2998. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
சஅத் பின் உபாதா அல்அன்சாரி (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதன் தன் மனைவியுடன் (அந்நிய) ஆடவன் ஒருவன் (தகாத உறவு கொண்ட நிலையில்) இருப்பதைக் கண்டால், அவன் அந்த ஆடவனைக் கொன்று விடலாமா, சொல்லுங்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இல்லை (கொல்லக் கூடாது)" என்று பதிலளித்தார்கள். அதற்கு சஅத் (ரலி) அவர்கள், "இல்லை (அவனைக் கொல்லத்தான் தோன்றும்); சத்திய (மார்க்க)த்தால் தங்களைக் கண்ணியப்படுத்தியவன் மீது ஆணையாக!" என்றார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்), "உங்கள் தலைவர் என்ன சொல்கிறார் கேளுங்கள்" என்றார்கள்.
அத்தியாயம் : 19
2999. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நான் என் மனைவியுடன் (அந்நிய) ஆடவன் ஒருவன் (தகாத உறவு கொண்ட நிலையில்) இருப்பதைக் கண்டால் நான்கு சாட்சிகளைக் கொண்டுவரும்வரை நான் அவனுக்காகக் காத்திருக்க வேண்டியது தானா?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஆம்" என்றார்கள்.
அத்தியாயம் : 19
3000. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நான் என் மனைவியுடன் (அந்நிய) ஆடவன் ஒருவன் (தகாத உறவு கொண்ட நிலையில்) இருப்பதைக் கண்டால், நான்கு சாட்சிகளைக் கொண்டு வரும்வரை நான் அவனைத் தொடக்கூடாதா?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம்" என்றார்கள். அதற்கு சஅத் (ரலி) அவர்கள், "இல்லை; தங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! நானாக இருந்தால்,அதற்கு முன்பே வாளால் அவனை வெட்டிவிடுவேன்" என்றார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்கள் தலைவர் என்ன சொல்கிறார் கேளுங்கள்! அவர் ரோஷக்காரர். ஆனால், நான் அவரை விட ரோஷக்காரன்; அல்லாஹ் என்னைவிட ரோஷக்காரன்" என்றார்கள்.
அத்தியாயம் : 19
3001. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், "என் மனைவியுடன் (அந்நிய) ஆடவன் ஒருவன் (தவறான உறவு கொண்ட நிலையில்) இருக்க நான் கண்டால், வாளின் முனையாலேயே அவனை நான் வெட்டுவேன்" என்று சொல்ல, இந்தச்செய்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், "சஅத் அவர்களின் ரோஷத்தைக் கண்டு நீங்கள் வியக்கின்றீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவரைவிட அதிக ரோஷமுள்ளவன்; அல்லாஹ் என்னைவிடவும் அதிக ரோஷமுள்ளவன். அல்லாஹ்வின் ரோஷம் காரணமாகவே அவன் வெளிப்படையான மற்றும் மறைவான எல்லா மானக் கேடான செயல்களையும் தடை செய்துள்ளான். அல்லாஹ்வைவிட ரோஷக்காரர் வேறெவருமில்லை; (திருந்துவதற்கு வாய்ப்பளித்து) விட்டுப்பிடிப்பதை மிகவும் விரும்புகின்றவர் அல்லாஹ்வைவிட வேறெவரும் இல்லை. ஆகவேதான், (தன்) தூதர்களை நற்செய்தி கூறுபவர்களாகவும் எச்சரிக்கை செய்பவர்களாகவும் (இவ்விரு அம்சங்களுடன்) அல்லாஹ் அனுப்பிவைத்தான். அல்லாஹ்வைவிட மிகவும் புகழை விரும்புகின்றவர் வேறெவருமிலர். அதனால்தான், அல்லாஹ் சொர்க்கத்தை அளிப்பதாக வாக்களித்துள்ளான்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர்வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 19
3002. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
பனூ ஃபஸாரா குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "(வெள்ளை நிறத்தவனான எனக்கு) என் மனைவி கறுப்பான குழந்தையைப் பிரசவித்துள்ளாள் (அது என் குழந்தையா என்பதில் எனக்குச் சந்தேகம் உள்ளது)" என்று சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உன்னிடம் ஒட்டகங்கள் உள்ளனவா?" என்று கேட்டார்கள். அவர், "ஆம்" என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், "அவற்றின் நிறம் என்ன?" என்று கேட்டார்கள். அவர், "சிவப்பு" என்றார். "அவற்றில் சாம்பல் நிற ஒட்டகங்களும் உள்ளனவா?" என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, அவர், "(ஆம்) அவற்றில் சாம்பல் நிற ஒட்டகங்கள் இருக்கவே செய்கின்றன" என்று பதிலளித்தார். "(தாயிடம் இல்லாத) அந்த (சாம்பல்) நிறம் அவற்றுக்கு மட்டும் எப்படி வந்தது?" என்று நபியவர்கள் கேட்க, அவர் "அந்த ஒட்டகத்தின் பரம்பரை காரணமாக வந்திருக்கலாம்" என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், "(உன்னுடைய) இந்தக் குழந்தையும் அதன் பரம்பரையிலுள்ள (மூதாதையரின்) நிறத்தைக் கொண்டிருக்கக்கூடும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 19
3003. மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் மஅமர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அவர் "அல்லாஹ்வின் தூதரே! என் மனைவி கறுப்பான மகனைப் பிரசவித்துள்ளாள்” என்று, அது தனது குழந்தை அல்ல என்பதைப் போன்று சாடையாகக் கேட்டார்" என்று இடம்பெற்றுள்ளது. ஹதீஸின் இறுதியில் "அவன் தம்முடையவன் அல்லன் என்று மறுக்க அவரை நபி (ஸல்) அவர்கள் அனுமதிக்க வில்லை" என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 19
3004. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்து, "(வெள்ளை நிறத்தவனான எனக்கு) என் மனைவி கறுப்பான மகனைப் பெற்றெடுத்துள்ளாள்; அவனை நான் (என் மகன் என ஏற்க மனத்தளவில்) மறுத்துவிட்டேன்" என்று சொன்னார். அதற்கு அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உன்னிடம் ஒட்டகங்கள் உள்ளனவா?" என்று கேட்டார்கள். அந்தக் கிராமவாசி "ஆம்” என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள் "அவற்றின் நிறம் என்ன?" என்று கேட்டார்கள். அவர் "சிவப்பு” என்று சொன்னார். "அவற்றில் சாம்பல் நிற ஒட்டகங்களும் உள்ளனவா?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்க, அவர் "ஆம்" என்று பதிலளித்தார். "(தாயிடம் இல்லாத) அந்த (சாம்பல்) நிறம் அவற்றுக்கு எப்படி வந்தது?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அந்தக் கிராமவாசி, "அந்த ஒட்டகத்தின் பரம்பரை காரணமாக வந்திருக்கலாம், அல்லாஹ்வின் தூதரே!" என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "(உன்னுடைய) இந்த மகனும் அவன் பரம்பரையிலுள்ள (மூதாதையரின்) நிறத்தைக் கொண்டிருக்கக்கூடும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 19

பாடம் : 1 (பலருக்குச் சொந்தமான) ஓர் அடிமையி(ன் விலையி)ல் தமக்குரிய பங்கை மட்டும் ஒருவர் விடுதலை செய்தல்.
3005. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஓர் அடிமையில் தமக்குரிய பங்கை விடுதலை செய்கிறாரோ அவரிடம் அந்த அடிமையின் (முழு) விலையையும் எட்டுகின்ற அளவுக்குச் செல்வம் இருந்தால், அந்த அடிமையை ஒத்த மற்றோர் அடிமையின் விலையை மதிப்பிட்டு,தம் கூட்டாளிகளுக்கு அவர்களுக்குரிய பங்குகளின் விலையைக் கொடுத்து, அந்த அடிமையை (முழுமையாக) விடுதலை செய்துவிட வேண்டும். இல்லையெனில், அவர் எந்த அளவுக்கு விடுதலை செய்தாரோ, அந்த (தமது பங்கின்) அளவுக்குத்தான் விடுதலை செய்தவர் ஆவார்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் பத்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
$
அத்தியாயம் : 20
பாடம் : 2 அடிமை (தனது முழு விடுதலைக்காக) உழைப்பது பற்றிய குறிப்பு.
3006. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இருவருக்குச் சொந்தமான ஓர் அடிமையை அவர்களில் ஒருவர் விடுதலை செய்தால், அவர் (வசதியுள்ளவராக இருக்கும்போது தம் கூட்டாளியின் பங்கிற்குப்) பொறுப்பேற்பார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 20
3007. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஓர் அடிமையி(ன் விலையி)ல் தமக்குரிய ஒரு பங்கை விடுதலை செய்கிறாரோ அவரிடம் (போதிய) செல்வம் இருக்குமாயின், அவரது செல்வத்திலிருந்து அவ்வடிமையை (முழுவதுமாக) விடுதலை செய்வது அவர்மீது கடமையாகும்.
அவரிடம் (போதிய) செல்வம் இல்லையாயின், (நியாயமான விலை மதிப்பிடப்பட்டு மீதிப்பங்குகளின் விலையைத் தருவதற்காக) அந்த அடிமை உழைத்துச் சம்பாதிக்க அனுமதிக்கப்பட வேண்டும். அவனுக்கு அதிகச் சிரமத்தைத் தரலாகாது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 20
3008. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் பின்வரும் தகவல் கூடுதலாக இடம்பெற்றுள்ளது:
அவரிடம் (போதிய) செல்வம் இல்லையென்றால், அந்த அடிமையின் விலை, (அவனை) ஒத்த (அடிமையின்) விலையைக் கொண்டு மதிப்பிடப்படும். பின்னர், விடுதலை அளிக்காதவரின் பங்கிற்காக அவன் உழைக்க அனுமதிக்கப்பட வேண்டும்; அவனுக்கு அதிகச் சிரமத்தைத் தரலாகாது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "அவனை ஒத்த (அடிமையின்) விலையைக் கொண்டு மதிப்பிடப்படும்" என்று கூறப்பட்டுள்ளது. ("அந்த அடிமையின் விலை" எனும் சொற்றொடர் காணப்படவில்லை.)
அத்தியாயம் : 20
பாடம் : 3 விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியது.
3009. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்கள், ஓர் அடிமைப் பெண்ணை விலைக்கு வாங்கி விடுதலை செய்ய விரும்பினார்கள். அப்பெண்ணின் உரிமையாளர்கள் "இவளுக்கு வாரிசாகும் உரிமை எங்களுக்கே இருக்கவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் உங்களுக்கு இவளை விற்கிறோம்" என்று கூறினர். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தபோது, "அ(வர்களின் நிபந்தனையான)து உனக்குத் தடையாக இராது. ஏனெனில், விடுதலை செய்தவருக்கே (அடிமையின் சொத்துக்கான) வாரிசுரிமை உரியதாகும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 20
3010. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
பரீரா(எனும் அடிமைப் பெண்), தமது விடுதலைப் பத்திரத்தின் தொகையைச் செலுத்துவதற்கு உதவிகோரி என்னிடம் வந்தார். (அப்போது) அவர் தமது விடுதலைத் தொகையில் எதையும் செலுத்தியிருக்கவில்லை. நான் அவரிடம், "நீ உன் உரிமையாளர்களிடம் திரும்பிச்செல். (நான் உன் சார்பாக) உன் விடுதலைப் பத்திரத்தின் தொகையைச் செலுத்திவிடுகிறேன். (ஆனால்,) உனது வாரிசுரிமை எனக்கே உரியதாகும். இதற்கு அவர்கள் சம்மதித்தால், நானே அதைச் செலுத்திவிடுகிறேன்" என்று கூறினேன்.
அவ்வாறே, பரீரா தம் உரிமையாளர்களிடம் கேட்க, அவர்கள் (சம்மதிக்க) மறுத்து, "உன்(னை வாங்கி விடுதலை செய்வதன்) வாயிலாக, அவர் இறைவனிடம் நன்மையைப் பெற விரும்புவாராயின் அவ்வாறே செய்யட்டும்! ஆனால்,உனது வாரிசுரிமை எங்களுக்கே உரியதாக இருக்கும்" என்று கூறிவிட்டார்கள்.
இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ அவரை விலைக்கு வாங்கி விடுதலை செய்துவிடு. ஏனெனில், விடுதலை செய்பவருக்கே வாரி சுரிமை உரியதாகும்"என்று கூறினார்கள்.
பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்று (உரையாற்றுகையில்), "சிலருக்கு என்ன ஆயிற்று?அல்லாஹ்வின் சட்டத்தில் இல்லாத நிபந்தனையை விதிக்கிறார்களே! அல்லாஹ்வின் சட்டத்தில் இல்லாத நிபந்தனையை ஒருவர் விதித்தால் அது செல்லத் தக்கதன்று; அவர் நூறு முறை நிபந்தனை விதித்தாலும் சரியே! அல்லாஹ்வின் நிபந்தனையே (ஏற்று) பின்பற்றத்தகுந்ததும் உறுதி வாய்ந்ததும் ஆகும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 20
3011. மேற்கண்ட ஹதீஸ் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "பரீரா என்னிடம் வந்து, "ஆயிஷா (ரலி) அவர்களே! நான் என் உரிமையாளர்களிடம், ஆண்டுக்கு ஓர் "ஊக்கியா" வீதம் ஒன்பது ஊக்கியாக்கள் செலுத்த வேண்டும் எனும் நிபந்தனையை ஒப்புக்கொண்டு விடுதலைப் பத்திரம் எழுதி வாங்கியுள்ளேன்" என்று கூறினார்" என ஹதீஸ் ஆரம்பிக்கிறது.
மேலும் அதில், "அ(ந்நிபந்தனையான)து அவரிடமிருந்து (வாரிசுரிமை பெறுவதில்) உனக்குத் தடையாக இராது. நீ அவரை விலைக்கு வாங்கி விடுதலை செய்துவிடு" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்பதும் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.
இந்த அறிவிப்பில், "பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து விட்டு "இறைவாழ்த்துக்குப் பின்" (அம்மா பஅத்)" என்று கூறி (மேற்கண்ட ஹதீஸில் உள்ளபடி சொன்)னார்கள் என்றும் காணப் படுகிறது.
அத்தியாயம் : 20
3012. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
பரீரா (ரலி) என்னிடம் வந்து, நான் என் உரிமையாளர்களிடம் ஆண்டுக்கு ஓர் "ஊக்கியா" வீதம் ஒன்பது ஆண்டுகளில் ஒன்பது "ஊக்கியா"க்களை (விடுதலைத் தொகையாக)ச் செலுத்திவிட வேண்டும் எனும் நிபந்தனையை ஒப்புக்கொண்டு விடுதலைப் பத்திரம் எழுதி வாங்கியுள்ளேன்; ஆகவே, நீங்கள் எனக்கு உதவுங்கள்" என்று கேட்டார்.
நான், "உன் உரிமையாளர்களுக்கு அந்த "ஊக்கியா"க்களை நான் ஒரே தடவையில் கொடுத்து உன்னை விடுதலை செய்கிறேன். (ஆனால்,) உன் வாரிசுரிமை எனக்கே உரியதாக இருக்கும். இதற்கு அவர்கள் இசைந்தால், நான் அவ்வாறே செய்கிறேன்" என்று சொன்னேன்.
பரீரா தன் உரிமையாளர்களிடம் அதைக் கூறியபோது, (பரீராவின்) வாரிசுரிமை தங்களுக்குக் கிடைத்தால் தவிர அதற்கு ஒப்புக்கொள்ள முடியாது என அவர்கள் மறுத்துவிட்டனர். பரீரா என்னிடம் வந்து அதைத் தெரிவித்தார். நான் "அல்லாஹ்வின் மீதாணையாக! அவ்வாறாயின் முடியாது" என்று கூறி, பரீராவைத் துரத்திவிட்டேன்.
இதைச் செவியுற்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அதைப் பற்றி) என்னிடம் வினவ, நான் அவர்களுக்கு விவரத்தைச் சொன்னேன். அப்போது, "அவளை விலைக்கு வாங்கி விடுதலை செய்துவிடு. அவர்களுக்கே வாரிசுரிமை உரியது என அறிவித்துவிடு. (பின்னர் பார்த்துக்கொள்ளலாம்.) ஏனெனில், (சட்டப்படி) விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியதாகும்" என்று கூறினார்கள்.
பிறகு (அன்று) மாலை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடையே) உரையாற்றினார்கள். அப்போது அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப போற்றிப் புகழ்ந்து விட்டு, "இறைவாழ்த்துக்குப் பின்! மக்களில் சிலருக்கு என்ன நேர்ந்தது? அல்லாஹ்வின் சட்டத்தில் இல்லாத நிபந்தனைகளை அவர்கள் விதிக்கிறார்களே! அல்லாஹ்வின் சட்டத்தில் இல்லாத எந்த ஒரு நிபந்தனையும் செல்லாததாகும்; அது நூறு (முறை மொழியப்பட்ட) நிபந்தனையாயினும் சரியே! அல்லாஹ்வின் சட்டமே (ஏற்று) பின்பற்றத் தகுந்ததாகும். அல்லாஹ்வின் நிபந்தனையே உறுதி வாய்ந்ததாகும். உங்களில் சில மனிதர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்களில் ஒருவர், (என் அடிமையாகிய) இன்ன மனிதனை விடுதலை செய்துவிடு! ஆனால், (அவனுக்கு) வாரிசாகும் உரிமை எனக்கே உரியது" என்று கூறுகிறாரே! (உண்மையில்) விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியதாகும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 20
3013. மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஜரீர் பின் அப்தில் ஹமீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது: பரீராவின் கணவரும் அடிமையாக இருந்தார். (விடுதலையடைந்த) பரீராவுக்கு (அவர் தம் கணவருடன் சேர்ந்து வாழ, அல்லது பிரிந்துவிட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விருப்பஉரிமை அளித்தார்கள். அப்போது பரீரா தம்மையே (அதாவது தனித்து வாழ்வதையே) தேர்ந்தெடுத்தார். பரீராவின் கணவர் (அடிமையாக இல்லாமல்) சுதந்திரமானவராக இருந்திருப்பின், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பரீராவுக்கு விருப்ப உரிமை வழங்கியிருக்கமாட்டார்கள்.
இந்த அறிவிப்புகளில், "இறைவாழ்த்துக்குப் பின்" ("அம்மா பஅத்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்) எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 20
3014. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அடிமையாயிருந்து விடுதலை பெற்ற) பரீராவால் மூன்று தீர்வுகள் (நமக்கு) கிட்டின:
1. அவருடைய உரிமையாளர்கள் அவருடைய வாரிசுரிமை தமக்கே உரியது என நிபந்தனையிட்டு, அவரை விற்பதற்கு முன் வந்தனர். அதை நான் நபி (ஸல்) அவர்களிடம் கூறியபோது "நீ அவரை விலைக்கு வாங்கி விடுதலை செய்துவிடு. ஏனெனில், விடுதலை செய்தவருக்கே (அவ்வடிமையின்) வாரிசுரிமை உரியதாகும்" என்று கூறினார்கள்.
2. அவர் விடுதலை செய்யப்பட்டபோது, (தம் அடிமைக் கணவருடனான உறவைத் தொடரவும் முறித்துக்கொள்ளவும்) அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விருப்பஉரிமை வழங்கினார்கள். அப்போது அவர் தம்மையே (அதாவது தனித்து வாழ்வதையே) தேர்ந்தெடுத்துக்கொண்டார்.
3. மக்கள் அவருக்கு தர்மப்பொருட்களை வழங்குவார்கள்; (அவற்றை) அவர் எங்களுக்கு அன்பளிப்பாக வழங்குவார். அது குறித்து நான் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தபோது, "இது அவருக்குத் தர்மமாகும்; உங்களுக்கு அது அன்பளிப்பாகும். எனவே, அதை நீங்கள் உண்ணலாம்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 20
3015. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அன்சாரிகளில் சிலரிடமிருந்து (அவர்களின் அடிமையாக இருந்த) பரீராவை விலைக்குக் கேட்டேன். அப்போது அவர்கள் அவருக்கு வாரிசாகும் உரிமை தங்களுக்கே இருக்க வேண்டும் என நிபந்தனை விதித்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(விடுதலை எனும்) உபகாரம் செய்தவருக்கே வாரிசாகும் உரிமை உண்டு"என்று கூறினார்கள்.
(விடுதலையடைந்த) பரீராவுக்கு (அவர் தம் கணவருடன் சேர்ந்து வாழ, அல்லது பிரிந்துவிட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விருப்ப உரிமை அளித்தார்கள். அவருடைய கணவரும் அடிமையாகவே இருந்தார்.
பரீரா (ஒரு முறை) எனக்கு அன்பளிப்பாக இறைச்சியை வழங்கினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்த இறைச்சியிலிருந்து நமக்கு (உணவு) தயாரித்திருந்தால் நன்றாயிருக்குமே!" என்று சொன்னார்கள். நான், "இது பரீராவுக்குத் தர்மமாக வழங்கப்பட்டதாயிற்றே?" என்றேன். அதற்கு "இது அவருக்குத் தர்மமாகும்; நமக்கு (பரீராவின்) அன்பளிப்பாகும்" என்றார்கள்.
அத்தியாயம் : 20
3016. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் பரீராவை விலைக்கு வாங்கி விடுதலை செய்ய விரும்பினேன். (அவருடைய உரிமையாளர்கள்) அவருக்கு வாரிசாகும் உரிமை தங்களுக்கே உரியது என நிபந்தனையிட்டார்கள். அது குறித்து நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ அவரை விலைக்கு வாங்கி விடுதலை செய்துவிடு. ஏனெனில், (ஓர் அடிமையை) விடுதலை செய்தவருக்கே (அவ்வடிமைக்கு) வாரிசாகும் உரிமை உரியதாகும்" என்று கூறினார்கள்.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இறைச்சி அன்பளிப்பாக வழங்கப் பட்டது. அப்போது மக்கள், "இது பரீராவுக்குத் தர்மமாகக் கிடைத்தது" என்று கூறினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இது அவருக்குத் தர்மமாகும்; நமக்கு (பரீராவின்) அன்பளிப்பாகும்" என்று சொன்னார்கள்.
மேலும், பரீரா (தம் கணவருடன் சேர்ந்து வாழ, அல்லது பிரிந்துவிட) விருப்பஉரிமை அளிக்கப்பட்டார்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அப்துர் ரஹ்மான் பின் அல்காசிம் (ரஹ்) அவர்கள் (இந்த ஹதீஸை எனக்கு அறிவிக்கையில்) "பரீராவின் கணவர் சுதந்திரமான மனிதராக இருந்தார்" என்றார்கள். பின்னர் அவர்களிடம் பரீராவின் கணவரைப் பற்றிக்கேட்டபோது "எனக்குத் தெரியாது" என்று சொல்லி விட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 20
3017. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
பரீரா (ரலி) அவர்களின் கணவர் அடிமையாக இருந்தார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 20