பாடம் : 89 "(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு நீங்கள் எச்சரிக்கை செய்யுங்கள்" எனும் (26:214ஆவது) இறைவசனம்.
348. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள்" எனும் இந்த (26:214ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறைஷியரை (ஓரிடத்திற்கு) அழைத்தார்கள்.
அவர்கள் அனைவரும் ஒன்றுகூடினர். அப்போது பொதுவாகவும் தனித்தனியாகவும் பெயர் குறிப்பிட்டு,"கஅப் பின் லுஅய்யின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். முர்ரா பின் கஅபின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். அப்து ஷம்சின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். அப்து மனாஃபின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். ஹாஷிமின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். அப்துல் முத்தலிபின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். (என் மகள்) ஃபாத்திமாவே! உன்னை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்! ஏனென்றால், அல்லாஹ்விடமிருந்து வரும் (முடிவாகிவிட்ட சோதனை) எதிலிருந்தும் உங்களைக் காக்க என்னால் இயலாது. ஆயினும், உங்களுடன் எனக்கு இரத்த உறவு உண்டு. அதை நான் (காய்ந்துபோகவிடாமல்) பசுமையாக்குவேன் (உங்களுடைய உறவைப் பேணி நடந்துகொள்வேன்)" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
349. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
இருப்பினும், முந்தைய அறிவிப்பே நிறைவானதும் நிரப்பமானதும் ஆகும்.
அத்தியாயம் : 1
350. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள்" எனும் (26:214ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஸஃபா" மலைக் குன்றின் மீதேறி, "முஹம்மதின் மகள் ஃபாத்திமாவே! அப்துல் முத்தலிபின் மகள் ஸஃபிய்யாவே! அப்துல் முத்தலிபின் மக்களே! அல்லாஹ்விடமிருந்து வரும் (முடிவாகிவிட்ட சோதனை) எதிலிருந்தும் உங்களை என்னால் காக்க இயலாது. (வேண்டுமானால்) என் செல்வத்திலிருந்து நீங்கள் விரும்பியதை என்னிடம் கேளுங்கள் (தருகிறேன்)" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
351. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு "(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள்" எனும் (26:214ஆவது) இறைவசனம் அருளப்பெற்ற போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "குறைஷிக் கூட்டத்தாரே! உங்கள் உயிர்களை (இஸ்லாத்தை ஏற்பதன் மூலம்) விலைக்கு வாங்கிக் (காப்பாற்றிக்)கொள்ளுங்கள். உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒரு சிறிதும் என்னால் காப்பாற்ற முடியாது. அப்துல் முத்தலிபின் மக்களே! உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒரு சிறிதும் என்னால் காப்பாற்ற இயலாது. அப்பாஸ் பின் அப்தில் முத்தலிபே! உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒரு சிறிதும் என்னால் காப்பாற்ற இயலாது. அல்லாஹ்வின் தூதருடைய அத்தை ஸஃபிய்யாவே! உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒரு சிறிதும் என்னால் காப்பாற்ற இயலாது. அல்லாஹ்வின் தூதருடைய புதல்வி ஃபாத்திமாவே! என் செல்வத்திலிருந்து நீ விரும்பியதைக் கேள்! (தருகிறேன்.) ஆனால், அல்லாஹ்விடமிருந்து, உன்னை என்னால் ஒரு சிறிதும் காப்பாற்ற முடியாது" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
352. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
353. கபீஸா பின் அல்முகாரிக் (ரலி), ஸுஹைர் பின் அம்ர் (ரலி) ஆகியோர் கூறியதாவது:
"(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள்" எனும் (26:214 ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரு மலையின் பாறைக் குவியலை நோக்கிச் சென்று அதன் உச்சியிலிருந்த கல்மீது ஏறி, கூவி அழைத்து, "அந்தோ! அப்து மனாஃபின் மக்களே! நான் (உங்களை) எச்சரிப்பவன் ஆவேன். எனது நிலையும் உங்களது நிலையும் ஒரு மனிதனின் நிலையை ஒத்திருக்கிறது. அவன் எதிரிகளைக் கண்டான். தன் குடும்பத்தாரைப் பாதுகாப்பதற்காக உடனே அவன் (விரைந்து) சென்றான். அப்போது (எங்கே தான் செல்வதற்கு முன் எதிரிகள்) முந்திக்கொண்டு (தம் குடும்பத்தாரைத் தாக்கி)விடுவார்களோ என்று அவன் அஞ்சினான். எனவே, அவன் (அங்கிருந்தபடியே), "யா ஸபாஹா! (உதவி, உதவி! அதிகாலை ஆபத்து)" என்று சப்தமிடத் தொடங்கினான்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
354. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
355. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள் (அவர்களில் நல்லெண்ணம் படைத்த உங்கள் கூட்டத்தாரையும் எச்சரிக்கை செய்யுங்கள்)" எனும் (26:214ஆவது) இறைவசனம் அருளப் பெற்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டுச்சென்று "ஸஃபா" மலைக்குன்றின் மீதேறி உரத்த குரலில் "யா ஸபாஹா!" (உதவி! உதவி! அதிகாலை ஆபத்து) என்று உரத்த குரலில் கூறினார்கள். அப்போது (குறைஷி) மக்கள், "சப்தமிடும் இந்த மனிதர் யார்?" என்று கேட்டார்கள். அதற்கு "முஹம்மத்" என்று (சிலர்) பதிலளித்தனர். உடனே முஹம்மத் (ஸல்) அவர்களை நோக்கி மக்கள் திரண்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்னாரின் மக்களே, இன்னாரின் மக்களே, இன்னாரின் மக்களே! அப்து மனாஃபின் மக்களே! அப்துல் முத்தலிபின் மக்களே!" என்று அழைத்தார்கள். அவர்கள் அனைவரும் ஒன்றுகூடினர். அப்போது, "இந்த மலை அடிவாரத்திலிருந்து (உங்களைத் தாக்குவதற்காக எதிரிகளின்) குதிரைப் படையொன்று புறப்பட்டுவருகிறது என்று நான் உங்களிடம் தெரிவித்தால், என்னை நீங்கள் நம்பியிருப்பீர்களா?" என்று கேட்டார்கள். மக்கள், "உம்மிடமிருந்து எந்தப் பொய்யையும் நாங்கள் (இதுவரை) அனுபவித்ததில்லை. (அவ்வாறிருக்க, இதை நாங்கள் நம்பாமல் இருப்போமா?)" என்று சொன்னார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அப்படியென்றால், (என் மார்க்கத்தை நீங்கள் ஏற்காவிட்டால் இறைவனின்) கடும் வேதனையொன்று எதிர்நோக்கியுள்ளது என்று உங்களை எச்சரிக்கை செய்கின்றேன்" என்றார்கள். (அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்து குறைஷித் தலைவர்களில் ஒருவனான) அபூலஹப், "உமக்கு அழிவுண்டாகட்டும்! இதற்காகத்தான் எங்களை ஒன்றுகூட்டினாயா?" என்று கேட்டான். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (புறப்பட) எழுந்தார்கள். அப்போது "அழியட்டும் அபூலஹபின் இரு கரங்கள்; அவனே அழியட்டும்" எனும் (111ஆவது) அத்தியாயம் அருளப்பெற்றது.
இந்த (111:1ஆவது) வசனத்தை (அதன் இறுதியில் "கத்" (ளுóகுú) எனும் இடைச் சொல்லை இணைத்து) "வ கத் தப்ப" (அவன் அழிந்தேவிட்டான்) என்றே அப்போது (அறிவிப்பாளர்) அஃமஷ் (ரஹ்) அவர்கள் ஓதினார்கள்.
அத்தியாயம் : 1
356. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஸஃபா" மலைக்குன்றின் மீது ஏறி, "யா ஸபாஹா!" (உதவி! உதவி! அதிகாலை ஆபத்து!) என்று கூறினார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பிக்கிறது.
"(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள்" எனும் (26:214ஆவது) வசனம் அருளப்பெற்றது தொடர்பாக அவற்றில் கூறப்படவில்லை.
அத்தியாயம் : 1
பாடம் : 90 நபி (ஸல்) அவர்கள் (தம் பெரிய தந்தை) அபூதாலிப் அவர்களுக்காகப் பரிந்துரை செய்ததும், அதை முன்னிட்டு அவர்களுக்கு (நரக வேதனை) குறைக்கப்பட்டதும்.
357. அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான், "அல்லாஹ்வின் தூதரே! அபூதாலிப் அவர்களுக்கு ஏதேனும் (பிரதி) உபகாரம் செய்தீர்களா? ஏனெனில், தங்களை அவர் பாதுகாப்பவராகவும் தங்களுக்காக (எதிரிகள்மீது) கோபப்படுபவராகவும் இருந்தாரே!" என்று கேட்டேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம்; அவர் இப்போது (கணுக்கால்வரை தீண்டும்) சிறிதளவு நரக நெருப்பிலேயே உள்ளார். நான் இல்லையானால் அவர் நரகின் அடித்தளத்திற்குச் சென்றிருப்பார்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
358. அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான், "அல்லாஹ்வின் தூதரே! அபூதாலிப் தங்களைப் பாதுகாப்பவராகவும், தங்களுக்கு உதவி
செய்பவராகவும் இருந்தாரே! அது அவருக்குப் பயனளித்ததா?" என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம்; அவரை நான் நரகத்தின் பிரதான பகுதியில் கண்டேன். உடனே அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தி (கணுக்கால்வரை தீண்டும்) சிறிதளவு நெருப்பிற்குக் கொண்டுவந்தேன்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 1
359. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
360. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் அவர்களுடைய பெரிய தந்தை அபூதாலிப் அவர்களைப் பற்றிக் கூறப்பட்டது. அப்போது அவர்கள், "மறுமை நாளில் அவருக்கு என் பரிந்துரை பயனளிக்கக் கூடும்; (அதனால்) நரக நெருப்பு அவரது (முழு உடலையும் தீண்டாமல்) கணுக்கால்கள்வரை மட்டுமே தீண்டும்படி ஆக்கப்படலாம். (ஆனால்,) அதனால் அவருடைய மூளை (தகித்துக்) கொதிக்கும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 91 நரகவாசிகளிலேயே மிகவும் குறைவான வேதனை அனுபவிக்கும் மனிதர்.
361. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நரகவாசிகளிலேயே மிகவும் குறைவான வேதனை அனுபவிப்பவர், நெருப்பாலான இரு காலணிகளை அணி(விக்கப்படு)வார். அந்தக் காலணிகளின் வெப்பத்தால் அவரது மூளை (தகித்துக்) கொதிக்கும்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
362. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நரகவாசிகளிலேயே மிகவும் குறைவான வேதனை அனுபவிப்பவர் அபூதாலிப் ஆவார். அவர் (நெருப்பாலான) இரு காலணிகளை அணிந்துகொண்டிருப்பார். அதனால் அவரது மூளை (தகித்துக்) கொதிக்கும்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
363. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளில் நரகவாசிகளிலேயே மிகவும் குறைவான வேதனை அனுபவிப்பவர் ஒரு மனிதராவார். அவருடைய உள்ளங்கால்களின் நடுவில் இரண்டு நெருப்புக் கங்குகள் வைக்கப் படும். அவற்றால் அவரது மூளை கொதிக்கும்.
இதை நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் உரையாற்றிக்கொண்டிருக்கும்போது அறிவித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
364. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நரகவாசிகளிலேயே மிகவும் குறைவான வேதனை அனுபவிக்கும் நபர் ஒரு மனிதராவார். அவருக்கு நெருப்பாலான இரு காலணிகளும் வார்களும் இருக்கும். (அடுப்பில் வைக்கப் பட்டுள்ள) செம்புப் பாத்திரம் கொதிப்பதைப் போன்று அவற்றால் அவரது மூளை கொதிக்கும். நரகவாசிகளிலேயே அவர் தாம் மிகவும் குறைவான வேதனை அனுபவிப்பவராய் இருக்க, அவரோ "தம்மைவிட வேறெவரும் மிகக் கடுமையாக வேதனை செய்யப்படவில்லை" என எண்ணுவார் (அந்த அளவுக்கு வேதனை கடுமையாக இருக்கும்).
இதை நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 92 இறைமறுப்பாளராக மரணித்த ஒருவருக்கு அவர் புரிந்த (நற்)செயல் எதுவும் (மறுமையில்) பயனளிக்காது என்பதற்கான சான்று.
365. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான், "அல்லாஹ்வின் தூதரே! இப்னு ஜுத்ஆன் அறியாமைக் காலத்தில் உறவுகளைப் பேணி நடப்பவராகவும் ஏழைகளுக்கு உணவளிப்பவராகவும் இருந்தாரே! இவை அவருக்கு (மறுமை நாளில்) பயனளிக்குமா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அவருக்குப் பயனளிக்கா; அவர் ஒரு நாள்கூட "இறைவா! விசாரணை நாளில் என் பாவத்தை மன்னித்தருள்வாயாக!" என்று கேட்டதேயில்லை" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 93 (கொள்கைச் சகோதரர்களான) இறை நம்பிக்கையாளர்களுடன் நட்பு கொள்வதும், (எதிரிகளான) மற்றவர்களின் நட்புறவைத் துண்டிப்பதும், அவர்களிடமிருந்து தம் பொறுப்பை விலக்கிக் கொள்வதும்.
366. அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"இன்னாரின் தந்தையின் குடும்பத்தார் என் நேசர்கள் அல்லர்; என் நேசர்கள் யாரெனில், அல்லாஹ்வும் நல்ல இறைநம்பிக்கையாளர்களும்தாம்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒளிவுமறைவின்றி பகிரங்கமாகவே கூறுவதை நான் கேட்டேன்.
அத்தியாயம் : 1
பாடம் : 94 முஸ்லிம்களில் ஒரு பெருங்கூட்டம் எந்த விதமான விசாரணையும் வேதனையும் இல்லாமல் சொர்க்கத்தில் நுழைவார்கள் என்பதற்கான சான்று.
367. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் எந்த விசாரணையுமின்றி சொர்க்கத்தில் நுழைவார்கள்" என்று கூறினார்கள்.
உடனே (உக்காஷா எனும்) ஒரு மனிதர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் "அல்லாஹ்வே! இவரை அவர்களில் ஒருவராக ஆக்குவாயாக!" எனப் பிரார்த்தித்தார்கள். பிறகு மற்றொரு மனிதர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்றார். நபி (ஸல்) அவர்கள் "இந்த விஷயத்தில் உக்காஷா உம்மை முந்திவிட்டார்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 1