3427. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஓர் அடிமையில் தமக்குள்ள பங்கை விடுதலை செய்தாரோ, அவரிடம் அந்த அடிமையின் (முழு) விலையையும் எட்டுகின்ற அளவுக்குச் செல்வம் இருந்தால், அந்த அடிமையை முழுமையாக விடுதலை செய்வது அவர்மீது கடமையாகும். அவரிடம் (அந்த அளவுக்குச்) செல்வம் இல்லாவிட்டால், அவர் எந்த அளவுக்கு அவ்வடிமையை விடுதலை செய்தாரோ அந்த அளவுக்கே அவர் விடுதலை செய்தவர் ஆவார்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 27
3428. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஓர் அடிமையில் தமக்குள்ள பங்கை விடுதலை செய்தாரோ, அவருக்கு அந்த அடிமையின் விலையை எட்டுகின்ற அளவுக்குச் செல்வமிருந்தால், அவ்வடிமையை ஒத்த மற்றோர் அடிமையின் விலையை மதிப்பிட்டு (தமது செல்வத்திலிருந்து அதைச் செலுத்தி அவனை முழுமையாக விடுதலை செய்து)விட வேண்டும். இல்லையெனில்,அவர் எந்த அளவுக்கு அவ்வடிமையை விடுதலை செய்தாரோ அந்த அளவுக்கே அவர் விடுதலை செய்தவர் ஆவார்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஒன்பது அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், அய்யூப் மற்றும் யஹ்யா பின் சயீத் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் மட்டுமே "அவரிடம் அந்த அளவுக்குச் செல்வம் இல்லாவிட்டால், அவர் எந்த அளவுக்கு விடுதலை செய்தாரோ அந்த அளவுக்கே அவர் விடுதலை செய்தவர் ஆவார்" எனும் குறிப்பு இடம் பெற்றுள்ளது. மற்றவர்களின் அறிவிப்பில் இக்குறிப்பு காணப்படவில்லை. அவ்விருவரும், "இக்குறிப்பு ஹதீஸிலேயே உள்ளதா, அல்லது அறிவிப்பாளர் நாஃபிஉ (ரஹ்) அவர்களின் கூற்றா என்பது எங்களுக்குத் தெரியவில்லை" என்று கூறினர். இவற்றில் லைஸ் பின் சஅத் (ரஹ்) அவர்களது அறிவிப்பைத் தவிர வேறு எந்த அறிவிப்பிலும் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன்" எனும் வாசகம் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 27
3429. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தமக்கும் மற்றொருவருக்கும் சொந்தமான ஓர் அடிமையை (அவ்விருவரில்) ஒருவர் விடுதலை செய்தால்,அவ்வடிமையின் (சந்தை) விலையைக் கூட்டவோ குறைக்கவோ செய்யாமல் மதிப்பிட்டு, வசதியுடையவராக அவர் இருந்தால், (மீதி விலையையும் செலுத்தி) அவனை முழுமையாக விடுதலை செய்துவிட வேண்டும்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 27
3430. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஓர் அடிமையில் தமக்குள்ள பங்கை விடுதலை செய்தாரோ, அவரிடம் அந்த அடிமையின் முழு விலையையும் எட்டுகின்ற அளவுக்குச் செல்வம் இருந்தால், அதன் மூலம் அவர் அவ்வடிமையின் மற்ற பங்குகள் முழுவதையும் விடுதலை செய்துவிட வேண்டும்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 27
3431. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தமக்கும் மற்றொருவருக்கும் சொந்தமான ஓர் அடிமையை அவர்களில் ஒருவர் விடுதலை செய்தால், (தம் கூட்டாளிக்குச் சேர வேண்டிய பங்கிற்கும்) அவரே பொறுப்பாளியாவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 27
3432. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "யார் ஓர் அடிமையில் தமக்குள்ள பங்கை விடுதலை செய்தாரோ, அவரது செல்வத்திலிருந்தே அந்த அடிமை(யின் மீதிப்பங்கும்) விடுதலை செய்யப்பட வேண்டும்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 27
3433. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஓர் அடிமையில் தமக்குள்ள பங்கை விடுதலை செய்தாரோ, அவரிடம் (போதிய) செல்வம் இருந்தால் அவரது செல்வத்திலிருந்தே அவ்வடிமையின் முழு விடுதலை அமையும். அவரிடம் (போதிய) செல்வம் இல்லையெனில்,அவ்வடிமை(யின் நியாய விலை மதிப்பிடப்பட்டு மீதி பங்குகளின் விலையைத் தருவதற்காக) உழைத்துச் சம்பாதிக்க (அவன்) அனுமதிக்கப்பட வேண்டும். அவனுக்கு அதிகச் சிரமத்தை அளித்து விடக்கூடாது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 27
3434. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், ஈசா பின் யூனுஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அவர் விடுதலையளிக்காத பங்கிற்காக அந்த அடிமை உழைத்துச் சம்பாதிக்க அனுமதிக்கப்பட வேண்டும். அவனுக்கு அதிகச் சிரமத்தை அளித்துவிடக் கூடாது" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 27
3435. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் தமது மரணத் தறுவாயில் தமக்குச் சொந்தமான ஆறு அடிமைகளை விடுதலை செய்துவிட்டார். அந்த அடிமைகளைத் தவிர வேறு செல்வங்கள் எதுவும் அவரிடம் இருக்க வில்லை. (இச்செய்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது) அந்த அடிமைகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்து, அவர்களை மூன்றில் ஒரு பாகங்களாகப் பிரித்தார்கள். பின்னர் அவர்களிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டு, அவர்களில் இருவருக்கு மட்டுமே விடுதலையளித்தார்கள்; நால்வரை அடிமைகளாகவே நீடிக்கச் செய்தார்கள். (இறக்கும் தறுவாயில் ஆறு அடிமைகளையும் விடுதலை செய்த) அந்த மனிதரைப் பற்றிக் கடுமையாக (சாடி)ப் பேசினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 27
3436. மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஹம்மாத் (ரஹ்) அவர்களது அறிவிப்பிலுள்ள வாசகங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. அப்துல் வஹ்ஹாப் அஸ்ஸகஃபீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அன்சாரிகளில் ஒருவர் தமது மரணத் தறுவாயில் தமக்குரிய ஆறு அடிமைகளை விடுதலை செய்யுமாறு இறுதிவிருப்பம் தெரிவித்தார்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 27
பாடம் : 13 பின் விடுதலையளிக்கப்பட்ட அடிமையை விற்கலாம்.
3437. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அன்சாரிகளில் ஒருவர் (தம்) அடிமை ஒருவரைத் தமது இறப்புக்குப் பின் விடுதலை பெற்ற வராவார் (முதப்பர்) என்று அறிவித்திருந்தார். அவரிடம் அந்த அடிமையைத் தவிர வேறு செல்வம் எதுவுமிருக்கவுமில்லை. இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, "என்னிடமிருந்து இந்த அடிமையை (விலைக்கு) வாங்குபவர் யார்?" என்று கேட்டார்கள். அப்போது அந்த அடிமையை நுஐம் பின் அப்தில் லாஹ் (ரலி) அவர்கள் எண்ணூறு திர்ஹங் களுக்கு (வெள்ளிக் காசுகளுக்கு) வாங்கிக் கொண்டார்கள். அவற்றை நபி (ஸல்) அவர்கள் அந்த அன்சாரியிடம் ஒப்படைத்தார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் "அந்த அடிமை (எகிப்து நாட்டு) "கிப்தீ" அடிமையாவார். அவர் கடந்த ஆண்டுதான் இறந்தார்" என்றும் கூறக் கேட்டேன்.
அத்தியாயம் : 27
3438. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அன்சாரிகளில் ஒருவர் தம் அடிமை ஒருவரைத் தமது இறப்புக்குப் பின் விடுதலை பெற்றவராவார் (முதப்பர்) என்று அறிவித்திருந்தார். அவரிடம் அந்த அடிமையைத் தவிர வேறு செல்வம் எதுவும் இருக்கவில்லை. (இச்செய்தி அறிந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த அடிமையை விற்றார்கள். அவரை இப்னு நஹ்ஹாம் (ரலி) அவர்கள் விலைக்கு வாங்கிக் கொண்டார்கள். அவர் (எகிப்து நாட்டு) "கிப்தீ" அடிமை ஆவார். அவர் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களது ஆட்சியில் கடந்த ஆண்டுதான் இறந்தார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே வேறு இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 27

பாடம் : 1 "அல்கஸாமா" சத்தியம்.
3439. சஹ்ல் பின் அபீஹஸ்மா (ரலி) மற்றும் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) ஆகியோர் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் சஹ்ல் பின் ஸைத் (ரலி) அவர்களும் முஹய்யிஸா பின் மஸ்ஊத் பின் ஸைத் (ரலி) அவர்களும் (மதீனாவிலிருந்து) புறப்பட்டு கைபர் சென்றடைந்தனர். அங்கு ஓரிடத்தில் தனித்தனியாகப் பிரிந்துவிட்டனர். பிறகு அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் (ஓரிடத்தில்) கொல்லப்பட்டுக் கிடப்பதை முஹய்யிஸா (ரலி) அவர்கள் கண்டு, அவரை (எடுத்து) அடக்கம் செய்தார். பின்னர் அவரும் அவருடைய (சகோதரர்) ஹுவய்யிஸா பின் மஸ்ஊத் (ரலி) அவர்களும் (கொல்லப்பட்டவரின் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் (ரலி) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள்.
(அம்மூவரில்) அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் வயதில் சிறியவராக இருந்தார்கள். அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் தம்முடன் வந்த (வயதில் பெயரி)வர்களை முந்திக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பேசப்போனார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பெரியவர்களைப் பேசவிடு" என்று சொன்னார்கள். உடனே அப்துர் ரஹ்மான் அமைதியாகிவிட்டார். பிறகு முஹய்யிஸா (ரலி) அவர்களும் ஹுவய்யிஸா (ரலி) அவர்களும் பேசினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவ்விருவருடனும் பேசினார்கள்.
அப்போது அவர்கள் அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அப்துல்லாஹ் பின் சஹ்லை இன்ன மனிதர்தாம் கொலை செய்தார் என உங்களில்) ஐம்பது பேர் சத்தியம் செய்து, நீங்கள் "உங்கள் (உயிரிழந்த) தோழருக்காக (பழிவாங்கும்) உரிமையை" அல்லது "உங்கள் கொலையாளியிடமிருந்து (இழப்பீடு பெறும்) உரிமையை" எடுத்துக்கொள்கிறீர்களா?" என்று கேட்டார்கள்.
அதற்கு அவர்கள், "(கொலை நடந்த இடத்தில்) நாங்கள் இருக்கவில்லையே! நாங்கள் எப்படிச் சத்தியம் செய்வோம்?"என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அப்படியென்றால் யூதர்களில் ஐம்பது பேர் (தாங்கள் அப்துல்லாஹ்வைக் கொல்லவில்லை என்று) சத்தியம் செய்து, உங்களிடம் தாம் நிரபராதிகள் என்பதை நிரூபிக்கட்டும்" என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், "நிராகரிக்கும் சமுதாயத்தாரின் சத்தியங்களை நாம் எப்படி (நம்பி) ஏற்க முடியும்?" என்று கேட்டார்கள். இதைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தாமே அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்களின் கொலைக்கான உயிரீட்டுத் தொகையை வழங்கினார்கள்.
அத்தியாயம் : 28
3440. சஹ்ல் பின் அபீஹஸ்மா (ரலி) மற்றும் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) ஆகியோர் கூறியதாவது:
முஹய்யிஸா பின் மஸ்ஊத் (ரலி) அவர்களும் அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்களும் கைபர் பகுதியை நோக்கிச் சென்றபோது, அங்கிருந்த ஒரு பேரீச்சந்தோட்டத்தில் தனித்தனியாகப் பிரிந்துவிட்டனர். அப்போது அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் கொலை செய்யப்பட்டு விட்டார்கள். யூதர்கள்மீது (அவர்கள்தாம் கொன்றிருப்பார்கள் என) சந்தேகம் ஏற்பட்டது.
ஆகவே, அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்களின் சகோதரர் அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் (ரலி) அவர்களும் அவருடைய தந்தையின் சகோதரரின் புதல்வர்களான ஹுவய்யிஸா (ரலி) மற்றும் முஹய்யிஸா (ரலி) ஆகியோரும் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். தம் சகோதரர் (கொலை) தொடர்பாக அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் (நபியவர்களிடம்) பேசினார்கள். அம்மூவரில் அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் அவர்கள் வயதில் சிறியவராக இருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் "பெரியவர்களைப் பேசவிடு" அல்லது "வயதில் பெரியவர் முதலில் பேசட்டும்" என்று கூறினார்கள்.
அவர்கள் இருவரும் (கொல்லப்பட்ட) தம் உறவினர் தொடர்பாகப் பேசியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களில் ஐம்பது பேர் யூதர்களில் (கொலை செய்த) மனிதருக்கெதிராகச் சத்தியம் செய்ய வேண்டும். அதையடுத்துக் கொலையாளியின் கழுத்தில் கயிற்றை மாட்டி அவன் ஒப்படைக்கப்படுவான்" என்று சொன்னார்கள். அதற்கு அவர்கள், "சம்பவம் நடந்த இடத்தில் இல்லாத நாங்கள் எப்படிச் சத்தியம் செய்ய முடியும்?" என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "அப்படியென்றால், யூதர்களில் ஐம்பது பேர் (நாங்கள் அப்துல்லாஹ்வைக் கொல்லவில்லை எனச்) சத்தியம் செய்து, தாம் நிரபராதிகள் என்பதை உங்களிடம் நிரூபிக்கட்டும்" என்று கூறினார்கள்.
அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் நிராகரிக்கும் சமுதாயத்தார் ஆயிற்றே? (அவர்களுடைய சத்தியங்களை நாம் எப்படி ஏற்க முடியும்?)" என்று கேட்டார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்கள், தாமே அப்துல்லாஹ் பின் சஹ்ல் அவர்களின் கொலைக்கான உயிரீட்டுத் தொகையை வழங்கினார்கள்.
சஹ்ல் பின் அபீஹஸ்மா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
பின்னர் ஒரு நாள் நான் அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் (ரலி) அவர்களது ஒட்டகத் தொழுவத்திற்குச் சென்றேன். (நபி (ஸல்) அவர்கள் ஈட்டுத் தொகையாக வழங்கிய) அந்த ஒட்டகங்களில் ஒன்று தனது காலால் என்னை உதைத்துவிட்டது.
அறிவிப்பாளர் ஹம்மாம் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: "இவ்வாறு(தான் சஹ்ல் (ரலி) அவர்கள் கூறினார்கள்.) அல்லது இதைப் போன்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் சஹ்ல் பின் அபீஹஸ்மா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே கொல்லப்பட்டவருக்கான உயிரீட்டுத் தொகையை வழங்கினார்கள்" என இடம்பெற்றுள்ளது. "ஒட்டகம் என்னை உதைத்து விட்டது" எனும் குறிப்பு அதில் இல்லை.
- மேற்கண்ட ஹதீஸ் சஹ்ல் பின் அபீஹஸ்மா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 28
3441. புஷைர் பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில், அன்சாரிகள் என்றும் பின்னர் பனூ ஹாரிஸா குலத்தார் என்றும் அறியப்பட்டவர்களான அப்துல்லாஹ் பின் சஹ்ல் பின் ஸைத் (ரலி) அவர்களும், முஹய்யிஸா பின் மஸ்ஊத் பின் ஸைத் (ரலி) அவர்களும் கைபரை நோக்கிப் புறப்பட்டார்கள். கைபர், அன்று சமாதான ஒப்பந்தம் கையெழுத்தான பகுதியாயிருந்தது. யூதர்களே அங்கு வசித்துவந்தார்கள். (அங்கு சென்றதும்) அவர்கள் இருவரும் தம் தேவைக்காகத் தனித்தனியே பிரிந்துசென்றனர்.
அப்போது அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டு (அத்தோட் டத்திலுள்ள) ஒரு தண்ணீர் தொட்டியில் கிடப்பதைக் கண்டார்கள். உடனே முஹய் யிஸா (ரலி) அவர்கள் அவரை (எடுத்து) அடக்கம் செய்துவிட்டு, மதீனாவை நோக்கி வந்தார்கள். கொல்லப்பட்டவரின் சகோதரர் அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் (ரலி) அவர்களும் (உறவினர்களான) முஹய்யிஸா (ரலி) மற்றும் ஹுவய்யிஸா (ரலி) ஆகியோரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அப்துல்லாஹ் (ரலி) அவர்களது நிலை குறித்தும் அவர் கொல்லப்பட்டுக் கிடந்த இடத்தைப் பற்றியும் தெரிவித்தனர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அப்துல்லாஹ்வை இன்ன மனிதர்தாம் கொலை செய்தார் என்று) உங்களில் ஐம்பது பேர் சத்தியம் செய்து, நீங்கள் "உங்கள் கொலையாளியிடமிருந்து (இழப்பீடு) பெறும் உரிமையை"அல்லது "உங்கள் தோழருக்காக (பழிவாங்கும்) உரிமையை" எடுத்துக்கொள்கிறீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! சம்பவம் நடந்த இடத்தில் நாங்கள் இருக்கவுமில்லை; சம்பவத்தைப் பார்க்கவும் இல்லையே!" என்று கேட்டார்கள்.
"அப்படியானால், யூதர்களில் ஐம்பது பேர் சத்தியம் செய்து, தாம் நிரபராதிகள் என்பதை உங்களிடம் நிரூபிப்பார்கள்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நிராகரிக்கும் சமுதாயத்தாரின் சத்தியத்தை எப்படி நாங்கள் ஏற்க முடியும்?" என்று கேட்டார்கள். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தாமே அப்துல்லாஹ்வின் கொலைக்கான உயிரீட்டுத் தொகையை வழங்கினார்கள்.
அத்தியாயம் : 28
3442. மேற்கண்ட ஹதீஸ் புஷைர் பின் யசார் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அன்சாரிகளில் பனூ ஹாரிஸா குடும்பத்தைச் சேர்ந்த அப்துல்லாஹ் பின் சஹ்ல் பின் ஸைத் (ரலி) எனக் கூறப்படும் ஒரு மனிதரும் முஹய்யிஸா பின் மஸ்ஊத் பின் ஸைத் எனக் கூறப்படும் அவருடைய தந்தையின் சகோதரர் ஒருவரும் (கைபர் பகுதியை நோக்கிச்) சென்றார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. தொடர்ந்து மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்று, "ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தாமே கொல்லப்பட்டவருக்கான உயிரீட்டுத் தொகையை வழங்கினார்கள்" என்பதுவரை இடம் பெற்றுள்ளது.
யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் (பின்வருமாறு கூடுதலாக) இடம் பெற்றுள்ளது:
சஹ்ல் பின் அபீஹஸ்மா (ரலி) அவர்கள் கூறினார்கள்: உயிரீட்டுத் தொகையாக வழங்கப்பட்ட அந்த ஒட்டகங்களில் ஒன்று ஒட்டகத் தொழுவத்தில் வைத்து என்னை உதைத்து விட்டது.
அத்தியாயம் : 28
3443. சஹ்ல் பின் அபீஹஸ்மா அல் அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
எங்(கள் அன்சாரி)களில் சிலர் கைபர் பகுதியை நோக்கிச் சென்றபோது, அங்கு அவர்கள் தனித் தனியாகப் பிரிந்துவிட்டார்கள். இந்நிலையில் அவர்களில் ஒருவர் கொல்லப்பட்டுக் கிடப்பதைக் கண்டார்கள். மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸ்களில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. இந்த அறிவிப்பில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கொலையுண்டவரின் உயிரிழப்பை வீணாக்க விரும்பாமல், தாமே நூறு தர்ம ஒட்டகங்களை உயிரீட்டுத் தொகையாக வழங்கினார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 28
3444. சஹ்ல் பின் அபீஹஸ்மா (ரலி) அவர்கள் தம் குலத்தாரில் பெரியவர்கள் சிலரிடமிருந்து (கேட்டுக்) கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்களும் முஹய்யிஸா (ரலி) அவர்களும் தங்களுக்கு ஏற்பட்ட கடுமையான வறுமையின் காரணத்தால் (பேரீச்சம் பழங்கள் பறிப்பதற்காக) கைபரை நோக்கிப் புறப்பட்டார்கள். பின்னர் முஹய்யிஸா (ரலி) அவர்கள் வந்து தெரிவித்தார்கள்: அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டு ஒரு "நீர் நிலையில்" அல்லது "குழியில்" கிடந்தார். பிறகு யூதர்களிடம் சென்று, "அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள்தாம் அவரைக் கொலை செய்தீர்கள்" என்று நான் கூறினேன். யூதர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் கொல்லவில்லை" என்று கூறினர்.
பிறகு முஹய்யிஸா (ரலி) அவர்கள் தம் குலத்தாரை நோக்கி வந்து அவர்களிடமும் அதைப் பற்றித் தெரிவித்தார்கள். பின்னர் அவரும் அவரைவிட வயதில் மூத்தவரான அவருடைய சகோதரர் ஹுவய்யிஸா (ரலி) அவர்களும் மற்றும் அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் (ரலி) அவர்களும் (நபியவர்களிடம்) வந்தார்கள். அப்போது கைபரில் அப்துல்லாஹ்வுடன் இருந்த முஹய்யிஸா (ரலி) அவர்கள் (அவர்கள் இருவரையும் முந்திக் கொண்டு) பேச ஆரம்பித்தார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஹய்யிஸா (ரலி) அவர்களிடம், "வயதில் மூத்தவரை (முதலில்) பேசவிடு; வயதில் மூத்தவரை (முதலில்) பேசவிடு" என்று கூறினார்கள். எனவே, (முதலில்) ஹுவய்யிஸா (ரலி) அவர்கள் பேசினார்கள். பிறகு முஹய்யிஸா பேசினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(நீங்கள் ஐம்பது பேர் சத்தியம் செய்வதன் மூலம் யூதர்களே கொலை செய்தார்கள் என்பது நிரூபணமானால்,) ஒன்று அவர்கள் (கொல்லப்பட்ட) உங்கள் நண்பருக்கான உயிரீட்டுத் தொகையை வழங்கட்டும்! அல்லது (நம்முடன் நடந்த சமாதான உடன்படிக்கையை முறித்துக்கொண்டு) அவர்கள் போர்ப் பிரகடனம் செய்யட்டும்!" என்று கூறினார்கள்.
பிறகு இது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யூதர்களுக்குக் கடிதம் எழுதினார்கள். அதற்கு யூதர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் அவரைக் கொலை செய்யவில்லை" எனப் பதில் எழுதினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுவய்யிஸா (ரலி), முஹய்யிஸா (ரலி), அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் (ரலி) அகியோரிடம், "(அப்துல்லாஹ் பின் சஹ்ல் அவர்களை யூதர்கள்தாம் கொலை செய்தார்கள் என்று) சத்தியம் செய்து,நீங்கள் உங்கள் கொலையாளிக்கு (தண்டனையளித்து பழிவாங்கிக்கொள்ளும்) உரிமையை பெற்றுக்கொள்கிறீர்களா?"என்று கேட்டார்கள்.
அதற்கு அம்மூவரும் "இல்லை" என்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அப்படியானால் உங்கள் குற்றச்சாட்டுக்கு (மறுப்புத் தெரிவித்து) யூதர்கள் சத்தியம் செய்வர்" என்றார்கள். அதற்கு அவர்கள் மூவரும், "அவர்கள் முஸ்லிம்கள் இல்லையே (யூதர்கள் பொய் சத்தியம் செய்வதற்குக்கூட தயங்கமாட்டார்கள்)" என்று கூறினர்.
ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தாமே அப்துல்லாஹ் பின் சஹ்ல் அவர்களின் கொலைக்கான உயிரீட்டுத் தொகையை கொடுத்துவிட்டார்கள். அவருடைய குடும்பத்தாருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்களை அனுப்பினார்கள். அவை அவர்களது வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டன.
சஹ்ல் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
அந்த ஒட்டகங்களில் சிவப்பு ஒட்டகம் ஒன்று தனது காலால் என்னை உதைத்து விட்டது.
அத்தியாயம் : 28
3445. அன்சாரீ நபித்தோழர்களில் ஒருவர் கூறினார்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறியாமைக் காலத்தில் இருந்துவந்த "அல்கஸாமா" சத்திய முறையை நீடிக்கச் செய்தார்கள்.
இதை நபி (ஸல்) அவர்களின் துணைவியார் மைமூனா (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான சுலைமான் பின் யசார் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 28
3446. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அன்சாரிகளில் சிலர் "யூதர்கள் தங்களில் ஒருவரைக் கொலை செய்துவிட்டதாக" குற்றம் சாட்டியபோது இவ்வாறே (சத்தியம் செய்யுமாறு) தீர்ப்பளித்தார்கள்" எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 28