3703. யஸீத் பின் ஹுர்முஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(காரிஜிய்யாவான) நஜ்தா பின் ஆமிர் என்பவர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு (ஐந்து விஷயங்களைப் பற்றிக் கேட்டு)க் கடிதம் எழுதினார். அவரது கடிதத்தை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வாசித்தபோதும் அவருக்குப் பதில் எழுதியபோதும் நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடன் இருந்தேன்.
அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் மீதாணையாக! முடைநாற்றத்தில் வீழ்ந்துவிடாமல் அவரைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லையாயின் அவருக்கு நான் பதில் கடிதம் எழுதவுமாட்டேன்; அவரைக் கண்குளிரச் செய்திருக்கவுமாட்டேன்" என்று கூறிவிட்டு, (பின்வருமாறு) அவருக்குக் கடிதம் எழுதச் சொன்னார்கள்:
"அல்லாஹ் (8:41ஆவது வசனத்தில்) குறிப்பிட்டுள்ள (குமுஸில்) பங்கு பெறுகின்ற உறவினர்கள் யார்?” என்பது குறித்து நீர் என்னிடம் கேட்டிருந்தீர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உறவினர்களாகிய நாங்கள்தாம் அவர்கள் என நாங்கள் கருதினோம். ஆனால், அதை மக்கள் மறுத்துவிட்டனர்.
நீர் என்னிடம் "ஓர் அநாதைக்கு "அநாதை” எனும் பெயர் எப்போது முற்றுப்பெறும்?” எனக் கேட்டிருந்தீர். அவன் திருமண வயதை அடைந்து, அவனிடம் பக்குவம் தென்பட்டு, அவனது செல்வம் அவனிடம் ஒப்படைக்கப்படும் பருவத்தை அவன் அடையும்போது அவனிடமிருந்து "அநாதை” எனும் பெயர் முற்றுப்பெற்றுவிடும்.
நீர் என்னிடம் "(அறப்போரில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இணைவைப்பாளர்களின் குழந்தைகளில் எதையேனும் கொன்றிருக்கிறார்களா?” என்று கேட்டிருந்தீர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதிரிகளின் குழந்தைகள் எதையும் கொன்றதில்லை. நீரும் அவர்களின் குழந்தைகள் எதையும் கொன்றுவிடாதீர்; களிர், தாம் கொன்ற சிறுவனிடமிருந்து அறிந்துகொண்டதை நீரும் அறிந்துகொள்ள முடிந்தால் தவிர. (ஆனால், அது உம்மால் முடியாது.)
மேலும், நீர் என்னிடம் "பெண்களும் அடிமைகளும் போரில் கலந்துகொண்டால் அவர்களுக்கும் போர்ச்செல்வத்தில் குறிப்பிட்ட அளவு பங்கு உண்டா?” எனக் கேட்டிருந்தீர். அவர்களுக்கு மக்களின் போர்ச்செல்வங்களிலிருந்து சிறிதளவு (ஊக்கத் தொகையாக) வழங்கப்படுவதைத் தவிர குறிப்பிட்ட அளவு பங்கேதும் அவர்களுக்குக் கிடையாது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3704. மேற்கண்ட ஹதீஸின் ஒரு பகுதி மட்டும் யஸீத் பின் ஹுர்முஸ் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் முழுத் தகவல்களுடன் ஹதீஸ் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 32
3705. உம்மு அத்திய்யா அல்அன்சாரிய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஏழு அறப்போர்களில் கலந்துகொண்டேன். மக்கள் (போரிடச்) சென்ற பிறகு அவர்களின் இருப்பிடங்களில் அவர்களுக்குப் பின்துணையாக இருந்து நான் செயல்படுவேன்; அவர்களுக்காக உணவு சமைப்பேன். போரில் காயமுற்றவர்களுக்கு மருந்திட்டுச் சிகிச்சை செய்வேன். நோயாளிகளைக் கவனித்துக் கொள்வேன்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
பாடம் : 49 நபி (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட அறப்போர்களின் எண்ணிக்கை.
3706. அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களது ஆட்சியில் கூஃபாவின் ஆளுநராயிருந்த) அப்துல்லாஹ் பின் யஸீத் அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திப்பதற்காக மக்களுடன் புறப்பட்டுச் சென்றார். அப்போது அவர் இரண்டு ரக்அத்கள் தொழுவித்துவிட்டு மழை வேண்டிப் பிரார்த்தித்தார்.
அப்போது நான் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களைச் சந்தித்தேன். எனக்கும் அவர்களுக்குமிடையே ஒரு மனிதர் மட்டுமே இருந்தார். அப்போது நான் ஸைத் (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட போர்கள் எத்தனை?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "பத்தொன்பது" என விடையளித்தார்கள்.
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நீங்கள் கலந்துகொண்ட போர்கள் எத்தனை?" என்று வினவியபோது, "பதினேழு" என்றார்கள். "அவர்கள் கலந்துகொண்ட முதல் போர் எது?" என்று கேட்டதற்கு "தாத்துல் உசைர், அல்லது உஷைர்" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3707. ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பத்தொன்பது அறப்போர்களில் கலந்து கொண்டார்கள். மேலும், அவர்கள் (மதீனாவுக்கு) நாடு துறந்து சென்ற பிறகு ஒரேயொரு ஹஜ் மட்டுமே செய்தார்கள். "விடைபெறும்” ஹஜ் எனும் அந்த ஹஜ்ஜைத் தவிர வேறெந்த ஹஜ்ஜையும் அவர்கள் செய்யவில்லை.
இதை அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 32
3708. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பத்தொன்பது அறப்போர்களில் கலந்து கொண்டேன். நான் பத்ருப் போரிலோ உஹுதுப் போரிலோ கலந்துகொள்ளவில்லை. (அப்போருக்குச் செல்லவிடாமல்) என் தந்தை (அப்துல்லாஹ் (ரலி) அவர்கள்) என்னைத் தடுத்துவிட்டார்கள்.
(என் தந்தை) அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் உஹுதுப் போர் நாளில் கொல்லப்பட்டுவிட்ட பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நான் ஒருபோதும் எந்தப் போரிலும் கலந்துகொள்ளாமல் இருந்ததில்லை.
அத்தியாயம் : 32
3709. புரைதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பத்தொன்பது அறப்போர்களில் கலந்து கொண்டார்கள். அவற்றில் எட்டுப் போர்களில் அவர்கள் (நேரடியாகப்) போரிட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அவற்றில்” எனும் சொல் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 32
3710. புரைதா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பதினாறு போர்களில் கலந்து கொண்டேன்.
அத்தியாயம் : 32
3711. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஏழு அறப்போர்களில் கலந்துகொண்டேன். அவர்கள் அனுப்பிக்கொண்டிருந்த படைப்பிரிவுகளில் பங்கேற்று ஒன்பது அறப்போர்களுக்குச் சென்றுள்ளேன். (அவற்றில்) ஒருமுறை எங்களுக்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்கள். ஒருமுறை உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், (சலமா (ரலி) அவர்கள் கலந்து கொண்ட அறப்போர் மற்றும் படைப்பிரிவு ஆகிய) அவ்விரண்டின் எண்ணிக்கையும் ஏழு என்றே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 32
பாடம் : 50 "தாத்துர் ரிக்காஉ” போர்.
3712. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஒரு போருக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். எங்களில் ஆறு பேருக்கு ஓர் ஒட்டகம்தான் இருந்தது. அதில் நாங்கள் ஒருவர் பின் ஒருவராக (முறை வைத்து) பயணம் செய்தோம். (வாகனம் இல்லாமல் நடந்தே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால்) எங்களுடைய பாதங்கள் தேய்ந்து (கொப்புளங்கள் வெடித்து)விட்டன. என்னுடைய இரண்டு பாதங்களும் தேய்ந்து என் கால் நகங்கள் விழுந்துவிட்டன.
அப்போது நாங்கள் எங்கள் கால்களில் துண்டுத் துணிகளைச் சுற்றிக்கொள்பவர்களாக இருந்தோம். இவ்வாறு துண்டுத் துணிகளை நாங்கள் கால்களில் சுற்றிக் கட்டிக்கொண்டதால் தான் அந்தப் போருக்கு "தாத்துர் ரிக்காஉ”(ஒட்டுத் துணிப் போர்) எனப்பெயர் சூட்டப்பெற்றது.
இதன் அறிவிப்பாளரான அபூபுர்தா பின் அபீமூசா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த ஹதீஸை அறிவித்த பின் (என் தந்தை) அபூமூசா (ரலி) அவர்கள், தம்மைப் பற்றித் தாமே இவ்வாறு அறிவித்ததை விரும்பவில்லை. தமது நற்செயல் ஒன்றைத் தாமே வெளியே சொல்லிவிட்டதை அவர்கள் விரும்பவில்லை போலும்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூஉசாமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
புரைத் (ரஹ்) அவர்கள் அல்லாத மற்றொருவரது அறிவிப்பில் "அல்லாஹ் அதற்குரிய நற்பலனை அவர்களுக்கு வழங்குவானாக" என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
பாடம் : 51 அறப்போர்களில் இறைமறுப்பாளரிடம் உதவி கோருவது வெறுக்கத்தக்கதாகும்.
3713. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பத்ரை நோக்கி (போருக்கு)ப் புறப்பட்டார்கள். (மதீனாவுக்கு அருகில்) "ஹர்ரத்துல் வபரா” எனும் இடத்தில் அவர்கள் இருந்தபோது அவர்களை ஒரு மனிதர் அணுகினார். அவரது வீரதீரமும் விவேகமும் (மக்களால் பெரிதும்) பேசப்பட்டு வந்தது. அவரைப் பார்த்ததும் நபித்தோழர்கள் மகிழ்ச்சியுற்றனர்.
அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அணுகி, "உம்மைப் பின்பற்றி, உம்முடன் சேர்ந்து (எதிரிகளோடு) போரிட நான் வந்துள்ளேன்" என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்புகிறாயா?" என்று கேட்டார்கள். அவர் "இல்லை” என்றார். "அப்படியானால் நீ திரும்பிச் செல். ஓர் இணைவைப்பாளரிடம் நான் உதவி கோரமாட்டேன்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவிட்டார்கள்.
பிறகு சிறிது தூரம் சென்று, நாங்கள் "அஷ்ஷஜரா” எனும் இடத்தில் இருந்தபோது, அந்த மனிதர் மீண்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அணுகி, முன்பு கூறியதைப் போன்றே கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்பு கூறியதைப் போன்றே கூறிவிட்டு, "நீ திரும்பிச் சென்றுவிடு. நான் ஓர் இணைவைப்பாளரிடம் உதவி கோர மாட்டேன்" என்று கூறினார்கள்.
பிறகு அந்த மனிதர் திரும்பிச் சென்றுவிட்டு, "அல்பைதா" எனும் இடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அணுகியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், முன்பு கேட்டதைப் போன்றே "நீ அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்புகிறாயா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர் "ஆம்" என்றார்.
ஆகவே, அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அப்படியானால், நீர் (நம்முடன்) வரலாம்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32

பாடம் : 1 மக்கள் அனைவரும் (ஆட்சியதிகாரத்தில்) குறைஷியரைப் பின்பற்றுபவர் ஆவர்; இந்த ஆட்சியதிகாரம் குறைஷியரிடையேதான் இருந்துவரும்.
3714. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்கள் அனைவரும் இந்த (ஆட்சியதிகாரம்) விஷயத்தில் குறைஷியரைப் பின்பற்றுபவர் ஆவர்; அவர்களில் முஸ்லிமாயிருப்பவர் குறைஷியரில் முஸ்லிமாயிருப்பவரைப் பின்பற்றுபவர் ஆவார். அவர்களில் இறைமறுப்பாளராயிருப்பவர் குறைஷியரில் இறை மறுப்பாளராயிருப்பவரைப் பின்பற்றுபவர் ஆவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3715. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கள் அனைவரும் இந்த (ஆட்சியதிகாரம்) விஷயத்தில் குறைஷியரைப் பின்பற்றுபவர்கள் ஆவர். அவர்களில் முஸ்லிமாயிருப்பவர் குறைஷியரில் முஸ்லிமாயிருப்பவரைப் பின்பற்றுபவர் ஆவார். மக்களில் இறை மறுப்பாளராயிருப்பவர் குறைஷியரில் இறைமறுப்பாளராயிருப்பவரைப் பின்பற்றுபவர் ஆவார்.
அத்தியாயம் : 33
3716. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நன்மையிலும் தீமையிலும் (இஸ்லாத்திலும், அறியாமைக்காலத்திலும்) மக்கள் அனைவரும் குறைஷியரைப் பின்பற்றுபவர்கள் ஆவர்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 33
3717. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இந்த ஆட்சியதிகாரம் குறைஷியரிடையேதான் இருந்துவரும்; அவர்களில் இருவர் எஞ்சியிருக்கும் வரை. - இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 33
3718. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் என் தந்தை (சமுரா -ரலி) அவர்களுடன் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "பன்னிரண்டு கலீஃபாக்கள் மக்களை ஆளாதவரை இந்த ஆட்சியதிகாரம் முடிவடையாது" என்று கூறிவிட்டு, பிறகு எனக்குக் கேட்காமல் இரகசியமாக ஏதோ (என் தந்தையிடம்) சொன்னார்கள்.
அப்போது நான் என் தந்தையிடம், "நபி (ஸல்) அவர்கள் என்ன சொன்னார்கள்?" என்று கேட்டேன். அதற்கு என் தந்தை "அவர்கள் அனைவரும் குறைஷியர் ஆவர் (என்று கூறினார்கள்)" என்றார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3719. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள், "பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள் மக்களை ஆளும்வரை இந்த ஆட்சியமைப்பு நீடிக்கும்" என்று சொல்லக் கேட்டேன். பிறகு எனக்குக் கேட்காத விதத்தில் ஏதோ (என் தந்தையிடம்) நபி (ஸல்) அவர்கள் இரகசியமாகக் கூறினார்கள். நான் என் தந்தையிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்ன சொன்னார்கள்?" என்று கேட்டேன். அதற்கு "அவர்கள் அனைவரும் குறைஷியராக இருப்பார்கள் என்று (நபி (ஸல்) அவர்கள்) கூறினார்கள்" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. ஆயினும், அதில் "இந்த ஆட்சியமைப்பு நீடிக்கும்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 33
3720. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இஸ்லாம், பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள்வரை வலிமையானதாக இருந்துவரும்" என்று சொல்லக் கேட்டேன். பிறகு ஏதோ சொன்னார்கள். அதை நான் புரிந்துகொள்ளவில்லை. எனவே, நான் என் தந்தை (சமுரா -ரலி) அவர்களிடம், "என்ன சொன்னார்கள்?" என்று கேட்டேன். அதற்கு என் தந்தை, "அவர்கள் அனைவரும் குறைஷியராக இருப்பார்கள் என்று கூறினார்கள்" என்றார்கள்.
அத்தியாயம் : 33
3721. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "இந்த ஆட்சியதிகாரம் பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள்வரை வலிமையானதாக இருந்துவரும்" என்று கூறிவிட்டுப் பிறகு ஏதோ சொன்னார்கள். அதை நான் புரிந்துகொள்ளவில்லை. எனவே, நான் என் தந்தையிடம், "என்ன சொன்னார்கள்?" என்று கேட்டேன். அதற்கு, "அவர்கள் அனைவரும் குறைஷியராக இருப்பார்கள் என்று கூறினார்கள்" என்றார்கள்.
அத்தியாயம் : 33
3722. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் என் தந்தை (சமுரா -ரலி) அவர்களுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்த மார்க்கம், பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள் வரை வலிமையானதாகவும் பாதுகாப்போடும் இருந்துவரும்" என்று சொல்லக் கேட்டேன். பிறகு ஏதோ சொன்னார்கள். மக்கள் (பேசிக் கொண்டிருந்ததால்) அதைக் கேட்கவிடாமல் என்னைச் செவிடாக்கிவிட்டார்கள். எனவே, நான் என் தந்தையிடம், "நபி (ஸல்) அவர்கள் என்ன சொன்னார்கள்?" என்று கேட்டேன். அதற்கு "அவர்கள் அனைவரும் குறைஷியராக இருப்பார்கள் என்று கூறினார்கள்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33