3839. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ("இந்த மலைகளின் உச்சிகளில் ஒன்றில்" என்பதற்குப் பகரமாக) "இந்த மலைக் கணவாய்களில் ஒன்றில்"என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 33
3840. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றிலும் "மலைக் கணவாய்கள் ஒன்றில்" என்றே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 33
பாடம் : 35 (அறப்போரில் கலந்துகொண்ட) இருவரில் ஒருவர் மற்றவரைக் கொன்று விடுகிறார். பிறகு அவ்விருவருமே சொர்க்கத்தில் நுழைகின்றனர் (அது எவ்வாறு?) என்பது பற்றிய விளக்கம்.
3841. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"அல்லாஹ், இரண்டு மனிதர்களைப் பார்த்துச் சிரிக்கின்றான். அவ்விருவரில் ஒருவர் மற்றவரைக் கொன்றுவிடுகின்றார். இருவருமே சொர்க்கத்தில் நுழையவும் செய்கின்றனர்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். "அது எவ்வாறு, அல்லாஹ்வின் தூதரே?" என்று மக்கள் கேட்டனர்.
அதற்கு, "இவர் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டு, வீரமரணம் அடைந்துவிடுகிறார். பிறகு (அவரைக்) கொன்றவர் இஸ்லாத்தை ஏற்று பாவமன்னிப்புக் கோர, அதை ஏற்று அல்லாஹ் அவரை மன்னித்துவிடுகிறான். பிறகு அவரும் அறப்போரில் (கொல்லப்பட்டு) உயிர்த்தியாகி ஆகிவிடுகிறார் (எனவே இருவருமே சொர்க்கத்தில் நுழைகின்றனர்)" என்று பதிலளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3842. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் இதுவும் ஒன்றாகும்.
"அல்லாஹ் இரண்டு மனிதர்களைப் பார்த்துச் சிரிக்கின்றான். அவ்விருவரில் ஒருவர் மற்றொருவரைக் கொன்றுவிடுகிறார். அவ்விருவருமே சொர்க்கத்தில் நுழைந்தும் விடுகின்றனர்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், "அது எப்படி, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டனர். இவர் (இறைவழியில் போரிட்டுக்) கொல்லப்படுகிறார்; சொர்க்கத்தில் நுழைந்து விடுகிறார். பின்னர் (அவரைக் கொன்ற) மற்றொருவர் பாவமன்னிப்புக் கோர, அல்லாஹ் அவரை மன்னித்து, இஸ்லாத்திற்கு வழிகாட்டுகிறான். பின்னர் அவர் இறைவழியில் போரிட்டுக் கொல்லப்படுகிறார் (சொர்க்கம் செல்கிறார்)" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 33
பாடம் : 36 இறைமறுப்பாளனை (போரில்) கொன்ற பின்னர் (மார்க்கத்தில்) உறுதியோடு இருத்தல்.
3843. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் இறைமறுப்பாளனும் (அறப்போரில்) அவனைக் கொன்ற (இறைநம்பிக்கை கொண்ட) வரும் ஒருபோதும் நரகத்தில் ஒன்றுசேரமாட்டார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3844. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இரண்டு பேர், ஒருவர் மற்றொருவருக்கு இடையூறு செய்யும் வகையில் நரகத்தில் ஒருபோதும் ஒன்றுசேரமாட்டார்கள்" என்று கூறினார்கள். "அவர்கள் யார், அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்கப்பட்டது. அதற்கு "ஓர் இறை நம்பிக்கையாளர் இறைமறுப்பாளனை (அறப்போரில்) கொன்றுவிடுகிறார். பின்னர் அவர் (வழி பிறழ்ந்துவிடாமல் மார்க்கத்தில்) உறுதியோடு நிலைத்திருக்கிறார். (இவரும் இவரால் கொல்லப்பட்ட இறைமறுப்பாளனும் நரகத்தில் ஒருபோதும் இணையமாட்டார்கள்)" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 33
பாடம் : 37 அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்வதன் சிறப்பும் அதற்குக் கிடைக்கும் பன்மடங்கு நன்மைகளும்.
3845. அபூமஸ்ஊத் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் கடிவாளமிடப்பட்ட ஒட்டகமொன்றைக் கொண்டுவந்து, "இது அல்லாஹ்வின் பாதையில் (தர்மமாகும்)" என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உமக்கு மறுமை நாளில் இதற்குப் பகரமாக எழுநூறு ஒட்டகங்கள் கிடைக்கும். அவற்றில் ஒவ்வொன்றும் கடிவாளமிடப்பட்டதாக இருக்கும்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூமஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
பாடம் : 38 அல்லாஹ்வின் பாதையில் புறப்படும் அறப்போர் வீரருக்கு வாகனம் உள்ளிட்ட உதவிகள் அளிப்பதன் சிறப்பும் அவர் சென்ற பின் அவரது குடும்பத்தை நல்ல விதமாகக் கவனித்துக்கொள்வதும்.
3846. அபூமஸ்ஊத் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "என் வாகனப்பிராணி மடிந்துவிட்டது. எனவே, நான் ஏறிச்செல்வதற்கு எனக்கு வாகனப்பிராணி தாருங்கள்" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "என்னிடம் (வாகனப்பிராணி) இல்லை" என்று கூறினார்கள். அப்போது மற்றொரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! இவரை வாகனத்தில் ஏற்றியனுப்பும் ஒருவரை நான் இவருக்கு அறிவித்துக் கொடுக்கிறேன்" என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நன்மைக்கு வழிகாட்டியவருக்கும் அதைச் செய்தவருக்குக் கிடைப்பதைப் போன்ற நற்பலன் கிடைக்கும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூமஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3847. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"அஸ்லம்" குலத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர், "அல்லாஹ்வின் தூதரே! நான் போருக்குச் செல்ல விரும்புகிறேன். ஆனால், என்னிடம் பயணத்துக்குத் தேவையான எந்த வசதியும் இல்லை" என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ இன்ன மனிதரிடம் செல். ஏனெனில், அவர் போருக்குச் செல்வதற்காக எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தார். பிறகு அவர் நோய்வாய்ப்பட்டு விட்டார்" என்று கூறினார்கள்.
அவ்வாறே அவரிடம் அந்த இளைஞர் சென்று, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களுக்கு முகமன் (சலாம்) சொல்கிறார்கள். மேலும், நீங்கள் உங்கள் பயணத்துக்காக ஏற்பாடு செய்திருந்தவற்றை என்னிடம் கொடுக்கும்படி கூறினார்கள்" என்றார். அந்த மனிதர், (தம் வீட்டிலிருந்த பெண்ணிடம்) "இன்ன பெண்ணே! என் பயணத்திற்காக நான் ஏற்பாடு செய்திருந்தவற்றை இவருக்குக் கொடுத்துவிடு. அவற்றில் எதையும் தர மறுக்காதே. அல்லாஹ்வின் மீதாணையாக! அவற்றில் எதையேனும் நீ தர மறுத்தால் அதில் உனக்கு அருள்வளம் (பரக்கத்) அளிக்கப்படாது" என்று கூறினார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3848. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் அல்லாஹ்வின் பாதையில் போர்புரியும் ஒருவருக்குப் பயண வசதி செய்து கொடுக்கிறாரோ அவரும் அறப்போரில் பங்கு பெற்றுவிட்டார். யார் அறப்போர் வீரர் புறப்பட்டுச் சென்ற பின் அவருடைய வீட்டாரின் நலன் காக்கிறாரோ அவரும் அறப்போரில் பங்கு பெற்றுவிட்டார்.
இதை ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3849. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் அறப்போர் வீரர் ஒருவருக்குப் பயண வசதி செய்து கொடுக்கிறாரோ அவரும் அறப்போரில் பங்கு பெற்றுவிட்டார். யார் அறப்போர் வீரர் புறப்பட்டுச் சென்ற பின் அவருடைய குடும்பத்தாரைக் கவனித்துக் கொள்கிறாரோ, அவரும் அறப்போரில் பங்கு பெற்றுவிட்டார்.
இதை ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 33
3850. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஹுதைல்" குலத்தாரில் பனூ லஹ்யான் குடும்பத் தாரை நோக்கிப் படைப் பிரிவொன்றை அனுப்பினார்கள். அப்போது, "உங்களில் ஒவ்வோர் இரண்டு பேரில் ஒருவர் (ஒவ்வொரு குலத்தாரிலும் பாதிப்பேர் படைப்பிரிவுக்காகப்) புறப்படட்டும். அவர்கள் இருவருக்கும் (சமமான) நற்பலன் கிடைக்கும்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் படைப்பிரிவொன்றை அனுப்பினார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸின் கருத்துப்படியே வந்துள்ளன.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3851. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "பனூ லஹ்யான்" குலத்தாரை நோக்கிப் படைப் பிரிவொன்றை அனுப்பியபோது, "உங்களில் ஒவ்வோர் இரண்டு பேரிலும் ஒருவர் புறப்படட்டும்" என்று கூறினார்கள். பிறகு, (படைப்பிரிவில் செல்லாமல் ஊரில்) தங்கியவரிடம் "உங்களில் யார் படை வீரர் புறப்பட்டுச் சென்ற பின் அவருடைய குடும்பத்தார் விஷயத்திலும் அவரது செல்வம் விஷயத்திலும் நலம் பேணி நடந்துகொள்கிறாரோ அவருக்கும் புறப்பட்டுச் சென்ற படைவீரருக்குக் கிடைக்கும் நற்பலனில் பாதியளவைப் போன்றது கிடைக்கும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 33
பாடம் : 39 அறப்போர் வீரர்களின் துணைவியருக்குள்ள மதிப்பும் அத்துணைவியர் விஷயத்தில் வீரர்களுக்குத் துரோகமிழைப்பவர் அடையும் தண்டனையும்.
3852. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
போருக்குச் செல்லாமல் (ஊரில்) இருப்போர், போருக்குச் சென்ற வீரர்களின் துணைவியரைத் தம் தாயை மதிப்பதைப் போன்று மதிக்க வேண்டும். அறப்போர் வீரர் புறப்பட்டுச் சென்ற பின் அவருடைய குடும்பத்தாரின் நலம் காக்கும் ஒருவர், துணைவியர் விஷயத்தில் அவருக்குத் துரோகமிழைத்தால் அவ்வீரருக்காக அவர் மறுமை நாளில் நிறுத்தப்பட்டே தீருவார். அப்போது அவருடைய நற்செயல்(களின் நன்மை)களில் தாம் நாடிய அளவுக்கு எடுத்துக்கொள்வார். (அப்போது அவருடைய நன்மைகள் அனைத்தையுமே அவர் எடுத்துக் கொள்வதைப் பற்றி) நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
இதை புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் புரைதா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3853. மேற்கண்ட ஹதீஸ் புரைதா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அவ்வீரரிடம், "இவருடைய நற்செயல்களிலிருந்து நீங்கள் விரும்பிய அளவுக்கு எடுத்துக்கொள்ளுங்கள்" என்று சொல்லப்படும் என்று கூறிவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை நோக்கித் திரும்பி, "நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" எனக் கேட்டார்கள்" என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 33
பாடம் : 40 (உடல் ஊனம் போன்ற) தகுந்த காரணம் உள்ளவர்களுக்கு அறப்போரில் கலந்து கொள்ளும் கடமை கிடையாது.
3854. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"இறைநம்பிக்கையாளர்களில் (போருக்குச் செல்லாமல் வீட்டில்) தங்கிவிடுவோரும் அல்லாஹ்வின் பாதையில் தம் செல்வங்களாலும் உயிர்களாலும் அறப்போர் புரிவோரும் சமமாக மாட்டார்" (4:95) எனும் இந்த இறைவசனம் அருளப்பெற்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களிடம் அகலமான எலும்பு ஒன்றைக் கொண்டுவரச் சொன்னார்கள். அவ்வாறே அவர்கள் எலும்பைக் கொண்டுவந்து அந்த வசனத்தை எழுதிக் கொண்டார்கள்.
அப்போது (அங்கிருந்த கண் பார்வையற்ற) அப்துல்லாஹ் பின் உம்மி மக்த்தூம் (ரலி) அவர்கள், தமது (கண் பார்வையற்ற) குறை குறித்து முறையிட்டார்கள். அப்போது, "இறை நம்பிக்கையாளர்களில் தக்க காரணமின்றி (போருக்குச் செல்லாமல் வீட்டில்) தங்கி விடுவோரும்..." என்ற (விதிவிலக்குடன் கூடிய) முழு வசனம் அருளப்பெற்றது.
இந்த (4:95ஆவது) வசனம் தொடர்பாக ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களும் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதைப் போன்றே அறிவித்துள்ளார்கள்.
இந்த ஹதீஸ் பராஉ (ரலி) மற்றும் ஸைத் பின் ஸாபித் (ரலி) ஆகியோர் வழியாக மொத்தம் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3855. பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
"இறைநம்பிக்கையாளர்களில் (போருக்குச் செல்லாமல் வீட்டில்) தங்கிவிடுவோரும் அல்லாஹ்வின் பாதையில் தம் செல்வங்களாலும் உயிர்களாலும் அறப்போர் புரிவோரும் சமமாக மாட்டார்" (4:95) எனும் வசனம் அருளப்பெற்றபோது, அப்துல்லாஹ் பின் உம்மி மக்த்தூம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (அது குறித்துப்) பேசினார்கள். அப்போது "தக்க காரணமின்றி" என்பது அருளப்பெற்றது.
அத்தியாயம் : 33
பாடம் : 41 உயிர்த் தியாகிக்குச் சொர்க்கம் நிச்சயம்.
3856. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் (நபி (ஸல்) அவர்களிடம்), "நான் கொல்லப்பட்டால் எங்கே இருப்பேன், அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "சொர்க்கத்தில்" என்று பதிலளித்தார்கள். அந்த மனிதர் தமது கையிலிருந்த பேரீச்சங்கனிகளை உடனே தூக்கி எறிந்துவிட்டு (களத்தில் குதித்து), தாம் கொல்லப்படும்வரை போரிட்டார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் சுவைத் பின் சஈத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "உஹுதுப் போரின்போது ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் (மேற்கண்டவாறு) கேட்டார்" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 33
3857. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அன்சாரிகளில் "பனுந் நபீத்" எனும் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் வந்து, "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீங்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவீர்கள் என நான் உறுதிமொழிகிறேன்" என்று கூறிவிட்டு, (களத்தில்) முன்னேறிச் சென்று கொல்லப்படும்வரை போரிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இவர் குறைவாக நற்செயல் புரிந்தார்; நிறைவாக நற்பலன் வழங்கப்பெற்றார்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அபூபக்ர் பின் அபீ ஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "பனுந் நபீத் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது.
அத்தியாயம் : 33
3858. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சிரியாவுக்குப் புறப்பட்டுச் சென்ற) அபூ சுஃப்யானின் வணிகக் குழு என்ன ஆயிற்று எனக் கண்டறிய புசைசா பின் அம்ர் அல்அன்சாரீ (ரலி) அவர்களை உளவாளியாக அனுப்பிவைத்தார்கள். அவர் சென்றுவிட்டு (திரும்பி) வந்தபோது, என்னையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் தவிர வேறெவரும் வீட்டில் இருக்கவில்லை. ("அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியரில் சிலரையும் தவிர" என்று கூறினார்களா என எனக்குத் தெரியவில்லை என்று ஸாபித் பின் அஸ்லம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் உள்ளது.) அவர் வந்து (அபூசுஃப்யானின் வணிகக் குழு மக்காவை நோக்கிப் புறப்பட்டுவிட்டது" என்ற) தகவலைச் சொன்னார்.
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து (எங்களிடம்) பேசினார்கள். "நமக்கு ஒரு முக்கிய அலுவல் உண்டு. யாரிடம் வாகனம் (ஒட்டகம்) உள்ளதோ அவர் நம்முடன் பயணமாகட்டும்" என்று சொன்னார்கள். உடனே சிலர் மதீனாவின் மேட்டுப் பகுதி கிராமத்துக்குச் சென்று தம் ஒட்டகங்களுடன் வர அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கோரலாயினர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இல்லை, (இங்கு) யாரிடம் ஒட்டகம் தயாராக உள்ளதோ அவரைத் தவிர (வேறெவரும் புறப்பட வேண்டாம்)" என்று கூறிவிட்டு. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் (சில) நபித்தோழர்களும் புறப்பட்டனர். அவர்கள் இணைவைப்பாளர்களை முந்திக்கொண்டு "பத்ர்" வந்துசேர்ந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நான் முன்னிலை வகிக்காமல் (என்னிடம் கேட்காமல்) உங்களில் யாரும் எதற்காகவும் முந்த வேண்டாம்" என்று கூறினார்கள்.
இணைவைப்பாளர்கள் நெருங்கிவந்தவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "வானங்கள் மற்றும் பூமியின் பரப்பளவு கொண்ட சொர்க்கத்திற்கு எழு(ந்து தயாராகு)ங்கள்" என்று கூறினார்கள். உடனே உமைர் பின் அல்ஹுமாம் அல்அன்சாரீ (ரலி) அவர்கள், "வானங்கள் மற்றும் பூமியின் பரப்பளவு கொண்ட சொர்க்கமா?" என்று கேட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஆம்" என்று பதிலுரைக்க, "ஆஹா, ஆஹா" என்று உமைர் (ரலி) அவர்கள் சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆஹா, ஆஹா என்று நீர் கூறக் காரணமென்ன?" என்று கேட்டார்கள். உமைர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! வேறொன்றுமில்லை, அல்லாஹ்வின் தூதரே! சொர்க்கவாசிகளில் நானும் ஒருவனாக இருக்கவேண்டும் என்ற ஆசைதான் (அவ்வாறு நான் சொல்லக் காரணம்)" என்றார்.
அதற்கு "சொர்க்கவாசிகளில் நீரும் ஒருவர்தாம்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உமைர் (ரலி) அவர்கள் தமது அம்புக் கூட்டிலிருந்து பேரீச்சம் பழங்களை எடுத்து, அவற்றில் சிலவற்றை உண்ணத் தொடங்கினார்கள். பிறகு, "இந்தப் பேரீச்சம் பழங்களை உண்டு முடிக்கும்வரை நான் உயிர் வாழ்ந்தால் அது ஒரு நீண்ட நெடிய வாழ்க்கையாகிவிடுமே!" என்று கூறியபடி தம்மிடமிருந்த அந்தப் பேரீச்சம் பழங்களைத் தூக்கி எறிந்துவிட்டு, எதிரி(களை நோக்கிச் சென்று அவர்)களுடன் போரிட்டு வீரமரணம் அடைந்தார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33