4353. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூமூசா (ரலி) அவர்கள் (கலீஃபா) உமர் (ரலி) அவர்களின் (வீட்டு) வாசலுக்குச் சென்று (உள்ளே நுழைய) அனுமதி கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள் "ஒன்று" என்றார்கள். பிறகு அபூமூசா (ரலி) அவர்கள் இரண்டாவது முறை அனுமதி கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள் "இரண்டு" என்றார்கள். பிறகு அபூமூசா (ரலி) அவர்கள் மூன்றாவது முறை அனுமதி கேட்ட போது, உமர் (ரலி) அவர்கள் "மூன்று" என்றார்கள்.
பிறகு அபூமூசா (ரலி) அவர்கள் திரும்பி வந்துவிட்டார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் அபூமூசா (ரலி) அவர்களைப் பின்தொடர்ந்து வந்து தம்மிடம் திரும்பிவரச் செய்து, "இவ்வாறு நீர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து மனனமிட்டிருந்தால் அதற்கு ஆதாரம் கொண்டுவாருங்கள். இல்லாவிட்டால் உம்மை (மற்றவர்களுக்கு) ஒரு பாடமாக ஆக்கி விடுவேன்" என்று கூறினார்கள்.
அப்போது அபூமூசா (ரலி) அவர்கள் எங்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அனுமதி கோருதல் மூன்று முறையாகும்" என்று கூறியதை நீங்கள் அறிவீர்களா?" என்று கேட்டார்கள். அதைக் கேட்டு மக்கள் சிரிக்கலாயினர். உடனே நான், "உங்களுடைய முஸ்லிம் சகோதரர் பீதிக்குள்ளாக்கப்பட்ட நிலையில் உங்களிடம் வந்துள்ளார். (அவரைக் கண்டு) நீங்கள் சிரிக்கிறீர்களே?" என்று கூறிவிட்டு, (அபூமூசா (ரலி) அவர்களிடம்) "நீங்கள் வாருங்கள். இந்தத் தண்டனையில் உங்களுக்கு நான் பங்காளியாவேன்" என்று கூறிவிட்டு, உமர் (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அபூமூசா (ரலி) அவர்கள், "இதோ அபூசயீத் (சாட்சி)" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 38
4354. உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூமூசா (ரலி) அவர்கள் (கலீஃபா) உமர் (ரலி) அவர்களிடம் (சென்று அவர்களது இல்லத்திற்குள் நுழைய) மூன்று முறை அனுமதி கேட்டார்கள். (ஆனால், அவர்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை. அப்போது) உமர் (ரலி) அவர்கள் ஏதோ அலுவலில் ஈடுபட்டிருந்ததைக் கண்டார்கள் போலும். எனவே, அபூமூசா (ரலி) அவர்கள் திரும்பிவிட்டார்கள்.
(அலுவலை முடித்த) பிறகு உமர் (ரலி) அவர்கள், "அப்துல்லாஹ் பின் கைஸ் (ரலி) அவர்களின் (அபூமூசா) குரலை நீங்கள் கேட்கவில்லையா? அவருக்கு அனுமதி அளியுங்கள்" என்றார்கள். பிறகு அபூமூசா (ரலி) அவர்கள் அழைக்கப்பட்டார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், "இவ்வாறு நீங்கள் செய்ததற்கு என்ன காரணம் (ஏன் மூன்று முறை அனுமதி கோரி விட்டுத் திரும்பிச் சென்றுவிட்டீர்கள்)?" என்று கேட்டார்கள்.
அபூமூசா (ரலி) அவர்கள், "இவ்வாறே நாங்கள் கட்டளையிடப்பட்டிருந்தோம்" என்று பதிலளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள், "நீங்கள் இதற்குரிய சான்றை நிலைநிறுத்த வேண்டும். அல்லது நான் (இன்னின்னவாறு) நடவடிக்கை எடுப்பேன்" என்றார்கள்.
எனவே, அபூமூசா (ரலி) அவர்கள் அன்சாரிகளின் அவையொன்றை நோக்கிப் புறப்பட்டார்கள். அன்சாரிகள், "எங்களில் சிறியவர் ஒருவரே இதற்காக உமக்குச் சாட்சியமளிப்பார்" என்று கூறினர். ஆகவே, அபூசயீத் (ரலி) அவர்கள் எழுந்து (உமர் (ரலி) அவர்களிடம் சென்று), "இவ்வாறே நாங்கள் கட்டளையிடப்பட்டிருந்தோம்" என்று கூற, உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த விவரம் எனக்குத் தெரியாமல் போய் விட்டதே! (நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறிய நாளில்) கடைவீதிகளில் நான் வணிகத்தில் ஈடுபட்டிருந்தது எனது கவனத்தைத் திசை திருப்பிவிட்டது (போலும்)" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் நள்ர் பின் ஷுமைல் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "கடைவீதிகளில் நான் வணிகத்தில் ஈடுபட்டிருந்தது எனது கவனத்தைத் திசை திருப்பிவிட்டது" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 38
4355. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் வந்து, "அஸ்ஸலாமு அலைக்கும். இதோ! அப்துல்லாஹ் பின் கைஸ் வந்துள்ளேன்" என்று கூறி (அனுமதி கோரி)னேன். அவர்கள் எனக்கு அனுமதி வழங்கவில்லை. பிறகு (மீண்டும்) நான், "அஸ்ஸலாமு அலைக்கும். இதோ! அபூமூசா (வந்துள்ளேன்). அஸ்ஸலாமு அலைக்கும். இதோ! அஷ்அரீ (வந்துள்ளேன்)" என்று (இன்னும் இரண்டு முறை) அனுமதி கோரினேன். (அனுமதி கிடைக்காததால்) பிறகு நான் திரும்பி வந்துவிட்டேன்.
அப்போது உமர் (ரலி) அவர்கள் "அவரை என்னிடம் அழைத்து வாருங்கள். அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்"என்று கூறினார்கள். நான் (மீண்டும்) வந்தபோது, "அபூமூசா! ஏன் திரும்பிச் சென்றீர்? நாம் ஓர் அலுவலில் ஈடுபட்டிருந்தோம்" என்று கூறினார்கள்.
நான், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அனுமதி கோருதல் மூன்று முறையாகும். (மூன்று முறைக்குள்) உமக்கு அனுமதி வழங்கப்பட்டால் சரி. இல்லாவிட்டால் நீர் திரும்பிவிடுக" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்"என்றேன்.
உமர் (ரலி) அவர்கள் "இ(வ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்ப)தற்கு நீங்கள் சாட்சி கொண்டுவர வேண்டும். இல்லாவிட்டால் இப்படி இப்படிச் செய்து விடுவேன்" என்று கூறினார்கள். ஆகவே, நான் (அன்சாரிகளின் அவைக்குச்) சென்றேன்.
உமர் (ரலி) அவர்கள், "அவருக்குச் சாட்சி கிடைத்தால் மாலையில் அவரைச் சொற்பொழிவு மேடைக்கு அருகில் நீங்கள் காண்பீர்கள். சாட்சி கிடைக்காவிட்டால் அவரை நீங்கள் காணமாட்டீர்கள்" என்று கூறினார்கள்.
மாலை நேரமானபோது என்னைக் கண்ட மக்கள், "அபூமூசா! நீர் என்ன சொல்கிறீர்? சாட்சி கிடைத்துவிட்டாரா?" என்று உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். நான் "ஆம், உபை பின் கஅப் (ரலி) அவர்களே (சாட்சி)" என்றேன். உமர் (ரலி) அவர்கள் "அவர் நேர்மையானவர்தாம்" என்று கூறி விட்டு, "அபுத்துஃபைல்! இவர் என்ன சொல்கிறார்?" என்று கேட்டார்கள்.
அதற்கு உபை பின் கஅப் (ரலி) அவர்கள், "கத்தாபின் புதல்வரே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதை நான் கேட்டுள்ளேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுக்கு நீரே ஒரு வேதனையாக ஆகிவிடாதீர்" என்று கூறினார்கள்.
அதற்கு உமர் (ரலி) அவர்கள், "சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்). இதைக் குறித்து ஒன்றைக் கேள்விப்பட்டேன். அதை உறுதி செய்துகொள்ளவே விரும்பினேன்" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், உமர் (ரலி) அவர்கள், "அபுல்முன்திர்! நீங்கள் இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?" என்று உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். அதற்கு உபை பின் கஅப் (ரலி) அவர்கள், "ஆம், கத்தாபின் புதல்வரே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுக்கு நீரே ஒரு வேதனையாக ஆகிவிடாதீர்" என்று கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது. அதில் உமர் (ரலி) அவர்கள் "சுப்ஹானல்லாஹ்" என்று கூறியதும் அதற்குப் பின் உள்ளவையும் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 38
பாடம் : 8 "யார் அது?" என்று கேட்கப்படும்போது (பெயரைச் சொல்லாமல்) "நான்" என்று அனுமதி கேட்பவர் பதிலளிப்பது வெறுக்கத்தக்கதாகும்.
4356. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று (அவர்களை) அழைத்தேன். நபி (ஸல்) அவர்கள், "யார் அது?" என்று கேட்டார்கள். நான் "நான்தான்" என்று பதிலளித்தேன். அப்போது அவர்கள் "நான்... நான் (என்றால்...?)" என்று கூறியபடி வெளியே வந்தார்கள்.
அத்தியாயம் : 38
4357. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நான் நபி (ஸல்) அவர்களிடம் உள்ளேவர அனுமதி கேட்டேன். அவர்கள், "யார் அது?" என்று கேட்டார்கள். அதற்கு நான் "நான்தான்" என்று பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள் "நான்... நான் (என்றால்...?)" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "அவ்வாறு கூறியதை அவர்கள் வெறுத்ததைப் போன்றிருந்தது" என இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 38
பாடம் : 9 பிறர் வீட்டில் எட்டிப்பார்ப்பது தடை செய்யப்பட்டதாகும்.
4358. சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் கதவில் ஒரு துவாரத்தின் வழியாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது அறையினுள் எட்டிப்பார்த்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஈர்வலி (பேன் சீப்பு) ஒன்றிருந்தது. அதன் மூலம் அவர்கள் தமது தலையைக் கோதிக்கொண்டிருந்தார்கள்.
அவரைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீ என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்று எனக்கு (முன்பே) தெரிந்திருந்தால், இந்த ஈர்வலியால் உன் கண்ணைக் குத்தியிருப்பேன்" என்று கூறிவிட்டு, "(வீட்டுக்குள் நுழைய) அனுமதி கேட்க வேண்டும் என்று சட்டமாக்கப்பட்டதே, பார்வை (எல்லை மீறி வீட்டிலிருப்பவர்கள்மீது விழக்கூடும் என்ற) காரணத்தால்தான்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 38
4359. சஹ்ல் பின் சஅத் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் கதவில் ஒரு துவாரத்தின் வழியாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அறையினுள் எட்டிப்பார்த்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஈர்வலி (பேன் சீப்பு) ஒன்றிருந்தது. அதன் மூலம் அவர்கள் தமது தலையைச் சீவிக்கொண்டிருந்தார்கள்.
அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ பார்த்துக்கொண்டிருக்கிறாய் என நான் (முன்பே) அறிந்திருந்தால்,இந்த ஈர்வலியால் உன் கண்ணைக் குத்தியிருப்பேன். (வீட்டுக்குள் நுழைய) அனுமதி கேட்கவேண்டும் என்று அல்லாஹ் சட்டமாக்கியிருப்பதே, பார்வை (எல்லை மீறி வீட்டிலிருப்பவர்கள்மீது விழக்கூடும் என்ற) காரணத்தால்தான்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 38
4360. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களின் அறைகளில் ஒன்றின் வழியாக எட்டிப்பார்த்தார். (இதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள் நீளமான அம்பின் "கூர்முனையுடன்" அல்லது "கூர்முனைகளுடன்" அவருக்குத் தெரியாமல் அவரை நோக்கிச் சென்று (அவரது கண்ணில்) குத்தப் போனதை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 38
4361. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு குடும்பத்தாரின் அனுமதியின்றி அவர்களது வீட்டினுள் யாரேனும் எட்டிப்பார்த்தால், அவரது கண்ணைப் பறிக்கவும் அவர்களுக்கு அனுமதி உண்டு.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 38
4362. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உன் அனுமதியின்றி ஒரு மனிதர் உன்னை எட்டிப் பார்த்தபோது, அவர்மீது நீ சிறு கல்லைச் சுண்டியெறிய, அது அவரது கண்ணைப் பறித்துவிட்டால் உன்மீது எந்தக் குற்றமுமில்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 38
பாடம் : 10 எதேச்சையாகப் பார்வை விழுவது.
4363. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எதேச்சையாக (அந்நியப் பெண்மீது) பார்வை விழுவதைப் பற்றிக்கேட்டேன். அப்போது எனது பார்வையை (உடனடியாகத்) திருப்பிக்கொள்ள வேண்டுமென அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே வேறு இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 38

பாடம்: 1 வாகனத்தில் செல்பவர் நடந்து செல்பவருக்கும், (எண்ணிக்கையில்) குறைந்தவர்கள் அதிகமானவர்களுக்கும் (முதலில்) முகமன் (சலாம்) சொல்ல வேண்டும்.
4364. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வாகனத்தில் செல்பவர் நடந்து செல்பவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், (எண்ணிக்கையில்) குறைந்தவர்கள் அதிகமானவர்களுக்கும் (முதலில்) முகமன் (சலாம்) சொல்லட்டும். - இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
பாடம் : 2 முகமனுக்குப் பதிலுரைப்பது சாலையில் அமர்வதன் ஒழுங்கு முறைகளில் ஒன்றாகும்.
4365. அபூதல்ஹா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் வீட்டு முற்றங்களில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்போம். (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து எங்களிடையே நின்று, "சாலையோரங்களில் அமர்ந்து (பேசிக்) கொண்டிருப்பதற்கு உங்களுக்கு என்ன (அவசியம்) நேர்ந்தது? சாலையோரங்களில் அமர்வதைத் தவிர்த்துவிடுங்கள்" என்று கூறினார்கள். நாங்கள் "அவசியத்தை முன்னிட்டே அமர்கிறோம். (இங்கு அமர்ந்துதான் பல விஷயங்கள் குறித்து) நாங்கள் பேசிக்கொள்கிறோம்;கலந்துரையாடுகிறோம்" என்று கூறினோம்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதைத் தவிர்க்க முடியாது என்றிருந்தால், சாலைகளுக்கு அவற்றின் உரிமையை வழங்கிவிடுங்கள். (அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக்கொள்வதும், முகமனுக்குப் பதிலுரைப்பதும், நல்ல பேச்சுக்களைப் பேசுவதும் (அவற்றின் உரிமை) ஆகும்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 39
4366. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் சாலைகளில் அமர்வதைத் தவிர்த்துவிடுங்கள்" என்று கூறினார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அங்கு அமராமல் இருக்க இயலாது. அங்கு (அமர்ந்துதான் பல விஷயங்களை) நாங்கள் பேசிக்கொள்கிறோம்" என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(அங்கு) நீங்கள் அமர்ந்துதான் ஆகவேண்டும் என்றிருந்தால், சாலைக்கு வழங்க வேண்டிய உரிமையை வழங்கிவிடுங்கள்" என்று கூறினார்கள். மக்கள், "சாலையின் உரிமை என்ன?" என்று வினவினர். நபி (ஸல்) அவர்கள், "(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக்கொள்வதும், (பாதசாரிகளுக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், முகமனுக்குப் பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமை) ஆகும்" என்று பதிலளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
பாடம் : 3 முகமனுக்குப் பதிலுரைப்பது, ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்றாகும்.
4367. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் தம் (கொள்கைச்) சகோதரருக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்தாகும். 1. முகமனுக்குப் பதிலுரைப்பது 2. தும்மி ("அல்ஹம்துலில்லாஹ்" என்று கூறி)யவருக்கு ("யர்ஹமுகல்லாஹ்" என்று) மறுமொழி கூறுவது 3. விருந்தழைப்பை ஏற்பது. 4. நோயாளியை நலம் விசாரிப்பது 5. ஜனாஸாவில் கலந்து கொள்வது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(பொதுவாக) இந்த ஹதீஸை மஅமர் (ரஹ்) அவர்கள், ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்து "முர்சலா"கவே அறிவிப்பார்கள்.
ஒரு முறை மஅமர் (ரஹ்) அவர்கள், "ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்களிடமிருந்தும்,சயீத் அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தும் கூறியதாவது" என்று (முஸ்னதாக) அறிவித்தார்கள்.
அத்தியாயம் : 39
4368. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஆறாகும்" என்று கூறினார்கள். "அவை யாவை, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்கப்பட்டது.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவரைச் சந்திக்கும்போது முகமன் கூறுவாயாக. அவர் உன்னை விருந்துக்கு அழைத்தால் அவருக்குப் பதிலளிப்பாயாக. அவர் உன்னிடத்தில் அறிவுரை கூறச்சொன்னால் அவருக்கு அறிவுரை கூறுவாயாக. அவர் தும்மி "அல்ஹம்துலில்லாஹ்" என்று கூறினால் (யர்ஹமு கல்லாஹ் என்று) அவருக்கு மறுமொழி கூறுவாயாக. அவர் நோய்வாய்ப்பட்டால் அவரை உடல்நலம் விசாரிப்பாயாக. அவர் இறந்துவிட்டால் அவரது ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்வாயாக" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
பாடம் : 4 வேதக்காரர்களுக்கு (நாம்) முதலில் முகமன் கூறுவது தடை செய்யப்பட்டதாகும் என்பதும் அவர்களுக்கு எவ்வாறு பதில் முகமன் கூற வேண்டும் என்பதும்.
4369. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வேதக்காரர்கள் உங்களுக்கு முகமன் (சலாம்) கூறினால், "வ அலைக்கும்" (நீங்கள் சொன்னது உங்களுக்கும் நேரட்டும்) என்று (பதில்) கூறுங்கள்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4370. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம், "வேதக்காரர்கள் எங்களுக்கு முகமன் (சலாம்) கூறினால், நாங்கள் அவர்களுக்கு எவ்வாறு பதில் (முகமன்) கூற வேண்டும்?" என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "வ அலைக்கும்" (நீங்கள் சொன்னது உங்களுக்கும் நேரட்டும்) என்று (பதில்) கூறுங்கள் என விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4371. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யூதர்கள் உங்களுக்கு முகமன் (சலாம்) கூறினால் அவர்களில் சிலர் "அஸ்ஸாமு அலைக்க" (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்றே கூறுவர். ஆகவே, (அவர்களுக்குப் பதிலாக) "அலைக்க" (நீ சொன்னது உனக்கு உண்டாகட்டும்) என்று கூறுவீராக.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4372. மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "ஆகவே, (அவர்களுக்குப் பதிலாக) "வ அலைக்க" (நீ சொன்னது உனக்கும் உண்டாகட்டும்) என்று கூறுவீராக"என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 39