நீங்கள் பாவமன்னிப்புக் கோருங்கள்" என்று சொன்னார்கள்.
பிறகு "மதீனாவில் ஜின்கள் சில இஸ்லாத்தைத் தழுவியுள்ளன. அவற்றில் எதையேனும் நீங்கள் (பாம்பு வடிவத்தில்) கண்டால், அதற்கு நீங்கள் (வெளியேறுமாறு) மூன்று நாட்கள் அறிவிப்புச் செய்யுங்கள். அதற்குப் பின்னரும் அது உங்களுக்குத் தென்பட்டால், அதைக் கொன்றுவிடுங்கள். ஏனெனில், அது ஷைத்தான்தான்" என்றார்கள்.
அத்தியாயம் : 39
4503. மேற்கண்ட ஹதீஸ் அபுஸ்ஸாயிப் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நாங்கள் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களது இல்லத்திற்குச் சென்றோம். நாங்கள் அமர்ந்திருந்தபோது அவர்களது கட்டிலுக்குக் கீழே ஏதோ அசையும் சப்தத்தைக் கேட்டோம். நாங்கள் உற்றுப் பார்த்தபோது அங்கு பாம்பு ஒன்று இருந்தது..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற நிகழ்வுகள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
மேலும் அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இந்த வீடுகளில் வசிப்பவை சில உள்ளன. அவற்றில் எதையேனும் நீங்கள் கண்டால் அவற்றுக்கு மூன்று நாட்கள் நெருக்கடி கொடுங்கள். (மூன்று நாட்களுக்குள்) சென்றுவிட்டால் சரி. இல்லாவிட்டால் அதைக் கொன்றுவிடுங்கள். ஏனெனில், அது ஷைத்தான் ஆகும்" என்றும்,மக்களிடம் "நீங்கள் சென்று உங்கள் நண்பரை அடக்கம் செய்யுங்கள்" என்றும் கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 39