3545. ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, கண்டெருக்கப்பட்ட பொருளைப் பற்றிக் கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள், “அதன் பையையும் (உறையையும்) முடிச்சையும் (மூடியையும்) அடையாளம் பார்த்து வைத்துக்கொள். பிறகு ஓராண்டுக் காலத்திற்கு அதைப் பற்றி அறிவிப்புச் செய்துகொணடேயிரு. அதன் உரிமையாளர் (தேடி) வந்தால் (கொடுத்துவிடு) இல்லையேல் உன் விருப்பப்படி அதைப் பயன்படுத்திக்கொள்” என்று சொன்னார்கள்.
அந்த மனிதர், “வழிதவறி வந்த ஆட்டை என்ன செய்வது?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள் “அது உனக்குரியது அல்லது உன் சகோதரனுக்குரியது அல்லது ஒநாய்க்கு உரியது” என்று கூறினார்கள்.
அந்த மனிதர், “வழிதவறி வந்த ஒட்டகத்தை என்ன செய்வது?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “உன்க்கும் அதற்கும் என்ன தொடர்பு? (குடிப்பதற்கு) அதனுடன் அதன் தண்ணீர்ப் பையும் (திமிலும்), (நடப்பதற்கு) அதன் கால்குளம்பும் உள்ளது. அதை அதன் உரிமையாளன் சந்திக்கும்வரை அது நீர் நிலைக்குச் செல்கிறது (அங்கு தண்ணீர் குடித்துத் தாகம் தணித்துக்கொள்கிறது) மரத்திலிருந்து (அதன் இலைதழைகளைத்) தின்கிறது (அதைப் பற்றி நீ ஏன் கவலைப் பட வேண்டும்?)” என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 31
3546. ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் கண்டெடுக்கப்பட்ட பொருளைப் பற்றி கேட்டார். நபி (ஸல்) அவர்கள் “ஓராண்டுக் காலத்திற்கு அதைப் பற்றி அறிவிப்புச் செய்துகொண்டேயிரு.. அதன் முடிச்சையும் (மூடியையும்) பையையும் (உறையையும்) அடையாளம் பார்த்து வைத்துக்கொள். அதன் உரிமையாளர் வந்தால் அவரிடம் ஒப்படைத்துவிடு.. (வராவிட்டால்) நீயே செலவழித்துக்கொள்” என்று கூறினார்கள்.
அந்த மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! வுழிதவறி வந்த ஆட்டை என்ன செய்வது?” என்று கேட்டார். “அதை நீ பிடித்துக்கொள். ஏனெனில், அது உனக்குரியது அல்லது உன் சகோதரனுக்குரியது அல்லது ஓநாய்க்குரியது” என்று சொன்னார்கள்.
அந்த மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! வுழிதவறி வந்த ஒட்டகத்தை என்ன செய்வது?” என்று கேட்டார். இதை கேட்டதும் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கோபப்பட்டார்கள். எந்த அளவுக்கென்றால், அவர்களின் ‘இரு கன்னங்களும்’ அல்லது ‘அவர்களது முகம்’ சிவந்து விட்டது. பிறகு ‘உனக்கும் அதற்கும் என்ன தொடர்பு? (நடப்பதற்கு) அதனுடன் கால்குளம்பும் (குடிப்பதற்கு) அதனுடன் தண்ணீர் பையும் (திமிலும்) உள்ளது. அதை அதன் உரிமையாளர் சந்திக்கும்வரை (சுயமாக அது வாழ்ந்துகொள்கிறது)’ என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 31
3547. மேற்கண்ட ஹதீஸ் ஸைத் பின் காலித் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், “ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது அவர்களுடன் நானும் இருந்தேன் அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கண்டெடுக்கப்பட்ட பொருளைப் பற்றிக் கேட்டார்” என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.
அம்ர் பின அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘(ஓராண்டுக் காலத்திற்குள்) அதைத் தேடிக்கொண்டு யாரும் வராவிட்டால் நீயே அதைச் செலவழித்துக்கொள்’ என்று கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 31
3548. மேற்கண்ட ஹதீஸ் ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து....’ என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அதில், ‘இதைக் கேட்டதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகமும் நெற்றியும் சிவந்துவிட்டன. அவர்கள் கோபமடைந்தார்கள்’ என்று இடம்பெற்றுள்ளது. மேலும், ‘ஓராண்டுக் காலத்திற்கு அதைப் பற்றி அறிவிப்புச் செய்’ என்பதற்குப் பிறகு ‘அதன் உரிமையாளர் வராவிட்டால் உன்னிடம் அது அடைப்கலமா இருக்கட்டும்!’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 31
3549. நபித்தோழர் ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியவதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கண்டெடுக்கப்பட்ட தங்கம், வெள்ளி ஆகியவை பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘அதன் பையையும் (உறையையும்) முடிச்சையும் (மூடியையும்) அடையாளம் பார்த்து வைத்துக்கொள். பிறகு ஓராண்டுக் காலத்திற்கு அதைப் பற்றி அறிவிப்புச் செய்துகொண்டேயிரு. (அதற்கு உரியவரை) நீ கண்டுடிபிடிக்காவிட்டால் நீயே அதைச் செலவிட்டுக்கொள். ஆனால், அது உன்னிடம் அடைக்கலமாகவே இருக்கட்டும். ஆதைத் தேடிக்கொண்டு யாரும் என்றைக்காவது ஒரு நாள் வந்தால் அவரிடம் அதை ஒப்படைத்துவிடு’ என்ற கூறினார்கள்.
அவர்களிடம் கேள்வி கேட்டவர், வழி தவறி வந்த ஒட்டகத்தைப் பற்றி கேட்டதற்கு, ‘உனக்கும் அதற்கும் என்ன தொடர்பு (அதன் வழியில்) அதை விட்டுவிடு. ஏனெனில், அதனுடன் (நடப்பதற்கு) கால்குளம்பும், (குடிப்பதற்கு) அதன் தண்ணீர்ப் பையும்(திமிலும்) உள்ளது. அதை அதன் உரிமையாளர் கண்டுபிடிக்கும்வரை அது நீர் நிலைக்குச் செல்கிறது. மரங்களிலுருந்து (இலைகளை) தின்கிறது (அதைப் பற்றி நீ ஏன் கவலைப்படவேண்டும்?)’ என்று கூறினார்கள்.
அவர்களிடம் (வழிதவறி வந்த) ஆட்டைப் பற்றி அவர் கேட்டபோது, ‘நீ அதைப் பிடித்துக்கொள். ஏனெனில், அது உனக்குரியது அல்லது உன் சகோதரனுக் குரியது அல்லது ஓநாய்க்குரியது’ என்று விடையளித்தார்கள.
அத்தியாயம் : 31
3550. மேற்கண்ட ஹதீஸ் ஸைத் பின காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ‘ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வழிதவறி வந்த ஒட்டகத்தை பற்றிக் கேட்டார்’ என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.
அவற்றில் ரபீஆ பின் அபீஅப்திர் ரஹ்மான் அர்ரஃயு (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ‘இதைக் கேட்டதும் நபி(ஸல்) அவர்கள் தம் கன்னங்கள் சிவக்குமளவுக்குக் கோபப்பட்டார்கள்’ என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸ்களில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
மேலும், ‘அதன் உரிமையாளர் (அதை தேடிக்கொண்டு) வந்து, (நீ அதன் அடையாளத்தைப் பற்றி கேட்கும்போது) அவர் அதன் பையையும் எண்ணிக்கையையும் முடிச்சையும் (சரியாக) அறிந்திருந்தால் அவரிடம் அதைக் கொடுத்துவிடு. இல்லையேல், அது உனக்கே உரியது’ என்று கூறினார்கள் எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 31
3551. ஸைத் பின் காலித் அல்ஜுஹனி (ரழி) அவர்கள் கூறியதாவது :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கண்டெடுக்கப்பட்ட பொருள் குறித்து வினவப்பட்டது. அப்போது அவர்கள் “ஓராண்டுக் காலத்திற்கு அதைப் பற்றி அறிவிப்பச் செய்து கொண்டேயிரு (அதற்குரியவர்) அறியப்படாவிட்டால் அதன் பையையும் முடிச்சையும் நீ அறிந்து வைத்துகொள். பிறகு நீ அதை உண்ணலாம. பிறகு அதற்குரியவர் வந்தால் அவரிடம் அ(தற்குரிய)தை செலுத்திவிடு” என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 31
3552. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் “பின்னர் அதற்குரியவர் அறிந்து கொள்ளப்பட்டால் அதை (அவரிடம்) ஒப்படைத்துவிடு. இல்லையென்றால், அதன் பையையும் முடிச்சையும் எண்ணிக்கையையும் நீ அறிந்து வைத்துக்கொள்” என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 31
3553. சுவைத் பின் ஃகஃபலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நானும் ஸைத் பின் ஸூஹான் (ரலி) அவர்களும் சல்மான பின் ரபீஆ (ரலி) அவர்களும் ஒரு போருக்காகப் புறப்பட்டுச் சென்றபோது, (ஓரிடத்தில்) சாட்டை ஒன்றை நான் கண்டேன். அதை நான் எடுத்துக் கொண்டேன். (என் தோழர்கள்) இருவரும், ‘அதை போட்டுவிடு’ என்று கூறினார்கள். நான், ‘இல்லை. நூன் இதைப் பற்றி அறிவிப்புச் செய்துகொண்டிருப்பேன். இதன் உரிமையாளர் வந்தால் சரி (அதை அவரிடம் ஒப்படைத்து விடுவேன்). இல்லையென்றால், இதை நான் பயன்படுத்திக்கொள்வேன்’ என்று அவர்களிடம் கூறி மறுத்துவிட்டேன் .
நாங்கள் போரை முடித்துக்கொண்டு திரும்பியபோது, நான் ஹஜ்ஜுக்குச் செல்வேன் என என் விதியில் இருந்தது (நான் ஹஜ்ஜுக்குச் சென்றேன்). அப்போது நான் மதீனா (வழியாகச்) சென்றேன். (அங்கு) உபை பின் கஅப் (ரலி) அவர்களைச் சந்தித்தேன். அந்தச் சாட்டையைப் பற்றியும் அதைப் பற்றி என் தோழர்கள் இருவரும் கூறியதைப் பற்றியும் அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் ஒரு சுருக்குப் பையைக் கண்டெடுத்தேன். அதில் நூறு தீனார்கள் (பொற்காசுகள்) இருந்தன. ஆதை எடுத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘ஓராண்டுக் காலத்திற்கு அதைப் பற்றி அறிவிப்புச் செய்’ என்று கூறினார்கள். அவ்வாறே நான் அறிவிப்புச் செய்துகொண்டிருந்தேன். அதை அறிந்துகொள்ளும் (உரிமையாளர்) யாரையும் நான் காணவில்லை.
பிறகு மீண்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போதும் அவர்கள், ‘மேலும் ஓராண்டுக் காலத்திற்கு அறிவிப்புச் செய்துகொண்டிரு’ என்று கூறினார்கள். அவ்வாறே நான் அறிவிப்புச் செய்துகொண்டிருந்தேன். அதை அறிந்துகொள்ளும் (உரிமையாளர்) யாரையும் நான் காணவில்லை. பிறகு திரும்பவும் அவர்களிடம் சென்றேன்.
அப்போதும் அவர்கள், ‘மேலும் ஓராண்டுக் காலத்திற்கு அறிவிப்பு செய்’ என்று கூறினார்கள். அவ்வாறே நான் அதைப் பற்றி அறிவிப்பு செய்தேன். அதை அறிந்துகொள்ளும் (உரிமையளர்) யாரையும் நான் காணவில்லை. (நான்காம் முறையாக நான் அவர்களிடம் சென்றபோது) அந்த பையிலுள்ள காசின் எண்ணிக்கையையும், பையையும், அதன் முடிச்சையும் நினைவில் வைத்துக்கொள். அதன் உரிமையாளர் வந்தால் சரி (அவரிடம் அதை ஒப்டைத்துவிடு). இல்லையென்றால், அதை நீ பயன்படுத்திக்கொள்’ என்று கூறினார்கள். ஆகவே நான் பயன்படுத்திக்கொண்டேன்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த) சலமா பின் குஹைல் (ரஹ்) அவர்களை அதன் பின்னர் மக்காவில் நான் சந்தித்தபோது, ‘மூன்றாண்டுக் காலத்திற்கு அறிவிப்புச் செய்ய வேண்டுமா, அல்லது ஒரேயோர் ஆண்டு அறிவிப்புச் செய்ய வேண்டுமா என எனக்கு தெரியவில்லை’ என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
மேற்கண்ட ஹதீஸ் சுவைத் பின் கஃபலா (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், ‘நான் ஸைத் பின் ஸூஹான் (ரலி) அவர்களுடனும் சல்மான் பின் ரபீஆ (ரலி) அவர்களுடனும் (போருக்குப்) புறப்பட்டுச் சென்றபோது சாட்டை ஒன்றைக் கண்டேன்...’ என்று ஹதீஸ் ஆரம்பமாகி, ‘ஆகவே அதை நான் பயன்படுத்திக்கொண்டேன்’ என்பதோடு முடிவடைகிறது.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த சலமா பின் குஹைல் (ரஹ்) அவர்களைப் பத்தாண்டுகளுக்குப் பிறகு நான் சந்தித்தேன். அப்போது அவர்கள் ‘ஓரேயோர் ஆண்டு நீ அறிவிப்புச் செய்’ என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 31
3554. மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் அனைவருடைய அறிவிப்பிலும் ‘மூன்று ஆண்டுக் காலத்திற்கு அறிவிப்புச் செய்(ய வேண்டும்)’ என இடம்பெறறுள்ளது. ஹம்மாத் பின் சலமா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் மட்டும் ‘இரண்டு ஆண்டுக் காலத்திற்கு அல்லது மூன்று ஆண்டுக் காலத்திற்கு அறிவிப்புச் செய்ய வேண்டும்’ என்று (ஐயப்பாட்டுடன்) இடம் பெற்றுள்ளது.
சுஃப்யான் பின் சயீத் (ரஹ்), ஸைத் பின் அபீஉனைசா (ரஹ்), ஹம்மாத் பின் சலமா (ரஹ்) ஆகியோரின் அறிவிப்புகளில், ‘பின்னர் யாரேனும் ஒருவர் (கண்டெடுக்கப்பட்ட) அப்பொருனின் எண்ணிக்கையையும் பையையும் அதன் முடிச்சையும் தெரிவித்து (உன்னிடம்) வந்தால் அதை அவரிடம் கொடுத்துவிட’ என்று இடம்பெற்றுள்ளது.
சுஃப்யான் பின் சயீத் (ரஹ்) அவர்களிடமிருந்து வகீஉ (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பில் அறிவிக்கும் அறிவிப்பில் ‘(அறிவிப்புச் செய்தும் யாரும் வராவிட்டால்) அது உனது செல்வத்தின் வகையைப் போன்றதாகும்’ என்று இடம்பெற்றுள்ளது. சுஃப்யானிடமிருந்து முஹம்மத் பின் அப்தில்லாஹ் பின் நுமைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பில் ‘இல்லையென்றால், அதை நீ பயன்படுத்திக்கொள்’ எனும் வாசகம் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 31
3555. அப்துர் ரஹ்மான் பின் உஸ்மான் அத்தைமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஹாஜிகள் தவறவிட்ட பொருளை எடுக்க வேண்டாமெனத் தடை விதித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 31
3556. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கண்டெடுக்கப்பட்ட பொருளைப் பற்றி அறிவிப்புச் செய்யாமல் அதைத் தம்மிடம் வைத்துக் கொண்டிருக்கும் ஒருவர் வழிகேட்டிலேயே உள்ளார்.
இதை ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 31
பாடம் : 2 உரிமையாளரின் அனுமதியின்றி கால்நடையில் பால் கறப்பதற்கு வந்துள்ள தடை.
3557. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவரது கால்நடையில் அவரது அனுமதியின்றி வேறெவரும் பால் கறக்கவேண்டாம். உங்களில் எவரும் அவரது சரக்குப் பெட்டகத்திற்கு ஒருவர் வந்து, அவரது உணவுக் கருவூலத்தை உடைத்து, அவரது உணவை எடுத்துச் சென்றுவிடுவதை விரும்புவாரா? கால் நடைகளின் மடிகள், கால்நடை உரிமையாளர்களுடைய உணவையே சேகரித்துப் பாதுகாத்து வைத்திருக்கின்றன. ஆகவே, எவரும் உரிமையாளரின் அனுமதியின்றி எவரது கால்நடையிலும் பால் கறக்க வேண்டாம்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் பத்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் லைஸ் பின் சஅத் (ரஹ்) அவர்களைத் தவிர மற்ற அனைவரது அறிவிப்புகளிலும் "எடுத்துச் சென்றுவிடுவதை" என்பதைக் குறிக்க "ஃபயுன்தஸல" எனும் சொல் (மூலத்தில்) இடம்பெற்றுள்ளது. லைஸ் பின் சஅத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "ஃபயுன்தகல தஆமுஹு" என்றே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 31
பாடம் : 3 விருந்து உள்ளிட்ட உபசாரம்.
3558. அபூஷுரைஹ் அல்அதவீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பேசியபோது என் காதுகளால் கேட்டேன்; என் கண்களால் பார்த்தேன். அப்போது அவர்கள், "அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளிக்குத் தமது கொடையைக் கண்ணியமாக வழங்கட்டும்" என்று கூறினார்கள். மக்கள், "அவருடைய கொடை என்ன, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார்கள்.
அதற்கு அவர்கள், "(அவருடைய கொடை) ஒரு பகல் ஓர் இரவு (உபசரிப்பு) ஆகும். விருந்துபசாரம் மூன்று தினங்களாகும். அவற்றுக்குப் பின்னால் (அளிக்கும் உணவும் உபசரிப்பும்) அவருக்குத் தர்மமாக அமையும். மேலும்,அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது மௌனமாக இருக்கட்டும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 31
3559. அபூஷுரைஹ் அல்குஸாயீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "விருந்துபசாரம் மூன்று தினங்களாகும். ஒரு பகல் ஓர் இரவு (விருந்துபசாரம்) அவருடைய கொடையாகும். ஒரு முஸ்லிமான மனிதர், தம் சகோதரரிடம் அவரைப் பாவத்தில் தள்ளும் அளவுக்குத் தங்கியிருப்பதற்கு அனுமதி இல்லை" என்று கூறினார்கள்.
மக்கள், "அவரைப் பாவத்தில் தள்ளுதல் எப்படி, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "அவ(ர் தம் சகோதர)ரிடம் தங்கி இருப்பார். ஆனால், விருந்துபசாரம் செய்யுமளவுக்கு அவரிடம் எதுவுமே இருக்காது" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 31
3560. மேற்கண்ட ஹதீஸ் அபூஷுரைஹ் அல்குஸாயீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பேசியபோது என் காதுகளால் கேட்டேன். என் கண்ணால் பார்த்தேன்;எனது உள்ளம் மனனமிட்டது" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. அதில், "உங்களில் ஒருவர் தம் சகோதரரைப் பாவத்தில் தள்ளும் அளவுக்குத் தங்கியிருப்பதற்கு அனுமதி இல்லை" என்று மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்று இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 31
3561. உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (நபியவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எங்களை ஒரு சமூகத்தாரிடம் அனுப்பிவைக்கிறீர்கள். நாங்கள் (அங்கு) சென்று அவர்களிடம் தங்குகிறோம். ஆனால், அவர்கள் எங்களை உபசரிக்க மறுக்கின்றனர். அவ்வாறெனில் (அது குறித்து) தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?" என்று கேட்டோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் ஒரு சமூகத்தாரிடம் செல்ல, அவர்கள் விருந்தினர்களுக்கு வேண்டிய வசதிகளை உங்களுக்குச் செய்து தர ஏற்பாடு செய்தால், அதை ஏற்றுக்கொள்ளுங்கள். அவர்கள் அப்படிச் செய்யவில்லையென்றால்,அவர்களிடமிருந்து விருந்தினர்க(ளான உங்க)ளுக்குத் தேவை யான விருந்தினர் உரிமையை (நீங்களே) எடுத்துக்கொள்ளுங்கள்" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 31
பாடம் : 4 தேவைக்கு மேல் எஞ்சியுள்ள செல்வத்தால் பிறருக்கு உதவுவது விரும்பத் தக்கதாகும்.
3562. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். அப்போது ஒரு (ஏழை) மனிதர் தமக்குரிய (பலவீனமான) ஓர் ஒட்டகத்தில் வந்து, வலப்பக்கமும் இடப்பக்கமும் தமது பார்வையைச் செலுத்தி (பார்வையாலேயே உதவி கேட்டு)க்கொண்டிருந்தார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தம்மிடம் தேவைக்கு அதிகமான வாகனம் வைத்திருப்பவர் வாகனமில்லாதவருக்கு அதைக் கொடுத்து உதவட்டும்! தம்மிடம் தேவைக்கு அதிகமான உணவு வைத்திருப்பவர் உணவில்லாதவருக்கு அதைக் கொடுத்து உதவட்டும்" என்று கூறினார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் பல்வேறு செல்வங்களைப் பற்றி (தேவைக்கு அதிகமாக இருந்தால் இல்லாதவருக்கு அவற்றைக் கொடுக்கட்டும் என்று) கூறினார்கள். எந்த அளவுக்கென்றால், தேவைக்கு அதிகமாக எஞ்சியிருக்கும் பொருளில் எங்களில் எவருக்கும் உரிமையில்லையோ என்று நாங்கள் கருதினோம்.
அத்தியாயம் : 31
பாடம் : 5 பயணத்தில் உணவு குறைவாக இருந்தால், அதை மற்ற உணவுகளுடன் கலந்து பிறருக்கு உதவுவது விரும்பத்தக்கதாகும்.
3563. சலமா பின் அம்ர் பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ("ஹவாஸின்" எனும்) ஒரு போருக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். அப்போது எங்களுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது. எனவே, நாங்கள் எங்கள் வாகன ஒட்டகங்களில் சிலவற்றை அறுக்க முடிவு செய்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடமிருந்த (எஞ்சிய) உணவுப் பொருட்களைத் திரட்டும்படி உத்தரவிட்டார்கள்.
நாங்கள் அவ்வாறே செய்தோம். அதற்காக நாங்கள் தோல்விரிப்பு ஒன்றை விரித்துப் போட்டோம். அந்த விரிப்பின் மீது மக்கள் உணவுப் பொருட்களைச் சேகரித்தனர். அதில் எந்த அளவு உணவுப் பொருட்கள் சேர்ந்துள்ளன என்பதை மதிப்பிடுவதற்காக நான் எட்டிப் பார்த்தேன். ஓர் ஆடு படுத்திருக்கும் இடம் அளவுக்கு உணவுப் பொருட்கள் குவிந்திருப்பதாக நான் மதிப்பிட்டேன். அப்போது நாங்கள் ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம். நாங்கள் அனைவரும் வயிறு நிரம்பும் அளவுக்கு அதிலிருந்து உண்டோம். பிறகு எங்கள் தோல் பைகளிலும் நிரப்பிக்கொண்டோம்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), "அங்கத் தூய்மை (உளூ) செய்வதற்குத் தண்ணீர் உள்ளதா?" என்று கேட்டார்கள். அப்போது ஒரு மனிதர் தமது நீர்க் குவளையைக் கொண்டுவந்தார். அதில் சிறிதளவு தண்ணீர் இருந்தது. அவர் அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றினார். அந்தத் தண்ணீரில் நாங்கள் அனைவரும் அங்கத் தூய்மை (உளூ) செய்தோம். நாங்கள் ஆயிரத்து நானூறு பேரும் தாராளமாக ஊற்றிக் கழுவினோம்.
அதன் பிறகு எட்டுப் பேர் வந்து "அங்கத் தூய்மை செய்வதற்குத் தண்ணீர் உள்ளதா?" என்று கேட்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "(அங்கத் தூய்மை செய்வதற்குரிய) தண்ணீர் தீர்ந்துவிட்டது" என்று கூறிவிட்டார்கள்.
அத்தியாயம் : 31

பாடம் : 1 இஸ்லாமிய அழைப்புச் செய்தி எட்டிய பிறகும் அதை ஏற்க மறு(த்து தாக்குதல் தொடுக்க ஆயத்தமாக இரு)ப்போர்மீது முன்னறிவிப்பின்றி தாக்குதல் தொடுப்பது செல்லும்.
3564. இப்னு அவ்ன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(எதிரிகள்மீது) தாக்குதல் தொடுப்பதற்கு முன் அவர்களுக்கு இஸ்லாமிய அழைப்பு விடுப்பது பற்றிக் கேட்டு நான் நாஃபிஉ (ரஹ்) அவர்களுக்குக் கடிதம் எழுதினேன்; அவர்கள் எனக்கு பதில் எழுதினார்கள்.
அதில் அவர்கள், "இஸ்லாத்தின் ஆரம்பத்தில்தான் இவ்வாறு (அழைப்பு விடுக்கும் வழக்கம்) இருந்தது. (பிறகு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "பனுல் முஸ்தலிக்" குலத்தார் அசட்டையாக (எச்சரிக்கையின்றி) இருந்தபோது அவர்கள்மீது (திடீர்) தாக்குதல் நடத்தினார்கள். அப்போது அவர்களின் கால்நடைகள் நீர்நிலை ஒன்றில் தண்ணீர் புகட்டப்பட்டுக் கொண்டிருந்தன. அவர்களில் போர் வீரர்களைக் கொன்றார்கள்; (பெண்கள், சிறார்கள் ஆகியோரைக்) கைதிகளாகப் பிடித்தார்கள்.
அன்றுதான் ஜுவைரியா (ரலி) அவர்களை, அல்லது பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்களை உரிமையாக்கிக் கொண்டார்கள்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள். அவர்களும் அப்போது (நபியவர்களின்) அப்படையில் இருந்தார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த சுலைம் பின் அக்ளர் (ரஹ்) அவர்கள் "நபி (ஸல்) அவர்கள் அன்றுதான் ஜுவைரியாவை உரிமையாக்கிக்கொண்டார்கள்" என்று சொன்னதாகவே நான் எண்ணுகிறேன். ஆனால், "பின்துல் ஹாரிஸை" என்று அவர் சொன்னது உறுதி.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அவ்ன் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "ஜுவைரியா பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்களை உரிமையாக்கிக்கொண்டார்கள்" என்று ஐயப்பாடின்றி இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 32