3894. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஒரு போரில் (தபூக்கில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். பிறகு நாங்கள் மதீனா வந்து (ஊருக்குள்) நுழையப்போனபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(நீங்கள் வந்து சேர்ந்துவிட்ட தகவல் வீட்டுப் பெண்களைச் சென்றடைய) இரவாகும்வரை பொறுத்திருங்கள். தலைவிரி கோலமாயிருக்கும் பெண்கள் தலைவாரிக் கொள்ளட்டும்.(கணவனைப்) பிரிந்திருந்த பெண்கள் சவரக்கத்தியைப் பயன்படுத்தி(த் தங்களை ஆயத்தப் படுத்தி)க்கொள்ளட்டும்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3895. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் (வெளியூரிலிருந்து) இரவு நேரத்தில் வந்தால் (எந்த முன்னறிவிப்புமின்றி) திடீரென அவர் தம் வீட்டாரிடம் செல்ல வேண்டாம். (கணவனைப்) பிரிந்திருந்த பெண் சவரக்கத்தியைப் பயன்படுத்தி(த் தம்மை ஆயத்தப் படுத்தி)க்கொள்ளும் வரையிலும், தலைவிரி கோலமாயிருக்கும் பெண்கள் தலைவாரிக் கொள்ளும்வரையிலும் (அவர் தாமதிக்கட்டும்!)
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3896. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது
நீண்டநாட்கள் கழித்து ஊர் திரும்புகின்ற ஒருவர் (எந்த முன்னறிவிப்புமின்றி) இரவு நேரத்தில் திடீரெனத் தம் வீட்டாரிடம் செல்ல வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3897. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(வெளியூரிலிருந்து திரும்புகின்ற) ஒருவர் இரவு நேரத்தில் திடீரெனத் தம் வீட்டாரிடம் செல்வதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள். வீட்டார் மோசடி செய்கிறார்களா என்று நோட்டமிடவும் அவர்களின் குற்றங்குறைகளைக் கண்டுபிடிக்கவும் (அவ்வாறு செல்வது முறையாகாது).
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள், "வீட்டார் மோசடி செய்கிறார்களா என்று நோட்டமிடவும் அவர்களின் குற்றங்குறைகளைக் கண்டுபிடிக்கவும்" எனும் இந்த வாசகம் ஹதீஸில் உள்ளதா, அல்லது இல்லையா (அறிவிப்பாளர் முஹாரிப் அவர்களின் வாசகமா) என எனக்குத் தெரியவில்லை" என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 33
3898. மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "ஒருவர் (பயணத்திலிருந்து திரும்பி) இரவில் திடீரென வீட்டாரிடம் செல்வதை நபி (ஸல்) அவர்கள் வெறுத்து வந்தார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
"வீட்டார் மோசடி செய்கிறார்களா என்று நோட்டமிடவும் அவர்களின் குற்றங்குறைகளைக் கண்டுபிடிக்கவும்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 33

பாடம் : 1 பயிற்சியளிக்கப்பட்ட நாய்கள் மூலம் வேட்டையாடுதல்.
3899. அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! நான் பயிற்சியளிக்கப்பட்ட நாய்களை அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்லாஹ்...) சொல்லி அனுப்புகிறேன். அவை எனக்காக (வேட்டையாடி)க் கவ்விப் பிடிக்கின்றன (அவற்றை நான் உண்ணலாமா?)" என்று கேட்டேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் பயிற்சி அளிக்கப்பட்ட உங்கள் நாயை அல்லாஹ்வின் பெயர் சொல்லி அனுப்பியிருந்தால் (அது வேட்டையாடிக் கொண்டு வருவதை) நீங்கள் உண்ணுங்கள்" என்று பதிலளித்தார்கள்.
நான், "(வேட்டைப் பிராணியை) அவை கொன்றுவிட்டாலுமா?" என்று கேட்டேன். "(வேட்டைப் பிராணியை) அவை கொன்றுவிட்டாலும் சரியே (அதை நீங்கள் உண்ணுங்கள்); நீங்கள் அனுப்பாத மற்றொரு நாய் அவற்றுடன் கூட்டுச் சேராதவரை (உண்ணலாம்)" என்றார்கள்.
நான், "இறகு இல்லாத அம்பை ("மிஅராள்") வேட்டைப் பிராணியின் மீது நான் எய்கிறேன். அது வேட்டைப் பிராணியைத் தாக்கிவிடுகிறது (அதை நான் உண்ணலாமா)?" என்று கேட்டேன். "நீங்கள் இறகு இல்லாத அம்பை எய்ய,அது (தனது கூர்முனையால்) குத்தி (வீழ்த்தி)யதை உண்ணுங்கள். அம்பின் பக்கவாட்டுப் பகுதியால் தாக்குண்டதை உண்ணாதீர்கள்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 34
3900. அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"நாங்கள் இந்த (வேட்டை) நாய்களின் மூலம் வேட்டையாடும் ஒரு சமுதாயத்தார் ஆவோம்" என்று நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறி (அதன் சட்டம் என்னவென்று) வினவினேன்.
அதற்கு அவர்கள், "பயிற்சியளிக்கப்பட்ட உங்கள் (வேட்டை) நாய்களை, அல்லாஹ்வின் பெயர் சொல்லி (வேட்டையாட) நீங்கள் அனுப்பியிருந்தால், உங்களுக்காக அவை கவ்விப் பிடித்து வைத்திருப்பவற்றை நீங்கள் உண்ணலாம்;அவற்றை அவை கொன்றுவிட்டாலும் சரியே! (ஆனால்,) அந்த நாயே தின்றுவிட்டதை மட்டும் உண்ணாதீர்கள்! ஏனென்றால், அது தனக்காகவே கவ்வி வைத்திருக்குமோ என நான் அஞ்சுகிறேன். இவ்வாறே வேறு நாய்கள் உங்கள் நாய்களுடன் கூட்டுச்சேர்ந்திருந்தாலும் (அவை வேட்டையாடியவற்றை) உண்ணாதீர்கள்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 34
3901. அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், இறகு இல்லாத அம்பைக் குறித்து (அதன் மூலம் வேட்டையாடப்பட்ட பிராணியை உண்ணலாமா என)க் கேட்டேன். அதற்கு அவர்கள், "அம்பின் முனைப் பகுதி பிராணியைத் தாக்கியிருந்தால் அதை உண்ணுங்கள். அம்பின் பக்கவாட்டுப் பகுதி தாக்கிச் செத்திருந்தால், அது தடியால் அடித்துக் கொல்லப்பட்டது (போல்) தான். எனவே, அதை உண்ணாதீர்கள்" என்று சொன்னார்கள்.
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், (பயிற்சியளிக்கப்பட்ட) நாய் (மூலம் வேட்டையாடப்பட்ட பிராணியைக்) குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், "நீங்கள் அல்லாஹ்வின் பெயர் சொல்லி அந்த நாயை அனுப்பியிருந்தால் (அது வேட்டையாடிக் கொண்டுவருவதை) நீங்கள் உண்ணலாம். அந்தப் பிராணியிலிருந்து சிறிதளவை அந்த நாய் தின்றுவிட்டிருந்தால், அதை உண்ணாதீர்கள். ஏனென்றால், அது தனக்காகவே கவ்விப் பிடித்திருக்கிறது" என்று பதிலளித்தார்கள்.
"நான் அனுப்பிய நாயுடன் மற்றொரு நாயைக் கண்டேன். அவற்றில் எது அந்தப் பிராணியைக் கவ்விப் பிடித்தது என்று எனக்குத் தெரியவில்லை (அப்போது நான் என்ன செய்வது?)" என்று கேட்டேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அப்படியானால் அதை உண்ணாதீர்கள். ஏனெனில், நீங்கள் உங்கள் நாயை மட்டுமே அல்லாஹ்வின் பெயர் சொல்லி அனுப்பினீர்கள். மற்றொரு நாயை அல்லாஹ்வின் பெயர் சொல்லி நீங்கள் அனுப்பவில்லை" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், இறகு இல்லாத அம்பு (மூலம் வேட்டையாடப்பட்ட பிராணி) குறித்துக் கேட்டேன்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
- மேற்கண்ட ஹதீஸ் அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதிலும் "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், இறகு இல்லாத அம்பு (மூலம் வேட்டையாடப்பட்ட பிராணி) குறித்துக் கேட்டேன்" என்றே ஹதீஸ் ஆரம்பமாகிறது.
அத்தியாயம் : 34
3902. அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், இறகு இல்லாத அம்பின் மூலம் வேட்டையாடப்பட்ட பிராணி குறித்துக் கேட்டேன். அவர்கள், "பிராணி அம்பின் கூர்முனையால் தாக்கப்பட்டிருந்தால் அதை உண்ணுங்கள். அம்பின் பக்கவாட்டுப் பகுதியால் தாக்குண்டு செத்திருந்தால் அது தடியால் அடித்துக் கொல்லப்பட்ட(து போன்ற)தேயாகும். (எனவே, அதை உண்ணாதீர்கள்)" என்று பதிலளித்தார்கள்.
(பயிற்சியளிக்கப்பட்ட) நாய்கள் மூலம் வேட்டையாடப்பட்ட பிராணி குறித்தும் அவர்களிடம் நான் கேட்டேன். அவர்கள், "உங்களுக்காக அவை கவ்விப் பிடித்துவைத்து, அதிலிருந்து எதையும் தின்னாமல் இருந்தால் நீங்கள் உண்ணுங்கள். ஏனெனில், (பழக்கப்படுத்தப்பட்ட) நாய் கவ்விப் பிடிப்பதே, (முறைப்படி) அறுப்பதாகிவிடும்.
உங்களது நாயுடன் வேறொரு நாயை நீங்கள் கண்டு, அந்த வேறொரு நாய் உங்கள் நாயுடன் அந்தப் பிராணியைப் பிடித்துக் கொன்றிருக்குமோ என்று நீங்கள் அஞ்சினால், அதை உண்ணாதீர்கள். ஏனெனில், நீங்கள் உங்கள் நாயை மட்டுமே அல்லாஹ்வின் பெயர் சொல்லி அனுப்பினீர்கள். வேறொரு நாயை அவ்வாறு கூறி நீங்கள் அனுப்பவில்லை" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 34
3903. ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(இராக்கில் உள்ள) "நஹ்ரைன்" எனும் இடத்தில் எங்கள் அண்டை வீட்டாராகவும், உற்ற நண்பராகவும், (வழிபாடுகளில்) மிகுந்த ஈடுபாடு கொண்டவராகவும் இருந்த அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நான் நபி (ஸல்) அவர்களிடம், "நான் எனது (வேட்டை) நாயை (அல்லாஹ்வின் பெயர் சொல்லி) அனுப்புகிறேன். எனது நாயுடன் வேறொரு நாயை, (வேட்டைப் பிராணியைப்) பிடித்த நிலையில் நான் காண்கிறேன். அவற்றில் எது வேட்டைப் பிராணியைப் பிடித்தது என்பது எனக்குத் தெரியவில்லை (இந்த நிலையில் நான் என்ன செய்வது)?" என்று கேட்டேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அதை உண்ணாதீர்கள். ஏனெனில், நீங்கள் அல்லாஹ்வின் பெயர் சொல்லி அனுப்பியது உங்கள் நாயைத்தான். வேறொரு நாயை நீங்கள் அல்லாஹ்வின் பெயர் சொல்லி அனுப்பவில்லை" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஷஅபீ (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 34
3904. அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்: நீங்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி, உங்களது (வேட்டை) நாயை அனுப்ப, அது வேட்டைப் பிராணியைப் பிடித்து உயிருடன் வைத்திருப்பதை நீங்கள் கண்டால், அதை (முறைப்படி) நீங்கள் அறுத்து உண்ணலாம். அது வேட்டைப் பிராணியைப் பிடித்துத் தின்றுவிடாமல் கொன்று விட்டிருப்பதை நீங்கள் கண்டால் அதையும் நீங்கள் உண்ணலாம்.
உங்கள் நாயுடன் வேறொரு நாயும் (வேட்டைப் பிராணியைக்) கொன்றுவிட்ட நிலையில் இருப்பதை நீங்கள் கண்டால்,அதை உண்ணாதீர்கள். ஏனெனில், அவற்றில் எது அந்தப் பிராணியைக் கொன்றது என்பது உங்களுக்குத் தெரியாது.
நீங்கள் உங்கள் அம்பை அல்லாஹ்வின் பெயர் கூறி (வேட்டைப் பிராணியை நோக்கி) எய்ய, அது ஒரு நாள் அளவுக்கு உங்களை விட்டு மறைந்துவிட்டது. ஒரு நாள் கழித்து உங்கள் அம்பின் அடையாளம் அதில் இருக்க நீங்கள் கண்டால்,விரும்பினால் அதை நீங்கள் உண்ணலாம். அந்தப் பிராணி தண்ணீரில் மூழ்கிக் கிடப்பதை நீங்கள் கண்டால் அதை உண்ணாதீர்கள்.
அத்தியாயம் : 34
3905. அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வேட்டைப் பிராணிகள் குறித்து வினவினேன். அவர்கள், "நீங்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி, உங்கள் அம்பை எய்ய, அது சென்று பிராணியைத் தாக்கிக் கொன்றுவிட்டால், அதை நீங்கள் உண்ணலாம்; அந்தப் பிராணி தண்ணீரில் விழுந்து கிடக்கும் நிலையில் அதை நீங்கள் கண்டால் தவிர! (அப்போது அதை உண்ணாதீர்கள்.) ஏனெனில், தண்ணீரில் விழுந்ததால் அது செத்ததா, அல்லது உங்கள் அம்பு தாக்கி அது செத்ததா என்பது உங்களுக்குத் தெரியாது" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 34
3906. அபூஸஅலபா அல்குஷனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் வேதம் வழங்கப்பெற்ற ஒரு சமுதாயத்தாரின் நாட்டில் வசிக்கிறோம். அவர்களுடைய பாத்திரத்தில் சாப்பிடுகிறோம். மேலும், வேட்டைப் பிராணிகள் நிறைந்த ஒரு பகுதியில் வசிக்கிறோம். நான் எனது வில்லாலும் வேட்டையாடுகிறேன். பயிற்சியளிக்கப்பட்ட எனது நாயாலும் வேட்டையாடுகிறேன். பயிற்சியளிக்கப்படாத நாயாலும் வேட்டையாடுகிறேன். இவற்றில் எது எங்களுக்கு அனுமதிக்கப்பட்டது என்பதை எனக்குத் தெரிவியுங்கள்?" என்று கேட்டேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்:
வேதம் வழங்கப்பெற்றவர்களின் நாட்டில் நீங்கள் வசிப்பதாகவும் அவர்களுடைய பாத்திரங்களில் உண்பதாகவும் நீங்கள் சொன்னதைப் பொறுத்தமட்டில், அவர்களுடைய பாத்திரமல்லாத வேறு பாத்திரம் உங்களுக்குக் கிடைத்தால்,அவர்களின் பாத்திரத்தில் நீங்கள் உண்ணாதீர்கள். (வேறு பாத்திரம்) உங்களுக்குக் கிடைக்காவிட்டால், அதைக் கழுவிவிட்டு, பின்னர் அதில் உண்ணுங்கள்.
வேட்டைப் பிராணிகள் நிறைந்த பகுதியில் நீங்கள் வசிப்பதாகச் சொன்னதைப் பொறுத்தவரை, உங்கள் வில்லால் வேட்டையாடியதை நீங்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி (அறுத்து) உண்ணலாம். (அவ்வாறே) பயிற்சியளிக்கப்பட்ட உங்கள் நாயின் மூலம் வேட்டையாடியதையும் அல்லாஹ்வின் பெயர் கூறி நீங்கள் உண்ணலாம்.
பயிற்சியளிக்கப்படாத உங்கள் நாயின் மூலம் நீங்கள் வேட்டையாடியது அறுப்பதற்கு ஏதுவாக (உயிர் பிரியாத நிலையில்) உங்களுக்குக் கிடைத்தால், அதை (முறைப்படி அறுத்து) நீங்கள் உண்ணலாம்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் இப்னு வஹ்ப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், வில்லால் வேட்டையாடப்பட்ட பிராணியைப் பற்றிய குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 34
பாடம் : 2 (அம்பு எய்த பின்) மறைந்துபோன வேட்டைப் பிராணி பிறகு கிடைத்தால்...?
3907. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்கள் அம்பினால் நீங்கள் எய்த பின் வேட்டைப்பிராணி மறைந்து, பின்னர் (இறந்த நிலையில்) அதை நீங்கள் கண்டால், நாற்றமடிக்காமல் இருக்கும்வரை அதை நீங்கள் உண்ணலாம்.
இதை அபூஸஅலபா அல்குஷனீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 34
3908. அபூஸஅலபா அல்குஷனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
"(காயமடைந்த) வேட்டைப் பிராணி (இறந்த நிலையில்) மூன்று நாட்கள் கழித்து கிடைத்தால், நாற்றமடிக்காமல் இருக்கும் வரை அதை நீங்கள் புசிக்கலாம்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 34
3909. மேற்கண்ட ஹதீஸ் அபூஸஅலபா அல்குஷனீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் முஹம்மத் பின் ஹாத்திம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "நாற்றமடிக்காமல் இருக்கும்வரை" எனும் குறிப்பு இடம்பெறவில்லை. "நாய் வேட்டையாடிய பிராணி, மூன்று நாட்கள் கழித்துக் காணப்பட்டால், நாற்றமடிக்காமல் இருக்கும்வரை அதை நீங்கள் உண்ணலாம். அவ்வாறு நாற்றமடித்துவிட்டால் அதை (உண்ணாதீர்கள்.) விட்டுவிடுங்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 34
பாடம் : 3 கோரைப் பற்கள் உடைய விலங்குகளையும் கோரை நகங்கள் உடைய பறவைகளையும் உண்பதற்கு வந்துள்ள தடை.
3910. அபூஸஅலபா அல்குஷனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், விலங்குகளில் கோரைப்பற்கள் உள்ள எதையும் உண்ணக் கூடாதெனத் தடை விதித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் ஷாம் (சிரியா) நாட்டை சென்றடையும்வரை இந்த ஹதீஸைக் கேள்விப்படவில்லை.
அத்தியாயம் : 34
3911. அபூஸஅலபா அல்குஷனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், விலங்குகளில் கோரைப்பற்கள் உள்ள எதையும் உண்ணக்கூடாதெனத் தடை விதித்தார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் இந்த ஹதீஸை ஹிஜாஸில் உள்ள நம் அறிஞர்களிடமிருந்து செவியுறவில்லை. பின்னர் ஷாம் (சிரியா)வாசிகளின் மார்க்கச்சட்ட அறிஞர்களில் ஒருவரான அபூஇத்ரீஸ் அல்கவ்லானீ (ரஹ்) அவர்களே எனக்கு இதை அறிவித்தார்கள்.
அத்தியாயம் : 34
3912. அபூஸஅலபா அல்குஷனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், விலங்குகளில் கோரைப்பற்கள் உள்ள எதையும் உண்ணக்கூடாதெனத் தடை விதித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஸஅலபா அல்குஷனீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஒன்பது அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், யூனுஸ் பின் யஸீத் மற்றும் அம்ர் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) ஆகியோ ரைத் தவிர மற்றவர்களின் அறிவிப்பில் "உண்ணக்கூடாதென" எனும் சொற்றொடர் இடம்பெற்றுள்ளது. அவ்விருவரின் அறிவிப்பில் "விலங்குகளில் கோரைப்பற்கள் உள்ள அனைத்துக்கும் தடை விதித்தார்கள்" என்ற வாசகமே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 34
3913. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விலங்குகளில் கோரைப்பற்கள் உள்ள எதையும் உண்பது தடை செய்யப்பட்டதாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 34