432. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மீசையை ஒட்ட நறுக்குங்கள். தாடியை வளரவிடுங்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 2
433. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மீசையை ஒட்ட நறுக்குமாறும் தாடியை வளர்க்குமாறும் கட்டளையிட்டார்கள்.
அத்தியாயம் : 2
434. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: மீசையை ஒட்ட நறுக்குங்கள். தாடியை வளரவிடுங்கள்.-இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 2
435. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மீசையை ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளரவிடுங்கள். அக்னி ஆராதகர் (மஜூசி)களுக்கு மாறு செய்யுங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 2
436. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பத்து விஷயங்கள் இயற்கை மரபுகளில் அடங்கும். (அவையாவன:) மீசையைக் கத்தரிப்பது, தாடியை வளர்ப்பது, பல் துலக்குவது, நாசிக்கு நீர் செலுத்துவது, நகங்களை வெட்டுவது, விரல் கணுக்களைக் கழுவுவது, அக்குள் முடிகளை அகற்றுவது, மர்ம உறுப்பின் முடிகளை மழிப்பது, (மல ஜலம் கழித்த பின்) தண்ணீரால் துப்புரவு செய்வது.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்தள்ளது.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸகரிய்யா பின் அபீஸாயிதா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
(இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) முஸ்அப் பின் ஷைபா (ரஹ்) அவர்கள், பத்தாவது விஷயத்தை நான் மறந்துவிட்டேன். அது வாய் கொப்புளிப்பதாய் இருக்கலாம் என்று கூறினார்கள்.
குதைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) இன்திகாஸுல் மாயி எனும் சொற்றொடருக்கு (மலஜலம் கழித்த பின்) துப்புரவு செய்தல் என்று பொருள் எனவும் அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், அறிவிப்பாளர் ஸகரிய்யா பின் அபீஸாயிதா (ரஹ்) அவர்கள், தம் தந்தை அபூஸாயிதா (ரஹ்) அவர்கள்தாம் அந்த பத்தாவது விஷயத்தை மறந்துவிட்டேன் எனக் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 2
பாடம் : 17 கழிப்பிடத்தில் துப்புரவு செய்தல்.
437. அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
சல்மான் அல்ஃபார்சீ (ரலி) அவர்களிடம், மலஜலம் கழிக்கும் முறை உட்பட அனைத்தையுமே உங்கள் இறைத்தூதர் உங்களுக்குக் கற்றுத்தந்திருக்கிறார் (போலும்) என்று (பரிகாசத்துடன்) கேட்கப்பட்டது. (இணைவைப்பாளர்கள்தாம் அவ்வாறு கேட்டனர்.)
அதற்கு சல்மான் (ரலி) அவர்கள், ஆம் (உண்மைதான்); மலஜலம் கழிக்கும்போது கிப்லாவை முன்னோக்க வேண்டாமென்றும் (மலஜலம் கழித்த பின்) வலக்கரத்தால் துப்புரவு செய்ய வேண்டாமென்றும், மூன்றை விடக்குறைவான கற்களால் துப்புரவு செய்ய வேண்டாமென்றும்,கெட்டிச் சாணத்தாலோ எலும்பாலோ துப்புரவு செய்ய வேண்டாமென்றும் எங்களை (எங்கள் நபி) தடுத்தார்கள் என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- சல்மான் அல்ஃபார்சீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
எங்களிடம் இணைவைப்பாளர்கள் (சார்பாக ஒருவர்) உங்கள் தோழர் (நபி (ஸல்) அவர்கள்) உங்களுக்கு மலஜலம் கழிக்கும் முறையைக்கூட கற்றுத்தருவதாக நான் கருதுகிறேன் என்று கூறின(ô)ர். அதற்கு நான் ஆம்(உண்மைதான்);எங்களில் ஒருவர் வலக் கரத்தால் துப்புரவு செய்யக்கூடாதென்றும் (மலஜலம் கழிக்கும்போது) கிப்லாவை முன்னோக்கக் கூடாதென்றும், கெட்டிச்சாணம், எலும்புகள் ஆகியவற்றை (துப்புரவு செய்வதற்காக)ப் பயன்படுத்தக் கூடாதென்றும் அன்னார் எங்களுக்குத் தடை விதித்தார்கள். மேலும், உங்களில் ஒருவர் மூன்றைவிடக் குறைவான கற்களால் துப்புரவு செய்ய வேண்டாம் என்றும் கூறினார்கள் என்றேன்.
அத்தியாயம் : 2
438. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மலஜலம் கழித்த பின்) எலும்பாலோ கெட்டிச் சாணத்தாலோ துடைத்துத் துப்புரவு செய்யப்படுவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்.
அத்தியாயம் : 2
439. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் கழிப்பிடத்திற்குச் சென்று மலஜலம் கழிக்கும்போது கிப்லா (கஅபா)த் திசையை முன்னோக்கவும் வேண்டாம்;அதைப் பின்னோக்கவும் வேண்டாம். மாறாக, கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திரும்பிக் கொள்ளுங்கள்.
இதன் அறிவிப்பாளரான அபூஅய்யூப் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
நாங்கள் ஷாம் (சிரியா) நாட்டிற்குச் சென்றிருந்தபோது அங்குள்ள கழிப்பறைகள் கிப்லாவை முன்னோக்கி (அமரும் விதத்தில்) கட்டப்பட்டிருந்ததைக் கண்டோம். ஆகவே, நாங்கள் (கிப்லாவின் திசையிலிருந்து) திரும்பிக் கொண்டோம்;அல்லாஹ்விடம் பாவமன்னிப்பும் கோரினோம்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
நான் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களிடம் மேற்கண்ட ஹதீஸை வாசித்துக் காட்டி, இதை அதாஉ பின் யஸீத் (ரஹ்) அவர்களிடமிருந்து ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் அறிவித்ததை நீங்கள் செவியுற்றீர்களா? என்று கேட்டேன். அதற்கு சுஃப்யான் (ரஹ்) அவர்கள், “ஆம்” என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 2
440. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உங்களில் ஒருவர் இயற்கைக் கடனை நிறைவேற்ற அமர்ந்தால் அவர் கிப்லாவை முன்னோக்கவும் வேண்டாம்;அதைப் பின்னோக்கவும் வேண்டாம்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 2
441. வாசிஉ பின் ஹப்பான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் பள்ளிவாசலில் தொழுதுகொண்டிருந்தேன். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கிப்லாத் திசையில் தமது முதுகைச் சாய்த்து அமர்ந்திருந்தார்கள். நான் தொழுகையை முடித்துக்கொண்டு என் இடத்தில் இருந்தவாறே அவர்களைத் திரும்பிப் பார்த்தேன். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் உங்களது இயற்கைக் கடனை நிறைவேற்ற அமர்ந்தால்,கிப்லா (கஅபாவின்) திசையையோ பைத்துல் மக்திஸையோ முன்னோக்கி அமரக்கூடாது என்று மக்கள் சிலர் கூறுகின்றனர். ஆனால், நான் (என் சகோதரி ஹஃப்ஸா) வீட்டின் கூரை மீது (ஒரு வேலையாக) ஏறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரு செங்கற்கள்மீது பைத்துல் மக்திஸின் திசையை முன்னோக்கியபடி இயற்கைக் கடனை நிறைவேற்ற அமர்ந்திருப்பதை (தற்செயலாகக்) கண்டேன்.
அத்தியாயம் : 2
442. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் என் சகோதரி(யும் நபியவர்களின் துணைவியாருமான) ஹஃப்ஸா (ரலி) அவர்களது வீட்டின் (கூரை)மீது (ஒரு வேலையாக) ஏறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பைத்துல் மக்திஸ் உள்ள) ஷாம் நாட்டின் திசையை முன்னோக்கியபடியும் கிப்லா(கஅபா)வைப் பின்னோக்கியபடியும் இயற்கைக் கடனை நிறைவேற்ற அமர்ந்திருந்ததைக் கண்டேன்.
அத்தியாயம் : 2
பாடம் : 18 (மல ஜலம் கழித்த பின்) வலக்கரத்தால் துப்புரவு செய்யலாகாது.
443. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கும்போது அவர் தமது பிறவி உறுப்பை வலக்கரத்தால் பிடிக்க வேண்டாம். மலஜலம் கழித்த பின் வலக் கரத்தால் சுத்தம் செய்ய வேண்டாம். நீங்கள் (ஏதேனும் பருகும்போது) பாத்திரத்தினுள் மூச்சுவிட வேண்டாம்.
இதை அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 2
444. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உங்களில் ஒருவர் கழிப்பிடத்திற்குச் சென்றால் அவர் தமது வலக் கரத்தால் பிறவி உறுப்பைத் தொட வேண்டாம்.
இதை அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 2
445. அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், ஒருவர் (ஏதேனும் பருகும்போது) பாத்திரத்தினுள் மூச்சுவிட வேண்டாம் என்றும், (இயற்கைக் கடனை நிறைவேற்றும்போது) வலக் கரத்தால் பிறவி உறுப்பைத் தொட வேண்டாம் என்றும், வலக் கரத்தால் துப்புரவு செய்ய வேண்டாம் என்றும் தடை விதித்தார்கள்.
அத்தியாயம் : 2
பாடம் : 19 தூய்மைப்படுத்தல் உள்ளிட்ட செயல்களை வலப் பக்கத்திலிருந்து ஆரம்பித்தல்.
446. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உளூ மற்றும் குளியல் மூலம்) தம்மைத் தூய்மைப் படுத்திக்கொள்ளும்போதும்,அவர்கள் தலை வாரிக்கொள்ளும்போதும், காலணி அணியும் போதும் வலப் பக்கத்திலிருந்து தொடங்குவதையே விரும்பிவந்தார்கள்.
அத்தியாயம் : 2
447. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் செயல்கள் அனைத்திலும் வலப் பக்கத்தை(க் கொண்டு தொடங்குவதை)யே விரும்பக்கூடியவர்களாக இருந்தார்கள்; காலணி அணியும் போதும், தலை வாரிக்கொள்ளும்போதும், (உளூ மற்றும் குளியல் மூலம் தம்மைத்) தூய்மைப்படுத்திக்கொள்ளும்போதும் (வலப் பக்கத்திலிருந்து தொடங்குவதையே விரும்பி வந்தார்கள்).
அத்தியாயம் : 2
பாடம்: 20 நடைபாதைகளிலும் நிழல்(உள்ள இடங்)களிலும் மலம் கழிப்பதற்கு வந்துள்ளதடை.
448. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சாபத்திற்குரிய இரு செயல்களைத் தவிர்த்து விடுங்கள் என்று கூறினார்கள். மக்கள், சாபத்திற்குரிய அவ்விரு செயல்கள் என்ன, அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டார்கள்.
அதற்கு, மக்களின் நடைபாதையில், அல்லது அவர்களின் (ஓய்விடங்களான) நிழல்களில் மலம் கழிப்பதுதான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 2
பாடம் : 21 மலம் கழித்த பின் தண்ணீரால் துப்புரவு செய்வது.
449. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தோட்டத்திற்குள் சென்றார்கள். அப்போது எங்களில் வயதில் சிறியவரான ஒருவர் தம்முடன் தண்ணீருள்ள பாத்திரம் ஒன்றை எடுத்துக்கொண்டு அவர்களைப் பின்தொடர்ந்தார். பின்னர் அதை ஓர் இலந்தை மரம் அருகே வைத்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றிய பின் அந்தத் தண்ணீரால் துப்புரவு செய்துவிட்டு எங்களிடம் வந்தார்கள்.
அத்தியாயம் : 2
450. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குச் சென்றால் நானும் என்னைப் போன்ற இன்னொரு சிறுவரும் தண்ணீர் நிரம்பிய ஒரு தோல் பாத்திரத்தையும் (இரும்புப் பிடிபோட்ட) கைத்தடி ஒன்றையும் எடுத்துக்கொண்டு செல்வோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இயற்கைக் கடனை நிறைவேற்றிய பின்) அந்தத் தண்ணீரால் துப்புரவு செய்வார்கள்.- இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 2
451. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்ற ஒதுக்குப் புறங்களுக்குச் செல்வார்கள். அப்போது நான் அவர்களுக்காகத் தண்ணீர் கொண்டு செல்வேன். அதன்மூலம் அவர்கள் கழுவி(த் துப்புரவு செய்து)கொள்வார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 2