3133. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "முஹாகலா"வையும் "முஸாபனா"வையும் தடை செய்தார்கள்.
அத்தியாயம் : 21
3134. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "முஸாபனா"வையும் "முஹாகலா"வையும் தடை செய்தார்கள். "முஸாபனா"என்பது, பேரீச்சமரத்தின் உச்சியிலுள்ள (உலராத) கனிகளுக்குப் பதிலாக, உலர்ந்த கனிகளை வாங்குவதாகும். "முஹாகலா" என்பது, நிலத்தைக் குத்தகைக்கு விடுவதாகும்.
அத்தியாயம் : 21
3135. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(முஆவியா (ரலி) அவர்களது ஆட்சி யின்) முதலாண்டுவரை "முகாபரா" முறையில் நிலத்தைக் குத்தகைக்கு விடுவதை நாங்கள் குற்றமாகக் கருதாமல் இருந்தோம். பின்னர் (முஆவியா (ரலி) அவர்களது ஆட்சியின் இறுதிக் கட்டத்தில்) ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் அதற்குத் தடைவிதித்துள்ளார்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 21
3136. மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அதனால், நாங்கள் நிலத்தைக் குத்தகைக்கு விடுவதை விட்டுவிட்டோம்" எனக் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 21
3137. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள், (குத்தகைக்கு விட்டு) நம் நிலங்களிலிருந்து பயனடைய விடாமல் நம்மைத் தடுத்துவிட்டார்கள்.
அத்தியாயம் : 21
3138. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்திலும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோரது ஆட்சிக் காலங்களிலும் முஆவியா (ரலி) அவர்களது ஆட்சியில் ஆரம்பக் கட்டத்திலும் இப்னு உமர் (ரலி) அவர்கள் தம் விளைநிலங்களைக் குத்தகைக்கு விட்டு வந்தார்கள். முஆவியா (ரலி) அவர்களது ஆட்சியின் இறுதி நாட்களில் "நபி (ஸல்) அவர்கள் (நிலத்தைக் குத்தகைக்கு விடுவதை) தடை செய்தார்கள்" என ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் அறிவித்துவரும் செய்தி இப்னு உமர் (ரலி) அவர்களுக்கு எட்டியது.
உடனே அவர்கள் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அப்போது அவர்களுடன் நானும் இருந்தேன். இப்னு உமர் (ரலி) அவர்கள், ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களிடம் அது குறித்து வினவினார்கள். ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விளைநிலங்களைக் குத்தகைக்கு விடுவதைத் தடை செய்தார்கள்" என்று கூறினார்கள்.
இதையடுத்து, இப்னு உமர் (ரலி) அவர்கள் தமது நிலத்தைக் குத்தகைக்கு விடுவதை கைவிட்டார்கள். பின்னர் அவர்களிடம் நிலத்தைக் குத்தகைக்கு விடுவது குறித்துக் கேட்கப்பட்டால் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதற்குத் தடை விதித்துள்ளார்கள் என ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கருதுகிறார்கள்" என விடையளிப்பார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் இஸ்மாயீல் இப்னு உலய்யா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "எனவே, அதன் பின்னர் இப்னு உமர் (ரலி) அவர்கள் நிலத்தைக் குத்தகைக்கு விடுவதைக் கைவிட்டு விட்டார்கள்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 21
3139. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு உமர் (ரலி) அவர்களுடன் (மஸ்ஜிதுந் நபவீ அருகில்) "பலாத்" எனும் இடத்திலிருந்த ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விளைநிலங்களைக் குத்தகைக்கு விடுவதைத் தடைசெய்துள்ளார்கள்" என்று தெரிவித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "இப்னு உமர் (ரலி) அவர்கள் ராஃபிஉ (ரலி) அவர்களிடம் சென்றார்கள்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது.
அத்தியாயம் : 21
3140. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள் நிலத்தை (குத்தகை) வாடகைக்கு விட்டுவந்தார்கள். அப்போது ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாக அவர்களிடம் ஒரு ஹதீஸ் தெரிவிக்கப் பட்டது. உடனே அவர்கள் ராஃபிஉ (ரலி) அவர்களை நோக்கி நடந்தார்கள். அப்போது அவர்களுடன் நானும் இருந்தேன். ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள், தம் தந்தையின் சகோதரர்கள் சிலர், "நபி (ஸல்) அவர்கள் நிலத்தைக் குத்தகைக்கு விடுவதைத் தடை செய்தார்கள்" என்று கூறியதாகத் தெரிவித்தார்கள். எனவே, இப்னு உமர் (ரலி) அவர்கள் நிலத்தைக் குத்தகைக்கு விடுவதை நிறுத்திவிட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 21
3141. சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது
(என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தம் நிலங்களைக் குத்தகைக்கு விட்டுவந்தார்கள். இந்நிலையில், ராஃபிஉ பின் கதீஜ் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் நிலத்தைக் குத்தகைக்கு விடுவதைத் தடை செய்துவருகிறார்கள் எனும் செய்தி அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுக்கு எட்டியது.
உடனே அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களைச் சந்தித்து, "இப்னு கதீஜ்! நிலக்குத்தகை விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகத் தாங்கள் என்ன அறிவித்துவருகிறீர்கள்?"என்று கேட்டார்கள். அதற்கு ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள், "என் தந்தையின் இரு சகோதரர்கள் -அவர்கள் இருவரும் பத்ருப் போரில் கலந்துகொண்டவர்கள் ஆவர்- (தம்) குடும்பத்தாரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிலத்தைக் குத்தகைக்கு விடுவதைத் தடை செய்தார்கள் எனக் கூறிவந்ததை நான் செவியுற்றேன்"என்றார்கள்.
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் நிலம் குத்தகைக்கு விடப்பட்டு வந்ததை நான் அறிந்திருந்தேன்" என்று கூறினார்கள். (ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதைக் கேட்ட) பின் நிலக்குத்தகை தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அது கூடாது என்று) புதிய சட்டம் ஏதேனும் பிறப்பித்து, அதை நாம் அறியாமல் இருந்துவிட்டோமோ என்று அஞ்சி, நிலத்தைக் குத்தகைக்கு விடுவதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நிறுத்திவிட்டார்கள்.
அத்தியாயம் : 21
பாடம் : 18 உணவுப் பொருளுக்குப் பதிலாக நிலத்தைக் குத்தகைக்கு விடுவது.
3142. ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் (விளைச்சலில்) மூன்றில் ஒரு பாகம் அல்லது நான்கில் ஒரு பாகம் அல்லது குறிப்பிட்ட உணவுப் பொருட்களை எங்களுக்குக் கொடுத்துவிட வேண்டும் எனும் நிபந்தனையின் பேரில் விளைநிலத்தைக் குத்தகைக்கு விட்டுவந்தோம்.
இந்நிலையில் ஒரு நாள் என் தந்தையின் சகோதரர்களில் ஒருவர் எங்களிடம் வந்து, "நமக்குப் பயனளித்துக்கொண்டிருந்த ஒரு காரியத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்குத் தடை விதித்துவிட்டார்கள். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுவதே அதைவிட மிகவும் நமக்குப் பயனளிக்கக்கூடியதாகும். நிலத்தைக் குத்தகைக்கு விட்டு, (விளைச்சலில்) மூன்றில் ஒரு பாகத்தையோ, நான்கில் ஒரு பாகத்தையோ, குறிப்பிட்ட உணவுப் பொருளையோ பெற்றுக்கொள்ள தடை விதித்தார்கள். நிலத்தின் உரிமையாளர் அதில் தாமே பயிரிட வேண்டும்; அல்லது (யாருக்கேனும்) பயிரிடக் கொடுத்துவிட வேண்டும் எனக் கட்டளையிட்டார்கள்; நிலத்தைக் குத்தகைக்கு விடுவதையும் அது அல்லாத முறையில் பயனடைவதையும் வெறுத்தார்கள்" என்றார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "(விளைச்சலில்) மூன்றில் ஒரு பாகம் அல்லது நான்கில் ஒரு பாகத்தை எங்களுக்குத் தந்துவிட வேண்டும் எனும் நிபந்தனையின் பேரில் விளைநிலத்தைக் குத்தகைக்கு விட்டு வந்தோம்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
- மேற்கண்ட ஹதீஸ் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களிடமிருந்து மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ராஃபிஉ (ரலி) அவர்கள் தெரிவித்ததாகவே இடம்பெற்றுள்ளது. ராஃபிஉ (ரலி) அவர்கள் தம் தந்தையின் சகோதரர்கள் சிலரிடமிருந்து அறிவித்ததாக இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 21
3143. ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தையின் சகோதரர்) ழுஹைர் பின் ராஃபிஉ (ரலி) அவர்கள் என்னிடம் வந்து, "எங்களுக்கு உதவியாக இருந்த ஒன்றைச் செய்யக்கூடாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்தார்கள் என்று கூறினார். நான், "அது என்ன? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதே சரியானது" என்று கூறினேன்.
அதற்கு அவர் சென்னார்: என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் உங்கள் வயல்களை என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்டார்கள். "வாய்க்காலை ஒட்டிய பகுதியில் விளைபவற்றை எங்களுக்குக் கொடுத்துவிட வேண்டும்; அல்லது பேரீச்சம் பழத்திலிருந்தோ கோதுமையிலிருந்தோ குறிப்பிட்ட அளவை எங்களுக்குக் கொடுத்துவிட வேண்டும் எனும் நிபந்தனையின் பேரில் அவற்றைக் குத்தகைக்கு விடுகின்றோம்" என்று நான் பதிலளித்தேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவ்வாறு செய்யாதீர்கள். (ஒன்று) நீங்களே பயிர் செய்யுங்கள்;அல்லது பிறரிடம் (கைமாறு பெறாமல்) பயிரிடக் கொடுத்துவிடுங்கள்; அல்லது பயிரிடாமல் அப்படியே விட்டுவிடுங்கள்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்தாக (மட்டுமே) இடம்பெற்றுள்ளது;அவர் தம் தந்தையின் சகோதரர் ழுஹைர் (ரலி) அவர்கள் கூறினார்கள் எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 21
பாடம் : 19 பொன் மற்றும் வெள்ளி (நாயணங்களு)க்குப் பதிலாக நிலத்தைக் குத்தகைக்கு விடுவது.
3144. ஹன்ழலா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களிடம் நிலத்தைக் குத்தகைக்கு விடுவது பற்றிக் கேட்டேன். அவர்கள், "நிலத்தைக் குத்தகைக்கு விடுவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்" என்று பதிலளித்தார்கள். உடனே நான், "தங்கம் மற்றும் வெள்ளிக் (காசுகளுக்)குப் பதிலாக நிலத்தைக் குத்தகைக்கு விடலாமா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "தங்கம் மற்றும் வெள்ளிக் (காசுகளுக்)குப் பதிலாக நிலத்தைக் குத்தகைக்கு விடுவதில் குற்றமில்லை" என்றார்கள்.
அத்தியாயம் : 21
3145. ஹன்ழலா பின் கைஸ் அல்அன்சாரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களிடம் தங்கம் மற்றும் வெள்ளிக் (காசுகளுக்)குப் பதிலாக நிலத்தைக் குத்தகைக்கு விடுவது குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்: குற்றமில்லை; நபி (ஸல்) அவர்களது காலத்தில் நீரோடை ஓரத்தில் விளைபவற்றை, அல்லது வாய்க்கால் முனையில் விளைபவற்றை, அல்லது விளைச்சலில் (குறிப்பிட்ட) சிலவற்றை எங்களுக்குக் கொடுத்துவிட வேண்டும் எனும் நிபந்தனையின் பேரிலேயே நிலத்தை வாடகைக்கு விட்டுவந்தனர். இதில் இவர் பாதிப்படைவார்; அவர் தப்பித்துக்கொள்வார். அல்லது இவர் தப்பித்துக்கொள்வார்; அவர் பாதிப்படைவார். இந்தக் குத்தகை முறையைத் தவிர வேறெதுவும் அவர்களிடம் இருக்கவில்லை.
ஆதலால்தான், அது கண்டிக்கப்பட்டது. அறியப்பட்ட ஒரு பொருள் பிணையாக்கப்படுமானால் அ(தற்காக நிலத்தைக் குத்தகைக்கு விடுவ)தில் குற்றமில்லை.
அத்தியாயம் : 21
3146. ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அன்சாரிகளிலேயே நாங்கள்தாம் வயல்கள் அதிகம் உடையவர்களாக இருந்தோம். நாங்கள் விளைநிலத்தில் இ(ந்தப் பகுதியில் விளைவ)து எங்களுக்குரியது; அ(ந்தப் பகுதியில் விளைவ)து அவர்களுக்குரியது என நிபந்தனையிட்டு நிலத்தைக் குத்தகைக்கு விட்டுவந்தோம். சில வேளைகளில் இந்தப்பகுதி விளைச்சலைத் தரும்; அந்தப் பகுதி விளைச்சலைத் தராது. இவ்விதம் நிபந்தனையிட்டு குத்தகைக்கு விட வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் எங்களைத் தடுத்தார்கள்; வெள்ளிக் (காசுகளுக்)குப் பதிலாக நிலத்தைக் குத்தகைக்கு விடுவதை அவர்கள் தடை செய்யவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 21
பாடம் : 20 விளைச்சலில் ஒரு பகுதிக்குப் பதிலாக நிலத்தைக் குத்தகைக்கு விடுவதும் (முஸாரஆ) பணத்திற்குப் பதிலாக நிலத்தை வாடகைக்கு விடுவதும் (முஆஜரா).
3147. அப்துல்லாஹ் பின் அஸ்ஸாயிப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துல்லாஹ் பின் மஅகில் (ரஹ்) அவர்களிடம் நிலத்தைக் குத்தகைக்கு விடுவது (முஸாரஆ) பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், "என்னிடம் ஸாபித் பின் அள்ளஹ்ஹாக் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிலத்தைக் குத்தகைக்கு விடுவதை (முஸாரஆ) தடை செய்தார்கள்" எனத் தெரிவித்தார்கள்" என விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதற்குத் தடைவிதித்தார்கள்" என்று (பிரதிப் பெயர்ச்சொல்லுடன்) இடம்பெற்றுள்ளது. மேலும், "நான் இப்னு மஅகில் (ரஹ்) அவர்களிடம் கேட்டேன்" என்றே (குறிப்புப் பெயருடனேயே) இடம்பெற்றுள்ளது. அப்துல்லாஹ் எனும் (அவர்களது இயற்) பெயர் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 21
3148. அப்துல்லாஹ் பின் அஸ்ஸாயிப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அப்துல்லாஹ் பின் மஅகில் (ரஹ்) அவர்களிடம் சென்று நிலத்தைக் குத்தகைக்கு விடுவதை (முஸாரஆ) பற்றிக் கேட்டோம். அதற்கு அவர்கள் கூறினார்கள்: "ஸாபித் பின் அள்ளஹ்ஹாக் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிலத்தைக் குத்தகைக்கு விடுவதை (முஸாரஆ) தடை செய்தார்கள். பணத்திற்குப் பதிலாக நிலத்தை வாடகைக்கு விடுமாறு (முஆஜரா) உத்தரவிட்டார்கள். மேலும் "அதனால் குற்றமில்லை" என்றும் கூறினார்கள்" என்றார்கள்.
அத்தியாயம் : 21
பாடம் : 21 (பயிரிட்டுக்கொள்ள) நிலத்தை இரவலாக வழங்கல்.
3149. முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்களிடம், "என்னை ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களின் புதல்வரிடம் அழைத்துச் செல்லுங்கள். அவர்களிடம் அவர்களுடைய தந்தை ராஃபிஉ (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து (நிலக்குத்தகை கூடாது என) அறிவித்த ஹதீஸைப் பற்றிக் கேளுங்கள் (அல்லது நான் கேட்க வேண்டும்)" என்றேன். இதைக் கேட்ட தாவூஸ் (ரஹ்) அவர்கள் என்னைக் கடிந்துகொண்டார்கள்.
மேலும், அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பொதுவாக) அ(வ்வாறு நிலத்தைக் குத்தகைக்கு விடுவ)தைத் தடை செய்தார்கள் என நான் அறிந்திருந்தால், அதை நான் செய்திருக்க மாட்டேன். இது இவ்வாறிருக்க, இதைப் பற்றி மக்களில் நன்கு அறிந்தவர் (இப்னு அப்பாஸ்) என்னிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஒருவர் தமது நிலத்தைக் குத்தகைக்கு விட்டு, அதிலிருந்து குறிப்பிட்ட குத்தகைத் தொகையை வாங்கிக்கொள்வதைவிட, தம் சகோதரருக்கு இரவலாக (பயன்படுத்திக் கொள்ளுமாறு அதை)க் கொடுத்துவிடுவது சிறந்ததாகும்" என்று கூறினார்கள்" என்றார்கள்.
அத்தியாயம் : 21
3150. அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள், விளைச்சலில் ஒரு பகுதியைத் தமக்குத் தந்துவிட வேண்டும் எனும் நிபந்தனையின் பேரில் நிலத்தைக் குத்தகைக்கு (முகாபரா) விட்டு வந்தார்கள். நான் தாவூஸ் (ரஹ்) அவர்களிடம், "அபூஅப்திர் ரஹ்மான்! இந்த "முகாபரா"வை நீங்கள் விட்டுவிட்டால் நன்றாயிருக்கும். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் "முகாபரா"வைத் தடை செய்தார்கள் என மக்கள் எண்ணுகிறார்கள்" என்று சொன்னேன்.
இதைக் கேட்ட தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: அம்ரே! மக்களில் இதைப் பற்றி நன்கறிந்தவர் (இப்னு அப்பாஸ்) என்னிடம், "நபி (ஸல்) அவர்கள் அதைத் தடை செய்யவில்லை. உங்களில் ஒருவர் தமது நிலத்தைக் குத்தகைக்கு விட்டு, அதிலிருந்து குறிப்பிட்ட தொகையைப் பெறுவதைவிட, தம் சகோதரருக்கு அதை இரவலாகத் தருவதே சிறந்ததாகும் என்றே கூறினார்கள்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 21
3151. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தமது நிலத்தைக் குத்தகைக்குவிட்டு இன்னின்ன (குறிப்பிட்ட பணத்)தைப் பெறுவதைவிட, தம் சகோதரருக்கு இரவலாகத் தருவதே சிறந்ததாகும்.
இதன் அறிவிப்பாளரான இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "இதுவே "ஹக்ல்" ஆகும்; அன்சாரிகளின் பேச்சு வழக்கில் இதையே "முஹாகலா" என்பர்" என்றும் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 21
3152. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யாரிடம் (உபரியாக) நிலம் உள்ளதோ அவர் (கைமாறு கருதாமல்) தம் சகோதரருக்கு இரவலாக அதை(ப் பயிரிட)க் கொடுப்பதே சிறந்ததாகும்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 21