3010. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
பரீரா(எனும் அடிமைப் பெண்), தமது விடுதலைப் பத்திரத்தின் தொகையைச் செலுத்துவதற்கு உதவிகோரி என்னிடம் வந்தார். (அப்போது) அவர் தமது விடுதலைத் தொகையில் எதையும் செலுத்தியிருக்கவில்லை. நான் அவரிடம், "நீ உன் உரிமையாளர்களிடம் திரும்பிச்செல். (நான் உன் சார்பாக) உன் விடுதலைப் பத்திரத்தின் தொகையைச் செலுத்திவிடுகிறேன். (ஆனால்,) உனது வாரிசுரிமை எனக்கே உரியதாகும். இதற்கு அவர்கள் சம்மதித்தால், நானே அதைச் செலுத்திவிடுகிறேன்" என்று கூறினேன்.
அவ்வாறே, பரீரா தம் உரிமையாளர்களிடம் கேட்க, அவர்கள் (சம்மதிக்க) மறுத்து, "உன்(னை வாங்கி விடுதலை செய்வதன்) வாயிலாக, அவர் இறைவனிடம் நன்மையைப் பெற விரும்புவாராயின் அவ்வாறே செய்யட்டும்! ஆனால்,உனது வாரிசுரிமை எங்களுக்கே உரியதாக இருக்கும்" என்று கூறிவிட்டார்கள்.
இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ அவரை விலைக்கு வாங்கி விடுதலை செய்துவிடு. ஏனெனில், விடுதலை செய்பவருக்கே வாரி சுரிமை உரியதாகும்"என்று கூறினார்கள்.
பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்று (உரையாற்றுகையில்), "சிலருக்கு என்ன ஆயிற்று?அல்லாஹ்வின் சட்டத்தில் இல்லாத நிபந்தனையை விதிக்கிறார்களே! அல்லாஹ்வின் சட்டத்தில் இல்லாத நிபந்தனையை ஒருவர் விதித்தால் அது செல்லத் தக்கதன்று; அவர் நூறு முறை நிபந்தனை விதித்தாலும் சரியே! அல்லாஹ்வின் நிபந்தனையே (ஏற்று) பின்பற்றத்தகுந்ததும் உறுதி வாய்ந்ததும் ஆகும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 20
3011. மேற்கண்ட ஹதீஸ் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "பரீரா என்னிடம் வந்து, "ஆயிஷா (ரலி) அவர்களே! நான் என் உரிமையாளர்களிடம், ஆண்டுக்கு ஓர் "ஊக்கியா" வீதம் ஒன்பது ஊக்கியாக்கள் செலுத்த வேண்டும் எனும் நிபந்தனையை ஒப்புக்கொண்டு விடுதலைப் பத்திரம் எழுதி வாங்கியுள்ளேன்" என்று கூறினார்" என ஹதீஸ் ஆரம்பிக்கிறது.
மேலும் அதில், "அ(ந்நிபந்தனையான)து அவரிடமிருந்து (வாரிசுரிமை பெறுவதில்) உனக்குத் தடையாக இராது. நீ அவரை விலைக்கு வாங்கி விடுதலை செய்துவிடு" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்பதும் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.
இந்த அறிவிப்பில், "பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து விட்டு "இறைவாழ்த்துக்குப் பின்" (அம்மா பஅத்)" என்று கூறி (மேற்கண்ட ஹதீஸில் உள்ளபடி சொன்)னார்கள் என்றும் காணப் படுகிறது.
அத்தியாயம் : 20
3012. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
பரீரா (ரலி) என்னிடம் வந்து, நான் என் உரிமையாளர்களிடம் ஆண்டுக்கு ஓர் "ஊக்கியா" வீதம் ஒன்பது ஆண்டுகளில் ஒன்பது "ஊக்கியா"க்களை (விடுதலைத் தொகையாக)ச் செலுத்திவிட வேண்டும் எனும் நிபந்தனையை ஒப்புக்கொண்டு விடுதலைப் பத்திரம் எழுதி வாங்கியுள்ளேன்; ஆகவே, நீங்கள் எனக்கு உதவுங்கள்" என்று கேட்டார்.
நான், "உன் உரிமையாளர்களுக்கு அந்த "ஊக்கியா"க்களை நான் ஒரே தடவையில் கொடுத்து உன்னை விடுதலை செய்கிறேன். (ஆனால்,) உன் வாரிசுரிமை எனக்கே உரியதாக இருக்கும். இதற்கு அவர்கள் இசைந்தால், நான் அவ்வாறே செய்கிறேன்" என்று சொன்னேன்.
பரீரா தன் உரிமையாளர்களிடம் அதைக் கூறியபோது, (பரீராவின்) வாரிசுரிமை தங்களுக்குக் கிடைத்தால் தவிர அதற்கு ஒப்புக்கொள்ள முடியாது என அவர்கள் மறுத்துவிட்டனர். பரீரா என்னிடம் வந்து அதைத் தெரிவித்தார். நான் "அல்லாஹ்வின் மீதாணையாக! அவ்வாறாயின் முடியாது" என்று கூறி, பரீராவைத் துரத்திவிட்டேன்.
இதைச் செவியுற்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அதைப் பற்றி) என்னிடம் வினவ, நான் அவர்களுக்கு விவரத்தைச் சொன்னேன். அப்போது, "அவளை விலைக்கு வாங்கி விடுதலை செய்துவிடு. அவர்களுக்கே வாரிசுரிமை உரியது என அறிவித்துவிடு. (பின்னர் பார்த்துக்கொள்ளலாம்.) ஏனெனில், (சட்டப்படி) விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியதாகும்" என்று கூறினார்கள்.
பிறகு (அன்று) மாலை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடையே) உரையாற்றினார்கள். அப்போது அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப போற்றிப் புகழ்ந்து விட்டு, "இறைவாழ்த்துக்குப் பின்! மக்களில் சிலருக்கு என்ன நேர்ந்தது? அல்லாஹ்வின் சட்டத்தில் இல்லாத நிபந்தனைகளை அவர்கள் விதிக்கிறார்களே! அல்லாஹ்வின் சட்டத்தில் இல்லாத எந்த ஒரு நிபந்தனையும் செல்லாததாகும்; அது நூறு (முறை மொழியப்பட்ட) நிபந்தனையாயினும் சரியே! அல்லாஹ்வின் சட்டமே (ஏற்று) பின்பற்றத் தகுந்ததாகும். அல்லாஹ்வின் நிபந்தனையே உறுதி வாய்ந்ததாகும். உங்களில் சில மனிதர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்களில் ஒருவர், (என் அடிமையாகிய) இன்ன மனிதனை விடுதலை செய்துவிடு! ஆனால், (அவனுக்கு) வாரிசாகும் உரிமை எனக்கே உரியது" என்று கூறுகிறாரே! (உண்மையில்) விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியதாகும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 20
3013. மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஜரீர் பின் அப்தில் ஹமீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது: பரீராவின் கணவரும் அடிமையாக இருந்தார். (விடுதலையடைந்த) பரீராவுக்கு (அவர் தம் கணவருடன் சேர்ந்து வாழ, அல்லது பிரிந்துவிட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விருப்பஉரிமை அளித்தார்கள். அப்போது பரீரா தம்மையே (அதாவது தனித்து வாழ்வதையே) தேர்ந்தெடுத்தார். பரீராவின் கணவர் (அடிமையாக இல்லாமல்) சுதந்திரமானவராக இருந்திருப்பின், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பரீராவுக்கு விருப்ப உரிமை வழங்கியிருக்கமாட்டார்கள்.
இந்த அறிவிப்புகளில், "இறைவாழ்த்துக்குப் பின்" ("அம்மா பஅத்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்) எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 20
3014. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அடிமையாயிருந்து விடுதலை பெற்ற) பரீராவால் மூன்று தீர்வுகள் (நமக்கு) கிட்டின:
1. அவருடைய உரிமையாளர்கள் அவருடைய வாரிசுரிமை தமக்கே உரியது என நிபந்தனையிட்டு, அவரை விற்பதற்கு முன் வந்தனர். அதை நான் நபி (ஸல்) அவர்களிடம் கூறியபோது "நீ அவரை விலைக்கு வாங்கி விடுதலை செய்துவிடு. ஏனெனில், விடுதலை செய்தவருக்கே (அவ்வடிமையின்) வாரிசுரிமை உரியதாகும்" என்று கூறினார்கள்.
2. அவர் விடுதலை செய்யப்பட்டபோது, (தம் அடிமைக் கணவருடனான உறவைத் தொடரவும் முறித்துக்கொள்ளவும்) அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விருப்பஉரிமை வழங்கினார்கள். அப்போது அவர் தம்மையே (அதாவது தனித்து வாழ்வதையே) தேர்ந்தெடுத்துக்கொண்டார்.
3. மக்கள் அவருக்கு தர்மப்பொருட்களை வழங்குவார்கள்; (அவற்றை) அவர் எங்களுக்கு அன்பளிப்பாக வழங்குவார். அது குறித்து நான் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தபோது, "இது அவருக்குத் தர்மமாகும்; உங்களுக்கு அது அன்பளிப்பாகும். எனவே, அதை நீங்கள் உண்ணலாம்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 20
3015. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அன்சாரிகளில் சிலரிடமிருந்து (அவர்களின் அடிமையாக இருந்த) பரீராவை விலைக்குக் கேட்டேன். அப்போது அவர்கள் அவருக்கு வாரிசாகும் உரிமை தங்களுக்கே இருக்க வேண்டும் என நிபந்தனை விதித்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(விடுதலை எனும்) உபகாரம் செய்தவருக்கே வாரிசாகும் உரிமை உண்டு"என்று கூறினார்கள்.
(விடுதலையடைந்த) பரீராவுக்கு (அவர் தம் கணவருடன் சேர்ந்து வாழ, அல்லது பிரிந்துவிட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விருப்ப உரிமை அளித்தார்கள். அவருடைய கணவரும் அடிமையாகவே இருந்தார்.
பரீரா (ஒரு முறை) எனக்கு அன்பளிப்பாக இறைச்சியை வழங்கினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்த இறைச்சியிலிருந்து நமக்கு (உணவு) தயாரித்திருந்தால் நன்றாயிருக்குமே!" என்று சொன்னார்கள். நான், "இது பரீராவுக்குத் தர்மமாக வழங்கப்பட்டதாயிற்றே?" என்றேன். அதற்கு "இது அவருக்குத் தர்மமாகும்; நமக்கு (பரீராவின்) அன்பளிப்பாகும்" என்றார்கள்.
அத்தியாயம் : 20
3016. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் பரீராவை விலைக்கு வாங்கி விடுதலை செய்ய விரும்பினேன். (அவருடைய உரிமையாளர்கள்) அவருக்கு வாரிசாகும் உரிமை தங்களுக்கே உரியது என நிபந்தனையிட்டார்கள். அது குறித்து நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ அவரை விலைக்கு வாங்கி விடுதலை செய்துவிடு. ஏனெனில், (ஓர் அடிமையை) விடுதலை செய்தவருக்கே (அவ்வடிமைக்கு) வாரிசாகும் உரிமை உரியதாகும்" என்று கூறினார்கள்.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இறைச்சி அன்பளிப்பாக வழங்கப் பட்டது. அப்போது மக்கள், "இது பரீராவுக்குத் தர்மமாகக் கிடைத்தது" என்று கூறினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இது அவருக்குத் தர்மமாகும்; நமக்கு (பரீராவின்) அன்பளிப்பாகும்" என்று சொன்னார்கள்.
மேலும், பரீரா (தம் கணவருடன் சேர்ந்து வாழ, அல்லது பிரிந்துவிட) விருப்பஉரிமை அளிக்கப்பட்டார்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அப்துர் ரஹ்மான் பின் அல்காசிம் (ரஹ்) அவர்கள் (இந்த ஹதீஸை எனக்கு அறிவிக்கையில்) "பரீராவின் கணவர் சுதந்திரமான மனிதராக இருந்தார்" என்றார்கள். பின்னர் அவர்களிடம் பரீராவின் கணவரைப் பற்றிக்கேட்டபோது "எனக்குத் தெரியாது" என்று சொல்லி விட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 20
3017. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
பரீரா (ரலி) அவர்களின் கணவர் அடிமையாக இருந்தார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 20
3018. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அடிமையாயிருந்து விடுதலை பெற்ற) பரீராவால் மூன்று முன்மாதிரிகள் (நமக்கு) கிட்டின:
1. அவர் விடுதலை பெற்றபோது தம் (அடிமைக்) கணவர் விஷயத்தில் (அவருடன் சேர்ந்து வாழ, அல்லது பிரிந்துவிட) விருப்பஉரிமை அளிக்கப்பட்டார்.
2. எனக்கு அன்பளிப்பாக இறைச்சி வழங்கப்பட்டது. நெருப்பின் மேல் சமையல் பாத்திரம் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து உணவு கேட்டார்கள். அப்போது அவர்களுக்கு முன்னால் ரொட்டியும் வீட்டிலிருந்த குழம்பும் கொண்டுவரப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் நெருப்பின் மீது இறைச்சியுள்ள பாத்திரத்தைக் கண்டேனே?" என்று கேட்டார்கள். அ(தற்கு அங்கிருந்த)வர்கள், "ஆம்;அல்லாஹ்வின் தூதரே! (உண்மைதான்); (ஆயினும்,) அது பரீராவுக்குத் தர்மமாக வழங்கப்பட்ட இறைச்சி. தர்மப் பொருளைத் தங்களுக்கு உண்ணத் தருவதை நாங்கள் வெறுத்தோம்" என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அது பரீராவிற்குத்தான் தர்மம்; நமக்கு அது (பரீராவின்) அன்பளிப்பு" என்று கூறினார்கள். மேலும்,பரீரா (ரலி) அவர்கள் தொடர்பான விஷயத்தில்தான் "விடுதலை செய்தவருக்கே (அடிமையின் சொத்தில்) வாரிசுரிமை உரியதாகும்" என்றும் கூறினார்கள்.
அத்தியாயம் : 20
3019. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்கள், ஓர் அடிமைப் பெண்ணை விலைக்கு வாங்கி விடுதலை செய்ய விரும்பினார்கள். அப்பெண்ணின் உரிமையாளர்கள், அவளுக்கு வாரிசாகும் உரிமை தங்களுக்கு இருந்தால் தவிர (விற்க மாட்டோம்) என மறுத்துவிட்டனர். இதைப் பற்றி ஆயிஷா அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொன்னபோது, "அ(வர்களின் நிபந்தனையான)து உனக்குத் தடையாக இராது. ஏனெனில், விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியதாகும்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 20
பாடம் : 4 (முன்னாள் அடிமைக்கு) வாரிசாகும் உரிமையை விற்பதற்கும் அன்பளிப்பாக வழங்குவதற்கும் வந்துள்ள தடை.
3020. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (முன்னாள் அடிமைக்கு) வாரிசாகும் உரிமையை விற்பதற்கும் அதை அன்பளிப்பாக வழங்குவதற்கும் தடை விதித்தார்கள்.
முஸ்லிம் (பின் அல்ஹஜ்ஜாஜ்) ஆகிய நான் கூறுகிறேன்:
இந்த ஹதீஸை மக்கள் அனைவரும் அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) அவர்களிடமிருந்தே அறிவிக்கின்றனர்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஒன்பது அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், அப்துல் வஹ்ஹாப் பின் அப்தில் மஜீத் அஸ்ஸகஃபீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் விற்பதற்குத் தடை விதித்தார்கள் என்பது மட்டுமே இடம்பெற்றுள்ளது. "அன்பளிப்பாக வழங்குவதற்கும் தடை விதித்தார்கள்" எனும் குறிப்பு இடம் பெறவில்லை.
$$
அத்தியாயம் : 20
பாடம் : 5 விடுதலை செய்த உரிமையாளர்கள் அல்லாத மற்றவர்களை ஓர் அடிமை தன் உரிமையாளர்கள் எனக் கூறலாகாது.
3021. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், ஒவ்வொரு குலத்தாரின் மீதும், (அவர்களில் ஒருவர் தவறுதலாகச் செய்துவிட்ட கொலைக் குற்றத்திற்கு) உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என விதியாக்கினார்கள். பிறகு "எந்த ஒரு முஸ்லிமும் மற்றொரு முஸ்லிமான மனிதரால் விடுதலை செய்யப்பட்ட அடிமைக்கு, அவரது அனுமதியின்றி வாரிசாகிக்கொள்வது சட்டப்படி கூடாது" என்றும் விதியாக்கினார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
அவ்வாறு செய்பவரை நபி (ஸல்) அவர்கள் (பல்வேறு குலங்களுக்கு எழுதிய) தமது கடிதத்தில் சபித்திருந்தார்கள் என்றும் எனக்குத் தெரிவிக்கப்பட்டது.
அத்தியாயம் : 20
3022. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் தம்மை விடுதலை செய்த உரிமையாளர்களின் அனுமதியின்றி, தமக்கு வாரிசாகும் உரிமையை வேறொரு கூட்டத்தாருக்கு வழங்குகிறாரோ அந்த அடிமைமீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்களின் சாபமும் உண்டாகும். மேலும், அவர் புரிந்த கடமையான மற்றும் கூடுதலான வழிபாடுகள் எதுவும் அவரிடமிருந்து ஏற்கப்படாது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 20
3023. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் தம்மை விடுதலை செய்த உரிமையாளர்களின் அனுமதியின்றி, தமக்கு வாரிசாகும் உரிமையை வேறொரு கூட்டத்தாருக்கு வழங்குகிறாரோ அந்த அடிமைமீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து மக்களின் சாபமும் உண்டாகும். அவர் புரிந்த கடமையான மற்றும் கூடுதலான வழிபாடுகள் எதுவும் மறுமை நாளில் அவரிடமிருந்து ஏற்கப்படாது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "யார் தம்மை விடுதலை செய்த உரிமையாளர்களின் அனுமதியின்றி, அவர்கள் அல்லாதவர்களை உரிமையாளர்களாக ஆக்கிக்கொள்கிறாரோ" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 20
3024. யஸீத் பின் ஷரீக் பின் தாரிக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் எங்களுக்கு உரையாற்றினார்கள். அப்போது அவர்கள் கூறினார்கள்:
நாம் ஓதிவருகின்ற இறைவேதத்தையும் (நபியவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற) இந்த ஏட்டையும் தவிர (எழுத்து வடிவிலான மார்க்கச் சட்டம்) வேறெதுவும் (நபியின் குடும்பத்தாரான) எங்களிடம் இருப்பதாக யார் கூறுகிறாரோ அவர் பொய்யுரைத்து விட்டார். (அப்போது அலீ (ரலி) அவர்களது வாள் உறை வைக்கும் பை ஒன்றில் ஓர் ஏடு மாட்டப்பட்டிருந்தது.) அந்த ஏட்டில் (உயிரீட்டிற்காகவும் ஸகாத்தாகவும் வழங்கப்படும்) ஒட்டகங்களின் வயது குறித்தும், காயங்களுக்கான தண்டனை குறித்தும் எழுதப்பட்டிருந்தது.
மேலும், அதில் நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள் என (எழுதப்பட்டு) இருந்தது: மதீனா நகரம் "அய்ர்"எனும் மலையிலிருந்து "ஸவ்ர்" மலைவரை புனிதமானதாகும். அதில் யார் (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக ஒன்றை உருவாக்குகிறாரோ, அல்லது (அவ்வாறு) புதிதாக ஒன்றை உருவாக்குபவருக்கு அடைக்கலம் அளிக்கிறாரோ அவர்மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து மக்களின் சாபமும் உண்டாகும். மேலும், அவர் புரிந்த கடமையான வழிபாட்டையோ கூடுதலான வழிபாட்டையோ அவரிடமிருந்து மறுமை நாளில் அல்லாஹ் ஏற்கமாட்டான்.
முஸ்லிம்களில் எவர் அடைக்கலம் கொடுத்தாலும் அது ஒன்றேயாகும். (மற்ற முஸ்லிம்கள் தரும் அடைக்கலத்திற்குச் சமமானதாகும்.) அவர்களில் கடை நிலையில் உள்ளவர்கள்கூட அடைக்கலம் தர முன்வரலாம். யார் தம் தந்தை அல்லாத ஒருவரை தந்தை என்று வாதிடுகிறாரோ, அல்லது விடுதலை செய்த உரிமையாளர்கள் அல்லாத வேறு யாரையேனும் வாரிசாக ஆக்கிக்கொள்கிறரோ அவர்மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து மக்களின் சாபமும் உண்டாகும். மேலும், அவர் புரிந்த கடமையான வழிபாட்டையோ கூடுதலான வழிபாட்டையோ அவரிடமிருந்து மறுமை நாளில் அல்லாஹ் ஏற்கமாட்டான்.
$
அத்தியாயம் : 20
பாடம் : 6 அடிமையை விடுதலை செய்வதன் சிறப்பு.
3025. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையுள்ள (முஃமினான) ஓர் அடிமையை யார் விடுதலை செய்கிறாரோ (விடுதலை செய்யப்பட்ட) அந்த அடிமையின் ஒவ்வோர் உறுப்புக்கும் பகரமாக (விடுதலை செய்தவரின்) ஓர் உறுப்பை நரகத்திலிருந்து அல்லாஹ் விடுதலை செய்வான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 20
3026. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் அடிமையை யார் விடுதலை செய்கிறாரோ (விடுதலை செய்யப்பட்ட) அந்த அடிமையின் ஒவ்வோர் உறுப்புக்கும் பகரமாக (விடுதலை செய்தவரின்) உறுப்புகளில் ஒன்றை நரகத்திலிருந்து அல்லாஹ் விடுதலை செய்வான்;அவருடைய மர்ம உறுப்புக்குப் பதிலாக இவருடைய மர்ம உறுப்பையும் (விடுதலை செய்வான்).
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 20
3027. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையுள்ள (முஃமினான) ஓர் அடிமையை யார் விடுதலை செய்கிறாரோ (விடுதலை செய்யப்பட்ட) அந்த அடிமையின் ஒவ்வோர் உறுப்புக்கும் பகரமாக (விடுதலை செய்தவரின்) உறுப்புக்களில் ஒன்றை நரகத்திலிருந்து அல்லாஹ் விடுதலை செய்வான்; அவருடைய மர்ம உறுப்புக்குப் பகரமாக இவருடைய மர்ம உறுப்பையும் விடுதலை செய்வான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 20
3028. அலீ பின் ஹுசைன் (ரஹ்) அவர்களின் தோழரான சயீத் பின் அப்தில்லாஹ் இப்னு மர்ஜானா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"ஒரு முஸ்லிமான மனிதர் மற்றொரு முஸ்லிமான (அடிமை) மனிதரை விடுதலை செய்தால், (விடுதலை செய்யப்பட்ட) அந்த முஸ்லிமின் ஒவ்வோர் உறுப்புக்கும் பகரமாக (விடுதலை செய்தவரின்) ஓர் உறுப்பை அல்லாஹ் நரகத்திலிருந்து காப்பாற்றுவான்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்ததை நான் கேட்டேன்.
இந்த ஹதீஸை அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து செவியுற்ற நான், அதை அலீ பின் ஹுசைன் (ரஹ்) அவர்களிடம் தெரிவித்தேன். இதைக் கேட்ட அலீ (ரஹ்) அவர்கள், உடனே தம் அடிமை ஒருவரை விடுதலை செய்துவிட்டார்கள். அந்த அடிமைக்கு (விலையாக) அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் பத்தாயிரம் திர்ஹம்களை, அல்லது ஆயிரம் தீனாரை அலீ பின் ஹுசைன் (ரஹ்) அவர்களிடம் கொடுத்திருந்தார்கள். (ஆயினும், அந்த விலைக்குப் பொறுப்பேற்றுக்கொண்டு அந்த அடிமையை விடுதலை செய்துவிட்டார்கள்.)
அத்தியாயம் : 20
பாடம் : 7 (அடிமையாக இருக்கும்) தந்தையை விடுதலை செய்வதன் சிறப்பு.
3029. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தன்) தந்தை அடிமையாக இருப்பதைக் கண்ட தனயன், அவரை விலைக்கு வாங்கி விடுதலை செய்யாத வரை தந்தைக்குச் செய்ய வேண்டிய கடமையை நிறைவேற்றியவனாக ஆகமாட்டான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் இப்னு அபீ ஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "தன் தந்தைக்குச் செய்ய வேண்டிய கடமையை" என்று இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் "தன் தந்தைக்குச் செய்ய வேண்டிய கடமையை" என்றே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 20