3924. சுலைமான் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்களிடம் நாட்டுக் கழுதைகளின் இறைச்சி(யை உண்பது) குறித்துக் கேட்டேன். அவர்கள், "கைபர் போர் நாளன்று எங்களுக்குப் பசி ஏற்பட்டது. அப்போது நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அந்த நகரிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்த, அந்த ஊர் மக்களுக்குச் சொந்தமான (நாட்டுக்) கழுதைகளை நாங்கள் (போர்ச் செல்வமாகப்) பெற்றோம். அவற்றை நாங்கள் அறுத்தோம். எங்கள் பாத்திரங்களில் கழுதைகளின் இறைச்சி வெந்துகொண்டிருந்தது.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அறிவிப்பாளர்களில் ஒருவர் "பாத்திரங்களைக் கவிழ்த்துவிடுங்கள். கழுதைகளின் இறைச்சிகளில் சிறிதும் உண்ணாதீர்கள்" என்று அறிவித்தார் எனத் தெரிவித்தார்கள்.
அப்போது நான், "எதற்காக அதற்குத் தடை விதித்தார்கள்?" என்று கேட்டேன். அதற்கு அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள், "(இந்த அறிவிப்பைச் செவியுற்ற) எங்களில் சிலர் "முற்றாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைத் தடை செய்துவிட்டார்கள்" என்றும், வேறுசிலர் "(அப்படியல்ல போர்ச்செல்வமாகக் கைப்பற்றிய) அந்தக் கழுதைகளிலிருந்து ஐந்தில் ஒரு பாகம் (குமுஸ்) செலுத்தப்படாததால்தான் (தாற்காலிகமாகத்) தடை செய்தார்கள்"என்றும் பேசிக்கொண்டோம்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 34
3925. அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
கைபர் (முற்றுகை) நாட்களில் எங்களுக்கு(க் கடுமையான) பசி ஏற்பட்டிருந்தது. கைபர் போர் (தொடங்கிய) நாளன்று நாங்கள் நாட்டுக் கழுதைகளை (போர்ச் செல்வமாக)க் கைப்பற்றி அவற்றை அறுத்(துச் சமைத்)தோம்.
பாத்திரங்கள் கொதிக்கத் தொடங்கிய போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அறிவிப்பாளர், "பாத்திரங்களைக் கவிழ்த்துவிடுங்கள். கழுதைகளின் இறைச்சியில் சிறிதும் உண்ணாதீர்கள்" என்று (உரக்கக் கூவி) அறிவித்தார்.
அப்போது மக்களில் சிலர், "(போர்ச்செல்வமாகப் பிடிக்கப்பட்ட) அக்கழுதைகளிலிருந்து ஐந்தில் ஒரு பாகம் (குமுஸ்) செலுத்தப்படாததால்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்துள்ளார்கள்" என்று கூறினர். வேறுசிலர், "(அப்படியல்ல;) முற்றாக அதற்குத் தடை விதித்து விட்டார்கள்" என்று கூறினர்.
அத்தியாயம் : 34
3926. பராஉ பின் ஆஸிப் (ரலி) மற்றும் அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) ஆகியோர் கூறியதாவது:
நாங்கள் (கைபர் போரின்போது நாட்டுக்) கழுதைகளை (போர்ச் செல்வமாக)க் கைப்பற்றி அவற்றைச் சமைத்துக்கொண்டிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அறிவிப்பாளர் ஒருவர் "பாத்திரங்களைக் கவிழ்த்துவிடுங்கள்" என்று அறிவிப்புச் செய்தார்.
அத்தியாயம் : 34
3927. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கைபர் போர் நாளன்று (நாட்டுக்) கழுதைகளை நாங்கள் (போர்ச் செல்வமாகக்) கைப்பற்றி (சமைக்கலா)னோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அறிவிப்பாளர் ஒருவர் "பாத்திரங்களைக் கவிழ்த்துவிடுங்கள்"என்று அறிவிப்புச் செய்தார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 34
3928. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்ணக் கூடாதென எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 34
3929. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (கைபர் போரின்போது) நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை, அது பச்சையாயிருந்தாலும் சமைக்கப்பட்டிருந்தாலும் எறிந்துவிடுமாறு எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். அதற்குப் பின்பு அதை உண்ணும்படி (அனுமதியளித்து) எங்களுக்கு அவர்கள் உத்தரவிடவே யில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 34
3930. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்ணக் கூடாதென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்ததற்குக் காரணம், நாட்டுக் கழுதை மக்களின் பொதிகளைச் சுமந்து செல்லும் வாகனமாக இருப்பதால், (உண்ணப்படும் பட்சத்தில்) அவர்களுக்கு வாகனம் இல்லாமல் போய்விடும் என நபியவர்கள் அஞ்சியதா? அல்லது கைபர் நாளன்று நாட்டுக் கழுதைகளின் இறைச்சிக்கு (நிரந்தரமாக)த் தடை விதித்தார்களா என்பது எனக்குத் தெரியாது.
அத்தியாயம் : 34
3931. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் கைபரை நோக்கி (போருக்காக)ப் புறப்பட்டோம். பிறகு கைபர்வாசிகளுக்கு எதிராக எங்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தான். வெற்றி பெற்ற அன்றைய மாலை வேளையில் மக்கள் அதிகமான நெருப்புகளை (ஆங்காங்கே) மூட்டினர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இது என்ன நெருப்பு? எதற்காக மூட்டியிருக்கிறீர்கள்?" என்று கேட்டார்கள். "இறைச்சி சமைப்பதற்காக" என்று மக்கள் கூறினர். "எந்த இறைச்சி?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்க, "நாட்டுக் கழுதைகளின் இறைச்சி" என்று மக்கள் கூறினர்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவற்றைக் கொட்டிவிட்டு, அந்தப் பாத்திரங்களை உடைத்துவிடுங்கள்"என்று கூறினார்கள். அப்போது ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே, இறைச்சிகளைக் கொட்டிவிட்டு, பாத்திரங்களைக் கழுவிக்கொள்ளலாமா?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அப்படியே ஆகட்டும்!" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 34
3932. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபரை வெற்றிகொண்டபோது, அந்த ஊரிலிருந்து வெளியே வந்த நாட்டுக் கழுதைகளை நாங்கள் கைப்பற்றி, அவற்றை அறுத்துச் சமைத்துக் கொண்டிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அறிவிப்பாளர்களில் ஒருவர், "அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நீங்கள் நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்ணக் கூடாதெனத் தடைசெய்கிறார்கள். அவை அசுத்தமானவையும் ஷைத்தானின் நடவடிக்கையும் ஆகும்" என்று அறிவிப்புச் செய்தார்.
உடனே பாத்திரங்கள் அவற்றில் உள்ளவற்றோடு கவிழ்க்கப்பட்டன. அப்போது அப்பாத்திரங்களில் இறைச்சி வெந்து கொதித்துக்கொண்டிருந்தது.
அத்தியாயம் : 34
3933. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கைபர் போர் நாளன்று ஒருவர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! கழுதைகள் (அறுத்து) உண்ணப்படுகின்றன" என்று கூறினார். பிறகு மற்றொருவர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! கழுதைகள் (உண்டு) தீர்க்கப்பட்டுவிட்டன" என்று சொன்னார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களுக்கு அறிவிப்புச் செய்யும்படி) அபூதல்ஹா (ரலி) அவர்களுக்குக் கட்டளையிட, அவர் மக்களிடையே, "அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நீங்கள் நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்ணக் கூடாதெனத் தடைசெய்கிறார்கள். ஏனெனில், அவை அசுத்தமானவையாகும்"என்று அறிவிப்புச் செய்தார். உடனே பாத்திரங்கள் அவற்றிலிருந்தவற்றோடு கவிழ்க்கப்பட்டன.
அத்தியாயம் : 34
பாடம் : 6 குதிரைகளின் இறைச்சியை உண்பது.
3934. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போர் நாளன்று நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்ண வேண்டாமெனத் தடை செய்தார்கள்; குதிரையின் இறைச்சியை உண்ண அனுமதியளித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 34
3935. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கைபர் போர் நடந்த கால கட்டத்தில் நாங்கள் குதிரைகளையும்,காட்டுக் கழுதைகளையும் உண்டோம். நபி (ஸல்) அவர்கள் (கைபர் போர் நாளில்) நாட்டுக் கழுதையின் இறைச்சியை உண்ண வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில் லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 34
3936. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் ஒரு குதிரையை (அதன் கழுத்து நரம்பை) அறுத்து ("நஹ்ர்" செய்து) உண்டோம்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 34
பாடம் : 7 உடும்பு உண்ணலாம்.
3937. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் உடும்பு (இறைச்சி உண்பது) குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "அதை நான் உண்ணக்கூடியவனாகவும் இல்லை; அதை (உண்ண வேண்டாமெனத்) தடை செய்பவனாகவும் இல்லை" என விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 34
3938. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உடும்பை உண்பதைப் பற்றிக் கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உடும்பை நான் உண்ணவுமாட்டேன்; அதை (உண்ண வேண்டாமெனத்) தடை செய்யவுமாட்டேன்" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 34
3939. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபோது ஒரு மனிதர் உடும்பை உண்பதைப் பற்றிக் கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அதை நான் உண்ணவுமாட்டேன்; அதை (உண்ண வேண்டாமெனத்) தடை செய்யவுமாட்டேன்" என விடையளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஏழு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், அய்யூப் பின் அபீதமீமா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உடும்புக் கறி கொண்டுவரப்பட்டது. அதை அவர்கள் உண்ணவுமில்லை; அதை உண்ண வேண்டாமெனத் தடை செய்யவுமில்லை" என்று இடம்பெற்றுள்ளது.
உசாமா பின் ஸைத் அல்லைஸீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபோது, பள்ளிவாசலில் இருந்த ஒரு மனிதர் எழுந்தார்..." என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 34
3940. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் உள்ளிட்ட நபித்தோழர்களில் சிலர் இருந்தனர். அப்போது அவர்களிடம் உடும்புக் கறி கொண்டு வரப்பட்(டு பரிமாறப்பட்)டது. உடனே நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவர் அழைத்து "அது உடும்பு இறைச்சி" என்று கூறினார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்) "நீங்கள் உண்ணுங்கள். ஏனெனில், அது அனுமதிக்கப்பட்டது (ஹலால்)தான். ஆயினும், அது என் (பரிச்சியமான) உணவு இல்லை" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், பின்வருமாறு இடம்பெற்றுள்ளது. தவ்பா பின் அபில்அசத் கைசான் அல்அம்பரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
என்னிடம் ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் தொடர்பாக (நிறைய) ஹதீஸ்களை அறிவிப்பதைப் பார்த்தீர்களா? நான் இப்னு உமர் (ரலி) அவர்களுடன் ஏறத்தாழ இரண்டு அல்லது ஒன்றரை ஆண்டுகள் அமர்ந்து (ஹதீஸ்களைக் கற்று)ள்ளேன். ஆனால், அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து இதைத் தவிர வேறெதையும் அறிவித்து நான் கேட்டதில்லை. அதாவது சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) உள்ளிட்ட நபித்தோழர்களில் சிலர் (நபி (ஸல்) அவர்களிடம்) இருந்தனர்... என்று (மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்று) அறிவித்தார்கள்.
அத்தியாயம் : 34
3941. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நானும் காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (அவர்களின் துணைவியார்) மைமூனா (ரலி) அவர்களது இல்லத்திற்குச் சென்றோம். அப்போது பொரிக்கப்பட்ட உடும்புக் கறி கொண்டுவரப்பட்டது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதன் பக்கம் தமது கரத்தை நீட்ட, மைமூனா (ரலி) அவர்களது இல்லத்திலிருந்த பெண்களில் ஒருவர், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதை உண்ணப் போகிறார்கள் என்பதை அவர்களுக்கு (முன்பே) தெரிவித்துவிடுங்கள்" என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கரத்தை (உடும்பிலிருந்து) எடுத்துவிட்டார்கள்.
அப்போது நான், "உடும்பு தடை செய்யப்பட்டதா, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டேன். அவர்கள், "இல்லை (தடை செய்யப்பட்டதன்று); ஆயினும், அது என் சமுதாயத்தாரின் பூமியில் இல்லை. ஆதலால், என் மனம் அதை விரும்பவில்லை" என்று பதிலளித்தார்கள்.
காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் அதை (என் பக்கம்) இழுத்து வைத்து உண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னைப்) பார்த்துக்கொண்டு தானிருந்தார்கள்.
அத்தியாயம் : 34
3942. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"அல்லாஹ்வின் வாள்" எனப்படும் காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்: நான் (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அவர்களின் துணைவியார் மைமூனா (ரலி) அவர்களின் இல்லத்திற்குச் சென்றேன். அவர் என் தாயின் சகோதரியும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் தாயின் சகோதரியும் ஆவார்.
மைமூனா (ரலி) அவர்கள் அருகில் பொரிக்கப்பட்ட உடும்பு இறைச்சி இருப்பதைக் கண்டேன். அதை மைமூனா (ரலி) அவர்களின் சகோதரி ஹுதைஃபா பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் நஜ்துப் பகுதியிலிருந்து கொண்டுவந்திருந்தார். அவர் அந்த உடும்புக் கறியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் வைத்தார்.
-பொதுவாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் ஏதேனும் உணவு வைக்கப்பட்டால் அதைப் பற்றிச் சொல்லாமலும் அதன் பெயரைத் தெரிவிக்காமலும் அதை அவர்கள் உண்பது அரிதாகும்-
எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கரத்தை அந்த உடும்பை நோக்கி நீட்ட, அங்கிருந்த பெண்களில் ஒருவர், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் எதை வைத்துள்ளீர்கள் என்பதை (முன்னதாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்துவிடுங்கள்" என்று சொன்னார். அப்பெண்கள், "இது உடும்பு, அல்லாஹ்வின் தூதரே!" என்று கூறினர். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கரத்தை (உடும்பிலிருந்து) எடுத்துவிட்டார்கள்.
உடனே நான், "உடும்பு தடை செய்யப்பட்டதா, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "இல்லை (தடை செய்யப்பட்டதன்று); எனினும், அது என் சமுதாயத்தாரின் பூமியில் இல்லை. ஆதலால், என் மனம் அதை விரும்பவில்லை" என்று பதிலளித்தார்கள்.
நான் அதை (என் பக்கம்) இழுத்து வைத்து உண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னைப்) பார்த்துக்கொண்டுதானிருந்தார்கள். (உண்ண வேண்டாமென) என்னை அவர்கள் தடை செய்யவில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 34
3943. காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் என் தாயின் சகோதரி மைமூனா (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன் உடும்புக் கறி வைக்கப்பட்டது. அதை (மைமூனா (ரலி) அவர்களின் சகோதரி) உம்மு ஹுஃபைத் பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் நஜ்துப் பகுதியிலிருந்து கொண்டு வந்திருந்தார். உம்மு ஹுஃபைத் (ரலி) அவர்கள் பனூ ஜஅஃபர் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரின் துணைவியராய் இருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதையும் அது என்னவென்று அறியாமல் உண்ணமாட்டார்கள்.
பிறகு மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளது. ஹதீஸின் இறுதியில் "இதை யஸீத் பின் அல்அஸம்மு (ரஹ்) அவர்கள் மைமூனா (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்தார்கள். அவர் மைமூனா (ரலி) அவர்களது மடியில் வளர்ந்தவர் ஆவார்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நாங்கள் மைமூனா (ரலி) அவர்களது இல்லத்தில் இருந்தபோது, நபி (ஸல்) அவர்களிடம் பொரிக்கப்பட்ட இரு உடும்புகள் கொண்டுவரப்பட்டன" என்று இடம் பெற்றுள்ளது. அதில் "யஸீத் பின் அல்அஸம்மு (ரஹ்) அவர்கள் மைமூனா (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்தார்கள்" எனும் குறிப்பு இல்லை.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மைமூனா (ரலி) அவர்களது இல்லத்தில் இருந்தபோது அவர்களிடம் உடும்புக் கறி கொண்டுவரப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்களும் இருந்தார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 34